தொலைக்காட்சியில் ஒரு கண்ணை வைத்திருந்த வீரபாண்டி சூடான தேநீரை சுவைத்துக் கொண்டிருக்க, தனது காலணிகளை அவிழ்த்து விட்டு உள்ளே நுழைந்தாள் நிவேதா.
வீரபாண்டியை பார்த்தும் நிவியின் முகத்தில் கலக்கம். எதோ தவறு செய்த குறுகுறுப்பை மனம் உணர, நிமிர்ந்து அவர் முகம் காண துணிவில்லை பெண்ணுக்கு.
அவள் நுழைந்ததை பார்த்தும் வீரபாண்டி எதுவும் கூறாது இருக்க, இரண்டு நாட்கள் இருந்த மனநிலையில் இதுவும் சேர்ந்து கொள்ள, விழிகளில் நீர் கோர்த்தது. தனது அறைக்குள் நுழைந்தவள், சுத்தம் செய்து கொண்டு அடுக்களைக்குள் நுழைந்தாள். உள்ளே வரும் போதே அவள் விழிகள் தாயை கண்டு கொண்டது.
“அம்மா!” என அழைத்தவாறே வந்த நிவியை பார்த்த ஜோதி, “வாடி!” என்றதோடு பேச்சை முடித்துக் கொள்ள, தாய் தந்தை தன்னை ஒதுக்கி வைத்திவிட்டார்களோ? என பாவையின் உள்ளம் பதறியது.
“ம்மா… என் கூட பேச மாட்டீயா ம்மா?” என கேட்டு ஜோதியின் கைகளை பிடித்துக் கொண்ட நிவியின் விழிகளிலிருந்து சரசரவென நீர் வழிந்தது.
“இப்போ தான் உனக்கு பெத்தவங்க கண்ணுக்கு தெரியுறோமா டி? யுகியா வந்ததால எங்களுக்கு விஷயம் தெரிஞ்சது. இல்லை இப்பவும் எங்க கிட்டே நீ அந்த பையனை விரும்புறதை சொல்லாம மறைச்சிருப்ப தானே?” என ஜோதி ஆதங்கத்துடன் வினவினார்.
“ஐயோ அம்மா! எனக்கு மறைக்கிறது எல்லாம் எண்ணம் இல்லை மா. எனக்கே என் மனசு புரியலை. அதான் உங்க கிட்டே சொல்லலை. அப்புறம் சொல்றதுக்கான சந்தர்ப்பம் அமையலை. நானே உங்க கிட்ட சொல்லாலாம்னு முடிவு பண்ணப்போ தான் யுகி மாமா வந்துட்டாரு. பயமா இருந்துச்சு உங்க கிட்டே நேரடியா சொல்லி மறுத்துடுவீங்களோன்னு. அதான் மாமா கிட்டே சொல்லி உங்க கிட்ட பேசலாம்னு, அவர் கிட்டே சொன்னேன்!” என விழிகளில் நீருடன் கூறினாள்.
அவள் பேசியதை கேட்டும் ஜோதி சமாதானமாகவில்லை. அவர் வேலை பார்த்துக் கொண்டிருந்தாலும், முகம் மட்டும் அவரது அகத்தை எடுத்துக் காட்ட, “தப்பு தான் மா. நான் பண்ணதை நியாயப்படுத்த எல்லாம் விரும்ப மாட்டேன். என்னை மன்னிச்சுடு மா!” என அவர் கைகளை இறுக்கமாகப் பிடித்துக் கொண்டாள் நிவி.
