இரண்டு நாட்கள் கழிந்திருந்தது. நிவியும் சந்த்ருவும் மறுவீட்டு விருந்திற்காக திருச்சி வந்திறங்கியிருக்க, யுகி அவர்களை வீட்டிற்கு அழைத்து வந்திருந்தான்.
சந்த்ரு உள்ளே நுழைய, “வாங்க மாப்ளை, வாங்க!” என ஜோதி வரவேற்க, “வாங்க மாப்ளை!” என வீரபாண்டியும் புன்னகையுடன் அழைத்தார்.
நிவி பின்னால் வர, “மாப்ளையை பார்த்தும் மக கூட கண்ணுக்கு தெரியலை பா!” என அங்கலாய்த்துக் கொண்டாள். அதில் சந்த்ருவுக்கு புன்னகை அரும்பியது.
“மாப்ளை, பஸ்ல வந்தது ரொம்ப டயர்டா இருக்கும். நீங்க போய் நிவி ரூம்ல ரெஸ்ட் எடுத்துட்டு குளிச்சுட்டு வாங்க” என ஜோதி கூற, தலையை அசைத்தான் சந்த்ரு.
“நிவி, போ நீயும் மாப்ளை கூட. அவருக்கு என்ன வேணும்னு பார்த்து எடுத்து கொடு!” கட்டளை தொனியில் கூறிய தன் தாயை பார்த்தவள், ‘மாப்ளைன்னு வந்துட்டா மட்டும் கொம்பா முளைக்குது. இந்த மாமியாருங்க தொல்லை தாங்கலை’ என்று விட்டு தனதறைக்குள் நுழைந்தாள்.
சந்த்ரு நிவி அறையை சுற்றி பார்த்துக் கொண்டிருந்தான். அறை முழுவதும் அவளும் யுகியும் எடுத்த புகைப்படங்களே நிரம்பி வழிய, லேசாக பொறாமை எட்டிப் பார்த்தது என்னோவோ உண்மை. ஆனால், அதை வெளியில் காட்டிக் கொள்ளவில்லை ஆடவன். அவன் அறை போல பெரியது இல்லை. சிறிய அறை தான். இருவர் தங்க கூடிய அளவு இருந்தது. அறை சுத்தமாக இருந்தது. கண்டிப்பாக தன் மாமியார் கைவண்ணம் தான் என எண்ணிக் கொண்டான்.
“சொல்லுங்க மாப்ளை, உங்களுக்கு என்ன வேணும்னு இந்த அடிமையை கேட்டுட்டு வர அனுப்புனாங்க என் எஜமானி அம்மா!” என குனிந்து பாவனையாய் கூறிய மனைவியை ரசனையாய் தழுவியது கணவன் விழிகள்.
“சரி, என்ன கேட்டாலும் கிடைக்குமா சேவகியே?” என புருவம் உயர்த்தி பார்த்தவனின் வார்த்தைகளின் விஷமத்தை உணர்ந்தவள், “அடி வாங்கிடுவீங்க. போய் குளிச்சுட்டு வாங்க!” என அவனை அனுப்பியவள், தனக்கு இலகுவான உடை ஒன்றை எடுத்தாள். இருவரும் குளித்து வெளியே வர, சூடான தேநீரை அவர்களுக்கு கொடுத்தார் ஜோதி.
“நிவி, மாப்ளைக்கு டீ புடிக்கும் தானே? காபி போட்டு எடுத்துட்டு வரவா?” என ரகசியமாக காதில் கேட்ட தாயை திரும்பி ஒரு பார்வை பார்த்தவள், ‘இந்நேரம் இவர் டீயை குடிச்சுட்டு டம்பளரை கொடுத்திருக்கணுமே!’ என பெண் எண்ணிய கணம், “டீ ரொம்ப சூப்பர் அத்தை!” என அவரிடம் குவளையை நீட்டினான் சந்த்ரு.
தன் கேள்விக்கான பதில் கிடைத்த திருப்தியில் ஜோதி நடையை கட்ட, பெருமூச்சை வெளியிட்டாள் நிவி.
