“என்னங்க யாழு பத்திரமா ட்ரைய்ன் ஏறிட்டாளா” வீட்டுக்கு வந்த கணவனிடம் சற்றே பதட்டத்துடன் கேட்டாள் மிருளா.
“ஏறிட்டாம்மா நீ டென்ஷன் ஆகாத அதுவுமில்லாம நம்ம வெற்றியும் அந்த ட்ரைன்லதான் போறான்”
“யாருங்க நம்ம வெற்றி அண்ணனா? அவர்கிட்ட எதாச்சும் சொன்னீங்களா?
“ம்ம்…சொல்லியிருக்கேன்மா” என்று நெடிய மூச்சொன்றை வெளியிட்டவன்,
“ஆமா அது என்ன நம்ம வெற்றி அண்ணா! அவன் உனக்குத்தான் அண்ணன் எனக்கு நண்பன்டி”
“ரொம்பத்தான்! அன்னைக்கு வெற்றி அண்ணன் மட்டும் எங்க அப்பாகிட்ட பேசி இருக்கலன்னா அந்த கிராமத்திலருந்த என்னை இந்த கல்கத்தால கட்டிக்குடுக்க எங்கப்பா சம்மதிச்சிருக்கவே மாட்டாங்க நினைவிருக்கட்டும்!” என்ற மிருளா,
“சும்மா காதலிச்சிட்டா மட்டும் போதுமா? அவர்தான் எனக்கு மட்டுமில்ல, அநாதையா நின்ன உங்களுக்கும் அண்ணனா இருந்து எல்லாத்தையும் முடிச்சி வச்சாரு” நிறைமாத வயிற்றை வைத்துக்கொண்டு மூச்சுவிடாமல் படபடவென பொரிந்தாள்.
“அடேங்கப்பா… கொஞ்சம் மூச்ச விட்டுக்கோடி என் பிள்ளை பாவம்! என்றவன், “உன் அண்ணன ஒன்னும் சொல்லல போதுமா” சிரித்தபடி மனைவியிடம் சலித்துக் கொண்டாலும் முகுந்தனுக்குமே வெற்றி என்றால் உயிர்தான்.
தாய் தகப்பன் இல்லாத முகுந்தன் அத்தையின் அழைப்பில் மிருளாவின் ஊர்த் திருவிழாவிற்கு செல்ல அங்கு மிருளாவின் மீது ஆசை கொண்டான். அவள் படிக்கும் கல்லூரி முதற்கொண்டு தெரிந்துகொண்டவன் மிருளா ஏறி இறங்கும் பஸ் இரயில்வே ஸ்டேஷன் என்று ஒன்றுவிடாமல் சுற்றிவந்து அவளை காதலிக்கவும் வைத்திருந்தான்.
பொண்ணு கேட்டு வந்த முகுந்தனை பிடித்திருந்தாலும் தாய் தகப்பன் இல்லாமல் கல்கத்தாவில் தொழில் செய்து நிரந்தரமாக குடியேறிவிட்டவனுக்கு பெண்கொடுக்க மறுத்தார் மிருளாவின் தந்தை.
பெண்ணை அவ்வளவு தொலைவில் கொடுக்க மனமில்லாமல் மறுத்து ஒற்றைக்காலில் நின்றவரை நண்பனுக்காக பேசிப் பேசியே கரைத்த வெற்றி, சம்மதிக்க வைத்ததும் இல்லாமல் முகுந்தன் தரப்பில் நின்று திருமணத்தையும் நடத்தி வைத்திருந்தான்.
கல்லூரி நட்புதான் என்றாலும் முகுந்தனுக்கு வெற்றியின்மீது அன்பும் மரியாதையும் கொட்டிக்கிடந்தது.
“யாழு பத்தி முழுசும் சொன்னீங்களாங்க” நண்பனின் நினைவில் மூழ்கியிருந்தவனை மனைவியின் குரல் கலைத்தது.
யாழினிப் பற்றிய கவலையில் மீண்டும் ஆரம்பித்திருந்தாள் மிருளா.
