தன் பின்னால் அமர்ந்து வரும் தங்கை உம்மென்றிருக்க… பிரேம் என்னவென்று வினவினான்.
“என்ன மீனு ரொம்ப சைலண்ட்டா வார?”
வசந்தி வீரனை பார்த்து கேட்டது மற்றும் தானிருக்கும் வரை மருதன் பேசியதென எல்லாம் கூறினாள்.
“அதேன் முற்றத்துல அம்புட்டு பேரும் நின்னுட்டு இருந்தாய்ங்களா?” என்ற பிரேம், “இப்போவாச்சும் ஐயா அவிங்க தங்கச்சியை எதிர்த்து பேசினாறே… சந்தோஷந்தேன்” என்றதோடு, “அதுக்கென்னத்துக்கு நீயி இம்புட்டு வெசனமா இருக்குற? மாமாவை பேசிபுட்டங்கன்னா?” என்று வினவினான்.
“யாரென்ன பேசினாலும், மாமாவுக்கு தக்க பதிலடி கொடுக்கத் தெரியுமாட்டிக்கு. அவரு எல்லாத்தையும் பார்த்துப்பாரு” என்ற மீனாள், “நான் சொன்னதுல எல்லாம் ஒழுங்கா கேட்டியா நீயி?” என்றாள்.
“எதை கேக்குற மீனு?”
“போ’ண்ணே!” என்றவளின் குரலில் சுரத்தே இல்லை.
“என்னாச்சு?”
“அத்தை கௌதமுக்கு என்னை கேட்டிருப்பாய்ங்க போல… ஐயா முடிவு என்னன்னு தெரியல! ஆனாக்கா, இந்த பேச்சுல அவருக்கும் சம்மதமாட்டிக்குத்தேன் சொன்னாரு” என்றாள்.
“மாமாக்கு தெரியுமா?” அதிர்ச்சியாகக் கேட்டான்.
“தெரியும். நேத்து ராத்திரி” என்று பிரின்ட்டிங் கடைக்கு சென்று திரும்பியபோது வீரன் பேசியவற்றை கூறியதோடு, “ஐயா சொல்லும்போது கௌதம் முகத்துல வந்த அதிர்வு மாமா முகத்துல இல்லை. அவருக்கு முன்னவே தெரிஞ்சிருக்குமாட்டிக்கு” என்றாள்.
“என்னயிருந்தாலும் முடிவு உன் கையிலத்தேன் மீனு. இந்தப்பேச்சை உன்கிட்ட ஆரம்பிக்கும்போது உன் விருப்பம் என்னவோ அதை சொல்லு” என்றான். பெரியவர்களின் முடிவுக்கு முன்பு பிரேமாலும் ஒன்றும் செய்ய முடியாதே!
“ஐயா நேராக் கேட்டாருன்னாக்கா தலை தானா ஆடிப்போடும் அண்ணே!” என்றவள் என்றோ நடக்கவிருப்பதை எண்ணி இப்போதே வருத்தம் கொண்டாள்.
“இப்போதைக்கு உன்கிட்ட இதைப்பத்தி பேசமாட்டாய்ங்க. பேசும்போது நீயி தெளிவாயிருந்தாக்கா போதும். இல்லைன்னா மாமா பார்த்துக்கும்” என்ற பிரேமின் இறுதி கூற்றில் மீனாளுக்கு சுத்தமாக நம்பிக்கை இல்லை.
வீரன் பார்த்துக்கொள்வான் என்றால், அவனிடம் பேசாது இன்று வசந்தியிடம் மருதன் தன்னை கௌதமோடு சேர்த்து பேசியிருக்கமாட்டார். வீரன் சம்மதித்து தான் இந்தப் பேச்சு சபை வந்திருக்குமென்று சரியாக கணித்து வருந்தினாள்.
‘என்னை வெறுத்துட்டியா மாமா?’ மனம் அலறினாள்.
அக்கணம் அவளின் மொத்த வீம்பும் காணாமல் போனது.
கல்லூரி வந்திருந்து. வாடிய முகத்துடன் இறங்கி சென்ற தங்கையின் முகம் காண பிரேமுக்கு வருத்தமாக இருந்தது.
தன்னுடைய விருப்பத்தை குடும்பத்தின் முன் திடமாக சொல்லியவனுக்கு, தங்கையும் அப்படி சொல்வாளென்ற எண்ணம். ஆனால் இங்கு மனமும் எண்ணமும் ஆளுகொன்றாக மாறுப்பட்டிருக்கும் என்பதை அறியாது போனான்.
