சென்னையின் காலைநேர பரபரப்பை தத்தெடுத்துத்து இருந்த அந்த மருத்துவமனையின் வாகனங்கள் நிறுத்துமிடத்தில் தன் மகிழுந்தை நிறுத்தி விட்டு, உள்ளே ஓடி வந்த சந்த்ருவின் உடை முழுவதும் வியர்வையால் நனைந்து போயிருக்க, மூச்சு வாங்க மூன்றாம் தளத்தை படிகளில் கடந்து வலது புறம் நுழைந்தவனின் பார்வை, விழிகளில் நீரை தேக்கி அறையின் வாயிலில் அமர்ந்திருக்கும் தாயை தான்.
அவரருகில் சென்றவனை நிமிர்ந்து பார்த்த ஆனந்தி, “சந்த்ரு…” என திக்கியவர் காட்டிய திசையில் அமைதியாக படுத்திருந்தார் அழகர். அவர் உடலில் பல கருவிகள் பொறுத்தப்பட்டிருக்க, நான்கு மருத்துவர்கள் அவரை சூழ்ந்திருந்திருந்தனர்.
“தெரியலை டா. காலைல சாப்டாம ரூம்ல படுத்துட்டார். மதியம் சமைச்சுட்டு அவர் ரூமை போய் எட்டிப் பார்த்தா, நெஞ்சைப் பிடிச்சுட்டு கிடந்தாரு. உடனே ட்ரைவர் கிட்ட சொல்லி ஹாஸ்பிடல் கூட்டீட்டு வந்தேன். உனக்கும் கால் பண்ணேன்!” என்ற ஆனந்திக்கு வயிற்றில் பயப்பந்து உருள, விழிகளை நீர் நிறைத்தது. என்ன தான் இந்த ஆறுமாதம் அவருடன் பேசாமல் இருந்தாலும் இருபத்தி ஐந்து வருடம் அவருடன் மனமொத்து தான் வாழ்ந்தார் பெண்மணி. பெரிதாக சண்டை சச்சரவுகள் எதுவும் இல்லை. சாந்தி விஷயத்தை தவிர அவர் மீது குற்றம் எதுவும் கூற முடியாது. ஆனந்தியை எந்த இடத்திலும் அவர் விட்டுக் கொடுத்தது இல்லை. சந்த்ருவிற்கு நல்ல தகப்பனாக ஆசானாக இருந்த மனிதர், இப்படி மருத்துவமனையில் படுத்திருப்பதைக் கண்டு மனம் விம்மித் தவித்தது. மனதின் திடமெல்லாம் வடிந்து தளர்ந்து போய் அமர்ந்து விட்டார் ஆனந்தி.
எத்தனையை மனம் தாங்குவது? ஏற்கனவே கட்டிய கணவரின் துரோகம். அடுத்து மகன் மருமகளை வேண்டாம் என பிரிந்து விட்டான். கோகிலாவினால் வீட்டில் பிரச்சனைகள். இப்போது இவருக்கு இப்படி. மனம் துவண்டு போனது. ஒரு பெண்ணாய் எத்தனை துயரங்களை தூக்கி சுமக்க.
இன்னும் வாழ்க்கையில் என்னென்ன காத்திருக்கிறதோ? இத்தனை வருடங்களாக நிம்மதியாக வாழ்ந்த வாழ்க்கையின் சுவடே இல்லாது புதிதாய் எதோ ஒரு வழியில் பயணம் போல. உடன் யாருமில்லாது பயணிக்கும் நொடியில், திடீரென வரும் வளைவுகள் எல்லாம் பயத்தை அப்ப செய்தது. ஒவ்வொரு நொடியும் அடுத்து என்ன என தெரியாமல் விழிக்கும் மனநிலையில் இருந்தார்.
மனம் மட்டும் எத்தனை விசித்திரமானது? தனக்கு துரோகம் இழைத்தாலும், இப்படி உடல் நலமின்றி கணவன் படுத்ததும், துரோகம் எல்லாம் பின்னுக்குச் சென்று விட்டது. அவருக்கு எதுவுமாகி விட கூடாது என மனம் ஓயாமல் ஜெபித்துக் கொண்டிருந்தது.
இது இத்தனை வருடம் வாழ்ந்த மணவாழ்க்கையில் வந்ததா? இல்லை அதிகபட்சமாக தன்னுடன் பயணிக்கும் பயணியின் மீது தோன்றும் பரிதாபமா?
மனிதாபிமானம்! இந்த ஒற்றை சொல்லில் எல்லா துரோகங்களும் தூக்கி எறியப்படுகிறது. சாலையில் செல்லும் போது விபத்துக்குள்ளான மூன்றாம் மனிதரிடம் தோன்றும் இரக்கம்!
எதோ ஒரு நாய்க்குட்டி தன்னை பசியோடு பார்க்கும் போது இயல்பாய் தன்னிடமிருந்த ரொட்டி துண்டை உணவளிக்கும் குழந்தையிடம் தோன்றுவதா?
இல்லை முறைத்துக் கொண்டே சுற்றும் உறவினர்கள் கூட எதோ ஒரு பிரச்சனை என்று வரும் போது தோள்கொடுக்கும் மனதிலிருந்து பிறக்கிறதா?
தெரியவில்லையே! ஆனால் எல்லோரிடமும் நூற்றில் ஒரு சதவீதம் மனதின் எதோ ஒரு மூலையில் ஒட்டிக் கொண்டு, தேவையிருப்பின் தன் இருப்பை உணர்த்திக் கொண்டிருக்கும்.
ஆனந்தியினது அன்பா? காதலா? கணவன் என்ற எண்ணமா? இத்தனை நாட்கள் தன்னுடன் வாழ்ந்தவர் என்ற எண்ணமா? இல்லை மனிதாபிமானமா? இரக்கமா? எதோ ஒன்று என்னவென சொல்ல முடியாது தொண்டைக் குழியில் சரணடைந்து, வார்த்தைகளில்லா மௌனம். மொத்தமாக வார்த்தைகளை விழுங்கும் மௌனம்.
தன் விரலை வேண்டா வெறுப்பாக பிடித்துக் கொண்டு அக்னியை சுற்றி வந்த அழகரின் முகம் கண்முன்னே வந்து சென்றது. அவர்களுக்கிடையோயான உறவு துவங்கிய நாள் முதல், இன்று வரையான பயணம்? எந்த இடத்தில் தான் தவறு செய்தேன்? என் கணவர் ஏன் தவறினார்? அவர்கள் பெற்றோர் செய்த செயலின் வினை! செய்த பாவம் இப்போது தான் துரத்துகிறதா? தாங்காதே! அதையெல்லாம் மனது தாங்கிட விழையுமா? இதற்கே மூச்சு முட்டிவிட்டது பெண்மணிக்கு.
