மருத்துவமனையில் கைக் குழந்தை ஒன்று சிணுங்கிக் கொண்டேயிருந்தது. செவிலி சந்தியா குழந்தையின் சிணுங்கலை நிறுத்த குழந்தையை கையில் ஏந்தி சமாதானம் செய்துக் கொண்டிருந்தார். அவரருகில் குழந்தையின் இளம் தாய் தன் குழந்தையின் நிலையை கண்டு தானே அழுதிடும் நிலையில் நின்றிருந்தார்.
சிவரஞ்சனி அவர்களை நெருங்கி குழந்தையை கையில் வாங்கினாள்.
“வைரல் ஃபீவர் தானே சொன்னேன்? சரியாகிடும். நீங்க முதல்ல ஸ்ட்ராங்கா இருங்க” என்று அந்த இளம் பெண்ணிடம் சொன்னாள்.
“ம்ம். தேங்க்யூ டாக்டர்” என்ற பெண் தெளியவில்லை என்றாலும் முயன்று புன்னகைத்தார். சிவரஞ்சனி குழந்தையை தட்டிக் கொடுத்து, மெல்ல பேச்சும் கொடுக்க, அழுகையை நிறுத்திய குழந்தைக்கு சோர்வினால் கண்கள் சொருகியது. உதடுகள் இரண்டும் பிரிந்து, கன்னங்கள் இரண்டும் உப்பி, பால் வாசத்துடன் இருந்த குழந்தையை பார்க்கையில் அவள் மனத்தில் எப்போதும் போல பரவும் அமைதி இப்போது வேலை செய்யவில்லை. குழந்தையை மென்மையாய் அதன் தாயின் கையில் ஒப்படைத்தாள் அவள்.
“சந்தியா சிஸ்டர், நான் வீட்டுக்கு கிளம்பறேன். எனக்கு பேஷண்ட்ஸ் வந்தா தேவா டாக்டர்கிட்ட அனுப்பிடுறீங்களா? நான் டாக்டருக்கு இன்பார்ம் பண்ணிடுறேன்” என்று அவள் கேட்க, “ஓகே டாக்டர். இன்னும் இருபது நிமிஷம் தானே? நீங்க கிளம்புங்க” என்றார் அவரும்.
“சரிங்க சிஸ்டர்.” என்றவள் நேராக மருத்துவர் தேவராஜன் அறைக் கதவை தட்டி விட்டு உள்ளே சென்று தான் வீடு செல்வதாக தெரியப்படுத்தினாள்.
“அட இதெல்லாம் சொல்லணுமா? நான் பார்த்துக்கறேன் ரஞ்சனி. நீங்க கிளம்புங்க” என்றார் தேவராஜன்.
“தேங்க்யூ டாக்டர்” என்றாள் புன்னகையுடன், “இது வேறயா?” என்று அவர் அன்பாக சலிக்க, “இதுக்கும் சேர்த்துதான் அந்த தேங்க்ஸ்” என்றாள். அவர் புரியாமல் அவளைப் பார்க்க, “எனக்காக மேனேஜ்மென்ட்ல பேசியிருக்கீங்களே. அவங்க என்கிட்ட சாரி மட்டும் சொல்லாம, நம்ம சேஃப்டிக்காக நிறைய செக்யூரிட்டி சேஞ்ச்ஜஸ் பண்றேன்னு சொல்லியிருக்காங்க. உங்களுக்கு தெரிஞ்சிருக்கும். நமக்கு மெயில் வந்ததே..” என்று அவள் விளக்கவும், “ஓ, எஸ். எஸ்” என்றார்.
“தேவனா?” என்ற கேள்வி எழும் போதே செய்திருப்பான் என்றும் அவளுக்கு நிச்சயமாகியது.
தேவராஜனுக்கு தலையசைப்பை மட்டும் கொடுத்து விட்டு வெளியில் வந்தாள்.