“என் கிட்டே பேசுறதை விட உங்க அப்பா கிட்டே போய் பேசு. அவர் தான் ரெண்டு நாளா ரொம்ப யோசனையா இருக்காரு. போ, போய் அவரை சமாதானம் செய்!” என்ற ஜோதி, “கண்ணை தொடை நிவி. எங்க காலத்துல எல்லாம் அப்பா, அம்மா பார்க்குறவங்க தான் மாப்ளை. மறுக்குறதுக்கு எல்லாம் வாய்ப்பே கிடையாது. கல்யாணம் செஞ்சு தான் ஆகணும். ஆனால், உங்க காலம் அப்படி இல்லை. உங்க அப்பாவும் நானும் உனக்கு தேவையான அளவு சுதந்திரத்தை கொடுத்து இருக்கோம். அதை தப்பான வழில நீ பயன்படுத்த கூடாது நிவி. எதோ ஆனந்தியோட பையன்னால பிரச்சனை இல்லாம போச்சு. இதுவே எங்களுக்கு தெரியாத ஒரு பையனை நீ கூட்டீட்டு வந்திருந்தா, என்ன பண்ணுவோம் நாங்க? இது உன்னோட வாழ்க்கை விஷயம் டி. நீ மட்டும் சம்பந்தப்பட்டது இல்லை. ரெண்டு குடும்பத்தை இணைக்கப்போற விஷயம். ஆயிரம் தடவை யோசிக்கணும் நாங்க. ஏன்னா, பொண்ணை பெத்தவங்க டி. இப்போ உனக்கு புரியாது.”
“நீ வெறும் வீரபாண்டி, நாகஜோதியோட மக மட்டும் தான். உனக்குன்னு ஒரு வாழ்க்கை அமைஞ்சு, நீ பெத்த குழந்தைங்க இப்படி செஞ்சா உனக்கு எங்களோட நிலைமை புரியும். உன்னை குத்தமா சொல்லலை நான். வாழ்க்கையோட நிதர்சனம் நிவி இது. ரெண்டு பேரும் ஆசைப்பட்டீங்கன்னு நாங்க கல்யாணம் பண்ணி வச்சு, பிற்காலத்துல ஒத்து வராம போச்சுன்னா என்ன பண்றது? நாங்க பெத்து வச்சுருக்கது ஒரே ஒரு பொண்ணு. உன்னோட வாழ்க்கையை நல்லா அமைச்சு கொடுக்க முடியாம போச்சேன்னு கடைசி காலத்துல கூட நிம்மதியா எங்களால் இருக்க முடியாது. எல்லாத்தையும் யோசிச்சு தான் நானும் அவரும் முடிவெடுத்து இருக்கோம். உன்னை பெத்த நாங்க, உன் நல்லதை தவிர எதையும் யோசிக்க மாட்டோம். நீ போய் உங்க அப்பா கிட்டே பேசு!” என ஒரு தாயாய் தன் தரப்பு நியாயங்களை கூறினார் ஜோதி. அவர் சொல்வது எல்லாம் நூறு சதவீதம் உண்மை என நிவிக்கும் உரைத்தே இருந்தது.
“ம்மா… நீ சொல்ற எல்லாம் எனக்கு புரியுது மா. நீயும் அப்பாவும் என்ன முடிவெடுத்தாலும் அதுக்கு நான் சம்மதிக்கிறேன்!” என கூறியவளின் காதல் கொண்ட மனம் துடியாய் துடிக்க, சந்த்ரு முகம் மனக்கண்ணில் தோன்றி மறைந்தது.
அவள் கண்ணீரை துடைத்து விட்ட ஜோதி, “அழாத நிவி, பெத்தவங்களா எங்களுக்கும் சில எதிர்பார்க்கப்பு இருக்கறது தப்பு இல்லையே! அது உடையும் போது வர்ற ஆதங்கம் தான். எதுவா இருந்தாலும் தைரியமா எதிர் கொள்ளணும். ம்ம்… போ!” என கூறிய ஜோதியை இறுக அணைத்த நிவி, “சாரிம்மா…” என முணுமுணுத்தாள்.
வெளியே வந்தவள் வீரபாண்டியை பார்க்க, அவரும் நிவியை தான் பார்த்தார். இரண்டு நாட்களாக தூங்காத விழிகளும் சரியாக உண்ணாத உடலுமாய் தன் முன்னே நிற்கும் மகளைப் பார்க்க பெற்றவருக்கும் மனம் கனத்தது. அவருக்கு அருகில் சென்றவள், “அப்பா!” என எதோ கூற வர, வெறும் தேம்பல் தான் வெளியே வந்தது.
