மறுநாள் காலை வீடே பரபரப்பாக இருந்தது. எழுந்து குளித்து பட்டுப்புடவை உடுத்தி அலங்காரம் செய்து நிவியை நடுவீட்டில் அமர்த்தி விட்டனர் பெரியவர்கள். முகம் முழுவதும் தாய்மையின் பூரிப்பு. அதிலும் நேற்று சந்த்ரு கொடுத்த முத்தத்தின் நீட்சியாய் அதிகமாக வதனம் விகசித்தது பெண்ணுக்கு.
காலையிலே சாமிக்கு சமைத்து முடித்து, எல்லோரும் கிளம்பி என ஒருவழியாக மகிழுந்தில் ஏற, அது புறப்பட்டு இருந்தது.
ஆனந்தி அங்கு சென்று இறங்கியதும், “அக்கா, நீங்க உள்ள போய் பார்த்துக்கோங்க. நான் வர்றவங்களை வரவேற்குறேன். ஜோதி நீ போய் சமையல்காரங்களை கவனி!” என்ற ஆனந்தி கணவருடன் வெளியில் நின்று விழாவிற்கு வருகை தரும் அனைவரையும் வரவேற்க ஆரம்பித்தார்.
மேடையில் நிவி அமரவைக்கப்பட, அவளை சுற்றி தாம்பூலத் தட்டுகள் நிரம்பி வழிந்தது. சாந்தி எல்லாம் சரியாக இருக்கிறதா? என பார்த்து, இல்லாதவற்றை யுகியை அழைத்து வாங்கி வர சொன்னார்.
ஜோதியும் வீரபாண்டியும் சமையலை மேற்பார்வை பார்த்து விட்டு, விருந்தினர்களை கவனிக்க ஆரம்பித்தனர்.
யுகி கடைக்கு சென்று விட்டு உள்ளே நுழைய, வித்யா எல்லோருக்கும் குளிர்பானங்கள் கொடுத்துக் கொண்டிருந்தாள். பச்சை நிற பருத்தி புடவை ஒன்று அவளை பாந்தமாக தழுவி இருக்க, நேர்த்தியாக கட்டியிருந்தாள். முகத்தில் லேசான புன்னகை. தலைக்கு குளித்து முன்புறம் முடியை மட்டும் சின்ன பற்றுக்கம்பி உதவியுடன் குத்தியிருந்தவள், பின் முடியை தளர விட்டிருந்தாள்.
கண்களில் லேசாக மையிட்டு, நெற்றியில் சிறிய பொட்டு வைத்திருந்தாள். கழுத்தில் எப்போதும் போடும் சிறிய கழுத்தணி. ஒரு கையில் இரண்டு வளையல்கள், மற்றொரு கையில் கடிகாரம் கட்டியிருந்தாள். எளிமையாக தான் இருந்தாள். இருந்தும் அழகாய் தெரிந்தாள் யுகேந்திரன் கண்ணுக்கு. ‘அலட்டல் இல்லாத உடல் மொழி, கண்களில் தெரியும் தெளிவு, தன்னம்பிக்கை. எல்லோரிடமும் தோழமையுடன் ஒட்டிக் கொள்ளும் பழக்கம். கொஞ்சமே கொஞ்சம் நீளமான வாய்’ வித்யாவை ரசனையுடன் தழுவின ஆடவன் விழிகள்.
“யுகி, இங்க வா பா!” சாந்தி அழைத்ததும் தான் அவளிடமிருந்து பார்வையை அகற்றிக் கொண்டு தாயிடம் சென்றான்.
சந்த்ரு வாயிலில் நின்று கொண்டு, அலுவலக ஊழியர்களை வர வேற்றான். பின் தன் நண்பர்களை வரவேற்று இருக்கையில் அமர்த்தி அவர்களை கவனித்துக் கொண்டிருந்தவனின் பார்வை, மனைவியின் பூரித்த முகத்தை விட்டு நகர மறுத்தது. அவளது வங்கி தோழி ப்ரீத்தி தன்னை வைத்து எதோ கூற, அதற்கு நிவி முகத்தில் வெட்கச் சிவப்பு. மனம் அதில் மொத்தமும் தொலைந்து போனது. தங்களுக்கு இடையே இருந்த ஊடல் தொலைந்து போனது. மனைவி மட்டும் பிரதானமாக தெரிந்தாள்.
