மறுநாள் அதிகாலையிலேயே விமான நிலையம் சென்று விட்டார்கள் தேவனும், ரஞ்சனியும். இருவர் முகத்திலும் உறக்கம் கலையாமல் உறங்கிக் கிடந்தது.
“சென்னை போனதும் நேரா ஹாஸ்பிடல் போகணும். ஏர்போர்ட்டுக்கு பசுபதி அண்ணாவை கார் எடுத்துட்டு வரச் சொல்லி இருக்கீங்க தானே?” என்று அவள் கேட்க, தேவனின் பார்வை வேறெங்கோ நிலைத்திருந்தது.
“நீங்க சொல்லலையா? சரி, நான் புவனாக்காக்கு கால் பண்ணி சொல்லிடுறேன். இந்நேரம் அவங்க எழுந்திருச்சுருப்பாங்க தானே?” என்று கணவனிடம் கேட்டவள், கடைசி கேள்வியை தனக்குத் தானே கேட்டுக் கொண்டு அலைபேசியை கையில் எடுத்தாள்.
அவளின் கையை இறுக பிடித்தான் தேவன்.
“என்ன? கையை விடுங்க?” என்று எரிச்சலுடன் கணவனின் முகத்தை பார்த்தாள். இப்போது அவன் பார்வையின் பாதையை பாவையின் பார்வையும் தொடர, அங்கே நான்கு வெள்ளைக் கரை வேட்டிகள் நின்றிருந்தன.
“யார் அவங்க?” அவள் கேட்க, “தெரியல” என்ற தேவனுக்கு பதில் தெரிந்திருந்தது போலிருந்தது.
“நீ வா” என்று மனைவியை அழைத்துக் கொண்டு முன்னே நடந்தான் தேவன். மிகச் சிறிய விமான நிலையம் அது. அங்கே சட்டென ஒரு பரபரப்பு தொற்றிக் கொள்ள, ஆங்காங்கே அமர்ந்திருந்த மக்களின் கண்கள் திரும்பி யாரையோ தொட்டு மீண்டது. அனிச்சையாய் அவர்களின் பார்வையும் திரும்ப, கர்ணா வந்து கொண்டிருந்தான். அவனைப் பார்த்ததும் பதுங்கியது அந்த நான்கு கரை வேட்டிகளும், அதையும் பதிந்துக் கொண்டது தேவனின் பார்வை.
கர்ணா முன்னே வர, அவன் பின்னால் அவனது பாதுகாவலர்களும், சில கட்சி ஆட்களும் வந்து கொண்டிருந்தனர்.
அவர்களைப் பார்த்ததும் கையசைத்து புன்னகைத்தான் கர்ணா. தேவனிடம் அசைவேயில்லை. கர்ணா அவர்கள் பக்கத்தில் அமர்ந்தான். ஆனால், பேசவில்லை.
அப்பா, அண்ணாவிடம் இருந்து தப்பி அரசியல் சுழலுக்குள் சிக்கிவிட்டோமா என்ற கேள்வியை சிவரஞ்சனியால் தவிர்க்க முடியவில்லை.
அவள் எழுந்து ஓய்வறை சென்று வர, அவளைப் பார்த்ததும் சட்டென இடம் மாறி அமர்ந்தார்கள்.
முரளிதரன் முதல் வரிசையிலும், கர்ணா மூன்றாம் வரிசையிலும் அமர்ந்திருக்க, நடுவில் இருந்த இருக்கையில் தன்னோடு அமரும்படி தேவன் மனைவிக்கு கண் காட்டினான்.
“ஏன்?” என்று கண்களால் வினவியவள், விருப்பம் இல்லையென்றாலும் கணவன் சொன்னதை செய்தாள்.
அரசியல்வாதி பொதுவெளியில் அதிகம் பேச முடியாது. அதிலும் சொந்த விஷயம் முடியவே முடியாது. ஆகையால், கர்ணா தடுமாறினான். தேவனுக்கு அவன் நிலைப் புரிந்ததால், “சொல்லுங்க கர்ணா” என்று நேரடியாக பேச்சை ஆரம்பித்தான்.
தேவனையும், சிவரஞ்சனியையும் ஒரு கணம் ஆழ்ந்துப் பார்த்த கர்ணா, “எங்கப்பா உங்களை எதுவும் பண்ண மாட்டார். பண்ண விட மாட்டேன் நான். அவரோட சுண்டு விரல் கூட உங்க மேல படாம பார்த்துக்க வேண்டியது என் பொறுப்பு. பிளீஸ் டிரஸ்ட் மீ. இப்படியாகும்னு நான் சத்தியமா எதிர்பார்க்கல. அவர்…” என்றவனின் பேச்சு அப்படியே நின்று போனது.
