மறுநாள் விடிந்ததும் விடியாததுமாக யாழினியைப் பார்க்க அழைத்துச் சென்றான்.
அவன் எதிர்பார்த்தது போல் அல்லாது படுக்கையில் அடிபடாத தன் ஒற்றைக் காலை மடக்கி அதில் தலை சாய்த்து விழித்திருந்தாள் யாழினி.
ஒரே நேரத்தில் வெற்றியும் நந்தனும்…
யாழினி… எனவும்
மது … எனவும் அழைத்தபடி உள்ளே நுழைய…
சட்டென்று இருவரும் ஒருவரையொருவர் அதிர்ந்து பார்த்தபடி நின்று விட்டிருந்தனர்.
கண்முழித்து அமர்ந்திருந்த யாழினியைப் பார்த்த மாத்திரத்தில் அவசரப்பட்டு அழைத்திருந்த வெற்றி,
“யாழினி மதுரம் தானே அவங்க முழுப்பெயர்…?! விசாரணைல அதான் இருக்கு” சிரித்து சமாளித்தான்.
இவ்வளவு நாட்கள் பேசியும் அவளது முழுப்பெயரைக் கூட தெரிந்து கொள்ளாததை நினைத்து வெட்கப்பட்ட நந்தன், “மது…” என்றழைத்தபடி அவளருகில் செல்ல…
ஆவேசமாய், “என்னை மதுன்னு கூப்பிடாதீங்க…” என்றவளில் இருவருமே அதிர்ந்து நின்று விட்டிருந்தனர்.
மது என்றழைத்ததும் பாண்டியின் நினைவு தந்த கசப்பில் பாவையவள் கொதித்தெழ… நந்தனோ ‘இவளுக்கு என்னாச்சி’ என புரியாது முழிக்க,
‘இதுக்கு நான் அந்த ட்ரைன் அக்சிடெண்ட்லயே போய் சேர்ந்திருக்கலாம்…” என்று அதிர்ந்து நெஞ்சில் கை வைத்திருந்தான் வெற்றி.
வெற்றி நினைத்ததுக்கு மாறாக முதல் பாலையே சிக்சருக்கு அடித்துப் பறக்கவிட்டிருந்த யாழினியைக் கண்டவன்,
‘இன்னும் இவ என்னென்ன பண்ணப் போறாளோ! என்று நொந்து கொண்டவன் யாழினி தூங்குவதாக தகவல் தந்த காவலரை வறுத்தெடுத்துக் கொண்டிருந்தான்.
‘இதுநாள் வரைக்கும் மதுன்னுதானே கூப்பிட்டுட்டு இருக்கேன் மண்டையில கிண்டைல அடிபட்ருச்சோ…’ என்ற நந்தன் ஆராய்சியாய் மது அருகில் நெருங்க…
“படே டாக்டர் செக் கர்னே ஆதே ஹை..சப் பாஹர் ஆ ஜாவோ ப்ளீஸ்” என்று உள்ளே வந்த செவிலியர் பெண் இருவரையும் வெளியேற்றினார்.
‘அம்மாடி யார் பெத்த புள்ளையோ நீ நல்லாருக்கணும்’ என்று நினைத்த வெற்றி செவிலியர் பெண் சொன்னது புரியாமல் முழித்துக் கொண்டிருந்த நந்தனிடம்,
“டாக்டர் செக் பண்ண வராங்களாம் வாங்க வெளில போய் இருப்போம்” என்று அழைத்துச் சென்று விட்டான்.
நந்தனின் தோளில் கைப்போட்டு அணைத்துக் கொண்ட வெற்றி “நேற்று நான் கேட்டது ஞாபகமிருக்குல்ல நந்தன்” என்றான்.
