அடுத்தநொடி திண்ணைக்கு கரண்டி ஒன்று பறந்து வர, “வாயிலயே சூடு வைக்கப் போறேன் பாரு. கூடமாட வேலையைப் பார்க்காம ஆளுக்கு முன்னாடி தட்டத் தூக்கிட்டு உட்கார்ந்துருக்க…
இதுல பத்துவாட்டி ஏலம் வேற! பேத்தியை திட்டிக்கொண்டே சமையல் செய்து கொண்டிருந்தார் இராஜம்மா யாழினியின் தாய் வழிப் பாட்டி.
மேலே வந்து விழுந்த கரண்டியிடமிருந்து இலாவகமாகத் தப்பித்தவளோ,
“அந்தச் சட்டியில கொதிக்கிற அயிரைமீனு என் வட்டிலுக்கு வந்தா நான் ஏன் ஏலம் விடப்போறேன் ராஜம்மா” மீன் குழம்பை வாசம்பிடித்தபடி தாளத்தை நிறுத்தாமலே பதிலுக்குப் பதில் பேசிக்கொண்டிருந்தாள்.
“வந்தேன்னு வைய்யி தாளம்போட விரல் இருக்காது. வெடுக் வெடுக்குன்னு புடுங்கி எறிஞ்சிப்புடுவேன் பார்த்துக்க! இன்னும் சின்னப் பிள்ளையாட்டம் விளையாடிக்கிட்டு…”
வாய் என்னவோ பேத்தியை வறுத்தெடுக்க கையோ பேத்திக்குப் பதமாக மீன் பொறிக்க ஆரம்பித்திருந்தது.
கடைசியாக கொத்தமல்லி இழையைத் தூவி மீன் குழம்பைத் தட்டுப்போட்டு மூடி வைத்தவர்,
“உன்னை ஒருத்தன்கிட்ட புடிச்சிக் குடுக்கறதுக்குள்ள நான் உன் தாத்தன்கிட்ட போயிருவேனோன்னு பயமா இருக்கு…” என்று பெருமூச்சொன்றை வெளியேற்றினார்.
தாய் தகப்பன் இல்லாத தன் மகள் வயிற்றுப் பேத்தியின் கவலையில் வாய் புலம்பினாலும் ஒருபக்கம் கைத்தானாகப் பேத்திக்குப் பிடித்த மீனை முள் எடுத்து தனியாகத் தட்டில் வைத்துக் கொண்டிருந்தது.
“ஏ ராஜம்மா உனக்கு எத்தனைவாட்டி சொல்லிருக்கேன் இப்படி பேசாதன்னு…
எனக்கு சோறும் வேண்டாம் ஒன்னும் வேண்டாம் போ…” தட்டைத் தூக்கி அடித்துவிட்டு முகம் திருப்பிக் கொண்டாள்.
“நெருப்புன்னு சொன்னா வாய் வெந்துடாதுடி முனுக்குன்னா கோபம் மட்டும் மூக்கு மேல வந்துருது. சாப்பிட வாடி! என்றவரிடம் “முடியாது போ” என்று மேலும் முறுக்கிக் கொண்டாள்.
“என் பேத்திய கட்டிக்க அந்த இராஜகுமாரனே வருவான். அதைப் பார்த்துட்டுதான் இந்த ஆத்தா கண்ணை மூடுவேன் போதுமா! கோவிக்காம சாப்பிட வாய்யா! இனி இப்பிடி பேசமாட்டேன்…” யாழினி பசி தாங்கமாட்டாள் என்பதால் வாசலுக்கே வந்து கெஞ்சினார்.
“அந்த கிறுக்கி என்னத்துக்கு என்னைத் தேடிட்டுத் திரியுறாளாம்?” யாழினி சொல்லி முடிக்கவும்,
“ஏய் யாழி… ஏ புள்ள யாழி..” என்றழைக்கும் குரல் திண்ணையைத் தாண்டி வெளிமுற்றத்தில் இருந்து கேட்டது.
“இராஜம்மா அந்த முருகேசு ஆத்தாதான் வந்திருக்கா என்னையக் கேட்டா இல்லன்னு சொல்லிடு” என்றவள் அடுத்த நொடி சிட்டாக வீட்டுக்குள் பறந்திருந்தாள்.
