“ஓகே சார், நாளைக்கு ஸ்கூல் போகணும். அப்புறம் பேசுறேன்” என்று நாசுக்காக ரேவதி கார்த்திகேயன் அழைப்பைத் துண்டித்து விட்டார். கார்த்திகேயன் பதில் சொல்லும் முன்பே அவர் வைத்துவிட, மகனை முறைத்தார் அவர்.
“இப்படித்தான் பேசுவீங்களா கார்த்திக்? சாம்பார் என்ன பருப்புல வச்சாங்கன்னுதான் முக்கியமா? நீங்களாம் என்ன நினைச்சிட்டு டேட்டிங் போகணும்னு நினைச்சீங்க? உங்கள வேற நான் சல்மான் கான், ஷாருக் கான் ரேஞ்சுக்கு நினைச்சிட்டேன்.” ஆனந்தன் கோபத்தில் படபடத்தான்.
“டேய்! எங்களுக்கு என்ன தோணுதோ அதான் பேச முடியும். நான் பொண்ணு பார்த்து பேச ஆரம்பிச்சிட்டேன், நீ எதாவது பொண்ணைப் பார்த்தியா?” கார்த்திகேயன் தன் முன் நின்ற மகனை பார்த்துக் கேட்க, ஆனந்தனுக்கு அப்படியொரு எண்ணமே இல்லையே.
“நீங்களே இப்படி இருந்தா நான் எங்க பேசுறது? உலகத்துல பேசவா விஷயமில்ல? சாம்பார் இட்லினு பேசிட்டு என்னை கேள்வி கேட்காதீங்க. நீங்க நிஜமாவே இந்த ரிலேஷன்ஷிப்ல சீரியஸா இருக்கேன்னு எனக்குக் காட்டுங்க, அப்புறம் பார்க்கலாம்”
“எனக்குப் பொண்ணு பார்க்கலாம்” கத்திவிட்டு ஆனந்தன் அறைக்குள் போய் அடைந்தாலும், இந்த வார்த்தைகள் சொல்லும் அளவிற்காவது மாறியிருக்கிறானே என்று மகிழ்ந்தார் கார்த்திகேயன்.
**************
“Art is to console those who are broken by life, கலை வாழ்க்கையில் உடைந்தவர்களை ஆறுதல்படுத்தும்னு வின்செண்ட் வான் கோ’னு ஒரு டச் பெயிண்டர் சொல்லியிருக்கார். அவர் எங்கிட்ட சொல்லல எனக்கு மவுண்ட் ரோட்ல இருக்க என் ப்ரண்ட் சொன்னாங்க.”
“எந்த கலையா இருந்தாலும் அப்படித்தானே? இசையும் அப்படியே! இசையோட உன்னதமே ஆனந்தப்படுத்துறதும் ஆறுதல்படுத்துறதும் தானே? நமக்கு எல்லாத்துக்கும் இசைதானே?”
“இது இரவின் இசைப்பாட்டு வித் மீது ஆர்ஜே வாரிதி கதிரவன்”
காலையில் உற்சாகத்துள்ளலோடு ஒலித்த வாரிதியின் குரல், இப்போது இரவோடு சினேகம் கொண்டு ஒலித்தது. மிகவும் மென்மையாக வருடிக்கொடுக்கின்ற காற்றாய் வாரிதியின் குரல். புலரிக்கும் இரவுக்குமிடையே அவள் குரல் வெவ்வேறு வண்ணத்தில் மாறியிருக்கும்.
“இன்னிக்கு நாள் எப்படி போச்சு? எப்படியோ போச்சுனு நினைச்சாலும் நாளைக்குன்னு ஒன்னு இருக்கு! இந்த இரவு முடிஞ்சு புதுசா ஒரு விடியல் வரப்போகுது. எல்லாம் நல்லா நடக்கும்னு நம்புவோம். அதை சொல்ற மாதிரி ஒரு அழகான பாட்டு சித்ராம்மா குரல்’ல உங்களுக்காக வந்திட்டே இருக்கு. பழைய பாட்டு பழகின ப்ரண்ட் மாதிரி ஒரு உணர்வு கொடுக்கும். அப்படியொரு பழைய பாடல் 90’ஸ் ல வந்த ஒரு சிறப்பான படத்துல இருந்து சிறப்பான பாட்டு. என்ன பாட்டுன்னு கேட்டு தெரிஞ்சுக்கோங்க, அடுத்த என்ன பாட்டுனு யோசிக்கிறதே ஒரு சுவாரசியம்தானே?”
