தேவி மாலையில் சீக்கிரமாக வீடு திரும்பி விடுவாள். பிள்ளைகள் இருப்பதால் இரவு வரை வேலையை இழுத்து பிடிக்க மாட்டாள். அன்றும் அவசரமாக படியில் இறங்கி வரும் போது, அவர்கள் கடையில் வேலை செய்யும் பெண், படியில் மெதுவாக இறங்கி கொண்டு இருந்தாள்.
“ என்ன ஷீலா?…”
“அது வந்து அக்கா, இப்போது தான் நாப்பது நாள். அதான் மெதுவா இறங்குறேன்…” தயங்கியே பதில் சொல்ல,
“அப்படியா, சந்தோசம்… நல்லா இரு…” என்றவள் மெல்ல ஷிலாவின் கை பிடித்து மெதுவாக படியில் இறக்கி விட்டாள். யாரும் செய்வது தானே என்று சாலா கண்டு கொள்ள வில்லை.
மறுநாள் கடை திறக்கும் போது ஷீலாவும் வந்துவிட,
“என்ன ஷீலா வாந்தி எல்லாம் வருதா… மயக்கம் இருக்க, சாப்பிட என்ன ஒப்புது?…” என்று சகஜமாக கேட்பது போல தான் தேவி கேட்டது.
ஆனாலும் சாலாக்கு என்னவோ ஒன்று உறுத்தியது. அடுத்து மூவரும் படிகளில் ஏற சகஜமாகவே தேவி, ஷீலாவின் உணவு பையை வாங்கி கொண்டாள்.
மற்ற இருவரும் ஆச்சர்யமாக பார்த்தார்கள். சாப்பாட்டு பையை கூட தூக்க முடியாத கர்ப்பிணி யார்?… தேவி அந்த கடையின் இன்னொரு முதலாளி. அவளே முன் வந்து செய்வது?… சாலா கூர்ந்து பார்த்தாள்.
ஷீலா க்கு அதிக அழுத்தம் இல்லாதா வேலையை கொடுக்க சொன்னாள் தேவி. அடிக்கடி அவளோடு பேசினாள். எல்லாம் குழந்தையை பற்றி தான்.
இவர்கள் கடையில் இரண்டு ஆண்களும் உண்டு. பெண்கள் கடை என்பதால் பாதுகாப்புக்கு. அவன் முத்து பாண்டி, அவனுக்கு தான் பெண் குழந்தை பிறந்தது இருந்தது. மரியாதை கருதி தன் மனைவி, பிள்ளையை கடைக்கு அழைத்து வந்தான்.
சாலா கையிலும், தேவி கையிலும் பிள்ளையை கொடுத்தான். சாலா இயல்பாக தூக்கி கொஞ்சி பிள்ளைக்கு என்று புதிய ஆடை, மற்ற பொருட்களை கொடுக்க. தேவி மடியை விட்டு இறக்கவே இல்லை. அவர்கள் போகும் வரை அவள் கையில் தான் வைத்து இருந்தாள்.
அந்த குழந்தையின் தாயிடமும், “ பாப்பா எத்தனை மாசத்துல பொறந்துச்சு, நல்ல வலியா? பிள்ளை வலி எப்படி இருக்கும்? நீ எப்படி கையில் வாங்குன? தாய் பால் எப்போ குடுத்த?…” விடாமல் தொடர் கேள்வி தான்.
பெற்றவளுக்கு தன் பிள்ளை பெருமை ஓயுமா? அவளும் சலிக்காமல் தன் பிரசவ கதையை சொல்ல, ஆசையாக கேட்டு கொண்டாள் தேவி. அவர்கள் சென்ற பின் சாலா பார்வை தேவியையே வட்டமடிக்க, தேவி அடிக்கடி தன் சேலை முந்தானையை முகர்ந்து பார்த்து கொண்டாள்.
“என்ன மதினி, சேலையை மோந்து பாக்குறீங்க?…” கேட்காமல் இருக்க முடியவில்லை.
“அது வந்து…” என்று தயங்கியவள், “பச்சை பிள்ளை வாசம் சாலா. பெத்தவ மேல மட்டும் தான் வீசும். எம் மேலயும் வாடை அடிக்குது. ஆசையா இருக்கு…” என்று சொல்ல, சாலா கண்களில் மலுக்கென்று கண்ணீர் எட்டி பார்த்தது.
இதை எப்படி மறந்தேன்? தேவிக்கு பதினெட்டு வயதில் தொடங்கிய ஏக்கம் நாற்பத்தி மூணு வயதிலும் மறைய வில்லை, மாற்றமும் இல்லை. இதற்கு என்ன செய்ய இயலும்.
அடுத்தடுத்து ஷீலாக்கு கவனிப்பு கூடியது. தேவியின் கை மனத்தில் புளி குழம்பு, மாவடு, ஈரல் கூட்டு வர தொடங்கியது. மற்றவர்கள் பேசும் அளவுக்கு தேவியின் செயல் இருந்தது.
“தேவி அக்காக்கு பிள்ளை இல்லையில, அதான் பிள்ளைதாச்சி மேல ஒரே கரிசனம்…” என்று பேச்சு பரவியது.
தேவி இருக்குமிடத்தில் தான் ஷீலாவை வேலைக்கு என்று வைத்து கொள்வாள். அவள் பிள்ளை தாங்கி கையை வயிற்றில் வைத்து நடப்பதை அவ்வளவு ரசிப்பாள். கால் வீக்கம், முக வீக்கத்தையும் ஆசையாக பார்ப்பாள்.
சாலாவும் கவனித்து கொண்டு தான் இருந்தாள். கொஞ்சம் அதிர்ச்சியாகவும் இருந்தது. பிள்ளை ஏக்கம் இன்றும் வரை இருக்கிறதா? சரிதான், குமரனுக்கு தான் பிள்ளை வந்ததே தவிர தேவிக்கு இல்லையே. சித்ரா பிள்ளைகள் மூவரும் தேவியை பெரியம்மா என்று தான் அழைப்பார்கள். அவர்களை குளிக்க வைத்து, உணவு ஊட்டி, தூக்கி வளர்த்ததும் தேவி தான். அப்படி இருந்தும் அவருக்கான பிள்ளை ஏக்கம் குறையவே இல்லை.
தாங்கள் எல்லாம் எவ்வளவு பெரிய பிழை செய்து இருக்கிறோம். பிள்ளை இல்லை என்று சித்ரா உடன் திருமணம். ஒன்னுக்கு மூன்று பிள்ளைகள், பிள்ளை ஏக்கம் தீர்ந்தது. யாரும் அடுத்து தேவிக்கு என்ன என்று யோசிக்க வில்லை. அதான் வீட்டில் மூன்று பிள்ளைகள் இருக்கிறதே! வேற என்ன என்று விட்டு விட்டார்கள்.
சாலா தலையை பிடித்து கொண்டாள். இதற்கு தீர்வு என்ன… இந்த வயதில் குழந்தை சாத்தியமா!… அதற்கு தேவி, குமரன் முடிவு என்ன? குமரனுக்கு தேவி மீது பிடித்தம் அதிகம். அதன் பின் சித்ரா, அவள் பிள்ளைகள்?…