“மீனு…”
“பிரசன்டேஷன் அண்ட் வைவா நல்லா பண்ணு” என்றான்.
விரிந்ததோ எனும் விதமாக இதழ் விரித்தவள், அனைத்தையும் ஒதுக்கி வைத்து தன் வகுப்பு நோக்கிச் சென்றாள்.
லிங்கம் அன்றைய தினம் மாலை, ஓட்டலில் பெரும் புள்ளி ஒருவரின் வீட்டு விசேட விருந்து நடைபெற இருப்பதால் அதற்கான ஏற்பாட்டில் மும்முரமாக ஈடுபட்டிருந்தான்.
“பையன் மண்டையை உடைக்குற அளவுக்கு தைரியமா அவளுக்கு” என்று நினைத்த லிங்கம், “அவென் என்ன ஒரண்டையை இவகிட்ட கூட்டினானோ?” என்று எண்ணியவனாக, செய்து கொண்டிருந்த வேலையை மேனஜரிடம் ஒப்படைத்துவிட்டு விரைந்து அங்கையின் பள்ளி நோக்கி சென்றான்.
அங்கு பள்ளி முதல்வர் அறையின் வெளியில் அங்கை விறைப்பாக நின்று கொண்டிருந்தாள்.
லிங்கத்தை நேருக்கு நேர் அழுத்தமாக பார்த்தவளின் விழிகளில் தான் தவறு செய்யவில்லை எனும் பொருள்.
“என்ன பண்ணான்?”
அங்கு அவளது வகுப்பு ஆசிரியரிலிருந்து முதல்வர் வரை அனைவரும், பையனை அடித்ததற்காக அவளை திட்டினார்களேத் தவிர ஏன்? எதற்கு? அவன் என்ன செய்தான்? என்று இப்படி யாரும் கேட்கவில்லை. அங்கை மீது தான் தவறு என்பதைப்போல் நடந்துகொண்டிருக்க… தன்னை நம்பி தன்மீது தவறு இருக்காது. தான் அடித்திருக்கிறேனென்றால் அவன் ஏதோ வம்பு செய்திருக்கிறானென்று கேட்ட லிங்கத்தின் மீதான விருப்பம் வீரனின் அன்றைய பேச்சினை கடந்து மேலெழும்பியது.
அங்கை நடந்ததை சொல்லிட முயன்ற நொடி, பியூன் வந்து…
“மேடம் கூப்பிட்டாங்க?” என்று சொல்ல, அங்கையின் கை பற்றி முதல்வர் அறைக்குள் அடி வைக்க சென்ற லிங்கத்திடம்…
“உங்களை மட்டுந்தேன் வர சொன்னாக” என்றான் பியூன்.
“குற்றம் எங்க புள்ளை மேலத்தானே! அவள் இல்லாம என்ன விசாரணை?” என்ற லிங்கம், பியூனை தாண்டி அங்கையை கூட்டிக்கொண்டு உள் சென்றான்.
“வாங்க மிஸ்டர்.லிங்கம்” என்ற முதல்வர் அங்கையை முறைத்துக்கொண்டு, “மருதய்யன் வரலையா?” என்று வினவினார்.
வீரன் முதல் அனைவரும் அந்த பள்ளியில் தான் பயின்றனர். அதனால் முதல்வருக்கு மீனாட்சியின் குடும்பத்தில் அனைவரையும் தெரியும். அதுமட்டுமல்லாது பள்ளியில் அங்கைக்கான பெற்றோர் கூட்டத்திற்கு மருதன் வரமுடியாத பல தருணங்களில் வீரனோ, லிங்கமோ தான் வருவார்கள்.
“மாமா ஒரு சோலியா வெளியூர் போயிருக்காரு?” என்ற லிங்கம், “நீங்க என்ன சொல்லணுமோ என்கிட்டக்கவே சொல்லுங்க” என்றான்.
“உங்க பொண்ணு என்ன தப்பு பண்ணாங்கன்னு கேளுங்க லிங்கம். உங்க அண்ணனிலிருந்து, உங்க வீட்டு பிள்ளைங்க எல்லாரையும் பார்க்கிறேன். யாரும் இவளை மாதிரி அரகெண்ட் கிடையாது. எப்படி ஒரு ஆம்பளை பையன் மண்டையை உடைச்சிருக்காள் பாருங்க” என்று அவ்வறையில் ஓரமாகக் கிடந்த இருக்கையில் தலையில் கட்டுடன் அப்பள்ளி ஆசிரியருடன் அமர்ந்திருந்த மாணவனை திரும்பி பார்த்தான் லிங்கம்.
