தர்மபுரியில் அன்று நேரமாக கல்லூரிக்கு கிளம்பிக்கொண்டிருந்த கணவனுக்கு டிபன் எடுத்து வைத்து மதிய உணவை பேக் செய்ய சமையலறைக்குள் நுழைந்தாள் நிம்மி.
வழக்கம் போல பின்பக்க வாசலில் உள்ள படிக்கட்டில் அமர்ந்திருந்த உமா பக்கத்து வீட்டு ஆயாவுடன் ஊர் வம்பு பேசிக்கொண்டிருக்க, ஆர்வமாக செய்திகளை சேகரிக்கும் அன்னையை பார்த்து என்ன சொல்லி இவர்களை மாற்றுவது என பெருமூச்சுடன் தன் மனைவியிடம் லஞ்ச் பேக்கை பெற்றுக்கொண்டு அங்கிருந்தே..
“ம்மா..நான் காலேஜ் கிளம்புறேன்…” என சத்தமாக கூற, அவர்..
“பார்த்து பத்திரமா போயிட்டு வாப்பா..” என்று தன் வம்பினை தொடர்ந்தார். வண்டியில் அமர்ந்தவன் திரும்பி வீட்டுக்குள் நுழைய நிம்மி,
“ஏதாவது மறந்துட்டீங்களா?..”
“ம்ம்..” என்றவன் அறைக்குள் நுழைய பின்னே நுழைந்தவளை இறுக்கி அணைத்து அவள் கன்னத்தில் முத்தமிட்டு அவள் இதழோடு லேசாக தன் இதழை ஒற்றியவன்..
“ஈவ்னிங் வரை தாங்கும்..” என அவள் தோளணைத்து வாசல் வரை வந்து தன் கல்லூரிக்கு கிளம்பினான் கோபி.
அன்று மதியம் தன் அலமாரியை அடுக்கி வைத்த நிம்மி தங்கள் கல்யாண ஆல்பத்தை பார்த்ததும் எடுத்துக்கொண்டு கட்டிலில் அமர்ந்தாள்.
அவள் மனம் சுமார் ஐந்து ஆண்டுகள் பின்னோக்கி சென்றது.
தேவான்ஷ் பிறந்து தன் அன்னையை முழுமையாய் மீண்டும் பிறக்க செய்தவன்.. என இரு வீட்டாருமே அவனை கொண்டாடினர். நிதர்சனத்தை மெல்ல ஏற்று தன் மனதை திடபடுத்தி இனி தன் கணவனின் குடும்பம், தன் குழந்தை, பிறந்த வீட்டார் உதவியுடன் கூட நிம்மியின் பேராதரவில் மீண்டு வந்த தேவகன்யா ஆர்.வீ.எம் டெம்பிள் ஒர்க்ஸை தன் கையில் எடுத்துக்கொண்டு தன் வலியை மறக்க தீயாய் உழைக்க ஆரம்பித்தாள்.
அவினாஷிடம் கன்யாவின் நலத்தில் கூடுதல் கவனம் வைக்க சொல்லி தன் வீட்டிற்கு சென்றாள் நிம்மி. வழக்கமாக மருத்துவமனைக்கு கிளம்ப தயாராகிக்கொண்டிருந்வளின் வீட்டு மணியடிக்க யார் இந்த நேரத்தில் என யோசனையுடன் கதவை திறக்க அங்கு மஞ்சள் நிற குர்தா கருநீல நிற டெனிம் அணிந்து கண்களில் ஒரு வித தவிப்புடன் நிற்பவனை எதிர்ப்பார்க்காதவள்,
“வாங்க தருண்..” என வழிவிட மங்கையவளின் பாதாம் மற்றும் மெரூன் நிற சன்ன கரையுடன் கூடிய சில்க் காட்டன் புடவை கண்களுக்கு விருந்தாக அமைய மனதை கட்டுபடுத்தியவாறு வீட்டினுள் நுழைந்தான்.
சமையலறை சென்று அவனுக்கு நீர் கொண்டு வந்து கொடுத்தவள்,
“இரண்டு நிமிஷம், டீ போட்டுட்டேன்..எடுத்துட்டு வர்றேன்..” என சென்றாள்.
