அதில் உருகிய உள்ளத்தை இறுக்கப் பற்றியவன், தழலை வீசும் பொருட்டு,
“கான்டராக்ட்ல பழகுற எல்லார்கூடவும் கல்யாணம் பண்ணனும்ன்னா அது இல்லீகல் கிருபாஷிணி.” என சுள்ளென உரைக்க, சுருக்கென வலித்தாலும் அவன் வேண்டுமென்றே பேசுவது புரிந்து அமைதி காத்தாள்.
அவனோ, “உனக்கு என்ன மனசுல பெரிய தியாகின்னு நினைப்பா? இல்ல… இதோட சீரியஸ்னெஸ் புரியாம இம்மெச்சூர்டா நடந்துக்குறியான்னு எனக்குப் புரியல.” என்றான் கோபமாக.
“இல்ல எனக்கும் புரியல. உங்களுக்கு என்ன தான் பிரச்சனை? உங்க குடும்பத்து ஆளுங்க மாதிரி நான் கிடையாது வம்சி. நான் உங்களை உண்மையா காதலிச்சேன். என்ன சூழ்நிலை வந்தாலும் அந்த காதல் மாறாது. என்னை ஒதுக்கி வச்சுட்டு, நீங்க என்ன சாதிக்கப் போறீங்கன்னு நான் தெரிஞ்சுக்கலாமா?” என ஆதங்கத்துடன் கேட்டவளுக்கு கண்கள் கலங்கியது.
“என் பொறுமையை சோதிக்காத. நீ நினைக்கிறது என்னைக்கும் நடக்காது. நமக்குள்ள கல்யாணம்… அது இந்த ஜென்மத்துல நடக்காது?” என்றான் பிடிவாதமாக.
“ஏன்? ஏன் நடக்காது?” சீறலாய் அவள் வினவ,
“நடக்காது அவ்ளோ தான்.” என்று இறுகளுடன் கூறியதில்,
“அதான் ஏன்னு கேட்குறேன்.” என்றாள் விடாமல்.
அதில் பொறுமை இழந்தவன், அவள் கையில் இருந்த தட்டைத் தூக்கி தட்டி விட்டு,
“ஏய் ஒரு தடவை சொன்னாப் புரியாதா உனக்கு? கிளிப்பிள்ளைக்கு சொல்ற மாதிரி படிச்சுப் படிச்சு சொல்றேன்… சொன்னதையே சொல்லிட்டு இருக்க. ச்சை அக்ரீமெண்ட்டை மீற மாட்டன்ற நம்பிக்கைல உன் கூட பழகுனேன்ல என்னைச் சொல்லணும். அப்படி உனக்குக் கல்யாணம் பண்ணனும், குடும்பம் நடத்தணும்ன்னா, ஊர்ல நிறைய பேர் இருக்கானுங்க. அவனுங்களோட கான்டராக்ட்ல லவ் பண்ணி, எண்ணமும் பண்ணிக்கோ. என்னை விட்டுத் தொலையேன்.
ஏற்கனவே உன் வீட்ல ஒரு ஹிஸ்டீரியா பேஷண்டை வச்சுட்டு நீ கஷ்டப்படுறது போதாதுன்னு, என்னையும் உன் தலைல சுமந்து தியாகியாகப் போறியா? அப்படி உனக்குத் தியாகிப் பட்டம் வாங்கணும்ன்னா, கை போனவன் கால் போனவன்னு எவனையாவது கல்யாணம் பண்ணி தியாகியாகு. என்னை ஆளை விடு. இல்லன்னா அட்லீஸ்ட் சாகவாவது விடு. நீ இப்படியே என்னை கார்னர் பண்ணுனா, ஆஸ்திரேலியா போறதுக்குள்ள பைத்தியமாகி தான் போவேன்… ஆஆஆ…” எனக் கண்டமேனிக்கு கத்தியவன், அவன் முடியை பிய்ப்பது போல அழுத்தமாக இழுத்தான்.
அவன் பேசியதெல்லாம் பொய்யென கூறி விட வேண்டும்… நடிப்பென கண் சிமிட்டிட வேண்டும் என பேராசை பரவியது அவளுக்கு.