“என்னை மன்னிச்சுடுங்க ப்பா!” என அவரருகில் அமர்ந்து தோளில் சாய்ந்து கொண்டாள். ஆனால் உடல் அழுகையில் குழுங்க, வீரபாண்டி அவள் தலையை ஆதரவாக தடவினார்.
“ப்பா… நான் உங்க கிட்டே சொல்ல கூடாதுன்னு இல்லை பா. அதுக்காக நான் செஞ்சது சரி இல்லை. நான் பண்ணது தப்பு தான். என்னை மன்னிச்சுடுங்க பா. நீங்களும் அம்மாவும் தான் என் உலகமே! உங்களை மீறி நான் எதுவும் செய்ய மாட்டேன்ப்பா. உங்க முடிவு எதுனாலும் நான் ஏத்துக்குறேன் ப்பா. ஆனால், சந்த்ரு நல்லவர் பா. அதை மட்டும் ஏத்துக்கோங்க பா. உங்க பொண்ணு எந்த காலத்திலயும் தப்பான முடிவை எடுக்க மாட்டாப்பா. ஒன்னுக்கு நூறு தடவை யோசிச்சு தான் இந்த முடிவை எடுத்தேன்” என்றாள். நெஞ்சமெல்லாம் கனத்துப் போனது பாவைக்கு. தன் காதலுக்காக பெற்றவர்களை விட்டு விட முடியாது. அதற்காக சந்த்ருவை மறந்து விட்டு மற்றொருவரை மணப்பது என்பது கனவிலும் அவளால் இயலாத ஒன்று. அவர்கள் என்ன முடிவு எடுத்தாலும், பொறுமையாக பேசி புரிய வைக்க வேண்டும். கண்டிப்பாக தன் பெற்றவர்கள் தன்னை காயப்படுத்த மாட்டார்கள்
என பெண் மனம் ஆழமாக நம்பியது.
நிவியின் கைகளை ஆதரவாக பிடித்த வீரபாண்டி, “எனக்கு என் பொண்ணைப் பத்தி தெரியும் டா. எந்த ஒரு சூழ்நிலையிலும் நீ தப்பான பாதையில போக மாட்டேன்னு. ஆனால், உன் மனசுல இருக்க விருப்பத்தை எங்க கிட்ட சொல்லலையேன்ற வருத்தம் தான் டா” என்றார்.
“சாரி பா!” என்ற நிவியின் கண்ணீரை துடைத்து விட்டவர்,
“உங்க அப்பா காதலுக்கு எதிரி எல்லாம் இல்லை டா. ஆனால், நான் பார்த்த வரைக்கும் காதல் நிறைய பேர் வாழ்க்கையை அழிச்சுடுச்சு. பொண்ணை பெத்தவனா எனக்கு பயம் இருக்கும் தானே? உங்க அத்தை வாழ்க்கையை பார்க்குற தானே? காதல்னால தான் இப்படி இருக்காங்க. அதனால் எனக்கு பயம், எங்க நான் பெத்த ஒரே புள்ளயோட வாழ்க்கை நல்லா அமையாம போய்டுமோன்னு. எல்லாருமே நல்லவங்களா நம்ம கண்ணுக்குத் தெரிஞ்சுட்டா, கெட்டவங்க இல்லைன்னு அர்த்தம் இல்லை. நம்ம எல்லாரையும் நல்ல விதமாக பார்க்குறோம்னு அர்த்தம். அப்படி தான் இந்த வயசுல எல்லாரும் நம்ம கண்ணுக்குத் தெரிவாங்க டா. மூளை சொல்றதை எல்லாம் மனசு கேக்குறதில்லை. எங்க நீ தடுமாறி தடம் மாறி போய்டுவியோன்ற பயம் தான் டா!” என அவள் தலையை பாசமாக தடவி விட்டார். அவர் தோளில் நன்றாக சாய்ந்து கைகளை இறுகப் பிடித்துக் கொண்டாள்.
