இசைக்கு தொற்று ஏற்பட்டு ஒரு வாரம் ஆகி இருந்ததால் அவள் கன்னம் தாடைகளின் வீக்கம் முற்றிலும் குறைந்திருந்தது.. அதனால் ஆருத்ரா இசைக்கு வேப்பிலை ஆமணக்கு அவித்த சுடு நீரில் தலை குளிக்க வைத்து உடை உடுத்தி கோவிலில் இருந்து கொண்டு வந்த விபூதியை நெற்றியில் தீட்டியவள்,
“இன்னைக்கு ஈவினிங் ஸ்கூல் முடிஞ்சதும் கோவிலுக்கு போய் சாமி கும்பிட்டுக்கலாம்.. அம்மா வர முடிஞ்சா வருவேன்.. இல்லன்னா பாட்டி கூட போய்ட்டு வாடா என்ன?”
“ம்ம்… அப்பா ஏன்மா சோஃபால தூங்குறார்?” என்ற மகளின் கேள்விக்கு ஆருத்ரா பதில் எதுவும் சொல்லவில்லை..
நாக்கைக் கடித்த இசை,
“ஸ்ஸ்ஸ்… சாரி.. சாரிமா.. பெரியவங்க பேசலன்னா அவங்க ஏன் பேசல எதுக்குப் பேசலன்னு கேட்டு அவங்கள எம்பாரஸ் பண்ணக் கூடாது.. அத்தோட ஒருத்தர் பத்தி ஒருத்தர்கிட்ட பேசக் கூட கூடாது இல்லையா?”
முன்னர் ஒரு முறை ஏன் பாட்டி கூட பேசுறதில்லன்னு தாயிடம் கேட்டதற்கு ஆருத்ரா கூறியதை அப்படியே அவளுக்கு படித்துக் காட்டினாள் மகள்.. அதற்கும் ஆருத்ரா அமைதியே காக்க..
” அம்மா இனிமே நான் இப்டி பண்ண மாட்டேன்..” என்றவாறு சமாதானமாய் அவள் கன்னத்தை வேறு ஈரமாக்கினாள்..
“நீ நல்லா ஐஸ் வைப்பன்னு தெரியும் கேடி.. இந்தா ரிடர்ன் கிஸ் வாங்கிக்க..” அவள் கன்னம் பற்றி தானும் அவளுக்கு முத்தம் வைத்தவள் , “சாப்பிடலாம் வா..” என்று டைனிங் டேபிள் அழைத்து வந்தாள்..
அதுவரை உள்ளே நடந்த தாய் மகளின் உரையாடலை கண் மூடிக் கேட்டிருந்த அதிரனுக்கு இசை எதனால் தங்கள் இருவரின் வாழ்க்கையைப் பற்றித் தோண்டி துருவவில்லை என புரிந்தது.
இந்த சின்ன வயதிலேயே இவ்வளவு அண்டர்ஸ்டாண்டிங் சைல்ட்டா என்று வியப்பதா இல்லை அவள் குழந்தைப் பிராயம் தங்களால் பழுவேற்றப்பட்டது என எண்ணி வருந்துவதா என கவலை கொண்டான்.. ஆனாலும் ஆருத்ராவை, அவள் வளர்ப்பையும் மனதில் மெச்சிக் கொண்டான்..
இசையை எண்ணிய போதே அவனுக்கு கவியின் சில முரட்டுக் குணங்கள் நியாபகம் வந்தது.. ஏன் நர்மதாவின் மகள் சிந்துவுக்கு இசையை விடவும் ஒரு வயது அதிகம்.. ஆனால் அவள் பேச்சில் கூட அவ்வளவு மரியாதை தெரிவதில்லை.. அவர்கள் இருவரையும் விட சிறு பெண் இசை என்கையில் அவளிடம் இருக்கும் பக்குவங்கள் எல்லாம் ஆருத்ராவிடம் இருந்து தானே வந்திருக்க வேண்டும்?
