மீதி உயிர் நீங்கும் முன்னே மீட்டுத் தந்திடு என்னை!
*****
நாட்கள் மீண்டும் தெளிந்த நீரோடையாக நகன்று கொண்டிருந்தது. வம்சி கிருஷ்ணா – கிருபாஷிணியின் நேசம், நாளுக்கு நாள் ஆலமரம் போல ஆழமான விழுதுகளுடன் வளர்ந்தது.
“வசிப்பா…” ஆர்ப்பரிக்கும் கடலலைகளை ஆடவனின் தோள் மீது சாய்ந்து ரசித்து, அவனது கையைப் பற்றியபடி அழைத்தவளின் தலை மீது வம்சியும் தலையை சாய்த்துக் கொண்டான்.
“சொல்லும்மா!” அவனது மென்மையில் பேச வந்ததை மறந்தவள், “உங்களுக்கு ஹார்ஷா பேச தெரியாதாப்பா?” எனக் குறும்புடன் கேட்டு நிமிர்ந்தாள்.
“ஏன்?” என அவன் பார்க்க,
“அதில்ல, என் அண்ணன்லாம் பேச ஆரம்பிச்சாலே சண்டை தான் போடுவான். அதுவும் எட்டூருக்கு கேக்குற மாதிரி கத்துவான். அன்னைக்கு உங்க தங்கச்சி கூட கத்தி தான் பேசுனா. ஆனா நீங்க மட்டும் எப்படி வார்த்தைக்கு கூட வலிக்காத மாதிரி சாஃப்ட்டா, அதே நேரம் அழுத்தமா பேசுறீங்க.” என்றவள் அவனை விழிகளுக்குள் நிரப்பிக்கொள்ள, எச்சிலை விழுங்கி பாறையாய் மாறிப்போன முகத்தை முயன்று மாற்றிக்கொண்டான்.
“உனக்கும் உன் அண்ணனுக்கும் என்னம்மா பிரச்சனை?” எதைப் பற்றி பேசினால் அவளது எண்ணப்போக்கு மாறும் என்பதை இத்தனை நாட்களில் நன்கு அறிந்து வைத்திருந்தான்.
அவனது முயற்சி வீணாகாமல், கிருபாஷிணியின் மலர்ந்த முகம் வாடிப்போனது.
“அதை ஏன் வசி ஞாபகப்படுத்துறீங்க.” இன்னுமாக அவனது தோள்களில் முகத்தைப் புதைத்தாள்.
சில நொடிகள் அமைதிக்குப் பிறகு, “சரிதா என் க்ளோஸ் ப்ரெண்ட் வசி. ஸ்கூல்ல இருந்து ரெண்டு பேரும் ஒண்ணா தான் படிச்சோம். ஒண்ணா சுத்துனோம். அவள் எஞ்சினியரிங் படிக்கப் போய்ட்டா. எனக்கு அதுல விருப்பம் இல்லாம தமிழ் எடுத்துப் படிச்சேன்.
அப்பாவோட பத்திரிக்கையைப் பார்த்துக்கணும்ன்னா, அதுக்கு தமிழ் ரொம்ப ரொம்ப முக்கியம்ல்ல. தெரியாம கூட தமிழை தவறாவோ இலக்கணப்பிழையோடவோ எழுதிடக் கூடாதுன்ற முன்னெச்சரிக்கை எனக்கு அதிகமாவே இருந்துச்சு. ஏன்னா, என்ன மாதிரி பேக் கிரவுண்ட் பெருசா இருக்குற பொண்ணுங்களை ஈஸியா விமர்சனம் பண்ணுவாங்க.
அதை நான் படிக்கிற இடத்துலயே பார்த்து இருக்கேன். நான் உட்காந்தா அதுக்கு ஒரு அர்த்தம், நின்னா ஒரு அர்த்தம்ன்னு அவங்களா ஒரு முடிவு பண்ணிக்குவாங்க. காலேஜ் சேரும் போதே, எனக்கும் சரிதாவுக்கும் ஒரு சின்ன மனஸ்தாபம். நான் அவள்கூட எஞ்சினியரிங் படிக்கணும்ன்னு அவளுக்கு விருப்பம். அதை நான் தப்பு சொல்லல.