“நீ சொன்னதும் ஓகே சொல்றதுக்கு இது சினிமா இல்லை நிவி மா. அந்த பையன் யாரு? எப்படி? என்னென்னு விசாரிச்சு தானே ஒரு முடிவுக்கு வர முடியும். அதான் இந்த ரெண்டு நாள் அந்த பையனை தெரிஞ்ச எல்லாரையும் வச்சு விசாரிச்சேன். கேட்ட வரைக்கும் நல்ல பையன் தான்னு சொன்னாங்க. கெட்டப் பழக்கம் எதுவும் இல்லைன்னு சொன்னாங்க. என் பொண்ணு மேல எனக்கு நம்பிக்கை இருந்துச்சு. உன்னோட செலக்ஷன் எப்பவுமே தப்பா இருக்காதுன்னு. அந்த பையனோட அப்பா போன் பண்ணி பேசுனாரு டா. அவங்களுக்கு சம்மதமாம்!” என்றவரை எதிர்பார்ப்புடன் ஏறிட்டாள்.
முகத்தில் கலக்கமும் கண்களில் எதிர்பார்ப்புடனும் தன்னை ஏறிட்ட நிவியை பார்த்து புன்னகைத்த வீரபாண்டி, “என் பொண்ணோட விருப்பத்துக்கு என்னைக்கும் நாங்க தடையா இருந்தது இல்லை. எங்களுக்கும் இதுல சம்மதம் தான் டா. நானும் உன் அம்மாவும் யோசிச்சோம், அவங்க ரொம்ப வசதி வாய்ப்பானவங்கன்னு. ஆனால், ஆனந்தி பேசுனாங்க. காசு பணம் எல்லாம் என் பையன் கூட கடைசி வரைக்கும் வரப்போறது இல்லை. பணம் இன்னைக்கு வரும், நாளைக்குப் போகும். ஆனால், சொந்தம் தான் கடைசி வரை வருவாங்க. என் ஃபிரண்டோட பொண்ணே எங்க வீட்டுக்கு மருமகளாக வர போறா. அதுவும் நிவி ரொம்ப அமைதியான பொண்ணு. எங்க மக மாதிரி பார்த்துக்குறோம். கல்யாணம் பண்ணி கொடுங்க’ன்னு கட்டாயப்படுத்தி கேட்டாங்க. எங்களுக்கும் மறுக்க எந்த காரணமும் இல்லை டா மா!” என கூறியவரை பார்த்தவளின் அடியாழத்தில் அவளையும் அறியாமல் நிம்மதி என்னும் வார்த்தைக்கு அர்த்தம் கிடைத்தது. சந்தோஷத்தில் உதட்டை கடித்தாள். கண்கள் மீண்டும் கலங்க, “தேங்க்யூ சோ மச் அப்பா… ஐ யம் சோ லக்கி!” என உணர்ச்சி வேகத்தில் கூறியவளை பார்த்து வீரபாண்டி புன்னகைக்க,
“இந்தா நிவி… டீயை குடி. சரியா சாப்பிட்றீயா? இல்லையா? உடம்பு ஏன் இப்படி வத்தி போய்டுச்சு!” என அவள் உடலின் மீது அக்கறையுடன் படிந்த ஜோதியை பார்த்தவள், கடவுளுக்கு நூறு முறை நன்றி கூறினாள். தனக்கு காதலில் எல்லாம் நம்பிக்கை இல்லை எனினும், தன் மகளுக்காக மனதார சம்மதத்தை தெரிவித்த பெற்றோரை கொடுத்ததற்காக.
தேநீரை குடித்து முடித்தவள், யுகி வீட்டிற்குள் நுழைந்தாள். சாந்தி சமைத்துக் கொண்டிருக்க, “அத்தை!” என நிவி அழைக்க, “வாங்க பெரிய மனுஷி!” என புன்னகையுடன் அவளை வரவேற்றார்.
“அத்தை…ம்ம்!” என நிவி முகத்தைத் தூக்க, “அடி கழுதை, இங்க வா!” என்றவர், “அதுக்குள்ளேயும் என் மருமகளுக்கு கல்யாணம். இப்போ தான் அத்தை பாவைடையை கட்டி விடுங்கன்னு ஐஞ்சு வயசுல என்கிட்ட வந்த மாதிரி இருக்கு. வளர்ந்துட்டான்றதை நம்ப முடியலை!” சாந்தி முகம் கொள்ளா புன்னகையுடன் கூற, “அத்தை!” என இப்போது சிணுங்கினாள் நிவி.
