அடுத்த நாள் காலையிலும் வாரிதியின் குரல் ஆனந்தனின் வீட்டை நிறைத்தது. அன்று காலை மழை ஓய்வெடுத்தது. மழைக்குப் பின்னான காலை மந்தமாக இருந்தது.
“இதென்ன புதுசா ரேடியோ எல்லாம்?” ஊருக்குச் சென்று வந்த முத்து மாமா பொதுவாகக் கேட்க,
“எல்லாம் உங்கண்ணன் தான் மாமா” என்றான் ஆனந்தன்.
“என்னடா சொல்றா?” முத்து ஆனந்தனைப் பார்க்க, அவனும் ரேவதி விஷயம் சொன்னான்.
“ரேவதி மிஸ்ஸுக்கு ரேடியோ கேட்க பிடிக்குமாம். அதான் உங்கண்ணனும் பழகிக்கிறார்.”
“உங்கப்பா கல்யாணம் பண்றதிருக்கட்டும், நீ எப்போ செய்ய போற?” முத்து உரிமையாக ஆனந்தனைக் கேட்க,
“ஒருவாரமா எங்களை சமைக்க விட்ட, எனக்குச் சீக்கிரம் ஆபிஸ் போகணும், போய் டிஃபன் ரெடி பண்ணு முத்து” என்று கட்டளையாகச் சொன்னார் கார்த்திகேயன்.
கார்த்திகேயன் கண்காட்ட அது புரிந்த முத்துவும், பிறகு பேசலாம் என்று போய்விட்டார். ஆனந்தனும் ஆசுவாசத்தோடு அவன் அறைக்குள் புகுந்தான்.
கார்த்திகேயன் பொதுவாக காலையில் அலைப்பேசியோ, தொலைக்காட்சியோ பயன்படுத்த மாட்டார். எழுந்ததும் இருக்கின்ற உற்சாகத்தை எப்போதும் செய்திகளை நுகர்ந்தோ, சமூக வலைதளங்களில் உலாவியோ போக்கக் கூடாது என்று நினைப்பார். உண்மையும் அதுவே! காலை எழுந்தவுடன் சமூக வலைத்தளங்களை பார்வையிடுதல் என்பது நம்மிடம் கிட்டதட்ட முப்பது மனிதர்கள் பேசுவது போல, அத்தனை செய்திகள். ஒற்றை மனிதன் உலகமெங்கும் வரும் செய்திகளை உள்வாங்கி, தன் உணர்வினை கொட்டி சோர்வடைகிறான்.
எழுந்தவுடன் இருக்கும் நேரத்தை, ஆக்கமான செயல்களுக்குப் பயன்படுத்த வேண்டும். எழுத்தோ, இசையோ, பாட்டோ, வரைதலோ நமது கலைக்கான நேரமாக, படிப்பதற்கான நேரமாக அதிருக்க வேண்டும். அதனாலயே கார்த்திகேயன் ரேடியோ கேட்பதை முத்து ஆச்சரியமாகப் பார்த்தார்.
வானொலியிலும் வாரிதியின் நிகழ்ச்சி மட்டுமே கேட்டார். அவர் நினைத்ததை விட நன்றாகவே இருந்தது, இனிது இனிது இனிதான காலையை நல்கியது.
“நான் கல்யாணம் பண்ணினாதான் இவன் பண்ணிப்பேன்னு சொன்னான்லடா, அதான்” என்றவர் அவரின் திட்டத்தைச் சொல்ல
“அண்ணே, நீங்களும் தம்பி சொல்றதைக் கேட்டாலும் தப்பில்ல” முத்து மெல்ல முணுமுணுக்க
“காலையில எங்கிட்ட வாங்கி கட்டிக்காம போயிடுடா” என்று கார்த்திகேயன் திட்டி அனுப்பினார்.
அன்று மாலை வேலை முடிந்ததும் கார்த்திகேயனை ‘உலா’வுக்கு வர சொல்லியிருந்தான் ஆனந்தன். அவரும் எப்போதாவது அங்கு போவது இயல்பு என்பதால் ஆறரை மணி போல் அங்கு சென்றார். உலாவின் மேல் இருக்கும் கஃபே’க்கு வர சொல்ல, மேலே சென்றால் ரேவதியோடு பேசிக்கொண்டிருந்தான் ஆனந்தன்.
