முத்தரசன் வீட்டில் அனைவரும் இரவு உணவை முடித்து உறங்க ஆயத்தமாக இருந்தனர்.. ஆருத்ரா இன்று வரத் தாமதமானதால் அவள் வரும் முன்னரே இசை தாத்தா, பாட்டி அறையில் உறங்கியிருக்க தன்னறைக்குள் புக இருந்தவளை கண்ட மீனாட்சி “என்னங்க…” என்று கணவனை பெரிய சத்தமாய் அழைத்தார்..
அது தனக்கான அழைப்பு என்று புரிந்த ஆருத்ராவும் நடையை நிறுத்தி என்னவென அறிய அறை வாயிலில் நின்றாள்..
“என்ன மீனாட்சி?” முத்தரசன்..
“எனக்கு கொஞ்சம் மூட்டு வலிக்குது.. தைலம் தேய்ச்சிட்டு தூங்கப் போறேன்.. மாப்பிள்ளை வந்தா சாப்பாடு பரிமாற சொல்லுங்க உங்க பொண்ண..” என்று கோபமாய் சொன்னார்.. காரணம் அவன் இந்த வீட்டிற்கு வராது போய் மூன்று தினங்கள் ஆகிறது.. அதற்கு காரணம் அவளாக தான் இருக்கும் என்பது அவர் எண்ணம்..
ஆருத்ராக்கு அவர் கோபத்திலும் பிறப்பித்த கட்டளையிலும் எரிச்சலாய் வந்தது.. முன்னர் இவர்களும் எனக்கு உறவுகள் தான் என்ற எண்ணமே இன்றி இவர்களைக் கருத்திலே கொள்ளாது திரிந்தவன் திடீரென மாமனார் வீட்டோடு உறவு கொண்டாட ஆரம்பித்ததும் அவனுக்கு கிடைக்கும் ஏகபோக மரியாதை என்ன? நாள் தோறும் நடக்கும் மாப்பிளை விருந்து என்ன? என்று மனதினுள் பொருமிக் கொண்டாள் ஆருத்ரா..
தாங்கள் தான் அவனைத் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடுகிறார்கள் என்றால் இப்படித் தான் தினம் ஒரு காரணம் சொல்லி அவனுக்கு இவளே பரிமாறும் படி செய்து விடுகிறார் மீனாட்சி.. முன்பு அவனை அவர் திட்டியது எதுவும் அவர் நினைவில் இல்லையோ என்று மருமகனுக்குப் பார்த்துப் பார்த்து சமைக்கும் மீனாட்சியை பார்த்து ஆருத்ரா தான் குழம்பிப் போவாள்..
இவள் மனவோட்டம் அறிந்தது போல் மீனாட்சி, “பெத்த புள்ளை வாழ்க்கை அந்தரத்துல நிக்குதுன்ன ஆதங்கத்துல ஆயிரம் பேசினேன் தான்.. ஆனா என் பிள்ளை நல்லா இருக்கக் கூடாதுன்னு ஒரு நொடி கூட நினைக்கல.. ஒரு முறை தவறிப் போன என் பிள்ளை வாழ்க்கை நல்லா அமைய இதை பண்ணலாம்னு கண் முன்னால ஒரு வாய்ப்பு இருந்தா.. அதை எந்த தாயும் எட்டி உதைச்சிட்டுப் போக நினைக்க மாட்டா..” என்றார் மீனாட்சி குத்தலாக..
இது இரண்டு வகையாக ஆருத்ராவை தாக்க வேண்டும் என்று பேசப்பட்டது.. ஒன்று அவள் தன்னிடம் பேசாது இருப்பதை சுட்டிக்காட்ட.. மற்றொன்று இசையை மனதில் வைத்து தாயாக செயல்பட்டு கணவனோடு சேர்ந்து வாழ்ந்து உன் குழந்தைக்கு நிறைவான குடும்பத்தை கொடு என்றதாகவும் அமையும்..
அவள் அதற்கு எதுவும் சொல்லாது நிற்க,
“ஆரு நீ போய் தூங்கும்மா.. அவரு வந்தா நான் பார்த்துக்கிறேன்..” என்று மகளிடம் சொன்னவர், “நீ வா மீனாட்சி காலுக்கு மருந்து போடணுமே..” என்று மனைவியையும் அப்புறப் படுத்தினார்..
உள்ளே சென்ற ஆருத்ரா மகளும் இல்லையாதலால் தன்னை நொந்து தலையணையை அணைத்துப் படுத்து விட்டவளுக்கு சிந்தனை எல்லாம் அதிரன் வசம்..
அன்று மனதில் இருந்ததெல்லாம் கொட்டித்தீர்த்த பின் அவள் மீண்டும் மௌன சாமியார் ஆக முயற்சிக்க அதிரன் விடவில்லை.. தன் ஜாகையை தற்காலிகமாக மாமியார் வீட்டிற்கே மாற்றி விட்டான்.. ஆருத்ராவாலும் தடுக்க இயலவில்லை.. காரணம் தாய் , தந்தை, இசை என்று மூவர் முகத்திலும் கண்ட மகிழ்ச்சி அத்தகையது.. அதிலும் பெண் வாழ்வு என்னாகுமோ என்று பயந்த முத்தரசன், மீனாட்சி இருவரும் அவனின் செயல்களில் இளகி, அதிரன் என்பவன் இடைப்பட்ட காலத்தில் எந்த தீங்குமே இளைக்கவில்லை என்பதை போல அத்தனை தாங்கினர் அவனை.. இதில் மீனாட்சி இவளை அவனுக்கு ஒவ்வொன்றும் செய்ய ஏவுவதும் அதற்கு அவன்,
“விடுங்கத்தை, அவளை ஒன்னும் சொல்லாதீங்க..” என்று மறுப்பதும்.. என பார்க்க பார்க்க செவ்வாய் கிரகத்தில் தரையிறங்கிய உணர்வு தான் ஆருத்ராக்கு..