“இங்க பேஷண்ட் ரிலேட்டீவ் யாரு? டாக்டர் பேசணும்னு சொல்றாங்க. உள்ளே வாங்க!” என்ற செவிலியரின் குரலில் ஆனந்தியின் கால்கள் தன்னைப் போல மருத்துவர் அறையை நோக்கி நகர்ந்தது. அந்த தளத்தின் கடைசி பகுதியிலிருந்த அறைக்குள் தாயும் மகனும் நுழைய, இரண்டு மருத்துவர்கள் அமர்ந்திருந்தனர்.
இருவரது முகத்திலும் பயம் அப்பிக் கிடந்தது. “அவர் உங்களோட ஹஸ்பண்டா?” என மருத்துவர் வினவ, தலையை அசைத்தார் ஆனந்தி.
“ஆக்சுவலி அவருக்கு இரத்த அழுத்தம் ரொம்ப குறைஞ்சுடுச்சு. அவர் இதயத்துக்கு போற இரத்தக் குழாய்ல அடைப்பு ஏற்பட்டு இருக்கு. அத்திரஸ்கீலிரோசிஸ்னு சொல்லுவோம். கொழுப்பு படிஞ்சு, அது இரத்தக்குழாய்ல அடைப்பை ஏற்படுத்தியிருக்கு. இரண்டு மூன்று இடங்கள்ல அடைப்பு இருக்கு. சோ கண்டிப்பா சர்ஜரி பண்ணணும் மா!” என்றார். அவர் கூறுவதை எல்லாம் அமைதியாக கேட்டுக் கொண்டிருந்தார் ஆனந்தி. மனம் மட்டும் பயத்தை விழுங்க போராடிக் கொண்டிருந்தது.
“டாக்டர், பணம் எல்லாம் பிரச்சனை இல்லை. எவ்ளோ ஆனாலும் ஆப்ரேஷன் பண்ணிடுங்க. நான் உடனே பே பண்ண ரெடியா இருக்கேன்!” என படபடத்த சந்த்ருவை கண்டு புன்னகைத்தார் மற்றொரு மருத்துவர். ஐம்பதுகளின் இறுதியிலிருந்தவரின் முகத்தில் வயதிற்குரிய முதிர்ச்சி இருந்தது.
“யங் மேன்! ஆப்ரேஷன் பண்ண பணம் மட்டுமே இருந்தா போதுமா?” என கேட்டாரின் முகத்தில் புன்னகை.
அவர் கேள்வியில் ஒரு நொடி யோசித்தவன், “ஸ்பெஷலிஸ்ட் எதுவும் வரணுமா டாக்டர்? ப்ளீஸ் எங்க இருந்தாலும் சீக்கிரம் வர சொல்லுங்க டாக்டர்.” என்றான்.
“மிஸடர்… ஆங். சந்த்ரு. எனக்கு வயசாகிடுச்சு இல்ல. அதான் பேர் மறந்துடுச்சு!” என ஹாஸ்யம் கூறியதை போல சிரித்தவர், “இட்ஸ் நாட் அபவுட் மணி அண்ட் ஸ்பெஷலிஸ்ட். இட்ஸ் அபவுட் ஹிஸ் மென்டல் ஹெல்த். ஒரு மனுஷனோட மனதைரியம் தான் ஐம்பது சதவீதம் நோயை குணப்படுத்தும். என்ன தான் நான் ஆப்ரேஷன் பண்ணாலும் அவருக்கு வாழணும்னு எண்ணம் இருக்கணும். அவரோட மென்டல் ஹெல்த் அண்ட் பிசிக்கல் ஹெல்த் ரெண்டுமே சரியில்லை. அவர் இப்போ ஏன் வாழணும்ன்ற நிலையில இருக்காரு. இது ரொம்ப பேடான நியூஸ் தான். எவ்ளோ சீக்கிரம் அவர் ஆப்ரேஷனுக்கு தன்னை தயார் படுத்திக்கிறாரோ, அது ரொம்ப நல்லது. ஏன்னா, இந்த மாதிரி கேஸ்ல ஸ்ட்ரோக் வர சான்ஸ் அதிகம். அப்படி வந்துட்டா, அவரோட ஒரு கை அண்ட் கால் செயலிழக்க வாய்ப்பு அதிகம் அண்ட் அவர் படுக்கையிலே இருக்க கூட வாய்ப்பு உண்டு!” என்றவரின் வார்த்தையில் ஆனந்தியின் கண்களில் ஒரு சொட்டு நீர் வழிந்தது.
ஆனந்தியை பார்த்த மருத்துவர், “ம்மா… அழாதீங்க. உங்களோட ஹஸ்பண்டை காப்பாத்திடலாம். நீங்க நம்பணும். அவரையும் நம்ப வைங்க. பணம் மட்டுமே ஒருத்தரை திருப்தி படுத்துறது இல்லை எல்லா நேரத்துலயும் அது மட்டுமே போதும்னு இல்லை. ஐ திங்க் இது உங்க குடும்ப பிரச்சனையா இருக்கலாம். பட், அவர் கிட்ட பேசுங்க. ஆயிரம் பிரச்சனை இருக்கலாம். கூடவே வச்சு சண்டை போட்டுக்கலாம். பட், இல்லைன்னும் போது தான் இழப்பு அதிகமா இருக்கும். என்னோட புள்ளையும் பொண்டாட்டியும் என்கிட்ட பேசுறது இல்லைன்னு சொன்னாரு. ரொம்ப வற்புறுத்தி கேட்ட பிறகு தான். ஏன் சண்டை? எதுனாலன்னு எல்லாம் எனக்கு தெரியாது. பட், தப்பு செய்யாத மனுஷங்களே இல்லையே! மன்னிக்க முயற்சி செய்ங்க. அப்படி இல்லைன்னா, மறக்க ட்ரை பண்ணுங்க. இப்போ நீங்க ரெண்டு பேரும் அவர் கிட்ட பேசுங்க. இது ஒரு டாக்டரா நான் சொல்லலை. ஒரு குடும்பஸ்தனா சொல்றேன். எனக்கும் குடும்பம், பிரச்சனை எல்லாம் இருக்கு. அதெல்லாம் எல்லாரும் கடந்து வர்றது தான்” என்று கூறியவரை ஆனந்தி பார்த்தார்.