“ஏன் டி, கணக்கு பார்க்க கூப்ட்டு இப்படி கணக்கு பண்ணி இங்க உட்கார வச்சுட்டாரே உங்க ஆளு!” ப்ரீத்தி பேச, நிவி முகம் சிவந்தாள்.
“அட! அட… என்னம்மா வெட்கப்படுறீங்க மேடம்!” என்ற ப்ரீத்தி நிவியை ஒரு வழியாக்கிக் கொண்டிருந்தாள்.
நண்பர்களுடன் பேசி சிரித்துக் கொண்டிருந்த சந்த்ரு, “வித்யா, இங்க வா” என அழைத்தவன், “உங்க அக்காவுக்கு ஜூஸ் கொடு. வந்ததுல இருந்து எதுவும் சாப்டலை அவ…” என நிவியிடம் அனுப்பினான்.
“அக்கா, இந்தாங்க சூசு… உங்க வீட்டுக்காரரு கொடுக்க சொன்னாருருரு…” வித்யா இழுத்து சொல்ல, “வித்யா!” என கண்டிக்க முயன்று தோற்றாள் நிவி.
“ஐய்யோ! இப்ப எங்க மாமா கண்ணு எல்லாம் எங்க அக்கா மேல தான்!” வித்யா கூற, அதற்கும் ப்ரீத்தி எதோ கூற என கலகலப்புக்கு பஞ்சமில்லாமல் போனது.
உறவினர்கள் சிலர் யுகியையும் சாந்தியையும் பார்த்து எதோ பேசுவது போல தெரிந்தது. அழகர் மாமாவிடம் பேசியிருப்பார்கள், விஷயம் தெரிந்திருக்கும் போல என நினைத்த நிவியின் புன்னகை தொலைய காத்திருக்க, அதற்குள்ளே நல்ல நேரம் துவங்கவும் வளைகாப்பை தொடங்கலாம் என மலர் முன்னின்று கூற, அனைவரும் மண்டபத்திற்குள்ளே நுழைந்தனர்.
“சந்த்ரு, வா டா!” ஆனந்தி அழைக்க,
“வாங்க மாப்ளை! நீங்க தான் வந்து வளையலை முதன் முதலா உங்க பொண்டாட்டிக்கு போடணும்!” என நிவியின் பெரியம்மா கூற, சந்த்ரு எழுந்து வந்தான்.
புன்னகையுடன் அமர்ந்து இருந்த மனைவியின் முகமும் கனிந்து கூம்பியிருந்த வயிறும் அவனுள் எதோ செய்தது. மனது அந்த கணம் அனைத்தும் மறந்து மனையிடம் மட்டுமே தஞ்சமடைய காத்திருந்தது. எதையும் வெளிப்படுத்தாதவன், லேசான புன்னகையுடன் வந்து சந்தனத்தையும் மஞ்சளையும் நிவியின் கன்னத்தில் வைத்து, அவளுக்கு வளையலை அணிவித்தான். விழிகள் நிவியின் முகத்தில் சில நொடிகள் நிலைக்க, அவளைப் பார்த்து லேசாக தலையை அசைத்து விட்டு சென்று நாற்காலியில் அமர்ந்தான். யுகி அடுத்தாக வளையலை அணிவித்தான்.
அடுத்தடுத்து ஒவ்வொருத்தராக வந்து வளையலை அணிவித்து சம்பிரதாயங்களை செய்ய துவங்கினர். நேரம் சென்று கொண்டிருந்தது. ஓரளவிற்கு எல்லோரும் வளையலை அணிவித்து முடிய, அடுத்து என்ன செய்ய வேண்டும் என மலர் சொல்ல, சாந்தியும் ஜோதியும் மேடையிலே செய்து கொண்டிருந்தனர்.
ஆனந்தி சற்றே களைப்பாக உணர்ந்தவர், நாற்காலியில் அமர, அவரருகில் உறவுக்கார பெண்மணி ஒருவர் அமர்ந்தார்.
“என்ன ஆனந்தி, எப்படி இருக்க?” என கேட்டார் அவர்.
“நல்லா இருக்கேன் அக்கா, உங்க வீட்டுக்காரரு, புள்ளைங்க எல்லாம் எப்படி இருக்காங்க?”
பொதுவான நலம் விசாரிப்பு முடிய, “ஏன் ஆனந்தி, அந்த அரக்கு புடவை கட்டியிருக்க பொம்பளை யாரு? அந்த பையன் யாரு?” என சரியாக யுகியையும் சாந்தியையும் பார்த்து வினவினார்.