இவன் முத்தரசன் வீட்டில் தங்குவதை தமக்கை மூலம் அறிந்து நர்மதா இவனுக்கு ஃபோன் செய்து
“மாமனார் வீட்டோட போய் இருக்கியே உனக்குலாம் வெக்கம், மானம் இல்லையா?” என்று ஆர்ப்பரிக்க, “ஆமா இல்லை.. அதுக்கு இப்போ என்னங்கிற?” என்று கேட்டு விட்டு வைத்து விட்டான்.. இது போல ஏற்றி விடுபவர்கள் இருப்பதால் தான் மருமகன்கள் அவசரத்திற்கு கூட மாமனார் வீட்டில் தங்குவதற்கு பிகு செய்வது.. அதிரன் எதைத் தின்றால் பித்தம் தெளியும் என்று அலைபவனிடம் இப்படிக் கேட்டால், அவனிடம் இருந்து வேறு என்ன பதிலை எதிர்பார்க்க முடியும்..
ஆருத்ரா அமைதியாக இருக்க இருக்க , இவன் அதிகம் பேச ஆரம்பித்து விட்டான்.. தன் ஏக்கங்கள், ஆசைகள், வேலை, லண்டனில் அனுபவித்த தனிமையின் கொடுமை.. என்று எல்லாம் இரவு இசையின் உறக்கம் கெடாதவாறு இவள் முதுகோடு ஒட்டியும் ஒட்டாதும் போல் படுத்து அவள் செவிகளுக்குள் ஓதுவான்..
இதைத் தவிர்க்கவே தான் சுவரோரம் படுத்துக் கொண்டு இசையை நடுவில் படுக்க வைத்து இவன் அந்தப்புறம் வந்து படுப்பான் என்று காத்திருந்தால் அந்த நேரங்களில் தான் லாப்டாப்பை மும்முரமாக தட்டிக்கொண்டு அமர்ந்திருப்பான் அவன்..
அதைப் பார்த்து விட்டு இசை கட்டிலில் இருந்து விழுந்து விட்டாலும் என்ற அச்சத்தில் இவள் இந்தப்புறம் வந்து படுத்தால் போதும், அவன் பார்த்துக் கொண்டிருந்த வேலை பட்டென்று முடிந்து விடும்.. அதன் பின் அவன் பிடியில் நின்று அவளால் வெளிவர முடியாது.. அவனுக்கு உறக்கம் வந்தால் தான் அவன் வாய் ஓயும்.. அவன் பேச்சும் நிக்கும்.. இவளும் தூங்க இயலும்..
இப்படியே ஒரு இதமும் ரிதமுமாக தான் ஒரு மாதத்திற்கும் மேல் நாட்கள் போய்க் கொண்டிருக்க, மூன்று நாட்களுக்கு முன் தான் இசையின் பிறந்த நாள் வந்தது..
அதிரனை பொறுத்த வரை அது மகளின் முதல் பிறந்த நாள்.. அவன் உடனிருக்கும்போது வரும் முதல் பிறந்த நாள்.. அதனால் மகள் பிறந்த நாளை அமர்க்களம் செய்து விட வேண்டும் என்று முடிவு செய்து விட்டான்.. தானும் லீவு எடுத்துக் கொண்டு மீனாட்சி மூலம் தகிடு தத்தங்கள் செய்து ஆருத்ராவையும் லீவு போட வைத்து விட்டான்..
காலை எழுந்ததும் மகளை தானே குளிக்க வைத்து தான் எடுத்து வைத்த உடையணிவித்து அது நன்றாயிருக்கிறதை அவள் வாய் மொழி கேட்டு என்று ரம்மியமாக தொடங்கிய நாள் சர்மி, மற்றும் அவள் மகன்களின் வரவில் இன்னும் பொலிவு கூடியது..
மொத்தக் குடும்பத்தையும் வெளியே அழைத்துச் சென்று கோவில், பீச், தியேட்டர், மதியம் ஹோட்டலில் சாப்பாடு என்று கொண்டாடியவன் தன் வீட்டையும் மறக்காது மதிய உணவை அனுப்பி வைத்தான்..
ஈவினிங் வீட்டிலேயே சின்னதாய் கேக் கட்டிங் வைத்திருக்க ஜீவா கவியுடன் வர, கார்த்தி, ஹரிணியும் வந்திருந்தனர்.. இப்போது இருவருக்கும் திருமணம் முடிந்திருந்தது.. அவர்கள் திருமணத்துக்கு அதிரன் தன் குடும்பத்தோடு சென்று வாழ்த்தி வந்திருந்தான்..
இத்தனை பேர் பங்ஷன் அட்டென்ட் பண்ணியும் அதிரனுக்கு அன்று முழுதும் மகளைத் தவிர எதுவும் கண்ணுக்குப் புலப்படவில்லை.. அதனால் ஆருத்ராவின் தன் மேலான ஆழ்ந்த பார்வையையும் உணரவில்லை..
எல்லாம் முடிந்து அறைக்கு வந்த பின் வழமைக்கு மாறாக ஆருத்ரா சுவரோரம் சுவரைப் பார்த்தவாறு படுத்துக் கொண்டாள்.. காரணம் அதிரன் இசைக்கு அந்தப் பக்கம் மகளைத் தட்டிக் கொடுத்துக் கொண்டே படுத்திருந்தவன் அப்படியே உறங்கியும் போனான்..
