இசையமைப்பாளரின் கவனம் முழுவதும் இசையில் இருக்க, “அன்பே..” என்று சரணத்தை ஆரம்பித்த தேவனின் பார்வை சவுண்ட் புரூஃப் செய்யப்பட்டிருந்த ஒலிப்பதிவு ஸ்டுடியோவின் கதவை பட்டென திறந்து உள்ளே வந்த ஸ்டுடியோ உதவியாளரின் மேல் படிந்ததும் நின்று போனது.
அவன் பாடுவதை நிறுத்தவும், இடையூறாக வந்தவரை திரும்பி மெலிதான கோபத்துடன் பார்த்தார் இசையமைப்பாளர்.
“சார், சாரோட.. தேவன் சாரோட கார் ஆக்ஸிடென்ட் ஆகிடுச்சாம்..” பதட்டத்துடன் படபடத்தார்.
“இப்போதான் கால் வந்தது..” என்று அவர் சொல்லவும், பதறியடித்து வெளியில் வந்தான் தேவன்.
அவனுக்கு கீழே சென்று பசுபதியை காருடன் அனுப்பியது மட்டுமே நினைவிருந்தது. அவரை அனுப்பி எவ்வளவு நேரமாகியது என்ற கவனமெல்லாம் அவனுக்கு அந்த நிமிடம் இல்லவேயில்லை.
பசுபதி, சிவரஞ்சனியை அழைக்க மருத்துவமனை சென்றாரே என்று நினைக்க நினைக்க அவன் இதயத் துடிப்பு தாறுமாறாகியது.
“சிவரஞ்சனி..” உடலின் ஒட்டு மொத்த அணுக்களும் அவள் பெயரை உச்சரிக்க, பதறி அறையை விட்டு வெளியேறினான் தேவன்.
“வெயிட் தேவன் என் காரை எடுத்திட்டு போங்க.” என்ற இசையமைப்பாளரின் குரலும், “சார், நானும் வர்றேன்” என்ற உதவியாளரின் குரலும் அவனை அடையவேயில்லை.
அவன் மனதை பதட்டம் சூழ்ந்திருக்க, பாய்ந்து வெளியேறினான்.
அதே நொடி புயல் வேகத்தில் அவனை அடைந்திருந்தாள் சிவரஞ்சனி. ஸ்டுடியோ அறைக் கதவை அவள் திறப்பதை நம்ப முடியா அதிர்ச்சியுடன் கனவு போல கண்களை சிமிட்டி நோக்கிய தேவனின் மேல் மோதி அவனை மனைவி அணைக்கவும் தான் நடப்பது உண்மையெனவே நம்பினான் அவன்.
“ஏய்.. சிவரஞ்சனி.. ஆக்ஸிடென்ட்.. உனக்கொன்னும் ஆகலையே?” தேவனின் கேள்விகள் எல்லாம் அவளின், “தேவன்..” என்ற கதறலில் கரைந்துப் போனது.
தேவனின் கழுத்தில் முகம் புதைத்து காற்றுக்கும் வழி விடாமல் கட்டிக் கொண்டாள்.
“சிவரஞ்சனி..” மென்மையாய் அவளின் முதுகை வருடி, தன் கொடூர கனவு நனவாக இருந்ததை நினைத்து அவனுடல் பயத்தில் சிலிர்த்தடங்க மனைவியை இறுக்கமாக அணைத்துக் கொண்டான். அவளிடம் இருந்து விசும்பல் ஒலி மட்டுமே வெளிப்பட்டது.
“ஏய் அழறியா?” அதிர்ச்சியுடன் தான் கேட்டான். அத்தனை எளிதில் அழுது விட மாட்டாளே. ஆனால், அவன் என்று வரும் போது எப்படி மாறிப் போகிறாள்.
“ஐ அம் சாரி” அலைபாயும் கண்களுடன், அவன் கண்களை ஆழப் பார்த்துச் சொன்னாள்.
“ரொம்ப பயந்துட்டேன்” என்று அவளும், “உனக்கு ஆக்ஸிடென்ட்டுன்னு கேட்டதும் உயிரே போச்சு” என்று அவனும் ஒரு சேர ஒரே நேரத்தில் கலக்கத்துடன் சொன்னார்கள்.
“ஆக்ஸிடென்ட்டா?” அவள் அதிர, “ஆமா, எனக்கு இப்போதான் கால் வந்தது” என்ற தேவனுக்கு அப்போதுதான் உண்மையில் விபத்து நிகழ்ந்திருக்கிறது என்பது உரைத்தது.
“நம்ம கார்..” என்று அவன் தடுமாற,
“தேவன்..” என்று அழைத்து அவர்களுக்கு பின்னே வந்து நின்றான் திருமூர்த்தி.
தேவன் மனைவியை விலக்கி திரும்ப, “பசுபதி பத்திரமா இருக்கார்” என்று அவர்கள் பதறும் முன் சொல்லி விட்டான் அவன். “அப்பாடா” என்றார்கள் ஒருமித்த குரலில்.