“இதோ…. உங்களுக்காக இரவின் இசைப்பாட்டில் முதல் பாடல்.”
ரேவதியும் என்ன பாடலாக இருக்குமென்று யோசிக்க, அதற்குள் பாடல் தொடங்கிவிட, சித்ராம்மாவின் ஸ்ருங்கார குரலில் தன்னை தொலைத்தார் ரேவதி.
‘சிறகில்லை நான் கிளி இல்லை
அட வானமொன்றும் தொலைவில்லை
புவி மேலே நீ விதையானால்
இந்த பூமி ஒன்றும் சுமை இல்லை
வயதே கிடையாது முயல் போல் விளையாடு
உன் பங்கை பூமியில் தேடு.தேடு’
வாரிதி சொல்வது போல் அவருக்கு இசைதான் ஆறுதல். ஆற்றுப்படுத்திகின்ற துணை! அவருக்கு ராகம், தாளம் எதுவும் தெரியாது, ஆனாலும் இசையை ரசிப்பார். அதுதானே இசையின் மகத்துவம். இசையின் ஆழம் அறியாதவர் கூட ஆனந்தப்படலாம். புரியாமல் ஒரு பூரிப்பினை கொடுப்பதல்லவா பாட்டும் இசையும்?
அவரின் இரவின் தொடக்கம் சின்னக்குயில் பாடலோடு தொடங்க, நிகழ்ச்சி முடியவும் உறங்கிவிட்டார். காலை வழக்கம்போல் அவரின் வேலைகள் துவங்கி, மாலை வீடு சென்றார். பூட்டிய வீட்டினை திறக்கவே அவருக்கு விருப்பமில்லை, யாருமற்ற வீட்டில் யாருக்காக அவரின் வாழ்க்கை என்ற எண்ணம் அந்த கதவைத் திறக்கின்ற கணத்தில் கனமாகத் தோன்றினாலும், வீடு திறந்து வேலைப் பார்க்க ஆரம்பித்தால் அவையெல்லாம் வழக்கம்போல் ஓரமாய் உள்ளத்தில் ஒதுங்கிவிடும்.
சாமான்களை விளக்கிவிட்டு அவருக்கென சூடான தேனீர் தயாரித்தவர் அமைதியாக சமையல்கட்டில் நின்றவாறே குடிக்க, அலைப்பேசியில் அழைப்பு வந்தது. சார்ஜில் போட்டிருந்தவர் யாரென பார்க்க, கார்த்திகேயன்.
அந்த பெயரைப் பார்க்கவும் ஒரு கோபம். என்னவோ இந்த ரூபா பேச்சுக் கேட்டு இதெல்லாம் பண்ணிருக்கக் கூடாது என்று மனதில் தோன்றிய எரிச்சலை அடக்கி,
“நேத்து அந்த நேரம் கால் பண்ணியிருக்கக் கூடாது மேடம், சாரி இந்த ஆனந்த் என் பேச்சைக் கேட்காம உங்களுக்குக் கூப்பிட்டான். ரியலி சாரி மேடம்” என்ற கார்த்திகேயன் குரலில் உண்மையான மன்னிப்பு இருக்க
“இட்ஸ் ஓகே சார்” என்றார் ரேவதியும்.
“அப்புறம் மேடம் என் பையன் உங்க கிட்ட பேச சொல்லி என்னை இம்சை பண்றான், அவன் இருக்கும்போது பேசினா கூடவே நிக்குறான். எனக்கு என்ன செய்றதுனு தெரியல, சாரி மேடம். நீங்க உங்களுக்கு ஒரு பார்ட்னர் வேணும்னு அந்த ஆப் வந்திருப்பீங்க, நான் தேவையில்லாம பேசி என்ன பண்றதுனு தெரியல” கார்த்திகேயனுக்கு வார்த்தைகள் வசமின்றி போக, சங்கடத்தில் பேசினார்.