ஆனா, அவளோட விருப்பத்தை என்மேல திணிச்சதை நான் ஒத்துக்க முடியாதுல. ஒரு கட்டத்துல ‘உனக்கு என்ன பணம் இருக்கு, அப்பாவோட செல்வாக்கு இருக்கு, கஷ்டப்பட்டு படிச்சு முன்னேறணும்ன்னு அவசியம் இல்லை. அதனால ஈஸியான சப்ஜெக்ட் எடுத்துப் படிக்கப்போற… எனக்கு அப்படியா?’ன்னு உளறுனாள்.
தமிழ் படிக்கிறது ஈஸின்னு அவளுக்கு யாரு சொன்னதுன்னு தெரியலப்பா. எல்லா பாடமும் கஷ்டம் தான. அப்படிப் பார்த்தா மத்த சப்ஜெக்ட்ல கூட ஆன்சரை மட்டும் எழுதிட்டு பாயிண்ட்ஸ் மார்க் வாங்கலாம். ஆனால் தமிழ்ல கை உடையிற அளவுக்கு எழுதணும். இலக்கியம் இலக்கணம் ஒற்றுப்பிழை மரபுப்பிழைன்னு எல்லாத்தையும் ஞாபகம் வச்சுக்குறது ஒண்ணும் அவ்ளோ ஈஸியான விஷயம் இல்லைதானே.” என விழிகளை உருட்டிக் கேட்டவளை ரசனையுடன் பார்த்தான்.
“கண்டிப்பாம்மா. உன் முடிவு ரொம்ப சரி.” என்றான் தோளோடு அணைத்து.
“ஆனா, அவள் நான் எவ்ளோ சொல்லியும் சமாதானம் ஆகல. ஒரு அளவுக்கு மேல நானும் புரிய வைக்கல. அப்பறமும் எங்க ப்ரெண்ட்ஷிப் தொடர்ந்துட்டு தான் இருந்துச்சு. அவளுக்கு லவ் வராத வரைக்கும்.” என சலித்துக் கொள்ள, “லவ்வா? யார்மேல உன் அண்ணன் மேலயா?” என்றான் சந்தேகத்துடன்.
“ப்ச்… இல்லப்பா. அவள் காலேஜ்ல படிச்ச பையன் கூட. அவன் ஆளு ஒரு மாதிரி. பேச்சே திமிரா தான் இருக்கும். சட்டை பட்டனை கழட்டி விட்டுட்டு, ரௌடிப்பய மாதிரி சுத்துவான். அவங்க அப்பா ஏதோ கட்சில இருக்காரு போல… சோ, இவன் ஆட்டம் ஓவரா இருக்கும். அவனை காதலிக்கிறேன்னு வந்து நின்னவள்கிட்ட நானும் எவ்வளவோ சொல்லிப் பார்த்தேன். அட்வைஸ் கூட பண்ணுனேன். அப்போ செஞ்ச அட்வைஸுக்கு தான் அன்னைக்கு பீச்ல உங்ககூட பார்த்ததுக்கு என்னைக் குத்திட்டு போனாள்.”
“ஓ! அப்பறம் என்ன ஆச்சும்மா?” காற்றிலாடும் அவளது கூந்தலை சரி செய்தபடி அவன் கேட்க,
“அப்பறம் என்ன… ஒரே லவ்ஸ் தான். நாங்க எங்க அவுட்டிங் பிளான் பண்ணுனாலும் அந்த பைத்தியமும் கூடவே வந்துடும். ஆனா, பைனல் இயர் படிக்கும் போது, அவன் இன்னொரு பொண்ணைப் பார்த்துட்டு இவளைக் கழட்டி விட்டுட்டான். இவள் அதோட அவனை விட்டுருந்தா பரவாயில்லை. அவன் தான் வேணும்ன்னு அடம்பிடிச்சு, அவன் எங்கபோனாலும் பின்னாடியே போய் கெஞ்சுனா.
என் அண்ணன் பேச்சு தான் கரடு முரடா இருக்கும். இந்தப் பிரச்சனை எல்லாம் வர்றதுக்கு முன்னாடி, என்னை ராணி மாதிரி பாத்துப்பான். அவன்கிட்ட நானும் எல்லாமே ஷேர் பண்ணுவேன்.
