தன் முன்னே நின்ற சந்த்ருவை கோபமாக பார்த்தவள், “நீங்க முதல்ல என் மாமாவை ஏன் பிடிக்கலைன்னு காரணம் சொல்லுங்க. உங்க கேள்விக்கு நான் பதில் சொல்றேன்!” என்றாள்.
“நான் கேட்ட கேள்விக்கு பதில் இது இல்லை நிவி. அப்போ நான் உனக்கு வேணாமா? நான் மட்டும் தான் டி நாய் மாதிரி உன் பின்னே சுத்துறேன். நீ ஆரம்பத்துல இருந்தே என்னைக் கண்டுக்குறது இல்லை!” என்றவனின் வார்த்தைகள் பல்லிடிக்கில் இருந்து வெளிவந்தன.
“எக்ஸ்யூக்ஸ்மீ!” என ஒரு பெண் குரல் எதோ கூற வந்த நிவியின் பேச்சைத் தடை செய்தது. இருவரும் திரும்பி பார்க்க, அங்கே வித்யா நின்றிருந்தாள். அவள் நெற்றியில் யோசனை கோடுகள் வரிவரியாய் நீண்டிருந்தன. நிவிக்கு அவள் முகம் மட்டும் நினைவில் இருந்தது. ஆனால், அவ்வளவாக இருவரும் பரிட்சயம் இல்லையே! அதனால் அமைதியாக நின்றாள்.
“மாமா, என்னாச்சு? ஏன் இந்த நேரத்துல இங்க நின்னு சண்டை போட்ற மாதிரி பேசீட்டு இருக்க?” என வித்யா வினவ, ஒரு பெருமூச்சை வெளியிட்ட சந்த்ரு, “ஒன்னும் இல்லை வித்யா. பேசிட்டு தான் இருந்தோம்” என்றான். இங்கு நடக்கும் பிரச்சனை தெரிந்தால் அவள் தன் வீட்டில் போய் கூறிவிடுவாள். பிறகு அவன் அத்தை வந்து வீட்டில் நாட்டாமை செய்வார் என எண்ணியவன், எதையும் அவளிடம் கூற விழையவில்லை.
நன்றாக இரவு கவிழ துவங்கியிருந்தது. அவர்கள் பேச்சைக் கேட்க விரும்பாத நிவிக்கு, சந்த்ருவின் வார்த்தைகளே மூளைக்குள் வண்டாய் குடைந்தது. இவனுக்குள் இப்படி ஒரு எண்ணம் இருக்கும் என கிஞ்சிற்றும் அவள் எண்ணியது கூட இல்லை. அவளளவில் என்றால் கூட, யுகி தனக்கு மட்டும் தான் சொந்தம், சந்தருவுக்கு யுகியின் மீது பிடித்தமில்லை என்றால், சம்பிரதாய பேச்சோடு கூட அவர்கள் உறவுக்கு முற்றுப் புள்ளி வைக்க தயாராக இருந்தாள். ஆனால், இது அத்துடன் நின்று போகும் உறவா இல்லையே? சாந்தி துவக்கம் எனில் அதன் நீட்சியாய் இப்போது யுகி.
சந்த்ருவும் யுகேந்திரனும் ஒரு தக்கப்பனுக்கு பிறந்தவர்கள். யுகி சந்த்ருவுக்கு அண்ணனாகிற்றே! இருவர் உடலிலும் ஓடுவது ஒரே ரத்தம் தானே? காலம் முழுவதும் தொடரப் போகும் உறவு அவர்களுடையது. இப்படி ஆரம்பத்திலே பெரிய பிரிவாக விழ, எப்படி அவர்களை இணைப்பது?
பெரியவர்கள் ஏற்றுக் கொண்டாலும் இவன் இப்படி முகத்தை தூக்கி வைத்திருந்தால், எப்படி இரண்டு குடும்பத்தையும் ஒன்று சேர்ப்பது? அதற்காக சந்த்ருவை விட்டு விடும் எண்ணமில்லை. அவள் உயிருடன் உறைந்து உணர்வுடன் கலந்து விட்டானே! விழிகளில் அவளை மீறி நீர் துளிர்க்க, அதை புறங்கையால் துடைத்துக் கொண்டு விறுவிறுவென நடந்து சாலையை அடைந்து இருந்தாள்.
“நிவி! நில்லு டி!” என சந்த்ரு அவள் பின்னே ஓடி வந்தான். வித்யா நடப்பது எதுவும் புரியாது தன் நண்பர்களிடம் விடை பெற்று சந்த்ரு பின்னே சென்றாள்.
சாலையில் போகும் ஒரு தானியை கைக்காட்டி நிவி ஏறப்போக, ஓடி வந்து அவள் கைகளைப் பிடித்தவன், “அண்ணா, நீங்க போங்க” என ஓட்டுநரிடம் கூறிவிட்டு அவளை தன் மகிழுந்துக்கு இழுத்து சென்றான்.