“அது நானும் பெருசா யோசிக்கல சர். என் மாமியார் இறந்ததுல இருந்து ரொம்ப தனியா இருக்கேன். என் ப்ரண்ட், எங்க ஸ்கூல்ல டீச்சரா இருந்தாங்க அவங்க பொண்ணு இதைக் கேட்டுட்டு, அவதான் இப்படி இருக்கு ஆன்டினு ஆனந்த் மாதிரி என்னை கன்வின்ஸ் பண்ணினா. ஒரு நேரம் யாருமில்லைனு ஒரு கவலை, பயம். அதே நேரம் இனிமே எதுக்கு இந்த கல்யாணம் அப்படினு ஒரு யோசனை. ஸோ நீங்க எதுவும் ஃபீல் பண்ண வேண்டாம்” ரேவதி அவர் உணர்வை அப்படியே சொன்னார்.
நம்மை அதிகம் தெரியாதவர்களிடம் துயரைக் கொட்டுவது சில நேரம் வசதியாகிப்போகிறது. பெரிதான அறிமுகமில்லாதவர்களிடம் துயரத்தைப் பகிரும்போது, எந்தவிதமான அனுமானங்களும் இன்றி அவர்கள் காது கொடுத்துக் கேட்பதே போதுமானதாக இருக்கிறது. ஆறுதலையோ, அரவணைப்பையோ எதிர்ப்பார்க்காமல் பகிர்ந்து, அதன் மூலம் ஒரு சிறு ஆசுவாசம்.
ரேவதி அப்படி தனிமை குறித்துப் பேச, கார்த்திகேயன் உடனே
“ஏன் மேடம், அப்படி பேசுறீங்க? நானும் உங்களை மாதிரிதானே? தனிமையை எல்லாம் நம்ம வேற வேலை பார்த்துப் போக்கிக்கணும். நீங்க புக்ஸ் படிக்கிறது, பெயிண்ட் பண்றது, இப்படி எதாவது செய்வீங்களா?”
ரேவதி பற்றி தெரிந்ததில் உண்டான பரிவில் கார்த்திகேயன் தனிமையைப் போக்க, அவருக்குத் தெரிந்த வழிகளை சொன்னார்.
“எனக்கு அதெல்லாம் பிடிச்சதுமில்லை, பழக்கமுமில்லை” என்றதும் கார்த்திகேயன் உடனே
“அப்போ உங்களுக்குப் பிடிச்சு, உங்க ஃபீரி டைம்ல என்ன செய்வீங்க?”
“பிடிச்சு’ன்னா ரேடியோ கேட்பேன்”
“என்ன ரேடியோவா? இந்த காலத்துல அதெல்லாம் ரொம்ப குறைஞ்சிடுச்சுல மேடம்?” நினைவேக்கத்தில் நனைந்து வந்தது கார்த்திகேயனின் குரல்.
“டீவியெல்லாம் மாமியார் இருக்கும்போது பார்ப்பாங்க. அப்புறம் கேபிள் கட் பண்ணிட்டேன், ரேடியோ கேட்டுகிட்டே வீட்டு வேலையெல்லாம் செஞ்சிடுவேன்”
“நான் கார்ல போகும்போது கேட்பேன், மத்தபடி வீட்ல கேட்டு ரொம்ப வருஷமாகிடுச்சு. என்ன பாட்டு வேணும்னாலும் யூடியுப்ல வருதே”
“அதுவும் சரி, உங்களுக்கு என்ன ப்ரோக்ரம் பிடிக்கும்?” கார்த்திகேயன் ரேவதியின் ரசனை தெரிந்தால் அதற்கேற்றார்போல் அவருக்கு எதாவது வழி சொல்லலாம் என்று நினைத்துக் கேட்க,
“எனக்கு காலையில இனிது இனிது வித் வாரிதியும், நைட் இரவின் இசைப்பாட்டும் பிடிக்கும். ரெண்டுமே வாரிதின்னு ஒரு ஆர்ஜே பொண்ணு பண்றா. அவ குரலை கேட்டாலே எனக்கு அவ்வளவு சந்தோஷமா இருக்கும். அவ பேசுறதே அழகுதான். சொல்லப்போனா ஸ்கூல்’ல இருக்கவங்க தவிர இந்த நாலு வருஷத்தில அதிகம் நான் கேட்ட குரல் வாரிதியோடது!”