இந்த நிலமைல சரிதாவோட ப்ரொபைல் என் வீட்டுக்கு வரவும், அம்மாவும் அப்பாவும் சரிதாவையே அண்ணனுக்கு கல்யாணம் பண்ணி வைக்கலாம்ன்னு பேசுனாங்க. சரிதா மேல அவனுக்கும் ஒரு க்ரஷ் இருந்து இருக்கு. சோ உடனே ஓகே சொல்லிட்டான்.
ஆனா அவள் தான் வேற ஒருத்தனை லவ் பண்றாளே… எப்படியும் நோ சொல்லிடுவான்னு தான் நினைச்சுட்டு இருந்தேன். ஆனா, அவள் சைட்ல இருந்து எந்த அப்ஜெக்ஷனும் இல்லன்னு தெரிஞ்சதும் எனக்கு ஷாக் ஆகிடுச்சு. அட்லீஸ்ட் எனக்கு அதுக்கான காரணத்தையாவது சொல்லுவான்னு நினைச்சேன். அதையும் சொல்லல. கேட்டதுக்கு, ‘உன் வீட்டுக்கு மருமகளா வர்றதுக்கு எனக்கு தகுதி இல்லையா’ன்னு கேட்டு பேச்சையே டைவர்ட் பண்ணிட்டா. முதல்ல எனக்கு எதுவும் புரியலப்பா.
அவளோட பேரண்ட்ஸ் அவளை மிரட்டி ஒத்துக்க வச்சாங்கன்னு தான் லூசுத்தனமா நினைச்சுட்டு இருந்தேன். அண்ணனும் அவள் மேல காதலை வளர்த்துக்கிட்டான். கடைசில அவன் பீல் பண்ற மாதிரி ஆகிடக் கூடாதுன்னு, அவள் லவ் பண்ணுனதை அண்ணன் கிட்ட சொன்னேன்.
ஆனா சத்தியமா அவள் பேரைக் கெடுக்கணும்ன்னோ அண்ணனுக்கு அவள் மேல கோபம் வரணும்ன்ற எந்த நோக்கத்தோடயும் நான் சொல்லலப்பா. இதான் விஷயம்ன்னு தெரிஞ்சா, அவனும் அவளை கரெக்ட்டா ஹாண்டில் பண்ணுவான், கல்யாணத்துக்கு அப்பறம் பிரச்சனை எதுவும் வரக்கூடாதுன்ற எண்ணத்துல தான் சொன்னேன்.
பட், நான் வேணும்னே அவளைத் தப்பா சொல்லிட்டேன்னு என்கிட்ட சண்டை போட்டா. எனக்கு ஒரு மாதிரி குற்ற உணர்ச்சி ஆகிடுச்சு. என்ன இருந்தாலும் பிரெண்டோட பெர்சனல் பத்தி சொல்லிருக்கக் கூடாதோன்னு மனசு கஷ்டமாகிடுச்சு. அதுக்கு அப்பறம் அண்ணனோட பிஹேவியர்லயும் நிறைய மாற்றம்.
எப்பவும் என்கிட்ட குரலை உயர்த்திக் கூட பேசாதவன் எடுத்தெறிஞ்சு பேச ஆரம்பிச்சான். அவங்களோட கல்யாணத்துக்கு கூட நாள் குறிச்சாங்க. ஆனா, அப்பா திடீர்ன்னு நெஞ்சு வலி வந்து இறந்ததுல, அந்த ஷாக்ல இருந்து வெளில வரவே ரொம்ப டைம் ஆகிடுச்சு. அதுக்குள்ள எனக்கும் அண்ணனுக்கும் இடைல பெரிய கேப் ஆகிட்ட ஃபீல். இது போதாதுன்னு அப்பாவும் அவரோட தொழிலை என்கிட்ட குடுத்துருக்க, அவன் ரொம்ப ரூடா நடந்துக்க ஆரம்பிச்சான்.