அவளின் பயம் நிஜமாகி இருக்க சிவரஞ்சனிக்கு மயக்கமே வந்து விட்டது. அவளைத் தாங்கிப் பிடித்த தேவன், திருமூர்த்தி நீட்டிய தண்ணீரை அவளை குடிக்கச் செய்தான்.
இசையமைப்பாளரிடம் தகவல் சொல்லி விட்டு மனைவியுடன் திருமூர்த்தியின் காரில் ஏறினான்.
பழனிவேல் தேர்ந்த அரசியல்வாதி. அவரால் தன்னை சுற்றி நடப்பதை அறிய முடியாதா என்ன?
சேதுராமன், ஜெயதேவன் இருவரும் தன்னை தரை மட்டமாக்க எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளை பற்றியும் அவருக்கு தாமதமாக என்றாலும் தகவல் சென்று கொண்டுதான் இருந்தது. காவல் துறை, ஆளும் கட்சி, அவரின் சாதிக் கட்சி மேலிடம் என எல்லா இடங்களில் இருந்தும் அவருக்கு நெருக்கடி கொடுக்கப்பட்டது.
அவர் மேல் வரிசையாக வழக்குகள் பாய்ந்தது. அத்தனை வருடங்களாக அரசியல் பலத்தையும், பணத்தையும் கொண்டு அவர் நிகழ்த்திய அத்தனை தவறுகளும் இப்போது உயிர் பெற்று அவர் தலைக்கு கத்தியாக வந்தது. தொழிலில் திடீரென சரிவும், நஷ்டமும் ஏற்பட்டது. தொழில் கூட்டாளிகள் விலகுவதாக மிரட்டினார்கள். மொத்தத்தில் அவரின் வாழ்வே தலை கீழாக தடம் புரண்டு அவரை மிரட்டியது.
அவரின் தோழன் தோள் கொடுப்பான் என்று அவரை நம்பினால், நண்பனின் மகன் நெப்போலியனே அவரை கொல்ல திட்டமிட்டு கொண்டிருக்கிறான் என்பதை அறிந்ததும் கொதித்துப் போனார் அவர்.
எல்லாவற்றுக்கும் யார் காரணம் என யோசிக்க யோசிக்க அவரின் கோபமும், ஆத்திரமும், கொலை வெறியும் அதிகரித்தது.
“சிவரஞ்சனி, என் வீட்டு மருமகளாக வேண்டியவள்..” என்று கோபத்தில் கொந்தளித்தார்.
அப்போதும் மகன் கர்ணாவின் மேல் அத்தனை ஆத்திரம் வரவில்லை அவருக்கு. குருட்டுத்தனமாக சிவரஞ்சனி மீது கோபம் வளர்த்துக் கொண்டார். கண்ணுக்கு கண் போல மகனை போல அவளும் தனியாக துணையின்றி தவித்து நிற்க வேண்டும் என்று பழி வெறியுடன் நினைத்துக் கொண்டார். அதன் விளைவே அவரின் ஆள்கள் தேவனின் காருக்கு குறி வைத்தது.
தேவன் சிவரஞ்சனியை மருத்துவமனையில் விடும் போதும், திரும்பி ஸ்டுடியோ வரும் போதும், பின்னால் பசுபதி இருந்ததை அவர்கள் பார்த்திருக்கவில்லை.
இப்போதும் காரில் இருந்தது தேவன் என்று நினைத்துதான் விபத்தை திட்டமிட்டு நடத்தியிருந்தார்கள்.
“ஓகே” என்ற திருமூர்த்தி, “சாரி. உங்ககிட்ட முன்னாடியே சொல்லியிருக்கணும். ஆனா, நாங்க பக்காவா பிளான் பண்ணியிருந்தோம். ஆக்ஸிடென்ட் நடக்காம அன்னைக்கு போல தடுத்திடலாம்னு நினைச்சோம். அதான்.. சாரி” என்று தயக்கத்துடன் மதுரை நிகழ்வை மறைமுகமாக குறிப்பிட்டு முடித்தான்.
தேவன் பார்வையிலேயே அவனின் கோபம் தெரிந்தது. தானும் அசட்டையாக இருந்து விட்டோமே என்று தன்னைத்தானே நொந்து கொண்டான் அவன்.
‘அப்போ ஏற்கனவே உங்களுக்குத் தெரியும். அப்படித்தானே? நான் எத்தனை முறை கேட்டேன்?நீங்க ஏன் சொல்லல?’ என்று பார்வையிலேயே கேள்வி கேட்டு திருமூர்த்தியை குற்றம் சாட்டினாள். அதனாலேயே காரின் கண்ணாடி வழியே தேவனை அவ்வப்போது பார்த்து பதில் சொன்னவன், சிவரஞ்சனியின் குற்றம் சாட்டும் விழிகளை முற்றிலுமாக தவிர்த்தான். அவளின் கோபத்தை பின்னர் எதிர்கொள்ளலாம் என்று நினைத்தான்.