“ரொம்ப சந்தோஷமா இருக்கு டா. நீ நல்லா வாழ்ந்தா எங்களுக்கு அதுவே நிம்மதி டா. உங்க அப்பா, அம்மா மனசு கோணாமா நடந்துக்கோ. அதுவே போதும்!” என கூறிய சாந்தியிடம் புரிதலாய் தலையை அசைத்த நிவி, யுகியை காண விரைந்தாள்.
இவர்கள் மூன்று பேர் சம்மதம் கொடுத்து விட்டாலும் யுகி என்பவன் அவள் வாழ்வில் இன்றியமையாத ஒருவன். உள்ளே நிவி நுழைய, குளித்து முடித்து தலையை துவட்டிக் கொண்டிருந்தான் யுகி. இவளைப் பார்த்தும் கேள்வியாக ஆடவன் நெற்றியை சுருக்க, அடிப்பட்ட குழந்தை தாயை கண்டதும் அழ தயாராகும் நிலையில் முகத்தை வைத்திருந்தாள் நிவி.
அவன் முன்னே சென்றவள், கைகள் இரண்டையும் காதில் பொறுத்திக் கொண்டு பாவமாக பார்க்க, அதிலே கொஞ்சம் நஞ்சமாய் ஓரமாக ஒட்டிக் கிடந்த கோபம் கூட தூர சென்று விட, அவளை பார்த்து கைகளை நீட்டினான் யுகி. அதில் ஓடிச்சென்று அவன் தோள்களை ஆதரவாக பற்றிக் கொண்டவளின் விழிகள் மட்டுமல்ல நெஞ்சமும் நனைந்தது.
“மாமா!” என நிவி எதோ கூற வரும் முன் அவள் உதட்டில் விரலை வைத்தவன், ‘வேண்டாம்’ என தலையை அசைத்தான்.
அமைதியாக அவன் முகத்தை நிவி பார்க்க, “ஏன் இவ்வளோ அழுகை? சாப்டியா இல்லையா நீ? ரெண்டு நாளைக்கு முன்னாடி பார்த்ததை விட மெலிஞ்சு போய் இருக்கடி!” என அக்கறையாக வினவினான்.
“எல்லாம் உன்னால தான் மாமா!” என கண்களில் நீருடன் அவனை முறைத்தாள் நிவி.
“ப்ம்ச்… நான் என்னடி பண்ணேன்?”
“நீ எதுவுமே பண்ணலை. ஏன் நான் கால் பண்ணா சரியா பேசலை. கோபமா இருந்த? ரெண்டு நாள் எனக்கு நரகமா போச்சு மாமா. நீ இப்படி பண்ணலாமா? நீ தான் என் வாழ்க்கைல ஃபர்ஸ்ட். இனிமே என்கிட்டே பேசாம இருக்காத. என்னால அதை தாங்கிக்க முடியலை!” என வெடித்து அழுதாள் பெண். பெற்றவர்களிடம் கூட கூற முடியாத உணர்வுகள் எல்லா வெடித்து சிதறியது ஆடவன் முன்பு.
“ஏன் டி?” என அவள் முகத்தை யுகி நிமிர்த்த, கைகளால் முகத்தை மூடிக் கொண்டே விசும்பியவளை அணைத்துக் கொண்டவன், முதுகில் ஆதுரமாக தடவினான்.