அதில் புன்னகைத்த ஆனந்தி, “அவங்க என்னோட அக்கா, அப்புறம் அவன் அக்காவோட பையன்!” என்றதோடு ஆனந்தி முடித்துக் கொள்ள பார்க்க,
“இல்லையே! கோகிலா வேற மாதிரி சொன்னா!” அவர் கேள்வியில் எரிச்சல் மூண்டாலும், அதை முகத்தில் காட்டாத ஆனந்தி, “அதான் உங்களுக்கே தெரியுதே! அப்புறம் ஏன் என்கிட்ட கேட்குறீங்க?” என வினவினார்.
“ஏன் ஆனந்தி, உனக்கெல்லாம் கூறு இருக்கா? இப்படி வாழ்க்கையை பங்கு போடலாமா?” என பேச ஆரம்பித்து நீளமாக வசனத்தை பேச ஆரம்பித்தார். கோகிலாவை நினைத்து பல்லைக் கடித்தார் ஆனந்தி. வந்திருந்த பல உறவினர்களின் பார்வை சாந்தி மீதும், யுகியின் மீது தான் என்பதை அவர் உணர்ந்த போதே, கண்களின் முன்னே கோகிலா தான் வந்து போனார். அவர் தான் இப்படி எல்லோரிடமும் கூறியிருக்க கூடும் என தோன்ற, ‘எப்போது தான் இவர் திருந்துவார்?’ என எண்ணிய ஆனந்தி யுகியை அழைத்தார்.
அவன் அருகில் வரவும், “யுகி, அக்காக்கும் எனக்கும் ஒரு கூல்ட்ரிங்க்ஸ் எடுத்துட்டு வா பா!” என கூற, அவன் கையில் குளிர்பானத்தோடு வந்தான்.
அதை வாங்கி ஆனந்தி, “இங்கே உட்கார்” என அவனை தன் பக்கத்து இருக்கையில் அமர்த்தி, “அக்கா, பேசி பேசி தொண்டை எல்லாம் வலிக்கும். ஜூஸ் குடிங்க” என அவரிடம் கொடுத்தார்.
அவர் விழித்துக் கொண்டே குளிர்பானத்தை பருக, “அக்கா, இவன் யுகேந்திரன். என்னோட மூத்த பையன், இவனுக்கு அடுத்த மாசம் கல்யாணம். நீங்க மறக்காம வரணும். நானும் என் வீட்டுக்காரரும் வந்து பத்திரிக்கை வச்சு முறையா கூப்பிட்றோம்!” என்ற ஆனந்தி வார்த்தைகள் அழுத்தமாய் வர, அந்த பெண் முகம் கருத்துப் போனது.
அங்கு நடப்பதை புரியாது யுகி பார்க்க, “யுகி, பெரியம்மாவை கல்யாணத்துக்கு இன்வைட் பண்ணு!” என்றார்.
அவன் தயங்கி அவர் முகம் பார்க்க, “என்ன யுகி, பெரியம்மா, அவங்க உனக்கு பெரியம்மா முறை. சந்த்ருவுக்கு பெரியம்மான்னா உனக்கும் பெரியம்மா தான். ஹ்ம்ம்… இப்போ கூப்பிடு!” என்றவரின் குரலில் கட்டளை இருக்க, யுகியால் மறுக்க இயலாது போனது.
“என்னோட கல்யாணத்துக்கு கண்டிப்பா நீங்க வரணும் பெரியம்மா. உங்க எல்லோரோட ஆசிர்வாதமும் எங்களுக்கு வேணும்!” மனமுவந்து கூப்பிட்ட யுகியின் முன் அந்த பெரியம்மா முகமே விழுந்து விட்டது. உண்மையான பாசத்துடன் தான் யுகி அழைத்தான். இத்தனை நேரம் அவனையும், அவன் தாயையும் தான் தான் வசைபாடினோம் என தோன்ற, கூனி குறுகி விட்டார் பெண்மணி.
“ஆமா அக்கா, என் பையன் கல்யாணத்துக்கு மறக்காம வந்துடுங்க!” என்ற ஆனந்தி, யுகியின் கையை பிடித்து இழுத்துச் சென்றார்.