ஆனால், அதெல்லாம் உண்மையாகிற்றே. உண்மையாகவே அவன் தன்னை வெறுத்து ஒதுக்குகிறான்! அவன் காயத்திற்கு மருந்திட வந்தவளை, குத்திக் கிழித்து ரணம் செய்து, இரத்தக்களரியாக்குகிறான்.
அவன் முத்தமிட்ட அதரங்கள் தீயாய் எரிந்தது. அழக்கூடாது என்ற பிடிவாதத்தை மீறியும் கன்னங்களை கண்ணீர் நனைக்க, அது அவன் கொடுத்த காயத்தின் பலன் எனப் புரிந்தது போல நெருப்பாய் சுட்டது.
அவனோ இன்னும் கத்தி முடித்தபாடில்லை. சிறிது சிறிதாய் மென்மையை இழக்கத் தொடங்கியவன், வெறிப்பிடித்தவன் போல அங்கும் இங்கும் அலைய, அது அதிகமாகும் முன்,
“வசி ரிலாக்ஸ்… ரிலாக்ஸ்…” என அவள் சமன்செய்ய, அவன் மீண்டும் கத்தும் முன் “நான் போயிடுறேன் நான் போயிடுறேன். உங்களை விட்டுப் போயிடுறேன். ரிலாக்ஸ். கல்யாணம் பண்ணிக்க சொல்ல மாட்டேன்.” என அவன் முதுகை நீவி விட்டு பேசிக்கொண்டே மெத்தயில் அமர வைத்தவள்,
“நீங்க ஆஸ்திரேலியா போனா கூட உங்களைத் தேடி வரமாட்டேன். கான்டராக்ட் படி எல்லாத்தையும் முடிச்சுக்கலாம்.” என்று பேசி பேசி அவனை மெல்ல இயல்புக்கு வர வைத்தாள்.
அதிசயமாக, அவனும் அடுத்த கட்டத்திற்கு செல்லாமல் இயல்பு நிலைக்குத் திரும்பி விட, அது இன்னுமாக பாவையின் மனதை ரணப்படுத்தியது.
விரக்தியாய் புன்னகைத்தவள், “நான் உங்களுக்கு எல்லாமா இருக்கணும்ன்னு நினைச்சேன். ஆனா, உங்ககூட இருந்து இந்த வியாதியை அதிகப்படுத்துறேன்னு மட்டும் எனக்குப் புரியுது. அதுவும் இப்ப நான் போனாலே உங்களுக்கு சரி ஆகிடும்ன்னு நல்லாப் புரிஞ்சுது.” என்றவளின் குரல் தேய்ந்தது.
“உங்களை மாதிரி சட்டுன்னு மனசை மாத்திக்க முடியல வம்சி. இன்னும் ஒரு வாரம் இருக்குல்ல ஆஸ்திரேலியா போக. அதுவரை உங்ககூட எப்பவும் போல காண்ட்ராக்ட் பேஸ்ல இருந்துக்குறேன். இல்ல அதுவும் வேணாம்ன்னா, மொத்தமா எல்லாத்தையும் … இதோட…” பேச முடியாமல் தொண்டை அடைத்தது அவளுக்கு.
“அதுக்காக, ‘எவன் கூடயோ போ’ ன்னு என் காதலை அசாசினேட் பண்ணாதீங்க. ஆஃப்டர் ஆல், உங்க தாத்தாவோட இரத்தம் தான உங்க உடம்புலயும் ஓடுது.” அவளது இறுதி வரியில் தலையைக் குனிந்து அமர்ந்திருந்த வம்சி கிருஷ்ணா, கையை இறுக்கி மூடிக்கொண்டான்.
அவளோ நடக்கக் கூட தெம்பில்லாதவள் போல, மெல்லிய தள்ளாட்டத்துடனே வெளியில் சென்று விட, அவள் சென்ற பின்னும் நிமிராமல் விழிகளைத் தரையில் புதைத்திருந்தவனின் கண்களில் இருந்து வழிந்த நீர் சொட்டுக்கள் நேராக நிலத்தை எட்டியது.