“ஓரளவுக்கு சொல்லியிருக்கேன்டி, நீ வயிற்றில பிள்ளைய வச்சிக்கிட்டு கவலைப்படாதம்மா. எல்லாம் நல்லபடியா நடக்கும்னு நம்புவோம்”.
“இப்பதாங்க என் மனசே நிம்மதியா இருக்கு. இனிமே எல்லாத்தையும் வெற்றி அண்ணன் பார்த்துக்கும்”
“ஆமாம்…மா. ஆனா அவனப் பத்திதான் உனக்கு தெரியுமே! அவனும் ஏதோ முக்கியமான வேலையா போறேன்னான் அதான் யோசனையா இருக்குடி”
“அதெல்லாம் அண்ணாகிட்ட பொறுப்ப ஒப்படைச்சாச்சில்ல இனி யாழ் கண்ணுல சந்தோசத்த பார்க்காம ஓயமாட்டாங்க பாருங்களேன்”
சத்தமாக சிரித்தவனோ, “உனக்கு அவனைப்பத்தி என்னடி தெரியும்? அவன் எட்டு வயசுலயே மிங்கிள் ஆனவன்டி” என்ற முகுந்தன் விடாமல் சிரிக்க…
“என்ன எட்டு வயசிலயேவா!” என்று வாயில் விரல் வைத்தாள் அவன் மனைவி.
“எட்டு வயசிலயேதானாம்” என்று சிரித்தவன், “அது மட்டுமில்ல நாம மட்டும் நினைச்சா போதுமா நம்ம வெற்றி மனசு வைக்கணுமே…!
அவ பாட்டி சொல்ற மாதிரி எந்த ராஜகுமாரனுக்காகன்னு யாழ் பெயர் எழுதி இருக்கோ! அது நம்ம வெற்றியா இருந்தா எனக்கும் சந்தோஷம்தான். ஆனா…” என்று இழுத்தவன் நண்பனை நினைத்து பெருமூச்சொன்றை வெளியிட்டான்.
அதேநேரத்தில் இரயிலில் வெற்றியும் கையில் அலைபேசியை வைத்திருந்தாலும் அவனது பார்வை அடிக்கடி யாழினியைத்தான் தீண்டியபடி இருந்தது. ‘முகுந்தன் கல்யாணத்துலகூட இவளைப் பார்த்த நினைவில்லையே!’ என்று யோசித்தபடி பார்த்திருந்தான்.
‘அவளைத்தான் எங்கயும் அனுப்ப மாட்டாங்களாமே… வெளியூர்ல நடந்த கல்யாணத்துக்கு எங்க வந்திருக்கப்போறா!’ என்று தனக்குத்தானே சமாதானமும் கூறிக்கொண்டவன், அவள் முகம் மட்டும் தெளிவற்று பலவாறாக குழம்பி இருக்கிறதென்று அவளைக் கண்டதுமே புரிந்துகொண்டான்.
நந்தனின் நினைவுகளிலிருந்து கலைந்த மதுமிகாவும்கூட அந்த பெண்ணைத்தான் பார்த்துக் கொண்டிருந்தாள். துடைத்து வைத்த பளிங்குச் சிலைபோல் இருந்தவளின் ஓய்ந்துபோன தோற்றம் மதுமிகாவை என்னவோ செய்ய அந்தப் பெண்ணிடம் பேசும் ஆர்வம் எழுந்தது.
‘எல்லாவற்றையும் தொலைத்த நிலையில் தானும் ஒருநாள் இப்படித்தானே நின்றிருந்தோம்! நந்தன் மட்டும் இல்லையெனில் இன்று யாரிடம் சிக்கி சின்னாபின்னாமாகி இருப்பேனோ!’ என்று நினைத்தவளின் மனம் நந்தனை நினைத்து கர்வம் கொண்டது.
காற்றின் வேகத்தில் முகத்தில் விழுந்த முடியை ஒதுக்கி சிறு பெண்ணவள் நிமிர அவளின் முழுமதி முகத்தில் மதுமிகாவே சற்று அயர்ந்துதான் போனாள்.