“என் கையை விடுங்க. நான் வீட்டுக்குப் போறேன். எனக்கு போக தெரியும்!” என கைகளை வேகமாக உதற முயன்றாள் நிவேதா. ஆனால், முடியவில்லை. அத்தனை வலுவாக இருந்தது ஆடவனின் பிடி. அவளை உள்ளே தள்ளி ஒட்டுநர் இருக்கையில் ஏறி அமர்ந்தான்.
அவர்கள் வாகனம் முன்பு வந்து கையைக் கட்டி நின்ற வித்யா, எதுவும் பேசவில்லை. அவளை மறந்து வந்து விட்டவன், நெற்றியை சுருக்கி விட்டு, “கார்ல ஏறு வித்யா, பேசிக்கலாம்” என்றான்.
வித்யா பின்னிருக்கையில் ஏறி அமர்ந்தாள். அவள் நிவி முகத்தைப் பார்க்க, அழுதழுது சிவந்து போயிருந்தது. தன் மாமனை முறைத்தாள் வித்யா. அவர்களுக்குள்ளே கண்டிப்பாய் எதோ ஒன்று இருக்கிறது என மூளை கூற, மனம் சந்த்ருவின் முகத்தை ஆராய்ந்தது. ஆனால், எதையும் அவளால் கண்டுபிடிக்க முடியவில்லை.
சந்த்ரு நேரே சென்றது நிவி வீட்டுக்கு தான். மகிழுந்தில் இருந்து இறங்கிய நிவேதா, அவனிடம் ஒரு வார்த்தை கூட கூறாது விறுவிறுவென மாடியேறி வீட்டிற்குள் நுழைய, சந்த்ரு அருகே இருந்த உணவகத்திற்கு மகிழுந்தை செலுத்தினான்.
தன் முன்னே இருந்த தேநீரை பருகியவனுக்கு, சற்றே நிதானம் வந்திருந்தது. வித்யாவும் தேநீரை பருகிக் கொண்டே சந்த்ரு முகத்தைப் பார்த்தாள்.
“வித்யா, ஐ லவ் ஹெர். நான் அவளை காதலிக்கிறேன்!” என ஆரம்பித்து அவளை முதன் முதலில் சந்தித்தது முதல் இன்று வரை நடந்த அனைத்தையும் கூறி முடித்தான்.
எல்லாவற்றையும் பொறுமையாக கேட்டவள், “நீங்க செய்றது ரொம்ப தப்பு மாமா. இதுவரைக்கும் பழகாத ஒருத்தர் மேல கோபப்பட்றது, வன்மமா இருக்குறது எல்லாம் சரியில்லை. ஒரு வேளை நீங்களும் அவரும் பேசி, கருத்து வேறுபாடு வந்துச்சுன்னா, அது வேற. பட், திஸ் இஸ் நாட் பேர். நிவி அக்கா கோபப்பட்டதுல தப்பே இல்லை” என்றாள்.
“ப்ம்ச்… மாமா. லூசு மாதிரி பேசாத. நான் எதுக்கு நிவிக்காக்கு சப்போர்ட் பண்ணணும். இன்ஃபேக்ட் அவங்களை நான் ஒரு தடவை தான் மீட் பண்ணி இருக்கேன். அவங்களுக்கு பேவரா பேசணும்னு நான் பேசலை. நியாயத்தை தான் பேசுறேன்.”
“…”
சந்த்ருவிடம் மௌனம். அவன் சிந்திப்பதைப் பார்த்த வித்யா,
“ஏன் மாமா, நீ நிவி அக்காவை ஃபர்ஸ்ட் டைம் பார்த்தப்போவே, அவங்களோட மாமா கூட இருந்தார் தானே? ஒவ்வொரு டைமும் அவங்களை சேர்த்து வச்சு தானே மீட் பண்ண? அப்ப அவங்களோட ரிலேஷன்ஷிப்பை ஏன் நீ புரிஞ்சுக்க மாட்ற? எல்லா உறவுகளும் உணர்வுகளுக்கும் விளக்கம் கொடுக்க அவசியம் இல்லையே! ஏன்? யுகேந்திரனுக்கு நிவி அக்கா அவங்க வாழ்க்கைல எந்த அளவுக்கு முக்கியத்துவம் கொடுக்குறாங்க. அப்போ நீ அவருக்கு மரியாதை கொடுக்கணும். அவங்க உறவை மதிக்கணும். இது வெட்டிட்டுப் போக போற உறவு இல்லை. கூட பிறந்தவங்க யாரும் இல்லை நிவி அக்காக்கு, நாளை பின்ன அவங்க அம்மா, அப்பாவுக்கு பிறகு அவர் தான் நிவி அக்காவுக்கு எதுனாலும் முன்னாடி வந்து நின்னு செய்வாரு. எல்லாத்தையும் யோசிச்சு தான் செய்யணும், பேசணும் மாமா. எடுத்தோம் கவிழ்த்தோம்னு செய்ய கூடாது!” என வித்யா அவனுக்கு புரிய வைத்திடும் நோக்கோடு விளக்கினாள்.
“ஐ கேன் அண்டர்ஸ்டான்ட் வித்யா. பட், என்னால அவங்க ரெண்டு பேரோட ரிலேஷன்ஷிப்பை அக்சப்ட் பண்ணிக்க முடியலை. அவங்களை ஒன்னா வச்சு பார்க்க முடியலை!” என தலையை பிடித்துக் கொண்டான்.
