தன் உயிர் நண்பனுக்கு விபத்து என்று அறிந்து அவசரமாக கிளம்பினார் தியாகராஜன். பதட்டத்தில் அவருக்கு கைகள் எல்லாம் நடுங்கியது. பீரோ லாக்கரை திறந்து கிடைத்த பணத்தை அள்ளி ஒரு ஜிப் வைத்த பைக்குள் அடைத்துக்கொண்டிருந்தார் அவர்.
ஜெயலட்சுமி தனது அன்னை வீட்டுக்கு சின்ன மகன் கார்முகிலனை அழைத்துக்கொண்டு விடுமுறைக்கு சென்றிருந்தார். பொன்னிலவன் கல்லூரி இருப்பதாக சொல்லி உடன் வர மறுத்திருந்தாலும், உண்மையில் அவனுக்கு கார்முகிலனோடு மல்லுக்கட்ட பிடிப்பதில்லை. தங்களால் அன்னைக்கும் டென்ஷன் என்று புரிந்தே அவர் அழைத்த போது மறுத்துவிட்டான்.
பத்தாம் வகுப்பு தேர்வு எழுதி முடித்திருந்த கார்முகிலனை விட, கல்லூரியில் காலடி வைத்திருக்கும் பொன்னிலவனுக்கு விஷயங்களை நுணுக்கமாய் அணுகும் தன்மை மிகுதி.
அதையும் விட, அவனுக்கு தந்தையை தனியாக விட என்றுமே பிடித்தம் இல்லை. அன்னையை விட தந்தை மீது ஒரு துளி பாசம் அதிகம் தான்.
கல்லூரி முடித்து வீட்டுக்கு வந்தவன் தந்தை பரபரப்பாக இருப்பதை கண்டு, “என்ன ப்பா? என்ன ஆச்சு?” என்று வினவ, “வா பொன்னா… வந்துட்டியா? என் பிரண்டு சொல்லுவேன்ல? அவனுக்கு ஆக்சிடென்ட் ஆச்சாம்… ஃபோன் வந்துச்சுடா” என்று சொல்ல,
“யாரு? பழனி மாமா’வா?” என்று கேட்டான் பொன்னிலவன்.
“ஆமா… உடனே கிளம்பனும். எனக்கு விஷயம் கேட்டதுல இருந்து படபடன்னு வருதுடா!” என்றார்.
“கொஞ்சம் உட்காருங்கப்பா” என்றவன், தண்ணீர் கொண்டு வந்து கொடுத்து அவரை ஆசுவாசப்படுத்த, “எங்கப்பா போகணும் இப்ப? காசிப்பாளையமா?” என்று வினவினான். அவனுக்கு தெரிந்த அந்த ‘பழனி மாமா’வின் இருப்பிடம் அதுவாக தான் இருந்தது.
“இல்ல பொன்னா… ஏதோ வேலையா பொண்ணை அழைச்சுக்கிட்டு தாளவாடி கிளம்ப்பிருப்பான் போல… மேல போகையில திருப்பத்துல பைக்க எங்கயோ மோதிட்டானாம். அங்கிருக்க ஆசுபத்திரில இருந்து கூப்பிட்டாங்க, எனக்கு கையும் ஓடல, காலும் ஓடல” என்றார் மட்டுப்பட்ட பதட்டதுடன்.
அந்த பழனி மாமாவை இரண்டொரு முறை பொன்னிலவனும் பார்த்திருக்கிறான் தான். அதைவிட அப்பா சொல்லி அவரை பற்றி நிறைய கேள்வியுற்றிருக்கிறான். அவர் எந்த அளவுக்கு தந்தைக்கு நெருக்கம் என்றும் தெரியும் என்பதால் நேரம் கடத்தாமல், தங்களின் மாருதி 800யை எடுத்துக்கொண்டு கிளம்பினான்.
வண்டியை கவனமாய் ஓட்டினாலும், தந்தையிடம் பேச்சுக்கொடுத்துக்கொண்டு தான் வந்தான்.