“நிவி மா, என்ன டா? ஏன் இப்படி அழற? உன்னோட விருப்பத்தை மீறி நான் எதுவும் செஞ்சு இருக்கேனா? எல்லா விஷயத்துலயும் உடனே ஓகே சொல்லிடுவேன். பட், இந்த விஷயத்துல அப்படி எடுத்தோம் கவிழ்த்தோம்னு செய்ய முடியாதே! முதல்ல அத்தை மாமா கிட்ட பேசி, அப்புறம் அவங்க அம்மா, அப்பா கிட்ட பேசி, அந்த பையனை பத்தி விசாரிச்சுன்னு ரெண்டு நாள் அதுலயே போய்டுச்சு டா. அதான் உன்கிட்ட கூட சரியா பேச முடியலை. என் நிவி மேல நான் கோபப்படுவேனா?” என கனிவாக கூறியவனின் சட்டையில் தன் கண்ணீரை துடைத்தவள், அவன் நேசத்தில் புரிதலில் மொத்தமாய் நெகிழ்ந்திருந்தாள். தன்னை இந்தளவு புரிந்து வைத்திருக்கும் உறவுகள் கிடைப்பது எல்லாம் எத்தனை அரிது. அதிலும் நிவி சற்று அதிகமாக அதிர்ஷடசாலியாகி நினைத்துக் கொண்டாள்.
ஆனால் கொஞ்சம் ஆயசமாக இருந்தது மாதுவுக்கு. திருமணத்திற்கு சம்மதம் வாங்கவே இத்தனை போராட வேண்டி இருக்கிறதே! சாந்திக்கு உண்மை தெரிய வந்தால்? வீரபாண்டிக்கு தெரிந்தால்? அதை விட ஆனந்திக்கு தெரிய வந்தால்? சந்த்ருவை எப்படி சமாளிப்பது? யுகி? யுகி! அவனுக்கான உரிமை போராட்டம் இது. எப்படி இத்தனை பேரை எதிர் கொள்வது. இந்த திருமணம் நல்லபடியாக நடைபெறுமா?
முதலில் எது வந்தாலும் பார்த்துக் கொள்ளலாம் என மனதில் உறுதி பூண்டாள். பேசி புரிய வைக்கலாம். சாந்திக்கும் யுகிக்கும் இழைக்கப்பட்ட அநீதிக்கு கண்டிப்பான முறையில் நியாயம் கிடைக்க வேண்டும்.
சந்தருவுடனான தன் காதல் வாழ்க்கை நன்றாக அமைய வேண்டும். இரண்டு குடும்பங்களையும் ஒன்றாய் இணைக்க வேண்டும். பெரிய பெரிய பொறுப்புகள் எல்லாம் வரிசை கட்டி தன் முன்னே நிற்க, எல்லாவற்றையும் யார் மனதையும் புண்படுத்தாமல், யாரையும் காயப்படுத்தாமல் செய்து முடிக்க வேண்டும் என எண்ணிக் கொண்டாள் பாவை.
***
நடப்பதை ஜீரணிக்க முடியாது கொதித்துக் கொண்டிருந்தார் கோகிலா. அவர் வீட்டு பெரியாட்களை கூட்டி வந்ததோ ஒன்றை நினைத்து. ஆனால், நடந்து கொண்டிருந்ததோ வேறு.
எல்லாரையும் அழைத்து வந்து பஞ்சாயத்து வைத்து வித்யாவை சந்த்ருவுக்கு மணம் முடித்து வைக்க அவர் போராட, வந்தவர்கள் அனைவரிடமும் பாசப்பயிரை வளர்த்த அழகர்சாமி, “சித்தப்பா… உங்களுக்கு தெரியாதது ஒன்னும் இல்லை. நம்ம காலம் மாதிரி இல்லை புள்ளைங்க. நம்ம பேச்சை மீறி போறாங்க. ஆனால், சந்த்ரு அப்படி எதுவும் பண்ணலை. என்கிட்ட தான் வந்து சொன்னான் ஒரு பொண்ணை விரும்புறேன்னு. ஒத்த புள்ளை பெத்து வச்சுருக்கேன் நான். அவனோட விருப்பத்தை மதிச்சு அந்த பொண்ணவே கல்யாணம் பண்ணி வைக்கலாம்னு முடிவெடுத்து இருக்கேன். நீங்க எல்லாம் நம்ம குடும்பத்துல பெரியவங்க. வந்து என் பையன் கல்யாணத்தை நல்ல படியாக நடத்தி கொடுங்க!” என்று பாசமாக பேசி விட, வந்த பலரும் அழகர்சாமி பேச்சில் அவர் புறம் சாய்ந்து விட்டனர்.