“மாமா, நீங்களே இப்படி நினைக்கலாமா? ஒரு பொண்ணு பையனோட பேசுறது, பழகுறது எல்லாம் சகஜம். அதுவும் சின்ன வயசுல இருந்து ஒன்னாவே வளர்ந்து இருக்காங்க. அவங்க மனசு நிச்சயமா வெள்ளையா தான் இருக்கும். நீ பார்க்குற பார்வைல தான் தப்பு இருக்கு. அதை இப்பவே மாத்திக்கப் பாரு. இல்லை, இப்ப சின்ன பிரச்சனையா இருக்கது நாளை பின்ன கல்யாணத்துக்கு பின்ன பூதாகரமாக வெடிக்க வாய்ப்பு இருக்கு. ஏன் நீயே கூட ப்யூச்சர்ல சந்தேகப்படலாம்!” என்றவள் குரலில் லேசாக நக்கல் தொனி தெறித்தது.
“ப்ம்ச்…. வித்யா!” என பல்லைக் கடித்தான் சந்த்ரு.
“என்ன வித்யா? இல்லை ஏன் இப்போ நீ பல்லை கடிக்கிற? நீயே அவங்க உறவை தப்பா பார்க்கும் போது, ஊர்ல இருக்க எல்லாரும் எப்படி பார்ப்பாங்க! நான் நிவி அக்கா இடத்துல இருந்து இருந்தா, அவங்க கேட்ட கேள்வியை தான் கேட்டிருப்பேன். அதுல எந்த மாற்றமும் இல்லை!” அழுத்தம் திருத்தமாக கூறினாள் வித்யா.
“வித்யா, நான் சந்தேகப்படலை. பட், எனக்கு எதோ ஒன்னு… அந்த யுகியை பார்த்தா, நிவியை என்கிட்ட இருந்து பிரிச்சுடுவானோன்னு தோணுது. எதோ இன்செக்யூர்ட் ஃபீலிங். அதான் அவனை எங்க வாழ்க்கைல வேண்டாம்னு சொல்றேன்!”
“வாட்! வேண்டாம்னு சொல்றீயா? ரப்பிஷ்! அதென்ன ஆம்பளைங்க எல்லாம் ஒரு பொண்ணு தன்னை காதலிச்சதும், தன்னோட பேச்சை மட்டுமே கேட்கணும்னு நினைப்பீங்களா? கூட பொறந்தவர் மாதிரி இத்தனை வருஷமா நிவி அக்காவை கேர் பண்ணவர் யுகி. நேத்து வந்த நீ அவரை நிவிக்கா வாழ்க்கைல வேண்டாம்னு முடிவு பண்ற? இது பேர் ஆணாதிக்கம் மாமா! உன்கிட்ட நான் இதை எதிர்பார்க்கலை!” வித்யா சீறினாள்.
“வித்யா, இட்ஸ் அ காம்பளக்ஸ் ஆஃப் இன்செக்யூரிட்டி!” சந்த்ரு கூறியதும் வித்யாவின் இதழ்கள் கேலியாக வளைந்தன.
“ஓ… அப்போ உங்க காதல் மேலயும், உங்க காதலி மேலயும் அவ்ளோ நம்பிக்கை உங்களுக்கு. அவங்க மாமா உங்களை வேண்டாம்னு கூப்ட்டதும், விட்டுட்டுப் போய்டுவாங்கன்னு!” அவள் பேச்சில் இருந்த கேலியை உணர்ந்தவன்,
“வித்யா, இதெல்லாம் உனக்கு புரியாது. நீ கேலியா சொன்னாலும், எனக்கு அந்த யுகி மேல நம்பிக்கை இல்லை. பட், என் காதலையும், என் நிவியையும் என்னால சந்தேகப்பட முடியாது. பிகாஸ் ஐ லவ் ஹெர் ஃபரம் தி பாட்டம் ஆஃப் ஹார்ட்!” தன் வாதம் நியாயமானதே என சந்த்ரு போராடினான்.
ஒன்றும் சொல்லாமல் அவன் முகத்தை சில நொடிகள் பார்த்த வித்யா, “சரி, நான் ஒரு கேள்வி கேட்குறேன். அதுக்கு பதிலை இப்போ சொல்லு!” என்றாள்.
சந்த்ரு ‘கேள்’ என்பது போல தலையை அசைக்க, “உங்க அம்மா, அப்பா சின்ன வயசுல இருந்தே உன்னை கேர் பண்ணி, அவங்க தான் உலகம்னு வளர்த்து விட்டவங்க. இப்போ நிவி அக்கா கல்யாணம் முடிஞ்சு வந்து, ‘எனக்கு உங்க அம்மாவை சுத்தமா பிடிக்கலை. அவங்க கேர்கடர் லைக் எதோ ஒன்னு பிடிக்கலை. அவங்க கூட இனிமே நீங்க பேச கூடாது. எனக்கு பிடிக்காதது உங்களுக்கும் பிடிக்க கூடாது’ன்னு சொன்னா, உடனே அத்தை கிட்டே பேசுறதை நிப்பாட்டி, அவங்களை உன் வாழ்க்கைல இருந்து விளக்கிடுவியா?” என கேட்டாள். அவள் கேள்வியே அபத்தம் போல எண்ணியவன், “என்ன பேசுற வித்யா, என் அம்மா… கண்டிப்பா அப்படி எல்லாம் பண்ண மாட்டேன் எந்த சூழ்நிலை வந்தாலும்!” என்றான்.
