அத்தியாயம் 3
“கண்ணு…சீக்கிரம் கிளம்பு. இன்னும் பத்து நிமிசத்துல கிளம்பனும். இன்னிக்கி ஹெட் மாஸ்டர் மீட்டிங்” என்று அவசரப்படுத்தினார், அந்த குடும்பத்தின் தலைவர் சிவநேசன். கடந்த பதினைந்து நிமிடங்களாக, தன் தர்மபத்தினி கண்மணியை, கிளம்பும்படி கூறிக்கொண்டிருக்கிறார்.
அவரின் பரபரப்பிற்கு சற்றும் செவி சாய்க்காமல் “டேய், கொஞ்சம் நெய் நல்ல ஊத்தி சுடு. ரோஸ்டே ஆகல. தோசையை இட்லி மாதிரி ஊத்திருக்க” என்று குறை கூறிக்கொண்டே பொன்னிறமாக இருந்த தோசையை வாயினில் தள்ளினார் கண்மணி.
”அம்மா உனக்கே கொஞ்சம் ஓவரா தெரியலை? நீ என்னைக்காச்சும் இப்படி ஒரு தோசையை சுட்டிருக்கியா? பேசாம சாப்பிட்டு கிளம்பு, அப்புறம் தோசை சுட்டு தர மாட்டேன்” என்று வீறு கொண்டு எழுந்தான் தோசை சுட்டு கொண்டிருந்த சிவநேசன் கண்மணியின் தவப்புதல்வன் குமரப்பன்.
அவனும் எவ்வளவு நேரம் பொறுமையாக இருப்பான். ஆனியன் தோசை, பொடி தோசை, முட்டை தோசை, நெய் ரோஸ்ட் என்று வரிசையாக அவர் கேட்க கேட்க இவனும் சுட்டுக்கொண்டே இருக்கிறான்.
“இந்த அநியாயத்தை கேட்க யாரும் இல்லையா? எனக்கு…எனக்கு.. பத்து மாசம் சுமந்து பெத்த இந்த தாய்க்கு … உயிரை கொடுத்து வளர்த்த இந்த அம்மாவுக்கு தோசை சுட்டு தரமாட்டானாம். என்ன அநியாயம்.” என்று சிவாஜி கணேசன் பாணியில் பேச ஆரம்பித்தார் கண்மணி.
”டேய் குமரா! ப்ளீஸ் டா, அவ சொல்ற மாதிரி சீக்கிரம் ஊத்தி கொடுடா…இன்னும் அஞ்சு நிமிஷம் தான் இருக்கு” என்று கெஞ்சினார் சிவநேசன். அவர் நகர்ந்தால் மனைவி மீண்டும் தாமதம் செய்வாள் என்று கண்மணியின் அருகிலே டைனிங் டேபிளில் அமர்ந்தார் சிவநேசன்.
சரவணபவன், ஆர்யபவன், கையேந்தி பவன் எல்லாத்தையும் விட மிகவும் அருமையான ரோஸ்ட் வந்து விழுந்தது கண்மணியின் தட்டில். கண்மணி விழுந்த தோசையை ஆசையாக பிய்த்து, நெய்மணக்கும் சாம்பாரில் முக்கி ஆஹா! என்ன அருமை! என்று வாசம் பிடித்து…
அவரையே தகப்பனும் மகனும் பார்த்து கொண்டிருந்தனர்.
இந்தாங்க என்று சிவநேசனுக்கு ஊட்டடிவிட்டார். இதை எதிர்பார்த்தது போல புன்னகையுடன் வாங்கிக்கொண்டார் சிவநேசன்.
அவருக்கு தெரியும் நெய் ரோஸ்ட் தனக்காக தான் கேட்டிருப்பாள் மனைவி என்று. எப்பொழுதும் போல தாயையும் தந்தையும் அவர்களின் காதலையும் மெய்மறந்து பார்த்துக்கொண்டிருந்தான் குமரப்பன்.
கண்மணி தோசை ஊட்டவும், சிவநேசன் சாப்பிடவும், குமரப்பன் அவர்களை பார்ப்பதும் என்று அடுத்த இரண்டு நிமிடங்கள் சென்றது.
”கருமம் கருமம்..குடும்பமா இது? தோசை கருகுது.. தூங்கறவனுக்கு கூட நாத்தம் அடிக்குது.. மூணும் எப்படி சீரியல் ஓட்டுதுங்க, லூசுங்க” என்று அனைவரயும் திட்டிவிட்டு அடுப்படிக்குள் நுழைந்து தோசைக்கல்லில் கருகி இருந்த தோசையை பார்த்து, மூக்கை பிடித்துகொண்டு அடுப்பை அமர்த்தினான் குமரப்பனின் தம்பி அமுதப்பன்.
“நேரமாச்சுன்னு எவ்வளவு நேரமா அப்பா கெஞ்சிட்டு இருக்காரு? இன்னும் கிளம்பாம என்ன பண்ணிட்டு இருக்கீங்க?” என்றான் அம்மாவிடம்.
“டேய் அண்ணா, வெளிய கிளம்பும்போது எதுக்கு தோசை ஊத்திட்டு இருக்க? இட்லி ஊத்தி வைக்க வேண்டியது தானே?” என்று அண்ணனையும் திட்டி விட்டு, சீக்கிரம் கிளம்புங்க என்று அம்மாவை கிளப்பினான்.