அதிரனுக்கு இந்த நாள் எப்படி என்று பார்த்தால் மொத்தமும் மகிழ்ச்சியானதாக தான் இருந்தது என்பான்.. ஆனால் ஆருத்ராக்கு எப்படியென்று கேட்டால் அவளுக்கு தெரியாது.. இதுவரை தவறிய தருணங்களுக்கான ஏக்கம்.. அவனால் தானே தவறியது என்ற கோபம்.. இன்றைய நாளின் நெகிழ்வான தருணங்களில் உண்டான சந்தோஷம்.. எல்லாவற்றுக்கும் மேல் தன்னைப் பேச வைத்திடும் முனைப்பில் தன் கவனத்தை அவன் மேல் மட்டும் வைத்துக் கொள்ள என்று அதிரன் எடுக்கும் சிரத்தைகள் இன்றி அவன் கவனம் மொத்தம் இசை மேல் இருந்ததால் ஏற்பட்ட வெற்றிடம்.. இதோ இப்போது கூட தன்னைத் தள்ளி வைத்திருப்பது.. என்று கலவையான உணர்வு சுழலில் சிக்கி தவிக்கிறாள் காலை முதல்..
ஒரு கட்டத்தில் சுத்தமாக முடியாது போக அவள் கண்களிலிருந்து சத்தமின்றி வெளியேறியது கண்ணீர்த் துளிகள்.. எங்கே அது கேவலாய் வெடித்து தன்னருகில் தூங்கிக் கொண்டிருப்பவர்களை எழுப்பி விடுமோ என்று அஞ்சியவள் கண்ணீரை அழுந்தத் துடைத்துக் கொண்டு வெகு சிரமப்பட்டு அரவமின்றி கட்டிலில் இருந்து இறங்கி அறையை விட்ட வெளியேறினாள்..
வாசற்கதவின் சாவியை எடுத்து திறந்து வெளியே வந்தவள் கதவை வெளிப்புறம் சாற்றி விட்டு வெளிப்புறமாக காணப்படும் மொட்டை மாடிக்கு செல்லும் படிகளில் ஏறினாள்..
அரை மணித்தியாலம் கூட ஆகியிருக்காது.. அதிரனுக்கு ஏதோ வித்தியாசமாகப்பட பட்டென கண் விழித்தவன் உடனே ஆருத்ரா படுத்திருந்த இடத்தைப் பார்க்கவே அது காலியாக இருப்பது கண்டு பதறி எழுந்தான்..
அவசரமாக மகளுக்கு தலையணையை அணைவாக வைத்து விட்டு வெளியே வந்து பார்த்தால் வீட்டின் ஒரு சாவியைக்
காணாதது கண்டு இன்னொரு சாவியை எடுத்து வாயிற்கதவைத் திறந்தவன் அதை மூடி விட்டு ஒரு கெஸ்ஸில் மொட்டை மாடி செல்லும் படிகளில் விரைந்து ஏறினான்..
அங்கே சென்றவன் கண்டது மொட்டை மாடியின் தரையில் அமர்ந்து தன் கைகளால் கால்களை கட்டிக் கொண்டு முகத்தை கால்களில் புதைத்த படி அமர்ந்திருந்த ஆருத்ராவைத் தான்.. அவளை அங்கு கண்டதும் தான் அதிரனின் மூச்சுக்காற்று சீரானது..
ஆனால் அவள் முதுகு குலுங்கலில் அவள் அழுவதை உணர்ந்து கொண்டவனுக்கு நெஞ்சில் தானாகவே பாரம் ஏறிக் கொண்டது.. யாரும் இல்லாதவள் போல் இப்படி தனியே வந்து அழுகிறாளே பாவி.. நான் என்ன செத்தா போனேன்?.. என்று வலியோடு மனதில் கேட்டுக் கொண்டான்..
மெல்ல அவள் அருகில் நெருங்கி “ருத்ரா”… என்று மென்மையாக அழைக்கவும் சட்டென உடல் விறைத்துப் போனாள்..
“ருத்ரா…”
அவளிடம் பதிலில்லை . ஆனால் அழுவதை நிறுத்தி விட்டாள் என்பது அவள் முதுகு குலுங்காததிலே அறிந்து கொண்டான்..
“ருத்ரா… எந்திரி …”
“ப்ச்.. உங்களுக்கு இப்போ என்ன வேணும்? கொஞ்ச நேரம் தனியா இருக்க விடுறீங்களா?”
அவள் சொன்னதற்கு எதிர்ப்பதமாய் அங்கேயே அவளருகே அமர்ந்து விட்டான் அவன்.. அதை உணர்ந்தவளுக்கு கோபம் கோபமாய் வந்தது.. வேகமாக விழிகளை துடைத்துக் கொண்டு எழுந்து நின்றவள்,
“என்ன தான் வேணும் உங்களுக்கு? நான் தான் உங்க பொண்ணை கூட்டிட்டு போங்கன்னு சொன்னேன்ல? அதுக்கு அப்பறமும் எதுக்கு என்னமோ நான் தான் வேணுங்கிற மாதிரி நேத்து வரைக்கும் சீன போட்டீங்க? உங்களுக்கே சரியா தெரில, உங்களுக்கு என்ன வேணும்ன்னு.. உங்களுக்கு தேவையானது உங்க பொண்ணு மட்டும் தான்.. அதை முதல்ல புரிஞ்சிக்கோங்க அதிரன்.. நான் அன்னைக்கு சொன்ன மாதிரி இசை நான் இல்லாம இருக்க மாட்டா என்றதால இலவச இணைப்பா தான் நான் தேவைப் படுறேன்.. நான் இசைக்கிட்ட பேசிக்குறேன்.. நான் சொன்னா அவ கேட்டுப்பா.. தயவு செய்து என்னை விட்டுடுங்க.. நீங்க விட்டுட்டு போனப்போவே ருத்ரா என்றவ செத்துட்டான்னு நெனைச்சு என்னை விட்டு போயிடுங்க.. இல்ல இன்னைக்கு மாதிரி மாடிக்கு வந்துட்டு கீழ போற மாதிரி போக மாட்டேன்.. இதை விட பெரிய பில்டிங் மாடியா பார்த்து ஏறி குதிச்சிடுவேன்.. ஏன்னா என்னால மறுபடியும் உங்களை நம்பி, நீங்க காட்டுற பாசத்துக்கு அடிமையாகி, அதுக்குப் பிறகு நீங்க தர வலியை தாங்கி மீண்டு வர முடியும்னு தோணல.. ” என்று உணர்ச்சி வேகத்தில் வார்த்தைகளைக் கொட்டி விட்டு சென்றவள் பாரத்தை இறக்கி வைத்த நிம்மதியில் உறங்கியும் போனாள்..
