“அம்மா.. யாரைக் கேட்டு எனக்கு கல்யாண ஏற்பாடு பண்ணீங்க”.. என்று மீரா நெருப்பில் விழுந்த பட்டாஸாக வெடிக்க..
“யாரை டீ கேட்கணும்?. நான் உன்னை பெத்தவ. உனக்கு கல்யாணம் பண்ண வேண்டியது என் கடமை.!”.. என்று மீனாட்சி பதில் கொடுக்க.
“அம்மா.. இப்ப தானம்மா நான் டிகிரியே முடிக்கப் போறேன். அதுக்குள்ள என்ன அவசரம்? இன்னும் ரெண்டு வருசம் போகட்டும். அது வரைக்கும் நான் வேலைக்கு போகப் போறேன்.” என்றாள் மீரா முடிவாக.
“வேலைக்கு போகப் போறியா?. என்ன திமிரு டீ உனக்கு. நான் உன்னை காலேஜுக்கு அனுப்பும் போதே என்ன சொன்னேன்? வெளியில வேலைக்கு அனுப்ப மாட்டேன். வேணும்னா நம்ம கம்பெனியையே போய் பார்த்துக்கோ அப்படின்னு சொன்னேனா இல்லையா?”.. என்று மீனாட்சி அதட்ட..
“ஆமா சொன்னீங்க!!. நம்ம கம்பெனியில் வேலை பார்க்கணும்னா நான் எம்பிஏ. படிச்சிருக்கணும். ஆனா நான் படிச்சது என்ஜினீயரிங் ஆச்சே. என் படிப்புக்கு சம்பந்தமே இல்லாம நம்ம கம்பெனியில் உட்கார்ந்து என்ன பண்ணச் சொல்றீங்க?”.. என்று மீரா பதிலடி கொடுக்க.
“ரொம்ப அறிவாளியா பேசுறோம் என்று நினைப்பா?!. இன்னும் ரெண்டே மாசத்துல உனக்கு கல்யாணம். அப்புறம் உன் புருஷன் கிட்ட கேட்டு வேலைக்கு போ. இல்ல என்னமும் பண்ணு. ஆனா அது வரைக்கும் நீ வீட்ல தான் இருக்க்கனும். ஏன்னா எங்க அண்ணிக்கு எல்லாம் நீ வேலைக்கு போறது பிடிக்காது.”
“என்ன அம்மா சொல்றீங்க?. அப்போ அந்த பையன் அவங்க அம்மா பேச்சைக் கேட்டு என்ன வேலைக்கு போகக் கூடாதுன்னு சொல்லிட்டா??”.. என்று மீரா அதிர்ந்து கேட்க.
“அவன் அப்படி எல்லாம் சொல்ல மாட்டான். அப்படியே சொன்னா என்ன.. அவங்களே பெரிய ஆஸ்பத்திரி கட்டப் போறாங்களாம். நீ அவரோட போய் தினம் நிர்வாகத்தை பார்த்துக்கோ”.. என்று மீனாட்சி எளிதாக சொல்லி முடிக்க..
மீராவுக்கோ கோபம் எல்லை கடந்து சென்று கொண்டு இருந்தது. “அம்மா.. என்னம்மா.. திரும்பத் திரும்ப அதையே சொல்றீங்க. நான் படிச்ச படிப்புக்கு சம்பந்தமான வேலையில் சேர்ந்து. நானா சுயமா முன்னேறனும். அது தான் எனக்கு பெருமை.”.. என்று மீரா கொட்டி முடிக்கவும் பர்வதம் அங்கு வரவும் நேரம் சரியாக இருந்தது.
“பாட்டி பாருங்க பாட்டி அம்மாவ?”.. என்று சினுங்கலுடன் மீரா பர்வதம் தோளில் வந்து சாய்ந்து கொண்டாள்.
மீனாட்சியை சற்றே கண்டிக்கும் பார்வையுடன் பார்த்தவர்.. “மீனாட்சி.. காலேஜ் போய் களைச்சு வந்த பிள்ளைக்கு முதல்ல டிபன் எடுத்து வை. மத்த விஷயம் எல்லாம் அப்புறம் பேசிக்கலாம்”.. என்றார் சிறிய கோபக்குரலில்.
