“அர்வி! நீ வந்து எனக்கு காபி போட்டு குடேன்.. உன் கையால குடிச்சா தான் காபி குடிச்ச மாதிரி இருக்கும்!” என்று மகிழினி அரவிந்த்தை இழுக்க,
“இரு டி அக்காகிட்ட பேசிட்டு வர்றேன்!” என்றவன் சொல்ல சொல்ல கேட்காமல் உள்ளே இழுத்து சென்றாள் மகிழினி.
“அர்வி! அக்காக்கு ஏதோ ப்ரோப்லேம். ப்ரோப்லேம்னா பெருசா சின்னதா எல்லாம் எனக்கு தெரில. அக்கா ஷூட்டிங் ஸ்டாப் பண்ணிட்டு வந்துட்டாங்கனு நினைக்குறேன். என்னோட கெஸ்ஸிங் தான். ரொம்ப ஹர்ட் ஆன மாதிரி வழி முழுக்க அழுதுட்டே வந்தாங்க. இப்ப நாம என்னனு கேட்டாலும் சொல்லுவாங்களா தெரில. அக்கா கொஞ்சம் ரிலாக்ஸ் ஆகட்டும். அவங்களா பெங்களூர் கிளம்பினா போகட்டும். இல்லைனா எதுவும் கேட்க வேண்டாம்.” என்று பேசிக் கொண்டே சென்ற மகிழினியை புரியாமல் குழப்பமாய் பார்த்துக் கொண்டே அரவிந்த் நிற்க,
“ஃபினான்சியலா அக்கா டிஸ்டர்ப் ஆகி இருந்தா நாம தான் சப்போர்ட்டா நிக்கணும் அர்வி. எதுவா இருந்தாலும் அவங்களா சொன்னா மட்டும் கேட்டுக்கோ. இல்லைனா இப்ப எதுவும் கேட்டு நீயும் ஹர்ட் பண்ணிடாத!” என்ற மகிழினி,
தான் கடைக்கு சென்றது முதல், ‘நான் போகணும்’ என திகழ்மதி கலங்கி கூறியதை கூறி, அங்கே நடந்த அனைத்தையும் கூறினாள்.
“மேபீ அவங்க தான் ப்ரோடியுசரா இருக்கும்னு நினைக்குறேன். ஆனாலும் அந்த அம்மா அழுதாங்க. அவங்க பையன் தான் ஒரு மாதிரி நின்னார். அவருக்கு தான் அக்கா மேல கோவமா இருக்கும் நினைக்குறேன். போகட்டும்னு சொல்லிட்டு திரும்பிகிட்டார்!”
தனக்கு தெரிந்தவற்றை தனக்கு தெரிந்த விதத்தில் மகிழினி சொல்லி முடிக்க, அது அரவிந்த்திற்கு ஒன்றுக்கு ஒன்று முரணாய் தான் தோன்றியது.
ஆனாலும் விளையாட்டு பிள்ளையாய் நினைத்த தங்கையே சகோதரிக்காக சிந்தித்து இவ்வளவு பேச, அங்கே இருந்த சூழ்நிலை கொஞ்சம் மோசமானது என புரிந்து அவனுமே திகழ்மதியிடம் எதுவும் கேட்க கூடாது என்ற முடிவிற்கு வந்தான்.
“இந்தா க்கா காபி!” என மகிழினி கொண்டு வந்து நீட்ட, இன்னுமே முகம் சற்று சிவந்து கண்கள் கலங்கி என அங்கேயே தான் வந்த இடத்தில் அமர்ந்திருந்தாள் திகழ்மதி.
“குடி க்கா. எதுவா இருந்தாலும் ஃ பேஸ் பண்ணிக்கலாம் இப்படி இருக்காத. மகி ரொம்ப பீல் பண்றா. குடிச்சுட்டு கொஞ்ச நேரம் தூங்கு” அரவிந்த் சொல்ல, எப்படியும் தங்கை தம்பியின் கேள்விகளுக்கு இன்று பதில் சொல்லி தான் ஆக வேண்டும் என்று வந்த திகழ்மதிக்கு அவர்களின் இந்த புரிதலில் இன்னுமே அழுகை அதிகமாகி வந்தது.