மனம் விரும்பும் பெண் வசிக்கும் வீடே மங்களகரமாய், சிறு தூசு துரும்பின்றி அழகாய் இருக்குமோ என யோசிக்க அவன் முன் ஆவி பறக்க மசாலா டீ மற்றும் குக்கீஸ் ட்ரேயை வைத்து எதிரே அமர்ந்தாள் நிம்மி.
அவனிடம் டீ யை குடுத்து தானும் பருகியவாறே,
“சொல்லுங்க தருண், என்ன விஷயம்?..” எனக்கேட்க தலை குனிந்தபடி டீயை குடித்தவன்..சில நொடிகளில் நிமிர்ந்து அவள் கண்களை பார்த்து..
“ஸ்டெரியிட்டா விஷயத்துக்கு வர்றேன்..என்னை கல்யாணம் பண்ணிக்கிறியா?..” எனக்கேட்க அதிர்ச்சியில் புரையேற தன் தலை தட்டியபடி அவனை பார்த்தாள்..அதே ஆளை விழுங்கும் தீர்க்கமான பார்வை..அவன் விழிவீச்சை தாங்கவியலாது நிலம் நோக்கி..
“என்ன திடீர் னு..?…”
“உனக்கே பதில் தெரியும்…”
“சீ..ஆல்ரெடி சொன்னது தான், என் விஷ்வாக்காக நான் பண்ணதை வச்சு வர பரஸ்பர அன்பு எனக்கு தேவையில்ல..”
“உன்க்கூட மாப்பிள்ளை இருப்பார் னு தெரியாத முன்னமே உன்க்கிட்ட விழுந்தவன் நான்..” என அவன் சாதாரணமாக தன்னை ஒருமையில் விளிப்பதை விரும்பினாலும் கையோடு தன்னை நெருங்கி வருகின்றானே என பதட்டமே மேலோங்கியிருந்தது நிம்மிக்கு. மேலும் அவன்..
“இன்னிக்கு பாப்பா இப்படி நடமாடுறா னா அதுக்கு நீ மட்டுமே காரணம்..நாங்கல்லாம் தள்ளி நின்னு சப்போர்ட் பண்ணோம், ஆனா அவ மனசளவில நெருங்கி பேசி பேசியே அவளை முழிக்க வச்சதுல உனக்கும் பெரிய பங்கிருக்கு..என் காதலை உணர்ந்தும் என்னை தவிர்க்கிற..விடு..அட்லீஸ்ட் என் பாப்பாவை திருப்பி கொடுத்ததுக்காக ஒரு நன்றிக்கடனா காலம் பூரா உனக்கு கணவனா சேவகம் செய்யவாவது சான்ஸ் கொடு ப்ளீஸ்..” என கெஞ்சினான் தருண்கோபி.
அவன் சொல்லில் சிரிப்பு வந்தாலும் மறைத்தவள் அவனிடம்..
“உங்களுக்கு வந்த மாதிரி எனக்கும் உங்க மேல காதல் வரணும் இல்ல தருண்?..வந்தா, நீங்க சிங்கிளாயிருந்தா சொல்லியனுப்புறேன்..இப்ப ட்யூட்டிக்கு டைமாச்சு..” என்றாள். முகத்தில் ஏமாற்றம் பரவ சின்ன சிரிப்புடன் தருண்கோபி,
“நான் உன் லைப்ஃல வருவேன் னு நம்பி தான் என் நெஞ்சில உன்னை மறந்து தூங்குன..உன் டப்பா காரணம் ஆர் ஈகோ வை தள்ளி வச்சிட்டு மனுசனை மனுசனா பாருடி..காதல் என்ன..எல்லாமே வரும்..இதுக்கு மேல நீயே வந்தாலொழிய நான் வரமாட்டேன்..ஆனா இந்த ஜென்மத்துல எனக்கு மனைவி னா அது நீ மட்டும் தான்..” என்று கூறியவனை முறைத்தாள் நிம்மி. அதற்கும் அவன்
“முறைக்காதே, கண் ல கிஸ் பண்ணிடுவேன்..” என அடக்கபட்ட புன்னகையுடன் மிரட்ட, அவள் பதிலுக்கு..
