கார்த்திகேயனுக்கும் கொஞ்சம் சங்கடமாகத்தானே இருந்தது. அதை அவனிடம் சொல்லாமல்,
“நெக்ஸ்ட் டைம் சரி பண்ணிக்கிறேன் டா” என்றதும் மெனு கார்டை நீட்டினான். இருவரும் உணவை அங்கயே முடித்து, புதிதாக வந்திருந்த படத்தைப் பார்த்துவிட்டு வீடு திரும்பினர்.
இரு நாட்களாக சென்னையில் பெய்திருந்த பெருமழையில் பருவ நிலை பசுமையாக இருந்தது. காற்றில் ஈரம் கலந்திருக்க, கே.கே அவரின் புதிய புத்தகத்திற்காக இரண்டு அத்தியாயங்கள் கூட எழுதிவிட்டார்.
ரேவதியைப் பார்த்து வந்த அடுத்த நாள் காலை, கார்த்திகேயன் அவரின் வழக்கமாக ஐந்து மணிக்கு எழுந்துவிட்டார்.
காலையில் காஃபி டீ குடிக்கும் பழக்கமில்லை. எலுமிச்சை நீரும் இஞ்சி சாறும் குடிப்பார். காலியான க்ளாஸ் பக்கத்திலிருக்க, ஜன்னல் பக்கம் அவரின் ஆஸ்தான படிக்குமிடத்தில் உட்கார்ந்திருந்தார்.
“ஏற்கனவே புக் வந்திருந்தப்போ படிச்சேன் டா, இப்போ படம் வந்தது தெரிஞ்சதும் மறுபடியும் படிக்கிறேன். ஒரு புத்தகம் ஒவ்வொருவருக்கும் ஒரு புத்தகமாவது எவ்வளவு இயல்பானதுனு ரைட்டர் சுகுமாரன் சொல்லியிருக்கார். அது மாதிரி ஒவ்வொரு நேரமும் ஒரு புத்தகம் வேற வேற உணர்வை தருதுடா ஆனந்தா” என்ற அப்பாவின் பேச்சை காஃபியோடு அமைதியாக பருகினான் ஆனந்தன்.
“புதுசா ஒரு புக் படிக்கும்போது ஒரு பரவசம், ஆர்வம் எல்லாம் இருக்கும். அதே படிச்ச புத்தகம், ஒரு பழகின நண்பன் போல. இப்போ நஜீபும், அந்த மஸாராவும் அங்க இருக்க ஆடுகள் எல்லாம் எனக்குத் தெரிஞ்ச உணர்வை தருது.”
“என் எழுத்து சிறப்பு’ன்றது விட எந்த எழுத்து சிறப்பா இருக்கோ அதைத்தான் நான் என் வாசகனுக்கோ வாசகிக்கோ கொடுப்பேன். அவங்க சொன்னாங்கன்னு சொல்லித்தானே சொல்றேன், அதுல எனக்குக் கூச்சமே இல்லை! நம்மை மதிக்கிற ஒருத்தங்களுக்கு, முகம் தெரியாம நம்ம மேல பாசமா இருந்து என் வார்த்தைகளை மதிக்கிறாங்க, அப்போ அவங்களுக்கு சிறந்த எழுத்தை அறிமுகம் செய்றது எழுத்தாளனா என்னோட கடமைடா!”
“ஒரு கேடலிஸ்ட் டிபார்ட்மெண்ட் ஹெட்’டா இந்த தேசத்துக்குப் பெஸ்ட்டான தொழில் நுட்பம் கொடுக்குறது என்னோட கடமை, அதுக்கான ஆராய்ச்சி செய்றதில்லையா, ஸேம் வே” என்ற அப்பாவை அத்தனை பிடித்தது ஆனந்தனுக்கு.
எது செய்தாலும் ஆத்மார்த்தமாக, முழு மனதோடு செய்யும் பேரார்வம் சிலருக்கு மட்டுமேயுண்டு. அப்படியானவர் அவன் அப்பா.