கார்த்திகேயன் மகனை மனதில் வறுத்தார். ரேவதியோடு நேரில் என்ன பேசுவார்? ஆணும் பெண்ணும் பேசிக்கொள்ள என்னவிருக்கிறது இவ்வுலகில்? ஆணும் பெண்ணும் பேசினால் காதல் என்பார்கள், காமம் என்பார்கள். அதையும் மீறி இன்று நட்பாகவும் பேசுகிறார்கள். எவ்வனத்தில்(இளமை) இருப்பவர்கள் எத்திறமாக வேண்டுமானாலும் பேசுவார்கள். அது கார்த்திகேயனுக்குத் தெரியாது. அவரின் வயதில் இருப்பவர்கள் என்ன பேசுவார்கள்? நட்பென்று சொல்லிவிட்டார் அல்லவா? அதையே பேசுகிறேன் என்ற முடிவோடு நெருங்கினாலும், மகன் என்ன செய்து வைத்திருக்கிறான் என்ற யோசனையும் ஓடியது.
இந்த கேள்விகள் எல்லாம் மனதில் ஓட, கால்கள் ரேவதியும் ஆனந்தனும் இருந்தவிடத்தை இயல்பாக சென்றடைந்தன. ஆனந்தன் காலையிலே ரேவதிக்கு அழைத்து, உலாவில் உலாவிட அழைத்தான். அவன் மீண்டும் மீண்டும் அழைக்க, அவரும் வீட்டில் இருந்து என்ன செய்ய போகிறார்? அதனால் வர சம்மதம் சொல்ல, மாலை அவர் வீட்டுக்குச் சென்றே அழைத்து வந்துவிட்டான்.
கார்த்திகேயன் மகனுக்காக இதனை செய்ய, மகனோ ரேவதிக்குப் பிடித்ததைக் கேட்ட தந்தைக்கு ரேவதியைப் பிடிக்கிறது என்று நினைத்தான். பர்கண்டி நிறத்தில் ஃபார்மல் சட்டை அணிந்திருந்த கார்த்திகேயன், இப்போது அதனை டக் இன் செய்யாமல் வெளியே எடுத்து விட்டிருந்தார். ஆனந்தன் அப்பாவை இன்னும் பார்க்கவில்லை, ரேவதியிடம் கதைப் பேசிக்கொண்டு இருந்தான்.
கார்த்திகேயன் அவர்கள் பக்கம் வரவும், “ஹாய் பா!” என்ற ஆனந்தன்
“நீங்க பேசிட்டு இருங்க. உங்களுக்கு சாப்பிட என்ன சொல்ல? சூப் ஓகேவா?” என்று கேட்டான். ரேவதியின் விரல்கள் தேக்கரண்டியைப் பிடித்திருக்க, அதில் ஏதோ சூப் இருந்தது கார்த்திகேயனுக்கும் தெரிந்தது. அவர் தலையசைக்கவும், ஆனந்தன் கிச்சனுக்குள் சென்றான்.
“என்ன சார்? ஆபிஸ்ல இருந்து டைரக்டா வரீங்க போல?” ரேவதியே மெல்ல பேச்செடுத்தார்.
“ஆமா மேடம், வர சொன்னான்னு வந்தேன். நீங்க வருவீங்கனு தெரியல” சோம்பல் புன்னகை கூட கார்த்திகேயனை வசீகரமாகக் காட்டியது. என்ன அந்த வசீகரம் ரேவதியைச் சென்று சேரவில்லை. அவரின் கவனத்தில் பாதியை வெண்ணிற செராமிக் கிண்ணத்தில் இருந்த காளான் சூப் கடன் வாங்கியிருந்தது. கார்த்திகேயன் க்ளாஸ் பாட்டிலில் வைக்கப்பட்டிருந்த தண்ணீரை எடுத்து க்ளாஸில் ஊற்றிப் பருகினார்.
“எனக்கும் நீங்க வரீங்கனு இப்போதான் ஆனந்த் சொன்னான். என் புக் ஸ்டோர் பார்க்க வாங்கனு காலையில மெசெஜ் அனுப்பினவன் காலும் பண்ணினான். சாயந்திரமும் கூப்பிட்டு, வீட்டுக்கே வந்து அழைச்சிட்டு வந்துட்டான்” அதில் ரேவதிக்கு வருத்தமிருந்ததாகத் தெரியவில்லை.
