இந்நிகழ்வு நடந்து இதோ ஒரு மாதம் ஆகிவிட்டது. அன்றைக்குச் சட்டென்று அனைவரும் வந்துவிட்டதும் கண்மணி தான் தடுமாறினாளே ஒழிய கண்ணனிடம் தடுமாற்றமும் இல்லை பதட்டமும் இல்லை. மிகவும் சகஜமாக எப்போதும்போல் ஜாலியாக அனைவரிடமும் உரையாடிவிட்டு நைஸாக கிளம்பிவிட்டான். கண்மணிக்கு அது இன்னும் அதிர்ச்சியாக இருந்தது. ஏதோ தப்பு நடக்கிறது என்று அவள் புரிந்துகொண்டிருந்த நிலையில் கண்ணன் சகஜமாக நடந்துகொண்டதும் மற்றவர்களும் சாதாரணமாகப் பேசியதும் அந்தக் குழந்தைக்குக் குழப்பத்தைத்தான் கொடுத்தன. ஆனால் அவளை அந்நிகழ்வு பெரிதாக பாதித்தது. இருக்காதா.. கடலையே தெரியாதவளிடம் திமிங்கலம் வந்து வணக்கம் சொன்னால்.. தென்றலை மட்டுமே அனுபவித்தவள் புயலின் உள்ளே மாட்டிக்கொண்டால்.. நடந்தது சரியா தவறா என்பதுவே குழப்பமாக இருந்தபோது யாரிடம் போய் என்னவென்று சொல்லுவாள். எதுவும் புரியவில்லை அவளுக்கு.
அனைவரும் அவளுக்கு ஊட்டித்தான் விடுகிறார்கள். அனைவரும் அவளை முத்தமிடுகிறார்கள். அப்படியானால் இதிலென்ன தவறு?
“அல்ல அல்ல.. இது வேறாய் இருந்தது. அம்மாவும் பாட்டியும் ஊட்டிவிடுவது போல் இது இல்லை.. அப்பாவின் முத்தத்தைப் போல் இது இல்லை. எனக்கு விடுபடத்தானே தோன்றியது. எனில் ஏதோ தவறு உள்ளது தானே..”
இப்படி அந்தச் சின்னப்பெண்ணின் மூளைக்குள் சிந்தனைப் போராட்டம் ஆரம்பமானது. வித்தியாசத்தை அவள் நன்குணர்ந்தாளே தவிர இதைப்பற்றிய தெளிவு அவளுக்குக் கிடைக்கவில்லை. ஒரு மாதமாக இந்த நிகழ்வு உள்ளுக்குள் அவளைக் குடைந்துகொண்டிருந்தது. அந்த நிகழ்வுக்குப் பிறகு கண்ணன் பணி நிமித்தம் வெளியூர் போய்விட்டபடியால் அடுத்து வந்த இரண்டு வாரங்களும் குழப்ப மனநிலையே தொடர்ந்தது. அதன்பின் ஒருவாறு கவனம் மாறி இயல்பு நிலைக்குத் திரும்பினாள்.
அந்நேரம் பார்த்து ஊரிலிருந்து திரும்பிய கண்ணன் மீண்டும் ஏதாவது காரணம் பிடித்துக்கொண்டு வருவதும் போவதுமாக ஆரம்பிக்க, வெறும் குழப்பங்கள் மனப்போராட்டங்களாக உருமாறின கண்மணிக்குள்ளே.
சகஜங்களுக்கிடையில் கண்ணனின் சில பார்வைகளும் உடல் மொழிகளும் புன்னகைகளும் கண்மணிக்கு மீண்டும் வித்தியாசத்தை உணர்த்தின. அன்று நிர்பந்தித்தளத்த முத்தத்தினை அவன் நினைவூட்டிக்கொண்டே இருப்பதாய்த் தோன்றியது.
தனிமையை நாட ஆரம்பித்தாள். பயப்பட ஆரம்பித்தாள். கண்ணனின் குரல் கேட்டாலே பதட்டப்பட ஆரம்பித்தாள். அவர்கள் வீட்டுக்குப் போகச் சொன்னால் மறுக்கத் துவங்கினாள்.
“ஒன்னுத்துக்கும் வளையமாட்டேங்குது உனக்கு. அம்மாவுக்கு மேல சோம்பேறியா இருக்கியே” என்ற ஏச்சு பேச்சுக்களை வாங்கி கட்டிக்கொண்டாள். அப்படியே அவர்கள் வீட்டுக்குப் போய்த்தான் தீரவேண்டுமென்ற நிர்பந்தங்கள் வந்த போது அவள் அனுபவித்த தவிப்புகளும் பயங்களும் பதட்டங்களும், வார்த்தைப்படுத்துவது கடினம்தான்.