“மாமாவும் அத்தையும் ஹாஸ்பிடல் போயிருக்காங்க. இப்ப வந்துடுவாங்க. நீ அழுதுட்டு இருந்தா அத்தை அதுக்கொரு கதை சொல்லி வாய் பேசும். நீ தூங்கு. அவங்ககிட்ட எல்லாம் காலைல பேசிக்கலாம்!” என்றான் அரவிந்த்.
இப்பொழுது யாரிடமும் பேச முடியும் என்றே தோன்றவில்லை திகழ்மதிக்கு. தலை அசைத்தவள் எழுந்து முகம் கழுவி உணவை தவிர்த்துவிட்டு படுத்துக் கொள்ள,
“என்ன அர்வி இன்னைக்கும் பூ வந்துச்சா? ஆனா நீயே இப்படி எல்லாம் எடுத்து போட மாட்டியே? ஏன் இப்படி போட்டு வச்சிருக்க?” என்று மகிழினி எடுக்க போக,
“மகி! வேண்டாம்!” என தடுத்தவன் முகம் இறுகி இருந்தது.
“ஏன்? ரொம்ப கோவமோ? பரவால்ல! பூ பாரு எவ்ளோ பிரெஷ்? வேஸ்ட் பண்ணாத!” என்றவள் எடுத்துக் கொண்டு போக, அரவிந்த் இதை வளரவே விட வேண்டாம் என முடிவு எடுத்து விட்டான்.
இப்பொழுது நினைத்தாலும் அனன்யா மேல் அத்தனை கோபம் தான். எவ்வளவு தைரியம்? எங்கிருந்து வந்தது இப்படி ஒரு தைரியமும் நினைப்பும் என.
மாலை கல்லூரியில் இருந்து வந்ததும் குளித்து வெளிவரும் போது வாசலில் உள்ளே நுழைத்து கொண்டிருந்தாள் அனன்யா.
அவள் கையில் இருந்த பூவை கூட அப்போது அவன் கவனிக்கவில்லை. அங்கும் இங்குமாய் பார்த்து யாரும் இல்லை என உறுதி செய்து தான் அவள் மேலே வந்ததே!
“என்ன அனு! மகியை தேடுறியா? அவ பிரண்ட்ஸ் கூட ஷாப்பிங் போய்ட்டா. லேட்டா வருவேன்னு சொன்னாளே! உன்கிட்ட சொல்லலையா?” என்று சாதாரணமாய் தான் கேட்டான் அரவிந்த்தும்.
அவன் குரல் கேட்ட நொடி திடுக்கிட்டு விழித்தவள் அவன் பேசி முடிக்கும் வரையுமே படபடவென அடித்துக் கொண்ட நெஞ்சோடு கையும் காலுமாய் பிடிப்பட்டதை போல நின்ற பாவனையே அவனை யோசிக்க வைத்திருக்க வேண்டும்.
இதே போல தெரியாமல் செய்வதொன்றும் அவளுக்கு புதிதில்லை என்றறாலும் மாட்டிக் கொள்வதில் முதல் முறை ஆகிற்றே! அங்கே தான் சிக்கினாள் அரவிந்த்திடம்.
அவளின் சங்கடமான முக பாவனையுடன் விழிகளின் அசைவும் அவனை புருவம் சுருங்க வைக்க, அப்பொழுது தான் கையில் பூவையும் கண்டான்.
“என்ன அனு பூவெல்லாம்? “ என்று கேட்கும் வரை கூட அவன் எண்ணம் வேறு எங்கும் செல்லவில்லை. கேட்டபடியே அந்த பூக்களைப் பார்த்தவன் கண்களுக்கு அதில் இருந்த வண்ணங்களும் அவளின் திருட்டுப் பார்வையும் என மொத்த கதையும் அவனுக்கு விளங்கியது.
“நீயா?” என்று தான் அதிர்ந்தான் நம்ப முடியாமல்.
