வீட்டை நோக்கி கார் போக, சௌந்தருக்கு ஒரு ஃபோன் வந்தது.
திரையில் யார் என நோக்கிட, சம்பத் தான் அழைத்திருந்தான்.
“ஹலோ!”
“சௌந்தர்! அப்பா எப்டி இருக்காங்க.?”
“இப்ப ஓகேடா! நார்மல் வார்டுக்கு மாத்தியாச்சு, நான் சாப்புட்டு ரெண்டு மணிக்கு வந்துடுறேன்”
“சௌந்தர் ஒரு முக்கியமான விசயம், நீ எங்க இருக்க.?”
“ஹாஸ்பிடல இருந்து நானும் மீராவும் வீட்டுக்குப் போறோம், சொல்லுடா…”
“நம்ம மெயின் ஆஃபிஸ்ல ஃபயர் ஆச்சுடா…”
“என்னடா சொல்ற.?” எனக் காரினை ஓரம் கட்டினான்.
“ஆமா! நீ உடனே வா…”
“எப்படிடா.?”
“தெரியல! எதும் எலக்ட்ரிகல் ப்ராப்ளமா இருக்கும் போல… ஃபயர் ஆரம்பிச்சதும் ஆளுங்களை எமெஜெர்ன்ஸியில் எப்டியோ காப்பாத்தியாச்சு, ஆனா டாக்குமென்ட்ஸ்… இனிமே தான் பாக்கனும், நீ வா… சுந்தர் கிட்ட இன்னும் சொல்லல…”
“ஓகே! நான் சொல்லிக்கிறேன், அப்பாக்கு தெரிய வேணாம்…” என ஃபோனை வைத்தான்.
அவனோட பதறலில் புரியாத மீரா, “என்னங்க ஆச்சு.?” எனக் கேட்டாள்.
“மீரா…” என நடந்ததைக் கூறியவன், “நீ அம்மா, அப்பா கிட்ட எதுவும் சொல்லிடாத, நான் உடனே போகனும், நீ…” என இழுத்தவன்,
“உன் மாமாக்கு கூப்புடு, போற வழியில நான் இறக்கிவிட்டுப் போறேன், நீ அம்மா வீட்டுக்குப் போ, நான் வந்து கூப்புட்டுகிறேன்.” எனக் கூறிவிட்டு வேகமாக காரை ஸ்டார்ட் செய்தான்.
மீராவும் அசோக்விற்கு அழைத்துவிட்டு, ஒரு லேண்ட்மார்கில் இறங்கிக் கொண்டாள்.
“போயிட்டு என்ன ஆச்சுனு ஃபோன் பண்ணுங்க” எனக் கூறியது கூட காதில் வாங்கும் முன் சௌந்தர் காரை கிளப்பி விட்டான்.
மாலை ஆகிட, சௌந்தர் ஃபோன் செய்தான்.
“மீரா! நீ ஹாஸ்பிடல் போய் அப்பாவ பாத்துட்டு, விசயத்தை அம்மா கிட்ட தெளிவா சொல்லிட்டு வா, அப்பாக்கு தெரிய வேணாம். நானும், சுந்தரும் இங்க தான் இருக்கோம்.
நாங்க வர லேட் ஆகும், அம்மா சமாளிச்சுப்பாங்க, உன் அம்மா வீட்டுக்கே ரிட்டன் போயிடு, நான் எப்ப வருவேனு தெரியாது” எனக் கூறி வைத்துவிட்டான்.
மீராவும், சேராவும் காரில் ட்ரைவருடன் கிளம்பினர்.
அசோக், வீரனாரும் சௌந்தரை நேரில் சந்திப்பதற்காக முன்பே சென்று விட்டனர்.
தீ விபத்து பற்றி டிவி நியூஸில் எல்லாம் செய்தியாகியது.
உயிர்சேதம் இல்லை, ஆனால் சிலர் காயம் அடைந்திருந்தார்கள்.
அவர்களை மருத்துவமனையில் சேர்த்து, போலிஸ் விசாரணை என சௌந்தர், சுந்தருக்கு நேரமே போதவில்லை.
குறிப்பிட்ட நேரத்திற்கு சௌந்தர், சுந்தர் மொபைல் யூஸ் பண்ண தடை விதிக்கப்பட்டது.
இது தற்செயலாக நடந்ததா இல்லை வேண்டுமென்றே நடத்தப்பட்டதா என எல்லா கோணத்திலும் விசாரித்தார்கள்.