“ம்மா… என்ன சமைக்கிற?” என நிவி அடுக்களைக்குள் நுழைய, அசைவத்தின் அத்தனையும் வீட்டில் சமைத்து இருந்தார் ஜோதி.
“என்னம்மா இது? ஹோட்டலா நடத்துற?” என கேட்டவள், ஒரு துண்டு இறாலை எடுத்து வாயில் போட்டாள். காரமும் உப்பும் சரியாக அவளின் சுவை மொட்டுகள் அடையாளம் கண்டதில் கொஞ்சம் சுவை நன்றாய் இருந்ததை உணர்ந்தாள்.
“நிவி, மாப்ளை நம்ம வீட்ல மொத மொத சாப்ட்றாரு. அதுவும் இது மறுவீட்டு விருந்து. பேர்லயே விருந்தை வச்சுக்கிட்டு, அதுல குறை எதுவும் வச்சுட கூடாதுன்னு தான் அந்த காலத்துல எல்லாம் எல்லா அசைவத்தையும் சமைப்பாங்க. அதான் இப்பவும் தொடருறோம்” விளக்கம் கொடுத்த ஜோதியின் கைகள் கோழி துண்டுகளை எண்ணெய் சட்டியில் போட்டு பொறித்து எடுத்துக் கொண்டிருந்தன.
“என்னமோ போம்மா!” என்றவள், “நாங்க போய் அத்தையை பார்த்துட்டு வரோம்” என்று சந்த்ருவை அழைத்துக் கொண்டு சாந்தியை காண சென்றாள்.
அவர்கள் உள்ளே நுழைய, “வாங்க பா. உள்ள வாங்க. வா நிவி!” என்ற சாந்தி நாற்காலியிலிருந்து எழ முயல, “அத்தை, பரவாயில்லை. உட்காருங்க” என அவரருகில் விரைந்தாள் நிவி.
“இப்போ எப்படி இருக்கு அத்தை உங்க கால்? டாக்டர் என்ன சொன்னாங்க?” என அவர் காலருகே அமர்ந்து நிவி ஆராய்ச்சி செய்ய, சந்த்ரு அமரவா? நிற்கவா? என தெரியாது கண்களை சுழல விட்டான்.
“உக்காருங்க!” தனக்கு பின்னே கேட்ட குரலில் சந்த்ரு திரும்ப, யுகி அவனுக்கு ஒரு நாற்காலியை இழுத்து வந்து போட்டான் அமருவதற்காக. சந்த்ரு அதில் அமர்ந்தான்.
“ஒன்னும் இல்ல நிவி, இன்னும் ஒரு வாரத்துல கட்டை பிரிச்சுடலாம். அதுக்கு பிறகு ரெண்டு வாரத்துல நடக்கலாம்னு டாக்டர் சொல்லிட்டாங்க. நீ எழுந்து உட்காரு!” என அவளை தன்னருகே அமர்த்திக் கொண்டார் சாந்தி.
சந்த்ரு சாந்தியை தான் பார்த்தான். பெயருக்கு ஏற்ற போல சாந்தமாக இருந்த பெண்மணிக்கு வயது நாற்பத்தைந்திற்கு மேல் இருக்கும் என மனம் கணக்கிட்டது. லேசாக கன்னத்திலும் நெற்றியிலும் சுருக்கங்கள் விழுந்திருந்தன. வெள்ளிக் கம்பியாய் ஆங்காங்கே வெள்ளை முடிகள் வயதை பறைசாற்றிக் கொண்டிருக்க, ஒரு பருத்தியாலான சேலை உடுத்தியிருந்தவரை பார்த்தவுடன் சந்த்ருவுக்கு எதோ உறவு அவருடன் இருப்பது போல தோன்றியது.