இப்போது அவன் வதனத்தை மீண்டும் கேலியாக நோக்கியவள், “ஓ… உனக்கு உங்க அம்மா பெரிசு. பட், நிவி அக்காக்கு அவங்க மாமா பெரிசா இருக்க கூடாது. உன் பேச்சை கேட்டு அவங்க உறவை முறிச்சுக்கணும். ரைட்?” என வினவினாள். இந்த கேள்விக்கு இப்போது சந்த்ருவால் பதில் கூற முடியவில்லை. மௌனமாக தலையை கவிழ்ந்தான்.
“மாமா, உனக்கு இப்போ இருக்கது இன்செக்யூரிட்டி இல்லை. ஈகோ, தான் லவ் பண்ற பொண்ணுக்கு தன்னை விட வேறொரு பையன் முக்கியமா போய்ட்டான்ற எண்ணம். அவனை விட தான் எந்த வகையிலும் குறைவு இல்லைன்னு நினைக்குற நினைப்பு.. அப்சல்யூட்லி அது ஈகோ தான். இதுவே யுகேந்திரன் இடத்துல ஒரு பொண்ணு இருந்து இருந்தால், இந்த பிரச்சனையே வந்து இருக்காது. ஏன்னா, எல்லா ஆம்பளைக்கும் தான்ற அகம்பாவம் இருக்கு!” என கோபமாக கூறிய வித்யாவை, இன்னதென்று அறிய முடியாத பாவத்தில் பார்த்தான் சந்த்ரு. அவன் முகத்தில் அப்பட்டமான குழப்பம்.
தன்னை நிதானப்படுத்திக் கொண்ட வித்யா, “மாமா, காதலிக்கிறதுன்னா, என்னென்னு தெரியுமா? ஒரு பொண்ணை மட்டும் நேசிக்கிறது இல்லை. அவ நோசிக்குறவங்களையும் நீ நேசிக்கணும். அவங்களையும் ஏத்துக்கணும். அவளோட நிறை குறைகளை அப்படியே ஏத்துக்கணும். உனக்கேத்த மாதிரி மோல்ட் பண்ண ட்ரை பண்ண கூடாது.
உன்னை நம்பி பெத்த அம்மா, அப்பா எல்லா உறவுகளையும் விட்டுட்டு வரப் போறா. அதனால, அவளுக்கு ஒரு நம்பிக்கையை உன் மேலயும் உங்க காதல் மேலயும் உருவாக்கணும். அது தான் காதல்… அதை விட்டுட்டு, ‘நீ இவன் கூட பேச கூடாது. அவன் கூட பேச கூடாதுன்னு அதிகாரம் பண்றது இல்லை. அதுக்கு அராஜகம்னு பேரு. முதல்ல காதல்னா, என்னென்னு புரிஞ்சுக்க. தன்னை நம்பி வந்த பொண்ணை பத்திரமா பார்த்துக்கோ. அழ வைக்காத அவங்களை!” என்றவள், அவன் கைகளில் அழுத்தம் கொடுத்தாள்.
“மாமா, நீ ரொம்ப குழப்பத்துல இருக்க. இப்போ எடுக்குற எந்த முடிவும் சரியா இருக்காது. முதல்ல நீ பேசுறது, செய்றது எல்லாம் சரியான்னு யோசி. ஹம்ம்… ரொம்ப குழப்பிக்காத!” என்றாள் புன்னகையுடன்.
“தேங்க்ஸ் வித்யா!” என்றவன் பின் யோசித்து விட்டு, “உங்க வீட்ல இப்போவே நீ எங்களைப் பத்தி சொல்லிடாத. என் மூலமா தெரிய வராம, உங்க அம்மா வந்து எங்க வீட்ல நாட்டாமை பண்ணா நல்லா இருக்காது. யார் மூலமாவும் என் காதல் விஷயம் என் அப்பா, அம்மா காதுக்குப் போறது சரியா இருக்காது. அதனாலே நானே பக்குவமா சொல்லிக்கிறேன். அதுவும் அவங்க எதிர்ப்பு எல்லாம் தெரிவிக்க மாட்டாங்க என் விருப்பத்துக்கு!” என்றான்.
“கண்டிப்பா இந்த விஷயம் என் மூலமா தெரிய வராது. எனிவே, ஹேப்பியா இரு மாமா!” என்று புன்னகைத்தவள், “எங்க அம்மாவை சமாளிக்க யோசிச்சு வச்சுக்கோ. என்னை உங்க வீட்ல கட்டிக் கொடுக்கணும்னு அவங்க கனவு கோட்டை எல்லாம் கட்டி வச்சுருக்காங்க. உனக்கு தெரிஞ்து தானே? பார்த்துக்கோ மாமா… சீக்கிரம் நல்ல சேதியா சொல்லு!” என்றாள் முகத்தில் லேசான புன்னகையுடன்.