மீண்டும் அவர் கண்களில் ஒரு சொட்டு கண்ணீர். “இப்போ அவரை உங்க கணவனா பார்க்கலைனாலும், சக மனுஷனா மதிச்சு பேசுங்க. போங்க!” என்றவர், “சந்த்ரு நீங்களும் போங்க!” என இருவரையும் அனுப்பி வைத்தார்.
இருவரும் எதுவும் பேசவில்லை. அழகர் அனுமதிக்கப்பட்டிருக்கும் அறைக்குள் நுழைந்தனர். இவர்களைப் பார்த்ததும் கண்கள் பளபளத்தது அவருக்கு. ஆனந்தி அவர் அருகில் சென்று நின்றதும், கையை அவரை நோக்கி நீட்டினார் அழகர். ஒருகையில் ஊசி ஏற்ப்பட்டிருக்க, மறுகையால் மனைவியின் கையை தொட முயன்றவரின் கரங்களில் தன் கையை இணைத்த ஆனந்தியின் முகம் நிர்மலமாக இருந்தது.
“ஆனந்தி, என் கூட பேசும்மா. என்னைத் திட்டு. நான்… நான் செஞ்சது தப்பு. பெரிய தப்பு, என்னை உன்னால மன்னிக்க முடியாது” என்றவரின் கண்களிலிருந்து நீர் வழிந்தது.
“ஆனால், உன் கூட வாழ்ந்த இத்தனை வருஷமும் உனக்கு நான் உண்மையா தான் இருந்தேன்!” என்றவரின் பார்வை மனைவியை தான் தொட்டிருந்தது. நடுங்கிய கைகளுடன் மனைவியின் கரத்தை அழுத்திக் கொண்டவர், “நான்…” என எதோ பேச முனைய, வார்த்தைகள் தொண்டை குழியில் சிக்கிக் கொண்ட உணர்வு.
தன்னை சமன்படுத்திக் கொண்டவர், “நான் பண்ண தப்புக்கு தான் கடவுள் எனக்கு சரியான தண்டனை கொடுத்துட்டாரு. என்ன இன்னும் கொஞ்ச நாள் வாழ்ந்திருந்தா, அதுவே எனக்கு பெரிய நரகமா இருந்திருக்கும். ஆனால், கடவுள் சீக்கிரமா சாவுன்ற விமோட்சம் கொடுக்கப்போறாரு போல!” என கூறியவரின் மனதும் உடலும் அத்தனை வேதனையை சுமந்து வெளிவந்தது.
அவரின் வார்த்தைகளை இத்தனை அமைதியாக கேட்டுக் கொண்டிருந்த ஆனந்தி, “என்ன பேசுறீங்க? எதுவும் ஆகாதுன்னு டாக்டர் சொன்னாங்க. மனசுல எதையும் போட்டு குழப்பிக்காதீங்க!” என்றார். கவனமாக வார்த்தைகளை கோர்த்தார். மற்றவற்றை பேச மனம் இடம் கொடுக்கவில்லை.
அவர் நகரப்பார்க்க, அழகர் ஆனந்தியின் கையை விட விடவில்லை. அவர் நிமிர்ந்து பார்க்க, கணவனின் கண்கள் இறைஞ்சியது ‘என்னை விட்டுப் போகாதே!’ என. குழந்தை தன் தாயை பார்க்கும் பார்வை. இதோ அதோ என இமைகளில் நீர் தொக்கி நின்றது.
அவர் முன்னே அழக்கூடாது என வைராக்கியமாக நின்ற ஆனந்தி அங்கிருந்து அகலப்பார்க்க, “ஆனந்திமா!” என உயிரை தேக்கி அழைத்தார் அழகர். அதைக் கேட்டதும் சர்வமும் ஒடுங்கி விட்டது ஆனந்திக்கு. அத்தனை உருக்கமான அழைப்பு. எல்லா நேரங்களிலும் இப்படி அழைக்க மாட்டார் அழகர். என்றாவது ஒரு நாள் இருவருக்கும் இடையில் ஊடலிருக்கும் போது அழைப்பார் அவ்வளவு தான். ஆனந்தியின் கோபமெல்லாம் கரைந்து காற்றில் கலந்து விடும். ஆனால், இப்போது அப்படி எளிதில் எதையும் எடுத்துக் கொள்ள முடியவில்லை அவரால்.
கணவனின் கைகளில் அழுத்தம் கொடுத்தவர், “எதையும் யோசிக்காதீங்க. எங்களை விட்டு நீங்க எங்கேயும் போக முடியாது. நான் விட மாட்டேன் உங்களையும் தான்!” என்றவரின் அழுத்தமான வார்த்தைகள் கணவனை ஆசுவாசம் கொள்ள வைத்தது.
சந்த்ரு அமைதியாக இவற்றை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தான். தன் தகப்பனை காண வேதனையாக இருந்த போதும் தன் தாய்க்கு அவர் செய்த துரோகத்தையும் சாந்திக்கு செய்த துரோகத்தையும் அவனால் அவ்வளவு சீக்கிரம் மறக்க முடியவில்லை.
“சந்த்ரு…” என அழைத்த தந்தையின் முகத்தைக் கூட காண விருப்பம் இல்லாதவன், விறுவிறுவென வெளியேறி விட, பெற்றவர் மனம் விம்மித் துடித்தது. கணவன் விழிகள் நீரை உகுக்க, அதை கண்ட ஆனந்தி, “வரேன் இருங்க!” என்று விட்டு வெளியே வந்தார்.
இருக்கையில் சாய்ந்து அமர்ந்து இருந்தான் சந்த்ரு. “சந்த்ரு, அப்பா கிட்ட வந்து ரெண்டு வார்த்தை பேசு. அவர் உன் கூட பேச விருப்பப்பட்றாரு இல்லை!” என்ற ஆனந்தியிடம், “எனக்கு இஷ்டம் இல்லை மா!” என்றான்.
“என்ன இஷ்டம் இல்லை. ரெண்டு வார்த்தை பேசுறதுல குறைஞ்சுட மாட்ட. வா!” அழுத்தமாக கூப்பிட்ட தாயை நிமிர்ந்து பார்த்தவன், “ம்மா… அவரை பார்த்தாலே அவர் செஞ்ச துரோகம் தான் ஞாபகம் வருது. வேணாம்மா.. அந்தாளு!” என்ற சந்த்ருவின் கன்னத்தை பதம் பார்த்திருந்தது ஆனந்தியின் கைகள்.