“அப்புறம் அத்தை, என்னோட செலக்ஷன் எப்படி? எப்படி இருக்காரு என்ற ஊட்டுக்காரரு? படத்துல காட்ற மாதிரி துரையா இருக்காரா?” என குறும்புடன் கேட்ட நிவியை பார்த்து பெரியவர் சிரிக்க, சந்த்ரு சங்கடமாக பார்த்தான் அவரை. ஆனால், அவன் விழிகள் ஆச்சரியமாக தன் மனைவியையும் தழுவின. சென்னையில் இருக்கும் போதும், தன்னுடன் பழகும் போதும் கூட இவள் அத்தனை பக்குவமாக நடந்து கொண்டாளே! சொந்த வீடென்று வரும் போது அவள் அவளாக இருக்கிறாளோ? என எண்ணினான்.
“வாயா டி, என் பையனுக்கு என்ன குறை? நல்லா அழகா இருக்காரு!” என்ற சாந்தியை பார்த்து சந்த்ரு விழிக்க, “எனக்கு அத்தைன்னா, உங்களுக்கு அம்மா முறை தான் வேணும். அப்படியே கூப்பிடுங்க” நிவி இயல்பாக கூற, ஆனால் சந்த்ருவால் சட்டென அப்படி கூற இயலவில்லை. உடன் படிக்கும் நண்பர்களுடைய தாய் தந்தையை கூட ‘ஆன்டடி’ என்றும் ‘அங்கிள்’ என்றும் தான் அழைப்பான். ‘அம்மா!’ என்று ஆனந்தியை தாண்டி அவன் வேறு யாரையும் அழைத்தது இல்லை. சந்த்ரு தயக்கத்தைப் பார்த்த சாந்தி, “உங்களுக்கு எப்படி வசதியோ, அப்படியே கூப்பிட்டுக்கோங்க பா!” என்று விட, சின்னதாய் தலையை அசைத்தான்.
யுகி அறையில் இருக்க, “மாமா, என்ன பண்ற?” என வினவியவாறே நிவி அவன் அறைக்குள் நுழைந்தாள். இப்போது தனித்து விடப்பட்டது சந்தருவும் சாந்தியும் தான். பொதுவாக சந்த்ரு எல்லாரிடமும் எளிதில் பேச மாட்டான். இப்போது இங்கு வந்தது கூட எதோ தெரியாத ஒரு இடம், புது மனிதர்களை போல தான் உணர்ந்தான். என்ன பேசுவது அவரிடம்? என மனம் கேள்வி கேட்க, அமைதியாக அமர்ந்திருந்தான்.
“பரவாயில்லைங்க. நீங்க வேணும்னு செய்யலையே! தற்செயலா நடந்ததுக்கு யாரையும் குற்றம் சொல்ல முடியாது. இப்போ உங்களுக்கு பெயின் எதுவும் இருக்கா? பரவாயில்லையா?” என கேட்டவனுக்கு இவர் யுகியின் தாய் என மனதிலும் மூளையிலும் பதிந்தாலும், எனோ அவரிடம் முகத்தை திருப்பிக் கொண்டு செல்ல மனம் கொடுக்கவில்லை.
“ரொம்ப நல்லா பேசுறீங்க. எங்க நிவியோட செலக்ஷ்னாச்சே!” என புன்னகைத்தவர், “வலிக்கு டேப்லெட் கொடுத்து இருக்காங்க பா. அதை சாப்ட்டா, சுத்தமா வலி இருக்காது!” என்றார்.
“சரிங்க” என்றவனின் பார்வை வரிசையாய் அடுக்கப்பட்டிருந்த புத்தகத்தில் படிந்து மீள, “நான் ஒரு பிரைவேட் ஸ்கூல்ல டீச்சரா வேலை பார்க்குறேன் பா. அதான் இவ்ளோ புக்ஸ்” என சாந்தி விளக்கம் கொடுத்தார். தலையை அசைத்தான் சந்த்ரு.