“யா ஸ்யூர்…” என்ற நந்தனிடம்,
“மதுமிக்… சாரி மதுகூட வந்தவங்களோட பாடி ஃபார்மாலிட்டீஸ் எல்லாம் முடிச்சி தயாரா இருக்கு. நீங்க கொஞ்சம் அந்த ஒர்க் முடிச்சிட்டு வந்துடுறீங்களா ப்ளீஸ்…
எனக்கு சின்ன வேலை ஒன்னு இருக்கு முடிச்சிட்டு வந்து ஜாய்ன் பண்ணிக்கிறேன்“
“பட் எனக்கு இந்த ஊர்ல யாரு எங்க போகணும் எதுவுமே தெரியாதே”
“டோண்ட் ஒர்ரி நந்தன் இங்க எல்லா ஏற்பாடும் உங்க கூட வர கான்ஸ்டபில்ஸ் பார்த்துப்பாங்க…
நீங்க ஜஸ்ட் அங்க எல்லாம் கூட நின்னு செஞ்சிட்டா போதும் அஸ் பர் ரெக்கார்ட் உறவினர்கிட்ட ஒப்படைச்சிட்டதா எங்களுக்கு ஒரு வேலை முடிஞ்சிடும்” கொஞ்சமும் சந்தேகம் வராததுபோல் பேசிச் சமாளித்தான்.
“ஓகே ஸார் மதுகிட்ட ஒருவார்த்தை சொல்லிட்டு போயிடுறேன்…” என்ற நந்தன் மீண்டும் உள்ளே செல்ல…
‘உன்னை துரத்துறதே அவகிட்ட பேசக்கூடாதுன்னு தானேடா’ என்று நினைத்ததை வெளியில் காட்டாமல் “யா ஸ்யூர்” என்று சிரித்து வைத்தான்.
‘கிழிஞ்சிது… இப்ப என்ன பண்ண போறாளோ!’ என்று மலைத்தவன் ‘இப்படி என்னைய இவகிட்ட கோர்த்து விட்டியே மதும்மா…’ என்று புலம்பியபடி நந்தனை தனியே அனுப்ப பயந்து தானும் நந்தனுடன் நுழைந்து கொண்டான்.
“நான் இராஜம்மாவ பார்க்கப் போகணும்” என்று அழ ஆரம்பிக்க…
‘சுத்தம்… இப்ப இவன் என்ன கேள்வி கேட்பான்னு தெரியலையே’ என்று நந்தனை ஏறிட…
(யாழினி)மது தன்னை கண்டுகொள்ளாததே நந்தனுக்கு பேரதிர்ச்சியாய் இருக்க அவனும் அதே கேள்விக்குறியுடன்தான் மதுவை பார்த்துக் கொண்டிருந்தான்.
“யாருடா இராஜம்மா” என்ற நந்தனிடம்,
“அவங்க கூட வந்தவங்களா இருக்கும்” யாழினியை முந்திக்கொண்டு பதில் சொன்ன வெற்றி
அவள் அடிபட்டிருந்த காலை காண்பித்து, “நீ இந்த நிலைமையில எங்கயும் போக முடியாதும்மா புரிஞ்சிக்கோ” என்று வாஞ்சையுடன் சொல்ல…
வெற்றியின் கைகளைப் பற்றிக் கொண்டவள், “ஏன் இப்படி எனக்கு மட்டும்… என் மது… க்க?” என்ற வார்த்தையை முடிக்கும் முன்
“அழக்கூடாது சொல்லிருக்கேன்ல” என்று வெற்றி போட்ட அதட்டலில் பயந்து பாதியில் வாயை மூடிக்கொண்டாள்.
‘மதுவிற்கு தன்னை அடையாளம் தெரியவில்லையா! என்று குழப்பத்திலிருந்த நந்தன் வெற்றி தன்னவளை அதட்டவும் கோபம் கொண்டு முறைக்க மேற்கொண்டு செயலாற்ற விடாமல் வெற்றி அணிந்திருந்த சீருடை தடுத்தது.
‘இப்படி மாற்றி மாற்றி யாரைக் கேட்கிறாள்’ அதுவும் தான் அருகில் இருக்கும்போது இன்னொருவனின் கையை பிடித்துக் கொண்டு கதறுபவளை புரிந்துகொள்ள முடியாமல் தவித்தான் நந்தன்.
மதுமிகா அழுவதைப் பார்த்து அருகில் வந்த செவிலிப்பெண், “கான்ஷியஸ் வந்ததிலிருந்து இப்படிதான் சார், இராஜம்மா மது பாண்டி வெற்றின்னு என்னென்னவோ சொல்லி புலம்பிட்டு இருக்காங்க” என்று ஆங்கிலத்தில் சொல்ல…
மறுபடியும் செவிலியர் காப்பாற்றி விட்டதில் நிம்மதிப் பெருமூச்சுவிட்ட வெற்றியோ “ரொம்ப டிப்ரஷன்ல இருக்காங்கன்னு நினைக்கிறேன்” என்று நந்தனை சமாளித்து வெளியில் அழைத்து வந்தான்.