எனக்குத் தெரியும், என் அண்ணன் காசுக்கு ஆசைப்படுறவன் இல்லை. அவனோட கோபம் தான் என்னன்னு எனக்குப் புரியவே இல்ல. அவனை எப்படி சரி பண்றதுன்னு தெரியாம, அவனையே ஆபிஸை பாத்துக்க வச்சேன். உண்மையா அவனுக்கு நகை டிசைன் பண்றதுல தான் இன்டரஸ்ட். அதுல தான் அவனோட கேரியரை பில்ட் பண்ணிட்டு இருந்தான்.
அப்படியும் எதுக்கு வம்படியா பத்திரிக்கை ஆபிஸை கேட்டான்னு தெரியல. அம்மாவோட உடம்பும் ரொம்ப மோசமா இருந்துச்சு. கடைசியா, பத்திரிக்கை ஆபிஸ்ல நடந்த குளறுபடிக்கு சரிதா தான் எல்லா ஐடியாவும் குடுத்து இருக்கான்னு தெரிய வரவும் எனக்கு கோபம் வந்துடுச்சு. அதுல வந்த கன்டென்ட் எல்லாமே இன்னும் என் கோபத்தை அதிகப்படுத்த, சுபாஷ் கூட சண்டை போட்டேன்.
லீகலா மூவ் பண்ணுவேன்னு ஹார்ஷா பேசி தான் மேனேஜ்மெண்டை கைல எடுக்க வேண்டியதா போய்டுச்சு. அதோட அவனும் வீட்டை விட்டுப் போய்ட்டான். அட்லீஸ்ட் அம்மாவுக்காகவாவது எங்க கூட இருந்துருக்கலாம்ன்னு நினைச்சா, இப்போ என்னமோ நான் அவனை வீட்டை விட்டு போக சொன்ன மாதிரி பேசுறான். ஒண்ணுமே புரியலப்பா. எப்படியோ போங்கன்னு விட்டுட்டேன்.” என மனதிலிருக்கும் பாரமனைத்தையும் ஒட்டு மொத்தமாகக் கொட்டித் தீர்த்தாள்.
தன்னவளை ஆதூரத்துடன் அணைத்துக் கொண்டவன், “இதுல உன் தப்பு எதுவும் இல்ல பாஷிணி. நீ கில்ட்டியா பீல் பண்ண வேண்டிய அவசியமும் இல்ல. நீ நல்லது செய்ய தான் நினைச்ச. அதை அவங்க புருஞ்சுக்கலைன்னா அதுக்கு நம்ம எதுவும் பண்ண முடியாது. உன் அண்ணன் ஒரு நாள் கண்டிப்பா உன்னைப் புருஞ்சுப்பான்ம்மா.” என்றான் மென்மையாக.
“நடக்குமான்னு தெரியலப்பா. ஆனா, நீங்க பேசுறதைக் கேட்கும்போது நடந்துட்ட மாதிரி இருக்கு…” எனக் கண்சிமிட்டிப் புன்னகைத்தாள்.
அதில் மொத்தமாக வீழ்ந்து போனவன், “யூ டெம்ப்ட் மீ!” என அவளிதழ்களில் பார்வையை படர விட, ரோஜாவாய் கன்னம் சிவந்தவள், “நம்ம பீச்ல இருக்கோம் வசி…” நாணம் மின்ன முகத்தை அவனிடம் இருந்து திருப்பிக் கொண்டதில், இருவரின் இதழ்களிலும் வெட்கப்புன்னகை நிறைந்திருந்தது.
——
அடுத்த ஒரு வாரத்தில் வம்சிக்கு பரீட்சை இருக்க, கிருபாஷிணியும் தேவையற்று அவனுக்கு அழைக்கவில்லை. அவனும் பேசவில்லை. ஐ. இ. எல். டி. எஸ் பரீட்சையை வெற்றிகரமாக முடித்த பின்னும் அவனிடம் இருந்து அழைப்பு வராமல் போக, அவளே அழைத்து என்னவென விசாரித்தாள்.
“ஒரு சின்ன வொர்க்ம்மா. முடிச்சுட்டுக் கூப்புடுறேன்” என போனை வைத்து விட்டதில், ‘அப்படி என்ன வேலையாம்…’ என சிலுப்பிக் கொண்டாள்.