கார்த்திகேயன் இமை மூடி தலையசைத்தவர், “நான் வாஷ் ரூம் போய்ட்டு வரேன்” என்று போக, அவர் சென்ற சில நிமிடத்தில் ஆனந்தன் சூடான சூப்போடு வந்தவன் ரேவதியிடம்,
“மிஸ், நீங்க பேசிட்டு இருங்க. நான் கீழ ஸ்டோருக்குப் போறேன். அப்பா சாப்பிட்டதும் நீங்க ரெண்டு பேரும் வாங்க” ஆனந்தன் சொல்லிவிட்டு உலாவிற்கான படிகள் வழியே கீழிறிங்கினான். அது பொதுவழி அல்ல என்பதால், கேஃபியில் இருக்கும் ஊழியர் அந்த கதவை ஆனந்தன் இறங்கியதும் சாற்றிவிட்டார்.
கார்த்திகேயன் ஓய்வறையிலிருந்து வந்தார். இப்போது முகம் பளிச்சென்று இருந்தது. முகம் கழுவியதன் அடையாளமாக கொஞ்சம் ஈரம் அங்காங்கே இருக்க, ரேவதி சூப்பைக் காட்டினார். சூப்பைப் பருகியபடியே கார்த்திகேயன் ரேவதியிடம் பேசினார்.
“நீங்க சொன்ன வாரிதி ஷோ கேட்டேன் மேடம்.” என்று சொல்ல
“பெயர் சொல்லியே கூப்பிடுங்க சார்” என்றதும்
கார்த்திகேயனும் சின்ன சிரிப்போடு, “கார்த்திகேயன்” என்றார்.
“ஓகே கார்த்திகேயன்” ரேவதி கார்லிக் ப்ரெட்டை உண்டபடி சொல்ல
“ரொம்ப நல்ல வாய்ஸ் அந்த பொண்ணுக்கு, ஒரு முறை கேட்டா நிறுத்தி அவ குரலைக் கேட்காம இருக்க முடியாது. முக்கியமா தமிழை தமிழா பேசுறா. அவ பேசுற விஷயங்கள் கூட காலையில கேட்க நல்லாயிருக்கு. உங்க சாய்ஸ் ரொம்ப நல்ல சாய்ஸ்” கார்த்திகேயன் பாராட்டாக சொல்ல, அவ்வளவுதான் ரேவதிக்குக் கேட்க வேண்டுமா? அத்தனை சந்தோஷம் அவருக்கு.
“நாலு வருஷமா கேட்கிறேன் கார்த்திகேயன். ஒவ்வொரு நாளும் புதுசா பேசுவா, என்னைக்காச்சும் அவ ப்ரோக்ராம் கேட்க முடியலன்னா நான் அழ கூட செஞ்சிருக்கேன்” குழந்தையாக தன்னையே குறை சொல்லிக்கொண்டார் ரேவதி.
“ம்ம், என் மாமியார் போன பின்னாடி எப்பவும் வீட்ல அவ ப்ரோக்ராம் கேட்டு பழகிட்டேன். ஒரு மாதிரி காலையிலயும் நைட்டும் அவ பேசறதைக் கேட்கலன்னா என் நாள் நல்லா இருக்காதுன்ற மாதிரி ஒரு எண்ணம்.” தனிமை கொடுமையாக ரேவதியைத் தாக்குவதை உணர்ந்த கார்த்திகேயன்,
“நீங்க கேட்கிற எண்ட்’ல இல்லாம நீங்களும் எதாவது புதுசா செய்ய பாருங்க ரேவதி. இந்த யோகா, டான்ஸ் க்ளாஸ் அப்படி இப்படி எதாவது. நானும் உங்களை மாதிரிதானே? காலையில இருந்து ஆபிஸ்’ல வர்க் சரியா இருக்கும். அப்புறம் ஆனந்தன் கூட டைம் ஸ்பெண்ட் பண்ணுவேன், அவன் காலேஜ் போன பின்னாடி அவனே படிச்சுப்பான், வளர்ந்த பையனுக்கு நானும் ஸ்பேஸ் கொடுக்கணும்னு விட்டேன். ஸ்விமிங், பேட்மிண்டன் க்ளாஸ்ல சேர்ந்துட்டேன். புக்ஸ் படிப்பேன், ஸோ வேற யோசிக்க நேரமில்லை. வாழ்க்கை ஒன்னும் அத்தனை கஷ்டமா இல்லை” கார்த்திகேயன் பூரணமான ஒரு புன்னகையோடு சொல்ல, ரேவதியிடம் ஒரு கசப்பான புன்னகை.