இருகாவலர்களை அழைத்து அவர்களுடன் நந்தனை மதுவின் இறுதி காரியத்திற்கென அனுப்பி வைத்த வெற்றி, யாழினியிடம் பேசாமல் முடியாதென மீண்டும் யாழினியின் அறைக்குள் நுழைந்தவன்,
“யாழினி…” என்று மெதுவாக அழைக்க… நிமிர்ந்தவளின் கண்கள் குளம் கட்டி இருந்தது.
“மதுக்காவ நான் பார்க்க முடியுமா…ப்ளீஸ்” என்று கையெடுத்துக் கும்பிட்டு கெஞ்சியவளை ஒன்றும் செய்ய இயலாதவனாக பார்த்த வெற்றி இல்லையென மறுத்து தலையாட்டினான்.
“இராஜம்மா…” என்றவள் நிறுத்த,
“அழைச்சிட்டுப் போறேன் யாழிம்மா! ஆனா அதுக்கு முன்னாடி நான் உன்கிட்ட கொஞ்சம் பேசணும்” என்றான்.
அவள் எதுவும் பேசாமல் அமைதியாக விசும்ப…
“மதுவோட இறுதிகாரியம் பண்ணத்தான் நந்தன் போயிருக்கார். அவருக்கு மதுமிகா யாருன்னு தெரியாது உன் கூட வந்தவங்கன்னு சொல்லி வச்சிருக்கேன்…” என்று நிறுத்தினான்.
அதிர்ந்து நிமிர்ந்து பார்த்தவள், “ஏன் இப்படி பண்ணீங்க… மதுக்கா பாவம்” என்று குழந்தையாய் அரற்ற…
“உன் மதுக்காவோட விருப்பமும் அதுதான் மறந்துட்டியா” என்று அவள் விரல்களில் கிடந்த மோதிரத்தைக் காட்டினான்.
“இல்ல… இல்ல… அது மதுக்கா ஏதோ அவசரத்துல…” என்றவள் “அச்சோ…என்னன்னு எனக்குப் புரியலையே…” என்று குழப்பத்துடன் புரிந்துகொள்ள முடியாமல் திணற…
அவள் வயதிற்கு இவற்றை எல்லாம் புரிந்துகொள்வது கடினமே என்று வெற்றிக்கும் புரிந்தே இருந்தது.
“பாண்டி தப்பிச்சிட்டான் யாழினி அவனை பிடிக்கிற வரைக்குமாவது நீ நந்தன்கூட போய் இருக்க முயற்சி பண்ணுமா ப்ளீஸ்” என்றான்.
“இல்ல… நான் மாட்டேன்” என்றவள் “இராஜம்மாவ பார்த்ததும் என்னை கல்கத்தாக்கே திருப்பி அனுப்பி வச்சிடுங்க” என்றாள்.
“அப்ப நான் ஊருக்குப் போறேன்” என்றவள் பிடிவாதமாக மறுத்தாள்.
“அங்க உனக்கு பாதுகாப்பு இல்ல அவன் ஆட்கள் எங்க வேணா இருப்பாங்க யாழினி”
“அப்ப நீங்க போலீஸ்தானே” என்று அவன் உடையைப் பார்த்து கேட்டவள் “என்னை எதாச்சும் அநாதை ஆசிரமத்துல விட்டுடுங்க” பிடிவாதமாக நின்றாள்.
“அங்கெல்லாம் எந்த அளவுக்கு உனக்குப் பாதுகாப்பு இருக்கும்னு ஒரு போலீஸ்காரனா என்னால உறுதியா சொல்ல முடியாது யாழினி…”
“நான் ஊர் ஊரா அலையுறவன் எங்க எப்படி இருப்பேன்னே தெரியாது. அதுவும் இப்ப ஒரு கேஸ் விசயமா வெளியூர் போய்டுவேன் என்னாலயும் உன்னை கிட்ட வச்சி பார்த்துக்க முடியாத சூழ்நிலைல இருக்கேன் புரிஞ்சிக்கமா” என்று குழந்தைக்கு சொல்வது போல் புரியவைக்க முயற்சித்தான்.
