“இதோ சார் பார்த்துட்டு இருக்கேன் சார் ஒரு நிமிஷம்….”என்று அவள் குரல் கொடுத்துக் கொண்டே திரையில் பார்வையிட,
“என்னமா எவ்வளவு நேரம் பார்ப்ப….இதுக்கு தான் நல்ல படிச்ச ஆளா போடுங்கனு சொன்னேன்….இந்த அரைகுறை எல்லாம் போட்டு என் உயிரை வாங்குறாங்க….”என்று எப்போதும் போல் அவர் ஆரம்பிக்க,
“சார் இருபது இருக்கு சார்….ஆறாவது ரோல இருக்கு சார்….”என்று அமிர்தா கூறிக் கொண்டே அந்த புடவை இருக்கும் இடத்திற்கு சென்றவள்.அவர் கேட்ட புடவையை அவரின் கையில் எடுத்துக் கொடுத்துவிட்டு வந்து தான் மீண்டும் தனது இருக்கையில் அமர்ந்தாள்.
“ம்க்கும் இதை எடுக்க இவ்வளவு நேரம்….”என்று அப்போதும் வசவு பாடிக் கொண்டு தான் சென்றார்.அமிர்தாவிற்கு இதெல்லாம் புதிதல்ல என்பதால் அவள் எதையும் காதில் வாங்கவில்லை தனது வேலையில் மூழ்கி விட்டாள்.அவள் வேலை செய்யவது சென்னையில் உள்ள ஒரு பெரிய துணி கடையின் குடோனில் வரும் புடவைகளின் எண்ணிக்கை ஆராய்ந்து தரம் பார்த்து கணக்கிட்டு அடுக்குவது தொடங்கி குடோனை ஒழுங்கு படுத்தி சுத்தப்படுத்துவது வரை இவள் தான்.இவளுடன் மேலும் பத்து பெண்கள் வேலை செய்கின்றனர் தான் ஆனால் அவர்கள் வரும் புடவைகளின் விலை பட்டியலை ஒட்டுவது அதனை உரிய இடத்தில் வைப்பதுடன் அவர்கள் வேலை முடிந்துவிடும்.
அமிர்தாவின் அம்மா சாவித்ரி இங்கு பல வருடங்களாக வேலை செய்தவர் என்பதால் அவர் இறந்த பிறகு அமிர்தாவிற்கு அதே வேலை இங்கு கிடைத்தது.இதில் அவள் பன்னிரெண்டாம் வகுப்பு முடித்திருந்ததால் கணக்கீட்டு வேலையும் சேர்த்து இவளுக்கு கிடைத்தது.இதோ அனைவரும் கிளம்பிய பின் குடோனை சுத்தமாக கூட்டி துடைத்துவிட்டு வெளி வரும் போது மணி ஒன்பதரை.
“என்னம்மா வேலை எல்லாம் முடிச்சிட்டியா….”என்று கேட்டபடியே குடோனை பூட்டி சாவியை சட்டை பையில் போட்டுக் கொண்டார் குடோனின் வாட்ச்மேன் வேலை பார்க்கும் தாத்தா.
“ஆச்சு தாத்தா….”என்றவள் வேகமாக பேருந்து நிறுத்தம் நோக்கி நடக்க தொடங்கினாள்.அவளை போலவே இன்னும் சில பெண்களும் வேலை முடித்துக் கொண்டு வந்து கொண்டிருக்க வேகமாக அவர்களுடன் அவளும் ஒன்றாக சேர்ந்து கொண்டாள்.அவர்களுடன் பேருந்து நிறத்தம் வந்தவள் இரு பேருந்துகள் மாறி தான் தங்கியிருக்கும் மகளிர் விடுத்திக்கு வந்தாள்.
தனது அறைக்கு வந்தவள் அலுப்பு தீர குளித்துவிட்டு வர,
“சாப்பாடு எடுத்து வச்சேன் அமிர்தா…..ஏன் இன்னைக்கு இவ்வளவு லேட்….”என்று கேட்டாள் அவளுடன் தங்கியிருக்கும் அறை தோழி பாரதி.