“இன்னும் ஒரு மாசத்துல போர்ட் எக்ஸாம் இருக்கு. அதுக்காகத்தான் யோசிக்க வேண்டியதா இருக்கு. இல்லைன்னா இப்போவே டிசி’யை கிழிச்சுக் கொடுத்திருப்பேன்” என்றார். அத்தனை காட்டமாக.
“சரிங்க மேடம் கிழிச்சிக்கோங்க” என்று பட்டென்று சொல்லிய லிங்கம், “நீயி வா வூட்டுக்கு போவோம்” என்று அங்கையின் கையை பிடிக்க… முதல்வர் பதறினார்.
“லிங்கம் நீங்க முதலில் உட்காருங்க” என்று வந்தது முதல் நிற்க வைத்தே பேசிய முதல்வர் இப்போது தன்மையாக அவனை அமரும்படி வலியுறுத்தினார்.
“இருக்கட்டும் மேடம். நீங்க ஏதோ கிழிச்சிடுறேன் சொன்னீங்களே அதை செய்ங்க. எப்படி பரீட்சை எழுத வைக்கணுமோ அப்படி எழுத வச்சிக்கிறேன்” என்று லிங்கம் தன் வார்த்தையில் உறுதியாக நிற்க, முதல்வரே எழுந்து வந்து அவனை உட்காரும்படி இருக்கையை நகர்த்தி கை காண்பித்தார்.
“நல்லா படிக்கிற பொண்ணு. பள்ளி மூலமாக எக்ஸாம் எழுதினாத்தானே பெருமையா இருக்கும்” என்று சிரித்துக்கொண்டேக் கூறினார்.
“இப்போதேன் கொஞ்சம் முன்னுக்க அரகண்ட் அது இதுன்னு ஏதோ சொன்னீங்க?” என்றான். அவனின் குரலில் நக்கல் இருந்ததோ?
முதல்வர் மனதில் நொந்து கொண்டார். அங்கை நன்றாக படிக்கும் பெண். அதே சமயம் பள்ளியில் அதீதச்சுட்டி. அவளின் படிக்கும் திறனை மனதில் வைத்தே அவளின் சேட்டைகளை மன்னித்துக் கொண்டிருந்தனர். இன்று ரத்தம் வருமளவிற்கு ஒரு மாணவனை அவள் அடித்திருக்க, மிரட்டுவதற்காகவே லிங்கத்திடம் அவ்வாறு பேசினார்.
இந்த வருட போதுத்தேர்வில் பள்ளி நிர்வாகம் அங்கையை நம்பித்தான் இருக்கிறது. அவள் முதல் மதிப்பெண் பெருவாள் என்பது நிச்சயம். அதற்காகவே லிங்கத்தின் செயலில் பதறி தழைந்து போகப் பேசினார் முதல்வர்.
“உன்னைய ஏதும் வஞ்சாங்களா அங்கை?”
“படிக்கிற திமிரு. பொட்ட புள்ளையா லட்சணமா இல்லைன்னா எவன்கிட்டயாவது மாட்டி சின்னப்படுவ. எம் மவன் மேலயே கையை வச்சிட்டியா? உன்னைய இந்த ஸ்கூல் விட்டே துரத்துறேன்னு… அந்த மேம் பேசுனாய்ங்க” என்று அடி வாங்கிய மாணவனின் அருகில் அமர்ந்திருந்தவரை கை காட்டிய அங்கை, “அவங்க இங்க இங்கிலிஷ் மேம். அதனால பிரின்சியும் அவங்களுக்குத்தான் சப்போர்ட். படிப்புல மட்டுமில்லாமல் ஆளும் லட்சணமா இருக்க கொழுப்புன்னு பேசுனாய்ங்க. பரீட்சை எழுத விடாமல் செய்யுறேன்னு ஐயாவுக்கு போன போட்டு என்ன ஏதுன்னு தன்மையா சொல்லாம, என்ன பிள்ளை பெத்து வச்சிருக்கீங்கன்னு கேட்டாங்க” என்று ஒன்றுவிடாது கூறினாள்.
அடிபட்ட மாணவன் அந்த ஆங்கில ஆசிரியையின் மகன் என்றதுமே, அங்கை மீது நிச்சயம் தவறு இருக்காது, அவரின் மகனை காக்க அவளை பேசவிடாது கட்டம் கட்டியிருக்கிறார் என்பதை லிங்கம் புரிந்து கொண்டான்.