அதற்கும் அழுதுகொண்டே நான் மாட்டேன் என்று மறுத்து தலையசைத்தவளை பார்த்தவன், என்ன செய்வதென தெரியாமல் தலையைப் பிடித்துக்கொண்டு அருகிலிருந்த நாற்காலியில் அமர்ந்து விட…
அவன் காதுகளுக்குள், ‘ப்ளீஸ் ஹெல்ப் மீ’ என்ற மதுவின் வார்த்தைகள் ஒலிக்க தொடர்ந்து யாழினியைக் காட்டி அவளின் கெஞ்சியப் பார்வை வந்து நின்றது.
சில மணி நேரப் பயணத்தில் யாழினியைப் பற்றி நன்கு அறிந்துதான் தன்னிடமும் மதுமிகா உதவும்படி கேட்டிருக்கிறாள் என்று வெற்றிக்கு இப்போது புரிய,
ஒரு முடிவுடன் நிமிர்ந்தவன், “சோ உன் மதுக்கா மேல நீ வச்ச பாசம் அவ்வளவுதான் இல்லையா? என்றான்.
அதில் அதிர்ந்து தலை நிமிர்ந்தவள், “மதுக்கா எனக்கு ரொம்பப் பிடிக்கும்” என்று மதுவின் ஞாபகத்தில் கண்ணீர் சிந்த…
“அப்ப அவ கடைசியா உன்கிட்ட சொன்னதை நீ செய்யப்போறதில்ல ரைட்?
அவள் நந்தனிடம் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்று சிலவற்றை சொல்லிக் கொடுத்த வெற்றி, “எப்பனாலும் உனக்கு ஒரு பிரச்சனைன்னா எனக்கு எங்கிருந்தாச்சும் கூப்பிட்டிரு நான் வந்துடுவேன்” என்று தன் அலைபேசி எண்ணை ஒரு பேப்பரில் எழுதி அவளிடம் தந்தான்.
அதை வாங்கிக் கொண்டவளிடம், “டேக் கேர் யாழினி, நான் மதுமிகாவோட…” என்று மீதத்தைச் சொல்ல முடியாமல் பாதியில் நிறுத்த…
“நானும் வரட்டா…” என்றவளை ஆதூரத்தோடு பார்த்தவன், “இந்த நிலைல உன்னை அழைச்சிட்டு போகவும் முடியாது. அதைப் பார்த்து தாங்கிக்கிற அளவுக்கு உனக்குத் தெம்பும் இல்லம்மா” என்றவன் கிளம்ப…
“எனக்கு போட்டோ காட்டறீங்களா…” என்றவளின் பார்வை கெஞ்சியது.
“வேண்டாம் நீ தாங்க மாட்ட அவ உன் மனசோட மட்டும் இருக்கட்டும்” என்றுவிட்டு திரும்பியும் பாராமல் கிளம்பியவனின் மனம் மதுவிகாவின் நினைவில் பாரமாகியது.
எத்தனையோ கேஸ்களை அவன் அனுபவத்தில் கண்டவன்தான். ஆனால் மதுமிகா என்ற தூய உள்ளத்தின் மரணம் அவனையும் பாதித்திருந்தது.
அவளுக்காகவே தன் பதவியை மறந்து தோழனாக அவளின் கடைசி விருப்பத்திற்கு தோள் கொடுக்க துணிந்திருந்தான். ஆனால் யாழினி எனும் வெகுளிப் பெண் எப்படி சமாளிப்பாளோ என்ற கவலையும் அலைக்கழித்தது.
என்னதான் யாழினிக்கு ஆயிரம் சொல்லிக் கொடுத்தாலும் அவள் மதுமிகா அளவுக்கு விவரம் அறியாதவள்.
குருவி தலையில் பனம்பழத்தை வைக்கிறோம் என்று புரிந்தது.
ஆனால் குறுகிய இரயில் பயணத்தில் இவர்கள் மூவரையும் ஒன்றிணைத்து சதிராடிய விதியின் கைகளில் நூல் பொம்மையாய் விளையாட தயாராகினர் வெற்றியும் யாழினியும்…
விரைந்து நந்தனிடம் சென்றவன் உற்ற தோழனாக மதுமிகாவின் இறுதிகாரியத்திலும் பங்கேற்க அங்கு அவனுக்கு முன் காத்திருந்த அகத்தியனைக் கேள்வியாப் பார்க்க விழிமூடித் திறந்தான் அவன்.