பாட்டியின் கண்டிப்பில் மீரா முகம் தெளிந்தது. களைப்பு தீர குளித்து வந்தவள் மனம் முழுவதும் இப்போது குழப்பத்தில் இருந்தது. மீனாட்சி யின் இந்த அதிரடி திருமண ஏற்பாடு அவள் மனதுக்குள் கிலியை உண்டாக்கி இருந்தது.
அவர்கள் வீட்டில் பாட்டி தான் முக்கியமான முடிவை எல்லாம் எடுத்தாலும்.. அவள் விஷயத்தில் மீனாட்சி உறுதியாக இருப்பது அவள் மனதை உறுத்தியது.
அவர்கள் வீட்டில் என்னவோ நடந்து இருக்கிறது. இந்த மூன்று மாத காலமாக தான் யார் முகத்திலும் சந்தோசமே இல்லை. அது வரை வியாபாரத்தில் வீழ்ச்சி இருந்த போதிலும், சொத்தை விற்ற போதிலும் கூட சில நாட்களில் தேறி வந்து விடுவார்கள்.
ஆனால் இப்போது சில காலங்களாக யார் முகத்திலும் நிம்மதி இல்லை. முக்கியமாக அவள் விஷயத்தில் கண்டிப்பு கூடி விட்டது. சுதந்திரப் பறவையாக சுற்றி வருபவளை சிறைப் பறவையாக மாற்றப் பார்க்கிறார்கள்.
அவளுக்கும் கல்யாணி போல் மேல் நாடு செல்ல ஆசை. அங்கு சில காலம் படித்து அங்கேயே வேலைக்கு செல்ல வேண்டும் என்று பல கனவுகள் கொண்டு இருந்தவள். ஆனால் இன்று மீனாட்சி பேசுவதைக் கேட்டால் தன் மொத்த கனவுகளும் சிதைந்து விடும் போல் தோன்றியது.
எல்லாவற்றையும் விட முகுந்தன் இல்லாமல் ஒரு வாழ்வா? வாய்ப்பே இல்லை. அவன் இடத்தில் யாரையும் நினைத்துக் கூட பார்க்க முடியாத நிலைக்கு வந்து விட்டாள்.
மறுநாள் மாலை முகுந்தன் அந்த மறைவான பகுதியில் அவள் மடியில் படுத்து இருக்க.. தன்னவனின் சுருள் கேசத்தை தன் விரல்கள் கொண்டு ஆசையுடன் வருடியவள்.. “முகுந்த்.. நமக்கு கல்யாணம் ஆகிட்டா என்னை வேலைக்குப் போக விடுவீங்களா?”.. என்று கேட்டே விட்டாள்.
“அது உன் இஷ்டம்.!! உனக்கு பிடிச்சா வேலைக்கு போ. இதை எல்லாம் எதுக்கு என்கிட்ட ஏண்டி கேட்கிற.?”.. என்று அவன் சொல்ல.
மீரா இதழ்கள் பூரிப்புடன் விரிந்து கொண்டன. அவன் சொன்ன சொற்களில் தன்னவன் மீது உள்ள மதிப்பு கூடிப் போக.
“ஸோ ஸ்வீட்.. ஐ லவ் யூ டா”.. என்று அவன் கன்னத்தை கிள்ளி அவள் கொஞ்சிக் கொள்ள..
அவனோ எழுந்து அமர்ந்து.. “என்ன டீ எதோ கைக் குழந்தையை கொஞ்சுற மாதிரி முத்தம் கொடுக்கிற.. நான் உன்கிட்ட பெருசா எதிர் பார்த்தேன்!!”.. என்று அவன் ஏக்கமாக சொல்ல.
அவன் ஏமாற்றம் அவளுக்கு சிரிப்பைத் தான் வர வைத்து இருந்தது. “ஆசை தோசை.. அது எல்லாம் கல்யாணத்துக்கு அப்புறம் தான்.” என்றாள் அவன் குறும்புப் பார்வையை ரசித்த படி.
. “சரி.. என்ன முடிவு பண்ணி இருக்க?.. நம்ம கல்யாணத்தைப் பத்தி”.. என்றான் முகுந்தன் இப்போது தீவிரமாக.
