“கண்ணா, கிளம்பலாம்ன்னு இருக்கேன் டா” நர்சரியில் வேலை செய்துக்கொண்டிருந்த நண்பனிடம் சொன்னான் பொன்னிலவன். முதல் நாள் கோவிலுக்கு சென்று வந்தவன், உடல் நலமில்லை என அறைக்குள்ளேயே முடங்கிக்கொண்டான். காலை அவனை வற்ப்புறுத்தி தான் இங்கே அழைத்து வந்திருந்தான் கண்ணன்.
இங்கு வந்தும் ஏதோ யோசனையாகவே அமர்ந்திருந்த பொன்னன், திடீரென வந்து இப்படி சொல்ல, மண்வெட்டியை கீழே போட்டுவிட்டு, “ஏன்டா? ஒரு மாசம் இருக்கேன்னு சொன்னியே?” என்றான் கண்ணன்.
“இருக்கத்தான் நினச்சேன், ஆனா வேலை வந்துடுச்சு, போயாகனும்”
“சரி போயிட்டு வேலையை முடிச்சுட்டு வா, ஒரு மணி நேரத்துல போற ஊருக்கு இவ்ளோ யோசனையா உனக்கு?” என்றான் அவன்.
“இல்லடா, போய் பொழப்பை பாப்போம்ன்னு…” பொன்னன் இழுக்க, அவனை கண்டிப்புடன் பார்த்தவன், “நர்சரி தொடங்குற விஷயமா தானே வந்த இங்க? இப்ப வந்த வேலையை கூடபாக்காம போறேங்குற?” என்று கேட்டிட,
“அவங்க எப்ப வராங்கன்னு சொல்லு… அன்னைக்கு நான் வந்து பேசிக்குறேன்” என்றான் பொன்னன்.
அதற்குமேல் கண்ணனிற்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை. அவன் போக்கிலேயே விட்டுவிட்டான். மீண்டும் அந்த ‘ஏ டு இசட்’ நிறுவனத்துக்கு அழைத்து பேச, அந்த வார இறுதியில் வாடிக்கையாளர் இடத்துக்கே நேரில் சென்று பேசுவதாக சொல்லவும், பொன்னனும் திருப்தியுடன் புறப்பட்டான்.
மீண்டும் அவன் வீடு!
எங்கு சுற்றினாலும், எத்தனை நாள் விலகினாலும் அவன் கூடு இது தானே! விலகி இருந்தால் மட்டும் எல்லாம் சரியாகிவிடுமா? இத்தனை நாள் மங்கியிருந்த வீட்டின் சூழல், இன்று வாசற்படியில் கால் வைத்ததுமே வந்து முகத்தில் அறைந்தது.
அதே தம்பி, அதே பேச்சு, அதே அறை, அதே தனிமை…
வீடு பூட்டியிருக்க, ‘நல்லது’ என நினைத்து தன்னிடம் இருக்கும் சாவிக்கொண்டு திறந்தவன், நேரே அறைக்கு சென்று படுத்துவிட்டான். மதியம் ஆகியும் வீட்டில் நடமாட்டம் இல்லை. யசோதாவும் முகிலனும் வேலைக்கு சென்றிருப்பர் என்றாலும் அம்மாவும் அத்தையும் எங்கே என்று தோன்றியது.
அதே நேரம் வாசல் கதவு திறக்கும் சத்தம் கேட்க, ஜன்னல் வழி எட்டிப்பார்த்தான். அவன் பைக் நிற்பதையும், பூட்டு திறந்திருப்பதையும் பார்த்து இருவரும் ஏதோ பேசிக்கொள்வது தெரிந்தது, ஆனால், காதில் விழவில்லை.
சற்று நேரத்தில் மாடி வளைவுக்கு வந்து நின்றான். கீழே இருவரும் அயர்ந்து அமர்ந்திருக்க, ‘பேசலாம்’ என்று எண்ணி அவன் திரும்பும்போது, “அவன் வந்து நம்ம எங்க போனோம்ன்னு கேட்டா கோவிலுகுன்னு சொல்லிடு அண்ணி” என்றார் ஜெயா. அப்டியே ஒதுங்கி கண்ணில் படாமல் நின்றுவிட்டான் பொன்னிலவன்.