“எப்படி ப்பா உங்களுக்கு கூப்பிட்டாங்க?” அவன் கேட்டிட, “பழனி தான் கூப்பிட சொன்னான்னு சொல்றாங்க” என்றார் அவர்.
“அப்புறம் என்னப்பா? மாமா நல்லா இருக்கனால தானே உங்களை கூப்பிட சொல்லி தெளிவா சொல்லிருக்காங்க?” என்று தேற்றினான். அவனுக்கு தெரியவில்லை, தன் உயிரை கையில் பிடித்துக்கொண்டு இவர்களுக்காக தான் அந்த பழனிச்சாமி காத்திருக்கிறார் என்று!
“அது புரியுதுடா… ஆனாலும் பாவம் அவன். ஒத்த பொம்பளை புள்ளையை வச்சுக்கிட்டு என்ன செய்றானோ? அந்த புள்ளைக்கு எதுவுமான்னும் தெரியல எனக்கு. அவனுக்குன்னு யாருமே இல்ல… பொண்டாட்டியும் போய்ட்டா எப்பவோ” தியாகராஜனின் புலம்பல்களை அதன்பின் நிறுத்தவே முடியவில்லை.
நிறுத்தினாலும் அவர் நிதானத்தில் இருக்கமாட்டார் என்று புரிந்து அமைதியாக அவர் சொன்ன இடத்திற்கு வண்டியை செலுத்தினான் பொன்னிலவன். சத்தியமங்களம் அரசு மருத்துவமனைக்குள் ‘பழனிச்சாமி’ என்ற பெயரை சொல்லி கேட்டதும், “மார்ச்சுவரி போங்க!” என்றனர்.
இடிந்துப்போனார் தியாகராஜன். நெஞ்சுக்குள் சுளீரென ஒரு வலி. தடுமாறிய தந்தையை தாங்கிப்பிடித்த பொன்னிநிலவன், “அப்பா… இருங்க, நான் பாக்குறேன்” என அமர்த்திவைத்துவிட்டு அவர்கள் காட்டிய திக்கில் ஓடினான்.
அங்கே பிணவறை வெளியே தேம்பி தேம்பி அழுதுக்கொண்டு ஆங்காங்கே சில காயங்களுடன் பாவாடை சட்டையில் ஒரு சிறு பெண் நிற்க, தடுமாறியவன், “பாப்பா?” என்றான் அழைப்பாய்.
அவள் நிமிர்ந்து அவனை பார்த்தபோது, உள்ளிருந்து வந்த ஒரு பணியாள், “இங்க பழனிசாமி சொந்தம் யாருப்பா?” என்று கேட்டதும், ஒரு கதறலோடு, “என் அப்பா” என்றாள் அந்த பெண்.
அவளை பார்த்தவரோ, “பெரியவங்க யாரும் இல்லையாம்மா?” என்று கேட்டிட, அவள் தடுமாறி நிற்கும்போதே, “சொல்லுங்க அண்ணே” என்று வந்தான் பொன்னிலவன்.
“நீ யாருப்பா?” அவர் கேட்க, “எனக்கு அவர் மாமா” என்றான். புது சொந்தத்தை மிரட்சியாக பார்த்தாள் பெண். அதன்பின் வேலைகள் வேகவேகமாய் நடந்தது. அந்த வயதில் அவனுக்கு இதெல்லாம் ஒன்றுமே தெரியாது. ஆனால் செய்தான். அந்த ஆதரவற்ற சின்ன முகத்துக்காக செய்தானா இல்லை தன் தந்தையை அலைக்கழிக்க வேண்டாம் என்று எண்ணி செய்தானா தெரியாது.
தெரிந்தவரை செய்தான். தெரியாதாதை கேட்டு செய்தான். அவர்களின் சின்ன வீட்டுக்கு உடலை எடுத்து சென்றவன், உரிய மரியாதை செய்ய, அந்த சிறுமி அழுத அழுகையை காண சகிக்கவில்லை அவனுக்கு. மனசெல்லாம் உருகியது. சொல்லிக்கொள்ளும்படி சொந்தபந்தம் இல்லாததால் அக்கம் பக்கம் சில தொழில் முறை நண்பர்கள் என சில ஆட்கள் மட்டுமே.