‘எப்பா என்ன அழகு! சோகப் பதுமை போல இருக்கா’ என்று நினைத்தவளின் மனக்கண்ணில் ‘இந்தப்பெண் சிரித்தால் எப்படி இருப்பாள்’ என்ற கற்பனையும் வந்து போனது. மாறாக சின்னவளின் முகத்தில் குடிகொண்டிருந்த சோகம் மதுமிகாவையும் சற்றே அசைத்துப் பார்க்க தன்னைப் போலவே தனியாக பயணிக்கிறாள் போலும் என்று நினைத்துக் கொண்டாள்.
அந்நேரம், ஜன்னல் கம்பியில் முகம் பதித்திருந்த பெண்ணவளோ மதுமிகாவின் பக்கம் சிறிதே திரும்ப அந்த சந்தர்பத்திற்காகவே காத்திருந்ததுபோல் மெல்லிய சிரிப்பொன்றை உதிர்த்தாள் மதுமிகா.
அதற்கு எதிர்வினையாக, ‘உன் புன்னகையை நான் ஏற்றுக்கொண்டேன்’ என்ற சிறு அங்கீகாரம் மட்டுமே யாழினியின் கண்களில் தோன்றி மறைந்தது.
விடுதியில் தங்கிப் படித்ததால் எப்போதும் கலகலப்பாக யாருடனாவது இருந்தே பழகிய மதுமிகாவுக்கு தனிமை என்பது பிடிக்காத ஒன்று மட்டுமல்ல பயம்தரக்கூடிய ஒன்றும் கூட.
இப்போதும் பேச்சுத்துணைக்கு ஆள்தேடிய மதுமிகாவுக்கு கிட்டத்தட்ட ஒத்த வயதிலிருந்த அந்தப் பெண்ணிடம் உறவாடும் எண்ணம் தோன்ற மெல்ல பேச்சுக் கொடுத்தாள்.
“ஹாய் உன் பெயரென்ன…?”
அதில் தன்னைத்தான் கேட்கிறாளா என்று சந்தேகமாக மதுமிகாவை ஏறிட்ட பெண்ணவளுக்கு என்ன தோன்றியதோ! குரலுக்கு வலித்துவிடுமோ என்ற ரீதியில் பயந்தவாறே “யாழினி” என்றவள் கடமை முடிந்ததென மீண்டும் ஜன்னலில் முகம் பதித்துக் கொண்டாள்.
ஆனால் மதுமிகாவுக்கு அத்தோடு விட்டுவிடும் எண்ணமில்லையே! “யாழினி…! அழகா இருக்கு முழுப்பெயரும் இதுதானா?”
அதற்கு இல்லை என்பதாகவும் ஆமாம் என்பதாகவும் மாறி மாறி தலையாட்டி வைத்தது அந்த இளம்பாவை.
அதில் சிரித்துவிட்ட மதுமிகா “க்யூட்” என்றவள் ஒற்றை வரியில் பதில்சொல்பவளிடம் அதற்கும் மேல் பேச்சை வளர்க்கும் வழி தெரியாததால் சற்றே அமைதி காத்தாள்.
அதற்குள் அடுத்த ஸ்டேஷன் வந்திருக்க இரயில் சற்று நின்ற நேரத்தில் காலியாயிருந்த இருக்கையை நடுத்தர வயதைக் கடந்த தம்பதியர் ஆக்ரமித்திருந்தனர். மடிசாரிலிருந்த அந்தப் பெண்மணி அந்தவயதிலும் இலட்சணமாய் சாயலில் நடிகை குட்டிபத்மினியை நினைவு படுத்தினார்.
இரயில் மீண்டும் தன் பயணத்தைத் துவங்க, ஜன்னலோர இருக்கைக்கு ஆசைப்பட்ட அந்த மனிதர் மனைவியின் அருகிலிருந்த யாழினியைப் பார்த்தார்.