“வாசகன் அப்படின்னா தூதுவன், அரசனுக்கு முன்னாடி கடிதம் படிக்கிறவனை வாசகன் சொல்வாங்க. ஒரு புத்தகத்துல ஒரு வாசகனும் எழுத்தாளனும் முகம் காட்டாம, சத்தமில்லாம பேசிக்கிறாங்க. சில எழுத்து அவன் ரசனையோட ஒத்துப்போகும், அப்போ அவனுக்கும் எழுதுறவனுக்கும் ஒரு நெருக்கம் வரும். சில சமயம் ஒத்துப்போகாதப்போ கோவம் வரும், சில நேரம் வேற விதத்துல சொல்லியிருக்கும்போது அப்படியிருக்குமோன்னு ஒரு ஆச்சரியம் வரும். அவனை யோசிக்க வைக்கும்.”
“தெரியாததை தெரிய வைக்கிறப்போ எழுத்தாளன் ஆசிரியரா தெரிவான், அவன் ரசனையோட ஒத்துப்போறப்போ நண்பனா தெரிவான், அவனுக்குப் பிடிக்காததை சொல்லும்போது எதிரியாகிறான்.”
“இப்படி பார்க்காம, பேசாம, பழகாம ஒரு நெருக்கம், ஒரு மதிப்பு வருது. ஒவ்வொரு வாசகனும் ஒவ்வொரு வகையா புத்தகத்தைப் படிப்பாங்க, ஆனா எழுதுறவன் ஒருத்தன்! என்ன ஒரு முரண் பார்த்தியா? வாசகனோட மன நிலை, அவனோட வாழ்க்கை சூழல், அவன் வேலைப்பளு எல்லாம் வச்சு அவன் எழுத்தாளனோட எழுத்தை நேசிக்கிறான், இல்லை இப்படினு ஒரு அனுமானம் பண்றான்.”
“நான் எங்கேயோ படிச்சேன், வாசிக்கிறது மூச்சு இழுக்கிறது, எழுதுறது மூச்சு வெளியே விடுறதுனு. ஒரு எழுத்தாளனுக்கு ரெண்டுமே முக்கியம். எனக்குப் பிடிச்சதை அவங்களோட ஷேர் பண்றேன்” என்றார். அது உண்மை, தினமும் அரை மணி நேரம் அப்பா வாசிப்பார், அது சில நேரம் ஒரு மணி நேரம் கூட நீடிக்கும்.
மழையை விட ஈரமாய் அவனை தொட்டது அப்பாவுடனான உரையாடல்கள். கார்த்திகேயனுக்கும் அவர் உலகிடம் உலகம் பேசுவதும் உரையாடுவதும் மிகவும் பிடித்தவொன்று.
அறிவியல் பற்றியும் அவனும் அப்பாவும் அதிகம் பேசியிருக்கிறார்கள், கருந்துளையில் தொடங்கி(Black hole) செவ்வாய் கிரகம் வரை எல்லாம் பேசுவார்கள். கார்த்திகேயனுக்கு எழுத்து கொடுத்த ஆசுவாசம் மிகவும் இன்றியமையாதது. வேலை, மகன் என்ற இரண்டுக்கும் நடுவே அவரின் வாழ்க்கை சுழன்ற சமயத்தில் எழுத்துதான் அவரை அரவணைத்து ஆறுதல் கொடுத்தது.
அவரின் வயதொத்த நண்பர்கள் குடும்பமாக வெளியே செல்வார்கள், இல்லை குடி, பார்ட்டி என்று போவார்கள். எங்கே போனாலும் ஆனந்தனுக்கு தவறான முன்னுதாரணமாக இருக்கக் கூடாதென்று பெரும்பாலும் வேலையிடமும் வீடுமே அவரின் வசிப்பிடம். அப்படியிருக்க எதார்த்தமாக புத்தகங்கள் வாசிக்கத் துவங்கியவரின் வாசிப்பு மீதான ஆர்வம், பல நாட்டு எழுத்தாளர்களை அறிய வைத்தது.