“அட! நீங்க வந்து இவ்வளோ நேரம் ஆச்சு. உங்களுக்கு காபி கூட கொடுக்கலை!” என எதோ யோசனையில் சாந்தி எழுந்து விட, கால் வலியில் கீழே விழ சென்றவரை, “ஐயோ அம்மா! பார்த்து!” என பதறி பிடித்திருந்தான் சந்த்ரு. சாந்தியின் மொத்த பாரமும் அவன் மீதிருக்க, விழாமல் கீழே விழுந்ததில் அவருக்கு லேசாக மூச்சு வாங்க, அவரை அமர வைத்து விட்டு ஓடிச்சென்று தண்ணீரை எடுத்து வந்து புகட்டினான். உள்ளே இருந்த இருவருக்கும் அது கேட்கவே இல்லை.
தன்னை ஆசுவாசம் செய்துக் கொண்ட சாந்தி, “சாரி பா. எதோ ஓர் ஆர்வத்துல எழுந்துட்டேன்!” என சங்கடப்பட, அந்த பெரியவரின் முகத்தைப் பார்த்து ஆனந்தி நினைவு வந்தது சந்த்ருவுக்கு. அதில் இதழ்கள் மலர, “என்னோட அம்மாவும் உங்களை மாதிரி தான் ம்மா. நான் மட்டும் தான் அவங்க உலகம். உங்களை பார்த்தா, அம்மா ஃபீல் வருது சாந்திம்மா!” என கூறியவனின் குரலில் துளியும் பொய்யில்லை.
என்ன சொல்வது என தெரியாமல் சாந்தி புன்னகைத்தவர், “உங்களுக்கு எதுவும் எழுந்து செஞ்சு கூட கொடுக்க முடியலை பா” என மனம் வருந்தினார்.
“இதுல என்ன சாந்திமா இருக்கு. உங்களுக்கு கால் சரியான பிறகு நானும் நிவியும் வரோம். உங்க கையால சமைச்சுப் போடுங்க. சாப்பிட்றோம்!” சிரிப்புடன் கூறிய சந்த்ருவை சாந்திக்கும் பிடித்துப் போனது. சிறிது நேரம் இருவரும் பேச, “சாந்திமா, நீங்க என்னை நீ வா போன்னு கூப்டுங்க. உங்க பையனை விட நான் சின்னவன்!” என கட்டாயப்படுத்தி பேர் சொல்லி அழைக்க வைத்திருந்தான்.
நிவி யுகியின் அறையிலிருந்து வெளியே வந்து இவர்கள் இருவரும் பேசுவதை ஆச்சரியமாக பார்த்தாள். சந்த்ரு அப்படியொன்றும் எல்லோரிடமும் ஒட்டிக் கொள்ளும் ரகமில்லை அவளறிந்த வரை.
“சரி… அம்மா போன் பண்ணிட்டாங்க. சாப்பிட போகலாமா?” நிவி வினவ, “நான் போய்ட்டு சாப்ட்டு வரேன் சாந்திமா” என சந்தரு அவளுடன் வந்தான்.
“என்ன அத்தை கூட அட்டாச் ஆகிட்டீங்க போல?” புருவத்தை உயர்த்தி பெண் வினவ, “ஆமா! என் அம்மா போல பீல் ஆச்சு!” என அவன் பதிலளித்த போது லேசாக ஆனந்தியையும் சாந்தியையும் பெண் மனம் ஒப்பிட்டுப் பார்த்தது. இருவருமே குணத்தில் ஒன்று. ஒரு குறை கூறிட முடியாது.
“ஆங்… ஆடு உறவு. குட்டி பகை!” என கூறிவிட்டு அவள் முன்னே செல்ல, “என்னடி உளர்ற?” என்று புரியாமல் விழித்தான் சந்த்ரு.
“மாப்ளை, நேரமாச்சு. சாப்பிடலாம் வாங்க!” என ஜோதி அழைக்க, இருவரும் உணவுண்ண அமர்ந்தனர். அவர்கள் வீட்டில் போல் உணவு மேஜை என தனியாக இல்லாத காரணத்தினால், ஜோதி தரையில் பாயை விரித்து அவர்களை அமர செய்தார். ஆனால், சங்கடமாய் தன் முகத்தை பார்த்த ஜோதியை, “அத்தை, நான் உங்க சாப்பாட்டை சாப்ட ரொம்ப ஆர்வமாக இருக்கேன். நீங்க என்னென்னா என் முகத்தை மட்டும் பார்க்குறீங்க?” என இலகுவாக வினவினான்.