அப்பொழுதும் கூட எடுத்து சொல்லி பேசி முடிக்க தான் அவன் நினைக்க, ‘லவ் பண்றது தப்பா அத்தான்? எனக்கு உங்களை ரொம்ப பிடிக்கும்’ என்றெல்லாம் சொல்லி அவனை கோபப்பட வைத்தாள் அனன்யா.
“இன்னொருவாட்டி என் முன்னாடி வந்து நின்னுடாத! உன் அம்மா முகத்துல என்னால முழிக்க முடியாது. என் குடும்பத்தோட எங்கேயாவது போய்டுவேன்!” என்று சொல்லி இருந்தான்.
மற்ற வார்த்தைகளை விட அவனின் ‘என் குடும்பம்’ என்ற வார்த்தை தான் அவளை அதிகமாய் காயப்படுத்தியது. எதுவும் சொல்லாமல் அவள் இறங்கி சென்றுவிட, இன்னும் நடந்ததை நம்பமுடியாமல் அவன் அமர்ந்திருந்த போது தான் மகிழினி திகழ்மதியுடன் வந்து சேர்ந்திருந்தாள்.
இப்பொழுது மகிழினி வார்த்தைகள் மீண்டும் நியாபகம் வர, காலையில் திகழ்மதி பெங்களூருக்கு கிளம்பினால் கூட, அவள் செல்வதை தடுக்க வேண்டும் எதுவாக இருந்தாலும் பார்த்துக் கொள்ளலாம் என்று நினைத்துக் கொண்டு உறங்க சென்றான் அரவிந்த்.
************************
தன் அறையில் மெத்தையில் விழுந்திருந்த ஆர்யன் கலங்கி இருந்த கண்களை மூடி அதன்மேல் கைவைத்து மறைத்தபடி படுத்திருந்தான்.
இப்படி ஒரு நாள் வரும் என தெரியும் தான். ஆனால் இத்தனை சீக்கிரம் என்பதோடு இப்படி சட்டென அவளே வந்து செல்கிறேன் என கூறுவாள் என நினைத்தும் பார்க்கவில்லை ஆர்யன்.
மனம் முழுதும் எதுவோ செய்ய மூடிய கண்களுக்குள் அவள் உருவம் தெரிய கண்களையும் திறக்க மனமில்லை. இதோ இந்த அறையை அவன் பயன்படுத்தி இரு வாரங்கள் ஆகிவிட்டது. முழுக்க முழுக்க அவள் வாசம் மட்டும் நிறைந்த அறையில் கண்களை திறந்தால் அவள் தன் முன்னே நிற்பதை போன்ற தன் ப்ரம்மயை என்ன செய்ய.
‘இப்படி ஒரு பைத்தியக்காரனா நீ? யாராவள்? எவ்வளவு நாட்களாய் அவளை உனக்கு தெரியும்? எதற்காக மனதினுள் அவளை நினைத்து இத்தனை போராட்டம்?’ என எளிதாய் கேட்டுவிடலாம் தான்.
காதலிப்பவனுக்கு தானே தெரியும் அந்த வலியும் வேதனையும். அத்தோடு குருட்டுத்தனம் என்ற போதிலும் தன் உடன் வர போகிறவள் என்ற அலட்சியம் தான் அவனின் இத்தனை ஏக்கத்திற்கும் காரணம்.
எங்கே செல்ல போகிறாள் என்னைவிட்டு என்ற அவனின் அலட்சியத்தை இப்பொழுது அவனது மனமே எள்ளி நகையாடுவதை போல இருந்தது.
தன் அன்னையிடம் அவன் மறைத்த பொழுது இருந்த அதே அலட்சிய பாவம் தான் திகழ் தன்னைவிட்டு செல்ல போவதில்லை என்ற எண்ணத்திலும் அவனுக்கு.
மொத்தமாய் இரு எண்ணங்களும் ஆட்டம் கண்டு சென்றுவிட, வேறொடிந்த கிளையாய் தனிமையில் கொடுமையாய் அவன் ஆர்யன்.
கீழே கணவனிடம் அத்தனை பேச்சுக்கள் மகனுக்கு ஆதரவாய் பேசினாலுமம் தன்னிடம் தன் மகன் உண்மையை சொல்லி இருக்கலாமே எனும் ஆதங்கம் இல்லாமல் இல்லை அந்த தாய்க்கு.