தியாகராஜன் ஓய்ந்து தெரிந்தார். அதிலும் அந்த சிறுமியை பார்க்க பார்க்க அவருக்கு அழுகை அதிகமானது.
அன்றே இறுதி காரியங்களை முடித்துவிட்டு அந்த வீட்டுக்குள் நுழைகையில் தனக்கு இனி யாருமில்லை என்ற நிலை அந்த சிறு பெண்ணை ஏகத்துக்கும் பயமுறுத்தியது.
“இங்க வாம்மா!” தியாகராஜன் மென்மையாக அழைக்க, அருகே சென்றவள், அழுகையை அடக்கிக்கொண்டு அவரை பார்க்க, “நந்தினி தானே?” என்றார் அவர்.
“ம்ம்ம்” என்றவளின் நெற்றி காயத்தை மென்மையாய் வருடியவர், “என்ன படிக்குற?” என்றார்.
“ஆறாவது முடிச்சுட்டேன்” அவள் சொல்ல, சில நொடிகள் அமைதியாக இருந்தார்.
“அப்பா ஏதாவது சொல்லிருக்கானா என்னை பத்தி?”
“நான் இல்லன்னா தியாகு மாமா கூட போய்டுன்னு சொன்னாங்க” அவள் சொன்னதும், அவள் தலையை தன் நெஞ்சோடு சேர்த்துக்கொண்டு கண்ணீர் விட்டவர், “வரியா?” என்றார்.
தயங்கினாலும் அவளுக்கு வேறு வழி இல்லையே!! ஆமோதிப்பாய் தலையாட்டினாள். அன்றே அவளை அழைத்துக்கொண்டு தன் வீட்டுக்கு சென்றார் தியாகராஜன்.
இப்படி தான் நந்தினி அவன் வீட்டுக்குள் வந்தாள்.
விடுமுறை வரை அங்கே இருந்தவள், அதன்பின் முன்பு படித்த அதே பள்ளியில், விடுதியில் தங்கி படிக்க விரும்புவதாக தியாகராஜனிடம் சொல்ல, அவருக்கு அதில் விருப்பமே இல்லை.
இதற்கு சில வருடங்கள் முன் தான், ராதா கணவனை இழந்து, மகள் ஒருத்தியோடு அண்ணன் வீட்டில் அடைக்கலமானார்.
தியாகராஜனின் ஒரு ஆள் வருமானமும், அந்த வீடும் மட்டும் தான் அவர்கள் ஆதாரம். அதை நம்பி இரு மகன்கள் இருக்க, கூடவே நாத்தனார் மகளின் பொறுப்பும் தோளில் ஏறியிருக்க, அடுத்து எங்கிருந்தோ ஒருத்தியை அழைத்துக்கொண்டு வந்து நின்றால்!? அதுவும் பெண் பிள்ளை வேறு!
நாத்தனாரை சுமை என ஒரு சொல் சொல்ல முடியாது. ஏற்க வேண்டியது கட்டாயம். ஆனால், இந்த பிள்ளையை அப்படி ஏற்க வேண்டிய அவசியம் இல்லையே!!
ஜெயலட்சுமி தன் விலகலை காட்டினார். ராதாவுக்கும் மனதளவில் ஒரு பாதுகாப்பற்ற நிலை என்பதால் அந்த பெண்ணை ஆதரிக்க நினைக்கவில்லை, சம வயதில் இருந்த தன் மகளையும் பழக விடவில்லை.
தியாகராஜன் சின்னதாய் ஊருக்குள் உரக்கடை வைத்திருக்க, இரவு உறங்க தான் வீட்டுக்கு வருவார், பகலில் நேரமே சென்றும்விடுவார்.