“இதோ சாப்பாட்டை பரிமாறுறேன் மாப்ளை!” என்று உணவை எடுத்து வைத்த ஜோதி, “உங்க வீட்ல போல இங்க மேஜை, சேர் எல்லாம் இல்லை!” என்றார்.
“அத்தை, நான் சாப்பிட போறது சாப்பாட்டை தான். டேபிளையும் சேரையும் இல்லையே?” தோளை குலுக்கியவன், ஜோதி சமையலை ரசித்து ருசித்து உண்ண, நிவிக்கும் மனது நிறைந்து போனது.
“அத்தை, நீங்க சாப்டலையா?” சாப்பாட்டின் ஊடே சந்த்ரு வினவ, “இல்லை மாப்ளை. நானும் அவரும் சேர்ந்து சாப்பிட்டுக்குறோம். நீங்க சாப்டுங்க” என கூறிவிட்டார் ஜோதி. உண்டு முடித்து, மாமியாரை பாராட்டு மழையில் நனைத்து விட்டான் சந்த்ரு. பின்னர் சிறிது நேரம் கழித்து சாந்தியுடன் பேச அவன் சென்று விட, ஆச்சரியமாக பார்த்த நிவி பெற்றவர்களுடன் அமர்ந்து விட்டாள்.
இரண்டு நாட்கள் பட்டென கடந்து விட, சந்தரு பகலில் நேரத்தை அதிகமாக சாந்தியுடன் தான் செலவழித்தான். எதோ அவர்களுக்கு இடையில் சொல்லப்படாத புரிதல் ஒன்று நூழையால் இணைக்கப்பட்டு விட, இருவரும் அதை பிடித்துக் கொண்டனர்.
இருவரும் விடை பெற, சாந்தியிடம் சென்று சில நிமிடங்கள் பேசிவிட்டு வந்த சந்த்ரு, “சாந்தி மா, பத்திரமா இருந்துக்கோங்க. நேரத்துக்கு சாப்ட்டுங்க. கால் சரியானதும் கண்டிப்பா ஒரு நாள் சென்னைக்கு வரணும். நானும் அப்ப அப்ப கால் பண்ணி பேசுறேன்!” என புன்னகையுடன் கூறியே விடை பெற்றான். இரண்டு நாட்களில் இத்தனை பிணைப்பா என நிவியே சற்று வியந்து தான் போனாள். யுகி அவர்களை பேருந்தில் ஏற்றிவிட்டு வந்தான்.
வீட்டிற்கு சென்று இரண்டு நாட்கள் கழித்து தேனிலவுக்கு செல்லலாம் என மனைவியை அழைத்துக் கொண்டு அந்தமான் பறந்து விட்டான் சந்த்ரு. இப்படி எல்லாம் ஊர் சுற்றி பழக்கமில்லாத நிவியும் அந்த பயணத்தையும், அங்கிருக்கும் நாட்களையும் ரசித்தாள். ஒரு வாரம் அந்தமானை சுற்றி தங்களுக்கென ஒரு உலகத்தில் வாழ்ந்தனர் இருவரும்.
தேனிலவு முடிந்து வீட்டிற்கு வந்ததும், இருவரும் தங்களது அலுவலக வேலைக்கும் நுழைந்து கொண்டனர். தினமும் காலை நிவியை வங்கியில் விட்டுவிட்டு தான் அலுவலகம் சென்றான் சந்த்ரு. மீண்டும் அவளை அழைப்பதற்காகவே வேலையை விட்டு வந்தவனை அரட்டி உருட்டி, மகிழுந்தை மட்டும் ஓட்டுநருடன் வரவழைத்து வீட்டிற்கு செல்ல ஆரம்பித்தாள். சந்த்ருவும் சரியென ஒப்புக் கொண்டான்.
தினமும் மாலை வீட்டிற்கு அழைத்து பேசி விடுவாள். யுகிக்கும் மறக்காமல் அழைத்து பேசுபவள், நடப்பவற்றை ஒப்பித்து விடுவாள்.