நேற்று மீனாட்சி பேசிய பேச்சைக் கேட்டவள் அப்படி ஒரு முடிவுக்குத் தான் வந்து இருந்தாள். இருந்தாலும் கல்யாணி வீட்டுக்கு தெரியாமல் திருமணம் முடித்த பின் அவள் பெரியப்பாவும் பெரியம்மாவும் விட்ட கண்ணீரையும் அனுபவித்த துயரையும் அருகில் இருந்து பார்த்தவளுக்கு சற்று. தயக்கமாகத் தான் இருந்தது.
“முகுந்த்.. எனக்கு ஒரு ரெண்டு நாள் டயம் வேணும். எங்க அப்பா இன்னைக்கு தான் ஊருக்கு போயிட்டு திரும்ப வராங்க. எங்க அப்பா கிட்ட ஒரு தடவை பேசிப் பார்க்கிறேன்!!”.. என்றாள் அவள் கெஞ்சுதலாக.
“இங்க பாரு மீரா.. உனக்கு எப்படியோ ஆனா என்னால சத்தியமா முடியலை டீ. என்னைப் பைத்தியமா மாத்தி வச்சுட்ட.. நீ என்னை விட்டு விலகுற ஒவ்வொரு தடவையும் மனசுக்குள்ள அப்படி ஒரு வலி. ஐ கான்ட் இமாஜின் எ லைஃப் வித்தவுட் யூ.
அதுலயும் உங்க வீட்ல உனக்கு மாப்பிள்ளை பார்க்கிற விஷயத்தை நீ சொன்னதில் இருந்து.. தூக்கமே வர மாட்டேங்குது. உன்னையும் என்னையும் பிரிச்சு விடுவாங்களோன்னு மனசு பதறுது.”.. என்று அவன் தவிப்புடன் சொல்ல.
“ஹேய் முகுந்த்.. நீங்களா இப்படி எல்லாம் பேசுறது. எவ்வளவு ஸ்ட்ராங் நீங்க.. இப்ப என்ன இவ்வளவு வீக்கா பேசுறீங்க”.. என்று மீரா சொன்னாலும் அவள் மனதுக்குள் தனக்காக உருகித் தவிக்கும் தன் உயிரானவனை நினைத்து அத்தனை பெருமிதம் இருந்தது.
“ஆமா மீரா.. நீ என்னை லவ் பண்ணி அவ்வளவு வீக்கா மாத்தி வச்சு இருக்க. உனக்கு உங்க ஃபேமிலியில நிறைய பேர் இருக்கலாம். ஆனா எனக்குன்னு இருக்கிறது நீ மட்டும் தான். அது வரை படிப்பு, வேலை, ஸ்போர்ட்ஸ் என்று சுத்திட்டு இருந்த என்னை இந்த ஒரு மாசமா காதல் மன்னனாக நீ தான் மாத்திட்ட.!!
இப்ப என்னடான்னா எங்க வீட்ல மாப்பிள்ளை பார்க்கிறாங்கன்னு பெரிய குண்டைத் தூக்கிப் போடுற. என்னால உன்னை யாருக்கும் விட்டுக் கொடுக்க முடியாது மீரா”.. என்று அத்தனை நேரமும் சொல்லிக் கொண்டே இருந்தவன்.. சட்டென முகம் இறுக எழுந்து அமர்ந்து கொண்டான்.
“முகுந்த்.. எனக்கு உங்க லவ் புரியுது. எனக்கு வாழ்க்கையில் கல்யாணம் என்று ஒன்னு நடந்தா அது நிச்சயம் உங்களோட மட்டும் தான். எனக்காக ரெண்டே ரெண்டு நாள் டயம் கொடுங்க. நிச்சயம் நல்ல செய்தியோடு வரேன்”.. என்று விடை பெற்று வந்து இருந்தாள்.
அன்று இரவு உணவை உண்ண அவளும் அவள் தம்பி செழியனும் அமர்ந்து இருக்க.