இன்று வரை ஆருத்ராவின் தவறுகள் என்று எண்ணியவை எல்லாம் ஒவ்வொன்றாக அவளின் நல்ல வளர்ப்பு என்று சான்றாகிக் கொண்டிருக்கிறது.. மனம் பார்க்கும் பார்வையில் தானே எல்லாம்.. தமக்கு ஒருவரைப் பிடித்து விட்டால் அவன் கொலை செய்தாலும் அதில் நியாயம் தேடும் மனது அதே தான் வெறுக்கும் ஒருவன் உலகைக் காக்கவென்று உயிர்த் தியாகமே செய்தாலும் அதை நன்மை என ஏற்றுக் கொள்ளாது.. அதிரனும் அந்த நிலையில் தான் இருந்தான்..
அவன் யோசனையில் இருக்கும் போதே அவர்கள் இருவரின் காலடி சத்தம் அருகில் கேட்பது போல் இருக்க அவசரமாக எழுந்தவன் அடுத்த அறை நோக்கி நடந்து கொண்டே, பின்னால் திரும்பியும் பாராமல்,
“இசை நீ சாப்டுட்டு இரு டா.. அப்பா உன்னைக் கொண்டு போய் விடுறேன் ” என்று சொல்லிக் கொண்டே விரைந்து சென்று கதவை அடைத்தான்.. எங்கே அப்பா என்று இசை அருகில் வந்து தன் மீது வரும் சரக்கு வாசத்தை அறிந்து கொண்டாலும் என்ற பயத்தில் ஓடியிருந்தான்.. அப்படி ஒன்றும் வாடை வருமளவு மட்டமான சரக்கை அடிக்கவில்லை ஆனாலும் சின்ன எச்சரிக்கை..
அதிரன் குளித்தானா? இல்லை மேலே தண்ணீரைத் தெளித்தானா? தெரியாது.. ஆனால் அடுத்த ஐந்து நிமிடத்தில் எங்கே குளித்தும் சரக்கின் ஸ்மெல் தெரிந்து விடுமோ என்ற பயத்தில் வழக்கத்திலும் அதிகமாக வாசனைத் திரவியத்தை தன் மீது அள்ளித் தெளித்துக் கொண்டு வந்து நின்றவனை நினைத்து ஆருத்ரா மனதில் கசப்பாக சிரித்துக் கொண்டாள்..
அதற்குள் இசை சாப்பிட்டு முடித்திருக்க அவளை கையில் ஏந்திக் கொண்டவன் …
“இசை அம்மாவை கொஞ்ச நேரம் இங்க இருக்க சொல்றியா? உன்னை ஸ்கூல்ல விட்டு வந்து அப்பா அவ கூட கொஞ்சம் பேசணும்.” என்று ஆருத்ராவில் பார்வையைப் பதித்து கோரிக்கையை மகளிடம் வைத்தான்..
இசை, தாய் போதித்த பாடத்துக்கு எதிராக எப்படி தாயிடம் இதை சொல்ல? என்பது போல் தாயைப் பார்த்து முழித்தாள்..
ஆருத்ரா டைனிங் டேபிளில் இருந்த தன் கைப்பையை எடுத்துக் கொண்டவள்,
பை இசை.. அம்மாக்கு வேலைக்கு போகணும் டைம் ஆச்சு.. இன்னைக்கு அங்க பாட்டி வீட்டுக்கு வந்துடுங்க..” இனியும் முன் போல் தான் உன்னோடான என் உறவு நிலை என்று சொல்லாமல் சொல்லி சென்று விட்டாள்..
இசை தந்தையை பாவமாகப் பார்த்து நின்றாள்.
“பார்த்தியா செல்லம்மா … உனக்கே அப்பாவை பார்க்க பாவமா இருக்குல? ஆனா உங்க அம்மா அப்பாவை பாவமே பார்க்க மாட்டேங்கிறா.. நேத்தும் அவகிட்ட என்னவோ பேசின நியாப்பாகம்.. ஆனா அப்போ கூட இவ ஒன்னும் பேசாம தான் நின்னிருப்பா.. எனக்கு நல்லாத் தெரியும்..” (டாக் பேசி பேசி அவ மேலயே மட்டையாகிட்டு இப்போ பேசுது..)