ரேவதி சட்டென்று வாரிதியின் ரசிகையாக மாறிப்போனார். அவருக்குப் பிடித்தவர் பற்றி சொல்லவும் அவர் குரலோடு ஒரு புன்னகை தொடர்ந்ததை கார்த்திகேயனால் உணர முடிந்தது.
“வாரிதி” கார்த்திகேயன் நினைவடுக்கில் அந்த பெயரைத் தேடினார்.
“ம்ம், வாரிதிதான். அவ பெயரே புதுசா இருந்தது” ரேவதியும் சொல்ல
“நான் ஒன்னு சொல்லவா மேடம்? துணை’ன்றது காதலன், காதலியா, கணவன், மனைவியா இருக்கணும்னு அவசியமில்லை. நண்பனா கூட இருக்கலாம் தானே? ஆனந்தனுக்காக இதெல்லாம்தான்னாலும் இப்போ உங்ககிட்ட பேசும்போது தோணுது, நம்ம ஏன் ப்ரண்ட்ஸா இருக்கக் கூடாது?” என்று கேட்டார் கார்த்திகேயன்.
“அப்போ ஆனந்தன் கேட்டா என்ன சொல்வீங்க சர்?”
“அவன் நம்ம சகஜமா பேசினாலே சும்மா இருப்பான். ஆறு மாசம் போனதும் அவனுக்குப் பொண்ணு பார்க்க சம்மதம்னு சொல்லியிருக்கான். அண்ட் உங்களுக்கு நானே நல்ல வரனா பார்க்கிறேன் மேடம்”
“அதெல்லாம் ஒன்னும் வேண்டாம் சர், நீங்க சொன்ன மாதிரி தனிமைக்கு நான் பழகிட்டேன்.”
“அதில்ல மேடம்”
“அதான் நீங்க ப்ரண்டா இருக்கேன் சொல்லிட்டீங்களே, அப்படியும் எனக்கு வேற ஐடியா இருந்தா நான் பார்த்துக்கிறேன் சார். நீங்க ஒரு ப்ரண்டா எங்கிட்ட எப்போவும் பேசலாம்” என்றார் ரேவதி அழுத்தமாக.
கார்த்திகேயனும் ஆமோதித்து அந்தளவோடு பேச்சை நிறுத்திக்கொண்டார். அன்று இரவு மகன் வந்தபோது அவனிடம் ரேவதியிடம் பேசியதை மணிக்கணக்கோடு காட்டினார். ஆனந்தன் முகத்தில் புன்னகை.
அன்றிரவு இரவு உணவு முடியவும் கார்த்திகேயன் ஹாலில் உள்ள ரேடியோவை சுத்தம் செய்வதை கண்டான் ஆனந்தன்.
“என்னப்பா ரேடியோவை சுத்தம் பண்றீங்க? பாட்டு வேணும்னா ஸ்பாட்டிஃபைல கேளுங்க” என்று சொல்ல
“என்ன பாட்டுனு தெரியாத சுவாரசியம் உன் ஸ்பாட்டிஃபைல கிடைக்குமா?” என்று மகனிடம் கேட்டவர்
“உனக்கு ஒரு சர்ப்ரைஸ்டா” என்றார். ஆனந்தனும் யோசனையாக ஸோஃபாவில் படுத்தவன் அப்பா செய்வதை வேடிக்கைப் பார்த்தான்.
அலைவரிசை சரியாக கிடைக்காமல் கொரகொரவென்ற இரைச்சல் கேட்க,
“கார்த்திக், நைட் சத்தம் பண்ணி என்னை வெறுப்பேத்தாதீங்க” என்று ஆனந்தன் கத்த
“அடே இருடா” என்று பதிலுக்குக் கத்தினார் கார்த்திகேயன்.