பொன்னிலவனும் கல்லூரி நேரம் போக மிகுதி நேரம் தந்தையுடன் கடையில் தான் நிற்பான் என்பதால் அந்த சின்ன பெண்ணின் தனிமை அவர்களுக்கு தெரியாமலேயே போனது.
ஒரு மாத விடுமுறையை கடினப்பட்டு தள்ளியவள், விடுதிக்கு போகிறேன் என்று வந்து நின்றாள்.
எவ்வளவோ சொல்லி பார்த்தும் நந்தினி கேட்கவில்லை. அந்த இரு ஆண்களை தவிர வீட்டில் யாரும் அவளை தடுக்கவுமில்லை. அப்போது தான் வீட்டின் சூழல் தியாகராஜனுக்கு உரைத்தது.
மனமே இல்லாமல் தன் நண்பன் மகளை விடுதியில் விட்டுட்டு வந்தார். அதில் பொன்னிலவனுக்கும் வருத்தம் தான். சின்ன பெண்ணை தனியாய் விட்டுவிட்டோமே என்று!! என்ன செய்துவிட முடியும் அவனால்!?
மாதம் ஒருமுறை நேரில் சென்று தந்தையுடன் அவளை பார்த்துவிட்டு வருவான். அவசியமான விடுமுறையை தாண்டி நந்தினி விடுதியை விட்டு வருவதே இல்லை. அப்படியே மாதங்களும் ஓடியது.
மாதம் ஒருமுறை நந்தினியை பார்க்க தியாகராஜனுடன் பொன்னிலவன் சென்றது போய், பொன்னிலவனுடன் தியாகராஜன் செல்லும் அளவில் வந்தது. அவர் மறந்தாலும் அவன் மறக்கவே மாட்டான். இத்தனைக்கும் நேரிடையான பேச்சுக்களே இருக்காது பெண்ணிடம்.
பார்க்க மட்டும் தான் செய்வான். பேசியதில்லை. அவளும் அவனை நிமிர்ந்தும் பார்க்க மாட்டாள். மிக மிக அவசியமான ஓரிரண்டு வார்த்தைகள் மீறி எதையும் பேசிக்கொண்டதில்லை பெண்ணிடம். ஏனோ அவளிடம் நாட்டம் அதிகம் போனது பொன்னிலவனுக்கு.
வீட்டில் எந்நேரமும் ‘மாமா, மாமா’ என காலை சுற்றும் யசோதா மேல் பிரியம் உண்டென்றால், தன்னை நிமிர்ந்துக்கூட பார்க்காத இந்த பெண்ணின் மேல் அவனுக்கு பிரியத்துக்கும் மேல் ஒரு ஈர்ப்பு காந்தம் போல இழுக்க ஆரம்பித்தது. அவள் இயல்பாய் பேசியிருந்தால் கூட அவனுக்கு இந்த அளவு தோன்றியிருக்காது.
சிறு பெண் என புரிந்தாலும், ‘தங்கை’ என்ற இடத்தில் நினைக்கக்கூட பிடிக்கவில்லை. அதற்காக வேறு விதமாகவும் அவன் நினைக்கவில்லை. சோகமே உருவாய் எப்போதும் பார்க்கும் பெண்ணின் முகத்தில், நிறைவான சிறு புன்னகையை கண்டுவிட்டால் கூட போதும் அவனுக்கு. அது தான் எத்தனை நாள் கடந்தும் காணக்கிடைக்கவில்லை அவனுக்கு.
கல்லூரி இறுதி ஆண்டில் இருந்த பொன்னிலவன் மதியம் கல்லூரி முடித்து வந்து தந்தையின் கடையில் இருந்தான். தியாகராஜன் ஈரோடு வரை வேலையாய் சென்றிருந்தார். கடையில் வேலை செய்யும் அண்ணனுடன் அவன் பேசிக்கொண்டு இருந்த நேரம் தொலைபேசி சத்தமிட, ரிசீவரை எடுத்து காதில் வைத்தான்.
மறுப்பக்கம், “நந்தினி கார்டியனா?” என்ற கேள்வி வர, “ஆமா, என் அப்பா தான். என்ன ஆச்சு?” என்றான் அவன் பதட்டமாய்.