“உங்க பிஎம்டபிள்யூ காரோட சேப்டி ஃபீச்சர்ஸ் தான் நம்மளை காப்பாத்தியிருக்கு.” என்ற திருமூர்த்தி, “ஆக்ஸிடென்ட் நடக்க விடாம முரளியோட டீம் ரொம்பவே டிரை பண்ணியிருக்காங்க. பசுபதி பதட்டமாகி காரை ஸ்லோ பண்ணவும் பின்னாடி இருந்து மோதிட்டானுங்க. அவனுங்க இடிச்ச வேகத்துக்கு கார்…” என்று அவன் சொல்லிக் கொண்டிருக்க, “பசுபதி அண்ணாவுக்கு ஒன்னுமில்லன்னு சொன்னீங்களே” என்றாள் சிவரஞ்சனி அச்சம் அப்பட்டமாக பரவிய குரலில்.
“அவருக்கு ஒன்னுமில்ல டாக்டர். அவர் ஸ்லோ பண்ணி அவருக்கு முன்னாடி இருந்த முரளி டீமோட கார்ல மோதிட்டார்”
“ஐயோ..” என்று அலறினாள்.
“நீங்க சொல்றதுல நாங்க இன்னும் பயந்து போவோம் போல” என்று கோபித்தான் தேவன்.
“அவர் சொன்னது போல நம்ம கார் ரொம்ப சேஃப். நமக்கு எதிர இல்ல குறுக்க வண்டி வந்தா வார்னிங் கொடுக்கும். இந்த சிட்டுவேஷன்ல ஏர்பேக் ஒபனாகி அவருக்கு பெருசா அடிபட்டிருக்காது” என்று தேவன் சொல்லவும் தான் பெருமூச்சுடன் தெளிந்தாள் சிவரஞ்சனி.
“எஸ். அவருக்கு அடி எதுவும் படல. பிபி அதிகமாகிடுச்சு. அதுனால தான் முரளி அவரை ஹாஸ்பிடல் கூட்டிட்டு போய் இருக்கான்” என்றான் திருமூர்த்தி.
தேவன் அப்பாவிற்கு அழைத்து தகவல் சொல்லியிருந்தான். அவர்கள் மருத்துவமனையை அடைந்த சில நிமிடங்களில் சேதுராமனும் வந்து விட்டார்.
முரளிதரனும், அவனது ஆட்களும் அவர்களை உள்ளே அழைத்துச் சென்றார்கள்.
பசுபதி இப்போது தெளிந்த முகத்துடன் அறையில் இருந்தார்.
அவரை நேரடியாக பார்த்ததும் தான் அவர்களுக்கு நிம்மதியானது.
பசுபதியை பரிசோதித்த மருத்துவரை சந்தித்து, அவரிடம் சந்தேகங்கள் எல்லாம் கேட்டு தெளிந்த பின்னரே சிவரஞ்சனியின் இரத்த அழுத்தம் சீரானது.
பசுபதியின் கைப் பற்றி, “மன்னிச்சுடுங்கண்ணா” என்று மனதார மன்னிப்பு கேட்டான் தேவன்.
அவர்கள் வீடு திரும்பிய பிறகு மிகுந்த குற்ற உணர்ச்சியுடன் புவனாவிடம் மன்னிப்பு கேட்டாள் சிவரஞ்சனி. சீதாலட்சுமி கண்ணீருடன் அவரின் கைப் பிடித்து கொண்டார்.
புவனாவிற்கு கணவனை நல்லபடியாக கண்டதே அவரின் கலக்கத்தை போக்கியிருந்தது. கண்கள் கலங்க, தலையை மட்டுமே அசைத்தார் அவர்.
தேவனின் காரையும், அவர்கள் இருவரின் பாதுகாப்பையும் மீண்டும் தங்கள் வசமாக்கினார்கள் நண்பர்கள். ஆனால், மறுநாள் அதற்கு அவசியமின்றி போனது.
இரவெல்லாம் உறக்கமின்றி தவித்திருந்தாள் சிவரஞ்சனி. அதிகாலையில் தேவனுக்கு கர்ணாவிடம் இருந்து அலைபேசி அழைப்பு வந்து விட்டது.
அவனிடம் பேசி முடித்து, இன்னமும் கலவரம் சுமந்த கண்களுடன் அவனை இறுக கட்டி கொண்டிருந்த மனைவியிடம் அலைபேசியில் காலைச் செய்தியை வைத்து நீட்டினான்.
“மதுரையில் இளம்பெண் ஆணவக் கொலைக்கு தூண்டுதலாக இருந்த குற்றச்சாட்டில் சாதி கட்சி அரசியல் தலைவர் பழனிவேல் கைது. அவருக்கு உதவி செய்ததாக கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் சாதி சங்கத் தலைவர் சொக்கநாத பாண்டியர் கைது” என்று தலைப்பு செய்திகள் நேரலையாக ஒளிப்பரப்பாகியது.
மனதில் நிம்மதி பரவ, மெல்லிய விசும்பலுடன் தேவன் தோள் சேர்ந்தது அவனின் பிரிய ராகம்.