அவன் நின்றவிதத்தில் கௌரவ் பக்கென்று சிரித்துவிட, ஆகர்ஷனும் புன்னகைத்தான்.
“யோசிக்கவே இல்லையேடா நீ. எப்படி பேசற?…” என்ற ஆகர்ஷனுக்கு கௌரவ்வை முதன் முதலில் தான் பார்த்த அந்த நாள் தான் ஞாபகம் வந்தது.
யாரும் அத்தனை சுலபத்தில் நெருங்கிவிடமுடியாத ஒரு ஆளுமையான தோற்றம் தந்திருந்தான் முதல் பார்வையில்.
இப்போதுமட்டும் என்ன என்றுதான் தோன்றியது. எவ்வளவு நெருக்கம் இருந்தாலும் அதையும் மீறிய ஒரு தனித்தன்மை கௌரவ்விடம் கம்பீரம் பெற்றிருந்தது.
“இன்னும் பார்த்து முடிக்கலையா?…” என்றான் சிரிப்பு குறையாமல்.
“காலத்துக்கும் பார்த்துட்டு தான் இருப்பேன். அதை விடு, நெக்ஸ்ட் என்ன ப்ளான்?…” என்ற ஆகர்ஷனை கௌரவ் யோசனையுடன் பார்த்தான்.
“உன்னை தான் கௌரவ்…” என்றதும் வெண்ணிலாவை திரும்பி பார்த்தான்.
குழந்தை கௌசல்யாவிற்கு கண்களை கட்டிவிட்டுக்கொண்டிருந்தவள் அவன் பார்வையின் உள்ளுணர்வில் நிமிர்ந்து பார்த்தாள்.
“ஹ்ம்ம், வெளில போகலாமேன்னு ஒரு ஐடியா…” என்றான் தானாகவே.
“அப்படி சொல்லு. அப்போ கிளம்பு. இந்தநேரம் வாழ்க்கையில திரும்ப கிடைக்காது கௌரவ். ஹேப்பியா என்ஜாய் பண்ணு…” என அவன் தோள் தட்டி தரவும், தலையசைப்புடன் மீண்டும் நிலாவை பார்த்தான்.
“என்ன ஒரு லுக்? செம்ம இல்ல?…” என சுனந்தா நிலாவின் தோளில் இடித்து கூற,
“இல்லையே…” என்றாள் வெண்ணிலாவும்.
மாடி கைப்பிடி சுவற்றில் சாய்ந்து நின்றவன் ஒற்றை காலை சுவற்றில் மடக்கி ஊன்றி இரு கைகளையும் கைப்பிடியை பிடித்தவாறு பக்கவாட்டாய் திரும்பி நிலாவை பார்த்துக்கொண்டிருந்தான்.
விழிகளில் அப்பட்டமான அழைப்பு. அருகில் வரும்படி அழைக்கிறானோ என்று பார்த்தவள்,
“நீயெல்லாம் உன் கல்யாணம் முடிஞ்சு என்னன்னு இருந்த?…” என்று கிண்டல் பேசினாள் பிரத்யூக்ஷா.
“அக்கா…” என சிரித்த சுனந்தா,
“இங்க புது பொண்ணுக்கு தான் ஏக்கம் எல்லாம். பாருங்களேன்…” என்றதும் நிலா அவளின் முதுகில் ஓங்கி ஒரு அடி வைத்துவிட்டு பார்க்க மாலை வரை அங்கே அத்தனை விளையாட்டு.
சுனந்தாவையும் அழைத்து வந்திருந்ததனால் என்ன செய்வதென யோசனையுடன் கௌரவ் அமர்ந்திருக்க,
“ஓகே, கௌரவ் நீ கிளம்பு. நான் சுனந்தாவோட வீட்டுக்கு புறப்படறேன். மறுவீடு கிளம்பரத்தை பத்தி பேசனுமே…” என்று ஆகர்ஷன் கூறிவிட,
“ஷ்யாமாம்மா கார் கீ…” என்று பிரத்யூ கேட்கவும் ஷ்யாமளா எடுத்து வந்தார்.
“நீ புது கார்ல போ கௌரவ். நாங்க எல்லாரும் நிலாவோட வீட்டுக்கு நைட் வருவோம்…” என்றார் அவனிடம்.
“பதில் சொல்லனும். பதில் கேள்வி கேட்டு டென்ஷன் பண்ண கூடாது…” என்றதற்கு பதில் கூறாமல் காரை விட்டு இறங்கினான்.
“பீச்சுக்கு அடிக்கடி வருவியா நிலா?…” என அவள் பக்கம் வந்து நின்று கேட்க,
“ம்ஹூம், இதுதான் பர்ஸ்ட் டைம்…” வேண்டுமென்றே முறுக்கிக்கொண்டாள்.