மீதம் இருந்தவர்களை, “மாமா, என் மாமனார் போனதுக்குப் பிறகு நீங்க தான் இந்த வீட்டுக்கு பெரியவங்க. என் பையன் கல்யாணத்தை சீறும் சிறப்புமா உங்க முன்னிலைல நடத்திக் கொடுங்க!” என்றவர், “சங்கர் சித்தப்பா… நீங்க சொல்லுங்க. சின்ன மாமா, நீங்களும் சொல்லுங்க. நான் சொல்றது சரி தானே? உங்களோட ஆசிர்வாதம் எல்லாம் என் பையனுக்கு கண்டிப்பா வேணும்!” என்ற ஆனந்தியின் பேச்சில் அனைவரும் மகிழந்து போக,
“எல்லாரும் முதல்ல வந்து சாப்டுங்க. காலைலயும் சாப்ட்டு இருக்க மாட்டீங்க!” என கூடத்தில் இலையை விரித்து வந்தவர்களுக்கு விருந்தை பரிமாறி விட்டார்.
“சித்தப்பா, உங்களுக்கு பாயசம் பிடிக்கும் தானே? சித்தி சொல்லுவாங்க!” என சங்கர் இலையில் ஆனந்தி பாயசத்தை பாசத்துடன் ஊற்ற, “போதும்த்தா, அப்படியே உங்க அம்மா மாதிரி பாசக்கார புள்ளை நீயு!” என அவர் கண்களை கசக்க, இந்த காட்சியைப் பார்த்து தான் கோகிலா கொதித்துக் கொண்டிருந்தார்.
“அண்ணி, அண்ணா நீங்களும் வந்து சாப்டுங்க. வித்யா, விஜய் என்ன பார்த்துட்டு இருக்கீங்க? வந்து உட்கார்ங்க!” என சிறியவர்களை அதட்டி ஆனந்தி உணவுன்ன வைக்க, பெரியவர்கள் இருவரும் அசையவில்லை. சந்த்ரு நடப்பவற்றை எல்லாம் அழகர்சாமியுடன் அமர்ந்து பார்த்துக் கொண்டிருந்தான். எல்லாம் நல்லபடியாக முடிந்ததில் அவனுக்கு பெரும் ஆசுவாசமாக இருந்தது.
வந்திருந்த அனைவரும் உண்டுவிட்டு விடைபெற, எஞ்சியிருந்தவர்கள் வித்யாவின் பெற்றவர்கள் மட்டுமே.
கோபமாக அமர்ந்திருந்த கோகிலாவை பார்த்த அழகர், “அக்கா, உன் கோபம் நியாயமில்லாதது. நான் முன்னாடியே சொல்லிருந்தேன். என் பையன் விருப்பம் தான் எனக்கு முக்கியம். அவன் பெரியவனாகி உன் பொண்ணை கல்யாணம் பண்ண சம்மதிச்சா, சந்தோஷமா வித்யாவை எங்க வீட்டு மருமகளா ஏத்துக்குறோம்னு. ஆனால், இப்போ அது இல்லைன்னு ஆகிடுச்சு. தேவையில்லாம நீ கற்பனையை வளர்த்துக்கிட்ட. நடந்ததை எல்லாத்தையும் மறந்துட்டு என் பையன் கல்யாணத்துக்கு அத்தை முறைல எல்லாத்தையும் முன்ன நின்னு செய்வேன்னு நம்புறேன். என் உறவு உனக்கு கடைசி வரை வேணும், என் மேல உண்மையான அக்கறை இருந்துச்சுன்னா, கல்யாணத்துல நீயும் மாமாவும் உங்க கடமையை செய்யணும்!” என்று அழகர் தன் பேச்சில் நின்று விட, கோகிலா கோபமாக செல்ல, அவர் பின்னே வாஞ்சிநாதன் சென்று விட்டார்.
“அத்தை, நீங்க வேற லெவல். நான் ஒரு பூகம்பத்தை எதிர்பார்த்ததேன். ம்க்கூம்… பட் ஒரு பூ காம்பு கூட விழலையே! செம்ம போங்க!” என ஆனந்தி கன்னத்தை கிள்ளிவிட்டு வித்யா ஓட, விஜயும் சென்று விட்டான்.