மறுபுறம் சிறு தயக்கம் வர, அதன்பின், “வீட்ல பெரியவங்களை கூட்டிக்கிட்டு ஸ்கூல் வரைக்கும் வாங்கப்பா… நந்தினி கொஞ்சம் ‘சிக்’கா இருக்கா!” என்றார்.
பதறியது பொன்னிலவனுக்கு. இப்போது போல நொடியில் தொடர்புக்கொள்ள தொலைபேசி எல்லாம் அப்போது இல்லையே… தந்தையை பிடிக்க முடியாது என்று தெரிந்து, வீட்டு தொலைபேசிக்கு அழைத்து விவரத்தை சொல்ல,
“ஐயையோ, சத்தி வரைக்கும் என்னால கார்ல வர முடியாது பொன்னா… குமட்டி எடுக்கும். நீ உன் அப்பாவை அழைச்சுட்டு போ” என்றுவிட்டார் ஜெயலட்சுமி.
பக்கத்து வீட்டு அப்பத்தா தன் மருமகள் ஊருக்கு சென்றிருந்தார். இல்லையேல் கேள்வியே கேட்காமல் அவரை அள்ளிப்போட்டுக்கொண்டு சென்றிருப்பான்.
அழுத்திப்பிடித்து ஒருமணி நேரத்தில் பள்ளியை சென்றடைந்தவன் மூச்சுவாங்க டீச்சரிடம் சென்று நிற்க, ‘பெரியவங்க இல்லையா?’ என்று தயங்கினாலும் நந்தினியிடம் கேட்டுவிட்டு அவளை பொன்னிலவனோடு அனுப்பிவைத்தனர்.
அவளை நேரில் காணும் வரை அவன் படபடப்பு அடங்கவில்லை. அவளுக்கு என்னவோ? ஏதோ? என்று நின்றிருக்க, அவள் ‘பெரிய பெண்’ ஆகிவிட்டாள் என்றனர். அதைக்கேட்டதும் தான் ‘இவ்ளோதானா?’ என்று ஆசுவாசமே ஆனது அவனுக்கு.
ஆறுமாதம் முன்பு தான் யசோதா பெரியப்பெண் ஆகியிருந்தாள். அதன் நடைமுறைகள் எல்லாம் அருகே இருந்து பார்த்தவனுக்கு இது நல்ல விஷயம் என்று புரிய, அவளுக்கு பின்னிருக்கையை சௌகர்யமாக வைத்துக்கொடுத்துவிட்டு முன்னே டிரைவிங் சீட் வந்தான்.
வண்டியை இயக்கும்முன் பின்னே திரும்பியவன், தலைகுனிந்து அமர்ந்திருந்தவளிடம், “நந்தினி…?” என்றான். இது அவனது முதல் அழைப்பு உண்மையில்.
தடுமாறும் விழிகளை கொஞ்சமாய் நிமிர்த்தி அவனை பார்த்தவள், மீண்டும் குனிந்துக்கொள்ள, “கிளம்பலாமா? இல்ல எதாவது வேணுமா?” என்றான்.
மறுப்பாக தலையசைத்தாள். அவள் ஏதாவது பேச மாட்டாளா? என்று சிறு ஏக்கம் எட்டிப்பார்க்க, அவள் சூழ்நிலை உணர்ந்து எதுவும் பேசாமல் வண்டியை இயக்கினான். முன்பக்க கண்ணாடியில் அடிக்கடி அவன் கவனம் குவிந்தது. அவள் முகம் சின்னதாய் சுணங்கினாலும், இவனுக்கு தான் சுருக்கென்றது.
கார் சடன் ப்ரேக் போட்டு கிரீச்சிட்டு நின்றது. பின் சீட்டில் இருந்து முன்னே தடுமாறி சரிந்தாள் அவள்.
வெடுக்கென திரும்பியவன், “என்னை என்ன சொன்ன?” என்று வினவ, “அண்ணா…” என்று இழுத்தாள் பெண்.