இறங்கி செல்லும் முன் ஒரு தடவை அதிரன் முகம் பார்த்திருந்தால் கூட அவள் கால்கள் அசைந்திட மறுத்திருக்கும்.. இன்று முழுதும் வாடாது மலர்ந்திருந்த அந்த முகம் இப்போது வேதனையில் இறுகி, கண்கள் ரத்தமென சிவந்து சந்தோஷத்துக்கு உண்டான அத்தனை அம்சங்களையும் தொலைத்து இருந்தது.. எப்படி ஆரம்பித்த நாள் இப்படியா முடிய வேண்டும் என்று இருந்தது அவனுக்கு..
அதன் பின் அவன் கீழே அவள் அறைக்கு வரவில்லை.. மறுநாள் வேலைக்கு என்று அங்கிருந்து கிளம்பி சென்றவன் இன்று வரை இங்கு வரவில்லை.. முத்தரசன் போனில் இசையுடன் பேசிக் கொள்கிறான் என்பது இசை சொன்ன செய்தி.. ஆருத்ரா அதிரனைத் தேடுவதை அவளும் உணர்ந்து கொள்ளவில்லை.. அவனும் அவள் தேடலை உணரவில்லை.. அதனால் வந்த சின்னப் பிரிவு தான் இந்த மூன்று நாட்கள் இடை வேளை..
(அட மரக் கழண்ட மங்குனிகளா!)
அவள் சிந்தனை இவ்வாறு இருக்க, திடீரென அவள் அறைக் கதவு திறக்கப்படும் சத்தம் கேட்டது.. ஆருத்ராவினுள் அப்படி ஒரு உற்சாகம் தோன்றியது.. அதை உணர்ந்து திடுக்கிட்டு விட்டாள்.. இது என்ன டீன் ஏஜ் வயதினரை போல் இப்படி ஒரு உணர்வு? இந்தளவா இவனுக்காக ஏங்கிப் போய் உள்ளேன்? இந்த மூன்று நாளும் பாதி உறக்கத்தில் விழித்து அவன் கரம் பின்னிருந்து தன்னைச் சுற்றிப் பின்னப்பட்டிருக்கிறதா? என்று திரும்பிப் பார்த்து பார்த்தே உறக்கம் தொலைத்த விழிகளும், கழுத்தின் வலியும் சொன்னது ஆம் என்று.. தன்னை மீறி பொங்கிய உவகையில் உறங்குவது போல் விழிகளை மூடிப் படுத்துக் கொண்டாள்..
நேரம் கடந்தும் என்ன இன்னும் அவன் ஸ்பரிசம் தன்னில் இல்லையே என்று குழம்பிப் போய் மெல்லத் திரும்பிப் பார்த்தாள்.. அவன் கட்டிலை விட்டு தள்ளி நின்று கொண்டு இவளைத் தான் வெறித்துப் பார்த்துக் கொண்டு நின்றான்.. அவன் பார்வையில் இவளுக்குத் திக்கென்றானது..
வேகமாக எழுந்து அமர்ந்து கொண்டவள், “என்.. என்ன.. என்னாச்சு உங்களுக்கு?” உண்மையில் அவன் நிலை அவளுக்கு அச்சமூட்டுவதாய் தான் இருந்தது.. விழிகள் ஒரே நோக்காய் அவளையே நோக்க கைகள் இரண்டையும் கட்டி தன்னை இறுக்கிக் கொண்டு கால்களை ஒரிடத்தில் வேரூன்றி நின்றான்..
அவள் கேட்டும் அவன் பதில் பேசாது நிற்க, இவள் கட்டிலில் இருந்து இறங்கி “அதிரன்..” என அழைத்துக் கொண்டே அவனை நோக்கி முன்னேறினாள்.. இவன்,
“வேண்டாம் ருத்ர்ரரா… என்கிட்ட.. வராத…” என்று லேசாகக் குழறிக் கொண்டே பின்னெட்டு எடுத்து வைத்து சுவரில் முட்டிக் கொண்டான்..
ஆருத்ராவின் நடை தடைப்பட்டது.. ஆக குடித்திருக்கிறான்.. முன்னே வருடத்தில் ஒரு முறையோ இருமுறையோ தான் குடிப்பேன் என்றான்.. இப்போதெல்லாம் அடிக்கடி குடிக்கிறான்.. அவளுக்கு அவனை எண்ணி ஆயாசமாக இருந்தது..
அதே ஆயாசத்துடன் அவனை நெருங்கி “ஏன் அதிரன்?..” என்ற ஒற்றை வார்த்தை தான் கேட்டாள்.. ஆனால் அவன் பதறி விட்டான்..
“ஐயோ ருத்ரா.. நீ எந்த தப்பான முடிவுக்கும் போய்டாத.. நான் உன்னை டிஸ்ட்ரப் பண்ணாம எட்ட நின்னு பார்த்துட்டு போலாம்ன்னு தான் வந்தேன்.. பிளீஸ்மா அன்னைய மாதிரி எதையும் பேசிடாத..” என்று தன் காதுகளைக் கை கொண்டு மூடினான்.. பயம் பாதி போதை பாதி என கலங்கி கரகரத்து வந்தது அவன் குரல்..