“என்னாச்சு ஆனந்தி மா?” புரியாது யுகி விழிக்க, “ஒன்னும் இல்லை யுகி, போ. நீ போய் உன் வேலையை பாரு!” என்று விட்டவரின் குரலில் எதோ இருந்தாலும், மேலும் அவரிடம் கேட்காமல் விட்டு விட்டான் யுகேந்திரன்.
வளைகாப்பு நன் முறையில் முடிய, வந்திருந்த உறவினர்கள் எல்லாம் கிளம்ப தயாராகினர். ஜோதியும் வீரபாண்டியும் தன் பக்க உறவினர்களை எல்லாம் பேருந்தில் ஏற்றி விட்டு வீட்டிற்கு வந்தனர்.
ஒரே இடத்தில் அமர்ந்திருந்த நிவிக்கு கால் லேசாக வீங்கி விட்டது. “நீ போய் ரெஸ்ட் எடு!” என அவளை அறைக்கு அனுப்பி வைத்தார்.
“ஜோதி, நீயும் அண்ணாவும் கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுங்க. டயர்டா இருப்பீங்க!” என ஆனந்தி அவர்களை அனுப்பி விட்டு, அழகருக்கு குளம்பியை எடுத்துச் சென்றார்.
வீடு கொஞ்சம் அலங்கோலமாக கிடந்தது. அதை பார்த்ததும் சற்றே மலைப்பாக இருக்க, “அத்தை, நான் ஹெல்ப் பண்றேன்” என வித்யா உதவ முன்வந்தாள். கவிதாவும் இருக்க, வேலை ஓரளவுக்கு முடிந்தது.
அப்போது தான் யுகி உள்ளே நுழைந்தான். எல்லோரையும் அனுப்பி மண்டபத்தை காலி செய்து, சுத்தம் செய்வர்கள் வந்து சுத்தம் செய்து முடித்து, எல்லோருக்கும் பணம் கொடுத்து என வேலைகள் இழுத்துக் கொண்டே செல்ல, அவன் வீடு வரவே இரவை தொட்டு விட்டது.
“வா யுகி… வேலை அதிகமா?” கனிவாக கேட்ட ஆனந்தியின் பார்வை அவனுக்கு பின்னே நுழைந்த சந்த்ருவையும் நோக்கியது. யுகி சில வேலைகள் செய்ய, சிலதை சந்த்ரு தான் கவனித்துக் கொண்டான்.
“அதெல்லாம் இல்லை ஆனந்தி மா!” என கூறியவன் உள்ளே நுழைந்து நீள்விருக்கையில் பொத்தென அமர, அவன் முன்னே தேநீரை நீட்டினாள் வித்யா.
அவளின் மலரந்த முகத்தைப் பார்த்து யுகிக்கு சோர்வே மறைந்து போனது. புன்னகையுடன் தேநீரை பருக ஆரம்பித்தான்.
“சந்த்ரு மாமா, டீ!” என அவனுக்கும் கொடுத்தாள். அதை வாங்கிக் கொண்டு அறைக்கு சென்று விட்டான் சந்தரு.
ஆனந்தி சமையலறைக்குள் செல்ல, கூடத்திலிருந்தது யுகியும் வித்யாவும் தான். குவளையை அவளிடம் கொடுத்தவன், “மாடிக்கு வா வித்யா” என்று விட்டு விறுவிறுவென மாடிக்கு சென்று விட்டான்.
சில நிமிடங்களில் வித்யா செல்ல, நிலவை வெறுமையாக பார்த்துக் கொண்டிருந்தான் யுகி. அவன் பின்னே வித்யா வந்து நிற்க, இரண்டு நொடிகள் மௌனமாக கடந்தது. அவள் புறம் திரும்பி இடையில் கைக் கொடுத்து தன்னருகே இழுத்தவன், அவளது வெற்றுத் தோளில் முகத்தைப் புதைத்துக் கொண்டான். ஒரு நொடி ஆச்சரியமாக யுகியின் முகத்தைப் பார்த்தாள். நேற்று மோகத்துடன் காதலுடனும் அணைத்த அணைப்பு இன்று இல்லை. ஆறுதலான அணைப்பு. ஒரு குழந்தை தன் தாயிடம் தேடும் அரவணைப்பு.
அவனது தலை முடியை கோதியவள், “என்னாச்சு யுகிப்பா?” என வினவினாள். அரிதாக வித்யா ஆடவனை அழைக்கும் அழைப்பு. அசாத்திய மௌனம் அவனிடம்.