“என்க்கிட்ட சேட்டை பண்ணா கதம் பண்ணிடுவேன்..” என காதலாய் மிரட்ட, மனம் நிறைந்த புன்னகையுடன் ஓர் பறக்கும் முத்தத்தை காற்றில் அனுப்பியவன் வாசலை நோக்கி நடந்தவாறே..
“பை டார்லி, உனக்காக காத்து கிடக்குறேன்..பட் ரொம்ப காக்க வச்சிறாத..” என கூறியபடி வெளியேறிவனை பார்த்து சில கணங்கள் நின்றவள் மருத்துவமனைக்கு கிளம்பினாள்.
அண்ணன் காதலை அறிவித்ததை தெரிந்து மிகவும் மகிழ்ச்சியுற்றாள் கன்யா. தன் மாமா அத்தையிடம் பேசி இதை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்ல நினைத்தாள்.
கன்யா மூலம் கோபியின் விருப்பத்தை தெரிந்து கொண்ட லலிதா, மேகநாதன் முறையாக நிர்மலாவின் தாத்தாவிடம் சென்று சம்மந்தம் பேசி முடிக்க அடுத்த வாரமே அவளின் சொந்த ஊரான சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரிக்கு சென்றனர்.
நிர்மலா தேவியின் தாத்தா சிவநேசன் அவ்வூர் முக்கிய புள்ளிகளுள் ஒருவர்..புகழ் பெற்ற குஸ்தி பயில்வான். இன்றும் தன் சிஷ்யர்களை வைத்து இளம் தலைமுறையினருக்கு முறையாக சிலம்பு, வாள் பயிற்சி மற்றும் குஸ்தி சொல்லி தருகிறார். அவருக்கு சொந்தமாக பனை மற்றும் தென்னந்தோப்புக்கள் இருக்க, அதிலிருந்து வரும் லாபத்தை சேர்த்து வைத்தாலே பத்து தலைமுறையினர் உட்கார்ந்து சாப்பிடலாம். அவரின் ஒரே மகனான கோபால் மற்றும் சாந்தி நிர்மலா பிறந்து இரு வருடங்களில் ஒரு தீ விபத்தில் இறந்து விட மனம் வெறுத்தவர் பேத்தியை கடமைக்கென வளர்த்து குஸ்தியின் மேல் தன் முழு ஆர்வத்தை காட்ட சென்னையில் தன் தூரத்து சொந்தமான அத்தையின் வீட்டில் வளர்ந்தவளுக்கு பக்கத்து வீட்டில் வசித்த ரங்கநாதன் குடும்பமே அவள் குடும்பமாகி போனது. அதிலும் விஷ்வா நிம்மி நட்பினை கண்டு நிம்மியை தங்கள் வீட்டு பெண்ணாகவே பாவித்தனர்.
நிர்மலா சென்னையிலிருக்க, சிங்கம்புணரி சென்று சிவநேசனின் வீட்டில் அவரிடம் அனைத்தையும் தெரிவித்த மேகா மற்றும் லலிதா,
“இனி நீங்க தான் நல்ல முடிவா சொல்லனும்..என்றார் மேகா..அதற்கு சிவநேசன்,
“நிர்மலாக்கு பிடிச்சிருந்தா எனக்கும் சம்மதம் பா..பையன் வீட்டில் மேற்கொண்டு பேசலாம்..”என்றார். உடனே மேகா,
“நிம்மிக்குமே கோபிய பிடிச்சிருக்கு..எதுக்கும் ஒரு வார்த்தை கேட்டுக்கறேன்..” என அவளை அழைத்து தாங்கள் சிங்கம்புணரி வந்த விஷயத்தை சொல்ல அவள் சற்று தயங்கினாள்.
“இரண்டு நாள் டைம் கொடுங்க அங்கிள்..” எனக்கூற லலிதா கண்ணை காட்ட மேகா..
“சரிம்மா நீ ஓகே சொன்னதும் சம்பந்தியம்மா வீட்டுல பேசறோம். “ என வைத்தார்.