‘என்ன பண்ணிட்டு இந்த ஓட்டம் ஒடுறான்னு தெரியலையே’ என்று இராஜம்மா பார்த்துக் கொண்டிருக்க…
“ஏ பெரியாத்தோ, எங்க உன் பேத்திய? எங்கவீட்டு மீனுதான் கொழம்புல கொதிக்குதோ வாசனை இங்க வரைக்கும் தூக்குதே!” என்று வந்து நின்றாள் முருகேசுவின் தாய்.
“பொய்யி பொய்யி ராஜம்மா! அதான் அயிரைக்குப் பதிலா விரால் கெண்டை எல்லாம் முருகேசு கிட்டக் குடுத்துவிட்டனே!” என்று வீட்டுக்குள் இருந்து ஓடி வந்த யாழினி முருகேசின் தாயிடம் சண்டைக்கு நிற்க…
அந்நேரம் பார்த்து, “அடியே எங்கடி என் பொண்ணு புடிச்ச விராலும் கெண்டையும்” என்று கொண்டையை முடிந்தபடி வாசலில் வந்து நின்றாள் ஈஸ்வரியின் தாய்.
‘அச்சோ இவளும் இந்த நேரம் பார்த்தா வந்துத் தொலையனும்… சரி சமாளிப்போம்’ என்று நினைத்தவளோ,
“எக்கோ உன் புருஷன் மீனுதான விக்காரு அப்புறம் உனக்கெதுக்கு மீனுன்னுதான் தூக்கி அவன்கிட்ட குடுத்தேன்…” என்றவள் இராஜம்மாவை ஏறிட அவரோ மூக்கில் புகைவராதக் குறையாக இடுப்பில் கை வைத்து முறைத்துக் கொண்டிருந்தார்.
‘அச்சச்சோ! இந்த ஆத்தா வேற இரயில் இஞ்சின் மாதிரி மூச்சு விடுதே! மனதோடு புலம்பியவள்,
வந்து நின்றவனின் தோலுரித்தப் பார்வையில் புடவை முந்தானை விலகுவதுபோல் அருவெறுப்புத் தோன்ற அவனைக்கண்டதுமே அங்கிருந்தப் பெண்கள் ஆளுக்கொரு பக்கம் சிதறி ஓடியிருந்தனர்.
“இந்தாப் பாரு பாண்டி! வந்தமா தின்னமா எந்திரிச்சி நடையக் கட்டுனமான்னு இருக்கணும். இடையில அவளைச் சீண்டுன நுங்க அறுக்கற மாதிரி உன் சங்க அறுத்துருவேன் பார்த்துக்க..”
என்ற இராஜம்மா சட்டியோடு மீன்குழம்பை அவன் முன்னே வைத்திருந்தார்.
“நுங்கு சங்குன்னு நல்லாத்தான் பேசுற…” என்றவனோ,
“இன்னும் எத்தனை நாளைக்கு அவளை வீட்டுக்குள்ளயே வச்சி பாதுகாக்கன்னு நானும் பாத்துர்றேன்…
இன்னும் இரண்டு மாசம் தள்ளட்டும் அப்புறம் இந்த பால்பாண்டி யாருன்னு காட்டுறேன்” என்றவன் மீன் குழம்பைச் சட்டியோடு தட்டில் கவிழ்த்திருந்தான்.
“என் உசுரு இருக்க வரைக்கும் உன் நினைப்பு பலிக்காது” என்ற ராஜாத்தியம்மாளின் குரலில் அவ்வளவு உறுதி.
ஒளிந்திருந்து பார்த்துக் கொண்டிருந்த யாழினியோ, ‘அச்சோ படுபாவி! சட்டியோடக் கவுக்குறானே என் மீனெல்லாம் போச்சே! பேதில போவான்’ என்று பாண்டிக்குச் சாபமிட்டவள்,
‘ஒரு மீன் சட்டியவே அவங்கிட்டருந்து புடுங்கி வைக்கத் துப்பில்ல இதுல பேச்சப் பாரு’ என்று இராஜம்மாவையும் மனதுக்குள் வறுத்தெடுத்துக் கொண்டிருந்தாள்.