அவளின் பாதுகாப்புக்காக அவனால் முடிந்ததை எல்லாம் செய்திருக்கிறான். பதிலுக்கு அவள் என்ன செய்யப் போகிறாள்?
அவனுக்கு ஆபத்து என்று அடித்துக் கொள்ளும் மனதிடம் என்ன தைரியம் சொல்லி சமாதானம் செய்யவென்று அவளுக்குத் தெரியவில்லை. மருத்துவமனையின் செயற்கை குளிரூட்டலையும் மீறி அவளுக்கு வியர்த்தது.
மருத்துவமனை வாசலில் ஆட்டோ பிடித்துக் கொள்ளலாம் என்று அவள் வெளியில் செல்ல வேகமாக நடக்க, அவளைத் தடுப்பது போல வந்து வழியை மறித்து எதிரில் நின்றான் அவன்.
“ஹலோ.. பார்த்து..” என்று பதட்டமாக சொல்லி நிமிர்ந்தவள் முன்னே கூர்மையான பார்வையுடன் நின்றிருந்தான் திருமூர்த்தி.
“என்ன டாக்டர், நாங்க அவ்வளவு சொல்லியும் இந்நேரம் தனியா வெளில போறீங்களே. பசுபதி வர்ற வரைக்கும் உள்ள வெயிட் பண்ணலாம். இல்ல?” என்று அவன் கேட்க, “நீங்க எப்படி இங்க?” என்று அதிர்ச்சியுடன் கேட்டு, “சும்மா எப்போ பார்த்தாலும் மிரட்டுற மாதிரியே பேசாதீங்க திருமூர்த்தி. ஹாஸ்பிடல்ல எனக்கு என்ன நடந்திடும்னு இப்போ நீங்க…” என்று படபடத்தவளின் பேச்சு, திருமூர்த்தியின் பார்வை அவளின் பாதத்தின் மேல் படியவும் பட்டென்று பாதியில் நின்று போனது.
“நம்ம பாதுகாப்பை நாம தான் பார்த்துக்கணும் டாக்டர். பிளீஸ், மறுக்காம என் கூட வாங்க” என்றான் தணிந்த குரலில்.
அவளுக்கிருந்த படபடப்பில் மறுத்திருக்கவும் மாட்டாள் தான். ஆனால், அச்சமயம் அவளின் அலைபேசிக்கு, “பிளீஸ், கோ வித் திருமூர்த்தி. உங்க சேஃப்டிக்காக தான் சொல்றேன்” என்று கர்ணா செய்தி அனுப்பியிருந்தான். அதற்குள் கர்ணாவுக்கு தகவல் சொல்லி விட்டானா? எப்படி? என்று எதிரில் நின்றவனை கேள்வியுடன் பார்த்தாள்.
அன்று காலை நெப்போலியனிடம் பேசியதும், தேவனுக்கு தான் தெரியப்படுத்த துடித்தாள் அவள். அவனோ அலைபேசியை எடுக்கவில்லை. பழனிவேல் மேல் அவளுக்கு எவ்வளவு ஆதங்கம் இருந்தாலும், அவர் கர்ணாவின் அப்பா என்பதை எக்கணமும் அவள் மறக்கவேயில்லை. அவரை நேரடியாக எதிர்க்க அவளுக்கும், தேவனுக்கும், அவர்களின் குடும்பத்திற்கும் அந்த தயக்கம்தான் முழுத் தடையாக இருந்தது. அதனாலேயே நெப்போலியன் அவரைத் தாக்க நினைக்கிறான் என்பதை கர்ணாவிடமிருந்து மறைக்க விரும்பவில்லை அவள்.