என்ன தான் கோகிலா கோபமாக சென்றாலும், திருமணத்திற்கு வந்து விடுவார் என அழகர் நம்ப, அதையே அவரும் மெய்பித்தார்.
கல்யாண வேலைகள் எல்லாம் துரித கதியில் நடந்தது. ஒரு மாதத்தில் திருமணம் வைத்துக் கொள்ளலாம் என இரு வீட்டு பெரியவர்களால் முடிவு செய்யப்பட, ஆனந்தியின் விருப்பத்தின் பேரில் நலங்கும் நிச்சயமும் திருமணத்திற்கு முதல் நாள் மண்டபத்திலே வைத்துக் கொள்ளலாம் என தீர்மானத்தினர்.
பத்திரிகை அடிப்பது, உடைகள் எடுப்பது என கலகலப்பாக எல்லாம் நடைபெற, நிவி அத்தனை மகிழ்வாக எல்லாவற்றிலும் கலந்து கொண்டாள். நிவியின் சார்பில் அனைத்தையும் யுகி தான் முன்னின்று செய்து கொண்டிருந்தான்.
வீரபாண்டி எள் என்னும் முன் எண்ணெயாக அவர் கட்டளை இட்ட வேலைகளை செய்து முடித்தான் யுகி. சாந்தி தன்னால் இயன்ற சிறு சிறு உதவிகளை செய்தார். ஆனால், பள்ளியில் குழந்தைகளுக்கு பொது தேர்வு நடைபெறுவதால் அவரால் முழு கவனத்தையும் இங்கே செலுத்த முடியாமல் போனது. முடிந்தளவு தன்னுடைய கடமையை சரிவர செய்து கொண்டிருந்தார்.
ஆனந்தியும் அழகர்சாமியும் தங்கள் ஒரே மகன் திருமணம் என ஒவ்வொன்றும் பார்த்து பார்த்து செய்தனர். பெரிய திருமண மண்டபம், சிறந்த சமையல் கலைஞர்கள் என எல்லாவற்றிலும் கவனமாக தேர்வு செய்தனர். அதே போல பாதி கல்யாண செலவு தங்களுடையது என மண்டபம் மற்றும் உணவுக்கான செலவை ஆனந்தியை வற்புறுத்தி வீரபாண்டி தானே செய்தார். அவர்களுக்கு அதிக செலவு வைக்க கூடாது என சிலவற்றை எண்ணி பார்த்து தான் செய்தார் ஆனந்தி. அதிலே பெண்ணை பெற்றவர்களுக்கு மனம் நிறைந்து விட்டது. சென்னையின் ஒரு பிரபல மண்டபத்தை தேர்வு செய்து, திருமணத்தை முடிவு செய்தனர்.
அதோ இதோ என ஆயிரம் தடைகளை எல்லாம் கடந்து திருமண நாளும் விடிய, சந்த்ரு புன்னகையுடன் நிவி கழுத்தில் மங்கள நாணை அணிவித்து தன்னில் பாதியாக ஏற்றுக் கொண்டான். ஆனால், நிவி தான் முகத்தை தூக்கி வைத்திருந்தாள்.
அவள் முகத்தைப் பார்த்த யுகி, “ஸ்மைல் ப்ளீஸ்!” என கூறி மணமக்களை தன் அலைபேசியில் புகைப்படம் எடுத்துக் கொண்டான்.
பெரியவர்கள் ஆசிர்வாதம் செய்ய, அடுத்ததாக நிவி யுகி காலில் விழ, சந்த்ரு அப்படியே நின்றான். அதற்குள் பதறிய யுகி, “ஏய் நிவி! என்னடி பண்ற?” என அவளை தூக்கியவன், “ரெண்டு பேரும் சந்தோஷமா இருங்க!” என வாழ்த்தினான். அடுத்தடுத்த சடங்குகள் எல்லாம் நடைபெற்று மணமக்கள் வீட்டிற்கு அழைத்து
செல்லப்பட்டனர். எல்லாம் சரியாக இருந்த போதும் சாந்தி வராமல் போனது நிவிக்கு குறையாக இருந்தது.