“சரி ண்ணி… நீயும் கேட்டா உளறி வைக்காத” என்ற ராதா, “சரியா சொல்லுவாருன்னு நம்பி போனா, அந்த மனுஷன் இப்டி குண்டை தூக்கி போடுறாரு பாருங்க” என்றார் அங்கலாய்ப்பாய்.
அதே தான் ஜெயாவுக்கும். கலிங்கியம் வரை சென்று ஜோதிடர் ஒருவரை பார்த்துவிட்டு வந்திருந்தனர். தியாகராஜன் இருந்த நேரம், எது என்றாலும் அந்த ஜோதிடரை கேட்டுவிட்டு தான் செய்வார். அதன்பின் அந்த பழக்கம் விட்டுப்போனது. முகிலனுக்கு கூட திருமணத்திற்கு அவரிடம் பார்க்கவில்லை.
இப்போது ஒருமுறை பார்த்தால் என்ன? என்று தோன்றவும் அவர் விலாசத்தை தேடி கண்டுப்பிடித்து மகன்களின் ஜாதகத்தோடு சென்றார் ஜெயா. ராதாவும் தன் மகளின் ஜாதகத்தை எடுத்துக்கொண்டு சென்றிருக்க, அவர் சொன்னது எதுவுமே அவர்களுக்கு உவப்பாக இல்லை.
“கிறுக்கு ஜோசியன் போல அண்ணி அவரு. முகிலனுக்கு இந்நேரம் புள்ள இருக்கனும்ன்னு சொல்றாரு… யசோதாக்கு புள்ள பாக்கியம் இப்போதைக்கு இல்லன்னும் சொல்றாரு. ஏதாவது ஒன்னுக்கு ஒன்னு ஒத்துப்போவுதா? சொல்ல சொல்ல கேட்காம இங்கிருந்து தேடி புடிச்சு அவரை பாக்கணும்ன்னு போனீங்களே!” என்று சடைத்தார் ராதா.
“எனக்கு என்ன அண்ணி தெரியும்? உங்க அண்ணன் இருந்தவரை அவரை கேட்டு தான் எல்லாம் செய்வாரு. அப்படி தானே பொன்னனுக்கு இருபத்தி நாலுல கல்யாணம் பண்ணனும், இல்லன்னா பத்து வருஷத்துக்கு குருபலனே இல்லன்னு சொல்லி கல்யாணம் முடிச்சாரு” என்றார் ஜெயா.
“இப்ப என்ன சொல்றார் பார்த்தீங்களா?” என்றவர், “அவனுக்கு இன்னொரு பொண்ணெல்லாம் வரவே வராது. ஏகபத்தினி விரதன் அவன்னு சொல்றாரு” என்று சொல்ல, வருத்தமான முகத்தோடு, “அதுதான் எனக்கு பயமா இருக்கு அண்ணி. எங்க என் மவன் ஒத்தையிலேயே நின்னுடுவானோன்னு பயமா இருக்கு” என்றார் ஜெயா.
“அந்த ஆளு உளறிட்டு போகட்டும். நம்ம பாக்குற மாறி பார்த்துட்டே இருப்போம். நல்ல இடமா அமைஞ்சா எப்படியாச்சும் அழுது கறைஞ்சாவது அவனுக்கு இரண்டாம் கல்யாணம் கட்டி வைப்போம் விடுங்க” என்று தேற்றினார் ராதா.
“அவன் ஒத்துக்கணுமே அண்ணி!” பிரயாசையுடன் ஜெயா சொல்ல, “அதான் புத்திர பாக்கியம் வலுவா இருக்குன்னு சொல்றாரே! கண்டிப்பா கல்யாணம் அமையும் பாருங்க” என்று ஆறுதல்ப்படுத்தினார் ராதா.