இப்போதெல்லாம் வம்சியைப் பார்க்க வருவதாக சொல்லிக்கொண்டு அடிக்கடி அவனது கல்லூரிக்கு படையெடுக்கிறான் ஷாந்தனு.
ஆனால், ஒரு முறை கூட வம்சியைப் பார்த்து பேசியதில்லை. சரியாக தனுஜாவிற்கு வகுப்பு இல்லாத நேரங்களில் ஆஜர் ஆகி, அவளுடன் தேவையற்று எதையாவது பேசி, அவளிடம் இருந்து முறைப்பை வாங்கியபிறகே அங்கிருந்து செல்வான்.
அன்றும் அதே போல வம்சியின் கல்லூரிக்குச் சென்றவனுக்கு, உண்மையிலேயே நண்பனைக் காணும் எண்ணம் இருந்தது. அவனிடம் பேசி ஒரு வாரம் ஆகி இருந்தது. எப்போதும் தினம் ஒரு முறையாவது அவனிடம் பேசி விடுவது வாடிக்கை.
‘ஒருவேளை காதல் வாழ்க்கையில ஐக்கியமானதுனால நண்பனை மறந்துட்டானோ… பாத்துக்குறேன் அவனை’ என சிறு கோபத்துடன் கல்லூரிக்குச் செல்ல, சரியாக கிருபாஷிணியும் அங்கு வந்தாள்.
அவளைக் கண்டதும் கோப மூச்சுக்கள் பெருக, “உங்க லவ்ஸ காலேஜ்ல கூட விடுறது இல்லையா? 24 மணி நேரமும் ரெண்டு பேரும் ஒண்ணாவே சுத்துறீங்களாக்கும்” என்றதில்,
“ம்ம்க்கும்… 24 மணி நேரம்… நீ பார்த்த…” என்ற ரீதியில் முறைத்தவள், “நானே ரெண்டு வாரமா உங்க பிரெண்டை பார்க்கலையேன்னு அவரை தேடி வந்தேன். எக்ஸாம் கூட முடிஞ்சுது. இன்னும் புக்குல மூழ்கிப் போயிருக்குறான்னு தெரியல. இதுக்கு தான் படிப்ஸ லவ் பண்ண கூடாதுன்னு சொல்லுவாங்க போல” என்றாள் கடுப்பாக.
ஷாந்தனு புருவம் சுருக்கி, “என்னது… உன் கூடவும் அவன் இல்லையா?” எனத் திகைப்பாகக் கேட்க,
“நீ பிரெண்டையும் லவரையும் கழட்டி விட்டுட்டு என்ன தாண்டா செய்ற. வர வர உனக்கு என்மேல பாசமே இல்லை மச்சி.” என வராதக் கண்ணீரை வழித்துக் கொள்ள,
“பாசத்தைப் பத்தி நீ பேசாதடா. என்னைப் பார்க்க வர்ற சாக்குல நீ தனுஜாவை தான பார்க்க வர்ற” நக்கலுடன் வம்சி கேட்டத்தில் ஷாந்தனு அசடு வழிந்தான்.
“சீ போங்கள்! எனக்கு வெட்கமா இருக்கு.” என நெளிந்தவனை கிருபாஷிணி கேவலமாய் பார்க்க, அங்கு தனுஜாவே வந்து சேர்ந்தாள்.
“ஹாய் தனுஜா” என்ற கிருபாஷிணியை சங்கடத்துடன் பார்த்தாள்.
அவள் வம்சியின் காதலி எனத் தெரியாமல் அவளிடமே வம்சியிடம் காதலைப் பகிர்ந்த விஷயத்தைக் கூறி இருந்ததில், அந்நினைவு வரும் போதெல்லாம் தன்னை தானே அடித்துக் கொள்வாள்.
இப்போதும் தயக்கமாக, “ஹாய். அம்மாவுக்கு எப்படி இருக்கு?” எனக் கேட்க,
“நல்லா இருக்காங்க… ஒரு நாள் கண்டிப்பா வீட்டுக்கு வாங்க.” என்று அழைத்தவளை விழி விரித்துப் பார்த்தாள்.