கார்த்திகேயனின் தனிமையை ஏகாந்தமாக மாற்றியது எழுத்தே! மகனோடு இருந்தபடியே ஆஃப்ரிக்காவுக்கும் பதிமூன்றாம் நூற்றாண்டுக்கும் பறக்க எழுத்தே காரணம். எழுத்து என்றில்லை, எதாவது ஒரு கலையைப் பற்றிக்கொள்ள வேண்டும் என்று கார்த்திகேயன் எப்போதும் சொல்வார். வேலை வயிற்றுக்கு, கலை மனதுக்கு என்பார்.
எழுத்து, இசை, ஓவியம், நாட்டியம் என்று எது வேண்டுமானாலும் இருக்கட்டும். ‘கலை’ என்பது மனிதன் தன்னை வெளிக்காட்டிக்கொள்ள, அவனை அவனாக அடையாளப்படுத்திக்கொள்ள பற்றிக்கொள்ளும் ஒரு துணை! அதை அவன் சிறப்பாக செய்ய வேண்டும் என்றில்லை, அவனை அது சந்தோஷம் கொள்ள வைத்தால் போதும்.
அதனால் ஆனந்தனுக்கு இசை மீது ஆர்வம். அவன் பாட்டி கமலாவை போல் அவனுக்கும் பாடிடும் குரல். பாட்டை விட பண்ணிசைப்பில்(Tune) அவனுக்குப் பிடித்தம் அதிகம், இசைக்கருவிகளிலிருந்து இசையைப் பிறக்க வைப்பதில் இன்பம் கண்டவன் அதில் ஆர்வமாக இருந்தான். அப்பாவிடம் சொல்லி அதற்கான பயிற்சிகளில் சேர்ந்தான். இசை அவனை பல சமயம் அவனிடமிருந்தே காப்பாற்றியிருக்கிறது.
கார்த்திகேயனுக்கு எழுத்து தந்த ஆறுதலையும் கதகதப்பையுமே அவர் மீண்டும் அவரின் வாசகர்களுக்குத் தருகிறார். அப்பா எழுதும்போதும் வாசிக்கும்போதும் இருக்கும் மன நிலை ஆனந்தன் அறிவான். அதனாலயே அவன் அப்பாவை அந்த நேரத்தில் பெரிதாக தொந்தரவு செய்ய மாட்டான். அவராக பேச காத்திருப்பான்.
“என் டைமை வேஸ்ட் பண்ணிட்ட” என்று அவ்வளவு நேரம் பேசிவிட்டு மகனை முறைத்தார் கார்த்திகேயன்.
“எனக்கு உங்களோட இருக்க எந்த டைமும் வேஸ்ட் இல்லை பா” என்றபடி ஆனந்தன் எழுந்து செல்ல,
“அடடா ஆனந்தா! என்னோட பெஸ்ட் டைம்ஸ் எல்லாம் உன்னோட மட்டும்தான் டா” என்று கார்த்திகேயன் அறைக்குள் சென்ற மகனைப் பார்த்து கத்தினார்.
“கவிஞர் பொய் சொல்ல ஆரம்பிச்சிட்டார்.” என்று வம்பிழுத்தவன்
“முத்து மாமாவை மழை பெய்றதால ரெண்டு நாள் கழிச்சு வர சொல்லிட்டேன் பா. ஓகேதானே?” என்று கேட்டான்.
“ஓகேடா” என்ற கார்த்திகேயன் “அப்போ நான் போய் சமைக்கிறேன், தோசை, பூண்டு பொடி. ஓகே வா?” என்றதும் ஆனந்தனும் சரியென்றிட, கார்த்திகேயன் சமையல் செய்ய போனார்.
இரவு உலாவை மூடும் நேரமது. மேல்தளத்தில் இருக்கும் உணவகத்திற்கு சாலையின் இன்னொரு பக்கம் வழியிருக்க, அதனை மேற்பார்வையிட ஆளிருக்க அவர்களே நேரம் பார்த்து மூடிவிடுவார்கள். எப்படியும் பத்து மணிக்கு மேல் உணவகம் திறந்திருக்காது, ஒன்பதரைக்கு மேல் ஆர்டர்கள் எடுக்க மாட்டார்கள்.
