“உங்க பாண்டிங் எல்லாம் ரொம்ப நன்னாயிட்டுண்டு. எனக்கு இதெல்லாம் புதுசு.”
“உங்களுக்கு கசின்ஸ் எல்லாம்?!”
“அல்லா அப்பா அம்மா லவ் மேரேஜ் அதனாலே பெருசா எந்த சொந்தமும் இல்லா.”
“ஓ அதுக்கென்ன ஹீரோ சார் நாங்க எல்லாம் இருக்கோம் இப்போ டோண்ட் வொரி.
எப்போ தோணினாலும் இங்கே கிளம்பி வந்துருங்க..”
“ஹா ஹா தேங்க் யூ மலரே. பட்சே ஒவ்வொரு டைமும் அம்மைகிட்ட பொய் சொல்லி வரணும்.”
“ஏன்?”
“காலேஜ் டேசில் என் க்ளாஸ்மேட் ஒருத்தன் மதுரை தான். அப்போ இருந்தே எனக்கு இந்த ஊர் திருவிழா எல்லாம் வலர இஷ்டம். ஒரு தடவை அம்மேகிட்ட சோதிச்சப்போ விடவே மாட்டேனுட்டா.
கேட்டால் ஏதேதோ காரணம். அப்பறம் சினிமாக்கு வந்தப்பறம் அதுவே காரணமா சொல்லுவா கூட்டம் தனியா எல்லாம் போகாதே அப்படி இப்படினு”
“இப்பவும் தெரியாம தான் வந்துருக்கீங்களா?”
“ம்ம் அட் ஷுட்க்காக மும்பை போறாத சொல்லிருக்கேன்.”
“நல்லவேளை உங்க அம்மாவை இவளுக்குத் தெரியாது. இல்லைனால் முதல் வேலையா உங்களைப் போட்டு கொடுத்துட்டு தான் மறுவேலை பார்ப்பா..”
“ஆனோ மலரே?!!”
“ஐயோ ச்ச நான் போய் அப்படியெல்லாம் பண்ணுவேனா? இவனுக்கு நம்ம ப்ரெண்ட்ஷிப்பை பார்த்து பொறாமை தங்கம். உங்களை போய் மாட்டிவிடுவேனா?”, என்றதோடு கார்த்திக்கின் கழுத்தைப் பிடித்து நெறித்து வைத்தாள்.
“ஆ கொலைகாரி விடு டி. சரியான குட்டிசாத்தான் இவ. நம்பாதீங்க முகுந்தன்.”
“குட்டிச் சாத்தான் என்ன பண்ணும்னு காட்டடுமா?”
“ஐயோ தாயே அமைதியா வா. நல்ல படியா நாங்க ஊர் போய் சேரணும்.”, இப்படியான இவர்களின் அட்டகாசத்தில் சிரித்த வண்ணம் அமர்ந்திருந்தான் உன்னி முகுந்தன்.
நான்கு மாட வீதிகளும் மக்கள் வெள்ளத்தில் கலகலத்திருக்க மாஸ்கையும் தொப்பியையும் அணிந்து கொண்டவனாய் இருவரோடும் இறங்கி நடக்க ஆரம்பித்தான்.
நெரிசலான இடங்களில் மங்கை முன்னே செல்ல முகுந்தனை நடுவில் விட்டு கார்த்திக் அவன் பின்னே சென்றான். கோவில் தரிசனத்தை முடித்து விட்டு வெளியே வந்தபின் மங்கை பார்க்கும் கடையிலெல்லாம் நின்று எதையாவது வாங்கிக் கொண்டிருந்தாள்.
அத்தனையும் நூறு ரூபாய் கூட பெறாத கம்மல் வளையல் பொட்டு குங்குமம் என்பதாய் இருந்தது. முகுந்தன் அவளது தேர்வுகளையே பார்த்து வர கார்த்திகேயனோ ஒரு கட்டத்தில் பொறுமை இழந்திருந்தான்.
“பாப்பா பத்து நாளுக்கு அப்பறம் ஊரே காலியாகிட போகுதா? வா போலாம். வெயில் வேற முடியலை. பாரு முகுந்தன் பாவம்.”
“சாரி சாரி மாமா இதோ முடிஞ்சுது வா போலாம்.”, என்றவளை அழைத்து வந்து காரில் அமர்த்தி ஏசியை உயிர்பித்த பின் தான் நிம்மதி பெருமூச்சே வந்தது.
“எதுக்கு டி இவ்வளவு? நீ போட போறதும் இல்லை?”
“எனக்கா?? நீ வேற. குங்குமம் அம்மா அத்தை சித்திக்கு இந்தப் பொட்டு பாக்கெட்டும் கம்மலும் அம்மு வாங்கி வைக்க சொல்லிருந்தா. இந்த மத்ததெல்லாம் க்ரவுண்ட்டில் விளையாட வர்ற பசங்களுக்கு மாமா. பாவம் வசதியில்லாத வீட்டு பிள்ளைங்க கொண்டு போய் கொடுத்தா ஆசையா வாங்கிக்கும்.