“அப்போ நானும் வருவேன்” அனைத்துப் பற்களையும் காட்டி கூறிய ஷாந்தனுவை முறைத்த தனுஜா, “அப்போ நான் வரல” என்று நொடித்தாள்.
இருவருக்குள்ளும் நிகழும் மறைமுகப் போரை சற்றே சுவாரஸ்யத்துடன் பார்த்த கிருபாஷிணி, வம்சி கிருஷ்ணாவின் பார்வை தன்னைத் துளைப்பதை ஏறெடுத்தும் பார்க்கவில்லை.
தன்னைத் தவிர்த்ததற்கான தண்டனையாக அப்படி ஒருவன் அருகில் இருப்பதையே பாராமல், “ஆக்சுவலி தனுஜா நான் உங்களை பார்க்க தான் வந்தேன்.” என கெத்தை விடாமல் பேச, வம்சி உதட்டுக்குள் சிரித்துக் கொண்டான்.
தனுஜா புரியாமல், “என்னைப் பார்க்கவா? என்ன விஷயம் கிருபாஷிணி.” என்றிட,
“என்னை கிருபான்னே கூப்டு தனுஜா. ரெண்டு பேருக்கும் ஒரே வயசு தான், நோ மோர் பார்மாலிட்டீஸ்” என நட்பு பாராட்டியவளை அவளுக்கு வெகுவாய் பிடித்து விட்டது. இத்தனைக்கும் அத்தனை பெரிய பத்திரிக்கை அலுவலகத்தின் முதலாளி! சிறிதும் தலைக்கணம் இன்றி பேசியதில், புன்னகையுடன் தலையாட்டினாள்.
ஷாந்தனுவோ, “அட நானும் தனுஜாவை தான் பார்க்க வந்தேன். வாட் அ கோ இன்சிடென்ட்.” என வாயில் கை வைத்துக் கொண்டவனை, “இவளை நீங்க ஏன் பார்க்க வந்தீங்க” என்று கேலியாய் கேட்டாள் கிருபாஷிணி.
“அது… ஹான்… முதல்ல நீ ஏன்னு சொல்லு. நான் சொல்றேன்.” எனப் பந்தை அவள் புறம் எறிய, அவளும் தடுமாறி விட்டு, “அது… அது… ஹான் நீங்க எதுக்கு இவளைப் பார்க்க வந்தீங்களோ அதே காரணத்துக்கு தான் நானும் வந்தேன்” என அவனை மாட்டி விட்டாள்.
“சைக்கிள் கேப்ல ஸ்கோர் பண்றியாடா பாடிசோடா!” என்று ஷாந்தனுவிடம் முணுமுணுத்தவள், தனுஜா பேயறைந்ததை போல நிற்பதைக் கண்டு “உங்க ஆளு அதிர்ச்சில ஃப்ரீஸ் ஆகிடுச்சு அண்ணா.” என அவனுக்கு மட்டும் கேட்கும் வண்ணம் நக்கலடித்தாள்.
“வேற ஏதாவது அசிங்கமா சொல்லிடப் போறேன்.” என சிரித்த முகத்துடனே அவனை வார, “ரைட்டு விடு” என அவனும் பின்வாங்கினான்.
தன்னவளின் குறும்புகளை எல்லாம் மனக்கண்ணிற்குள் நிரப்பிக்கொண்டு கையைக் கட்டியபடி நின்ற வம்சி கிருஷ்ணாவிற்கு, அவள் அவனை சட்டை செய்யவில்லை என்றுணர்ந்ததும் சற்றே பொறாமை குணம் தலை தூக்கியது.
யோசியாமல் அவளது கையைப் பிடித்து தரதரவென கல்லூரிக்கு வெளியில் இழுத்துச் சென்றதில், கிருபாஷிணியும் இதை எதிர்பாராமல் தடுமாற, தனுஜாவும் விழித்தாள்.
ஷாந்தனுவோ, “நீ மட்டும் தான் இழுத்துட்டுப் போவியா நானும் போவேன். வா சுருதி… ச்சி வா தஜு” என அவள் கையைப் பிடித்து இழுக்க, அவளோ நகராமல் நின்று அவனைத் தீப்பார்வைப் பார்த்தாள்.