“நன்றி பாரதிக்கா….பஸ் நடு வழியில பஞ்சர் அதான் லேட்…..”என்று கூறிக் கொண்டே சாப்பாட்டை வாயில் திணித்தாள் அமிர்தா.அரை வேக்காட்டில் வெந்த சப்பாத்தியும்,அதற்கு குருமா என்ற பெயரில் அவர்கள் வைத்திருந்ததும் அவளின் நாக்கிற்கு ருசிக்கவில்லை தான் ஆனால் பசி அனைத்தையும் பின் தள்ளியது.அவள் கடைசியாக ருசியாக அம்மாவின் கைகளால் உண்டது அவ்வபோது நினைவுகளில் வந்து தான் போகும்.
தனக்கு உணவு எடுத்து வைத்ததுக்கு பாரதிக்கு மீண்டும் நன்றியை உரைத்துவிட்டு தனது பாயை போட்டு படுத்த அமிர்தாவிற்கு தூக்கம் தான் அவ்வளவு எளிதில் வரவில்லை.அவள் தங்கியிருக்கும் விடுதி நடுத்தர வர்க்கத்திற்கும் கீழ் இருப்பவர்கள் இருக்கும் விடுதி அதனால் அங்கு வசதிகளும் கம்மியாக தான் இருக்கும்.இங்கு இருப்பவர்களும் இவளை போல் தான் ஏதாவது கடை அல்லது சூப்பர் மார்கெட்டில் வேலை செய்பவர்களாக தான் இருப்பர்.
தனக்கு மேலே ஏதோ பெயருக்கு ஓடிக் கொண்டிருக்கும் மின்விசிரியை பார்த்துக் கொண்டே இருந்தவளுக்கு எப்போதும் போல் தன் அன்னையின் நினைவு தான் வந்தது கூடவே எப்போதும் அவர் கூறும்,
“அம்மு கண்ணு…..நீ நல்ல படிச்சு நல்ல வேலைக்கு போகனும் அப்ப தான் நாம நமக்குனு ஒரு வீடு வாங்க முடியும்….புரியுதா….”என்று தங்கள் உடைந்த ஓட்டு வீட்டின் வழியை தெரியும் நட்சத்திரங்களை பார்த்துக் கொண்டே கூறும் போது அவரின் கண்களில் கனவு மின்னும்.
“அம்மா நம்ம வீட்ல தோட்டம் எல்லாம் வைக்குற மாதிரி வீடு வாங்கனும்மா….”என்று நான்கு வயதான அமிர்தாவும் அவரின் இடையை கட்டிக் கொண்டு கூறுவாள்.
“நிச்சியம் வாங்குவ கண்ணு….நீ நல்லா படிச்சு நல்ல வேலைக்கு போனா நிச்சியம் உன்னால முடியும் கண்ணு….”என்று மகளை உச்சி முகர்ந்து கூறுவார் சாவித்ரி.
அமிர்தாவின் அன்னை சாவித்ரி ஒரு கூலி குடும்பத்தில் பிறந்தவர் படிக்க வேண்டும் என்ற ஆசை இருந்தாலும் அவரால் படிக்க முடியாத சூழல்.அன்றாடம் பிழைப்பிற்கே அல்லாடுபவர்களுக்கு படிப்பு என்பதெல்லாம் எட்டா கனி தான் போல.சாவித்ரியின் இருபது வயதிலேயே அவருக்கு ராஜா என்பவருக்கு திருமணம் முடித்துவிட்டனர்.ராஜா சறுக்கு லாரி ஓட்டுபவர்.