“என் அண்ணா நெப்போலியன், உங்கப்பாவை விபத்து ஏற்படுத்த திட்டமிடுகிறான்.” என்று உடனடியாக தந்தி போல அவனுக்கு செய்தியை கடத்தியிருந்தாள். கர்ணா அதை பார்த்து விட்டான் என்றது அலைபேசி. ஆனால், அவளுக்கு பதிலேதும் அனுப்பவில்லை அவன். இப்போது அவனது செய்தியை பார்த்ததும் துளி கோபம் வந்தாலும், அதற்கு மேல் திருமூர்த்தியுடன் வாதாடாமல், “பிளீஸ் கேள்வி கேட்காம வாங்க டாக்டர். நான் உங்களை ட்ராப் பண்றேன்” என்று அவன் சொல்லவும், முன்னே நடந்தாள்.
அவள் நடந்து கொண்டிருந்த பாதையில் சத்தமில்லாமல், அவளுக்காக வந்து நின்றது மிகவும் பாதுகாப்பானதாக கருதப்படும் கருப்பு நிற டாட்டா ஹாரியர் கார்.
அதிலிருந்து ஒருவர் இறங்கி கார் சாவியை திருமூர்த்தியிடம் ஒப்படைத்து ஒதுங்கி நின்ற தோரணையிலேயே அவர் பாதுகாப்பு பணியில் இருப்பவர் என்று தெள்ளத் தெளிவாக தெரிந்தது.
“பிளீஸ், கெட் இன் டாக்டர்” என்று அவளுக்காக காரின் கதவை திறந்துப் பிடித்து நின்றான் திருமூர்த்தி. அவள் ஏறியதும் வேகம் எடுத்தது கார்.
“வீட்டுக்கு இல்ல. அவரோட ஸ்டுடியோ போகணும்” என்று இசைத் தென்றலின் ஒலிப்பதிவு ஸ்டுடியோவின் முகவரியை குறிப்பிட்டாள்.
“ஓகே” என்றவன் ஏற்கனவே அதற்குரிய சாலையில் காரை திருப்பியிருந்தான்.
அவளுடன் திருமூர்த்தி மட்டுமே இருந்தான். அவர்களை யார் பின் தொடர்கிறார்கள் என்றெல்லாம் திரும்பிப் பார்க்கவில்லை அவள்.
“சோ, நீங்க எங்களை விட்டுப் போகவேயில்ல. இல்லையா?” பதில் தெரிந்தே கேட்கப்படும் கேள்விகளுக்கு பதில் சொல்லாமல் நேரத்தை சேமித்தான் திருமூர்த்தி.
“காரை மட்டும் மாத்திட்டு எங்களை ஃபாலோ பண்ணிட்டே தான் இருந்திருக்கீங்க. நாங்க என்ன பண்ணணும்னு நீங்கதான் டிசைட் பண்ணிட்டிருந்திருக்கீங்க.”
“தட்ஸ் அவர் ஜாப் டாக்டர்” அவனைப் போலவே மிடுக்காக வந்தது பதிலும்.
அவனிடம் சிவரஞ்சனியால் சிடுசிடுக்க முடியவில்லை. அவளின் மனதில் ஊசலாடிய பயம் அவளைப் பேசவும் விடவில்லை. அலைபேசி எடுத்து மாமியாருக்கு அழைத்து பேசினாள். அவள் சிறிது நேரத்தில் தேவனோடு வீடு வருவாள் என்று தகவல் சொன்னாள். மாமனாரிடமும் அதைத் தெரியப்படுத்தச் சொன்னாள். திருமூர்த்தியின் பெயரை கேட்டதும், “சரி, சீதா. ரெக்கார்டிங் முடிஞ்சதும் பத்திரமா வீட்டுக்கு வர சொல்லு அவங்கள” என்று சேதுராமன் சொன்னது அவள் காதிலும் விழுந்தது.
அடுத்து தேவனுக்கு அழைத்தாள். அவனது அலைபேசி, “நாட் ரீச்சபிள்” என்றது இயந்திரக் குரல். அவனுக்கு நடுங்கும் கரத்துடன் குறுஞ்செய்தி அனுப்பி வைத்தாள் சிவரஞ்சனி. அதுவும் அவனை சென்று சேரவில்லை.