—–
“வசி விடுங்க… என்ன செய்றீங்க?” கிருபாஷிணி அவனது கையை உதற முயல, அவளால் நகர்த்தக் கூட இயலவில்லை.
எப்போதும் அவனது தீண்டலில் மென்மை மட்டுமே இருக்கும். அவள் விலக எத்தனிக்கும் போதே, அவன் மென்மையாய் அவளை விடுவித்து விடுவான். இன்று அவளது உதாசீனத்தில் அவன் மென்மையை மறந்திருக்க, ஒரு மரத்தின் பின்னால் அவளை நிற்க வைத்தவன், சுற்றி முற்றிப் பார்த்தான். கல்லூரி சாலையில் ஆள் நடமாட்டம் எதுவும் இல்லை.
அவனைத் தொடர்ந்து அவளும் குழப்பத்துடன் சுற்றி முற்றி பார்த்து விட்டு “என்ன பாக்குறீங்க?” எனக் கேட்டு முடிக்கும் முன்னே, அவளது கன்னத்தில் தன்னிதழ்களை அழுத்தமாகப் பதித்தான்.
ஆடவனின் இதழீரம் கன்னத்தை நனைக்க, அவளோ மழையில் நனைந்த கோழியாய் மெல்ல நடுங்கினாள்.
முத்தத்தை முடித்து அதரங்களை அகற்ற விருப்பப்படாதவன் போல, அவளது கன்னத்தை இதழ்களால் வருடியவனின் புது வித உரசல்களில் பாவையின் தேகம் ஷாக் அடித்தது போல அதிர, இதயமோ தனது துடிப்பை அதிகப்படுத்தியது.
கிஞ்சித்துக்கும், ஒரு கன்னத்தில் இருந்து இதழ்களை பிரிக்காமலேயே வருடியபடி தாடைக்கு பயணித்து மறுகன்னத்திற்கு வந்து சேர்ந்தவன், அங்கும் அழுத்த முத்தமொன்றை பதித்து விட்டு, இமைகளின் வழியே நெற்றியை நோக்கி நகர நடு சாலையென்றும் பாராது இருவரும் மொட்டை வெயிலில் மோனநிலையில் நின்றிருந்தனர்.
நெற்றியை முத்தங்களால் நிரப்பியவன், மூக்கின் வழியே பயணிக்கத் தொடங்கும் போதே, அவன் செல்லப் போகும் பாதை புரிந்துப் பதறி விலகினாள்.
செங்கொழுந்தாக சிவந்து, அதிர்ந்து, விழிகளைத் தரையில் புதைத்து நின்றவள், முகத்தில் ஒட்டி இருந்த ஆடவனின் இதழீரத்தை வெட்கத்துடன் துடைத்துக் கொள்ள, அவள் விலகியதும் தான், சுயநினைவு பெற்றான் வம்சி கிருஷ்ணா.
தன்னை செருப்பாலேயே அடித்துக் கொள்ளவேண்டும் என்ற வெறி எழ, தாடை இறுக தன் மீது எழுந்த கடும் கோபத்தில் தன்னையே மன்னிக்க விரும்பாதவனாக விறுவிறுவென அங்கிருந்து நகன்றவன், அவனது வண்டியை எடுத்துக்கொண்டு, எப்போதும் செல்லும் வேகத்தை விட அதிகமாக காற்றைக் கிழித்துக் கொண்டு பறந்தான்.
அவன் சென்றதைக் கூட உணராமல் வெட்கத்தின் பிடியில் தன்னை மறந்து நின்றிருந்தவள், மெல்ல நிமிர எதிரில் அவன் இல்லாது போனதில், நிகழ்ந்தது அனைத்தும் கனவாவென குழம்பிப் போனாள்.
ஆனால், மின்னல் தாக்கிய தேகம் நடந்ததை உண்மை என உரைக்க, நகரக் கூட இயலாமல் பின்னிப் பிணைந்த கால்களை எட்டு வைத்து கல்லூரிக்குள் செல்லும் போதே, வம்சி வண்டியில் தீ வேகத்துடன் செல்வதைக் கண்டு திகைத்து நின்றாள்.