“இனி மாமின்னு கூப்பிடக்கூடாதுன்னு சொன்னேன்” என்று தளிர் வெறுமையான குரலில் சொல்லவும்,
“உனக்கு என்ன கிறுக்கா பிடிச்சிருக்கு..? அவளுக்கு நீன்னா உயிர்..! எதுக்குடி குழந்தை கிட்ட அப்படி சொன்ன..?” என்று கேட்கவும் அவனுக்கு பதிலளிக்காது அமைதியாக அவனை பார்த்தாள்.
“தளிர் உன்கிட்ட தான் கேட்கிறேன் எதுக்காக குழந்தைகிட்ட அப்படி சொன்ன..?” என்றவனின் பொறுமை கொஞ்சம் கொஞ்சமாக விடைபெற்று கொண்டிருந்தது.
“ஏன் சொல்லகூடாது..?” என்று அவனையே திருப்பி கேட்டதும் “தளிர்” என்ற அதட்டல்..!
ஆனால் அதற்கு அசராதவளாக “குழந்தை மனசுல வீண் கற்பனை வளர்ப்பது நல்லதில்லை அதனால தான் சொன்னேன்.. வைஷு ரொம்ப ஸ்மார்ட் அவளுக்கு புரியும், நீங்க தேவையில்லாம எக்ஸாஜிரேட் பண்ணாதீங்க”
“ஏன்டி நம்ம பிரச்சனை நம்மோட..! அவ சின்ன குழந்தை அவளுக்கு என்ன புரியும்..? ஏற்கனவே கல்யாணம் நடக்கலைன்னு ரொம்ப உடைஞ்சு போயிட்டா, நிச்சயம் நீதான் அவளோட மாமின்னு சொன்னதுல கொஞ்சம் நார்மலாகி இருந்தா.. ஆனா நீ என்ன பேசி வச்சிருக்க..? குழந்தையால தாங்கிக்க முடியாதுன்னு தெரியாதா..?” என்றவன் முகத்தில் கலவையான உணர்வுகள்.
“…”
“லிசென் தளிர் வைஷு என் பொண்ணு மாதிரி அவகிட்ட நீ இப்படி பேசுறது இதுவே கடைசியா இருக்கணும்… டோன்ட் டூ திஸ் அகைன்! எனக்கு இது சுத்தமா பிடிக்கல.. திரும்ப இதுபோல நடந்தது நான் இந்தளவு பொறுமையா இருக்கமாட்டேன்” என்று கடுமையான குரலில் எச்சரிக்கவும் அவளிடம் பதிலில்லை.
“உன்கிட்ட தான்டி பேசிட்டு இருக்கேன்” எனவும் அத்தனை நேரம் கொண்டிருந்த மௌனத்தை கலைத்தவள்,
“இதுதான்! இந்த ஆட்டிடியூட் தான் எனக்கு பிடிக்கலை… நான் என்ன செய்யணும் என்ன பேசணும்னு எல்லாமே நீங்க டிஸைட் பண்றீங்க… ஆனா ஏன் இப்படி..? வை ஆர் யூ டூயிங் திஸ்..?”
“ஏன்னா புருஷன் பொண்டாட்டி இரண்டு பேருல யாராவது ஒருத்தருக்கு உருப்படியா யோசிக்க தெரிஞ்சிருக்கணும்… எங்க உனக்கு தான் மூளைன்னு ஒரு வஸ்த்துவை ஆண்டவன் படைச்சான்னா தெரியலை, ஒருவேளை உன் மண்டைக்குள்ள அதை வச்சிருந்தாலும் யூஸ் பண்ண கூடாதுன்னு முடிவோட இருக்க அதுதான் உனக்கும் சேர்த்து நான் யோசிக்கிறேன்..” என்று கடுகடுத்தவன்..,
“கொஞ்ச நாள் இந்த பிரச்சனை எல்லாம் முடியற வரை நீ நான் சொல்றதை மட்டும் செய் போதும்..!” என்றான் கட்டளையாக.