“நான் அடிச்சேன் தான். ஆனால் எதுக்குன்னே என்னைய சொல்லவே வுடல மாமா” என்றாள். குற்றமாக.
“சரி இப்போ சொல்லு” என்றவன் தன் பார்வையை முதல்வர் மீது அழுத்தமாக பதித்தான்.
“எப்போ பாரு என் ஜடையை புடுச்சி இழுத்துவிட்டுட்டே இருக்கான் மாமா. கிளாசில் ஸ்டாஃப் யாரும் இல்லைன்னா என்னைய ஒரண்ட இழுக்கிறதுதேன் இவன் வேலையே! யாருக்கிட்டயோ சொல்றதுக்கு இவன் அம்மாகிட்டவே சொல்லலான்னு இங்கிலிஷ் மேமிடம் சொன்னா, கூடப்படிக்கிற பிள்ளைன்னு விளையாடுறான் இதெல்லாம் சீரியஸா எடுப்பங்களான்னு கேட்குறாய்ங்க. காலையில கிளாஸ் வந்ததும் ஏதோ பேப்பரை குடுத்து கண்ணடிக்கிறான். நான் அதை வாங்கவே இல்லை. ஸ்நாக்ஸ் நேரம், பாட்டிலில் தண்ணி பிடிக்க போயிட்டு வரும்போது வழிமறிச்சு ஜடையை பிடிச்சு இழுத்தான். விடுடேன்னு சொன்னதுக்கு கையை பிடிச்சு உரசர மாறி கிட்ட வந்தியான். அதான் கையில வச்சிருந்த வாட்டர் பாட்டிலாலே தலையில ஒன்னு போட்டேன்” என்றவள் “பாட்டில் ஸ்டீல், மண்டை பொளந்துடுச்சு” என்று இலகுவாகக் கூறி தோள்களை உயர்த்தி இறக்கினாள்.
“பார்த்தீங்களா மேம்… எவ்வளவு திண்ணக்கம்? அடிச்சதையும் அடிச்சிட்டு நக்கல் வேற” என்று ஆங்கில ஆசிரியை முதல்வரிடம் முன்வர,
“நியாயமா அவனுக்கு தான் நீங்க தண்டனை கொடுக்கணும். என்ன ஏதுன்னே விசாரிக்காம இப்படித்தேன் புள்ளைங்க படிப்பில் கை வைக்க நினைப்பீங்களா?” என்று முதல்வருக்கும் கொட்டு வைத்தான்.
ஆசிரியர் பொய் சொல்லமாட்டாரென்று முதல்வர் அசட்டையாக அங்கையை விசாரிக்காமல் விட்டதற்கு மன்னிப்பு கேட்டிட…
“இனியாவது பசங்க தப்பே பண்ணாலும், அவங்ககிட்ட எப்படி பேசனுமோ அப்படி பேசுங்க. திமிரு, பொட்டப்புள்ள, லட்சணம் இப்படி குணம், தோற்றத்தை வச்சு தரமிறக்கி பேசாதீங்க. ஆண், பெண் வேறுபாடு இல்லைன்னு சொல்லிக்கொடுக்க வேண்டிய நீங்களே… இப்படி பண்ணாக்கா என்ன அர்த்தம்?” என்றான்.
‘தன்னிடம் படித்த பையன் தனக்கு புத்தி கூறும்படி செய்துவிட்டாரே இந்த இங்கலிஷ் மேடம்’ என்று முதல்வருக்கு பொடுபொடுவென வந்தது.
“இனி இதுபோல் தவறு நடக்காமல் பார்த்துக்கொள்கிறோம் மிஸ்டர்.லிங்கம்” என்ற முதல்வரிடம், “அவனுக்கான தண்டனையாவது நல்ல முறையில குடுங்க” என்று சொல்லி அங்கையை கூட்டிக்கொண்டு வெளிவந்தான்.
முதல்வர் அந்த ஆசிரியரையும் மாணவனையும் வார்த்தையால் பிடிபிடிவென பிடிப்பது இருவருக்கும் வெளியில் நன்றாகவே கேட்டது.
“நீயி புடிக்க வேண்டிய கையி… அவென் தொட்டதும் எனக்கு என்ன செய்யுறது தெரியல” என்று நீர் ததும்பி நின்ற விழிகளோடுக் கூறியவள், லிங்கத்தின் பார்வையில் என்ன இருந்தது என்பதை பார்க்கத் தவறியவளாக சென்றிருந்தாள்.