“சாரி” என்று முணுமுணுத்தான்.
“நீங்க ஆல்ரெடி முரளியை மீட் பண்ணிட்டீங்க. கொஞ்ச நாளைக்கு அவன் உங்களோடவே இருப்பான். பிளீஸ் வேணாம்னு சொல்லாதீங்க.” என்று கர்ணா சொல்ல, தேவன் சரியென்றும் சொல்லவில்லை. மறுக்கவும் இல்லை.
“இப்போதைக்கு என்னால இதைத்தான் செய்ய முடியும். முரளி உங்களை கண்டிப்பா பத்திரமா பார்த்துக்குவான்.” என்றவனின் பார்வை முரளிக்கு பக்கத்தில் இருந்தவனை தொட்டது.
“தேவன்” என்றழைத்து, “மீட் மை ப்ரெண்ட் திருமூர்த்தி. அவன் க்ரைஸிஸ் ஹாண்டிலர் (Crisis Handler)” என்றான்.
“என்ன ஹாண்டிலர்?” என்று புரியாமல் வினவினாள் சிவரஞ்சனி. அவள் முகம் சுருக்கிய விதத்தில் தேவனின் உதடுகள் புன்னகையில் பிரிந்தது.
“க்ரைஸிஸ் மேனேஜர் கேள்விபட்டதில்ல?” தேவன் கேட்க,
“பிஆரா (PR – public relations manager)?” என்று கேட்டாள் அவள். பிரபலங்களின் சமூக வலைத்தள பக்கங்களை கையாள்வது, அவர்களுக்காக விளம்பரங்கள் செய்வது, அவர்கள் சார்பில் பேசுவது, பிரபலங்கள் என்ன பேச வேண்டும் என்பது வரை அவர்களுக்காக முடிவெடுப்பது பிஆர் டீம் என்பது அவளுக்குத் தெரியும்.
“கிட்டத்தட்ட அது போலதான்” என்று அவளுக்கான பதிலைச் சொன்னான் திருமூர்த்தி.
“பிரபலங்களுக்கு பிராப்ளம் வந்தா சால்வ் பண்ண வேண்டியது சாரோட வேலை” என்று நண்பனை குறித்து நக்கலாக சொன்னான் முரளிதரன்.
திருமூர்த்தி, முரளியை முறைத்து விட்டு தேவனுக்கு, “ஹாய்” என்று கை நீட்டினான்.
“கர்ணா பிளீஸ், தப்பா எடுத்துக்க வேண்டாம். சிவரஞ்சனியை என்னால பார்த்துக்க முடியும். அப்பாவும், நானும் ஏற்கனவே அதுக்கான ஆள்களை ஏற்பாடு பண்ணிட்டோம்” என்று தேவன் சொல்ல, “இல்ல தேவன். நான் உங்களை ஃபோர்ஸ் பண்ண விரும்பல. ஆனா, உங்க ஆட்களை மட்டுமில்ல, யாரையுமே நம்ப முடியாத சிட்டுவேஷன்ல நாம இருக்கோம். மூர்த்தியை நீங்க நம்பலாம். ஐ பிராமிஸ் யூ” என்றான் கர்ணா.
“ஜெயதேவன், நீங்க பிரபல பின்னணி பாடகன், இல்லையா?” திருமூர்த்தி கேட்க, அனைவரின் பார்வையும் அவன் மேல் குவிந்தது.
சிவரஞ்சனி தன்னை ஒருநாளும் பிரபலத்தின் மனைவியாக பார்த்ததேயில்லை. தேவன் எதற்கும் பெரிதாக அலட்டிக் கொண்டது கிடையாது. எப்போதும் சாதாரணமாக தான் இருப்பான் அவன். ஆக, அவளும் அதை பெரிதாக பார்த்ததில்லை.
சமீபமாக பிரபல இயக்குநர் ஒருவரின் மகளின் திருமணத்திற்கு சென்று வந்தார்கள். ஒரு விருது வழங்கும் விழாவிற்கு தம்பதிகளாக சென்றார்கள். பத்திரிக்கையில் அவர்களின் புகைப்படம் கூட வெளிவந்தது. ஆனாலும், அவர்களது இயல்பு வாழ்க்கைதான்.
வீடு, மருத்துவமனை, தேவன் என்ற வட்டத்தில் வாழ்ந்திருந்தாள் அவள்.
“என்ன சொல்ல வர்றீங்க?” தேவன் கோபமாக கேட்க, “உங்களுக்கு பதில் தெரியும் தேவன். உங்க ஒய்ஃப்க்கும் நான் சொல்ல வந்தது புரிஞ்சுடுச்சு” என்றான் திருமூர்த்தி.