பிறந்த வீட்டை விட புகுந்த இடம் சற்று பரவாயில்லை என்று இருக்கும் சாவித்ரிக்கு.கணவனின் வருவாயில் வாழ்வை ஓட்டி விடலாம் தான் ஆனால் அவரின் கனவான வீடு அது நிறைவேற பணம் வேண்டும் தன்னால் முடிந்த மட்டும் வீட்டின் செலவுகளை குறைத்துவிடுவார்.ராஜாவிற்கு மனைவியின் மனதும் அதில் அவர் காணும் கனவு புரிந்ததால் அவரும் மனைவிக்கு உறுதுணையாக இருந்தார்.சாவித்ரி வீட்டில் இருந்து கொண்டு மசாலா சாமான்கள் அரைத்து பக்கத்தில் இருக்கும் மளிகை கடைக்கு கொடுத்து அதில் வரும் வருவாயில் சிறு சிறு வீட்டு தேவைகளை பூர்த்தி செய்து கொள்வார்.அவர்களின் ஒற்றை பெண்ணரிசியாக பிறந்தவள் தான் அமிர்தா.
சிறிய குடும்பம் என்றாலும் அதில் அவர்கள் மகிழ்ச்சியுடன் தான் வாழ்ந்தனர்.அளவுக்கு அதிகமாக ஆசைகள் என்பது மூவரிடமும் இருந்ததில்லை.வருகின்ற வருவாயில் தங்களால் முடிந்தவரை சேமித்து அதில் சின்ன சின்ன சந்தோஷங்களை அனுபவித்து என்று அது ஒருவித சொர்க காலம் என்று தான் கூற வேண்டும்.அப்படி ஓடிக் கொண்டிருந்த அவர்களின் வாழ்வில் திடீர் என்று விழுந்தது ராஜாவின் இழப்பு.ஆந்திராவிற்கு சறுக்கு ஏற்றி சென்ற போது லாரி விபத்துக்குள்ளாகி சம்பவ இடத்திலேயே உயிரை விட்டார் மனிதர்.
அதன் பிறகு அமிர்தாவிற்கு சாவித்ரி தான் அனைத்தும் ஆகி போனார்.கணவன் இருந்த வரை தெரிந்திராத வறுமை அவர் இறந்த பிறகு தெரிந்தது.கையில் குழந்தையுடன் மிகவும் அவர் கஷ்டபட்ட நேரத்தில் அவரின் பக்கத்துவீட்டு பெண் அவரை ஒரு துணி கடையில் சேர்த்துவிட்டார்.
தான் படிக்காமல் வாழ்வில் சரிந்துவிட்டோம் என்று புரிந்து கொண்டவர் மகளை மிகவும் கடினப்பட்டு தான் படிக்க வைத்தார்.அமிர்தா படித்தெல்லாம் அரசு பள்ளியில் தான்.அமிர்தா பள்ளியில் பன்னிரெண்டாம் வகுப்பு முடித்திருந்த சமயம் சாவித்ரிக்கு பக்கவாதம் வந்துவிட படுத்த படுக்கை ஆகிவிட்டார்.அவருக்கு மருத்துவம் பார்ப்பதிலேயே அவர்களின் சேமிப்பு கரைந்தது.
அமிர்தாவின் கல்லூரி கனவு அதனுடன் கரைந்துவிட்டது.தன் குடும்ப பொறுப்பை ஏற்று அவள் வேலைக்கு சேர்ந்து இரண்டு வாரங்களிலேயே சாவித்ரி இறைவனடி சேர்ந்துவிட அதன் பின் அவளின் வாழ்வு ஐந்தாண்டுகளாக இதோ இந்த விடுதியில் ஆரம்பித்து,கடை பின் விடுதி என்று தான் ஓடுகிறது.சாவித்ரியின் அதிக பட்ச ஆசையே அமிர்தா நன்கு படித்து தங்களுக்கு என்று ஒரு வீட்டை வாங்க வேண்டும் என்பதே ஆனால் அதுவும் அவர் உயிருடன் இருக்கும் காலத்தில் நிறைவேறாத ஆசையாகி போனது தான் காலத்தின் கொடுமை.