இராஜம்மாவின் மறுப்பு பாண்டியை வெறுப்பேற்ற, “அதையும்தான் பார்க்கறனே! உனக்கென்ன அவ்வளவு வீராப்பு முறைக்கு என் அக்கா மவதான அவ? நான் கட்டுனா என்னத் தப்புங்கிறேன்! என்றவனின் கோபத்தில் குழம்புச் சட்டிப் பறந்தது.
“அக்கா மவளா! என் புருஷன் ஒதுங்கிட்டு வந்தவ புள்ளையெல்லாம் என் பேத்திக்கு தாய்மாமனாயிட முடியாது. அதுவும் நீ என் புருஷனுக்கு பிறந்தவன் கூட கிடையாது. யாரு உன் அப்பனோ அங்கக் காட்டு உன் சவாடாலயும் தாட்டியத்தையும்…”
“பதினெட்டு முடியாம நீ போலீஸ் கீலீஸ்னு போனா வம்பாயிரும்னுதான் பேசாமப் போறேன்” என்றவனோ சாப்பிட்டு முடித்து அந்தத் தட்டிலேயே கைகளை கழுவிக்கொண்டான்.
‘அந்தத் தண்ணியையும் வழிச்சி நக்கிரு கருவாப் பயலே’ என்ற யாழினியோ, எண்ணெய் இல்லாமலே பால்பாண்டியை சட்டியிலிட்டு வறுத்துக் கொண்டிருக்க…
“ஏ புள்ள இன்னும் இரண்டே மாசந்தான் இந்த மாமனக் கட்டிக்கத் தயாராகிக்க அப்பயும் எங்காத்தா பெரியாத்தான்னுகிட்டு இருந்தீன்னா முதல் கொலை உங்காத்தாதான் பார்த்துக்க…” என்றான்.
‘ஐ… இன்னும் இரண்டு மாசத்துல எனக்குப் பிறந்தநாள் வருது. ஞாபகப் படுத்தி விட்டதுக்கே கருப்பனுக்கு நன்றி சொல்லணும்’ குதுகலித்தாள் பெண்ணவள்.
அவன் இப்படி மிரட்டுவது ஒன்றும் யாழினிக்கு புதிதல்ல! அவள் வயதுக்கு வந்தது முதல் மிரட்டிக் கொண்டுதான் இருக்கிறான்.
“அப்புறம் இப்பமாதி ஓடி ஒளிஞ்சாலும் விடமாட்டேன்! தாலியக் கட்டிக்கிட்டு புள்ளைய வாங்கிக்கிறியா இல்ல புள்ளைய வாங்கிக்கிட்டு தாலியக் கட்டிக்கிறியான்னு நீயே முடிவு பண்ணிக்க” என்று உள்ளே பார்த்து குரல் கொடுத்தவனோ அங்கு அழகாய் மலர்ந்திருந்த ரோஜாச்செடியை எட்டி உதைத்து விட்டு வெளியேறினான்.
யாழினியோ அவன் பேசப் பேச, ‘ஏலே ஏலே ஏலேலோ ஏலாலங்கடியோ…’ என்று தாவணியை இழுத்துச் சொறுகியபடி த்ரிஷாவைப்போல் இடுப்பை வளைத்து வீட்டினுள் குத்தாட்டம் போட்டுக் கொண்டிருந்தாள்.
அவள் கடைசியாகப் பார்த்த படமும் அதுதான். இராஜம்மா வீட்டில் தொலைக்காட்சி வாங்கி வைக்காமல் இருக்க கடந்தமாதம் கோவில் திருவிழாவின் போது ஊருக்குப் பொதுவில் திரையிடப்பட்ட படத்தைப் பார்த்திருந்தாள்.
அது மிகச்சிறிய குக்கிராமம் என்பதால் அங்கு வயல்வேலைக்குச் செல்பவர்களே அதிகம் இருக்க அங்கே தொலைக்காட்சி அவசியப் படாத ஒன்றாக இருந்தது.
இன்று அநேகபேர் வீட்டில் தொலைக்காட்சி வந்துவிட்டாலும் இன்றுவரை அது தொல்லைக் காட்சியாக மாறியிருக்கவில்லை. அதிலும் இராஜம்மா பேத்தியை வெளியே அனுப்புவது அதிசயத்திலும் அதிசயமாயிற்றே!
அப்படி வெளிச் செல்லும் நாட்களில் ஊர் மொத்தத்திடமும் வம்பிழுத்துவிட்டு வருவாள் அவர் பேத்தி.