தேவனின் மனைவியாக சிவரஞ்சனிக்கு எதுவும் நேர்ந்தால் மிகப் பெரிய செய்தியாகும், பேசு பொருளாகும் என்ற நிதர்சனம் கொஞ்சம் கொஞ்சமாக தேவன் மனதில் பதிந்தது. அதைத்தான் செய்ய முயல்கிறார் பழனிவேல் என்பதும் தெள்ளத் தெளிவாக அவனுக்கு விளங்கியது.
“கொஞ்ச நாளைக்கு மூர்த்தி சொல்றதை செய்ங்க. அவன் பிரச்சனையை தீர்க்க நமக்கு ஹெல்ப் பண்ணுவான்” என்று கர்ணா சொல்ல, ‘என் பிரச்சனையை என்னால தீர்த்துக்க முடியும்’ என்று தொண்டை வரை வந்த வார்த்தைகளை அப்படியே விழுங்கினாள் சிவரஞ்சனி. தேவனின் முகத்தை பார்த்தாள், அவனுக்குமே அதில் உடன்பாடில்லை என்பது அப்பட்டமாக தெரிந்தது.
அவர்களுக்கு விமானத்தில் கடைசி பகுதியில் இருக்கைகள் ஒதுக்கப்பட்டிருந்தது. கர்ணாவும் அங்கு தான் இருந்தான்.
தேவனின் தோள் சாய்ந்து உறங்கி விட்டாள் சிவரஞ்சனி. அவர்கள் சென்னை வந்திறங்கியதும் யார் கவனத்தையும் கவராத வகையில் சிறிய இடைவெளி விட்டு அவர்களைப் பின் தொடர்ந்தார்கள் முரளிதரனும், திருமூர்த்தியும்.
தேவனிடம் இயல்பாக பேசுவது போல, அவனது கையெழுத்தை வாங்குவது போல பாவனை காண்பித்த திருமூர்த்தி, “கர்ணா வெளில போனதும் திரும்பி உங்களுக்கு பை சொல்லுவார். ஜஸ்ட் ஸ்மைல் அண்ட் சே பை டு ஹிம்” என்று சிவரஞ்சனியிடம் சொன்னான்.
“ஆர்டர் போட்டா அடமா அதை செய்ய மாட்டாங்க டாக்டர் மேடம்” குறுநகையுடன் மனைவியைப் பற்றிச் சொன்னான் தேவன்.
அவளை நோக்கி, “பிளீஸ்” என்றான் திருமூர்த்தி. அது வேலை செய்தது.
சிவரஞ்சனி முகத்தை திருப்ப, கர்ணா வாயிலில் இருந்து கையசைத்தான். மனைவியை முந்திக் கொண்டு தேவன் அவனுக்கு கையசைத்தான். வேறு வழியின்றி உதட்டை இழுத்து பிடித்து சிரிப்பதாக பாவனை செய்து, கையசைத்தாள் அவள்.
அவர்கள் வெளியே வர, “உங்க கார் வேணாம். அங்க வெயிட் பண்ணிட்டு இருக்க ஃபார்ச்சுனர்ல ஏறுங்க” என்ற திருமூர்த்தி, இம்முறை மறக்காமல், “பிளீஸ்” என்று சேர்த்து சொன்னான்.
அந்த சூழலை மனதார வெறுத்தான் ஜெயதேவன். மனைவியின் பாதுகாப்பு மட்டுமே அவனுக்கு முக்கியமாகப்பட அமைதியாய் உடன்பட்டான்.
அவர்கள் காரில் ஏறுகையில் கர்ணா பத்திரிக்கை, தொலைக்காட்சிகளுக்கு பதில் சொல்லிக் கொண்டிருப்பது பார்வையில் விழுந்தது.
“பிளடி பாலிடிக்ஸ்” என்று பல்லைக் கடித்தான் தேவன்.
அவர்கள் வீடு வரவும், விலகி செல்வார்கள் என்று நினைத்த முரளிதரனும், திருமூர்த்தியும் அங்கேயே நிற்க, அவர்களை உள்ளே அழைத்தான் தேவன்.
அவர்களை உபசரித்த சிவரஞ்சனி, அவசரமாக மருத்துவமனைக்கு கிளம்பினாள்.
“டாக்டர் உங்களோட நானும் ஹாஸ்பிட்டலுக்கு வர்றேன்” என்று முன்னே வந்தான் முரளிதரன். அவளை மருத்துவமனையில் விட கார் சாவியை எடுத்து நின்றிருந்த தேவன், அவனைக் கேள்வியாக பார்த்தான்.
“உங்களை ஃபாலோ பண்றேன்னு சொல்ல வந்தேன். யார் கண்லயும் பட மாட்டேன். உங்களுக்கு இன்பார்ம் பண்றதுக்காக சொல்றேன்” என்றான் முரளிதரன்.