அதை யாரிடமும் இப்பொழுது காட்டும் மனநிலையும் இல்லையே! மகன்மேல் கோபம், வருத்தம், ஆதங்கம் என இருந்தாலும் எந்த தாய்க்கும் இருக்கும் பாசம் தான் இந்த தாய்க்கும் ஒருபடி மேலே இருக்க, மகனை தேடி மேலே வந்தார். உடன் புகழ் வேந்தனோடு.
மீனாட்சியின் கவலைக்கு கொஞ்சமும் குறைவில்லாதது புகழ் கவலையும் கூடவே குற்ற உணர்ச்சியும். ஆர்யனை அந்த நிலையில் கண்ட மீனாட்சி துடித்து மகன் அருகில் ஓட, அதற்கு குறைவில்லாமல் மனது அடித்துக் கொண்டது புகழுக்கு கூட. இந்த பாவத்திற்கு தனக்கு தண்டனை நிச்சயம் உண்டு என்று அவனே என்னும் அளவிற்கு நொந்து போயிருந்தான் புகழ்.
“ராஜா…” என்று தலை தாங்கியவரிடம் தன் முழு பாரத்தையும் அவரிடம் சேர்ப்பது போல அவர் மடி சாய்ந்தான் மகன்
“சாரி ம்மா! உங்களுக்கு இப்ப தெரிய வேண்டாம்னு தான் நினச்சேன். நான் பண்ணது தப்புன்னு இல்ல.. இப்பவும் நான் பண்ணினது தப்பா எனக்கு தெரியல. திகழுக்காக மட்டும் தான் ம்மா இவ்வளவுமே. வேற எந்த ரீசன் சொல்லியும் உங்களை ஏமாத்த விரும்பல. ஆனா உங்ககிட்ட மட்டுமாவது சொல்லிருக்கணும். அடலீஸ்ட் நீங்க சொல்லிருந்தாவாச்சும் திகழ் போயிருக்கமாட்டா இல்ல?” என்று மீண்டும் அதே கூற்று அவனிடம்.
“ராஜா எழுந்திரு!” மீனாட்சி சொல்ல,
“ம்ஹும். இப்ப எதுவும் சொல்லாதீங்க ம்மா. நீங்க ஆறுதலே சொன்னாலும் நான் கேட்குற மாதிரி இல்ல. எனக்கு இப்பவே இந்த ரூம் முழுக்க திகழ் மட்டும் தான் தெரியுறா. இதோ இங்க நின்னு அன்னைக்கு என்னை மிரட்டினா ம்மா ‘உங்க அம்மாகிட்ட சொல்ல போறிங்களா இல்லையா’னு மிரட்டினா. அவ்ளோ அழகா இருந்தா. இங்க தான்… இந்த சோஃபால இருந்து என்கிட்ட சொன்னா ‘உங்க வைஃப் ரொம்ப குடுத்து வச்சவங்க’ன்னு” என்றெல்லாம் பேச பயம் தான் ஆனது மீனாட்சிக்கு.
“நான் தான் ம்மா ரொம்ப அசால்ட்டா அவளை விட்டுட்டேன். என்னை நானே ஓவரா தூக்கி வச்சு என்னை விட்டு அவ போக மாட்டா னு நினச்சு… எல்லா தப்பும் என்னோடது!” என்றவன் தலையில் கைவைத்து மீண்டும் அன்னை அருகில் அமர்ந்துவிட,
“டேய்! ஆர்யா! என்ன டா பண்ற நீ? இங்க பாரு என்னை பாரு…” என்ற புகழ்,
“இப்ப என்ன? மதி போய்ட்டாங்க.. அதுக்காக இப்படி இருப்பியா? நான் இருக்கேன்.. அப்படிலாம் விட மாட்டேன்.. இப்பவே போறேன்.. இப்பவே போய் கூட்டிட்டு வர்றேன்!” என்று சொல்லவும் நிமிர்ந்து பார்த்த ஆர்யன் முகத்தில் அத்தனை முறைப்பு புகழுக்கு.