விஷயமறிந்து உமா வானத்துக்கும் பூமிக்குமாய் குதித்தார். மகளின் வாழ்க்கை தவறி போனதில் உடைந்தவருக்கு மகனின் எதிர்காலம் அவன் மனைவி மக்கள் பற்றிய கனவு பெரியதாய் இருக்க அதே இராணுவத்தில் பணிபுரியும் டாக்டர் பெண்ணை தான் திருமணம் செய்வேன் என பிடிவாதம் பிடிக்கும் மகனின் மேல் கடுங்கோபத்திலிருந்தார்.
தான் இருந்து செய்ய வேண்டிய பணிகளை தன் மகளுக்கு செய்து தேற்றியதற்கு நன்றிக்கடனாய் என்றுமே இருக்கலாம், அதற்காக அவனையே அடகு வைப்பதா என திட்டி தீர்த்தார். எதையும் காதில் வாங்காமல் தனக்கு மனைவி என ஒருவள் வந்தால் அது அவளே என தன் பிடியில் இருந்தான் கோபி.
சாட்சிக்காரன் காலில் விழுவதை விட சண்டைக்காரனிடம் எடுத்து சொல்ல எண்ணி நிம்மிக்கு அழைத்த உமா,
“தோ பாருமா..என் பொண்ணை திருப்பி கொடுத்ததற்கு கடைசி வரை நன்றிக்கடனா இருப்பேன்..ஆனா எப்பவும் உன்னை என் மருமகளா லாம் ஏத்துக்க முடியாது..என் வீட்டுக்கு அடங்கின பொண்ணை தான் என் பையனுக்கு நான் கட்டி வைப்பேன்..நீயே இதயும் அவன்கிட்ட சொல்லிடு..” என்றதும் கோபத்தில் மூக்கு விடைத்தது நிம்மிக்கு.
“இப்ப வரைக்கும் இது சரி வருமா வராதா னு யோசிச்சுட்டு தானிருந்தேன்..நீங்க என் கண்ணை திறந்து வச்ச வயசான தேவதை..உங்க பையன்ட்ட நானே சொல்றேன்..” என போனை வைத்தவள் உடனே தன் தாத்தாவை அழைத்து தருண்கோபியை மணந்து கொள்ள சம்மதம் என தெரிவித்தாள்.
திருமணத்தை நிறுத்துவதாய் வாக்கு கொடுத்தவள் இப்படி நம்ப வைத்து ஏமாற்றி விட்டாளே என அவள் மேல் தீரா வெறுப்பை கொண்டார் உமா. தேவகன்யா எவ்வளவு எடுத்து சொல்லியும் எதுவும் மண்டையில் ஏறவில்லை. மிக எளிமையாக சைவமும் வைணவமும் சங்கமிக்கும் சிங்கம்புணரி சேவுகபெருமாள் அய்யனார் கோயிலில் சிவநேசன் தலைமையில் தருண்கோபி நிர்மலாதேவி திருமணம் நடந்தேறியது.
வெளிர் நீல நிற சாமுத்ரிகா பட்டில் வைர ஆபரணங்கள் ஜொலிக்க வீரமிக்க வேலுநாச்சியாராய் நிமிர்ந்த நடையும், நேர்கொண்ட பார்வையுமாய் கன்யாவுடன் கோயில் பிரகாரத்தை அடைந்தவளது கண்கள் வெண்பட்டு வேட்டி அதே நீல நிற சட்டையில் ரோஜாமல்லி மலர் மாலையுடன் ஐயர் சொன்ன மந்திரத்தை பின்பற்றி ஹோமத்தில் நெய்யூற்றுபவனை பார்த்ததும் தானாக தலை குனிந்தாள்.
என்றுமே கண்களை பார்த்து பேசுபவள் முதல் முறையாக தலை கவிழ்ந்து அமர்ந்திருக்க, அவளின் நாணம் கொணர்ந்த கர்வத்தில், அவளை சாய்த்த மிடுக்கில் விரிந்த புன்னகையுடன் அவளுக்கு தாலி கட்டி தன்னில் சரி பாதியாக்கி கொண்டான் தருண்கோபி. தேவகன்யா உள்பட அவினாஷ், நிம்மி மற்றும் மேகா தம்பதி அனைவரும் ஒரு சேர விஷ்வாவை நினைத்துக்கொண்டனர். தன் நண்பன் என்றும் தன் கூடவேயிருந்து தன்னை காத்தருள்வான் என தீர்க்கமாய் நம்பினாள் நிம்மி.