“வார்த்தையை அளந்து பேசு சந்த்ரு. அவர் தப்பு செஞ்சுட்டா, உனக்கு அப்பா இல்லைன்னு ஆகிடுமா? சொல்லு… அவர் துரோகம் செஞ்சது எனக்கு தான். நானே அவர் கிட்டே பேசிட்டேன். அது எனக்கும் என் கணவருக்கும் இடையில இருக்க பிரச்சனை. என் முன்னாடி அவரை மரியாதை இல்லாம பேசாத!” என எச்சரித்தார் ஆனந்தி.
“ப்ம்ச்… ம்மா. அவரு பண்ணதை எல்லாம் நீங்க மறந்துடலாம். ஆனால், நான் மறக்க மாட்டேன்!” என்றவன் குரலில் சீற்றம்.
“சந்த்ரு குடும்பம்னா ஆயிரம் இருக்கும். இப்ப அவர் இப்படி இருக்கும் போது அவர் செஞ்ச தப்பை சுட்டிக்காட்டி பேசலாமா? யாரும் எதையும் மறக்கலை. அதேமாதிரி இந்த பிரச்சனைல நீ தலையிடாத. என் புருஷனாச்சு. நானாச்சு. அவர் உன் அப்பா! அதை எந்த நிலையிலும் மறந்துடாத. உனக்கு அப்பாவா இப்ப வரைக்கும் அவரோட கடமைல இருந்து ஒரு நாளும் அவர் தவறுனது இல்லை. எல்லா இடத்திலும் உனக்கான எல்லாத்தையும் செஞ்சு, இன்னைக்கு நீ இப்படி இருக்கதுக்கு அவர் தான் காரணம். என்னைக் கொண்டு நீ அவர் கிட்டே சண்டை போடணும்னு அவசியம் இல்லை. இப்ப வந்து அவர் கிட்ட பேசுற. இது உன் அம்மாவோட முடிவு. நீ மீற மாட்டேன்னு நம்புறேன்!” என்ற ஆனந்தி அறைக்குள் நுழைந்தார்.
சில நிமிடங்கள் கடக்க, உள்ளே நுழைந்தான் சந்த்ரு. அழகர் அருகில் அவன் வந்ததும், “சந்த்ரு, இந்த அப்பாவை பார்க்க அசிங்கமா இருக்கா பா? அருவருப்பா இருக்கா பா? நான் தப்பு செஞ்சுட்டேன். உண்மை தான். ஆனால் என் மனசறிஞ்சு பண்ணலை பா. என் மேல உனக்கு இருக்க கோபம் புரியுது. தப்புக்கான தண்டனையா இந்த நரகத்தை அனுபவிச்சுட்டு இருக்கேன்!” என்றவருக்கு மூச்சு வாங்க, “என்னங்க!” என ஆனந்தி அவரை ஆசுவாசம் செய்தார். சந்த்ரு கூட பதறி அடித்து அவருக்கு மிக அருகில் வர, புதல்வனின் கரங்களை பிடித்தவர், “நான் போனதுக்குப் பிறகு என் ஆனந்தியை நல்லா பார்த்துக்கோ டா. ரொம்ப நல்லவ அவ. ஆனால், உலகம் தெரியாது. நான் தான் உலகம்னு நம்புனா! அதுக்கு தான் நான் பெரிசா அவளுக்கு துரோகம் பண்ணிட்டேன். உடைஞ்சு போய்ருக்கா. நீ தான் அவளை பத்திரமா பார்த்துக்கணும்!” என்றவர் வார்த்தையில் எதோ ஒரு விரக்தி. வாழ்க்கையின் முடிவிலிருப்பவர்களின் பேச்சு போல இருந்தது.
குரல் தழுதழுக்க உடல் தளர்ந்து தன் முன்னே கையைக் கூப்பி நின்ற தந்தையை பார்த்து அவனுக்கும் உள்ளம் கலங்கியது. எத்தனை கம்பீரமான மனிதர். தனக்கு எப்போதும் ஒரு நல்ல வழிக்காட்டி. இன்று வரை தன் தந்தை என்ற ஸ்தானத்தில் எந்த குறையும் வைத்தது இல்லை. அவனுக்கு தெரியும். தந்தை தன் மீது உயிரையே வைத்திருந்தது. ஆனந்தி கூட எதாவது திட்டுவார் அவ்வப்போது. ஆனால், அழகர் ஒரு நாளும் அவனை திட்டியது இல்லை. இப்படி ஒரு நிலையில் அவரை கண்டதும் கண்கள் கலங்கியது ஆடவனுக்கு.
ஏக்கமாக தன் முகத்தைப் பார்ப்பவரை கண்டவன், “டாக்டர் கிட்ட பேசிட்டோம். உங்களோட மென்டல் ஹெல்த் தான் ரொம்ப முக்கியம் சொன்னாங்க. ஆப்ரேஷன் பண்ணா எல்லா சரியாகிடும். நீங்க நல்லா ஆகிடுவீங்கன்னு நீங்க தான் நம்பணும். என் அம்மாவா என்னால அவங்களை பார்த்துக்க முடியும். ஆனால், உங்களோட இடத்தை என்னால ரிபிளேஸ் எல்லாம் பண்ண முடியாது. நீங்க…. அது நீங்க மட்டும் தான். தப்போ சரியோ, நீங்க என் அம்மாவுக்காக வரணும். என் அப்பாவா இதுவரைக்கும் எந்த குறையும் என் விஷயத்துல நீங்க வச்சது இல்லை. அம்மா சொன்னாங்க… எனக்கும் புரிஞ்சுது. நீங்க செஞ்சது தப்பு, துரோகம் தான். அதை என்னால அவ்ளோ சீக்கிரம் மறக்கவும் முடியலை, மன்னிக்கவும் முடியலை. முயற்சி செய்றேன்னு பொய் சொல்ல வரலை. பட், பார்க்கலாம்… போக போக உங்க துரோகத்தோட வலி மறக்கலாம். என்ன வேணா நடக்கலாம். ஆனால், உங்களை அப்படியே விட மாட்டோம். நீங்க எனக்கும் என் அம்மாவுக்கும் வேணும்!” என்றவன், விறுவிறுவென வெளியேறிக் கொண்டே விழிகளில் வழிந்த நீரை துடைத்துக் கொண்டான். உள்ளம் தவித்தது, துடித்தது. மகனின் வார்த்தையில் அழகருக்கு மனம் சற்றே சமன்பட்டது. இந்த அளவுக்கு மகன் பேசுவதே அவருக்கு ஆறுதலாக இருந்தது.