“அப்பா, அவங்களுக்கு ரொம்ப செல்லம் கொடுக்காதீங்க” என்று அப்பாவையும் விட்டுவைக்கவில்லை அமுதப்பன்.
அமுதப்பன்னுக்கு மட்டும் தான் கொஞ்சம் அடங்குவார் கண்மணி. அடித்து பிடித்து தன் ஸ்கூட்டியிடம் ஓடினார் கண்மணி. மனைவி பின்னாடியே விரைந்தார் சிவநேசன்.
அவரது ஸ்கூட்டியின் பெயர் அம்மு. கண்மணி யாருக்கும் அம்முவை கொடுக்க மாட்டார். அதனால் எப்பொழுதும் சிவநேசன் தான் பின்னாடி அமர்வார்.
”டேய் மதியத்துக்கு தக்காளி சாதம் ஹாட் பாக்ஸில் வெச்சிருக்கேன்.இரண்டு பேரும் சண்டை போடாம சமத்தா இருங்க, அம்மா வரும்போது லாலிபாப் வாங்கிட்டு வரேன் “ என்று ஒண்ணாம் வகுப்பு பிள்ளைகளுக்கு சொல்வது போல வளர்ந்த பிள்ளைகளிடம் வம்பளந்துவிட்டு, ”அம்மு இருக்க எதுக்கு கவலை. சும்மா பறந்து போய்டலாம் சிவு” என்று கணவனையும் சமாதானம் செய்துவிட்டு வண்டியை கிளப்பினார் கண்மணி.
அந்த லாலிபாப் அவருக்கு அவரே தினமும் வாங்கி உண்பது. அம்முவிற்கு பதினைந்து வயது. இருபது கிலோமீட்டர் வேகத்திற்கு மேலே செல்லாது.
கண்மணியும் சிவநேசனும் ஒரு தனியார் பள்ளியில் இருபத்தைந்தாண்டுகளாக பணிபுரிந்து வருகின்றனர். கண்மணி சமூகவியல் ஆசிரியை, சிவநேசன் அறிவியல் ஆசிரியர்.
சிவநேசன் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு பாடம் எடுக்கிறார். கண்மணி இரண்டு, மூன்று, நான்காம் வகுப்பு மாணவர்களுக்கு எடுக்கிறார்.
கண்மணியின் குறும்பு, கலாட்டா, உயிர்ப்பு என்று அவரை மிகவும் பிடித்து போனது சிவநேசனுக்கு. விரும்பி பெண் கேட்டு சென்றார் கண்மணியின் வீட்டிற்கு. கண்மணிக்கு மூன்று அண்ணன்கள். கண்மணியின் அப்பா, அண்ணன்மார்கள் அனைவரும் விவசாயம் பார்த்து வருகின்றனர். வாட்டசாட்டமான உடல் வாகும் பெரிய மீசையும் வைத்திருப்பார்கள். கண்மணி தான் அவர்கள் வீட்டின் இளவரசி. ஆனால் அதை வெளிப்படையாக காட்ட மாட்டார்கள். பின் யார் கண்மணியை சமாளிப்பது?
வேலைக்கு வரும் பெண்ணிடம் காதலா? என்று கண்மணியின் அப்பா மீசை முருகேசன் கையில் அருவாளை தூக்கிவிட்டார்.
விட்டால் போதும் என்று தலை தெறிக்க ஓடிவந்து விட்டார் சிவநேசன்,
சிவநேசனுக்கு பயத்தில் ஜூரமே வந்துவிட்டது.
விசயம் அறிந்த கண்மணி, சிவநேசனை சென்று பார்த்தார். அவரது உண்மையான அன்பில் தனது மனதை பறிகொடுத்தார். பிறகு, கண்மணி அப்பாவின் கை காலை பிடித்து, அண்ணன்களுக்கு சோப்பு போட்டு , அம்மாவிற்கு ஐஸ் வைத்து எல்லா திருக்குத்தனம் செய்து சிவநேசனை மணந்து கொண்டார்.
சிவநேசனுக்கு தாய் மட்டும் தான். அவருக்கு கண்மணியை மகன் மணப்பதில் பூரண திருப்தி. சிவநேசனை போலவே மிகவும் மென்மையானவர். கண்மணியை மருமகளாக நினைக்காமல் மகளாக ஏற்றுக்கொண்டார்.
கண்மணியும் சிவநேசனும் அன்றில் இருந்து இன்று வரை அன்றில் பறவைகளை போல வாழ்ந்து வருகின்றனர். அன்பு சொட்ட சொட்ட காதல் மழையில் நனைத்துக்கொண்டே வாழ்கின்றனர்.
குமரப்பன் அமுதப்பன் என்று இரண்டு பிள்ளைகள். குமரப்பன் எம்.பி.ஏ இரண்டாம் ஆண்டும், அமுதப்பன் பல் மருத்துவம் முதலாம் ஆண்டும் படிக்கின்றனர்.
இன்று சனிக்கிழமை மகன்களுக்கு விடுமுறை. பள்ளியிலும் கோடை விடுமுறைதான்.
ரிசல்ட் வெளியிடுவது குறித்தும் அடுத்த கல்வி ஆண்டின் திட்டங்கள் குறித்தும் பேசும் மீட்டிங்கிற்காக செல்கின்றனர் காதல் ஜோடி.