ஏன் இந்த ட்ராமா என்ற திகழ்மதி கேள்விக்கு, “உங்களுக்காகனு சொன்னா உங்களுக்கே கோவம் வரும்!” என்றவனின் கிண்டல் புன்னகையில் திகழ்மதி முறைக்க,
“ஓகே சாரி!” என உடனே கைகளை தூக்கியவன்,
“ஹ்ம்! என் அப்பா கேரக்டர் உங்களுக்கு தெரியாது இல்லையா? இப்படி தான் வீட்டுல அதிகமா அவரோட சத்தம் இருக்காது. ஆனா முடிவு பண்ணிட்டா மாத்திக்கவே மாட்டார்!” என்று ஆர்யன் சொல்ல,
‘உங்களை மாதிரி’ என நினைத்துக் கொண்டவள், ‘இல்ல இல்ல! அவர் மாதிரி தான் நீங்களா?’ என்று நினைத்தபடி அவன் சொல்வதை கேட்க நின்றாள்.
“உங்க கெஸ் கொஞ்சம் சரி தான். பாட்டியோட சொத்து அப்பாக்கு தான் வரணும். வரும்னு அப்பாவும் நினைச்சாங்க. ஆனா அப்பாவோட சிஸ்டர் ஹஸ்பண்ட் அதான் புகழ் அப்பா அவருக்கும் பங்கு வேணும்னு நின்னார். பாட்டியும் அப்பாக்கு சப்போர்ட் தான். ஆனா அப்பா பேர்ல குடுத்தா எங்க பையன்னுக்கும் பொண்ணுக்கும் சண்டை வந்துடுமோனு என்னை உள்ள இழுத்து விட்டாங்க ஆர்யா மேரேஜ் முடிஞ்சா அவன் பேர்ல எழுதி தர்றேன்னு. அப்பாவும் பொண்ணு பாக்க தயாரானாங்க. ஆனா எனக்கு….” என்று நிறுத்தியவன்,
“சொன்னா உங்களுக்கு புரியுமா தெரில. எனக்கு லவ் பண்ணி மேரேஜ் பண்ண தான் ஆசை!” என்றதும்,
“அதுக்கு?” என்றவள் புரியாமல் பார்க்க,
“அப்பா காட்டுற பொண்ணை கல்யாணம் பண்ணி அது ஒத்து வராம போய்ட்டா? அண்ட் அப்பாவும் பிசினஸ் மைண்ட்ல என் கல்யாணத்தை நிச்சயமா பிசினஸா தான் பார்ப்பார். பணமும் பதவியும் இருக்குற இடமா பார்க்க ஆரம்பிச்சா என் வாழ்க்கை என் கனவு என்னாகுறது?” என்றவன்,
“சும்மா ஏனோ தானோனு கல்யாணம் பண்ணிட்டோமேன்னு வாழுறதுக்கு பேர் வாழ்க்கையா? மே பி! பட் எனக்கு அதுல இஷ்டம் இல்லை. எனக்கு என் லைஃப் ஃபுல்ஃபில் ஆகுறது என்னோட கல்யாணத்துக்கு அப்புறம் நான் வாழ போற வாழ்க்கைல தான். அதை எப்படி என் அப்பா கையில குடுக்க முடியும்?” என்று கேட்டு திகழ்மதியைப் பார்க்க,
“நீங்க அதை எடுத்து புரியுற மாதிரி சொல்லலாமே? இது ஒரு விஷயம்னா இவ்ளோ காசு செலவு பண்ணி என்னை இங்க கொண்டு வந்திங்க?” என்றாள் ஆச்சர்யமாய்.