இதழ்கள் வளைந்தாலும் விழிகளில் பளிச்சிடல் இல்லையென்றால் அந்த புன்னகையின் சுவை கசப்புதானே? கார்த்திகேயனால் அதனை காண முடிந்தது. புருவங்கள் சுருங்க அவர் ரேவதியைப் பார்க்க,
“வாழ்க்கை எத்தனை கஷ்டமா இருந்தாலும் அதை வாழ ஒரு பிடிப்பு, அர்த்தம் வேணும் சார்”
“அவன் எனக்கு உயிர்தான் ரேவதி, ஆனா அவனை தாண்டி செய்ய எனக்குனு சில விசயம் வைச்சிருக்கேன். அவனுக்கு அப்பா’ன்றதைத் தாண்டி எனக்குன்னு சில கடமை இருக்கே” கார்த்திகேயன் அவர் வாதம் சரியென புரிய வைக்க பேச, ஆணின் தனிமை, பெண்ணின் தனிமை எல்லாம் பொதுவானதில்லை.
யாருக்கும் தனிமை ஒன்று போல் இருப்பதில்லை! ஒரு குழந்தையின் தனிமையும் ஒரு முதியவரின் தனிமையும் வெவ்வேறானது. இரு மனிதர்களின் தனிமை, துருவங்களுக்கு இடையிலான தூரத்தை உள்ளடக்கியது.
மனைவியை வேண்டாமென பிரிந்து, மகனுடன் இருக்கும் கார்த்திகேயனின் தனிமையும், விதியால் கணவனை இழந்த ரேவதியின் தனிமையும் ஒன்றில்லை!
“நீங்க என்னை கன்வின்ஸ் பண்றீங்களா இல்லை உங்களை பண்றீங்களா தெரியல கார்த்திகேயன். என்னை என் மாமியாருக்குப் பெருசா பிடிக்காது, ஆனாலும் என் மாமியார் இருந்தவரைக்கும் எனக்கு இந்த தனிமை பெருசா இருந்ததில்லை. வீட்டுக்கு வந்தா அத்தைக்கு டீ போடணும், நைட்டுக்கு இட்லி செய்யணும், மாத்திரை கொடுக்கணும்னு அவங்களை சுத்தியே என் யோசனை இருக்கும். பிடிச்சாலும் பிடிக்கலனாலும் எனக்கு ஒரு பிடிப்பா இருந்தாங்க.”
“எனக்கு மாமியாரே பிடிப்பு கொடுக்கும்போது, ஆனந்த் உங்க மகன். உங்களால உலகத்துக்கு வந்தவன், அவனுக்காக எல்லாம் செஞ்சு, அவனை சுத்திதான் உங்க உலகம். சொல்லப்போனா நான் கூட தனியா இருக்கேன்னு டேட்டிங் ஆப்’ல வந்தேன். நீங்க ஆனந்தனுக்காக வந்தீங்க, இப்போ கூட அவனால தான் நீங்க எங்கூட பேசுறீங்க. உங்க உலகத்தோட மையமே அவனை சுத்தியிருக்கு.”
ரேவதி பேசுவதின் அர்த்தம் கார்த்திகேயனுக்குப் புரிந்தது. புதிய மனிதர்கள் புதிய பார்வை தருவார்கள் என்பது உண்மைதானே? அவரது தனிமை வைத்து, ரேவதியையும் கணித்தது தவறு என்று புரிந்தது.
“நானும் ஸ்கூல் போனா எல்லாம் மறந்திடுவேன், ஆனா சாயந்திரம் பூட்டின வீடு எனக்காகக் காத்திருக்கும். வீட்டில யாருமிருக்க மாட்டாங்க.” ரேவதி வார்த்தைகளில் தனிமையின் வாடைக்காற்றின் வாசம் அதிகமிருந்தது.