“நேத்து நீங்க பேசினீங்கன்னா இன்னைக்கு ஏன் என்னை அம்மாகிட்ட சொல்ல சொல்லி சொன்னீங்க.. நீங்களே சொல்லிருக்கலாமே?”
“அதுக்கு நான் காலங்காத்தாலயே ஃபுல் அடிச்சிட்டுல்ல இருக்கணும்..” என்று முணுமுணுத்தான்..
“என்னப்பா?”
“இல்லைடா, நாம மூணு பேரும் ஒண்ணா.. ஒரே வீட்ல இருக்கறது உனக்குப் புடிச்சிருக்காடா?” மெல்ல மகளுக்கு ஆர்வத்தை ஊட்டினான்..
“ம்ம்…. ஒரே டைம்ல ரெண்டு பேரு கூடவும் இருக்கலாம்ன்னா ஜாலியா தான் இருக்கும்..” என்று ஆசையாகச் சொன்ன மகளை உச்சி முகர்ந்தவன்,
“என் செல்லம்மா ஆசைப்பட்டா அதுக்கு அப்பீலே இல்லை.. அதை சீக்கிரமே பண்ணிடலாம்.. இப்போ ஸ்கூலுக்கு போலாம்.. டைம் ஆச்சுல” என்றவாறு மகளுடன்பறந்தான்..
******************
மதிய வேளை உணவு உண்டு கொண்டு இருந்த புவனேஸ்வரி ஏற்கனவே உண்டு விட்டு காத்திருந்த அம்பிகாவிடம்,
“அம்பி , சாயங்காலம் அதியை போய்ப் பார்த்துட்டு வந்திடலாம்.. அவனுக்கும் இசைக்கும் சேர்த்தே சமைச்சுடு.. போகும் போது எடுத்துட்டு போயிடலாம்..
பாவம் புள்ள உடம்பு முடியாம இருக்கான்னு சொல்லியும் அவ இருக்கும் போது போக வேணாம்ன உன் பிடிவாதத்தால பார்க்கவே போகல.. ஜீவா கூட போய் பார்த்திட்டு வந்துட்டான்.. அதி சொன்னது வச்சுப் பார்த்தா இன்னைக்கு அவ போயிருப்பா.. அதனால நாம போலாம்..” என்று சொன்னவரை மறித்து அவள் ஏதோ மறுப்பாய் சொல்ல வந்தாள்..
“ஏதும் மறுத்து பேசாத அம்பி.. கவி , சிந்து மாதிரி இசையும் என் பேத்தி தான்.. கவிக்காக எவ்ளோ பண்ண நான் இசைக்காக எதுவுமே செய்யல.. இனியாவது அவ கூட நல்ல முறைல உறவை வளர்த்துக்க விரும்புறேன்.. அதுக்கு தடையா நீ இருக்காத.. ஏன்னா அவ உன் தம்பி புள்ள, அவளை நீ வேத்தாளா பார்த்தா அதி கவியையும் வேத்தாளா தான் பார்ப்பான்.. நானும் நீயும் மட்டும் தான் அங்க அதி வீட்டுக்குப் போறோம்..” என்றதையும் அழுத்தி சொல்லி விட, அம்பிகா அடுத்து பேச மொழியில்லாது மௌனம் ஆனாள்..
ஏழு மணியளவில் அதி வீட்டினுள் காலிங் பெல் கூட அடிக்காது உள்ளே சென்ற புவனேஸ்வரியும் அவரை தாங்கி மெல்ல கூட்டி சென்ற அம்பியும் கண்டது அதிரன் கைப் பிடியினுள் நின்று திமிறிக் கொண்டிருந்த ஆருத்ராவைத் தான்..
ஆருத்ரா வீட்டிற்கு ஃபோன் செய்தவள் இசையை தாய் கோவில் அழைத்து சென்றாரா என்று கேட்டாள்.. ஆனால் அதற்கு முன்னே அவளை அதிரன் அழைத்து சென்று விட்டதாக கூற சரியென்று ஃபோனை வைத்து விட்டாள்..