ஆனால் அமிர்தாவின் மனதில் அவர் விதைத்த விதை இன்று விரிட்சமாக முளைத்திருந்தது.தனது தாயின் கனவை எப்படியேனும் நிறைவேற்ற வேண்டும் என்பது தான் அவளின் லட்சியாமாக இருக்கிறது அது தான் அனைத்து தடைகளையும் தான்டி அவளை ஓட வைத்துக் கொண்டிருக்கிறது.தனது படுக்கையில் இருந்து எழுந்த அமிர்தா தனது வங்கி கணக்கு புத்தகத்தை எடுத்து பார்த்தாள் அதில் இரண்டாயிரம் தான் இருந்தது.தாயின் இறப்புக்கு பின் அவளுக்கு வரும் வருவாயில் விடுதிக்கு கொடுப்பது போக மீதி சொச்ச பணத்தை வங்கியில் போட்டு விடுவாள் இது அவளுக்கு அன்னை சொல்லி தந்த பாடங்களில் ஒன்று.
அன்று புது சரக்கு வரும் நாள் என்பதால் வேலை கொஞ்சம் அதிகம் மதியவேளையும் சாப்பிடவில்லை தனது கணினியில் ஒவ்வொரு கலர் புடவைகளும் எத்தனை உள்ளன என்று எண்ணிக்கை ஆராய்ந்து பட்டியலிட்டு கொண்டிருந்தாள் அமிர்தா.
“என்னமா….இன்னு சாப்பிட போகல….”என்ற கேட்டாள் அங்கு வேலை செய்யும் பெண்,
“ம்ம்….போகனும்க்கா….கொஞ்சம் வேலையிருக்கு….”என்று வேலை செய்து கொண்டு தான் பதில் வந்தது அவளிடமிருந்து.அமிர்தா சாவித்ரியின் மகள் என்று அங்கு வேலை பார்க்கும் பலருக்கு தெரியும்.சாவித்ரி அனைவரிடமும் நல்ல முறையில் பழகுவார் என்பதால் அனைவருக்குமே அவரின் மீது சற்று பற்றுதல் உண்டு அதனாலே அவரின் மகளான அமிர்தாவிடமும் நல்ல முறையில் தான் நடந்து கொள்வர்.
ஆனால் அமிர்தா யாரிடமும் அனாவசியமாக பேசமாட்டாள் அதுவே மற்றவர்களை அவளிடம் இருந்து தள்ளி நிறுத்தியது.தனியாக இருக்கும் பெண் தன்னை தானே பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்று அத்தனை கவனமாக தான் இருப்பாள்.உள்ளுக்குள் என்னிலாடங்கா பயம் இருந்தாலும் வெளியில் தைரியமாக காட்டிக் கொள்ள வேண்டிய கட்டாய சூழல்.சிலருக்கு அமிர்தாவின் செயல் செருக்கு போல் இருக்கும் சிலருக்கு படித்தவள் தங்களை போன்ற படிக்காதவர்களிடம் ஒட்ட மாட்டாள் என்று நினைப்பார்கள் ஆனால் உண்மையில் யாரிடமும் அத்தனை எளிதில் பழக அமிர்தாவிற்கு பயம்.
அன்று இரவு கிளம்பவும் நேரம் கடந்து தான் விட்டது அமிர்தாவிற்கு வேலைகளை முடித்துவிட்டு வரும் போதே மணி பத்தரையை தான்டிவிட தனியாக தான் பேருந்து நிறுத்ததுக்கு வந்தாள்.தன் கை பையை நெஞ்சுடன் இறுக்கி பிடித்துக் கொண்டு பேருந்துக்காக காத்து கொண்டிருக்க நேரம் கடந்ததே தவிர பேருந்து இன்னும் வந்தபாடில்லை.ஆட்டோ ஏதேனும் வருகிறதா என்று பார்த்துக் கொண்டிருக்க அப்போது வாட்டசாட்டமாக ஒருவன் அவள் நின்றிருந்த இடத்திற்கே வர அமிர்தா பயத்தில் நடுங்கி தான் போனாள்.இது போல் பல முறை அவளுக்கு நடந்துள்ளது தான் ஒவ்வொருமுறையும் உயிரை கையில் வைத்துக் கொண்டு தான் தனது விடுதியை அடைவாள்.
அமிர்தா நிமிடத்திற்கு ஒரு முறை பேருந்து வருகிறாதா என்று பார்க்கும் போதெல்லாம் பக்கத்தில் நிற்பவன் தன்னை பார்ப்பது போன்றதொரு உணர்வு.