மதுரையில் இருக்கேன்னு பேரு இங்கே எல்லாம் திருவிழா அப்போ வர்றதோட சரி.
அதனால தான் மொத்தமா வாங்கிட்டேன்.”, என்றதில் ஆண்கள் இருவருமாய் புன்னகைத்தனர்.
“உங்க ரெண்டு பேருக்கும் எதுவும் வேணுமா சொல்லுங்க வாங்கிடுவோம்..”
“ஜிகர்தண்டா சாப்பிட்டுட்டு வீட்டுக்கு போயிடலாம் கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுங்க.”
“மாமா பாரேன் மூஞ்சியெல்லாம் பிங்க் ஆயிடுச்சு”, என்றதில் இன்னுமாய் கைக்குட்டையை வைத்து முகத்தை ஒற்றி எடுத்தான்.
வீட்டிற்கு வந்தவனைப் பார்த்த பெண்கள் அனைவரும் மங்கையிடமும் கார்த்திகேயனிடமும்,
“ஒரே நாள்ல ஊரு மொத்தத்தையும் சுத்தி காட்டிடீங்களா? பாவம் பிள்ளை களைச்சு போயிருக்கே..”
“தம்பி போங்க கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுத்துட்டு வாங்க அதுக்குள்ள சமையல் முடிஞ்சுரும்.”
“குழப்போயில்லா நான் ரூம்க்கு..”
“ஷ்ஷ்ஷ்.. பேச்சை குறைங்க.. வாங்க போலாம்..” என்ற மங்கை மாடியை நோக்கி கை காட்ட அமைதியாய் மேலே சென்றான்.
“கீழேயும் ரூம் இருக்கு ஆனால் நாங்க போடுற சத்தத்தில் கண்டிப்பா உங்களால ரெஸ்ட் எடுக்க முடியாது.”, என்றவள் கதவைத் திறந்து ஏசியையும் போட்டு விட்டுத் திரும்பினாள்.
“தூக்கம் வந்தா தூங்குங்க. இல்லை எப்போ சாப்பிடணும்னு தோணிணாலும் கீழே வந்துருங்க நான் அங்கேயே தான் இருப்பேன். ஃபீல் ஃப்ரீ ஓகே?”, என்றவள் வெளியே செல்ல திரும்ப,
“மலரே!!
“ம்ம்?”
“தேங்க்ஸ்..”
“எதுக்கு?”
“சும்மா தான் நீ போய்க்கோ..”
“அந்த பயம் இருக்கணும்.”, என்றவள் கண்சிமிட்டி வெளியே செல்ல கட்டிலில் விழுந்தவனுக்கு இது அனைத்துமே புதியதொரு அனுபவம்.
தனது கைப்பேசியில் காலையில் மூவருமாய் எடுத்த புகைப்படங்களைப் பார்த்தவனுக்கு அந்தப் பொழுதுகள் எல்லாம் பசுமையான நினைவுகளாய்.
அதை விட மலர் என்பவள் பலப்பல விதங்களில் அவனை ஈர்த்துக் கொண்டேயிருந்தாள்.
மொத்தக் குடும்பத்திற்கும் பிடித்த ஒருவளாய் எப்படியிருக்க முடியும்.
பிடித்தவள் என்பதை விட செல்ல பெண்ணல்லவா. அதிலும் ஆண்கள் பெண்கள் என அத்தனை பேரும் பாப்பா பாப்பா என்று அழைத்தது முகுந்தனிற்கு கேட்கவே அத்தனை பிடித்தமாய் இருந்தது.
ஆனால் அத்தனை அன்பிற்கும் தகுதியான அவளது கள்ளம் கபடமற்ற மனம் இப்படியான ஒருவளை இதுவரைப் பார்த்ததேயில்லை என்று தான் தோன்றியது.
அன்பைத் தவிர ஒன்றும் அறியா பருவ வயது குழந்தையாகவேத் தெரிந்தாள்.
ஏதேதோ சிந்தனைகளில் உழன்றவன் அவனறியாமல் கண்ணயர்ந்திருக்க மீண்டும் எழுந்த போது மணி இரண்டாகியிருந்தது.
நீண்ட நேரம் தூங்கியதை எண்ணி நொந்தவனாய் முகத்தை கழுவிவிட்டு கீழே செல்ல கனியனும் பூங்கோதையும் சோபாவில் அமர்ந்திருந்தனர்.
தற்செயலாய் அங்கு வந்த குணவதி அவனைக் கவனித்தவராய்,
“வாங்க தம்பி நல்லா தூங்குனீங்களா? பாப்பா தான் எழுப்ப வேண்டாம்னு சொல்லிட்டா.. வாங்க சாப்பிடலாம்.”