இப்படியான மனநிலையில் எங்கிருந்து படிப்பது? தேர்வில் கோட்டைவிட்டுவிட்டாள். விடைத்தாள்களைக் கையெழுத்துக்காக ரகுராமனிடம் வைத்தாள். அலுவலகத்தில் என்ன கடுப்போ.. ரகுராமன் அனைத்தையும் அவள் மேல் கொட்டிவிட்டார். கன்னம் பழுத்துவிட்டது. கமலம் பாட்டி வழக்கம்போல் அனைத்துக்கும் சாந்தியைக் கைகாட்டி சுடு சொல் வீச, சாந்தி அழுதுவிட, வீடே சின்ன சைஸ் போர்க்களமாகிவிட்டது.
ஏற்கனவே இருந்த கண்மணியின் மனப்போராட்டங்கள் விஸ்வரூபம் எடுத்தன. கழிவறைக்குள் சென்று சத்தமில்லாமல் அழுது தீர்த்தாள்.
இதில் பரிதாபம் என்னவென்றால்.. அவளுக்கான கவனிப்புகளை உணவு, உடை, உறைவிடம், கல்வி என்ற அகண்ட அடிப்படைகளோடு குடும்பம் நிறுத்திக்கொண்டதே ஒழிய அவளின் மனநலம் பற்றி கவனிப்பாரில்லை. அவளின் பிஞ்சு மனம் தேவையில்லாத போராட்டங்களை அனுபவித்துக் கொண்டிருக்கிறது என்பதை ஒருவர் கூட கண்டுபிடிக்கவில்லை.
இந்நிலையில் இருக்கும் கண்மணிகளுக்கு ஏது பஞ்சம்?
குறை சொல்ல இருக்கும் நேரம், வளரும் நம் வீட்டுக் குழந்தைகளுக்கு இன்றைய உலகத்தின் உண்மைகளை எடுத்துச் சொல்லவதற்கு இருப்பதில்லையே.
பாலியல் கல்வி நம் குடும்பங்களைப் பொருத்தவரை கெட்ட வார்த்தையாகத் தானே இருக்கிறது!
பாலியல் கல்வி என்பது எப்படி உடலுறவு கொள்ள வேண்டும் என்பதைக் கற்றுக்கொடுக்கும் கல்வி என்று தானே பலரும் நினைக்கிறார்கள். ஆண் பெண் இருபாலர்களால் பகிரப்படும் இந்த உலகத்தில் பார்வை, வார்த்தை, தொடுதல், பழக்கம் என்பவற்றில் பால்களுக்கான சுதந்திரம், தனிஇடம், தனித்துவம், மரியாதை, ஏற்பு, விருப்பு வெறுப்பு, அனுமதி, ஒப்புதல், சகித்தல், எதிர்த்தல் இவையும் பாலியல் கல்வியில் அடக்கம் தான் என்று எத்தனை பேர் உணர்ந்திருக்கிறார்கள்.?
பழங்கால இலக்கியங்களில் களவியலும் அகப்பொருளும் எடுத்தாளப்பட்டிருக்கிறது. முன்னேறிவிட்டதாக மார்தட்டும் இந்தக்காலத்தில் வாழும் கண்மணிகளை இது தவறு தான், இதற்கு எதிர்ப்பு தான் காட்டவேண்டுமென்ற முடிவுக்குக் குழப்பமில்லாமல் வந்து சேரப் பழக்கியிருக்கிறோமா?
மொத்தத்தில் இத்தனை பேர் இருந்தும் தவித்து நின்றாள் கண்மணி. “வாய்திறந்து பகிர்ந்துகொள்ள வேண்டியது தானே!?” என்று கேட்கலாம். குழந்தை.. பூப்பெய்துதல் என்ற அனுபவத்தோடே இன்னும் பரிட்சயமாகவில்லை. நடந்தது தவறா சரியா என்ற குழப்பம். நெருங்கிய உறவினர்.. சொன்னால் திட்டிவிடுவார்களோ என்ற அச்சம்.. இவையெல்லாம் அந்தக் குருவி தலையில் பனங்காய்களாக இருக்கும்போது எப்படிச் சொல்ல முடியும்? என்னவென்று சொல்ல முடியும்? ஆனால், இது சந்தேகத்திற்கிடமில்லாமல் தவறு தான் என்று புரிந்துகொள்ளும் சந்தர்ப்பமும் இதைச் சொல்லித்தான் ஆகவேண்டும் என்ற நிர்பந்தமும் விரைவிலேயே வந்தன.