ஆனந்தி மருமகளை அத்தனை பாசத்துடன் பார்த்துக் கொண்டார். அவர் அன்பில் நிவேதா மகிழ்ந்து போனாள். கட்டுப்பாடுகள் என்பதே இல்லாமல் போனது. ஒரு மாமியாராய் மட்டுமல்ல, தோழியாய் இருந்தார் ஆனந்தி. அழகர்சாமி அமைதியான மனிதர். எப்போதாவது ஓரிரு வார்த்தைகள் அவளிடம் பேசுவார். இப்படிப்பட்ட மனிதர் எப்படி என் அத்தையை ஏமாற்றியிருக்க கூடும் என சில நாட்கள் பெண் எண்ணுவதும் உண்டு. ஆம்! அவரது நடவடிக்கைகளும் அப்படி தான் இருந்தன.
சந்த்ருவுடனான் வாழ்க்கை அத்தனை தித்திதது. மொத்த காதலையும் மனைவிடம் கொட்டி மகிழ்ந்து போனான் ஆடவன். அவ்வப்போது அவளை எங்காவது அழைத்து செல்வான். அவர்கள் பிரதான இடமான கடற்கரை மணலில் இருவரும் ஜோடியாக நடந்துக் கொண்டே காதலித்த போதிருந்த கதைகளை பேசி மகிழ்ந்தனர். வாழ்க்கை கொஞ்சமல்ல அதிகமாகவே இனித்தது பெண்ணுக்கு. திருமணம் முடிந்து ஒரு மாதம் சட்டென பறந்து விட்டதை போல எண்ணினாள்.
ஆனால், அதற்கு பிறகு வர இருக்கும் கசப்பு மருந்தை அவள் சற்றும் எதிர்பார்க்கவில்லை.
அவ்வப்போது அழகரையும் சாந்தியையும் நினைத்து மனதில் வருந்துபவள், எப்படி இவர்களை சந்திக்க வைப்பது என எண்ணிக் கொண்டிருந்தாள். சாந்திக்கு இப்போது கால் ஓரளவுக்கு சரியாகி இருக்க, சந்த்ரு கூட அவரை சென்று பார்த்து விட்டு வர வேண்டும் என அடிக்கடி அவளிடம் சொல்லிக் கொண்டிருந்தான். நிவியும் தக்க சந்தர்பத்தை எதிர்பார்த்து காத்திருந்தாள். அதுவும் விரைவிலே வாய்த்தது.
அது வாரத்தின் விடுமுறை நாள். நிவி எழுந்து குளித்து சாப்பிட்டுவிட்டு, தொலைக்காட்சியில் எதோ ஒரு படத்தை பார்த்துக் கொண்டிருக்க, வித்யா நுழைந்தாள்.
“அட! வா வித்யா. எப்படி இருக்க?” என கேட்டாள் நிவி.
“நான் நல்லா இருக்கேன் அக்கா. நீங்க?” என கேட்டவளின் குரல் மட்டும் சுரத்தை இல்லை.
“ஏன் வித்யா, இப்ப தான் நாங்க உன் கண்ணுக்கு தெரியுறோமா? அப்ப அப்ப வந்துட்டு போனா என்ன?” குறை பட்டுக் கொண்ட ஆனந்தி அவளருகில் அமர்ந்தார்.
“ப்ம்ச்… அத்தை, நீங்க என்ன ரெண்டு புள்ளயவா பெத்து வச்சுருக்கீங்க? ஒன்னே ஒன்னு கண்ணே கண்ணுன்னு சந்த்ரு மாமாவை பெத்துருக்கீங்க. முதல்லயாவது அவரை சைட்டடிக்க வருவேன். இப்போ அவருக்கும் கல்யாணம் ஆகிடுச்சு. நான் யாரை சைட்டடிப்பேன்?” குறும்பாய் சலிக்கும் குரலில் கூறிய வித்யாவின் கன்னத்தை கிள்ளினார் ஆனந்தி.