மணி ஒன்பதைத் தாண்டியிருக்க ‘உலா’ வில் வாங்குபவர்கள் யாருமில்லை, வாரிதியைத் தவிர.
வாரிதிக்கு மனது சரியில்லை, அதற்காகவே புத்தகம் வாங்கி மனதை ஆற்ற வந்திருந்தாள். புத்தகம் வாங்கிவிட்டு பணம் செலுத்தும்போதுதான் அவளின் அலைப்பேசியை ஏதோவொரு புத்தகம் பார்க்கையில் விட்டது தெரிய, மீண்டும் புத்தகங்கள் இருந்த பிரிவில் நுழைந்தாள். அவள் வைத்த இடத்திலே அலைப்பேசி இருக்க, முன்னேற விடாமல் அவளை நிறுத்தியது முன்னிசையொன்று(prelude of song).
இசையின் வழியில் செவியைக் கொடுத்து பார்க்க, பாடல் எதுவும் அப்போது ஒலிக்கவில்லை. கிடாரின் வழி கசிந்த இசை அறையொன்றிலிருந்து வர, மெல்ல அறையை எட்டிப்பார்த்தாள் வாரிதி.
ஆனந்தன் அவனுக்கென இருக்கும் அறையில், இசைக்குள் தன்னை தொலைத்தபடி வாசித்துக்கொண்டிருந்தான். உலா மூடும் நேரம், யாரும் வரப்போவதில்லை என்பதால் அவனும் இசையும் தனித்திருக்க, அது வாரிதியைத் துணைக்கழைத்தது அவனுக்குத் தெரியவில்லை.
ஆனந்தன் இசைப்பான் என்று வாரிதி எதிர்ப்பார்க்கவில்லை. ஆனந்த ஆச்சரியத்தோடு அறைக்கதவின் பக்கம் நின்று இசையை ரசித்தவளுக்கு என்ன பாடல் என்று தெரியவில்லை. தெரியாவிட்டாலும் ரசிக்க தவறவில்லை.
ஆனந்தனாகவே நிறுத்திவிட்டு பார்க்க, வாரிதியின் “சாரி” அவனை சரணடைய
நானும் அதை பின்பற்ற நினைக்கிறேன்..” என்று வாரிதி கே.கே’வின் கவிதையினை தொடங்க
“பூந்தோட்டமும் புத்தகக் கடையும் வைத்திருப்பவனை
பார்க்கும்போது மட்டும் அவ்வெண்ணம்
பூந்தோட்ட பட்டாம்பூச்சி போல
பறந்து, மறந்து போகிறது”
கார்த்திகேயனின் உயிர்க்கவிதை அவரின் தமிழ்க்கவிதையை முடித்து வைக்க, வாரிதி
“அட! நீங்களும் கே.கே சாரோட இந்த கவிதைப் படிச்சிருக்கீங்களா?”
“ம்ம்” ஆனந்தன் தலையசைக்க,
“நிஜமா எனக்கு உங்களையெல்லாம் பார்த்தா பொறாமையா இருக்கு சார்” என்றாள் வாரிதி.
“ஆனந்தன்.. ஆனந்தன் கார்த்திகேயன்” என்று அவன் பெயரை சொல்ல,
“ஓகே, ஆனந்தன்” என்று கை நீட்டினாள் வாரிதி. புன்னகையோடு ஆனந்தனும் கரம் நீட்டினான்.
“கொஞ்சம் டல்லாதான் உலாவுக்கு வந்தேன் ஆனந்த். புக் வாங்கி கூட கொஞ்சம் அப்செட், ஆனா உங்க மியுசிக் கேட்டு நான் ரொம்ப ஹாப்பி, தேங்க்ஸ்” என்றாள் வாரிதி. அப்பா சொல்வது போல் கலை என்பது இருவழிப்பாதையாக இன்பம் கொடுக்கிறது என்பதை மீண்டும் உணர்ந்தான் ஆனந்தன்