ஆருத்ராக்கு தன் மீது தான் அதீத கோபம் வந்தது.. அன்று என்னை எந்த கிரகம் ஆட்டி வைத்தது என அவ்வாறெல்லாம் பேசினோமென.. இப்போது அவன் நிலை காண அவள் நேச நெஞ்சமது தவிக்க போதும் அவனுக்கான தண்டனை என நினைத்தவளாக, அவனை நெருங்கி அவன் கைகளை பிரித்து விட்டவள்,
“ம்ஹும்.. நான் ஏதும் பேசல அதிரன்.. அன்னைக்கு பேசினதுக்கு கூட ஸாரி.. நீங்க எதும் வொர்ரி பண்ணிக்க வேணாம்.. ம்ம்?”
நெருக்கத்தில் அவளையே விழியெடுக்காது பார்த்தவன்,
“இல்ல நான் சாரி ருத்ரா.. நான் இங்கே வர வேணாம்னு தான் பார்த்தேன்.. ஆ..னா … எனக்கு அங்க பயம்மா இருக்குடி.. அதான்..” ஒரு கையால் முகத்தை அழுந்த துடைத்துக் கொண்டு அவன் சொல்லவே ஆருத்ரா திகைத்து விட்டாள்.. ஆறடி ஆண்மகன் குழந்தையைப் போல் பயம் என்கிறானே ஏன் என்று..
“அதிரன்..” அவள் அவன் தோள் தட்டி அவனை சமன்செய்ய முயல அவள் கையைத் தட்டி விட எத்தனித்து அதில் சமநிலை தவறி அப்படியே தரையில் விழுந்தது விட்டான்..
ஆருத்ரா ஐயோ என்று பதறியவளாக அவன் முன் முட்டியிட்டு அமர்ந்து அவன் எழ உதவி புரிந்தாள்.. அவள் கரம் பற்றி எழுந்து அமர்ந்தவன் கை முட்டி தரையில் நன்கு மோதி உண்டான வலியில் “ஷ்ஷ்ஆ..” என்று மெல்லிய குரலில் கத்த அவன் கையை தன் கரங்களால் பிடித்துக் கொண்டு முட்டிக்கு மேல் ஷர்ட் கையை ஏற்றி விட்டு விட்டு அடிபட்ட இடத்தை அழுந்தத் தேய்த்து விட்டாள்..
“ப்ச்.. தள்ளிப் போடி.. நீயா வந்து என்கிட்ட ஒட்டிக்கிட்டு அப்புறம் என்னால சாகப் போறேன்னு சொல்லுவ.. எனக்கு வலிச்சா வலிச்சுட்டு போகுது.. நீ ஒன்னும் தடவி தர வேணாம் போடி..” என்று அவளைத் தள்ளி விட்டவன் தொடர்ந்து,
“ஆனா நீ பார்த்துக்கிட்டே இரு ருத்ரா.. உனக்காக ஏங்கி ஏங்கி, உன் பாசம் கிடைக்காம சீக்கிரமா நான் தான்டி செத்துப் போவேன்..”
“அதிரன்..” அவன் வார்த்தைகள் கொடுத்த கோபத்தில் அதிர்ந்து கத்தி விட்டாள்..
“என்னடி அதிரன்?.. ஏன் இதையே நீ பேசும் போது மட்டும் எனக்கு இனிச்சிருக்கும்னு நினைச்சா பேசின? அன்னைக்கு என்னடி சொன்ன? பொண்ணுக்காக மட்டும் தான் உன்னை என் கூட வான்னு கூப்டறேனா? ஹூம்? ஏன் முன்னாடி மாதிரி இசைய என்கூட கூட்டிப் போகத் தெரியாம தான் நான் இங்கேயே கிடக்குறேனா? நீ வேணும்ன்னு தானேடி நாயா அலையுறேன்.. ஆனா நீ என்னை நம்பி வருவியாடி? ஒத்துக்குறேன்.. உனக்கு நான் பண்ணது பெரிய பாவம் தான்.. அதை நான் இல்லங்கல.. அதை எல்லாம் அவ்வளவு சீக்கிரம் மறந்து நீ என்னை ஏத்துக்கிறதுன்றது சாதாரணம் இல்லன்னு எனக்கு புரிஞ்சாலும், என்னால நீ என்னை வெறுக்குறதயோ ஒதுக்குறதயோ தாங்க முடியலடி.. எனக்கு என் பழைய ருத்ரா வேணும்னு உள்ள கிடந்து துடிக்குது.. நான் என்ன பண்ணட்டும்?..” இரு கைகளையும் விரித்து செய்வதற்கு ஒன்றும் இல்லை என்பது போல் பரிதாபமாய்
அவளை விழித்தான்..
அவன் பேசப் பேச ருத்ரா தன்னைச் சுற்றி எழுப்பி வைத்திருந்த கற் சிறையில் சிறு சிறு கீறல் விழ ஆரம்பித்து அடுத்து அவன் பேசியதில் அது மொத்தமாய் உடைந்து நொறுங்கி தூள் தூளாகியது..
“ருத்ரா.. நான் பண்ணதுக்கு பதிலா என்னை கொல்றதா இருந்தா கூட உன் கூட வச்சே அதைப் பண்ணுடி.. என்னால நீங்க இல்லாம முடிலடி.. ஒரு தடவை ஒரே ஒரு தடவை எனக்கு ஒரு வாய்ப்பு கொடுத்துப் பாரு ருத்ரா.. நான் உசுரோட இருக்க வரைக்கும் உன்னை கலங்க விடாம பார்த்துப்பேனா தெரில.. ஆனா நான் செத்த அப்பறம் என்னை நினைச்சு அதிகமா அழற ஆள் நீயா தான்டி இருப்ப.. அப்டி என்னோட இழப்பு உன் அளவுக்கு யாரையும் பாதிக்கலன்ற அளவுக்கு உன்னைப் பார்த்துக்கணும்னு ஆசையா இருக்கு.. நான் செத்தாலும் நீ சிரிச்சிட்டே இருக்கணும்னு சொல்ற அளவுக்கு அதிரன் நல்லவன் இல்லடி.. நான் இல்லன்னா நீ அழணும்.. அழுதுட்டே இருக்கணும்.. அது தான்.. அது மட்டும் தான், நான் வாழுற வரைக்கும் உன்னை நல்லா பார்த்துகிட்டேன்ன திருப்திய எனக்கு தரும்.. என் ஆன்மாக்கும் சாந்தி கிடைக்கும்..” என்ற அவன் இல்லாது போனால் என்ற எண்ணமே ஆருத்ராவை அழ வைக்கப் போதுமானதாக இருந்தது..