அவள் கண்மூடி சாய்ந்திருக்கவும், “ஏன்டிம்மா செத்த நாழி இந்தபக்கம் வர்றியா! மாமி காத்தோட்டம் இல்லனா வாந்தி எடுத்துடுவா” என்றவர் மதுமிகாவை ஜன்னலோரத்திலிருந்து அகற்ற முயற்சி செய்ய…
“நான் எப்பன்னா அப்படிச் சொன்னேன்! நோக்கு காத்தோட்டமா கட்டையச் சாய்க்கணும்னு சொல்லுங்கோ. அதுக்கு ஏன் என்னை பலியாடாக்குறேள்” என்ற அவர் மனைவியோ சற்று சத்தமாகவே வாயை விட மதுமிகா பக்கென சிரித்துவிட்டிருந்தாள்.
“செத்த சும்மா இருடி! நோக்கு வாந்தி வரும்” என்றவர் மதுமிகாவிடம் திரும்பி “அவளுக்கு வாந்தி வரும்னு அவளே மறந்துட்டா” என்று சிரித்து சமாளித்தார்.
“மாமிக்கு மட்டுமா நேக்கும் இந்த மாதிரி டைம்ல வாந்தி வரும்னு மறந்துட்டேள் பார்த்தேளா மாமா!” என்ற மதுமிகா வேண்டுமென்றே அவரைப் போலவே பேசிக் காட்ட…
மதுமிகா சொன்னதைக் கேட்டு அதிர்ந்த மாமியோ, “ஏன்னா என்னன்னா மாமாங்குறா! இந்தப் பொண்ணை நோக்கு முன்னாடியேத் தெரியுமா? அதுக்குதான் நம்ம பொண்ணு ப்ளைட்ல போகச்சொன்னதை மறுத்து இந்த ட்ரைன்லதான் போகணும்னு அடம்பிடிச்சேளா?
இந்த டைம்ல வாமிட் வரும்ங்கறாளே! அச்சோ பெருமாளே! அந்தப் பொண்ண என்னன்னா பண்ணி வச்சிருக்கேள்…?” என்று சட்டையைப் பிடித்து உலுக்காத குறையாக ஒரு மினி யுத்தத்துக்கே ஆயத்தமாகி இருந்தார்.
“நீ வேற ஏன்டி! அந்தப் பொண்ணு யாருன்னே தெரியாது நாங்க முன்னபின்ன பார்த்துண்டது கூட இல்ல” என்றவர் ‘சொல்லேன்டிம்மா’ என்று மதுமிகாவை பார்த்து வைக்க…
யாழினி பேசாததால் போரடிப்பதுபோல் தோன்ற
விளையாட்டாய் பேசிய மதுமிகா தவறாக புரிந்துகொண்டு மாமி போட்ட சண்டையில் வந்த புன்னகையை அடக்கி சட்டென வெளிப்பக்கம் திரும்பிக் கொண்டாள்.
“பொய் பேசாதேள்! முன்னபின்ன தெரியாமத்தான் ஆசையா மாமாங்கறாளா?” என்ற மாமியோ அந்த மனிதரை உண்டு இல்லையென பண்ணிக் கொண்டிருக்க,
‘உன்னண்ட ஒரு ஜன்னலோர இருக்கை கேட்டது குத்தமா’ என்ற ரீதியில் மதுமிகாவை அவர் பார்த்து வைத்தார்.
இதழ்குவித்து “சாரி மாமா” என்றவளுக்கும் அவரைப் பார்க்க பாவமாகத்தான் இருந்தது.
‘இப்ப பாருங்க மாமிய எப்படி சமாதனப்படுத்தறேன்னுட்டு’ என்று இல்லாத காலரைத் தூக்கிவிட்டவள்,
“பாவம் மாமி விடுங்கோ! மாமா ரொம்ப நல்லவர் தெரியுமோ! என்றவள் ‘எப்புடி’ என்று அந்த மாமாவை பார்த்து வைக்க…
“அதுவும் நீ சொல்லித்தான் நேக்குத் தெரியறது. வீட்டுக்கு வாங்கோ நோக்கு இருக்கு!” என்று அதற்கும் கணவனிடம் பாய்ந்தார் அவர்.