மீனாட்சியோ தோசை சுட உள்ளே சென்று இருந்தார். “மீரா.. உனக்கு டாக்டர் மாப்பிள்ளை பார்த்து இருக்காங்க தெரியுமா.”.. என்று அவன் ஆரம்பிக்க..
மீராவோ சிறு எரிச்சலுடன் “இப்ப அதுக்கு என்ன” என்றாள்.
“மீரா இந்த இடம் உனக்கு வேணாம் மீரா. மாப்பிள்ளை ஒரே படிப்ஸ் போல ஒரே கோல்ட் மெடலா வாங்கி வச்சு இருக்கார். இப்படிப் பட்டவர் நம்ம கூட சினிமா, ஹாலிடே, கேம்ஸ் எல்லாம் எங்க விளையாட வரப் போறார். நீயும் ஒரு புத்தகத்தை தூக்கிட்டே உட்காரனும்!”.. என்று சொல்ல
“டேய் எருமை!!.. கூடப் பிறந்தவளுக்கு நல்ல அட்வைஸ் கொடுக்க மாட்டியா. படிக்கிறது எல்லாம் ஒரு குத்தமாடா. உனக்கு தான் படிப்பு வர்ல வர்ற மருமகனாவது அறிவாளியா வரட்டும்!!”.. என்று மீனாட்சி உள்ளே செல்ல.
“செழியா.. வாழ்க்கையில் முதல் த்டவையா சரியா யோசிச்சு பேசி இருக்க!!. நீ சொல்றது சரிதான். நமக்கு எல்லாம் வாழ்க்கை ஃபன் ஆக இருக்கணும்.”
. “அட ஆமா மீரா நாம எல்லாம் பப்ளிக் எக்ஸாம் முந்தின நாள் கூட நைட் ஷோ படம் போற டெரர் பீசுக. நீ இவரைக் கட்டிகிட்டா அப்புறம் நானும் படிக்கணுமோ என்னமோ!!.. கேட்கவே அலர்ஜியா இருக்கு.”.. என்று செழியன் முகத்தைச் சுளிக்க.
“ம்.. நானும் அது தான்டா யோசிக்கிறேன்.”.. என்று அவள் தீவிர சிந்தனையில் இருக்க..
தோசையுடன் வந்த மீனாட்சி இருவர் தட்டிலும் வைத்து விட்டு. “டேய்.. அவர் தான்டா இந்த வீட்டு மாப்பிள்ளை. உங்க அக்கா காதுல எதையாவது தப்பு தப்பா சொல்லாம.. நல்லபடியா ஏதாவது சொல்லி அவளைச் சம்மதிக்க வை.”… என்று சொல்ல..
“ம்.. கண்டிப்பா.. எனக்கு என்ன கமிஷன் தருவீங்க?”.. என்று அவன் மீனாட்சியுடம் கேட்க..
“கமிஷன் தானே.. இரு முட்டை தோசை போடுறேன்”..
“அப்ப ஒகே மா. சால்ட் பெப்பர் எல்லாம் கொஞ்சம் தூக்கலா இருக்கட்டும்.”.. என்று அவன் விரல்களை நக்கிக் கொள்ள..
மீராவோ அவனை எரித்து விடுவது போல் பார்க்க.. “அது எல்லாம் சும்மா மீரா.. ஒரு அற்ப தோசைக்காக உன் உடன்பிறப்பு உன்னை விட்டுக் கொடுத்து விடுவான்னு நினைச்சியா? இப்ப சொல்லு.. நீ யாரையாவது லவ் பண்றேன்னு! என் உயிரைக் கொடுத்தாவது உன்னை அவனோடு சேர்த்து வச்சிடுவேன். தெரியுமா” என்று செழியன் தன் காலரை தூக்கி விட்டபடி சொன்னான்.
“மம்.. கேட்க நல்லா தான் இருக்கு. சமயம் வரும் போது உன்கிட்ட கேக்குறேன்.”
“ஏ மீரா.. உண்மையைச் சொல்லு.. யாரையாவது லவ் பண்றியா என்ன?”.. என்று செழியன் குரலைத் தாழ்த்தி அவளிடம் குனிந்து கேட்க..
“இல்லடா.. ஆனா அம்மா எங்க எனக்கு பிடிக்காத மாப்பிள்ளைக்கு கட்டி வச்சுடுவாங்களோ என்று பயமா இருக்கு.” என்றாள்.