உணர்வற்ற முகத்துடன் மருத்துவமனை விட்டு வெளியில் வந்த கிருபாஷிணியை அப்போது தான் அங்கு வந்த சுபாஷ்வர் பார்த்து விட்டு, “என்னடா வம்சி எப்படி இருக்காரு.” எனக் கேட்க, “நான் வந்துட்டேன்ல நல்லா தான் இருப்பாரு.” என்றாள் எங்கோ வெறித்து.
அவள் பேச்சே சரியில்லாதது போல இருக்க, அவளை பார்க்கிங்கிற்கு அழைத்துச் சென்று மறைவாக நிற்க வைத்தவன், “என்ன ஆச்சு கிருபா?” எனக் கேட்க, அதற்கு மேல் முடியாமல் தமையனின் மீது சாய்ந்து ஓவென்று அழுதாள்.
தேம்பி தேம்பி அழுத தங்கையின் கண்ணீரைக் காண இயலாமல் தவித்தவன், “அழாதடா என்ன ஆச்சுன்னு சொல்லு” என்று பரிவாய் கேட்க, அவளிடம் பதில் இல்லை. அதற்கு பதில் கேவல் அதிகரித்தது.
வம்சிக்கும் கிருபாஷிணிக்கும் இடையில் நிகழ்ந்த உரையாடல் அனைத்தையும் ஒன்று விடாமல் கேட்டனர் ஷாந்தனுவும் தனுஜாவும்.
ஷாந்தனு கோபத்துடன் வம்சியின் முன் நின்று, “உனக்கு மண்டைல ஏதாவது இருக்காடா? ஏண்டா அவள்கிட்ட இப்படி பேசி வச்ச… அவளைக் கல்யாணம் பண்ணிக்கிறதுல உனக்கு என்ன தான்டா பிரச்சனை. உனக்குக் குறை இருக்குன்னு நீயா நினைச்சுக்குற. உன் குடும்பம் அப்படி உன்னை நினைக்க வச்சுருக்கு. ஆனா, இதெல்லாம் சரி செய்ற ப்ராப்ளம் தான்டா. எல்லாம் தெரிஞ்சும் உனக்காக நிக்கிற பொண்ணை ஹர்ட் பண்ண உனக்கு எப்படிடா மனசு வருது” என்று திட்டினான்.
நீர் திரண்ட விழிகளுடன் நண்பனை நிமிர்ந்து பார்த்தானே தவிர எதுவும் பேசவில்லை. அவனது கண்ணீர் கண்டு பெருமூச்சு விட்டவன், “உன்னைச் சின்ன வயசுல இருந்து எனக்குத் தெரியும் வம்சி. நீ எதுக்கு எப்படி ரியாக்ட் பண்ணுவன்றது எனக்கு அத்துப்படி. கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி ஹிஸ்டீரியா வந்த மாதிரி நடிச்சது எனக்குத் தெரியாதுன்னு நினைக்காத. அந்தப் பொண்ணை கஷ்டப்படுத்தி, அதனால நீயும் கஷ்டப்பட்டு… ஏன்டா.” என அவன் முடிக்கும் முன்னே, ஷாந்தனுவின் வயிற்றைக் கட்டிக்கொண்ட வம்சி கதறி அழுதான்.
ஆண்மகனின் கதறலைக் கேட்க இயலாதவனாக, “டேய் டேய் ஏன்டா இப்படி அழுகுற மச்சி ப்ளீஸ்டா அழுகாதடா…” என ஷாந்தனு கலங்கித் தேற்ற, அவனோ அழுகையை நிறுத்தியபாடில்லை.
உரக்கக் கத்தி அழுதவன், “என்னைப் பெத்தவங்களே என்னைப் பாரமா தான்டா நினைச்சுட்டு இருக்காங்க இப்போ வரை. இவளும் இந்த பாரத்தை வாழ்க்கை முழுக்க சுமக்கணுமா… என் தேவதைடா அவள். அவளை அவளை நான் பாத்துருக்கவே கூடாது மச்சி. நான் தான் விளங்காதவன், எனக்கு தான் வாழ்க்கைல எதுவும் நல்லதா நடக்காது. நான் தான் ராசிகெட்டவன்… எல்லாம் தெரிஞ்சும் அவள் பக்கம் நான் போயிருக்கவே கூடாது.” என அவன் தலையில் அவனே படபடவென அடித்துக்கொள்ள,
“ஐயோ டேய் இப்படிலாம் பண்ணாதடா” என்று பதறி தடுத்தான் ஷாந்தனு.