ஜோதிடர் சொல்வதை நம்ப வேண்டாம் என்று சொல்வதும், அவர் சொல்வதை வைத்தே சமாதானம் செய்வதும் ஒரே ஆள் என்று நினைத்து மெல்ல தலையில் தட்டிக்கொண்டான் பொன்னிலவன்.
“ஒருவேளை… ஓடிப்போனவ திரும்பி வருவாளோ?” எப்படி தான் இப்படி கேட்க தோன்றியதோ ஜெயாவுக்கு… அந்த நேரம் அவருக்கு இப்படி தோன்றவுமே கேட்டுவிட, முகம் சுருங்கிய ராதா, “பத்து வருஷம் முன்ன ஓடிப்போனவ திரும்ப வந்தா சேர்த்துக்குவீங்களா?” என்று கடுப்பாய் கேட்டார்.
“ச்சீ… ச்சீ…” என்ற ஜெயா, “வாசல்படியை கூட மிதிக்க விட மாட்டேன்” என்று உறுதியாய் சொல்லிவிட்டு, “எங்க இவன், அவளை பார்த்துட்டா அவ பின்னாடியே போய்டுவானோன்னு பயமா இருக்கண்ணி” என்றார்.
“முதல்ல அதுக்கு அவ வரணுமே!” என்ற ராதா, “அவ எங்க இருக்காளோ? எவன் கூட இருக்காளோ? யாருக்கு தெரியும், புள்ளைக்குட்டி கூட இருந்தாலும் இருக்கும்” என்றார் இகழ்ச்சியாய்.
“போனவ அப்படியே போய்டட்டும்… என் புள்ளைக்கு வேண்டாம்டா சாமி” ஜெயா சொல்ல, இந்த பேச்சை கேட்க கூட பிடிக்காமல் அறைக்குள் சென்று அடைந்துக்கொண்டான் பொன்னிலவன்.
***
உரக்கடையின் அலுவலக அறையில் அமர்ந்திருந்தான் பொன்னிலவன். அந்த மாதத்துக்கான வரவு செலவு கணக்கை அவன் கவனமாய் பார்க்க, “அண்ணே!” என்று வந்து நின்றான் கருப்பன்.
நிமிராமலே, “சொல்லுடா” என்று பொன்னன் சொல்ல, “உங்களை பார்க்க ஏதோ ஏபிசிடி கம்பெனில இருந்து ஆள் வந்துருக்குண்ணே” என்று தலையை சொரிய, நிமிர்ந்து சின்னதாய் முறைத்தவன், பின் சிரிப்போடு, “ஏ டு இசட்’டா” என்றான்.
“ஆங், அதே தான்ண்ணே… வர சொல்லவா?” என்றவனிடம், ‘சரி’ என்பதாய் தலையசைத்துவிட்டு நோட்டை மூடி எடுத்து வைத்தான் பொன்னிலவன்.
பளிச்சென கண்ணை கவரும் தோற்றத்தில் உள்ளே நுழைந்தான் ஒருவன். விரிந்த புன்னகையோடு, “ஹலோ சார், நான் இளங்கோவன், ப்ரம் ஏ டு இசட் மார்கெட்டிங் சர்விசஸ்” என்று கரம் நீட்ட, எழுந்து அவன் கரத்தை பற்றிக்கொண்ட பொன்னன், ”வாங்க, வணக்கம்!” என்றான் சிரிப்போடு.
“உட்காருங்க!” இருவரும் எதிரெதிர் அமர்ந்தனர்.
“நர்சரி ஆரம்பிக்கிறது தொடர்பா கண்ணன் சார் பேசுனாரு என்கிட்ட… சாரி, உடனே வர முடில என்னால… வேற ரெண்டு ப்ராஜெக்ட்ல மாட்டிக்கிட்டேன்” என்றான்.
“இருக்கட்டுங்க… என்ன குடிக்குறீங்க?” என்று கேட்டவன் வந்தவனின் விருப்பத்தின் பேரில் கருப்பனை அழைத்து இளநீர் வெட்டி கொண்டு வர சொன்னான்.