சிறிது நேரத்தில் கோகிலா குடும்பத்துடன் மருத்துவமனையை அடைந்தார். சந்த்ரு வெளியே அமர்ந்திருப்பதை பார்த்து அவனிடம் விரைந்தவர், “சந்த்ரு, என் தம்பிக்கு என்னாச்சு?” என பதட்டத்துடன் வினவினார்.
“ஹார்ட்ல பிராப்ளம்னு டாக்டர் சொல்லியிருக்காங்க. சர்ஜரி பண்ணணுமாம்” என சந்த்ரு முழுவதையும் கூறாமல் மேலோட்டமாக கூறினான்.
“ஐயயோ! எல்லாரும் சேர்ந்து என் தம்பியை இப்படி படுக்க வச்சுட்டீங்களே!” என கோகிலா புலம்ப, “அத்தை, இப்படி எல்லாம் அழக்கூடாது. உள்ள தான் அப்பா இருக்காரு. அமைதியா போய் பாருங்க!” என்றான்.
கோகிலாவும் அவர் கணவரும் உள்ளே நுழைய, வித்யா சந்த்ரு அருகில் அமர்ந்தாள். “என்னாச்சு மாமா? அழகர் மாமாவுக்கு எதுவும் சீரியஸா? உன் முகமே சரியில்லை!” என வினவ, அவளைப் பார்த்து வலிய புன்னகைத்தான் சந்த்ரு.
“மாமா, என்னென்னு சொல்லு. எதுனாலும் பார்த்துக்கலாம். நம்மளை மீறி எதுவும் நடக்காது!” என்றவளின் கைகள் ஆதரவாக சந்த்ரு கரங்களை பற்றியது.
“ஹார்ட்ல பிளாக், மூனு இடத்துல. சர்ஜரி பண்ணணும்னு டாக்டர் சொல்லிட்டாரு. பட், அவர் மென்ட்டலி அண்ட் பிஸிக்கலி நாட் சூட்டபிள் ஃபார் சர்ஜரி. அவர் கொஞ்சம் இயல்புக்கு வரணும். ரொம்ப டிப்ரஷன்ல இருக்காரு. நீங்க பேசுங்கன்னு டாக்டர் சொன்னாரு” என நடந்த அனைத்தையும் விவரித்தான்.
எல்லாவற்றையும் கேட்ட வித்யா, “ஐ க்நோ, அவர் நடந்த எல்லாத்துலயும் டிப்ரஷனுக்குப் போய்ட்டார்னு. சீக்கிரம் சரியாகிடுவாரு!” என்ற வித்யாவை பார்த்து தலையை இடம் வலமாக அசைத்தவன், “சாந்திமாவையும் அவங்க பையனையும் பார்த்து பேசினா, அவர் இயல்புக்கு வந்துடுவார். பட், அது இம்பாசிபிள்!” என்றவன், அமர்ந்திருந்த இடத்திலிருந்து எழுந்து, “நான் போய் ஸ்கேன் பண்ற இடத்துல கேட்டுட்டு வரேன். பன்னிரெண்டு மணிக்கு வர சொன்னாங்க!” என்று விட்டு சென்றான்.
வித்யா நிவிக்கு அழைத்தவள், விஷயத்தைக் கூறினாள். “சரி வித்யா, நீ அங்க அத்தை கூட உதவியா இரு. நான் கிளம்பி வரேன்!” பதிலளித்தாள் நிவி.
“ஆனால் அக்கா, உங்களுக்கு இது ஏழாம் மாசம் வர போகுதுல்ல? ட்ராவல் பண்ணலாமா?” வித்யா தயங்க, “அதெல்லாம் பண்ணலாம். நான் பார்த்துக்குறேன்!” என அழைப்பைத் துண்டித்தவள், ஜோதியிடமும் வீரபாண்டியிடமும் விஷயத்தைக் கூறினாள்.
“ப்பா… நான் போய் அழகர் மாமாவை பார்த்துட்டு வரேன் பா. ப்ளீஸ் பா!” என நிவி இறைஞ்சுதலாக கேட்க, “இந்த மாதிரி நேரத்துல நீ அலையணுமா மா?” என வினவிய வீரபாண்டியின் முகமே அவரது விருப்பமின்மையை வெளிபடுத்தியது.
ஆனால் ஜோதி, “இல்லைங்க, அவ போகட்டும்!” என்றவருக்கு இப்படியாவது மகள் புகுந்த வீட்டு உறவோடு சேரட்டும் என மனம் தவித்தது. பெற்றவர்களுக்கு தான் கவலை அரித்தது, வயிற்றில் பிள்ளையை சுமந்து கொண்டு தங்கள் வீட்டில் வாழாமல் இருக்கும் பெண்ணை நினைத்து. ஒற்றைப் பெண்ணை பெற்று அவளுக்கு சரியான முறையில் தாங்கள் வாழ்க்கையை அமைத்துக் கொடுக்கவில்லையோ? மகள் ஆசைப்பட்டாள் என யோசிக்காமல் அவளது விருப்பத்துக்கு செவிசாய்த்தது தவறு என மனம் அடித்துக் கொண்டது. நிவியை காணும் ஒவ்வொரு நொடியும் ஜோதிக்கு மனம் கலங்கியது.
சாந்தியை அவர் ஆரம்ப காலத்திலிருந்தே பார்த்துக் கொண்டே தான் இருக்கிறார். சாந்தியின் நிலைமை தான் தன் பிள்ளைக்குமா? என எண்ணி குமைந்து போனார். இன்னொரு யுகேந்திரனா? ஒரு பெண்ணாய் எப்படி அவள் இந்த சமூகத்தை எதிர்கொள்ள போகிறாள். தாங்கள் இருக்கும் வரை பார்த்துக் கொள்வோம். தங்கள் காலம் முடிந்தால், அவளை பேணி காப்பது யார்? என்ற கேள்வி அவரை வண்டாய் குடைந்து, நிம்மதியை பறித்து விட்டிருந்தது.