“என்ன சொன்ன?”
“அண்…ணா…” நாக்கு வரண்டது அவளுக்கு.
“என்ன சொன்ன?”
“அண்ணா…. அண்ணா…ஆஆஆ” சத்தமான குரலில் தூக்கத்தில் இருந்து விழிப்பவன் போல் ‘ஹக்’ என நிமிர்ந்தான் பொன்னிலவன். வானம் இருட்டி இருந்தது. அதே மரத்தடியில் இத்தனை நேரம் அப்படியே அமர்ந்திருந்திருகிறான். லேசாக மூச்சுக்கூட வாங்கியது.
“நேரமாச்சு ண்ணே… மழை வரும் போல இருக்கு” கருப்பன் சொல்ல, எழக்கூட முடியவில்லை. நெடு நேரம் ஒரேப்போல அமர்ந்ததில் கால்கள் மரத்தேப்போனது. பிடிக்க வந்த கருப்பனை தடுத்துவிட்டு தானே எழுந்தவன், கால்களை உதறிவிட்டு வண்டியை எடுத்துக்கொண்டு வீட்டுக்கு சென்றான்.
மனம் இத்தனை வருடங்கள் இல்லாமல் சமீபமாய் மிகுந்த சோர்வுடன் இருப்பதன் காரணம் தான் விளங்கவில்லை அவனுக்கு. ‘இப்போது என்ன புதிதாய்?’ என்ற கேள்வி.
அவன் வந்தபோது எல்லாரும் உண்டுக்கொண்டிருக்க, அவனும் சென்று அமர்ந்தான். காலையில் கல்யாண புரோக்கர் வந்ததை பற்றி எதுவும் கேட்பான் என ஜெயாவும் ராதாவும் பதற, பொன்னன் ஒன்றுமே பேசவில்லை. அவன் உண்டு முடிக்கும்முன்னே முகிலன் உண்டு எழுந்துவிட்டான்.
அமைதியாய் இருக்கும் அண்ணன் தம்பிகள் உலக அதிசயமாய் தான் தோன்றினர் மூத்த பெண்களுக்கு.
முகிலன் மாடியேற, யசோதாவும் பின்னே ஏறினாள். அவன் அறைக்குள் நுழைகையில் அவளும் உடன் வர, “ஏய்… எதுக்கு இங்க வர?” என்று வாசலோடு நிறுத்தினான் கார்முகிலன்.
‘இதென்ன கேள்வி?’ என்பதாய் பார்த்தவள், “இதானே நம்ம ரூம்?” என்று கேட்டாள்.
“வாஸ்தவம் தான். ஆனா, ஒரே ரூம்ல இருக்க மேடம்க்கு போர் அடிக்குது போலயே!” தாடையை தேய்த்துக்கொண்டு நக்கலாய் கேட்டான் முகிலன்.
“என்ன பேசுறீங்க நீங்க?” அவள் கேட்க, “ஒரே புருஷன் போர் அடிக்குது போலயேம்மா! சீரியல்ல வர மாறி, ‘இவருக்கு பதில் இவர்’ கேக்குது போலயே” என்று சொல்ல, யசோதாக்கு மூச்சே நின்றது.
காலையில் ஏதோ ஒரு குழப்பத்தில் என்னவோ உளறிவிட்டாள். அதை பொன்னிலவன் தவறாக எடுப்பானோ என்ற ஐயம் துளியும் அவளுக்கு இல்லை. மாறாக கட்டியவன் காதில் விழுந்திருந்தால் தன் கதி என்ன என்று தான் பயமாய் வந்தது. நல்லவேளையாய் அவன் காலையில் எதுவும் கேட்காமல் வேலைக்கு சென்றிருக்க, அவனுக்கு கேட்கவில்லை என்று நினைத்து நிம்மதியாய் இருந்தாள்.
இப்போது பேசுவதை பார்த்தால், அப்படி இல்லை போலவே! என்று வியர்த்தது அவளுக்கு.