அதில் “அதிரன்.. பிளீஸ்..” இதைப் பேசாதே நிறுத்து என்ற பார்வையோடு அவள் இறைஞ்சும் குரலில் கேட்க அவன் தன்னை மௌனத்தில் சிதைத்தவளை இன்று தன் வார்த்தைகளால் வதைக்கும் எண்ணத்தில் இருந்தானோ என்னவோ? அவன் நில்லாது தொடர்ந்தான்..
“இல்ல ருத்ரா நிஜமாவே எனக்கு பயமா இருக்கு.. உன்னையும் நம்ம பொண்ணையும் நிர்கதியா ஓடவிட்ட அந்த வீட்டுக்கு சும்மா போய் வரவே எனக்கு உடம்பெல்லாம் எரியும்.. இதுல அங்க தங்கறதுலாம் என்னால நினைச்சுக் கூடப் பார்க்க முடியாது.. வாழ்றது குடிசையா இருந்தா கூட அங்க என்கூட நீ வேனும்டி.. நீயும் இல்லன்னா எனக்கே எனக்குன்னு யாரு இருப்பா சொல்லு.. என்ன தான் ஜீவா மத்தவங்க மாதிரி இல்லைன்னாலும் அவன் எணக்குன்னு எல்லா நேரமும் இருக்க முடியாதுல்ல? அவனுக்கும் குடும்பம் இருக்கே? எல்லாருக்கும் அவங்கவங்க ஃபேமிலி தான முக்கியமா இருக்கும்.. (இப்போவாச்சும் தெரிதே..) இசையும் நாளைக்கு கல்யாணம்னு பண்ணிப் போயிட்டா? அவளுக்கும் அப்படித் தானே அவ குடும்பம் பெருசா தெரியும்.. (எதே? குழந்தைப் புள்ளடா அது.. இவன் குடிச்சிட்டு பத்து செக்கன்ல கொள்ளுப் பேரன் வரைக்கும் யோசிப்பான் போலயே..?)
ஒரு வேளை நான் வேணாம்னு நீ உறுதியா நின்னுட்டேன்னா நான் என்ன பண்ணுவேன்? காலத்துக்கும் தனியாவே வாழ்ந்து தனியாவே செத்துப் போயிடுவேன் இல்ல? கடைசி நிமிஷம் மரணத் தாகத்துக்கு தண்ணி கொடுக்கக் கூட ஆளில்லாம அனாதையா செத்துக் கிடப்பேன்.. நான் செத்தது கூட தெரியாம பொணத்தைத் தூக்கிப் போடக் கூட ஆளில்லாம என் பொணமே அழுகிப் போய் நாத்தம் வந்த அப்பறம் தான் அக்கம் பக்கத்துல காப்பரேஷன்ல சொல்லி என்னைக் குப்பை மாதிரி அள்ளிப் போட்டுட்டு போவாங்கல்ல..?”
“பளார்..”
அதிரன் கன்னத்தில் கை வைத்துத் தன்னை அடித்தவளைப் பாவமாகப் பார்த்தவனை அவள் பாவம் பார்க்கவில்லை.. அடுத்தடுத்து எண்ணில் அடங்கா அடிகளை அவன் கன்னத்தில் இடியென இறக்கினாள்..
“இனிமேல் இந்த மாதிரிப் பேசுவியா?.. திமிரேறிப் போய்க் குடிச்சுட்டு இப்பிடிலாம் பேசணும்னு இருக்காடா உனக்கு? நீ கண்டபடி உளறுவ அதை நான் கேட்டுட்டு இருக்கணுமா?” என்று கண்ணில் கண்ணீருடன் கோபமாக கேட்டுக் கொண்டே அவனை அடித்தடித்து அவளுக்கு தான் கை வலித்தது.. அவன் அவள் அடிகளை அனாயசமாக வாங்கிக் கொண்டு மரம் போல் இருக்கவே அதற்கும் மேலும் முடியாது அவனை இழுத்து அணைத்துக் கொண்டவள் கதறி அழ ஆரம்பித்து விட்டாள்..
“ஏன் அதிரன் இப்படில்லாம் நமக்கு நடக்கணும்? நீங்க கொஞ்சம் நிதானமா இருந்துருந்தா கூட இந்த வேதனை எல்லாம் ரெண்டு பேருக்கும் இருந்துருக்காதே.. இப்போ இதையெல்லாம் என் காதால கேட்க வேண்டியது அவசியம் வந்திருக்காது தான?..” என்று அவள் அவனை தனக்குள் பொதிந்து கொள்வது போல் இறுக்கிக் கொண்டு அழுகையோடே கேட்க அவனால் என்ன பதில் சொல்லி விட முடியும்.. எல்லாம் விதிப் பிரகாரம் நடந்து முடிந்தது என்றா? அப்படியும் சொல்லி விட முடியாதே.. அவள் கேள்விக்கு அவனிடம் பதில் இல்லையென்றானாலும் அவள் அழுவதை மட்டும் அவனால் தாங்கிக் கொள்ள முடியவில்லை..