பின்னர் பேச்சு தொழிலுக்கு சென்றது. அவன் தன் தேவையை சொல்லி, ஐடியா கேட்க, “செஞ்சுடலாம் சார்… சின்ன விஷயம் தான். அதிகபட்சம் ரெண்டு வாரம்… அதுக்குள்ள நீட்டா முடிச்சுடலாம். நல்லா விளம்பரம் செஞ்சா சீக்கிரமே ரீச் ஆகும், வேற வேற ஊருல இருந்து எல்லாம் கூட இங்க வந்து வாங்குவாங்க” என்றான் இளங்கோ நம்பிக்கையாய்.
“உங்களுக்கு எப்படி இந்த மாறி ஒரு தொழில் பண்ணனும்ன்னு தோனுச்சு?” திடீரென நிலவன் கேட்டதும், இளங்கோ சில நொடியே தினற, “இல்ல, கேட்க தோனுச்சு, சொல்லனும்ன்னு அவசியம் இல்ல” என்றான் பொன்னிலவன்.
“அட, அதெல்லாம் இல்லங்க… சட்டுன்னு வேற டாபிக் போகவும் பேச்சு வரல” என்ற இளங்கோ,
“நான் ஒரு நாலஞ்சு வருஷமா தான் இதை செய்ய ஆரம்பிச்சேன். அதுக்கு முன்ன காலேஜ்ல ப்ரோஃபசரா இருந்தேன். நடத்துனதையே திரும்ப திரும்ப நடத்த போர் அடிச்சுது… அப்போ என் பிரன்ட் ஒருத்தன் தொழில் தொடங்கனும் ஆனா எங்க இருந்து ஆரம்பிச்சு செய்யுறதுன்னு தெரியலன்னு பொலம்ப, நான் அவனுக்கு உதவ… அப்புறம் இதையே ஏன் நாம தொழிலா செய்யக்கூடாதுன்னு தோணி, ஆரம்பிச்சேன்.
ஆரம்பத்துல பெருசா ரீச் இல்லன்னாலும் இப்போ ஓரளவு கொங்கு மண்டலத்துல பேர் சொல்ற அளவு தெரியுது…” என்றான் சின்ன சிரிப்புடன்.
“இன்னும் நீங்க வளர என் வாழ்த்துகள்” பொன்னிலவன் சொல்ல, “நீங்களும் தான் சார்… நீங்க எடுக்கிற முயற்சிகள் எல்லாமே நல்லவிதமா வரும், வர வைப்போம்!” என்றான். பொன்னிலவனுக்கு இளங்கோவை சட்டென பிடித்துப்போனது.
“ஓகே சார், நான் நாளைக்கு காலைல நேரமே வந்துடுறேன்… பக்காவா பேசி ஸ்கெட்ச் பண்ணிக்கலாம்” என்ற இளங்கோ, “ஓகே தானே சார்?” என்று கேட்க, “எனக்கு ஓகே தான் இளங்கோ சார்” என்றான்.
“அப்போ சரி, நாளைக்கு சந்திப்போம்” என்று சிரித்த முகமாய் கிளம்பினான் இளங்கோவன். என்னவோ பொன்னிலவனுக்கு வந்தவனை யாரோ என்று எண்ண முடியாமல், மனதுக்குள் ஒரு நெருக்கம் உண்டாக, அவன் போகும் வரை பார்த்தபடி நின்றிருந்தான்.
***
இரவு உணவு நேரம் எல்லோரும் ஒன்றாக இருக்க, கடைசியாய் இறங்கி வந்தான் கார்முகிலன். அவனுக்கும் தட்டு வைத்து ஜெயா உணவை வைக்க, அமைதியாய் உண்டுக்கொண்டிருந்த அண்ணனை ஓரவிழியில் பார்த்த கார்முகிலன், “ஒரு மாசம் ஆச்சா என்ன?” என்றான் பொதுவாய்.