“உன் சந்தோசத்துக்கு நான் குறுக்க நிக்க மாட்டேன் யசோ’ம்மா! நீ பாதி ராத்திரில ரூம் விட்டு ரூம் போய் ஏன் கஷ்டப்படனும். நானே அனுப்பிவைக்குறேன். போயிட்டு வா!” என்றான் சிரித்தபடி.
பாதிபடிகளில் நின்ற பொன்னிலவனுக்கு இந்த பேச்சு காதில் விழ, அப்படியே நின்றுவிட்டான்.
“முகி மாமா, நீங்க தப்பா புரிஞ்சுட்டீங்க…” யசோதா ஆரம்பிக்க, கை நீட்டி தடுத்தவன், “என்ன இருந்தாலும் நீ அவனை விரும்புனவ, அவனும் பொண்டாட்டி ஓடிப்போய் தனியாவே காஞ்சு கடக்குறான். உனக்கும் ஐஞ்சு வருஷமா குழந்தை இல்லை. ஒருத்தருக்கொருத்தர் ஆறுதல் சொல்லிக்கலாம். தப்பில்ல…” என்றவன்,
“நீ உன் இஷ்டப்படி இருந்துட்டு வா!” என்று சொல்லி அறைக்குள் புகுந்துக்கொண்டான்.
யசோதாவின் உள்ளங்கால் வரை அவமானத்தில் கூசி நின்றது. சில நொடிகள் நின்றவள், தலையை உலுக்கிக்கொண்டு அறைக்குள் போக, விறுவிறுவென மாடியேறிய பொன்னன், தன் அறைக்குள் போகாமல் மொட்டை மாடிக்கு சென்று நின்றுக்கொண்டான்.
வீசும் காற்றும், இரவும், தனிமையும் கடுகிலும் சிறிதாய் கூட அவனுக்கு நிம்மதி என்ற ஒன்றை தரவே இல்லை. ஒரு பக்கம் நந்தினியின் எண்ணம் என்றால், மறுபக்கம் தன் உடன்பிறந்தவனின் உயர் எண்ணங்கள். இதுவரை அவன் இதுப்போல பேசியதே இல்லை. பேசி அவன் கேட்டது இல்லை எனலாம்.
இனி அங்கே ஒரே வீட்டில் முகம் பார்க்க முடியுமா என்ற கேள்வி உண்டானது அவனுக்கு. ஒரேயடியாக விலகவும் முடியாது. சிலகாலம் தள்ளி நிற்கலாம் என்று முடிவெடுத்தான். எங்கே போவது? என்ன செய்வது? என்ற எந்த விடையும் அவனிடம் இல்லை. போக வேண்டும் என்ற திடீர் முடிவு மட்டுமே!
ஒரே ஒருமுறை நந்தினியை சந்தித்தால் என்ன? அவள் எப்படி இருக்கிறாள் என கண்ணால் கண்டுவிட்டால் என்ன? என்று எண்ணம் போக, தலையை உலுக்கிக்கொண்டான். போனவளை தேடுவது என்ற தவறை மட்டும் தெரியாமல் கூட அவன் செய்ததே இல்லை. இனியும் செய்யவே கூடாது என்று நினைத்து மனதை மாற்ற மொபைலில் ஏதோ ஒரு பாட்டை வைத்தான்.
“பாதசுவடு தேடி தேடி கால்கள் ஓய்ந்துப்போனதே!
நாளும் அழுது தீர்த்ததாலே கண்கள் ஏழை ஆனதே!
தலைவிதி எனும் வார்த்தை இன்று,
கவலைக்கு மருந்தானதே!
வேதங்களே வாழும் வரை, சோகங்களே காதல் கதை!
இல்லாத உறவுக்கு நான் செய்யும் அபிஷேகம்!
வெள்ளை புறா ஒன்று போனது, கையில் வராமலே!!!!”
அந்தோ பரிதாபம்…! அது அவனை ஆற்றுப்படுத்தாமல், இன்னும் கிளறிவிடத்தான் செய்தது.