“ருத்ரா நீ அழாதடி.. நான்.. எனக்கு ஒன்னும் இல்ல.. நான் தான் சொல்லிருக்கேன்ல.. நீ என்ன கேட்டாலும் செய்வேன் ஆனா நீ மட்டும் அழக் கூடாதுன்னு.. இப்போ உனக்கு என்ன வேணும்?” சாக்லேட் வேணுமா என்ற தொனியில் அவன் கேட்க அவனை தன் அணைப்பில் இருந்து விடுவித்து ஒரு நொடி அவனை ஆழ்ந்து பார்த்தவள்,
“நான் கேட்கிறத உன்னால என்னைக்கும் தர முடியாது.. அதனால இனிமே இந்த மாதிரிக் கேட்டு என்னை வெறுப்பேத்தாத.. அப்பறம் என்னைக்கும் உன்னால என்னை சந்தோஷமா வச்சிருக்க முடியாது.. இதோ இப்போ கொஞ்சம் முன்னாடி என்னைக் கதற வச்சே இல்ல? இது மாதிரி தான், பேசத் தெரியாம பேசி, பண்ணக் கூடாதத பண்ணின்னு வாழ்க்கை முழுக்க நீ என்னை அழ வச்சிட்டே தான் இருப்ப.. அதனால தான் சொல்றேன்.. என்னை சந்தோஷமா வச்சிருப்பேன்னு பொய்யான வாக்கு குடுத்து என்னை உன்கூட கூட்டிப் போக நினைக்காத.. அது உன்னால என்னைக்கும் முடியாது.. ஆனா..” என்றவள் கலங்கிய கண்களை துடைத்துக் கொண்டு மீண்டும் அவனை கழுத்தோடு கட்டி அணைத்து அவன் உச்சந் தலையில் முத்தமிட்டவள் மேலே ஏதும் பேசிக் கொள்ளவில்லை.. தனக்குள் ஏதோ தன் மனதிடம் உரையாடினாள்..
அவள் அவ்வளவு சொல்லியும் அதிரன், “இல்ல ருத்ரா, நான் உன்னை நிச்சயமா நல்லா பார்த்துப்பேன்..” என்று அதையே திரும்ப சொல்லவும் அவளுக்கு எரிச்சல் ஆனது..
“திரும்ப திரும்ப பொய்யான வாக்குறுதி தராதன்னு சொல்லிட்டு இருக்க முடியாது.. உன்கூட வாழ்ந்தது வெறும் எட்டு மாசம் தான்னாலும் அப்போ நான் உன் கூட இருந்ததுக்கு காரணம் நீ என்னை சந்தோஷமா வச்சிருந்த என்றது இல்ல.. உன் கூட இருக்கிறதையே நான் சந்தோஷமா நினைச்சேன்.. அதனால தான் உன் கூட இருந்தேன்.. உன்னால முடியாதுன்னு நான் சொன்னா நீ நம்பி தான் ஆகணும்.. புரிஞ்சுதா?” என்று அவள் அதட்டிக் கேட்க அரை போதையில் அந்த அரைக் கிறுக்கனுக்கு என்ன புரிந்ததோ தெரியவில்லை.. எல்லா பக்கமும் மண்டையை ஆட்டிக் கொண்டவன் அவன் முகம் பார்த்து பேசவென்று அவனை விட்டுத் தள்ளிச் சென்றவளை கன காரியமாக அவள் இடையோடு இழுத்துக் கட்டிக் கொண்டு மீண்டும் அவள் வாசம் பிடித்தான்..
இருந்தும் தன்னை நல்லவன் என்று தனக்கே உருப்படுத்திக் கொண்ட்வனாக,
“தள்ளிப் போ ருத்ரா நான் குடிச்சிருக்கேன்.. ஸ்மெல் வரும்..” என்று வாய் வார்த்தைக்கு சொன்னவன் அவளை விலக்கும் எண்ணம் துளியும் இன்றி இன்னும் இன்னும் அவளுள் புதைந்து போனான்..”
கிட்ட வா என்றாலே பத்தடி தூரம் தள்ளி நிற்பவளிடம் இப்படிக் கூறினால் அவளும் தான் என்ன செய்வாள் பாவம்? அவன் சொன்னதே வேதம் என்பது போல் அவனை ஒரே தள்ளாக தன்னில் இருந்து நீக்கியவள் அவனை முறைத்துக் கொண்டே எழுந்தாள்..
அவள் விலகலில் தாய்ப் பறவையின் சூடு கிட்டாத குஞ்சுப் பறவையாக தவித்துப் போன அதிரனால்
போதை காரணமாக அவளைப் போல் விரைவாக எழுந்து கொள்ள முடியவில்லை.. ஆதலால் அமர்ந்த படியே அவளை நோக்கி “ருத்ரா..” என ஒரு கையை அவளை நோக்கி நீட்டி தாயை தூக்கு என இறைஞ்சும் மழலை போல் பாவமாக முகத்தை சுருக்க, ஆருத்ராக்கு உள்ளே உருகினாலும் வெளியே அதைக் காண்பித்துக் கொள்ள மனதில்லை.. அவள் இப்படி தொட்டதற்கு எல்லாம் உருகிக் கொண்டே இருந்தால் இவனுக்கு எல்லாம் ஈசியாகிப் போய் விடும்.. பின் மீண்டும் இவன் போக்கில் எதையெதையோ கற்பனை செய்து இவன் பரதேசம் செல்ல இங்கே இருந்து அழப் போவது அவளும் இசையும் அல்லவா? அதனால் கொஞ்சம் விட்டுப் பிடிக்க முடிவெடுத்தாள்..