“நிச்சயமா இல்ல. இவ்வளவு மட்டமான ஐடியா எல்லாம் என்னோடது இல்லவே இல்ல. ஏற்கனவே சொன்னது தான் இது அந்த ராஸ்கல் புகழ் பண்ணின வேலை. எனக்கு தெரிஞ்சதும் வேண்டாம்னு தான் சொன்னேன். அப்புறம் தான் நீங்க……” என்றவன் சொல்லாமல் நிறுத்தி,
“சொத்துக்காக மட்டும்னு இதை சொல்ல முடியாது. புகழ் லவ் மேரேஜ்னு தெரியும் இல்லையா? அவனோட மேரேஜ் நடக்கும் முன்னாடி எனக்கு பண்ணனும்னு வீட்டுல சொன்னாங்க. அப்பவும் இந்த புகழ் தான் நான் எதிர்பார்க்காத நேரமா சிவனேனு இருந்த நான் லவ் பண்றேன்னு என் வீட்டுல சொல்லி வச்சுட்டான். அப்புறம் அப்படி இப்படினு பொய் சொல்லி அவன் கல்யாணத்தையும் நடத்திக்கிட்டான். அவன் ஒரு கல்யாணத்தை பண்றதுக்கு என் லைஃப்ல கபடி, கிரிக்கெட், ஃபுட் பால்னு பல கேம் ஆடி வச்சிருக்கான்” என்றவன்,
“எப்படி என்ன செஞ்சு முடிச்சு வைக்க போறேனோ?” என்றும் சொல்ல, திகழ்மதி கவனித்து மட்டும் நின்றாள்.
“எப்படி அவ்வளவு ஈசியா சொல்றிங்க அனுப்பி வச்சிடுவேன்னு. இது எவ்வளவு பெரிய கிரைம் தெரியுமா? எவ்ளோ ஷாக்கிங்கா இருக்கும் எல்லாருக்கும்?என்ன பண்ண போறோம்?”
அவ்வளவு எளிதில் முடித்து வைக்க முடியாதே? காதல் திருமணம் எல்லாம் இப்பொழுது சகஜம் தான். அதுவும் வீட்டிற்கு தெரியாமல் நடப்பது அரிது என்றாலும் விதியே என பல பெற்றோர்கள் போல ஆர்யனையும் கூட வீட்டில் ஏற்று கொண்டார்கள் என வைத்துக் கொள்ளலாம். இதெல்லாம் பொய். நிஜம் இல்லை. இந்த பெண்ணை நடிக்க தான் அழைத்து வந்தேன் என்று அனைவரின் முன்பும் நின்று கூறுவது என்ன சாதாரண விஷயமா? என தன் கேள்வியை திகழ்மதி கேட்டுவிட,
“உங்ககிட்ட தான்ங்க சாதாரணமா சொல்றேன். வெளில சொல்ல கொஞ்சம் பயம் தான். ஆனாலும் சொல்லி தான ஆகணும். பாட்டிகிட்ட சொத்தை வாங்கி புகழ் பேருக்கு கொஞ்சம் சேர்த்தாச்சு. அவன் லவ் சக்ஸஸ் பண்ணிக்கிட்டான். இனி அவன் எப்படி போனா எனக்கென்ன. என்ன! இந்த ஷாக்லேர்ந்து எல்லாரும் வெளிவர ஒரு மாசம் ரெண்டு மாசம் ஆகும். அப்புறம் மறுபடியும் என் அப்பா பொண்ணு தேடுவார்!” என்று சொல்லி அவளை ஆழ்ந்த பார்வையால் அவன் பார்க்க,
“அதை எப்ப சொன்னா என்ன? கொஞ்சம் கொஞ்சமா இப்பவே சொல்லிடலாம் இல்ல? எனக்கு அத்தையை… உங்க அம்மாவை நினச்சா தான் கொஞ்சம் கவலையாவும் பயமாவும் இருக்கு.” என்றாள் திகழ் அவன் பேச்சின் திசையை மாற்றி.
“எல்லாம் ஒன்னு தான் மேடம். இதெல்லாத்தையும் விட முக்கியமான ரீசன் ஒன்னு இருக்கு. இப்படி தலையை சுத்தி மூக்கை தொட நானுமே ஆசைப்படல. உங்களுக்கே தெரிஞ்ச ரீசன் தான். புகழ் செஞ்சு வச்ச வினை தான் இது. ஆனாலும் நான் இதை இவ்வளவு தூரம் கொண்டு வர காரணம் நீங்க மட்டும் தான். முழுக்க முழுக்க நீங்க மட்டும் தான். உங்களுக்கு என்னை புரிய வைக்க மட்டும் தான் இந்த ஒரு மாசமா நான் ட்ரை பண்ண நினைச்சது. நாம நினைக்குறது எங்க நடக்குது.” என்று சொல்ல, திகழ்மதி மௌனமாய் நின்றாள்.