அவன் வீட்டிற்கு செல்லக் கூடாது என்று நினைத்தாலும் அவள் உடல் நிலை பற்றி அறிந்து விட்டு அருகில் உள்ள கோவிலுக்கு அழைத்து சென்று மீண்டும் அவன் வீட்டில் விட்டு விட்டு வந்து விடலாம்.. என்று எண்ணி வந்தவளை தான் அதிரன் வளைத்துப் பிடித்துக் கொண்டான்..
இசை உள்ளே அறையில் அதிரன் மொபைலில் ஹெட்செட் மாட்டி கார்ட்டூன் பார்த்துக் கொண்டிருந்ததால் வெளியே நடந்த இந்த ஆரவாரங்கள் அவளுக்குத் தெரியாது போனது..
அதிரன் அவளிடம் பேச வேண்டும் என்று கேட்டு நிற்க, வழக்கம் போல அதை உதாசீனம் செய்து அறைக்குள் செல்ல முயன்றவளை தடுத்துப் பிடிக்கும் போது தான் இவர்கள் வந்தது..
தாயும் தமக்கையும் வந்திருந்தது கண்டு அதிரன் அதிர்ந்தாலும் ஆருத்ராவை சுற்றி இருந்த கையை எடுத்து விட்டு அவர்களை “வாங்கம்மா , வா க்கா..” என்று முறையே வரவேற்றான்..
அந்த கேப்பில் ஆருத்ரா மகள் இருக்கும் அறைக்குள் நுழைந்து கொண்டாள்.. அவளுக்கு அங்கு நின்று அவர்கள் முகம் பார்த்திருக்க வேண்டுமா? என்ற நினைவே கசக்க இங்கே வந்திருக்க வேண்டாம் என்று நூறாவது முறையாக நொந்திருந்தாள்..
உள்ளே வந்த புவனேஸ்வரி அமைதியாக நீள் இருக்கையில் அமர்ந்து கொண்டார்.. ஆனால் அம்பிகாவுக்கு தான் கண்ட காட்சியில் பற்றிக் கொண்டு வந்தது.. இவள் இருக்கும் போது இங்கே வர வேண்டாம் என்று எண்ணி இன்று வந்தால் இங்கே இவர்கள் இருக்கும் நிலை? என்று உள்ளே கொதித்துப் போனாள்..
“அப்பறம் என்ன அதி, கிச்சன் எங்க இருக்குன்னு சொன்னேனா, உன் வீட்டுக்கு வந்த நாங்களே என்ன வேணுமோ போய் எடுத்துக்கிறோம்.. வீடு பார்க்கும் போது கூட்டி வந்து காட்டிருந்தா கூட பரவால, எங்களுக்கா எல்லாம் தெரிஞ்சிருக்கும்..” அம்பிகாவின் வாயில் இருந்து குத்தலாக வந்து விழுந்தன வார்த்தைகள்..
அவளை முறைத்தவன்…
“அப்போ அம்மாக்கு எதுக்கு வீண் சிரமம்ன்னு தான் கூப்டல.. அத்தோட நான் கூப்டு தான் வரணும்கிற அளவு நீங்க ஒன்னும் அந்நியம் இல்லையே? வீட்டைப் பார்க்கணும்னா இப்போ கூட போய் பாரு.. இப்போ இருக்க மாதிரி தான் நான் வீடு பார்க்கும் போதும் வீடு இருந்திச்சு..” என்றான் அதிரன்..
“உனக்கா அதி பேச சொல்லி தரணும்? என் பொண்ண விட்டு இருக்க முடிலன்னு சொல்லி தனி வீடு பார்த்துட்டே.. கூடவே அவ அம்மாவையும் ஓட்டிட்டு வந்து வச்சிருக்க?”
“அக்கா..” என்று குரல் உயர்த்தியவன் விழி சிவக்க, ஒற்றை விரலை நீட்டி “வார்த்தை பத்திரம்..” என்றான் அழுத்தமாக.. ‘என் பொண்டாட்டி தான கூட இருக்கா.. அடுத்தவன் பொண்டாட்டியவா கூட வச்சிருக்கேன்?’ எனக் கேட்க வாய் வரை வந்தாலும் தாய் இருப்பதால் வார்த்தைகளை நிறுத்திக் கொண்டான்..