அன்று தான் மகன் வீட்டுக்கு வந்திருக்க, சின்ன மகன் குத்தலாய் கேள்வி கேட்டதும், “சாப்பிடுறப்போ பேசாத முகிலா” என்றார் ஜெயா.
“நான் இன்னும் சாப்பிடவே ஆரம்பிக்கல” அவன் முறைக்க, “ஆனா, அவன் சாப்பிடுறான்ல? கேள்வி கேட்காத” என்றார். சின்ன குரலில் என்றாலும் சற்று அழுத்தமாய்.
உதடுகள் உயர்த்தி மெச்சலாய் அன்னையை பார்த்தவன், திரும்பி மனைவியை பார்த்தான். தட்டை தாண்டி எங்குமே பார்க்காமல் உண்டுக்கொண்டிருந்தாள் யசோதா. அருகே ராதா வேறு, அவஸ்தையான முகத்துடன் எங்கே சண்டை வந்துவிடுமோ? என்ற அச்சத்தை முகத்தில் காட்டிக்கொண்டு உண்ண, கார்முகிலன் ஒன்றுமே சொல்லாமல் உணவில் கை வைத்தான்.
முதல் வாய் வைக்கும்போதே அவன் அலைபேசி ஒலிக்க ஆரம்பித்தது. மணி அப்போது ஒன்பதை தாண்டியிருக்க, அமைதியான நேரத்தில் அகால ஓசையாய் அடித்தது அலைபேசி. கையில் அள்ளிய உணவை அப்படியே தட்டில் உதறிவிட்டு வேகமாய் எழுந்து சென்று ஃபோனை எடுத்தான் கார்முகிலன்.
அவன் காட்டிக்கொள்ளாவிட்டாலும் அவனது பதட்டம் பொன்னிலவனுக்கு தெரிந்தது.
ஃபோனை எடுத்தவன், பேசிக்கொண்டே பின்வாசலுக்கு ஓடினான். ஒரே நிமிடத்தில் திரும்ப உள்ளே வந்தவன், வேகமாய் கை கழுவி, கொடியில் கிடந்த சட்டையை எடுத்து மாட்ட, “சாப்பிடலையாடா?” என்றார் ஜெயா. அதில் மற்றவர் பார்வை எல்லாம் முகிலன் மீது போனது.
அதைபற்றியெல்லாம் கவலைக்கொள்ளாதவன் சட்டை பட்டங்களை பூட்டிவிட்டு, மாடிக்கு ஓடினான். திரும்பி அதே வேகத்தில் வந்தவன், “கார்மெண்ட்ஸ் வரைக்கும் போறேன், அவசர வேலை” என்று வாசலுக்கு நடந்துக்கொண்டே சொல்ல, “நைட்டுல என்ன வேலை?” என்றான் பொன்னிலவன் சத்தமாய்.
அப்படியே நின்ற கார்முகிலன் முகத்தை மட்டும் திருப்பி, “அவசர வேலை…” என்றான் பல்லைக்கடித்து.
“அதான் என்ன வேலை?” என்று அவன் மீண்டும் கேட்க, “ரெண்டு நாலு அங்கேயே இருந்துட்டு இன்னைக்கு தானே வந்த? மறுபடியும் வேலையா?” என்றார் ஜெயா. மகன் உண்ணாமல் கூட போகிறானே என்று வருத்தம் அவருக்கு.
“சொல்லியே ஆகணுமா?” அவன் வாசலில் நின்று கேட்க, ‘ஆமாம்’ என்பது போல மற்றவர்கள் அமைதியாய் அவனை பார்க்க, அது புரிந்தாலும் பதிலே சொல்லாமல் கடுகடுவென்ற முகத்தோடு வண்டியை எடுத்துக்கொண்டு கிளம்பினான் முகிலன்.
“இவன் வர வர சரியே இல்ல பொன்னா… கிறுக்கு புடிச்ச மாறி பண்றான்” ஜெயா மனம் கேட்காமல் புலம்ப, பொன்னன் ஒன்றுமே சொல்லவில்லை. என்ன சொல்ல முடியும் அவனால்!? சலிப்பாக தலையாட்டிவிட்டு உணவை முடித்தான்.