“ஜோதி, இது அவசியமா இப்போ?” என கேட்ட வீரபாண்டியிடம், “அவசியம் தான். தப்போ சரியோ, ஒருத்தவங்க உடம்பு முடியாம இருக்கும் போது கோபத்தை எல்லாம் காட்டக் கூடாதுங்க!” என்ற ஜோதி நிவியுடன் வருவதாக கூற, பெண்கள் இருவரையும் தனியே அனுப்ப மனமின்றி வீரபாண்டியும் உடன் செல்வதாகிற்று.
மூவரும் ஆயத்தமாக, “ம்மா… நான் சாந்தி அத்தைக்கிட்டே சொல்லிட்டு வரேன்!” என அவரிடம் விரைந்தாள் நிவி.
“என்ன நிவி, எங்கேயாவது கிளம்பிட்டீயா?” என சாந்தி வினவ,
“ஆமா அத்தை. அழகர் மாமாவுக்கு ஹார்ட்ல எதோ பிராப்ளமாம். சர்ஜரி பண்ணணும்னு ரொம்ப சீரியஸா இருக்காராம். நாங்க போய் பார்த்துட்டு வரோம்!” அவர் முகத்தை ஊன்றி கவனித்தாள் நிவி. ஒரு நொடி நோட்டில் எதையோ எழுதிக் கொண்டிருந்த சாந்தியின் கைகள் தயங்கியது. பின் முகத்தில் எந்த பாவனையும் இல்லை. அவர் என்ன நினைக்கிறார்? என்று அவளால் கணிக்க முடியவில்லை.
“சரி டா. பார்த்து பத்ரமா போய்ட்டு வாங்க!” என்ற சாந்தியின் முகத்தில் கீற்றாய் புன்னகை. அதிலிருந்தது என்னவென அறிய முயன்று தோற்றவள், சிறிய தலையசைப்புடன் விடைபெற்று விட்டு, யுகேந்திரனிடமும் அழைத்துக் கூற, அவன் பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை.
இவர்கள் சென்று இறங்க இரவை தொட்டு விட்டிருந்தது. எந்த மருத்துவமனை என வித்யாவிடம் விசாரித்து அங்கே சென்றனர்.
“என்னாச்சு நிவி? படியேற முடியலையா?” என கேட்ட ஜோதியின் கண்கள் வீங்கியிருந்த நிவியின் கால்களை பார்த்தது.
“ட்ரெய்ன்ல கால் நீட்டி உட்கார்ந்துட்டே வந்தது இப்படி ஆகிடுச்சு மா. ஒன்னும் இல்லை!” என்றவள், தாயின் தோள்பட்டையை பிடித்துக் கொண்டே நடந்து வந்தாள்.
இரவு உணவை சாப்பிட்டு விட்டு அப்போது தான் வித்யாவும் சந்த்ருவும் உடன் விஜயும் அந்த தளத்தை அடைந்தனர்.
நிவியை கண்டு விட்ட வித்யா, “நிவிக்கா! வந்துட்டீங்களா?” என கேட்டுக் கொண்டே அவளிடம் விரைய சந்த்ரு அப்போது தான் அவர்களை கவனித்தான்.
மெதுவாக தன் தாயை பிடித்துக் கொண்டு நடந்து வரும் மனைவியின் கால்களில் ஒரு நொடி நிலைத்தப் பார்வை பின் அவள் மேடிட்ட வயிற்று தொட்டது. ஆறு மாதம் முடிந்த ஏழாவது மாதத் துவக்கம். வயிறு நன்றாக கனிந்து கூம்பியிருந்தது. அப்படியே விழிகள் அவள் முகத்தில் நிலைக்க, நிவியும் அவனைப் பார்த்துக் கொண்டே தான் நடந்து வந்தாள். முகம் கொஞ்சம் தாய்மையில் பளபளவென்றிருந்தது. விழிகளில் ஒரு விரக்தி.
அவளருகில் சென்று தாங்கிக் கொள்ள சொல்லி மனம் கட்டளையிட, அமைதியாக நின்றிருந்தான். கொஞ்சம் வலித்தது. இந்த பிரிவு! இந்த ஆறு மாத பிரிவு இருவரையும் நன்றாக தவிக்க விட்டிருக்க, பசலை நோய் அவர்களை தாக்கி இருந்தது. அவன் முகத்திலிருந்து பார்வையை நிவி விலக்கி விட, ஆடவன் விலக்கவில்லை.
அவள் வயிற்றில் வேதனையுடன் படிந்தது ஆடவனின் விழிகள். தன் உதிரம்! நிவி செய்தது தவறு தான். ஆனால், அழகர் செய்தது போல அதே தவறை தான் இப்போது நீ செய்து கொண்டிருக்கிறாய் என மனம் தன்னை சுட்டது. அழகரை பேசுவதற்கு தனக்கு தகுதியில்லை என எண்ணிக் கொண்டவனின் விழிகள் மனைவியை கண்களில் நிறைத்துக் கொண்டது. எத்தனை ஆசையாய் திருமணம் முடித்தானோ? அதை கையோடு விவாகரத்தும் வாங்கி இருந்தான். மிஞ்சிப் போனால் அவர்கள் இருவரும் வாழ்ந்தது சொற்ப நாட்கள், ஓரு மாதம் தான். மகிழ்ச்சியாக தான் வாழ்ந்தார்கள்.
எதோ சிறு கல்லாய் தோன்றிய சலனம் பெரும் பாறையாய் வாழ்க்கையை சுருட்டிக் கொண்டது. இப்படி தன் குழந்தையை அவள் சுமக்கும் போது எப்படியெல்லாம் பார்த்துக் கொள்ள வேண்டும் என எண்ணி மகிழ்ச்சியில் திளைத்திருப்பான்.
ஆனால், இன்று? ஆறுமாதங்கள் கழித்து தான் அவனுக்கே தெரியும் தான் தந்தையாகும் விஷயம். மனம் வலித்தது தான். இந்த பிரிவில் நிறைய யோசித்தான். நியாயங்கள் நியாயங்களாக தான் இருந்தன. ஆனால், மனைவியை காணும் போது மட்டும் அந்த நியாயங்கள் ஓடி ஒளிந்து கொண்டன. கோபம் இல்லை என்றெல்லாம் இல்லை. ஆனால், காதலும் குழந்தையின் மீதான அன்பும் ஆசையும் அவனை இளக செய்திருந்தது. இருப்பினும் அவளிடம் சென்று பேச விருப்பமில்லை. இப்படியொரு வாழ்க்கை என விரக்தியாக சிரித்துக் கொண்டான்.