“முடியாது” என்றாள் உறுதியான குரலில்.
“என்னடி முடியாது” என்று இருக்கையில் இருந்து எழுந்தவனுக்கு தலை விண்விண்ணென்று வலிக்க தொடங்கிவிட்டது.
‘பின்னே கடந்த சில நாட்களாக அவன் கொண்டிருக்கும் அழுத்தம் இதுநாள் வரை இல்லாத அளவு அதீதமானது… இளம் வயதில் இருந்தே தொழிலில் கால் பதித்து ஏற்ற இறக்கங்களுக்கு பழகி சிக்கல்களை எதிர்கொண்டிருந்தாலும் சரத் மூலமான சிக்கல்கள் அத்தனையும் சவாலானது.. மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகுபவனை காவலில் வைக்கும் வரை உதய்யால் நிம்மதியாக உறக்கம் கொள்ள முடியாது.. இவ்வளவு ஏன் எப்போது கடைசியாக உணவை ரசித்து உண்டான் என்பதே நினைவில் இல்லை..’
‘அண்ணாமலையில் தொடங்கி வைஷு, சரத், பெற்றோர், உறவினர் என்று அனைத்து பக்கமும் நெருக்கி பிடிக்கையில் குறைந்தபட்சம் தளிர் அவனை புரிந்து கொண்டாலாவது ஆசுவாசம் கொண்டு அவள் தன்னோடு நிற்கும் பலத்தில் மற்ற பிரச்சனைகளை எளிதாக கையாண்டு விடுவான்.’
‘ஆனால் மற்றவர்களை விட தளிரை சமாளிப்பது தான் அவனுக்கு பெரும்பாடாக இருந்தது… தன்னிடம் இருந்து ஒதுங்கி விலகி போக நினைப்பவளின் காரணமே இல்லாத பிடிவாதம் அவனை வெகுவாக பாதிக்கிறது.. அவன் சிந்தையை சிறையெடுத்து இருப்பவள் எதையும் பேசி தீர்க்க முயலாதது மட்டுமின்றி வாயை திறக்காமலே அவனை சோதித்து கொண்டிருக்கிறாள்.
‘உப்ப்ப்ப்’ என்று மூச்சை ஆழமாக எடுத்துவிட்டு, “லிசென் தளிர் நீ ஒன்னும் சின்ன குழந்தை கிடையாது..” என்றான்.
“அதேதான் நானும் சொல்றேன் டோன்ட் ட்ரீட் மீ லைக் எ சைல்ட்..! ஐ ஆம் எ டீச்சர் எனக்கு என் பிரச்சனைகளை பார்த்துக்க தெரியும் ஆனா நீங்க ஏன்…” என்று ஆரம்பித்தவள் தன்னை நிதானித்து, “ப்ளீஸ் ட்ரை டூ அண்டர்ஸ்டான்ட் உதய் ஐ ஆம் அப்சலூட்லி ஓகே” என்றாள்.
“என்னடி ஓகே..? எதுவும் ஓகே இல்ல, நீ நினைக்கிற மாதிரி சரத் இல்ல அதைவிட மோசமா இருக்கான்.. எனக்கு நீ முக்கியம்! ப்ரீஸீ என்னமோ நீ அமைதியின் சிகரம், பொறுமையின் சின்னம், நவீன அன்னை தெரசான்னு சொன்னா ஆனா நாம என்ன மாதிரியான சூழல்ல இருக்கோம்னு புரிஞ்சுக்காம ஏன்டி குழந்தையை விட மோசமா அடம் பிடிக்கிற..? உனக்கு இதெல்லாம் கூட தெரியுமா..?” என்று ஆச்சர்யத்தோடு கேட்க,
“எனக்கு எதுவும் புரியாமல் இல்லை… என் பிரச்சனையை நான் பார்த்துக்கறேன் நீங்க விலகிடுங்கன்னு தான் சொல்றேன் உங்களுக்கு ஏன் புரிய மாட்டேங்குது..” என்று அவளும் உரத்த குரலில் கேட்டிட..,
“சத்தம் போடாத தளிர், இந்த ப்ளோர்ல ஸ்டாஃப்ஸ் வந்துட்டு போயிட்டு இருப்பாங்க.. மெதுவா பேசு” என்றபோதே அவன் அறைக்கதவை தட்டி நின்றான் செல்வம்.