“ப்ம்ச்... அத்தை வலிக்குது!” என துள்ளினாள். அவர்கள் இருவரையும் சிரிப்புடன் பார்த்துக் கொண்டிருந்த நிவிக்கு அவளுடைய சைட் என்ற வார்த்தையை கேட்டதும் யுகியை அவள் நினைத்துக் கொண்டிருக்கிறாளோ? என தோன்றியது.
“அத்தை, யுகி மாமா வீடியோ கால் பண்றேன்னு சொன்னாரு. நான் போய் பேசிட்டு வரேன்!” என நிவி கூறியதும் வித்யாவின் முகம் மலர்ந்து போனது. அதை கவனித்து உதட்டுக்குள் சிரித்துக் கொண்டே நிவி, தனதறைக்கு செல்ல, “அத்தை, நான் நிவிக்கா ரூம் போறேன்!” என அவள் பின்னே நாய் குட்டி போல நுழைந்தாள்.
கையில் அலைபேசியை எடுத்த நிவி, “ச்சு… இப்ப வேணாம். அப்புறம் பேசிக்கலாம் மாமா கிட்டே. நீ என்கிட்டே பேசலாம்னு ஆசையா வந்திருப்ப வித்யா!” என கூறிய நிவியை, மிட்டாயை பிடுங்கிய குழந்தை போல பார்த்தாள் வித்யா. ஆனால், வாயை திறந்து எதுவும் கேட்கவில்லை.
‘ஐயோ! பாவமா இருக்கே புள்ளையை பார்த்தா. சரி கால் பண்ணுவோம்!’ என நினைத்த நிவி, “வித்யா, மாமாவுக்கு வீடியோ கால் போட்ருக்கேன். நீயும் வரீயா பேச?” என வினவினாள்.
“ம்ப்ச்… தொப்பை வச்ச அங்கிளை எல்லாம் நான் பார்க்க இஷ்டப்படலை!” என்ற வித்யா முகத்தை திருப்பிக் கொள்ள, ‘இதுக்கு ஒன்னும் குறைச்சல் இல்லை!’ என மற்றவள் நொடித்துக் கொண்டாள்.
மறுபுறம் யுகி அழைப்பை ஏற்றான். “மாமா, என்ன பண்ற? எங்க கிளம்பிட்ட?” என கேட்டாள் நிவி.
“இன்னைக்கு கொஞ்சம் வொர்க் இருக்கு. அதான் நிவி. என்ன பண்ற நீ?”
“இதோ வரேன் அத்தை!” என அழைக்காத ஆனந்தியின் குரலுக்கு பதிலளித்த நிவேதா, “மாமா, நீ இவக்கிட்டே பேசிட்டு இரு. நான் வரேன்!” என வித்யாவின் கையில் அலைபேசியை வைத்து விட்டு வெளியேறி விட்டாள்.
நிமிடத்தில் நடந்த நிகழ்வில் வித்யா கண்களை விரிக்க, “என்ன வித்யா? எப்படி இருக்க? வேலை எல்லாம் எப்படி போகுது?” என வினவிய யுகி அலைபேசியை கீழே வைத்து விட்டு தலையை துவட்டினான். திரையில் விழுந்த துளிகள் சில முகத்தில் பட்டதை போல பட்டென விழிகளை திறந்து முடிய வித்யாவிற்கு உடல் சிலிர்த்தது. ஒரு மாதம் கழித்து யுகியை காண்பதால் எதுவும் பேசாமல் அவனை விழிகளில் நிரப்பிக் கொண்டாள் பெண்.
“என்ன நீ, பதில் பேச மாட்ற. உடம்பு எதுவும் சரியில்லையா வித்யா? ஒரு கேள்வி கேட்டா, ரெண்டு பதில் சொல்வீயே!” என குனிந்து தன் கையிலிருந்த கடிகாரத்தை மாட்டிவிட்டு நிமிர்ந்து அவள் முகம் நோக்கிய யுகி கேள்வியாக புருவத்தை உயர்த்தினான். ஒரு நொடி அவன் விழிகளில் தன்னை கலந்து மீட்டவள், ‘இல்லை!’ என்பதாய் தலையை மட்டும் அசைத்தாள்.