சிலர் சொந்த வியாபார இடத்தையே இது போல் ஃபயர் செய்து, இன்ஸ்ஷூரென்ஸ் க்ளைம் பண்ணுவார்கள், முக்கிய பேப்பர்ஸை எல்லாம் பத்திரப்படுத்திவிட்டு நாடகம் ஆடும் கும்பலும் இருக்கிறார்கள். ஆதலால் போலிஸ் முறையான விசாரணையை மேற்கொண்டனர்.
ஆனாலும் வீரனார், விருமாவின் கட்சி ஆளுங்கட்சி என்பதால் போலிஸிற்கு ப்ரஷரும் இருந்தது. சௌந்தர் இது எங்களின் சொந்தப் பிரச்சனை என்று கூறினாலும் வீரனார் சென்று மருமகனை காப்பாற்றுவதாக எண்ணி மேலும் சிக்கலாக கோர்த்துவிட்டார்.
சௌந்தருக்கு தலைவலியாக மாறிய மாமனாரை பொது இடத்தில் சமாளிக்க தடுமாறினான்.
சிசிடிவி காட்சிகள் கூட எடுப்பதற்கு சிரமம் ஆகியிருந்தது.
வீரனாரை வைத்துக் கொண்டு சிரமமாக இருக்க, அதை புரிந்துக் கொண்ட அசோக் மாமாவை சமாளித்து வீட்டிற்கு அனுப்பி வைத்தான்.
வயதும், போதுமான பொறுமையும் இல்லாததால் வீரனார் போலிஸிடம் மருமகனுக்காக துள்ளினார்.
நல்லவேளை விருமா மருத்துவமனையில் இருந்தமையால் யாரையும் பார்க்க அனுமதி இல்லை, இதை சௌந்தர் டாக்டரிடம் சொல்லி வைத்திருக்க, அவரும் விருமா அறையை மட்டும் பிரைவேசி ஆக்கினார். டிவி, ஃபோன் எதுவும் பயன்படுத்தாதவாறு…
பிரேமா, நர்ஸ் மட்டுமே சென்றனர்…
சௌந்தர்யாவிற்கு சுந்தர் மூலம் பெற்றோர்களுக்கு எதுவும் சொல்லக் கூடாது என சௌந்தர் கூறியிருக்க, அவளும் வாய் திறக்கவில்லை.
விருமா, பிரேமா எதுவுமே அறியாமல் அவர்களின் உலகத்தில் தனித்திருந்தனர்.
அசோக் பெரிதும் உதவியாக சௌந்தருக்கு மாறியிருக்க, அவனும் ‘அண்ணா’ என உரிமையாக அழைத்துப் பேச தொடங்கினான்.
சபரி, சுந்தர் கூட நின்றான், அவனை சௌந்தர் கண்டுக்கொள்ளவில்லை.
“கண்ணு! மதியத்துல இருந்து பெரியவன், சின்னவனை காணும்… முக்கிய வேலையா என்ன.?” எனக் கேட்டார் பிரேமா.
“அப்டி தான் சொன்னாங்கம்மா, ஏதோ மீட்டிங்னு… நைட் லேட் ஆகுமாம்” எனப் பொதுவாக கூறினாள்.
“என்னம்மா மீட்டிங், என் கிட்ட எதுவும் சொல்லல…” எனக் கேட்டார் விருமா.
“நெஞ்சுவலி வந்துப் படுத்து கிடக்குறவரு கிட்ட இப்ப ஏன் சொல்லனும் நெனச்சி இருப்பானுங்க… நீங்கப் பேசாம ஓய்வு எடுங்க, புள்ளைங்க பாத்துப்பாங்க” என்றார் பிரேமா.
மீராவும், சௌந்தர்யாவும் மனம் நிம்மதியாக மூச்சுவிட்டனர்.
சிறிது நேரம் பேசிவிட்டு, மீரா பிரேமாவை தனியாக அழைத்தாள்.
சௌந்தர்யாவிற்கு அது புரிய, “நீங்கப் போங்கம்மா, அப்பா கூட நான் இருக்கேன்” என்றாள்.
“அப்டி என்ன மாமியார், மருமகள் ரகசியம்.?” எனக் கேட்டார் விருமா.
“இல்ல மாமா, வீட்டுல சில பொருட்கள் எங்க இருக்குனு தெரியல அதான்…”
“ம்ம்ம்! ஆமா, ஆமா உன் மாமியார் வைக்கிறத அவ மட்டும் தான் எடுக்க முடியும்… நல்லா விசாரிச்சுட்டு போம்மா.” என நக்கல் அடித்தார்.