“விடுங்கோ மாமி நம்ம மாமாதான பாவம்” என்றவளை வெட்டவா குத்தவா என்று அந்த மனிதர் பார்த்து வைக்க அவர் மனைவியோ அதிர்ச்சியில் நெஞ்சை பிடித்துக்கொண்டு சரிந்தேவிட்டார்.
மாமியை சமாதானப் படுத்துகிறேன் பேர்வழி என்று மதுமிகா போட்ட பால் அனைத்தும் நோபால் ஆகிவிட,
பொறுமையிழந்த அந்த மனிதரோ, “தெரியாம உன்னை கேட்டுட்டேன்டிம்மா! இந்த வயசில் மாமிக்கும் நேக்கும் டைவர்ஸ் வாங்க வச்சிடாதே ப்ளீஸ்” என்று அடுத்து மதுமிகா வாயைத் திறக்கும்முன் கையெடுத்துக் கும்பிடாதக் குறையாக கெஞ்சினார்.
சட்டென எதிரிலிருந்த மாமியின் கன்னத்தை பிடித்துக் கொஞ்சிய மதுமிகா, “சும்மா விளையாடினேன் மாமி! என்று தன் காதைப்பிடித்துக் கொண்டு மன்னிப்பு கேட்க, “அடிப்பாவி செத்த நாழில என்னை ஆட்டிப்படைச்சுட்ட” என்றவர் மதுமிகாவுடன் சிரித்து சமாதானமாகி விட்டிருந்தார்.
இருவருக்குள்ளும் பரஸ்பர இரயில் சிநேகம் உண்டாக நொடியில் சூழ்நிலையை கலகலப்பாக்கியிருந்தாள் மதுமிகா.
சிறிதுநேரத்தில் பசியெடுப்பதுபோல் தோன்ற, தன் கைப்பையிலிருந்து பிஸ்கட் பாக்கெட் ஒன்றை எடுத்த மதுமிகா அதிலிருந்த பிஸ்கட் ஒன்றை எடுத்து கடிக்க மீதமிருந்த பாக்கெட்டை “எடுத்துக்கோ” என்று யாழினியிடம் நீட்டினாள்.
அதுவரை மதுமிகாவின் அலப்பறைகளை சிறு புன்னகையுடன் வேடிக்கை மட்டுமே பார்த்திருந்த வெற்றியின் கண்கள் கூர்மையடைய மதுமிகாவை ஆராய்ந்தான்.
அவளுமே யாழினிக்கு நான் சளைத்தவள் இல்லை என்பதுபோல் பல்லவ சிற்பமாகத்தான் இருந்தாள். மதுமிகாவின் கண்களில் கள்ளம் இருப்பதுபோல் தோன்றாததால் மேற்கொண்டு நடப்பதை வேடிக்கை மட்டுமே பார்த்தபடி மீண்டும் அலைபேசியில் பார்வையை பதித்தான்.
யாழினியில் மேல் இருக்கையில் தன்னியல்பை தொலைத்தபடி படுத்திருந்த ப்ராபாகரனுக்கு இவர்களின் உரையாடல் காதில் விழுந்தாழும் அவன் கவனத்தில் கொள்ளவில்லை. ஆனால் மதுமிகா பிஸ்கட் பாக்கெட்டை எடுத்தும் அவனுமே தன் கண்களை மதுமிகாவின் மேல் பதித்திருந்தான்.
மிரண்ட யாழினியோ, ‘யார் எதைக் கொடுத்தாலும் வாங்காதே’ என்று முகுந்தன் எச்சரித்தனுப்பியது நினைவில் வர, அச்சத்துடன் ‘வேண்டாம்’ என மறுத்து தலையாட்டினாள்.
யாழினியின் மிரட்சியில், ‘ஆத்தாடி இந்த புள்ள நம்மள பிள்ளை புடிக்கிறவன்னு நினைச்சிருச்சோ’ என்ற மதுமிகா சுற்றிலும் பார்க்க அந்த ஒட்டு மொத்த கம்பார்ட்மெண்டுமே அவளைத்தான் சந்தேகத்துடன் பார்த்துக் கொண்டிருந்தது.