“அப்போ வா பார்க்கலாம்…”
“ஹலோ, நான் கோவமா சொன்னேன்…” என அவளும் காரை விட்டு இறங்கி,
“இது பீச்சும் இல்லையே. கடல் இருக்கு. சவுக்கு மரம் இருக்கு….” என்று சுற்றிலும் பார்த்தாள்.
பெரிதாய் ஆள் நடமாட்டம் இல்லை. ஆனால் தூரத்தில் ஆங்காங்கே மீனவர்கள் இருக்க கண்டாள்.
இரண்டு கல்லூரி பேருந்தும் தூரத்தில் இருக்க அதில் மாணவர்கள் கடலலையில் விளையாடியபடி இருந்தனர்.
“ப்ரைவேட்டா டைம் ஸ்பென்ட் பண்ணனும்னா ப்ரைவேட் ஏரியாவுக்கு தானே வரனும்….”
“ஹ்ம்ம், ஆனா இங்கயும் இருக்காங்களே?…”
“அவங்க கிளம்பிடுவாங்க கொஞ்ச நேரத்துல. நீ வா…” என்றவன்,
“புருஷன் பொண்டாட்டியை தனியா அனுப்பறவங்க ஊரே இருக்கிற இடத்துக்கு தான் அனுப்புவாங்க. என்ன சொல்றது?…” என அலுத்துக்கொள்ள,
“அடேங்கப்பா…” என்ற வெண்ணிலாவிடம் அத்தனை உற்சாகம்.
“பின்ன, தனியா சினிமா போங்க. தனியா கோவிலுக்கு போங்க. தனியா ஹனிமூன் போங்க. அங்கயும் ஊரே நின்னு வேடிக்கை பார்க்க தான் செய்யும். இதுல தனியாவாம்…” மீண்டும் கேலியாய் சொல்லிக்கொள்ள,
“பாஸ்க்கு தனியா எந்த தனியிடம் இருந்தா பெட்டராம்?…” என்றவள் சட்டென்ற அவனின் பார்வை திருப்பலில்,
“இதுக்கும் சுத்தி வளைச்சு மூக்கை தொடுவீங்க. பதில் புரிஞ்சது. ஷட்டரை க்ளோஸ் பண்ணிட்டேன்…” என்று சொல்லியவளுக்குள் மீண்டும் ஆதங்கம்.
எதையாவது பேசினால், இல்லை அவனாக பேசினால் மட்டுமே தான் கௌரவ் அவள் முகம் பார்த்து பேசுகிறான்.
அவனை அணு அணுவாய் அத்தனை ரசித்து பார்த்தவளுக்கு தன்னை அப்படி ஏன் இவன் பார்க்கவில்லை என்னும் எண்ணம் அதிகத்திற்கும் மேலெழும்பியது.
காலியான மரப்படகு ஒன்று நிறுத்தப்பட்டிருக்க அதில் இருவரும் சாய்ந்து நின்றனர்.
கௌரவ்விடம் மீண்டும் புன்னகையுடனான மௌனம். பார்வை கடலலைகளை பார்வையிட வெண்ணிலா சுற்றிலும் பார்த்தாள்.
‘வீட்டுக்கே போயிருந்திருக்கலாம்’ என்றே தோன்றிவிட்டது அந்த அமைதியில்.
வெறுமனே நில்லாது கைப்பேசியில் ஒவ்வொன்றாய் சேமிக்க ஆரம்பித்துவிட்டாள்.
எடுத்த புகைப்படங்களில் பெரும்பாலானது கௌரவ் தான். அவன் நின்ற விதம், முகம் சாய்க்கும் விதம், தலை கோதும் அழகு என ஒவ்வொன்றாய் அவள் எடுத்தபடி மேகமூட்டத்தையும் சேர்த்தே எடுக்க, விழிகளில் அடுத்து தென்பட்டதில் ஜிவ்வென்று சூடேறியது.
கைப்பேசியை இறக்கிவிட்டு மீண்டும் பார்க்க கல்லூரி மாணவிகளில் சிலரின் பார்வை இங்கே இவர்கள் மீது தான்.
அதிலும் கௌரவ்வின் மீது. எரிச்சலான எரிச்சல் பொங்க கணவனை திரும்பி பார்த்தாள்.
“யோவ் கௌரவம்…” என்ற சத்தத்தில் அவனும் திடுக்கிட்டு திரும்ப,
“போயா…” என பல்லை கடித்துவிட்டு வேகமாய் அங்கிருந்து எதிர் திசையில் நடக்க ஆரம்பித்துவிட்டாள் வெண்ணிலா.
அவனை சுற்றி சுற்றி வந்த தன்னை கவனியாமல், தூரத்தில் மீனவர்கள் படகை செலுத்துவதை பார்த்தபடி நின்றவனின் கழுத்தை பிடித்தால் என்னவென்ற கோபம் கனன்றது.