சரி என தலையை அசைத்தவன், “சரி வா, நானே உன்னை ட்ராப் பண்றேன்!” என சந்த்ரு எழ, “எங்க வீட்லயா? இல்லை நான் நிவி அக்காவை பார்த்து கொஞ்சம் பேசணும். அதனாலே அவங்களை பார்க்க கூட்டீட்டு போ” என்றாள்.
“இல்லை வித்யா…” என மறுத்துக் கூற வந்தவனை பேச விடாமல், நிவேதாவை காண இழுத்துச் சென்றாள். வழியில் நிவிக்கு உணவையும் வாங்கிக் கொண்டனர்.
“மாமா, நீ இங்கேயே இரு. நான் போய் பேசிட்டு வரேன்!” என்ற வித்யா மாடியேறி சென்றாள். அவள் அழைப்பு மணியை அழுத்த, நிவி படுக்கையில் படுத்து கண்ணீரை உகுத்துக் கொண்டிருந்தாள். வித்யா அழைப்பு மணி இரண்டு முறை அழுத்தியும் அவள் அசையவில்லை. ஆனால், விடா கொண்டியா அழுத்திக் கொண்டே இருக்க, எழுந்து வந்து கதவை திறந்தாள் நிவேதா.
“ஹாய் அக்கா!” என புன்னகையுடன் அவளை இடித்துக் கொண்டு வித்யா உள்ளே நுழைந்தாள். கதவை அடைத்து விட்டு வந்த நிவி, அவளை கேள்வியாக பார்த்தாள்.
நிவியின் முகத்தில் கண்ணீர் தடங்கள் அப்பட்டமாக தெரிய, “க்கா… போய் நல்லா முகத்தை கழுவிட்டு வாங்க. போங்க!” என நிவியை பேச விடாமல் கழிவறைக்குள் தள்ளினாள். நிவி யோசித்துக் கொண்டே முகத்தை நன்றாய் கழுவி வர, அவளை இழுத்து நாற்காலியில் அமர வைத்து வாங்கி வந்த உணவை பிரித்து அவள் முன்னே வைத்தவள்,
“சாப்டுங்க அக்கா!” என்றாள்.
“இல்ல, எனக்கு பசிக்கலை” நிவி மறுத்து தலையை அசைத்தாள்.
“உங்க கண்ல வர்ற கங்கை யமுனைக்காகவாது நீங்க நல்லா சாப்ட வேண்டாமா?” என வித்யா நக்கலாக கூற, நிவி அவளை முறைத்தாள்.
அவள் உண்டு முடித்ததும், பக்கவாட்டாக தான் அமர்ந்திருந்த நாற்காலியை நிவிக்கு முன்புறமாக நகர்த்தினாள்.
“இல்லை, இப்போ என்னாகிப் போச்சுன்னு ரூம்க்குள்ள உட்கார்ந்து இப்படி வாட்டர் பால்சை தொறந்து விட்டிருக்கீங்க? இப்படி நீங்க சாப்பிடாம, ரூம்க்குள்ள உட்கார்ந்து அழுதா எல்லாம் சரியா போய்டுமா?” என வித்யா வினவ, நிவி அமைதியாக அவளைப் பார்த்தாள்.
“என்ன டா? இவ எல்லாம் நமக்கு அட்வைஸ் பண்றான்னு நினைக்காதீங்க. உங்களுக்கு ஒரு தங்கச்சி இருந்தா, கண்டிப்பா அவளுக்கு என் வயசு இருக்கலாம். அப்படி நினைச்சுட்டு, நான் பேசுறதை கேளுங்க! கேட்பீங்க தானே?” என லேசாக மிரட்டல் தொனியில் கேட்க, நிவி தலை தானாக ஆடியது.
“சரி, இப்போ விஷயத்துக்கு வருவோம். உங்களுக்குள்ள என்ன பிரச்சனைன்னு சந்த்ரு மாமா சொல்லிட்டாரு. ஏன் க்கா? எனக்கு ஒரு விஷயம் புரியலை. சந்த்ரு மாமா தான் மக்கு. இன்னும் பக்குவம் இல்லாம நடந்துக்குறாருனா, சொல்லி புரிய வைக்க வேண்டிய நீங்க இப்படி அமைதியா ரூம்க்குள்ள படுத்துட்டு அழுதுட்டு இருக்கீங்க. இந்த பொம்பளைங்களே இப்படி தான். பேச வேண்டிய இடத்துலே வாயைத் தொறந்து பேசாம, அழ வேண்டியது!” என அலுத்துக் கொண்ட வித்யா, அருகிலிருந்த தண்ணீர் பொத்தலை எடுத்து அருந்தினாள்.
“உங்களுக்கு உங்க யுகி மாமா எவ்ளோ முக்கியம்? அதை சொல்லுங்க!”