அங்கே கடுப்போடு வண்டியை எடுத்த கார்முகிலன் வண்டியை பறக்க விட்டான் காங்கேயத்துக்கு.
ஒன்னே கால் மணி நேரத்தில் அடைய வேண்டிய இடத்தை ஐம்பதே நிமிடத்தில் அடைந்த கார்முகிலன், அந்த சின்ன மருத்துவனைக்குள் பதட்டமாய் நுழைந்தான். ஏற்கனவே அறை எண் சொல்லப்பட்டிருக்க, அந்த அறைக்கதவை மெல்ல திறந்தவனை சிறு கேவலோடு வரவேற்றாள் பெண்ணொருத்தி.
அவன் அறைக்குள் வந்ததும், வேகமாய் சென்று அவன் நெஞ்சில் சாய்ந்தவள், அழுகையோடு, “நான் சொன்னேன்ல என்னை விட்டு போகாதீங்க, பயமா இருக்குன்னு … கேட்டீங்களா?” என்றவள், “எவ்ளோ பயந்துட்டேன் தெரியுமா? எதிர் வீட்டு அங்கிள் மட்டும் நான் கேட்டதும் ஹாஸ்பிடல் கூட்டிட்டு வரலன்னா ரிஸ்க் ஆகிருக்கும். எனக்கு உயிரே இல்ல” என்றாள் அழுகையும் கோவமுமாய்.
“சாரிம்மா… இப்படி ஆகும்ன்னு தெரியாதுல?” என்று கனிவாய் சொன்ன கார்முகிலன் கண்கள் எல்லாம் அங்கே கட்டிலில் அயர்ந்து உறங்கிக்கொண்டிருந்த அவனது இரண்டு வயது குழந்தை மீதே! கையில் ட்ரிப் போட்டிருக்க, லேசாக வாய்பிளந்து உறங்கிக்கொண்டிருந்தாள்.
“எப்படி? என்ன ஆச்சு?” என்றான்.
“நீங்க கிளம்புனதும், சாப்பாடு குடுத்து தூங்க வச்சேன், ரொம்ப நேரம் தூங்குனா… அப்புறம் தூக்கத்துலயே கை கால் எல்லாம்…” சட்டென அழுதவள், “ரொம்ப பயந்துட்டேன்” என்றாள். அவள் உடல் இன்னுமே நடுங்கிகொண்டிருன்தது. அதை உணர்ந்து ஆதரவாய் இறுக அணைத்துக்கொண்டான் தன் துணைவியை.
“டாக்டர் என்ன சொன்னாங்க?” அவன் கேட்க, “காய்ச்சல் குறைய மருந்து வச்சாங்க… அப்புறம் தான் நார்மல் ஆனா… ஒன்னும் பிரச்சனை இல்ல, ஒரு ராத்திரி பார்த்துட்டு நாளைக்கு கிளம்பிக்கோங்கன்னு சொன்னாங்க…” என்று சொல்ல, “சாதா காய்ச்சல்ன்னு தான் நினைச்சேன் மீனா… ஜன்னி வர அளவு போகும்ன்னு நினைக்கல… இல்லனா உன்னை விட்டு போயிருப்பேனா?” அத்தனை அன்பாய் சொன்னான் கார்முகிலன்.
அவள் தலையசைக்க, “பார்த்தா சாப்பிட்ட மாறி தெரியலையே… சரி, நான் போய் டாக்டரை பார்த்து பேசிட்டு, நமக்கு சாப்பாடு வாங்கிட்டு வரேன்… வேற எதாவது வேணுமா?” என்றான்.
“ம்ஹும்! நீங்க கூட இருங்க போதும்!” என்றாள் அவள்.
“அரைமணில வரேன் இரு!” என்றவன், அவள் நெற்றியில் ஒரு முத்தம் வைத்துவிட்டு அங்கிருந்து அகன்றான்.