மீரா வெளியில் அழைத்து வந்து விசயத்தை மெதுவாக கூறிட, முதலில் அதிர்ச்சியடைந்தவர், “அய்யோ! கண்ணு, இப்பனு பாத்து இவரு படுத்துட்டாரே, புள்ளைங்க தனியா நிக்கிறாங்களே!” எனப் புலம்பினார்.
“எல்லாரும் கூடப் போய் இருக்காங்கம்மா, அப்பா, மாமா, அட்சு அப்பா, சம்பத் அண்ணா எல்லாருமே இவருக்கும், சுந்தருக்கும் துணையா இருக்காங்க. நீங்க கவலப்படாம மாமாவை மட்டும் சமாளிங்க, அவங்க வரவைக்கும் நம்ம தான் மேனெஜ் பண்ணனும்…”
“என்னமோ சொல்ற, பாத்துக்கிறேன் நீ அப்பப்ப எனக்கு ஃபோன் பண்ணிடுமா… ஆமா! நீ எப்டி வீட்டுல தனியா இருப்ப.?”
“நான் அம்மா வீட்டுல தான் இருக்கேன். அதான் தம்பிக் கூட வந்தேன்மா, அது மாமாவுக்காக சொன்னது தம்பி பாக்கனும்னு சொன்னானு… அவரு வரும் போது என்னைய கூப்புட்டுப் போறேனு சொன்னாரு”
“அப்ப சரி, நீ நேரத்துலயே போடா, நான் பாத்துக்கிறேன்… சௌந்தர் வந்ததும் காலையில வரச்சொல்லு…”
“ம்ம்ம்!”
“ஆத்தா மங்கம்மா! என் குடும்பத்துக்கு வரிசையா பிரச்சனைய குடுத்துட்டு வர, எம் புருசன காப்பாத்தின மாதிரி எம் புள்ளைங்களையும் எந்தப் பிரச்சனையிலும் சிக்காம காப்பாத்தி விடு, குடும்பமா வந்து என் வீட்டு ஆம்பளைங்க எல்லாருக்கும் உன் இடத்துல தலையில மொட்டை முடி இறக்கி, பொங்கல் வச்சு படையல் போடுறேன்.” என வேண்டிக் கொண்டார்.
அந்த ரணகளத்திலும் மீராவிற்கு ‘பக்’ எனச் சிரிப்பு வந்தது.
எல்லா ஆம்பளைங்களுக்கும் மொட்டைப் போடுவதாக வேண்டிய மாமியாரையே பார்த்து, கற்பனையில் மூன்று மொட்டைத் தலைகளை யோசித்தாள். கூடவே ஒரு சந்தேகம் வர சபரியும் அந்த லிஸ்டில் சேர்ந்தாள்.
*
இரவுப்பொழுது ஆகிட, சௌந்தர் ஃபோன் மீராவிற்கு வரவே இல்லை.
வீரனார் மட்டும் வந்திட அவரிடம் விசாரித்ததில் பயந்த மீராவை தேற்றினாள் ஜனனி.
ஜனனி, கணவனிடம் பேசியதால் மீராவிற்கு உண்மை நிலவரத்தைக் கூறி ஆறுதல் கூறினாள்.
இரவு எப்பொழுது தூங்கினாள் என்றே தெரியவில்லை, விடிந்ததும் அவசரமாக சௌந்தர் எண்ணிற்கு அழைத்தாள்.
அவனும் ஃபோனை எடுத்து, “மீரா! லேட் நைட் தான் வந்தேன், இப்ப கிளம்பிடுவேன். போகும் போது அப்பாவ பாத்துட்டுப்போறேன்… நீ காலேஜ் போ நான் வந்து பிக் பண்ணிக்கிறேன்” என்றான்.
“மொதல அங்க என்ன ஆச்சு, எதும் பிரச்சனை இல்லையே” எனக் கேட்டாள்.
“ஓகே தான்! இன்வெஸ்டிகேசன் போகுது, இன்னைக்கும் கொஞ்சம் டீடெயில்ஸ் குடுக்கனும், அநேகமாக போலிஸோட வேலை ஸ்பாட்ல இன்னைக்கு க்ளியர் ஆகிடும், அடுத்து கூப்புடுறப்ப போனா போதும்.”
“ஃபயர் எப்டி நடந்துச்சுங்க.?”
“சிசிடிவி இன்னைக்கு ரெக்வெர் ஆகிடும், ஆளுங்க கிட்ட விசாரித்துல இது எதிர்பாராம நடந்த ஃபயர் மாதிரி தான் இருக்கு… யாரு உயிருக்கும் ஆபத்து இல்ல, அது பிரேக் டைம் அதனால பெரும்பாலும் யாரும் சீட்ல இல்ல…”
“சரிங்க சாப்புட்டீங்களா.?”