“என் மாமாவை என் அப்பாவுக்கு அடுத்த ஸ்தானம்… இல்லை என் அப்பா ஸ்தானத்துல தான் வச்சிருக்கேன் என மனசுக்குள்ள!” நிவி பதிலளித்தாள்.
“அப்படியே மனசுக்குள்ளயே பூட்டி வச்சுக்கோங்க. வெளிய சொல்லாதீங்க!” என்று நிவியை முறைத்த வித்யா, “இப்படி நீங்க மனசுக்குள்ள வச்சுக்கிட்டா, சந்த்ரு மாமாவுக்கு எப்படி தெரியும்?” என கேட்டாள்.
“இல்லை, சந்த்ரு என் மனசை புரிஞ்சுக்கிட்டு தான் எல்லா விஷயத்துலயும் நடப்பாரு. இதுலயும் அப்படி தான் நினைச்சேன்!” என உள்ளே போன குரலில் கூறினாள்.
“இது உங்க தப்பு. அழுத பிள்ளை தான் பால் குடிக்கும். அதே மாதிரி வாயை திறந்து சொன்னா தானே புரியும். எல்லாருக்கும் எல்லாமும் புரியணும்னு அவசியம் இல்லை. அதுவும் ஆம்பளைங்க எல்லாம் எதையும் அவ்ளோ சீக்கிரம் புரிஞ்சுக்க மாட்டாங்க. ஒரு நாப்பது வயசு போனா தான் அவங்களுக்கு எல்லாம் பக்குவம்னு வரும். அதுவரைக்கும் நம்ம தான் அவங்க மனசை புரிஞ்சுக்கணும். இதுவே யுகேந்திரனா இல்லாம, யுகலெட்சுமியா இருந்தா பிரச்சனையே வந்து இருக்காது. ஆம்பளைக்கு ஆம்பளையே ஈகோ அதிகமா பார்ப்பாங்க. சந்த்ரு மாமா மட்டும் என்ன விதிவிலக்கா?” என வினவியவளை நிவி புரியாமல் பார்த்தாள்.
“அக்கா, நான் என்ன சொல்ல வர்றேன்னு உங்களுக்கு புரியுதா? உங்களோட யுகி மாமா உங்க வாழ்க்கைல எந்த அளவுக்கு முக்கியமானவர்னு நீங்க ஆரம்பத்துலயே சந்த்ரு மாமாவுக்கு சொல்லி புரிய வச்சு இருக்கணும். இந்த விஷயத்துல தப்பு உங்க மேல தான்… தான் சொல்லாமலே எல்லாத்தையும் புரிஞ்சுக்கணும் தன்னோட துணை கிட்டே எதிர்பாரக்குறது தப்பு இல்லை. ஆனால், எல்லா விஷயத்துக்கும் எதிர்பார்க்க கூடாது. ஏன்னா, எல்லாரோட கண்ணோட்டமும் வேற. அதுவும் பொண்ணுங்க நாலு பக்கமும் யோசிக்கணும். உங்க மாமா கடைசி வரைக்கும் உங்க கூட வரப்போற உறவு. அதை நீங்க சந்த்ரு மாமா கிட்ட ஆரம்பத்துலயே சொல்லி இருக்கணும்!”
“எல்லா உறவுகளையும், எல்லா உணர்வுகளையும் எல்லாராலும் புரிஞ்சுக்க முடியுறது இல்லை. அந்த மாதிரி நேரத்துல நம்ம தான் சொல்லி புரிய வைக்கணும். இப்படி கப்பல் கவிழ்ந்து போன மாதிரி உக்கார கூடாது.”
“அப்புறம் இந்த ஆம்பளைங்க மோஸ்ட்லி ஷார்ப் எல்லாம் இல்லை. நூத்துல ஒன்னு தான் ஷார்ப்பா இருப்பாங்க. ஆனால், பாருங்க உங்களுக்கு வாய்ச்சது அநியாயத்துக்கு மழுங்கி போனது!” என வித்யா கூற, இத்தனை நேரம் அவள் சொல்வது எல்லாம் நியாயம் என பார்த்துக் கொண்டிருந்த நிவி, அவள் கடைசியாக கூறியதில் ஏகத்துக்கும் அவளை முறைத்தாள்.
“சரி முறைக்காதீங்க அக்கா. அப்ப அப்ப உண்மை வெளிய வந்துடும்!” என கேலியாக கூறியவள், “அப்புறம் இன்னொரு விஷயம் சொல்லணும்!” என தீவிரமா கூற, நிவி அவள் வதனத்தைப் பார்த்தாள்.