“என்னாச்சு பா? சொன்னா தானே தெரியும்? யாராவது எதுவும் சொன்னாங்களா?” கனிவான குரலில் கூறியவளின் குரலில் அவனுக்கான நேசம் மட்டுமே நிரம்பி வழிந்தது.
தலையை அசைத்தவன், “தெரியலை… எதோ ஒரு மாதிரி பீலாகுது. மண்டபத்துல எல்லாரும் என்னையும் அம்மாவையும் பார்த்தாங்க. அப்புறம் ஒரு ஆன்ட்டி கூட ஆனந்தி மா கிட்ட எதோ கேட்டு இருப்பாங்க போல!” நடந்ததை விவரித்தான்.
யுகி கூறியதை கேட்ட வித்யா, அவன் முகத்தை தன்னை நோக்கி திருப்ப முயல, அவள் தோளில் அழுத்தமாக முகம் பதித்துக் கொண்டான். “ம்ப்ச்!” அவன் குரல் சலிப்பாய் வர, “இங்க பாருங்க!” என அவன் முகத்தை கட்டாயப்படுத்தி தன்னை நோக்கி திருப்பியவளின் ஒற்றைக் கை அவனது தாடியடர்ந்த முகத்தில் பதிந்தது. ஆடவன் விழிகளில் எதோ ஒரு வெறுமை.
“மாமா, இதுக்கெல்லாம் போய் ஃபீல் பண்ணலாமா? உங்களை உத்து உத்து பார்த்த எல்லாரும் உறவுக்கும் நட்புக்கும் மரியாதை கொடுக்குறவங்கன்னு நினைச்சீங்களா? கிடையவே கிடையாது. இன்னைக்கு நீங்க அவங்க வாய்க்கு கிடைச்ச அவல். அவ்ளோ தான். நாளைக்கு இன்னொருத்தவங்க, அப்படியிருக்கவங்களுக்கு நீங்க இவ்ளோ முக்கியத்துவம் கொடுக்கலாமா? ஹ்ம்ம்… சொல்லுங்க!” என கேட்டாள்.
அமைதியாக அவள் முகத்தைப் பார்த்தான் யுகேந்திரன். “மாமா, இது நம்ம வாழ்க்கை. ஒவ்வொருத்தருக்கும் போய் இது தான் நான், இது என்னோட வாழ்க்கைன்னு விளக்கம் கொடுக்க முடியாது. நமக்கு பிடிச்ச மாதிரி வாழ்ந்துட்டு போய்டணும். விளக்கம் கொடுக்குற எவனும் நம்ம கூட வர போறது இல்லை. இப்போ நீங்க வாழ்ற வாழ்க்கை உங்களுக்கு சந்தோஷத்தையும் மனநிறைவையும் கொடுக்குதா?” என வினவினாள். சாந்தியின் புன்னகை தவழும் முகம் மனக்கண்ணில் தோன்றி மறைய, யுகியின் தலை தானாக ஆடியது.
“அப்புறம் என்ன? பேசுறவனைப் பத்தி கவலைப்பட்டுட்டே இருந்தா, டெய்லி தான் படணும். பைசாவுக்கு பிரயோஜனம் இல்லாதவங்க. லீவ் இட் மாமா!” என கூறியவளின் முகத்தை சில நொடிகள் பார்த்தவன், பின் இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்து, அவளை இறுக அணைத்துக் கொண்டான். மனம் கொஞ்சம் அவளருகில் தெளிந்து, நெகிழ்ந்திருக்க, “தேங்க்ஸ் வித்யா!” அவளின் நெற்றியோரம் முத்தமிட்டான். அதில் வித்யா இதழ்களில் புன்னகை.
சில நொடிகள் அவன் மார்பில் தன் முகத்தை புதைத்து இருந்தவள், அவனிடமிருந்து விலகினாள். “ஆமா! சார் என்ன பெரிய ஹீரோ மாதிரி ஆக்ட் பண்ணீட்டு இருந்தீங்க! கலர் கலரா வர்ற பொண்ணுங்களை உஷார் பண்ணவா?” கேலியுடன் கேட்டாள்.
அதில் ஆடவன் இதழ்களில் புன்னகை. “இல்லையே! அதான் குட்டி ஹன்சிகாவையே நான் உஷார் பண்ணிட்டேனே. அப்புறம் எதுக்கு நான் ஹீரோயிசம் பண்ண போறேன்?” என குறும்புடன் கூறிவனைப் பார்த்து விழித்து பின் வெட்கப்பட்டு கன்னம் சிவக்க, அவன் தோளிலே தஞ்சமடைந்தாள் பெண்.