“அம்பி நீ சும்மா இருக்க மாட்ட?” என்று மகளை அதட்டிய புவனேஸ்வரி மகனிடம், “நாங்க பேத்திய பார்க்க தான் பா வந்தோம்.. எங்க அவளைக் காணோம் ” என்று பார்வையை சுழற்றினார், பேச்சை வேறு திசைக்கு திருப்பும் முயற்சியில்..
அதிரனுக்கு, மகள் சுகயீனத்தில் இருக்கும் போது பார்க்க வராதவர்கள் குணமானதும் பார்க்க வந்திருப்பது எதனால் என்று புரிந்து தான் இருந்தது.. ஏன் அவள் இங்கு இருந்தால் இவர்களுக்கு என்ன? தாங்கள் வந்து இசையைப் பார்த்து விட்டுப் போய் இருக்கலாமே.. என்று தான் தோன்றியது.. இருந்தும் அதை மறைத்துக் கொண்டு,
“இதோம்மா கூட்டிட்டு வரேன்..” என்று விட்டு உள் அறை நோக்கி சென்றான்.. இசை ஆருத்ரா மடியில் அமர்ந்து கார்டூனி்ல் கவனம் வைத்திருக்க ஆருத்ரா அவளை ஆதரவாக பிடித்திருப்பது போல் பிடித்துக் கொண்டு அவள் தலையில் சாய்ந்து விழி மூடி இருந்தவள் முகமே ஏதோ போல் இருந்தது.. பழைய கசடுகளின் தாக்கமாக கூட இருக்கலாம்..
ஏனென்ற காரணம் அறியாவிடினும் அவள் நிலையே இவனுக்கு உள்ளே ஒரு வலியை உண்டு பண்ண, எப்போது தன் வீட்டினர் கிளம்புவர், இவளோடு பேசுவேன் என்று தவித்தான்..
மெல்ல அவள் அருகே சென்று இசையின் ஹெட் செட்டை கழற்றி விட, கார்டூன் தடைப்பட்டதில் அவள் நிமிர்ந்து “என்னப்பா?” என்று சிணுங்கினாள்..
“பாட்டியா? பாட்டி ஏன் இங்க வந்திருக்காங்க? ஓ இப்போ தான் என்னை கோயிலுக்கு கூட்டிப் போக வந்திருக்காங்களாமா?” வந்திருப்பது மீனாட்சி என்று நினைத்துக் கொண்டு அவள் தாயைக் கேட்டாள்..
மகளின் கேள்விக்கு ஆருத்ரா அமைதியாய் இருந்தாளே அன்றி எதுவும் பேசவில்லை.. அதில் அதிரனுக்கு சுர்ரென்று ஏறியது..
“இசை, உனக்கு உங்க அம்மாவோட அம்மா மட்டும் தான் பாட்டியா? என்னோட அம்மா பாட்டி இல்லையா?”
செல்லம்மா என்று உருகி உருகிப் பேசும் தந்தை தன்னிடம் முதல் முறை கடுமை காட்டுவது போல் பேச இசைக்கு சட்டென முகம் சுருங்கியது.. ஆருத்ரா அதிரனை ஒரு பார்வை தான் பார்த்தாள்.. எனக்கு செய்ததையே என் மகளுக்கும் செய்வாயா? என்பது போல் தான் இருந்தது அவள் பார்வை..
அவள் பார்வையின் பொருள் அதிரனுக்கு புரியாவிட்டாலும் மகளின் வாடிய முகமும் அவள் பார்வையின் தீட்சண்யமும் ஒன்று சேர்ந்து தாக்க இருவரின் தாக்குதலையும் தாங்கும் திறனின்றி இசையைத் தூக்கிக் கொண்டவன் ,
“சாரிடா அப்பா ஹார்சா பேசிட்டேனா? சாரி.. உனக்கு உடம்பு முடிலன்னு தான பார்க்க வந்திருக்காங்க? அப்படியிருக்க நீ அங்க இல்லேன்னா நல்லா இருக்காதுடா.. நீ ஜஸ்ட் அங்க வந்து நின்னா போதும்.. வேற ஒன்னும் பண்ண வேணாம்.. அப்பாக்காக வரியாடா?” என்க, அப்போதும் தாயைத் தான் பார்த்தாள் மகள்..