“ஆமா மீரா நீ உன் மனசுக்கு எது சரின்னு படுதோ அதைச் செய். அம்மா இன்னும் கவுரவம் வசதின்னு மட்டும் தான் யோசிப்பாங்க. நம்ம சந்தோசத்தை பத்தி யோசிக்க மாட்டாங்க” என்று அவன் சொல்லி விட்டுச் செல்ல.
மீரா மனமோ முகுந்தனை மட்டும் எந்த நிலையிலும் தவற விட்டு விடக் கூடாது என்று உறுதி எடுத்துக் கொண்டது.
அன்று இரவு அவள் தந்தையும் பெரியப்பாவும் வீடு திரும்பி இருந்தார்கள். மறுநாள் காலை அலாரம் வைத்து எழுந்தவள் தன் தந்தையுடன் தனியாகப் பேச வேண்டும் என்று அவர் நடை பழகச் செல்லும் அதே நேரம் அவளும் உடன் நடக்கத் தொடங்கி இருந்தாள்.
“என்ன மீரா.. ஆச்சரியமா இருக்கு. சண்டே அதுவுமா இவ்வளவு வேகமாக எந்திரிச்சுட்ட”.. என்று மகேஸ்வரன் கேட்க..
இருவருமே கடற்கரையை எட்டி இருந்தார்கள்.
. “சும்மா தாம்ப்பா. உங்க கூட பேசணும் போல இருந்தது. அதான் வந்தேன். அப்புறம் பாண்டிச்சேரி போன வேலை எல்லாம் நல்ல படியா முடிஞ்சதா?” என்று மீரா கேட்க.
“ம்.. எல்லாம் நல்லபடியா முடிஞ்சது. அந்த கம்பெனியோட டீல் ஒகே ஆயிடுச்சு. சரி நீ சொல்லு என்ன விஷயம்?”.. என்று அவர் தூண்ட
“இல்லப்பா உங்களுக்கே தெரியும். எனக்கு படிச்சு முடிச்சு கொஞ்ச நாள் வேலைக்கு போக ஆசை. ஆனா அம்மா எனக்கு இப்ப்பவே கல்யாணம் பண்ணப் பார்க்கிறாங்க. பிளீஸ்ப்பா.. நீங்க தான் அம்மா கிட்ட எப்படியாவது சொல்லி. இந்த கல்யாண ஏற்பாடை நிறுத்தனும்”.. என்று மீரா சொல்ல..
“ம்..” என்று ஒரு நிமிடம் அமைதியாக நடந்தவர்.. “மீரா.. உங்கம்மா இந்த விஷயத்தில் யாரு பேச்சையும் கேட்க மாட்டா. அவளையும் குறை சொல்ல முடியாது. அவள் நிலைமை அப்படி. என்னால உனக்கு பண்ணக் கூடியது என்ன தெரியுமா.. இந்த இடம் வேண்டாம் வேற இடம் பாருன்னு வேணா சொல்லலாம்.
ஆனா கல்யாண ஏற்பாட்டை நிறுத்துண்ணு சொல்ல முடியாது. அது எதுக்குன்னு எங்களால இப்ப உன்கிட்ட சொல்ல முடியாது. உனக்கு நல்ல படியா வாழ்க்கை அமைஞ்சதும் உனக்கே ஒரு நாள் நிச்சயம் புரியும். இப்ப நாங்க உன் நல்லதுக்கு மட்டும் தான் சொல்றோம் மீரா.”.. என்று அவர் சொல்ல
மீராவுக்கோ ஏமாற்றமாகிப் போனது. “அப்பா என்னப்பா.. நீங்களே இப்படி சொல்லலாமா?. அப்படி என்னப்பா பிரச்சனை. நான் வேலைக்கு போறதுக்கும் அதுக்கும் என்னப்பா சம்பந்தம்.”.. என்று அவள் வேதனையுடன் கேட்க.
“மீரா உனக்கு ஒரு விசயம் தெரியுமா?.. உங்க அம்மா மூணு மாசத்துக்கு முன்னமே உன்னை காலேஜுக்கு அனுப்பாம வீட்ல இருக்க வைக்கப் போறேன்னு சொன்னா. நான் தான் கூடாதுன்னு உனக்காக சண்டை போட்டேன்.