“உங்க பேமிலி பாக்ரௌண்ட் நான் கேட்காமலே தேடாமலே எனக்கு கிடைச்சது. அதுவும் புகழ் மூலமா தான். நீங்க நிஜமாவே கிரேட் தான். நானெல்லாம் என் அப்பா உருவாக்கின சாம்ராஜ்யத்துல எனக்குன்னு ஒரு இடத்தை ஏற்படுத்திக்கிட்டேன். நீங்க உங்க குடும்பத்துக்காக ஓடிட்டு இருக்கீங்க. உங்களை எந்த விதத்துலயும் நான் ஸ்டாப் பண்ண மாட்டேன்!” என்று சொல்லும் பொழுது கூட அவள் அசையாமல் நிற்க,
“ஆனா உங்க கோல் நிறைவேறின பின்னாடியோ ஆர் உங்க லைஃப் பார்ட்னர்னு உங்க வீட்டுல அதாவது உங்க பிரதர் சிஸ்டர் உங்க மாமானு யாராவது பேசினாலோ ஒரு ஸ்பேஸ் உங்க மனசுல இருக்கும் இல்லையா? அங்க என்னை நினைச்சு பாருங்க. இல்ல ஜஸ்ட் ஏதோ ஒரு சின்ன சிக்னல் குடுங்க. நிச்சயம் நான் அங்க இருப்பேன் உங்களுக்கு பக்கமா!” என்றதும் அவள் அவனை அதிசயமாய் பார்க்க,
“புரியுது. என் அப்பா பொண்ணு பார்க்க ஆரம்பிச்சிடுவார் தான். ஆனா நானும் அம்மாவும் சம்மதிக்கணுமே!” என்றதும் சோர்ந்தவள் மீனாட்சியை நினைத்துப் பார்க்க,
“பிடிச்ச வாழ்க்கையை வாழ நான் ஆசைப்படுறேன். அதே வாழ்க்கையை உங்க பேமிலிக்கு அமைச்சு குடுக்க நீங்க ஆசைப்படுறீங்க. ரெண்டும் தப்பில்லையே! நீங்க காத்திருக்க வரை என்னாலயும் காத்திருக்க முடியும்!” என்றவன்,
“தேங்க்ஸ் திகழ்! ரொம்ப நாளா பேசாத மாதிரி பீல் ஆச்சு. பத்து நாள் தான் ஆனா அது எனக்கு பத்து நாளா தெரியல. எனிவே இதுவே எனக்கு ஹாப்பி தான்.” என்று சொல்லி ஆர்யன் வெளியில் சென்றுவிட மெத்தையில் அமர்ந்தாள் கணத்த மனதுடன் திகழ்மதி.
அவனின் தெளிவான பேச்சு திகழ்மதி மனதில் ஒரு சலனத்தை ஏற்படுத்தி தான் சென்றிருந்தது. எவ்வளவு இயல்பாய் இருக்கிறானோ அதே அளவு அனைத்திலும் திட்டமிட்டு தெளிவாய் இருக்கிறான்.
அவன் நினைத்தால் சொல்லி விடலாம் உன் குடும்பத்திற்கு நான் உதவுகிறேன் என்று. அதை சொல்லி இன்னும் திகழ்மதி மனதில் வெறுப்பை ஏற்படுத்திக் கொள்ள தயார் இல்லை அவன். அவள் திசையில் அவளை பறக்க விட்டு தன்னையும் உடன் சேர்த்துக் கொள் என்று தான் சொல்ல நினைக்கிறான்.
அதை ஓரளவும் சொல்லியும் விட்டான். இனி முடிவு அவள் கையில் மட்டும் தான்.