“அவரோட போன் நாட் ரீச்சபிளா இருக்கு..” என்று முணுமுணுத்தாள்.
சாலையில் கவனமாக இருந்த திருமூர்த்திக்கு அவளின் மனநிலை விளங்கியது. தான் என்ன சொன்னாலும் அவள் சமாதானம் அடைய மாட்டாள் என்பதை உணர்ந்தவன், காரில் இசையை ஒலிக்க விட்டான்.
“ஒரு ஜீவன்தான் உன் பாடல்தான் ஓயாமல் இசைக்கின்றது.
இரு கண்ணிலும் உன் ஞாபகம் உறங்காமல் இருக்கின்றது. பாசங்களும் பந்தங்களும் பிரித்தாலும் பிரியாதது..” என்ற பாடல், பாடும் நிலாவின் குரலில் ஒலிக்காமல் அவளின் பாடகன் ஜெயதேவனின் குரலில் ஒலித்தது.
தேவனின் குரலில் அவள் திடுக்கிட்டாலும், கண் மூடி இசையையும், கணவனின் குரலையும் ரசிக்க முயன்றாள்.
“உருவானது நல்ல சிவரஞ்சனி
உனக்காகத்தான் இந்த கீதாஞ்சலி..” என்ற தேவனின் குரல் அவளை தொல்லை செய்தது.
சட்டென கை நீட்டி அடுத்த பாடலை ஒலிக்கச் செய்தாள்.
“தேரே மேரே பீச்சுமே, ஹேசா ஹே ஏ பந்தன் அஞ்சானா..” என்று ஹிந்தியில் ஒலித்த பாடலும் தேவனின் குரலிலேயே ஒலித்தது.
“உனக்கும் எனக்கும் நடுவில்.. எப்படி உருவானது இந்த பந்தம். எனக்கும் தெரியல. உனக்கும் தெரியல..” அந்தப் பாடலின் அர்த்தமும், பியாரிலாலின் இசையும் அவர்களின் பிரியக் கதையையே பேசியது. இசைக்கும், பாடலுக்கும் மொழியேது? தேவனின் குரலில் வழிந்தது பிரியம்.
அவள் இருக்கையில் சாய்ந்து கண்களை இறுக மூடினாள். காரில் நிறைந்திருந்த தேவனின் குரல் அவளை முழுமையாக நிறைத்தது.
அவளின் கலங்கிய மனதை காதல் தேவனின் குரல் இன்னுமே கலக்கமடைய செய்ய, பாடலை நிறுத்தவும் அவளால் முடியவில்லை. தேவனை மீண்டும் அழைத்தாள். ம்ஹூம், அழைப்பு செல்லவேயில்லை.
“வா வா அன்பே அன்பே
காதல் நெஞ்சே நெஞ்சே
உன் வண்ணம் உன் எண்ணம்
எல்லாமே என் சொந்தம்
இதயம் முழுதும் எனது வசம்…” என்று அடுத்தப் பாடலும் இராகதேவன் இசையில், கான கந்தர்வன் தாஸேட்டனின் குரலில் இல்லாது அவளின் காதல் தேவனின் குரலிலேயே ஒலித்தது. அவளுக்கு கண்கள் மளுக்கென்று குளம் கட்டியது. கீழுதட்டை கடித்து உள்ளத்து உணர்வுகளை கட்டுக்குள் கொணர முயன்றாள். முடியவில்லை.
அந்நேரம் அதிர்ஷ்டவசமாக திருமூர்த்தியின் அலைபேசி அடித்து பாடலை நிறுத்தியது.
“சொல்லு முரளி. ம்ம், ஓகே. ராணி சேஃப். யூ கோ அஹெட்” அழைப்பை ஏற்றவன் ஓரிரு வார்த்தைகளில் சங்கேத மொழியில் பதில் சொல்லியது அவளைக் குழப்பியது.
“ம்ம், எதுவும் நடக்காது. பார்த்துக்கலாம் விடு. வந்துட்டே இருக்கேன். ஃபைவ் மினிட்ஸ்” என்று முடித்து இணைப்பை துண்டித்தான்.