“இந்த நிவி அக்கா சொல்லீட்டாங்களா?” என சிணுங்கிவளின் கூந்தலை தன் கைக்கொண்டு வருடியவன், “ஹ்ம்ம்!” என்றான்.
“உங்க ரெண்டு பேருக்கும் இடையில் எந்த ஒளிவு மறைவுமே இல்லை… ரொம்ப பொறாமையா இருக்கு பா எனக்கு இப்படி ஒரு கசின் இல்லைன்னு!” கூறிவளின் முகத்தில் மருந்துக்கும் பொறாமை இல்லை.
அதில் யுகியினம் மனம் அவளது புரிதலை நினைத்து சற்றே பெருமைப்பட்டது. அவள் உதட்டை வலிக்காமல் பிடித்து இழுத்தவன், “அதான் நான் இருக்கேன் இல்லை.” என்க, தலையை அசைத்தாள் வித்யா.
வித்யா அருகில் தன் அணைப்பில் அவளை வைத்துக் கொண்டு நிலா வெளிச்சத்தில் மொட்டை மாடியில் நிற்பது பரமசுகமாய் இருந்தது. அவன் தோளில் சாய்ந்து நின்றாள் பெண். அள்ளி அணைத்துக் கொள்ள தோன்றியது. அவள் இதழில் முத்தமிட்டு மூச்சடைக்க வைக்க வேண்டும், அவள் விழிகளில் தொலைந்து போக தோன்றியது. அவளிடம் சரணடையும் நொடி எதுவோ? ஏக்கமான பெருமூச்சு யுகியிடமிருந்து வெளிப்பட்டது. தன்னை, தன்னை சார்ந்தவர்களை முழுமையாக புரிந்து கொள்ளும் துணை கிடைப்பதெல்லாம் வரம். ஒவ்வொரு முறை துவளும் போது தூக்கி நிறுத்தும் பாங்கும், ஆறுதலான வார்த்தைகளும் எத்தனை பேருக்கு கிடைக்கும்? தன்னருகே நின்றவளின் பக்கவாட்டுத் தோற்றத்தில் மயங்கி போனான் யுகேந்திரன்.
“மாமா, ஒரு செல்ஃபி எடுக்கலாமா?” தலையை சாய்த்து கேட்டவளிடம் எதையும் மறுக்கும் நிலையில் இல்லை ஆடவன். அலைபேசியை எடுத்து சுயமி புகைப்படங்களை எடுத்து தள்ளியவளின் விழிகள் தன்னருகே நின்றவனின் விழிகளில் நிலைத்தது. ஆசையாய் காதலாய் மோகமாய் தன்னை ரசிக்கும் விழிகளை கண்டு நாணம் மேலிட, “கீழே போகலாம் மாமா. நான் வீட்டுக்கு போகணும். விஜய் வேற கீழ வெயிட் பண்றான். போகலாமா?” பாவை கொஞ்சும் மொழி பேச, அந்த இரவில் நிலவின் வெளிச்சத்தில் மொத்தமாக அவள் வசமிழந்து போயிருந்தான் ஆடவன்.
“போகணுமா?” என கேட்டவனின் ஒரு கரம் அவளிடையில் பதிந்து தன்னோடு இறுக்கிக் கொள்ள, மலர்ந்து காய்ந்து போன மல்லிகையின் மணத்தை கூந்தலில் முகம் புதைத்து உள்ளிழுத்தான். மேலும் அவனோடு ஒன்றியவளுக்கும் இந்த ஏகாந்த நேரத்தை இழக்க விருப்பம் இல்லை.
“ஆமா மாமா! போகணும்!” உள்ளே போன குரலில் கூறிவளின் முகத்தை கைகளில் தாங்கினான். கொஞ்சம் மயக்கமும் கிறக்கமும் லேசான பயத்துடன் அவனை ஏறிட்ட விழிகளில் மென்மையாக முத்தமிட்டான். இமைகள் தாழ்ந்து கொள்ள, மூக்கின் நுனியில் இதழ் பதித்து நிமிர்ந்தவன் அவள் உதட்டோடு தன் உதட்டைப் பொருத்தி அழுத்தமாக முத்தமிட்டான். கைகளிரண்டும் அவள் இடையை தனக்கு வாகாக வளைத்துக் கொண்டது. வித்யாவின் கரங்கள் ஆடவன் தோளில் பதிந்து போக, நொடிகள் கடந்து நிமிடங்கள் தாண்டிய முத்தம் மோட்சம் பெரும் வழியில்லாது போக, சுவரின் மீது வைத்திருந்த வித்யாவின் அலைபேசி அடித்து தடுத்தது.