“அக்கா, மாமா இந்த ரூம்ல தான் இருக்காங்க!” என வித்யா நிவியை அழைத்து சென்றாள்.
வீரபாண்டி வெளியே நின்று கொண்டார். உள்ளே வரவில்லை அவர். ஜோதி மட்டும் நிவியுடன் சென்றிருந்தார்.
அவள் உள்ளே நுழைய, கோகிலாவின் முகம் அவளது வருகையின் பிடித்தமின்மையை காட்டியது. அவரை ஒரு பொருட்டாக மதிக்கவில்லை பெண்.
நிவியை எதிர்பாராத ஆனந்தி, “நிவி, வாம்மா. எதுக்கு இது மாதிரி நேரத்துல அலைஞ்சுட்டு இருக்க?” என அவளைப் பார்த்து புன்னகை புரிந்தார். உயிர்ப்பில்லாத புன்னகை.
“பரவாயில்லை அத்தை! மாமா எப்படி இருக்காரு?” என கேட்டவளின் விழிகள் அழகரை நோக்கியது. முகமெல்லாம் கருத்துப் போய் உடல் இளைத்திருந்தார். அழகாரா இவர்? என எண்ணமளவு இருந்தது அவரது தோற்றம். ஒரு கணம் மனம் அவருக்காய் வருந்த,
“டாக்டர் என்ன சொன்னாங்க அத்தை?” என வினவினாள்.
“ஆப்ரேஷன் பண்ணணும்னு சொல்லி இருக்காங்க நிவி!” என ஆனந்தி பேசிக் கொண்டிருக்கும் போதே கோகிலா வெளியேறி விட்டார்.
இவர்களது பேச்சில் உறங்கிக் கொண்டிருந்த அழகர் விழிகளை திறந்தார். நிவியை எதிர்பாராதவரின் முகம் ஒரு கணம் மகிழ்ச்சியை வெளிபடுத்தியது. அவள் பின்னே ஆர்வமாய் கண்களை ஓட விட்டார் மனிதர். ஆனால், ஏமாற்றமே மிஞ்சியது அவருக்கு.
“எப்படி இருக்கீங்க மாமா?” கனிவாக கேட்ட மருமகளைப் பார்த்து சிரித்தார்.
“பார்த்தா தெரியலை யா டா? செஞ்ச பாவத்துக்கு தண்டனை அனுபவிக்கிறேன். கடவுளோட தண்டனை. நீ சொன்ன வார்த்தை பழிச்சுடுச்சு டா!” என்றவரின் வார்த்தைகள் விரக்தியின் விளிம்பிலிருந்து ஒலித்தது.
“அச்சோ மாமா! நான் கோபத்துல சொன்னது. என் மனசுல இருந்து வரலை!” என பதறினாள் நிவி.
“நான் உன்னை குறை சொல்லலை டா. உண்மையை சொன்னேன்! யாரா இருந்தாலும் செஞ்ச தப்புக்கு தண்டனையை அனுபவிக்கணும் எதாவது ஒரு வழியில!” பதிலளித்தார் அழகர்.
அவரை வேதனையுடன் பார்த்தாள் நிவி. ஒரு நாளும் அவருக்கு இப்படியாக வேண்டும் என நினைக்கவில்லை. அவருடன் சாந்தியை இணைத்து வைக்க வேண்டும் என தான் விரும்பினாள். கோபமிருந்தாலும் இந்த மனிதரை இப்படி கண்ட போது மனம் வலித்தது.
ஆனந்தியை ஒரு முறை பார்த்தவர், நிவியிடம் எதையோ கேட்க தயங்கினார். அதை கவனித்த ஆனந்தி, “நான் போய் உனக்கு சாப்ட எதாவது வாங்கிட்டு வரேன் நிவி!” என ஆனந்தி வெளியே செல்ல, ஜோதியும் வெளியேறிவிட்டார்.
“கேளுங்க மாமா… என்ன கேட்கணும் உங்களுக்கு?” என வினவியவள், மெதுவாக நாற்காலியை இழுத்துப் போட்டு அமர்ந்தாள்.
“அது… சாந்தியும் யுகியும் எப்படி இருக்காங்க மா?” தயங்கி தயங்கி கேட்டார்.
“நல்லா இருக்காங்க மாமா. எப்பவும் போல அவங்களோட உலகத்துல சந்தோஷமா இருக்காங்க. அதுல ஒரு கல்லை எறிஞ்சுட்டு வந்திருக்கேன்.” என்றவளை புரியாது நோக்கினார் அழகர்.
“எதுவும் சொல்லலை அத்தை. ஆனால், அவங்க முகத்துல ஒரு நொடி எதோ ஒன்னு… என்னால கண்டு பிடிக்க முடியலை!” அவளுடைய கூற்றில் அழகர் முகம் சுருங்கியது.
“என் மேல அவங்களுக்கு கோபம் இருக்கும். ஆனால், என் சாந்தி, அவ எப்பவும் என் சாந்தி தான்.” என்றவர் சில கணங்கள் நிறுத்தி, “நான்… நான் இருக்கும் போது அவ கூட இல்லை. அவளைப் பார்த்துக்குற, என் பையன் கூட வாழ்ற வாய்ப்பை கடவுள் கொடுக்கலை. அவளுக்கான எந்த
கடமையும் நான் செய்யலை. அந்த மனக்குறை தான் அதிகம். ஆனந்தி கூட வாழ்ந்த இத்தனை வருஷமும் அவளுக்கு நான் உண்மையா தான் இருந்தேன். ஆனால், இப்ப கடைசியில அவளுக்கும் துரோகம் பண்ண மாதிரி ஆகிடுச்சு. என் பையன் என் கூட பேசி ஆறுமாசமாச்சு. ஆனந்தியும் பேசுறது இல்லை. எதோ கட்டமைக்கு வாழ்ந்துட்டு இருக்கேன் மா. ஆனால், ஒவ்வொரு நொடியும் குற்ற உணர்வுல செத்துட்டு இருக்கேன். அதான் கடவுள் என்னைக் கூப்பிட்டுக்கப் போறாரு.. எனக்காக என் சாந்திக்கிட்ட இதை மட்டும் சொல்லு மா… அவளை நான் காதலிச்சது நூறு சதவீதம் உண்மை. அவளுக்கு துரோகம் பண்ணணும்னு என் கனவுல கூட நான் நினைச்சது இல்லை. ஆனால், என்னோட சூழ்நிலை. பெத்தவங்க சாகப்போறேன்னு நிக்கும் போது காதலை விட குடும்பம் முக்கியமா பட்டுச்சு. அதான் நான் அப்படி பண்ணிட்டேன். ஆனால், யுகி, எனக்கு சத்தியமா தெரியலை. அவன்! என் சாந்தி யுகியை சுமந்துட்டு இருக்கான்னு தெரிஞ்சு இருந்தா, அவளை ஒரு நாளும் விட்டிருக்க மாட்டேன். நான் இல்லைனாலும், அவ சந்தோஷமா யார் கூடவாது வாழணும்னு தான் ஆசை பட்டேன்!” என்றவரின் குரல் கரகரத்திருந்தது. உணர்ச்சியின் பிடியில் சிக்கியிருந்தார்.