“கம் இன்” என்றவன் தளிரை முறைத்துக்கொண்டே நாற்காலியில் அமரவும் உள்ளே வந்தவன் தான் கொண்டு வந்த உணவை கொடுத்துவிட்டு கிளம்ப,
“செல்வம் இன்னும் ஒருமணி நேரத்திற்கு யாரும் ரூம்க்கு வரவேண்டாம் எமெர்ஜென்சி இருந்தா மெசேஜ் மட்டும் பண்ண சொல்லு” என்றவன் அவன் வெளியேறவும் அறைக்கதவை சாற்றி தாழ் போட்டுவிட்டு வந்தான்.
***************************
“இருக்கிற பிரச்சனை போதாதுன்னு நீயும் ஏன்டி இப்படி முரண்டு பிடிக்கிற..? நான் எந்த பிரச்சனையை தான் பார்க்கட்டும்? நீ சாப்ட்டியா இல்லையானு ஒவ்வொருமுறை விசாரிக்கிறதும் உனக்கு ஊட்டி விடறதும் தான் என் வேலையா..? உன்னை குழந்தைன்னு சொன்னா மட்டும் கோபம் வந்துடுது..” என்றவாறே ஏசியை கூட்டி வைத்தவன்.,
“நம்ம கல்யாணத்தின் போது சரத் சில நிமிஷம் லேட்டா வந்திருந்தா இந்நேரம் என்னோட தாலி உன் கழுத்துல இருந்திருக்கும்.. அப்படி நடந்திருந்தா நீ என்னை யார்னும் கேட்டிருக்க முடியாது, என் பொண்டாட்டி விஷயத்துல என்னை தலையிடாதன்னும் சொல்லியிருக்க முடியாது. அதைவிட நான் உன்னை இப்படி தள்ளி வச்சு பேசிட்டு இருக்கமாட்டேன் புரியுதா..?” என்றதில் அவனை ஏறிட்டு பார்த்தாளே தவிர பதிலளிக்கவில்லை.
“ஸோ திரும்ப திரும்ப இதையே பேசி என்னை டென்ஷனாக்காத..! சரத் தவிர்த்து உனக்கு வேற என்ன பிரச்சனைன்னு சொல்லு லெட்ஸ் சார்ட் இட் அவுட்” என்று கேட்ட போதும் அவளிடம் கனத்த மௌனம்.
‘ஷப்ப்பா படுத்துறாளே’ என்றவாறே தன் அறையில் ஒருபக்க சுவரை அடைத்திருந்த கண்ணாடி ஜன்னலின் எதிரே சென்று நின்றுகொண்டவன் பார்வை வெளியே இருந்தாலும் மனதிலோ திருமண தினத்தில் இருந்தே அவளிடம் தென்படும் மாற்றங்கள் ஒவ்வொன்றாக ஊர்வலம் போனது..’
‘தளிருடனான நிமிடங்களை அசைப்போட்டவனுக்கு அப்போதுதான் அவள் மனநிலையை கணக்கிடாமல் தனக்கான அவள் தவிப்பை புரிந்துகொள்ளாமல் தன் போக்கில் பேசிவிட்டதை எண்ணி தன்னையே கடிந்துக்கொண்டவன் சில நிமிடங்களில் தளிரிடம் சென்று, “ஓகே! கம் வித் மீ” என்று கையை நீட்டினான்.
“எங்கே..?” என்றதில் அவன் பொறுமை காற்றில் கற்பூரமாக கரைய நாற்காலியில் இருந்தவளை வேகமாக இழுத்து அணைத்துக்கொண்டான்.