அவள் கிட்ட உனக்கு இப்போ கல்யாணம் வேண்டாம் என்று என்னால வாயே திறக்க முடியாது. உன் கேரியர்க்கு ஏத்த பையனா வேணா பார்க்கலாம் மீரா.”.. என்று அவர் விளக்க..
சோர்ந்து போனாள் அவள். இரண்டு நாட்கள் அப்படியே சென்று இருக்க.. அன்று அந்த அம்மன் கோவிலில் முகுந்தனும் மீராவும் பட்டு வேஷ்டி புடவையில் கழுத்தில் மாலையுடன் நின்று இருந்தார்கள்.
“மாங்கல்யம் தந்துனானே” என்று அய்யர் மந்திரம் ஓத.. முகுந்தன் அவள் கழுத்தில் மூன்று முடிச்சுடன் தாலியைக் கட்டி இருந்தான்.
அவன் முகத்தில் அத்தனை பூரிப்பு. மீராவுக்கு சந்தோசமாக இருந்தாலும்.. அவர்கள் வீட்டு சொந்தங்களை எண்ணி வருத்தமாக இருந்தது. யாராவது பார்த்து விடுவார்களோ என்று பயமாகவும் இருந்தது. அங்கு இருந்து முதலில் சென்று விட வேண்டும் என்று தவிப்பாக இருந்தது.
“வா போகலாம்”.. என்று அவன் உரிமையுடன் அவள் கையைப் பற்றி அவன் காரில் அமர வைத்தான். அவன் இருக்கையில் ஏறி அமர்ந்த முகுந்தன் வண்டியை ஓட்டத் துவங்கி இருந்தான்.
மீரா மனம் குற்ற உணர்வில் துடித்தது. எப்படி இப்படி ஒரு முடிவு எடுத்தோம் என்று அவளுக்கே புரியவில்லை. கல்யாணி செய்த தவறையே அவளும் செய்வாள் என்று ஒரு போதும் அவள் நினைத்துக் கூட பார்த்தது இல்லை.
யார் இந்த முகுந்தன்?. அவனை நம்பி எப்படி இப்படி ஒரு முடிவு எடுத்தாள்? வெறும் ஒரு மாதப் பழக்கம். அதில் அவன் அவளை இந்த அளவுக்கா மதி மயக்கி வைக்க வேண்டும்?
அந்த முகுந்தன் ஊர் என்ன? எந்த ஊரில் படித்தான். என்ன தொழில் செய்கிறான்? எதுவுமே அவளுக்கு தெரியாது. அவள் அறிந்து உணர்ந்த ஒரே விஷயம் அவன் இல்லாமல் அவளால் வாழ முடியாது.
அதனால் அவன் கூப்பிட்டதும் கிளம்பி வந்து விட்டாள். மகுடிக்கு ஆடும் பாம்பு போல அவன் சொன்னதை எல்லாம் செய்யும் கைப் பாவையாக மாறி இருந்தாள்.
பெற்ற தாய் தந்தைக்கு இப்படி ஒரு துரோகம் செய்து விட்டோமே என்று அவள் மனம் துடிக்க.. அவள் கண்களில் கண்ணீர் அருவியாய் கொட்டத் துவங்கி இருந்தது.
அவளின் விசும்பலை உணர்ந்த முகுந்தனோ.. “ஏய்.. என்ன மீரா இது.. சின்ன பிள்ளையாட்டம்..”.. என்றவன் தன் ஒரு கை கொண்டு அவளை இழுத்து அணைத்துக் கொண்டான். நான் இருக்கேன்டீ”.. என்றவன் அவள் உச்சி வகுட்டில் முத்தம் பதிக்க..
அவளும் அவன் தோளில் சாய்ந்து கொண்டாள்.
தொடரும்.
இந்த கதை உங்களுக்கு பிடித்து இருந்தால் உங்கள் கருத்துகளை மறவாமல் பதிவிடுங்கள் தோழமைகளே. அன்புடன் லக்ஷ்மி.