அதில் அவளிடமிருந்து பிரிந்தான் யுகேந்திரன். அவன் முகத்தைக் காண திராணியற்று அழைப்பை ஏற்றவள், “இதோ வரேன் டா. கிளம்பலாம்!” என விஜய்க்கு பதிலளித்துக் கொண்டே கீழே இறங்கினாள். கண்களை மூடி சுவரில் சாய்ந்தவனின் உடல் முழுக்க பெண் உதட்டின் சூடு பரவி இருந்தது. முத்தத்தின் இனிமை உதட்டுடன் நின்று விடாமல் உடலையும் சேர்த்து சிலிர்க்க செய்ய, அது கொடுத்த போதை உடலோடு தங்கி விட்ட உணர்வு. பின் முடியை கோதி தன்னை நிலைப்படுத்திக் கொண்டவன் கீழே செல்ல, “யுகி, எங்க போன? நீ போய் விஜயையும் வித்யாவையும் வீட்ல விட்டுட்டு வா!” என்றார் சாந்தி. தலையை அசைத்தவன், அவர்கள் இருவரையும் வீட்டிற்கு அழைத்து சென்று விட, சிறிய தலையசைப்புடன் விடை பெற்றாள் வித்யா.
மறுநாள் காலை நிவியும் அவர்கள் பெற்றவர்களும் திருச்சி கிளம்புவதாக இருக்க, சந்த்ரு தானே அழைத்து சென்று விட்டுவிட்டு வருவதாக கூற, ஆனந்தி மனம் மகிழ்ந்து போனார்.
எல்லோரிடமும் விடைபெற்று நிவி கிளம்ப, ஆயிரம் பத்திரங்கள் ஒவ்வொருத்தரும் கூற, புன்னகையுடன் தலையை ஆட்டினாள். யுகி அருகில் செல்ல, “பத்ரமா இருக்கணும் நிவி. எங்கேயும் அலைய கூடாது. இங்க இருந்தா, கல்யாண வேலை அது இதுன்னு நீ பார்த்துட்டே இருப்ப. சோ, அதனால அங்க போறதே பரவாயில்லை! கிளம்பு!” என்றான். அவனை முறைத்தாள் நிவி.
தோளோடு சேர்த்து அணைத்துக் கொண்டவன், “பத்ரம் டி. எதுவானாலும் கால் பண்ணு!” என கூற, அவன் குரலும் கரமும் கூட நெகிழ்ந்திருந்தது. எத்தனை சந்த்ரு வித்யா வந்தாலும், யுகிக்கு எப்போது நிவி தான். நிவிக்கும் அதே போல தான். சந்த்ரு இதையெல்லாம் காண பிடிக்காது தான் மகிழுந்தில் சென்று அமர்ந்து கொண்டான்.
மற்ற மூவரும் ஏறிக் கொள்ள சந்த்ரு மகிழுந்தை திருச்சியை நோக்கி செலுத்தினான். அங்காங்கே கடையில் நிறுத்தி மனைவியின் முகம் பார்த்து அவளது தேவைகளை நிறைவேற்றினான். மாமனார் மாமியாரையும் கவனித்துக் கொள்ள, பெண்ணை பற்றி அரித்துக் கொண்டிருந்த கொஞ்சம் கவலையும் அவர்களுக்கு இருந்த இடம் தெரியாமல் போய்விட்டது.
ஒரு வழியாக மாலை நிவி வீட்டை அடைந்தனர். “மாப்ளை, வண்டி ஓட்டுனது டயர்டா இருக்கும். நீங்களும் நிவியும் போய் ரெஸ்ட் எடுங்க!” என ஜோதி கூற, தலையை அசைத்து விட்டு நிவி அறைக்குள் நுழைந்து கொண்டான் ஆடவன்.
“ட்ரெஸ் சேஞ்ச் பண்றதுன்னா பண்ணிக்கோங்க!” என்ற நிவி அவனிடம் ஒரு உடையை நீட்டினாள். சென்ற முறை வந்த போது அவன் விட்டுச் சென்றது.