“அச்சோ கடவுளே எப்படியாவது என்னை காப்பாத்து…உனக்கு நெய் விளக்கு போடுறேன்…..”என்று கடவுளுக்கு வேண்டி கொண்டிருந்த நேரம் சரியாக பேருந்து வருவும்,
“அப்பாடா….காப்பாத்திட்ட..”என்று கூறிக் கொண்டே அவள் ஏற அவளின் பின்னே அந்த அவனும் ஏற அமிர்தாவிற்கு பிபி ஏறியது.ஏதோ அவன் அவளை பின் தொடர்வது போல் ஒரு பிரம்மை.இரவு நேரம் என்பதால் பெண்கள் குறைவாக தான் இருந்தனர்.ஒரு இருக்கையில் இவள் அமர்ந்து கொள்ள அவளுக்கு நேர் எதிர் இருக்கையில் அவனும் அமர்ந்து கொண்டான்.
“ஏன் சாமி என்னை இப்படி சோதிக்குற….நான் பாவமில்லை…”என்று கடவுளை இருக்கை கூப்பி கண் மூடி கும்பிட்டு கண் திறக்க,நடத்துனர் அவளை ஏற இறங்க பார்த்துக் கொண்டிருந்தார்.அவர் தன்னை பார்த்துவிட்டதை கண்டு அசடு வழிந்தவள் டிக்கெட்டிற்கான பணத்தை கொடுக்க,
“என்னம்மா வேண்டுதல் பலமா இருக்கு….இந்தா டிக்கெட்டை பிடி….”என்று கையில் திணித்துவிட்டு சென்றார் அவர்.
“அச்சோ….”என்று தலையில் அடித்துக் கொள்ள யாரோ சிரிப்பது போல் இருந்தது சுற்றி பார்க்க எதிரில் இருந்தவன் இவளை பார்த்து சிரித்துவிட்டு ஜன்னல் பக்கம் திரும்பிக் கொண்டான்.அமிர்தாவிற்கு பயம்,கோபம் அனைத்தும் ஒருங்கே சேர தனது கையை கம்பிகளில் குத்திக் கொண்டாள்.எப்போதடா தனது நிறுத்தம் வரும் என்று காத்துக் கொண்டிருந்து அவள் இறங்க அவளுடனே அவனும் இறங்கினான்.அதை பார்த்த அமிர்தா வேகமாக தனது விடுதிக்கு செல்லும் அடுத்த பேருந்தில் ஏறிக் கொண்டாள்.
ஆனால் அவளை அன்று சோதிக்கவே அவனும் அதில் ஏற அமிர்தாவிற்கு இவன் தன்னை தொடர்கிறானா என்ற எண்ணம் தான்.இதுவரை இவனை இங்கு கண்டதில்லை என்பதால் தன் பின் தான் வருகிறான் என்று பயந்துவிட்டாள்.இதில் ஒன்றை அவள் கவனிக்க தவறினாள் பொதுவாக அமிர்தா விடுதிக்கு பத்தரை மணிக்கு முன்பே சென்றுவிடுவாள் இன்று காலதாமதமானதை அவள் பயத்தில் மறந்திருக்க யார் என்றே தெரியாத ஒருவன் மேல் தேவையில்லாத பயம் வந்தது.
பேருந்து இரண்டு தெருக்கள் தான்டி நிற்கவும் அமிர்தா இறங்க கூடவே அவனும் இறங்கினான்.அவளின் பயம் ஊர்ஜிகமானது பயத்தில் ஓட்டம் பிடிக்க அவளின் பின்னே அவன் தான் கூப்பிட்டுக் கொண்டே வருவது தெரிய இன்னும் வேகத்தை கூட்டி ஓடியவள் தனது விடுதியின் வாயிலில் தான் நின்றாள்.எங்கே திரும்பி பார்த்தாள் இருப்பனோ என்று நடுங்கி கொண்டே தனது அறைக்கு சென்றுவிட்டாள் அமிர்தா.