“ஓகே!” என இயல்பாக யுகி தோளை குலுக்க, தான் மட்டுமே அவன் அருகாமையின்றி குமைந்து கொண்டிருக்கிறேன். ஆனால், அவனுக்கு தான் நினைவில் கூட இல்லை என்பதை மனம் எடுத்துரைக்க, இது காதலா? ஈர்ப்பா? பிடித்தமா? இல்லை வேறு எதுவும் ஒன்றா?’ என தெரியாமல் அல்லாடியவளின் விழிகளின் ஓரம் ஈரம் கசிந்தது.
‘அட கடவுளே! இது வேற அடிக்கடி என் மனசை காட்டி கொடுக்குது.’ என நினைத்து திரும்பி நின்று கொண்டாள்.
நிவி சரியாய் உள்ளே நுழைய, “அக்கா, நீங்களே பேசுங்க!” என்று விட்டு வெளியேறினாள். சில நிமிடங்கள் பேசிய நிவி, “அத்தைக்கு கால் நல்லாகிடுச்சு இல்ல? நடக்குறாங்களா?” என வினவினாள்.
“ஹ்ம்ம்… உங்களை எல்லாம் பார்த்து ஒரு மாசம் ஆகப்போகுது மாமா. அவரும் அத்தையை பார்க்கணும்னு சொன்னாரு. எனக்கும் அங்க வரலாம்னு தோணுது. ஒரு ரெண்டு நாள் வந்துட்டு போகவா?” ஆசையாக விழிகளை விரித்து வினவும் நிவிக்காக எதையும் செய்யலாம் என நினைத்து விட்டு, “இதை நீ கேட்கணுமா?” என வினவினான்.
“அப்ப ஓகே மாமா!” என குதூகலத்துடன் அழைப்பை துண்டித்து ஆனந்தியிடம் கூற, அவர்களும் உடன் வரவேண்டும் என நிவி அழைத்தாள். இதுவரை ஒரு முறை தான் அழகரும் ஆனந்தியும் வந்திருக்க, இப்போது மருமகள் கேட்க அவர்களால் மறுக்க முடியவில்லை. சந்த்ரு வந்ததும் அவனிடமும் இதை கூற, ஆடவன் சரி என்று விட்டான்.
கோகிலாவிடம் ஆனந்தியை வைத்து பேசிவிட்டு, வித்யாவையும் தங்களுடன் அழைத்துக் கொண்டாள் நிவி. அவளுடைய கலங்கிய விழிகளை கண்டு தான்.
அனைவரும் அமரும் வகையில் ஒரு மகிழுந்தில் அவர்கள் பயணம் துவங்கியது. வித்யா யுகியை பார்க்க போகிறோம் என மகிழ்வுடன் வந்தாள். சந்த்ரு கூட சாந்தியை காணலாம் என வர, நிவிக்கு தான் மனம் படபடவென அடித்துக் கொண்டது. ஆனந்தியையும் அழகரையும் அவள் அழைத்தற்கு காரணமே சாந்தியையும் அழகரையும் சந்திக்க வைப்பதற்காக தான். எத்தனை நாட்கள் இந்த கண்ணாம்பூச்சி ஆட்டம். ஒவ்வொரு நாளும் அவள் எண்ணத்தில் அரித்துக் கொண்டிருந்த விஷயத்தை இன்றே பேசி முடிக்க வேண்டும் என தான் பெண் முடிவெடுத்து, இந்த பயணத்தை ஏற்பாடு செய்தாள். போகும் போது இருக்கும் மனநிலை, வரும் போது அப்படியே இருக்க வேண்டும் என எண்ணிக் கொண்டாள். எதுவும் விபரீதமாக நடந்து விட கூடாது என கடவுளிடம் பிராத்தித்தாள். ஆனால், கடவுள் அவள் வார்த்தைக்கு செவி சாய்க்கவில்லையே!