மகளின் பார்வையைத் தொட்டு அதிரனும் அவளைப் பார்த்தவன்,
“ருத்ரா, சொல்லு அவகிட்ட..” என்றவும் ஆருத்ரா தான் எழுந்தவள், இசையை அவனிடம் இருந்து தூக்கிக் கொண்டு வெளியே சென்றாள்..
நேரே புவனேஸ்வரிக்கு எதிரே இருந்த இருக்கையில் அமர்ந்தவள் இசையை தன் மடியில் இருத்திக் கொண்டாள்.. அத்தோடு புவனேஸ்வரியை பார்வை பார்த்தாளே ஒரு பார்வை.. எங்கே என் பிள்ளையை உரிமை கொண்டாடித் தான் பாரேன்? என்று சவால் விட்டது அவள் பார்வை..
அவ்வளவு தான் அவருக்கு சப்த நாடிகளும் அடங்கிப் போய் விட்டது.. அதன் பின் பேத்தியென்று பாசமாகப் பேச என்ன சாதாரணமாகப் பேசக் கூட முடியாதவாறு அவர் நாக்கு மேலண்ணத்தில் ஒட்டிக் கொண்டது..
அவர் அமைதியே கடைப் பிடிக்க, அம்பிகா தான் திரியின்றி கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருந்தாள்.. யார் முன்னே யார் வந்து இப்படி சட்டமாக அமர்ந்திருப்பது என..
அதிரனே ஆருத்ராவின் இந்த செயலுக்கு என்ன வினையாற்ற என்று புரியாது பார்த்திருக்க, அவனிடம் காய்ந்தாள் அம்பிகா..
“அதி, உன் வீட்ல உன் பொண்ணைப் பார்க்க நாங்க வந்தா, எங்க கண்ணுல எது படக் கூடாதோ அதுலாம் படுது.. அதான் உன் பொண்ணுக்கு குணமாகிடுச்சுல? இவளை இன்னும் ஏன் இங்க வச்சிருக்க? தொரத்தி விட வேண்டியது தானே?”
அம்பிகா பேசியதில் அதிரனுக்கு கோபம் வந்தாலும் அவன் சட்டென இசையைத் தான் திரும்பிப் பார்த்தான்.. அவள் அம்பிகாவைப் பார்த்த பார்வை, அன்று பார்க்கில் தாயை பேசிய பெண்மணி என்று காட்டி அவரைப் பார்த்த அதே பார்வை.. வெறுப்பு , கோபம், அதிருப்தி எல்லாம் கலந்த பார்வை..
புவனேஸ்வரியும் மகளைப் பேச விட்டு வழமை போல் அமைதி காக்க.. “இசை தாயின் மடியில் இருந்து எழுந்தவள், தாயையும் கையைப் பிடித்து இழுத்தாள்.. “வாங்கம்மா நாம நம்ம வீட்டுக்கு போலாம்..” என்று..
இசை ஆருத்ராவின் தாய் வீட்டை எங்க வீடு என்று குறிப்பிட்டதிலேயே அதிரன் மொத்தம் உடைந்து விட்டான் என்றால் இதில் ஆருத்ராவும் “சரிடா நாம நம்ம வீட்டுக்கே போலாம் ” என்று அந்த நேரம் அவளை அழைத்துச் செல்ல ரெடியாகவும் அதிரன் தன்னைக் கையாலாகாதவனாய் உணர்ந்தான்..
“அக்கா நீ இங்க வந்ததுக்கு ரொம்ப நல்ல வேலை பண்ண.. அதுக்கு ரொம்ப தேங்க்ஸ்.. அம்மா நீங்க கொஞ்சம் இருங்க.. நான் அவங்களை பத்திரமா வீட்ல விட்டுட்டு வந்துடுறேன்..” என்று தன் காரில் அவர்களைப் பின் தொடர்ந்தான்..