‘வேணாம்!’ என அவன் தலையை அசைக்க, தோளை குலுக்கி விட்டு
அவள் சென்று உடை மாற்றி வந்து கட்டிலில் அமர்ந்தாள். கால் எல்லாம் ஏகத்துக்கும் வலிக்க, கால் நீட்டி அமர்ந்தாள்.
இத்தனை நேரம் அமைதியாக இருந்த சந்த்ரு எழுந்து அமர்ந்தான். நிவியின் முகத்தையும் அவள் வயிற்றையும் மாறி மாறி பார்த்தான். பெண் உதட்டில் புன்னகை.
அவன் கைகளை எடுத்து தன் வயிற்றில் வைத்தாள். ஒரு நிமிடம் கடந்து இருக்கும், குழந்தை அசைய, நெருங்கி அமர்ந்தான். அவள் வயிற்றில் முத்தமிட்டவன், நிமிர்ந்து அவளை பார்த்தான். வார்த்தைகளாக எதுவும் உதிர்க்கவில்லை.
ஒரு நொடி நெற்றியை சுருக்கியவள், பின் புரிந்ததும், “ஏன் துரை வாயை திறந்து கேட்க மாட்டீங்களோ?” என முகத்தை திருப்பிக் கொண்டாள். பாவமாக சில நொடிகள் பார்த்தவன், பின் படுக்க செல்ல, அவன் கைகளை பிடித்து தடுத்தாள் நிவி.
தன் மேலுடையை சற்றே தளர்த்தி மேலேற்ற, வெற்று வயிற்றில் கரம் பதித்தவன், குனிந்து வயிற்று பகுதி முழுவதும் முத்தமிட்டான். அதில் நிவிக்கு கூசியது. அவன் தாடியடர்ந்த கன்னம் வயிற்றில் பட, கூசி சுருங்கி விட்டாள் பெண். சில நொடிகள் கன்னத்தை அவள் வயிற்றில் வைத்து தேய்த்தான். சந்த்ருவின் முகம் முழுவதும் மலர்ந்து போனது.
பின்னர் எதுவும் கூறாது அவளுக்கு அருகில் படுத்து தலையணையை இறுக்கிக் கொண்டான். அவன் செய்கையை சின்ன சிரிப்புடன் பார்த்து, அவனருகில் நிவி நெருங்கி படுக்க, நொடியில் அவளை இழுத்து அணைத்துக் கொண்டான். எதுவும் பேசாது கணவனின் அணைப்பில் சுருண்டு கொண்டாள் பெண்.
சிறிது நேரம் இருவரும் உறங்கி எழ, இரவு உணவை முடித்து விட்டு சென்னை கிளம்ப ஆயத்தமானான் சந்த்ரு.
உள்ளே நுழைந்த நிவி, பின்னிருந்து கணவனை அணைத்துக் கொண்டாள். அதில் ஒரு நொடி ஆடவன் உடல் இளகியது. “நான் உங்களை ரொம்ப மிஸ் பண்ணுவேன்!” என கூறியவளின் குரலே அவளின் ஏக்கத்தையும் காதலையும் கூறியது. அவளை முன்னே இழுத்தவன், “நீ மட்டும் இல்லை டி… நானும் ரொம்ப ரொம்ப மிஸ் பண்ணுவேன்!” என அவள் மூக்கைப் பிடித்து ஆட்டினான். பின் அவள் முகம் முழுவதும் எச்சில் செய்து அழுத்தமா உதட்டில் முத்தமிட்டு நிமிர்ந்தான். நீண்ட நாட்களுக்கு பின்னான அவர்களுக்கான நேரம். நொடி நொடியாய் நேசத்தையும் காதலையும் விழுங்கி கொள்ள, மயக்கத்தையும் தாண்டிய கலக்கம் பெண்ணின் விழிகளில். லேசாக பனித்து விட்ட கண்களுடன் கணவனைப் பார்த்தாள் நிவேதா.
“பத்ரம் டி… என்னோட ரெண்டு உயிரையும் விட்டுட்டு போறேன்!” என கூறி மீண்டும் அவளை முத்தமிட்டு விலகியவன், அனைவரிடமும் விடை பெற்று கிளம்பினான். இருவருக்கும் இந்த பிரிவு சற்றேஅவசிமானதாக இருந்தது. புரிதலில் முதல் நிலையை தொட்டிருந்தவர்கள், இன்னும் சில காலங்களில் அதில் முக்தி படியை தொட காத்திருந்தார்கள்.