அதனால்,
“ஒன்னும் தேவையில்ல.. குடிச்சுட்டு கண்டதையும் பேசிட்டு அலையுற உன்ன நான் இவளோ டிஸ்டன்ஸ்ல விட்டு வச்சிருக்கதே பெருசு.. ஒழுங்கு மரியாதையா இங்கேயே படுத்து தூங்கிட்டு காலைல இசை எந்திரிக்க முன்னாடி அவ கண்ணுல படுறதுக்கு முன்னாடி இந்த வீட்டைக் காலி பண்ணிடனும்..” என்று கறாராகச் சொன்னவள் தலையணை போர்வையை தூக்கி அவன் புறம் தரையில் போட்டு விட்டு தான் கட்டிலில் ஏறிப் படுத்து விட்டாள்..
உள்ளதையும் கெடுத்த தன் நாவை தானே சபித்தபடி அவள் இல்லையென்றாலும் அவள் வாசம் பிடிக்க அவள் தலையணையாவது கிடைத்ததே என்று அதைக்கட்டி அங்கேயே தாறுமாறாக கைகால்களை எறிந்து படுத்து விட்டான்..
ஆனால் ஆருத்ரா இன்னும் அவனின் உளறல்களியே உறங்காது உழன்று கொண்டிருந்தாள்..
இத்தனை நாள் அவன் உடன் இல்லாவிட்டாலும் எங்கோ ஓர் தொலைவில் நலமாக வாழ்கின்றான் என்ற நினைப்பே தன்னையும் தன் மகளையும் பார்த்துக் கொண்டு அவளை வாழச் செய்தது.. இல்லையென்றால் என்ன ஆகியிருப்பாளோ தெரியாது.. அவன் விட்டுச் சென்றான் என்பதற்காக இவள் கொண்ட உண்மை நேசம் இவளை விட்டுச் செல்ல வேண்டும் என்ற அவசியம் இல்லையே.. அவள் நேசித்தது எட்டு மாத காலம் தன்னுடன் உயிரொன்றி வாழ்ந்த அதிரனை.. அவள் வெறுத்தது தன் பக்கம் என்ன என்று கூட கேட்காது தன்னை தனிமை எனும் இருளில் தள்ளிச் சென்ற அதிரனை..
இடைப்பட்ட காலத்தில் காணாமல் போய் இப்போது மீண்டும் மீண்டிருக்கும் அவள் நேசித்த அதே அதிரனை கண்டு அவள் காதல் கொண்ட உள்ளம் கசிந்ததில் என்ன தவறு? என்று தன்னைத் தானே கேட்டுக் கொண்டு அதிரன் புறம் திரும்பி உறங்கும் அவன் மேல் பார்வையை நிலைக்க விட்டவளுக்கு
பெருமூச்சுடன் மனதில் அதே கேள்வி தான் எழுந்தது..
“நமக்கு மட்டும் ஏன் அதிரன் இந்த நிலமை? நடுவுல ஆறு வருசம் காணாம போன என் வாழ்க்கைக்கு என்ன பதில் சொல்ல முடியும் உங்களால?” பின் தானே தெளிந்தவளாக,
“இனி அதைப் பேசி என்ன ஆகப் போகுது? இனி இருக்கற காலத்தை சந்தோஷமா இல்லைன்னாலும் ஏதோ வாழ்ந்தோம்கிற நிறைவோட வாழ்ந்திட்டுப் போவோம் என்று முடிவெடுத்தவளும் உறங்கிப் போனாள்..
உன் வாழ்க்கையில் இனி இனிய விடியல் மட்டுமே என்பது போல் மறுநாளும் விடிய மகள் எழும் முன் கண்ணில் படாது ஓடிப் போ என்ற அவளின் கட்டளைக்கு செவி சாய்த்த அதிரன் அவள் எழுவதற்கு முன்பே சத்தமின்றி கம்பி நீட்டியிருந்தான்.. பின்னே கன்னத்தில் அவன் கண்ட அவள் கை விரல் தடங்கள் அங்கே நின்று இன்னும் வாங்கிக் கொள் என்றா சொல்லும்? என்ன பண்ணி அடி வாங்கித் தொலச்சமோ என்ற பீதியிலே உறங்கும் ஆருத்ராவை தன் மூச்சுக் காற்றின் சப்தம் கூட உசுப்பி விடாதவாறு மூச்சை இழுத்துப் பிடித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறிய பின் தான் அதை வெளி விட்டான்..
இனி தான் அவன் ஆறுதலாக ரூம் போட்டு யோசிக்க வேண்டும்?
(“என்னாச்சு.. தண்ணி அடிச்சோம்.. அப்படியே ருத்ரா வீட்டுக்கு போனோம்.. அங்க அவ என்ன அடிச்சா? ஆனா எதுக்கு அடிச்சா?” இப்டியே ரிபீட் மோட்ல யோசிச்சு யோசிச்சு அந்தக் குடிகாரக் கபோதி காரணம் கண்டு பிடிக்கட்டும்.. அதுக்கு முன்ன நாம ஆருத்ராகிட்ட இவனைப் பத்தி நாலு பிட்டு எக்ஸ்ட்ராவா போட்டுக் குடுப்போம் வாங்க ஃப்ரெண்ட்ஸ்.. அச்சச்சோ அது முடியாது போலவே.. அவ அங்க என்னமோ கவிதை படிச்சிட்டு இருக்காளே பாவி.. வாங்க அது என்னன்னு பார்ப்போம்.. ஆ.. அப்பறம் அது கவிதை தான்னு எல்லாரும் நம்பணும்.. நம்பினா தான் நெக்ஸ்ட் எபி வரும்.. இல்லன்னா மன உளைச்சல்ல ஏழு வருஷத்துக்கு இமய மலைக்கு தியானம் பண்ணப் போயிடுவேன்.. இங்க வேற நிறைய கவிஞர்கள் சுத்திட்டு இருக்காங்க.. அவங்க எதும் பிழை கண்டு பிடிச்சா மனசுக்குள்ள மட்டும் மெதுவா திட்டுங்கப்பா.. எனக்கு கேட்டுச்சு.. இமயமலைக்கு டிக்கெட் கன்பார்ம்..)