“உங்களுக்கு வேற வேலை இல்லையா சார்?” கடுப்புடன் கேட்டாள் சிவரஞ்சனி.
“பொது மக்களின் பாதுகாப்பு தான் போலீஸின் ஒரே வேலை டாக்டர். ஆனா, அதையும் ஒழுங்கா செய்ய மாட்டாங்க இவங்க” என்று நமுட்டு சிரிப்புடன் நண்பனை வாரினான் திருமூர்த்தி.
சிவரஞ்சனி அவர்களை பார்த்த பார்வையில் தேவனுக்கு சிரிப்பு வந்து தொலைத்தது.
“உங்களுக்கு ஹாஸ்பிட்டலுக்கு நேரமாகுது இல்ல டாக்டர், வாங்க போவோம்.” என்று முரளிதரன் முன்னே நடக்க, “ஒரு நிமிஷம்” என்று அவர்களை நிறுத்தினான் திருமூர்த்தி.
அவன் தொனியே அடுத்து எதையோ அவர்களை செய்ய சொல்லி வற்புறுத்தப் போகிறான் என்பது புரிய, “எனக்கு ஹாஸ்பிட்டலுக்கு நேரமாச்சு” என்றாள் சிவரஞ்சனி.
“நோ ப்ராப்ளம் டாக்டர். அப்போ நான் உங்க ரெண்டு பேர் கிட்டயும் ஈவ்னிங் பேசறேன்” என்றான் அவன் அசராமல்.
“ஈவ்னிங் இவருக்கு ரெக்கார்டிங் இருக்கு.”
“ஓகே. எப்போ தேவன் வீட்டுக்கு வருவீங்க?” என்று தேவனிடம் கேட்டான்.
“நாளைக்கு காலையில..” என்று கணவனுக்கான பதிலையும் தானே சொன்னாள் சிவரஞ்சனி. தேவன் சட்டென சிரித்து விட்டான்.
திருமூர்த்தி கைக் கட்டி இருவரையும் பார்த்து நின்றான்.
“நேத்து நம்மளோட பழனிவேல் ஆட்களும் சென்னை வந்திருக்காங்க.” என்றவன், அவர்களின் எதிர்வினையை எதிர்பார்தது காத்திருக்கவில்லை.
“நீங்க ஒரு ரெண்டு மாசத்துக்கு ஹாஸ்பிடல் போக வேணாம் சிவரஞ்சனி. இன்னைக்கு போய்ட்டு லீவ் சொல்லிட்டு வாங்க” என்றான்.
“என்னது? ரெண்டு மாசம் லீவா? சான்ஸே இல்ல” என்றவள் விறுவிறுவென்று கால் வலியையும் பொருட்படுத்தாமல் வீட்டு வாசலுக்கு நடந்து விட்டாள், தேவனின் குரல் காரில் இசைக்க, அவனோ அமைதியாக காரை செலுத்தினான்.
சிவரஞ்சனி மருத்துவமனை சென்று குழந்தை நல பிரிவில் நுழைந்தது தான் அவளுக்குத் தெரியும். அவள் தளர்ந்து அமர்ந்து நேரம் பார்க்கும் போது மணி மதியம் ஒன்று பத்து என்றது கடிகாரம்.
அப்போது அவளைக் காண வந்த மருத்துவர் தேவராஜன், அவளின் நலம் விசாரித்து விட்டு, “மேங்களூர்ல ஓபன் பண்ணியிருக்க நம்ம ஹாஸ்பிட்டலோட புது பிராஞ்சுக்கு பீடியாட்ரிசன் கிடைக்கல போல. மேனேஜ்மென்ட்ல உங்கள அனுப்பறதா பேச்சு போகுது. நெக்ஸ்ட் வீக் நீங்க அங்க போகுற மாதிரி இருக்கும்.” என்று அவளுக்கு தகவல் தெரிவிக்க, “நானா? என்கிட்ட எதுவுமே கேட்கலையே? சீனியர்ஸ் நீங்களும், பிரகாஷ் டாக்டரும் இருக்கும் போது என்னை ஏன் அனுப்பறாங்க?” என்று குழப்பத்துடன் கேட்டாள் அவள்.
தேவராஜன் பதில் சொல்லும் முன், “உண்மையா நம்ம புது பிராஞ்சுக்கு பீடியாட்ரிசன் தேவைப்படுறாங்களா?” என்று சந்தேகமாக கேட்டாள் அவள்.
அந்நேரம் அவளை மதிய உணவு இடைவெளிக்கு வீட்டுக்கு அழைத்துச் செல்ல வந்தான் தேவன்.