“அக்கா, எல்லா ஆண்களுக்கும் தன் லவ் பண்ற பொண்ணுக்கு தான் தான் ஃப்ர்ஸ்ட் ப்ரையாரிட்டி கொடுக்கணும்னு நினைப்பான். அதே தான் உங்க விஷயத்துலயும் நடந்து இருக்கு. சந்த்ரு மாமா உங்க மாமா மேல அதனால் தான் கோபப்பட்டு இருக்காரு. உங்க மாமா மேல நீங்க அதிக பாசம் வச்சு இருக்கீங்க. அதை நான் தப்பு சொல்லலை. பட், அதே அளவு பாசத்தை, ப்ரியாரிட்டியை நீங்க சந்த்ரு மாமாவுக்கும் தரணும். அவர் மனசுல கொஞ்சம் பயம், எங்க யுகி மாமா பேச்சை கேட்டு நீங்க அவரை விட்டு போய்டுவீங்களோன்னு. ஒரு இன்செக்யூரிட்டி. அதை நீங்க தான் போக்கணும். அவருக்கு ஒரு ஹோப் கொடுங்க. ரெண்டு பேருமே எனக்கு முதல் ப்ரையாரிட்டின்னு உணர வைங்க. ரெண்டு பேர் மேல இருக்க பாசத்தையும் பேலன்ஸ் பண்ணுங்க. அப்புறம் இதை இவ செல்றாளேன்னு நினைக்காதீங்க. இந்த உலகத்துல எந்த உறவையும் வேறொரு உறவால சாட்டிஸ்பை பண்ண முடியாது. சித்தி சித்தி தான். அம்மா அம்மா தான். மாமியார் மாமியார் தான். அதே மாதிரி உங்க யுகி மாமா இடத்தை சந்த்ரு மாமாவால ரீப்ளேஸ் பண்ண முடியாது. சந்த்ரு மாமா இடத்தை அவரால் ரீப்ளேஸ் பண்ண முடியாது. இதை நீங்க சந்த்ரு மாமாவுக்கு புரிய வச்சாலே, பிராப்ளம் சால்வ்ட்!” என அமர்ந்த இடத்தில் இருந்து எழுந்தாள் வித்யா.
அவளை அத்தனை ஆச்சரியத்துடன் பார்த்தாள் நிவேதா. எத்தனை பெரிய பிரச்சனையை எளிதாக பேசி தீர்த்து விட்டாள். தன்னை விட இளையவள் இவள் என்பதை இன்னும் நிவியால் நம்ப முடியவில்லை.
“போதும்… உங்க ரெண்டு பேர்கிட்டே பேசியே நான் டையர்ட் ஆகிட்டேன். கிளம்புறேன்!” என சலித்துக் கொள்வது போல நகர சென்ற வித்யாவின் கையை பிடித்து இழுத்து அணைத்துக் கொண்டாள் நிவி. தன் பசியறிந்து உணவிட்டு, தன் மனகிலேசங்களறிந்து அதற்கு தகுந்த அறிவுரை சொன்ன இந்த சின்ன பெண்ணை அவளுக்கு மிகவும் பிடித்தது. நிவியை விட இரண்டு வயது சிறியவள் வித்யா.
“தேங்க்ஸ் வித்யா!” என உணர்ந்து நன்றி நவில்ந்த நிவியின் முதுகை ஆதரவாக தடவிய வித்யா விடை பெற்றாள்.
“மாமா, உனக்கு டென் மினிட்ஸ் தான் டைம். உன் ஆளை மந்திரம் போட்டு சரி பண்ணிட்டேன். சீக்கிரம் பார்த்து பேசிட்டு வர்ற!” என சந்த்ருவை அனுப்பிவிட்டு, மகிழுந்து இருக்கையில் சாய்ந்து விழிகளை மூடிக் கொண்டாள் வித்யா. இதழ்களில் ஒரு நிறைவான புன்னகை தவழ்ந்தது.
வித்யா பேசியவற்றை எல்லாம் அசை போட்டுக் கொண்டிருந்தாள் நிவி. அவள் கூறியது அனைத்தும் சரியெனவே பட்டது. ஒரு பெருமூச்சை வெளியிட்டவாறு பால்கனியில் நின்றிருந்தவளின் பின்னே அரவம் கேட்க, சந்த்ரு தான் என அறிந்தாள். ஆனால், திரும்பவில்லை. அவன் மீது கோபம் இருக்க தான் செய்தது. அவன் தன்னிடம் பேசிய வார்த்தைகள் எல்லாம் காதில் ஒலித்துக் கொண்டிருக்க, லேசாக விழிகளில் நீர் திரையிட்டது. அவளை பின்னிருந்து அணைத்துக் கொண்டான் சந்த்ரு. இருவருக்கும் முதல் அணைப்பு. உடலில் ஓர் சிலிர்ப்பை உணர்ந்தனர்.
அவன் கைகளை கோபத்தில் விலக்கப் பார்த்தவளின் காதருகே குனிந்தவன், “சாரி நிவி. நான் அப்படி பேசுனது தப்பு தான். உன் மாமா மேல கோபப்பட்டது தப்பு தான். பட், அது வேணும்னு செய்யலை. என்னை மீறி நடந்த விஷயம். இனிமே அப்படி நடக்காமல் பார்த்துக்குறேன்!” என கெஞ்சலாய் கூறினான். இருந்தும் அவள் உடல் மொழியில் இளக்கம் வரவில்லை.