“ம்ம்ம்!”
“உண்மையா.?”
“அடியேய்! வேணுனா உன் மாமா கிட்ட கேளு… அவரும் அட்சு அப்பாவும் தான் வாங்கி வந்தாங்க, எனக்கும் சுந்தருக்கும்”
“ஓ! அப்பனா சரி…”
“நீ சாப்புட்டீயா.?”
“ம்ம்ம்!”
“சரி! நான் கிளம்புறேன், லேட் ஆச்சு… நீ பயுப்புடாத, அம்மா கிட்ட நைட் பேசிட்டேன். நீ சொன்னதா சொன்னாங்க.”
“ஆமாங்க!” என அந்த வேண்டுதல் நினைவு வர, முக்கிய விசயமாக அதை அவனிடம் நக்கலாக கூறினாள்.
“உனக்கு இதுல ரொம்ப சந்தோஷம் மாதிரி தெரியுது.”
“ச்சே! ச்சே! கொஞ்சமே கொஞ்சம்” எனச் சிரித்தாள்.
“முட்டகோஸ்! பாத்து அடுத்த வேண்டுதலில் அம்மா உனக்கும் சேத்து பூஜைப் போட்டுற போறாங்க…”
“ம்ம்ம்! லேடிஸ்க்கு எல்லாம் அப்டி வேண்ட மாட்டாங்க, போங்க…”
மாலை வேளை கல்லூரி முடித்து மீரா காத்திருக்க, வீரனார் அழைக்க வந்தார்.
“என்னப்பா நீங்க வந்து இருக்கீங்க.?”
“அது மாப்புள்ள வர முடியலனு அசோக் ஃபோன் பண்ணான், நீ வாம்மா வந்து ஏறு!”
மீரா காரில் ஏறிட, மனதில் சௌந்தர் நினைவாகவே இருந்தது.
‘எதும் பிரச்சனையோ.?’ எனப் பயந்தாள். வீரனார் ஏததோ பேசிக் கொண்டு வந்தார், “முக்கியமான ஃபைல் எல்லாம் யாராச்சும் ஆஃபிசில் வெப்பாங்களா.? ஒரு சேஃப்டிக்கு எல்லாம் பாதுகாப்பாக இருக்க வேண்டாமா.?” என அவர் மருமகனையும், விருமாவையும் திட்டிக் கொண்டே வந்தார்.
ஒரு கட்டதிற்கு மேல் பொறுக்க முடியாதவள்,
“அப்பா! போதும் விடுங்க, இப்டி ஆகப் போதுனு யாருக்குத் தெரியும்? எல்லா நேரமும் சேஃப்டியா இருக்க முடியுமா… நீங்கக் கூட தான் அக்கா விசயத்துல சேஃப்டியா அனுப்புனீங்க, ஆனா அவ உங்கள ஏமாத்திட்டுப் போகல… நீங்க தெரிஞ்ச விசயத்துக்கே சேஃப்டியா இருக்க முடியல, தெரியாத விசயத்துக்கு எப்டி சேஃப்டியா இருக்க முடியும்…”
“அது இல்லம்மா…” என இழுத்தார்.
“போதும்பா! இனி இப்டி என் வீட்டைப் பத்தி பேசுறதை நிறுத்துங்க, உங்களுக்கு முடிஞ்சா ஹெல்ப் பண்ணுங்க இல்லைனா சைலண்டா வேடிக்கைப் பாத்துட்டுப் போங்க. இது என்ன கூடவே நின்னுட்டு கமெண்ட்ரி குடுத்துட்டே இருக்குறது, தப்புப்பா… காலையில மாமா எல்லாத்தையும் சொன்னாங்க, நேத்து நீங்க பண்ணது சரியில்ல.
அவங்களே இழப்பு நெனச்சி சோகத்துல இருந்தா நீங்கப் போய் தேவையில்லாம பேசி அதிகப்படுத்திட்டு வந்து இருக்கீங்க, அதே மாதிரி தான் ஹாஸ்பிடல மாமா கிட்டவும் பேசுனீங்க. அவங்க பொண்ண சேத்துகிட்டாங்க உங்களுக்கு என்ன.? என் மாமனாருக்கு புடிக்காதவங்கள பத்தி நீங்க எதுக்குப் பேசுறீங்க.?