“எதுவும் நடக்காதுன்னு சொல்லிட்டு, பாத்துக்கலாம் விடுன்னு சொல்றீங்க? அப்போ என்ன நடக்கப் போகுது?” சந்தேகம் கேட்டாள். திருமூர்த்தியின் திகைப்பை காரின் குறைந்த வெளிச்சம் சாமர்த்தியமாக மறைத்தது.
“முரளிதரன் தானே பேசினார்? என்ன நடக்கப் போகுதுன்னு சொல்லுங்க” அவள் அழுத்தமாக கேட்க, “நத்திங் டாக்டர். நீங்க வொர்ரி பண்ணிக்காம உட்காருங்க, பிளீஸ்” என்றான். அவன் குரலில் அவளுக்கு நம்பிக்கை வரவில்லை.
இசை இடையிட்டு அவர்களை அமைதியாக்கியது.
“வா வா அன்பே அன்பே..” என்று தொடர்ந்த பாடலில், “நீ வாழத்தானே வாழ்கின்றேன் நானே
நீ இன்றி ஏது பூ வைத்த மானே..” என்ற வரிகளை உச்சரிக்கையில் தேவனின் குரலில் இருந்த துள்ளல் அவளை துவள செய்தது.
“நீ வாழத்தானே வாழ்கின்றேன் நானே..” இதையே அவன் முன்னர் பாடியிருந்தால் கிண்டலும், கேலியும் செய்திருப்பாள்.
“நீங்க வாழ உங்க இதயம் துடிச்சா போதும் காதல் தேவன். சும்மா கதை விடாதீங்க” என்றிருப்பாள். ஆனால், இப்பொழுது அவளால் அப்படியெதுவும் செய்ய முடியாது, அவளின் இதய துடிப்பும் அவனுக்காக துடிப்பது போலிருந்தது.
காரில் தொடர்ந்து ஒலித்த மூன்று பாடல்களுக்கும் ஓர் ஒற்றுமை இருந்தது. அவையனைத்தும் சிவரஞ்சனி ராகத்தில் அமைந்த பாடல்கள்.
காதலின் துடிப்பையும், பிரிவின் வலியையும், இரவின் தவிப்பையும், தனிமையின் துக்கத்தையும், அவ்வளவு ஏன், ஒட்டு மொத்தமாக சோகம் இழையோடும் மெல்லிசைக்கு சிறந்த ராகமாக சிவரஞ்சனி ராகத்தை உபயோகித்திருந்த அப்பாடல்கள் அவளை உலுக்கியது.
சிவரஞ்சனி என்றாலே சோகம் தானா? என்று அவள் சிந்திக்கையில், “ஏன் பாட்ட நிறுத்திட்டீங்க டாக்டர்?” என்று கேட்டு அவளின் சிந்தனையை கலைத்தான் திருமூர்த்தி.
“உங்களுக்கு எப்படி இந்த கலெக்சன் கிடைச்சது? இந்த ஒரிஜினல் சாங்ஸ் பாடினது அவரில்லையே. எப்படி?” என்று கேட்டாள்.
“நீங்க எங்களை விட்டு போகவேயில்லையான்னு அப்போதவே கேட்டீங்க இல்ல? ராணியை பாதுகாக்க தான் சிப்பாய்கள் (Pawns) இருக்கோம். ராணி, ராஜாவை மட்டுமே பார்த்தீங்க, ராஜா அவரோட ராணியை மட்டுமே பார்த்தார். ஆனா, ராஜா, ராணி ரெண்டு பேரையும் காக்க வேண்டியது எங்க கடமை இல்லையா?” என்று அவன் கேட்க, மற்ற நேரமாக இருந்திருந்தால், “சினிமா வசனம் பேசாதீங்க” என்று சீறியிருப்பாள். இப்போது சிந்தனை வயப்பட்டவளாக மௌனம் காத்தாள்.