பெரியவர்களிடம் ஆசீர்வாதம் வாங்கிய மணமக்கள் ஐயனையும் வணங்கிவிட்டு சிவநேசன் வீட்டிற்கு கிளம்பினர். நிம்மி தாத்தாவின் வசதியான பின்புலமும் திருமணத்தை எளிமையாக எனினும் விமரிசையாய் நடத்திய விதமும், மேலும் அவர் குஸ்தி வாத்தியார் என்பதும் உமாவை சற்று அடக்கி வைத்தது.
அன்றிரவு மணமக்களை தயார் செய்யும் வேலையில் அனைவரும் மூழ்கியிருக்க உமா குளித்து விட்டு சந்தன நிற காட்டன் சட்டை வேட்டி அணிந்து தலை வாரிக்கொண்டிருந்தவனிடம் தான் அவனை பெற்றெடுத்து கண்ணுக்கு கண்ணாய் வளர்த்து ஆளாக்கியதை மூச்சு விடாமல் சொல்ல தாயின் பயமறிந்து அமைதியாக உள்வாங்கிக்கொண்டிருந்தான்.
இரவு உணவை கொடுக்க சென்ற உறவுக்கார பெண் நிம்மியிடம் உமா கோபியின் காதை கடித்த விஷயத்தை ஒன்னும் பாதியுமாக கூற அனைத்தையும் கேட்டபடி அமைதியுடன் தயாராகினாள் நிம்மி.
அதற்குள் தன் அத்தையிடம் முந்திரி பாதாம் எங்கே, பசும்பால் இளஞ்சூடாக காய்த்து கற்கண்டு போட்டு கலந்தால் தான் தன் மகன் குடிப்பான், ஒற்றை மகனை பெற்று என பெரிதாய் அளந்து விட அறையினுள் இருந்து வந்த நிம்மி மாமியாரிடம்..
“அத்தை, முதல்ல இத மனசில நல்லா பதிய வச்சுக்கோங்க..உங்களையும் உங்க மகனையும் பிரிக்க நான் வரல..அம்மா என்னிக்குமே அம்மா தான், என் சின்ன வயசிலேயே என்னை பெத்தவங்களை இழந்தேன்..தாத்தாக்கும் எனக்கும் எப்பயும் செட் ஆகாது, ஆனா எங்களுக்கு ஒன்னு னா வரிஞ்சி கட்டிட்டு வந்து நிப்போம். இவ்ளோ தான் நாங்க..இப்ப வரை விஷ்வா பேமிலி மூலமா அம்மா அப்பா அண்ணன் தம்பி பாசத்தை உணர்ந்துருக்கேன்..இதெல்லாம் மொத்தமா உங்க பிள்ளைக்கிட்ட மட்டும் தான் பார்த்தேன், அப்பவே கவுந்துட்டேன்..இருந்தும் ஒரு தயக்கம் இருந்துட்டேயிருந்தது எங்களுக்குள்ள சரி வருமா னு..? அப்ப வந்த ஒரு தேவதை அசரீரி யால இவரை கட்டம் போட்டு தூக்கிட்டேன்..மனைவியா அவருக்கும் நான் அம்மாவாக முடியும்..ஆனா உங்க இடத்துக்கு வர எப்பவும் விரும்பமாட்டேன்..இவ்ளோ சொல்லியும் டவுட் இருந்தா வாங்களேன் மூணு பேரும் ஒண்ணா தூங்கலாம்…” என கேட்க அனைவரும் மலைத்து போய் நிற்க உமா மட்டும் கன்றிய முகத்துடன் தன் அறைக்குள் நுழைந்துக்கொண்டார்.
தன் மனைவி பேசியது அனைத்தும் காதில் விழ இறுகிய சிலையாய் கட்டிலில் அமர்ந்திருந்தான் தருண்கோபி.