தன்னை நோக்கி அவளை திருப்பிய சந்த்ரு, அவள் கன்னத்தை தன் கைகளில் தாங்கி, “அதான் சாரி சொல்றேன் இல்லை. கோபம் இன்னும் போகலையா உனக்கு. உங்க மாமாவுக்கு உரிய மரியாதையை இனிமே தருவேன். அவரை அக்சப்ட் பண்ண ட்ரை பண்றேன். பட், சடன்னா எல்லாம் முடியாது. கொஞ்சம் கொஞ்சமாக முயற்சி பண்றேன்… ஓகே வா?” என கேட்டு அவள் உச்சியில் இதழை ஒற்றி எடுத்தான்.
அதில் நிவிக்கு உடலில் ஒரு நடுக்கம் பிறந்தது. அவன் முகத்தை நிமிர்ந்து பார்த்தாள் பெண். “என்ன டா?” என கனிவாய் கேட்டவனை பார்த்து விழியோரம் நீர் கசிய, “ப்ம்ச்… நிவி. அழக்கூடாது!” என தன் பெருவிரலால் அவள் விழிநீரை துடைத்தான் சந்த்ரு.
அவன் மார்பில் முகத்தைப் புதைத்து இறுக அணைத்துக் கொண்டவள், “நானும் சாரி. உங்க கிட்ட அப்படி பேசியிருக்க கூடாது. நானும் தப்பு தான். என்னையும் மன்னிச்சுடுங்க!” என்றாள் நடுங்கும் குரலில். அவன் எதுவும் பேசவில்லை அவளை இறுக அணைத்துக் கொண்டான்.
“நீங்க முக்கியமா, யுகி மாமா முக்கியமான்னு எல்லாம் யோசிக்காதீங்க. நீங்க ரெண்டு பேருமே எனக்கு ரொம்ப முக்கியம். என் வாழ்க்கைல இன்றியமையாதவங்க தான். இந்த மாதிரி எண்ணம் இனிமே உங்களுக்கு என்னைக்கும் வர கூடாது… சரியா?” என கேட்டவளைப் பார்த்து, மையமாக தலையை அசைத்தான். சில நொடிகள் கரைய அவளிடமிருந்து பிரிந்தவன், “நிம்மதியா தூங்கு. எதையும் நினைச்சு குழப்பிக்காத!” என அவள் நெற்றியில் முத்தமிட்டு விடை பெற்றான்.
சந்த்ருவின் மகிழுந்து வித்யா வீட்டை நெருங்க, “போதும் மாமா. இங்கேயே நிறுத்து. நான் தனியா இந்த டைம் போனா திட்டு மட்டும் தான். உன் கூட போனா, ஏற்கனவே எங்கம்மா கட்டி வச்சிருக்க கனவு கோட்டை மேல மாடியே கட்னாலும் கட்டிடிடும்!” என கலகலத்து சிரித்தவாறே வித்யா மகிழுந்தில் இறங்க, “தேங்க்ஸ் வித்யா!” என்றான்.
“பரவாயில்லை மாம்ஸ்… இப்போ நான் சிங்கிள் தான். ப்யூச்சர்ல மிங்கிள் ஆகும் போது, எனக்கு சில பல உதவி செஞ்சு இந்த கடனை அடைச்சுக்கோ!” என கண்ணடித்து விட்டு நகர்ந்தவளை, புன்னகையுடன் பார்த்தான். சிறு வயதில் அடித்துக் கொண்டும் தன்னிடம் வம்பிழுத்துக் கொண்டும் சுற்றும் வித்யா, இத்தனை முதிர்ச்சியானவளாக மாறிவிட்டாளா அதற்குள்ளே? என பார்த்தவன், பின் வீட்டை நோக்கி மகிழுந்தை செலுத்தினான்.
படுக்கையில் படுத்து நிவி கண்ணை மூடிய சமயம், யுகி அழைத்து விட்டான். அழைப்பை ஏற்றவள் பேச, அவள் குரலின் பேதத்தை உணர்ந்தவன், “நிவி, என்னாச்சு வாய்ஸ் ஒரு மாதிரி இருக்கு.” என வினவினான்.
“ப்ம்ச்… ஒன்னும் இல்லை மாமா. லைட்டா தொண்டை வலி. அதான்!” என்று அவனை சமாளித்து பேசி அழைப்பை துண்டித்தவளுக்கு குற்ற உணர்வு மேலிட்டது. அவள் வாழ்க்கையில் முதன் முதலாக யுகேந்திரனிடம் மறைப்பது சந்த்ரு விஷயம் மட்டுமே. சீக்கிரமாக அவனிடம் தெரிவித்து விட வேண்டும் என எண்ணி நித்திரையை தழுவினாள். அது விரைவிலே நடக்கப் போகிறது என்பதை அவள் அறியவில்லை.
அடுத்த ஒரு வாரம் எப்போதும் போல கழிய, யுகி அந்த வார ஞாயிற்று கிழமை காலை சென்னைக்கு வந்திறங்கினான். தலைக்கு மேல் வேலைகள் இருந்த போது, நிவி இப்போது எல்லாம் தன்னிடம் சரிவர பேசுவதில்லை
என உணர்ந்தவன், அவளுக்கு எதுவும் பிரச்சனை இருக்குமோ என எண்ணி வந்து விட்டான். அவளிடம் கூட தன் வருகையை பற்றி கூறவில்லை ஆடவன்.