“தேவனை பத்தி தெரிஞ்சுக்க டிரை பண்ணும் போதுதான் அவரோட இந்த கலெக்சன் கிடைச்சது. இதெல்லாம் அவர் கலை நிகழ்ச்சிகள்ல பாடினது. நான் கேட்கிறதுக்காக தனியா எடுத்து வச்சேன் டாக்டர், உங்களுக்கு ஒரு காப்பி தரவா?” என்று அவன் கேட்க, “பிளீஸ் கொஞ்சம் வேகமா போங்களேன்” என்றாள் அவள். ஆழ மூச்சிழுத்து அமைதியாக அலைபேசி எடுத்து தேவனை அழைத்தாள். இம்முறையும் அழைப்பு செல்லவில்லை.
இங்கே பாடல் ஒலிப்பதிவில் இருந்த தேவனின் கவனம் சிதறிக் கொண்டேயிருந்தது.
இசையமைப்பாளர் இசைத் தென்றல் பொறுமையாக புன்னகையுடன் அவனைப் பார்த்து நின்றார்.
பாடலை மீண்டும் அவனுக்கு பாடி காண்பித்து அவனைப் பாட பணித்தார். அப்போதும் சொதப்பி நாக்கை கடித்தான் தேவன். அவன் கண்கள் தன்னிச்சையாக எதிரில் இருந்த கடிகாரத்தில் நேரம் பார்த்தது. அதைக் கண்டதும் மனைவிக்கு பணி முடியும் நேரம் நெருங்கி விட்டதை உணர்ந்து இன்னுமே தடுமாறினான்.
“குரு..” என்று தயங்கி அழைத்தான்,
“டேக் அ ப்ரேக் தேவன்” என்றார் இசையமைப்பாளர். அதை எதிர்பார்த்தவன் போல வேகமாக கதவைத் திறந்து வெளியில் வந்தான். படிகளை இரண்டிரண்டாக தாவி இறங்கி காரை நோக்கி ஓடினான்.
திருமூர்த்தியின் அலைபேசிக்கு அழைப்பு வந்துக் கொண்டேயிருந்தது. அவளால் அவன் பேசும் விதத்தில் இருந்து யாரென கணிக்க முடியவில்லை. அவனது பதில்கள் அனைத்தும் இயந்திரத்தனமாக ரகசிய மொழியில் இருந்தது.
மனதின் கலக்கம் அதிகரிக்க, “வாட்ஸ் ராங்?” என்று சற்றே உயர்ந்த குரலில் கேட்டாள். திருமூர்த்தியின் கவனம் சாலையிலும், காதில் பொருத்தியிருந்த ப்ளூடூத் பேச்சிலுமே முழுமையாக இருந்தது.
தேவன் இருந்த ஸ்டுடியோவை அடைய சில நிமிட தூரமே இருந்தாலும், அவளின் மனக் கலவரம் குறையவில்லை.
ஏதோ அசம்பாவிதம் நிகழப் போகிறது என்று பதைபதைத்தாள்.
சற்று முன்னர் செய்தியில் வந்த ஆணவக் கொலைச் செய்தி அவளை முழுமையாக உலுக்கியிருந்தது. அவளால் ஏனென்று அறுதியிட்டு காரணம் சொல்லவும் இயலவில்லை.
பழனிவேலை தாக்க நெப்போலியன் திட்டமிட்டது அவருக்கு தெரிய வந்திருக்குமோ? பதிலுக்கு தங்களைத் தாக்கப் போகிறாரோ? அதிலும் தேவனை? என்றெல்லாம் அவளின் சிந்தனை தறிக் கெட்டு ஓடியது.
“பிளீஸ், எங்களை சுத்தி என்ன நடக்குதுன்னு சொல்லுங்களேன்” என்று திரும்பி திருமூர்த்தியிடம் கேட்டாள். மௌனமாக உடல் இறுக காரை செலுத்தினான் அவன்.