ஓரளவுதான்பா பொறுமை, சும்மா எல்லா நேரமும் ஏதாச்சும் சொல்லிட்டே இருந்தா எனக்கே இரிரேட் ஆகுது, என் புகுந்த வீட்டு விசயத்துல நீங்க மூக்கு நுழைக்காதீங்க, என்னைய பாக்க வரீங்களா, நானும் என் புருசனும் வரோமா அதோட உங்கப் பாசத்தையும், உரிமையும் வச்சுகோங்க…
நேத்துப் போனீங்களா ஆறுதல் சொன்னீங்களானு வந்து இருக்கனும், இல்லையா உதவியா நின்னு பேசியிருக்கனும், அத விட்டுட்டு உபத்திரவம் குடுத்தா யாரா இருந்தாலும் கோபம் வரும்…” என வேகமாக மூச்சு விடாமல் பேசி முடித்தாள்.
“என்னடா கடைசியில அப்பா மேல தப்பு சொல்ற…”
“உங்க மேல தப்புச் சொல்லலப்பா, எங்க எப்டி பேசனும் தெரிஞ்சுப் பேசுங்கனு சொல்றேன்பா… என் மாமியார் தங்கமானவங்க அதனால தான் என்னைய பாசமா வச்சு இருக்காங்க, இல்லைனா நீங்க ஒவ்வொரு தடவைப் பேசுறதுக்கும் அவங்க என்னைய தான் பழிவாங்குவாங்க. அதுப் புரியுதாப்பா.?”
“சரிம்மா! இனி உன் வீட்டு விசயத்துல நான் தலையிடல, நீ கூப்புட்டா வரேன் இல்லைனா நான் பாட்டுக்கும் இருக்கேன்.”
“அப்பா! கோச்சுகாதீங்க ப்ளீஸ், என் மேல பாசம் இல்லாமயா அங்க வரீங்க, அது எனக்குப் புரியுது. ஆனா நீங்கப் பேசுற விதம் சரியில்லப்பா, என் புகுந்த வீடு ஒன்னும் உங்க கட்சி மீட்டிங்கோ, மாநாடு குழுவோ, அரசியல் கட்சிகாரர்களோ இருக்கும் இடம் இடமில்ல…”
“சரிடா! நீ இவ்ளோ தூரம் சொல்ற, இனிமே உன்னைய கேக்காம எதுவும் பேச மாட்டேன்… நீ கவலப்படாத இந்த அப்பானால உனக்குப் பிரச்சனை வராது.”
“தேங்ஸ்பா!” எனத் தந்தையின் தோளில் சாய்ந்து ஆறுதல் தேடினாள்.
மனதில் சௌந்தர் மட்டுமே தேடுதலாக இருந்தான்.
அன்று இரவும் மீரா அம்மா வீட்டிலே தங்கினாள்.
காலையிலே சௌந்தர் வந்துப் பார்த்து சென்றதால் விருமாவிற்கு எதுவும் தெரியவில்லை.
பிரேமா மீராவை அலைய வேண்டாம் என வீட்டிலே இருக்க கூறினார்.
அடுத்த நாள் மீராவிற்கு விடுமுறை…
சௌந்தர் இரவில் மீராவிற்கு மெசேஜ் செய்து ஓரளவு பிரச்சனை முடிந்தாகிட்டு, நாளை அழைக்க வருவதாக கூறினான். நேரம் கழித்தே வந்ததால் மெசேஜ் போட்டுவிட்டு தூங்கிவிட்டான்.
காலையில் மீராவை எழுப்பியது பிரேமாவின் ஃபோன் தான்.
“சொல்லுங்கம்மா! மாமா எப்டி இருக்கார்.?”
“நல்லா இருக்காருடா!”
“சரிம்மா!”
“நேத்து அம்மா சாப்பாடு குடுத்து விட்டாங்க, இன்னைக்கு பாப்பாக்கு லீவ் தானே கொண்டு வரேனு சொன்னுச்சு…”
“பரவாயில்லமா! நானும் லேட்டா அவரோட வரேன்…”
“அதுக்கு தான் கூப்புட்டேன் கண்ணு! இன்னைக்கு நம்ம கிராமத்துல இருந்து கோயில் திருவிழா பத்தரிக்கை கொண்டு வராங்க, மாமாவுக்கு சில மரியாதைச் செய்வாங்க. அது நம்ம குலதெய்வம் மங்கம்மா கோயில்…
இப்ப மாமா இங்க இருப்பது அவங்களுக்கு தெரிய வேணாம், பெரிய தம்பியும், நீயும் சேந்து வாங்கி சாமி ரூமுல வைங்க, வரவங்களுக்கு டீ போட்டுக் குடுடா…”
“சரிம்மா!”
“கண்ணு! குளிக்குற நேரமா என்ன.? அப்டினா பத்தரிகையை நீ வாங்க வேணாம்… தம்பி மட்டும் வாங்கி வைக்கட்டும்…”