நிவிக்கு புரிந்தது. அவரவர்க்கு அவருடைய நியாயங்கள். தன்னை அந்த நிலையில் பொறுத்திப் பார்த்தாள். அவருடைய முடிவை தான் தானும் எடுத்திருப்போம் என மனம் ஆணித்தரமாக மொழிய, ஒரு நொடி அவரை நினைத்து மனம் வருந்தியது. சில நொடிகள் யோசித்தவள், “நான் ஏன் மாமா சொல்லணும்? நீங்களே சொல்லிக்கோங்க.” என்றாள்.
“நான்… இனிமே அவளை பார்ப்பேனான்னு கூட எனக்கு தெரியலை!” என்றவரின் வார்த்தைகள் வேதனையை சுமந்து வந்தது.
“அத்தனை பேர் கூடவும் சேர்ந்து உங்களுக்கு வாழணும்னு ஆசை இல்லையா?” என அழுத்தமாக கேட்டாள்.
அவளைப் புரியாது பார்த்தவர், “அந்த குடுப்பனை எல்லாம் இல்லை மா எனக்கு!” என்றார் அழகர்.
“ஏன் இல்லை? இருக்கு மாமா. வாழலாம்… நம்ம நினைச்சா முடியும்!” என்றவளின் குரலில் இருந்த உறுதி அழகரை வியக்க வைத்தது.
“எப்படி மா?” என வினவிய அழகரிடம் சில நிமிடங்கள் எதையோ பேசியவள், “எல்லாரோடயும் சேர்ந்து வாழப்போற வாழ்க்கையை நினைச்சு, ஆப்ரேஷனுக்கு ரெடியாகுங்க மாமா!” என்றவளின் மனதில் அடுத்து செய்யப்போகும் செயலின் திட்டங்கள் அணிவகுத்து நின்றன.
“இதெல்லாம் நடக்குமா மா?” என வினவிய அழகரைப் பார்த்து சிரித்தவள், “நடக்கும் மாமா. நடத்தலாம். சீக்கிரம் வீட்டுக்கு வாங்க!” என்றவள் எதோ ஒரு முடிவை எடுத்திருந்தாள்.
முழுதாக ஒரு நாள் கழிய, மருத்துவர் அழகரை பரிசோதித்து விட்டு, உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் இருப்பதால் இன்னும் இரண்டு நாட்களில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளலாம் என கூறியிருக்க, அனைவருக்கும் மனதில் நிம்மதி பிறந்தது.
“ஆனந்தி, உன்கிட்ட ஒன்னு கேட்கணும்!” தயங்கி தயங்கி பேசிய கணவனைப் பார்த்தவர், தான் பிழிந்துக் கொண்டிருந்த பழச்சாற்றை நிறுத்தி விட்டு அவர் புறம் திரும்பினார்.
“இதை நான் உன்கிட்ட கேட்குறது தப்பு தான். ஆப்ரேஷன் செய்றதுக்கு முன்னாடி சாந்தியையும் யுகியையும் ஒரு தடவை பார்க்கணும்!” என்றார். தயக்கம் மேலிட கூறியவரை சில நொடிகள் பார்த்தவர், “பார்க்கலாம், நான் பேசுறேன்!” என்று விட்டு வேலையை தொடர்ந்தார்.
பின் சிறிது நேரம் கழித்து சந்த்ருவிடம் இதை கூற, அவன் கோபத்தில் சீறிவிட்டான்.
“ம்மா… ஏன் ம்மா? சாந்திமா வர மாட்டாங்க. அவங்களை கஷ்டப்படுத்த வேண்டாம்!” என சந்த்ரு கூற, “சந்த்ரு, நான் என்ன செய்றேன்னு எனக்கு தெரியும். நீ எனக்கு ப்ளைட் டிக்கெட் மட்டும் புக் பண்ணி கொடு!” என தன் பாட்டில் நிலையாக நின்ற ஆனந்தி திருச்சி சென்றிறங்கினார்.
ஆனந்தியை எதிர்பாராத சாந்தி அதிர்ந்து பின் என்னவோ எதோ என மனம் பதறி, “உள்ளே வாங்க ஆனந்தி!” என அழைத்தார்.
உள்ளே நுழைந்த ஆனந்தி, சாந்தியின் முன் மண்டியிட்டு அமர்ந்தார். கைகளை கூப்பியவர், “எந்த தைரியத்துல இங்க வந்தேன்னு தெரியலை. ஆனால், வந்துட்டேன். என் புருஷனுக்காக, இத்தனை வருஷமா நான் உண்மையா நேசிச்ச மனுஷனுக்காக. அவர் என் கூட எப்படி வேணா வாழ்ந்து இருக்கலாம். ஆனால், நான் அதிகமாக நேசிச்சேன் அவரை. உண்மையா வாழ்ந்துட்டேன். அவர் செஞ்சது துரோகம் தான். ஆனாலும் என் மனசு கேட்கலை. இப்படி ஹாஸ்பிடல்ல படுத்து கிடக்காரு! ஆப்ரேஷன் பண்றதுக்கு முன்னாடி உங்களைப் பார்க்கணும், உங்க பையனைப்
பார்க்கணும்னு சொன்னாரு. அதான் வந்தேன்!” என்ற ஆனந்திக்கு தொண்டை அடைக்க, முகத்தை கைகளால் மூடிக் கொண்டார். விம்மித் தவித்தது உள்ளம். அவரை அவர் பேச்சைக் கேட்ட சாந்தி, உறைந்து நின்றார்.