அசடு வழிய சிரித்த மதுமிகா, “இந்தாங்க நீங்களும் எடுத்துக்கோங்க” என்று யாழினியின் அருகில் அமர்ந்திருந்த மாமியிடமும் பிஸ்கெட் பாக்கெட்டை நீட்ட…
அந்த மாமியும், “ஜன்னலோர சீட் குடுக்கலன்னாலும் பிஸ்கட் குடுக்குறீயோன்னோ நல்ல மனசுடி குழந்தை உனக்கு” என்றவாறே அதிலிருந்து பிஸ்கட் ஒன்றை கையிலெடுத்தார்.
“ஏன்டி யார் என்ன குடுத்தாலும் வாங்கிடுவியா? அறிவிருக்காடி நோக்கு அதுல எதாச்சும் கலந்து கொடுத்து உன் நகையெல்லாம் புடுங்கின்றுருவாடி” என்று மாமியின் கணவர் எச்சரித்தார்.
“போங்கோன்னா குழந்த முகத்தை பார்த்தா அப்படியா தெரியுது அவோ பச்சைக்குழந்தைன்னா. நீங்க தானும் படுக்கமாட்டேள் தள்ளியும் படுக்கமாட்டேள்” என்று கடிந்துகொண்ட மாமி “நீ குடுடிம்மா நான் இன்னொன்னும் எடுத்துக்கறேன்” என்று மீண்டும் ஒன்றை எடுத்துக்கொண்டார்.
“ஏன்டி எங்க வந்து என்ன பேசிட்டிருக்க” என்று மாமா முறைக்கவும், “ம்க்கும் இதுக்கு ஒன்னும் குறைச்சல் இல்ல” என்ற மாமி முகவாயை தன் தோளில் இடிக்கவும் இருவரின் அலும்பலில் மதுமிகா பக்கென்று சிரித்துவிட்டிருந்தாள்.
யாழினியின் அருகில் அமர ஆசைப்பட்ட மதுமிகா, “மாமி வாங்க ஜன்னலோரம் உட்கார்ந்துக்கங்க நான் யாழினி பக்கத்துல இருக்கேன்” என்றவள் இதுதான் சாக்கென்று ஜன்னலோர இருக்கையை விட்டுத் தந்தவள் யாழினியின் அருகில் அமர்ந்து கொண்டாள்.
ஆனால் மதுமிகா எவ்வளவு முயன்றும் யாழினியிடமிருந்து ஓரிரு வார்த்தைகளுக்குமேல் தேறவில்லை. கேட்பதற்கு மட்டும் ஒற்றை வார்த்தையில் பதில் அல்லது சிறியதாய் தலையசைப்பு அதைத்தாண்டி அவளால் நெருங்க முடியவில்லை.
அதற்குமேல் தொந்தரவு செய்ய விரும்பாத மதுமிகாவும் அலைபேசியில் பாடலை ஒலிக்கவிட்டு காதில் ஹெட்செட்டை மாட்டிக்கொண்டு தலை சாய்த்துக் கொண்டாள்.
அதுவரை தனக்குள் ஒடுங்கியிருந்த யாழினியை மதுமிகாவின் சேட்டைகள் சற்றே கவனிக்க வைத்திருக்க ஓரவிழியால் கண்மூடிக்கிடக்கும் மதுமிகாவை ஏறிட்டாள்.
தானும் மதுமிகாவைப் போலவே ஊர்வம்பை விலைக்கு வாங்கி இராஜம்மாவிடம் அடிவாங்கியது நினைவிலாட…
‘இராஜம்மா’ என்று இதழ்பிரித்து சொன்னவளின் விழிகள் கலங்க நீர்முத்துக்கள் ஒன்றொடொன்று கோர்த்துக்கொண்டு பெண்ணவளின் மடி சேர்ந்தது.
இந்த நொடியே அந்த மூதாட்டியிடம் சென்று சேர்ந்துவிட மாட்டோமா என்று துடித்தவளின் இதயம் இரயிலின் வேகத்துக்கு இணையாய் தடதடக்க நினைவடுக்குகளில் அந்த மூதாட்டியின் தடத்தைத் தேடி ஓடினாள்.