“உதய் என்ன பண்றீங்க..? லீவ் மீ” என்றபோதும் விடாமல் அவளை இறுக்கி கொண்டவன் மெல்ல அவள் முதுகை வருடியவாறே கன்னத்தில் மென்மையாக முத்தமிட்டு,
“என்னை கோபபடுத்துறதுக்காகவே பேசாதடி..! நீ வேற நான் வேற இல்லைன்னு சொல்லிட்டு இருக்கேன் உனக்கு அது புரியலயா..? இல்ல புரியற விதத்துல நான் சொல்லணும்னு எதிர்பார்க்கிறியா..?” என்று அவள் முகத்தை கையிலேந்தி நெற்றியில் முத்தமிட தளிரின் விழிகள் கேள்வியாக அவனை பார்த்தது.
“என்ன பார்க்கிற..? நம்ம கல்யாணம் அன்னைக்கு முடிஞ்சிருந்தா நீயும் நானும் இன்னைக்கு ஹனிமூன்ல இருந்திருப்போம்” என்றவன் தளிரை தன் கைகளில் அள்ளிக்கொண்டு அங்கிருந்த கௌச்சில் (couch)அமர்த்தி தானும் அருகே அமர்ந்து தன் சட்டையின் முதலிரண்டு பட்டனை கழற்றிவிட்டவாறே,
“வேலை டென்ஷன்ல மதியம் சாப்பிட மறந்துட்டேன் அதனாலேயே தலைவலில உன்கிட்ட கொஞ்சம் கத்திட்டேன்.. முதல்ல சாப்பிடு அப்புறம் பேசலாம்” என்றவாறே கிச்சிடியை எடுத்து அவளுக்கு ஊட்டிட என்ன அதிசயம்! தளிர் பிடிவாதம் பிடிக்காமல் அமைதியாக வாங்கிக்கொண்டாள்.
ஆச்சரியமாக அவளை பார்த்தவன் மேலும் எதுவும் பேசாமல் ஊட்டிமுடித்துவிட்டு தானும் உண்டு முடித்து கைகழுவிக்கொண்டு வந்தான்.
“இப்போ சொல்லு சரத் தவிர உனக்கு வேற என்ன பிரச்சனை..?”
“எனக்கு பிடிக்கல”
“என்ன பிடிக்கல..?”
“…”
“தளிர் உனக்கு என்ன பிடிக்கல சொல்லுமா..?” என்றான் பொறுமையை இழுத்து பிடித்து,
தன் கைவிரல்களை கோர்த்து பிடித்துகொண்டிருந்தவள் சில கணம் தன் கண்களை மூடி திறந்து மெல்லிய குரலில், “எனக்கு உங்களை பிடிக்கல..” என்றாள்.
“வாட்..?”
“எஸ்! எனக்கு உங்களை பிடிக்கல…”
“பொய் பேசாதடி! உனக்கு வரலைன்னு சொல்லிட்டேன்” என்று உதய் அவளை தீயாய் முறைக்க,
“இல்ல நிஜமா உங்களை பிடிக்கலை”
“உளறாதடி!”
“உளறலை, எனக்கு நிஜமாவே நீங்க செய்யற எதுவுமே பிடிக்கலை” என்று திடமாக தளிர் சொல்ல,
“என்ன பிடிக்கலை..?” என்ற உதய்யின் குரல் எரிச்சலோடு ஒலித்தது.
“…”
“உன்னை தான்டி கேட்கிறேன்” என்று உதய் கர்ஜிக்கவும்,
“இதோ இப்படி கத்தறது பிடிக்கலை, என்னை இப்படி ஹவுஸ் அரெஸ்ட் பண்ணியிருக்கிறது பிடிக்கலை, என்னை கட்டாயபடுத்துறது பிடிக்கலை, என்னோட விருப்பத்தை மதிக்காம உரிமை எடுத்துக்கறது சுத்தமா பிடிக்கலை.. இப்படி எதுவுமே பிடிக்கலை… எனக்கு நீங்க வேண்டாம்..” என்றதில் அவன் கொண்டிருந்த கட்டுபாடுகள் சிதறியது.