“அவள்கிட்ட இருந்து சுயநலமா காதலை அனுபவிச்சிட்டு, அவளுக்கு அதை கொடுக்காம ஹர்ட் பண்றேன் மச்சி. என்னால குடுக்க முடியாதுடா. அவள் பக்கத்துல வந்தாலே எங்க என்னை மீறி அவளை காயப்படுத்திடுவேனோன்னு பயமா இருக்குடா. ராத்திரி தூங்கும் போதெல்லாம், எங்கயாவது நடந்து போய்ட்டா, அவள் என்னை எங்கன்னு போய் தேடுவா. ஒரு நாள் ரெண்டு நாள் தாங்குவா. வாழ்க்கை முழுக்க… என் கண்ட்ரோலை இழந்து நான் பைத்தியக்காரன் மாதிரி நடந்துக்குறதை எத்தனை நாள் அவளால பொறுக்க முடியும்.
ரொம்பப் பயமா இருக்கு ஷானு. அவள் மேல எனக்கு இருக்குற காதலை நினைச்சு எனக்குப் பயமா இருக்கு. அவள் என் மேல இன்னும் வச்சுருக்குற காதலைப் பார்த்து செத்துடனும் போல இருக்குடா.” என்று அவன் சட்டையைப் பிடித்து அரற்றியவனை செய்வதறியாமல் பார்த்தான்.
“நான் பிறக்கும் போதே கொன்னுருக்கலாம்ல… இதே வியாதியோட போராடி, மனசுக்குப் பிடிச்சவளை வார்த்தையால குத்திக் கிழிச்சுருக்க வேண்டிய அவசியம் இருக்காதுல.” என்றவனது அழுகை ஓய்ந்தபாடில்லை.
கண்ணில் நீர் வழிய, “மச்சி… நீ அவளை ஹர்ட் பண்ண மாட்டடா. உனக்கு ஒரு பிரச்சனையும் இல்லன்னு நீ நம்புடா…” என்று ஷாந்தனு அவனை சமன்படுத்த முயல,
அவனோ பயந்து விலகி கட்டிலில் ஒரு மூலையில் காலைக் குறுக்கி அமர்ந்து, மிரட்சியுடன்
“இல்ல இல்லடா… மெண்டல் இஸ்யூ எல்லாம் நிரந்தரமா சரி ஆகாதுன்னு எத்தனை பேர் சொல்லிருக்காங்க தெரியுமா… நீ… நீ பேப்பர்ல நியூஸ் பார்த்து இருக்கியா… ஒருத்தன்… ஒருத்தன், மனநிலை சரி இல்லாதவனுக்கு கல்யாணம் ஆனா சரி ஆகிடும்ன்னு கல்யாணம் பண்ணி வச்சுருக்காங்க. அவன்… அவன் கட்டுன பொண்டாட்டில இருந்து குடும்பத்துல இருக்குற எல்லாரையும் நைட்டோட நைட்டா கொன்னுட்டான். அதே மாதிரி… அதே மாதிரி… நா… நானும்… ஐயோ” என முகத்தை மூடிகொண்டவன்,
“என் பாஷிணி… இல்ல… இல்ல… நான் போய்ட்டா கொஞ்ச நாள்ல என்னை மறந்துடுவா. மறந்துடுவா… மறந்துடுவா… என் சுயநலத்துக்காக அவள் மனசைக் கெடுத்தது போதும் அவள் வாழ்க்கையையும் கெடுக்க வேணாம்.” என மூச்சு வாங்கி மிரண்டு பேசிய தோற்றம் ஷாந்தனுவை வெகுவாய் கூறு போட்டது.
தமையனால் வம்படியாக அங்கு இழுத்து வரப்பட்ட, கிருபாஷிணியும் ஆடவனின் பேச்சைக் கேட்டு மலைத்து நின்றாள்.