******************
“மகி! அக்கா கால் பண்ணுவாங்க. உன்கிட்ட பேசணும் சொன்னாங்க. கால் வந்தா பேசு. நான் பக்கத்துல போய்ட்டு வர்றேன்!” என்று சொல்லி அலைபேசியை தங்கையிடம் கொடுத்துவிட்டு அந்த மாலை நேரத்தில் வெளியே சென்றிருந்தான் அரவிந்த்.
“மகி!” என்ற அனன்யாவின் குரல் கேட்க,
“யாரடா அது? வாங்க வாங்க! விருந்தாள் வந்துருக்கீங்க. எப்ப வந்திங்க? எப்படி இருக்கீங்க?” என்று மகிழினி கிண்டல் செய்ய,
“ஓய்! கிண்டலா போச்சா?” என்றாள் அனன்யா.
“அட போ ம்மா! ஒரே வீடுன்னு பேரு. மாசத்துக்கு ஒருக்கா தான் பாத்துக்குறோம். இப்ப மேல வந்துருக்கீங்கன்னா அத்தை எங்கேயோ தூரமா போயிருக்காங்க சரியா?” என்று மகிழினி கேட்க,
“ஆமா ஆமா! உன் மாமாக்கு கால்ல கட்டை பிரிக்க போயிருக்காங்க. அப்பாயிண்ட்மென்ட் எட்டு மணிக்கு தான். வர ஒன்பதாயிடும்!” என்று சொல்லி அங்கிருந்த மர நாற்காலியில் அமர்ந்தாள்.
“அதானே பார்த்தேன்! சரி நூடுல்ஸ் வேணுமா? நானே செஞ்சேன் இப்ப தான்!” என்று சொல்லி எடுத்து வைக்க,
“வாவ்!” என்று தனக்கும் எடுத்துக் கொண்டாள் அனன்யா.
இருவரும் பேசியபடி இருக்க, மேஜையில் இருந்த பூவைக் கண்டவள்,
“இதென்ன இத்தனை கலர் ரோஸ்?” என்று அனன்யா கேட்க,
“அது மட்டும் தான் பார்த்தியா? வீட்டை சுத்தி பாரு” என்றாள் நூடுல்ஸ்ஸை வாய்க்குள் செலுத்தியபடி மகிழினி.
“எல்லாமே கலர் கலரா இருக்கு. ரோஸ்னா உனக்கு அவ்வளவு பிடிக்குமா?” என்று கேட்க,
“அய்ய! பிடிக்கும் தான். அதுக்காக இப்படி பிளாஸ்டிக்ல பணம் குடுத்து வாங்குவேனா நான்?” என்ற மகிழினி,
“இதெல்லாம் அர்விக்கு யாரோ ப்ரெசென்ட் பன்றாங்க. ஆனா யார்னு தான் அர்விக்கே தெர்ல. எனக்கென்னவோ யாரோ ப்ரொபோஸ் பண்ண தான் ட்ரை பன்றாங்கனு தோணுது.” என்று சொல்லி அனன்யாவிற்கும் ஊட்டிவிட,
“இதெல்லாம் வேற பண்ணுதா உன் அண்ணா?” என்றாள் அனன்யா.
“ம்ம்க்கும்! பண்ணிட போகுது. நீ வேற! இதை அனுப்புறவ பொண்ணா இருந்தா அய்யோ பாவம் பொண்ணா போயிட்டியேனு அடிக்காம விடும். பையனா இருந்தா பிரிச்சு எடுத்துடும்!” என்றாள் மகிழினி.
“பையனா? பையனுக்கு பையன் ப்ரொபோஸ் பண்ணுவாங்களா?”
“மாட்டாங்க தான்! ஆனா அர்விக்கு ஒரு சந்தேகம். ஒரு வேளை நம்ம தங்கச்சிக்கு நம்மகிட்ட குடுத்து கரெக்ட் பண்ண பாக்குறாங்களோனு. நானே ஏன் டா பொறந்தோம்ன்ற ரேஞ்ச்ல இருக்கேன். எனக்கு எவன் அனுப்ப போறான்?” என்று சொல்ல,
“ஓஹ்! இவ்வளவு இருக்குதா?” என்ற அனன்யா மகிழினிக்கு தெரிந்த கதைகளை எல்லாம் கேட்டுக் கொண்டிருந்தாள்.