சிறிது நேரத்தில் சரியான அலைவரிசையில் வைக்க, காற்றோடு கலந்தது வாரிதியின் குரல்.
“இது இரவின் இசைப்பாட்டு வித் மீ ஆர்.ஜே வாரிதி கதிரவன். உங்களுக்காக இதோ ஒரு அழகான அப்பா, மகன் பாட்டு. பாட்டுனு சொல்றத விட ஒரு தாலாட்டு. அப்பா மகளுக்கும், அம்மா மகனுக்கும் பாடுற பாடல்கள் அதிகம் கேட்டாச்சு, கொஞ்சம் புதுசா இதோ சிகரம் படத்திலிருந்து.. எஸ்.பி.பி அவர்களின் குரலில் ….”
“ரேவதி மிஸ் சொன்னாங்க. வாரிதியோட பெரிய ஃபேன் போல, அவங்க சொல்லித்தான் தெரியும்” கார்த்திகேயன் சொல்ல, வாரிதியைப் பற்றி தெரிந்ததை விட அப்பா ரேவதி மிஸ்’ஸின் விருப்பத்தைக் கேட்டிருக்கிறாரே என்பதே உள்ளத்தை நனைத்தது.
கார்காலத்தின் தொடக்கம் என்பதால், வெளியே மழை மெல்ல சாரலாக தொடங்கியிருக்க, மழையாய் இசைத்தார் எஸ்.பி.பி. வாரிதியின் குரல் மட்டுமின்றி, அவள் தேர்வு செய்த பாடலும் ஆனந்தனுக்குப் பிடித்தது. அவள் உலா வந்தபோது அவன் கிடாரில் வாசித்த பாடல் அது!
‘புலிக்குப் பிறந்தவனே
பூப்போல் வளர்ந்தவனே
கனவுக்கும் வலிக்காமல் கண்ணுறங்கு பொன்மகனே’
எஸ்.பி.பியின் இசையும் குரலும் ஏன் இத்தனை இம்சிக்கிறது? உறங்காதவர்களை உறங்க வைத்து, தாலாட்டினை தந்தை குரலில் தந்தததை என்ன சொல்ல? இப்போதே கண்ணுறங்கு என்று அவர் பேச்சைக் கேட்க தோன்றினாலும், கண்ணுறங்காமல் அவர் பாடலை கேட்கவே ஆவல் கொள்ளும் மனது.
“இப்போதே கண்ணுறங்கு” என்று அவர் பாடும்போது கார்த்திகேயனின் முகம் மகனை கனிவாகப் பார்த்தது. ஆனந்தனுக்கும் அந்த பாடல் மிகவும் நெருக்கமான ஒன்று. தந்தையின் தாலாட்டில் வளர்ந்தவன் அவன், அவர் எஸ்.பி.பி அளவில் ஒரு சதவீதம் கூட பாடவிட்டாலும் அப்பாவின் குரலில்தான் முதலில் அந்த பாடல் அவன் செவி தீண்டி, மனதைத் தொட்டது.
பாடல் முடிந்து போனாலும் இன்னும் எஸ்.பி.பி’யின் குரல் கேட்டுக்கொண்டே இருந்தது. சில நிமிடங்களானது, பாடும் நிலா கொடுத்த உணர்விலிருந்து மீள.
அடுத்து வாரிதி பேச இரவும் மழையும் சேர்ந்த குரலாய் அவள். அவள் பேசி முடிக்க, அப்பாவிடம் வாரிதி அவனிடம் பேசியது குறித்து சொல்ல, கார்த்திகேயனும் மகன் விருப்பமென்றுவிட்டார்.
புதிய மனிதர்களும் புதிய சந்திப்புகளும் மகனின் மனதில் மாற்றத்தைக் கொண்டு வரும் என்று நம்பினார் கார்த்திகேயன். அது அவருக்கும் பொருந்தும் என்பதை நினைக்கவில்லை!