அநாதைப் பிணமாக சென்றுவிடுவேனோ என்று கவலைப்பட்ட மதுமிகா நண்பர்கள் தோள் சுமக்க தன் காதலன் கைகளினால் தன் இறுதி மரியாதையை ஏற்றுக்கொண்டு இம்மண்ணில் தன் சகாப்தத்தை முடித்துக் கொண்டாள்.
அனைத்தும் முடிந்து சாம்பலை அங்கிருந்த நதியில் நந்தனின் கைகளாலேயே கரைக்க அனுப்பி வைத்த வெற்றி,
“என்ன ப்ரோ காலைலயே ஃப்ளைட்னு சொன்னீங்க இங்க எப்படி? என்று அகத்தியனிடம் விசாரிக்க…
“காதலுக்கு மட்டுமில்ல ப்ரோ தூய்மையான நட்புக்கும் மரியாதை கொடுக்கலாம். ப்ளைட் எப்ப வேணும்னாலும் வரும் போகும்” என்ற அகத்தியனை தோளோடு அணைத்துக் கொண்ட வெற்றியிடம்,
“ப்ரோ, நீங்க தப்பா நினைக்கலன்னா நான் ஒன்னு கேட்கட்டுமா? என்றான்.
புருவம் உயர்த்தியவனிடம், “யாழினிய மதுக்காகத்தான் விட்டுக் குடுத்துட்டீங்களா?” என்று பின்னால் நதியில் அஸ்தியை கரைத்துக் கொண்டிருந்த நந்தனை காண்பித்துக் கேட்க…
இதழோரம் மெல்லிய புன்னகையைப் படரவிட்டவன், “அன்னைக்கும் நான் அவளுக்கு சேவகன் மட்டும்தான் அவளுக்கான இராஜகுமாரன் அவன்தான்” என்று நந்தனை காட்டினான்.
“சச் அ பியூட்டிஃபுல் சோல் இல்ல” என்று மதுமிகாவை குறிப்பிட…
“ம்ம்…” என்ற வெற்றி பெருமூச்சொன்றை வெளியிட,
“காதல்னாலே ஏமாத்திட்டுப் போற பொண்ணுங்கள மட்டுமே பார்த்திருந்த எனக்கு உண்மையான காதல்னா எப்படி இருக்கணும்னு வாழ்ந்து காமிச்சிட்டாங்க ப்ரோ…” என்று கலங்கினான்.
“அப்போ விரைவிலையே கல்யாணச் சாப்பாடு போடப் போறிங்கன்னு சொல்லுங்க” என்ற வெற்றி அகத்தியனின் மனநிலையை மாற்ற…
அனைத்தும் முடிந்ததும் யாழினியைத் தான் அங்கு மருத்துவமனையில் சேர்த்துப் பார்த்துக் கொள்வதாகக் கூறி அழைத்துச் செல்லத் துடித்த யது நந்தனை யாழினியின் உடல்நிலை அதற்கு ஒத்துக்கொள்ளாது என்று மருத்தவர் மூலம் சொல்ல வைத்திருந்த வெற்றி,
ஓரளவுக்கு சரியாகும்வரை தாங்கள் இங்கு பார்த்துக் கொள்வதாகச் சொல்லி சென்னைக்கு கிளப்ப முயற்சிக்க, யது நந்தனும் போட்டது போட்டபடி அப்படியே வந்திருந்ததால் தான் சென்றே ஆக வேண்டிய கட்டாயத்தில் இருந்தவன் வேறு வழியின்றி தன் சார்பில் ஒரு செவிலியரை யாழினிக்கென பிரத்யேகமாக நியமித்தான்.
யாழினியிடம் பத்தே நாட்களில் திரும்பி விடுவதாக விடைபெற, வெற்றியின் போதனையில் மெதுவே தலையாட்டியவளின் நெற்றியில் முத்தமிடப் போன நந்தனை,
“போலாமா நந்தன்” என்ற வெற்றியின் அழைப்பு தடுத்து நிறுத்தியது.
நந்தன் திரும்பி வருவதற்குள் யாழினியை மனதளவில் மேலும் தயார்படுத்தவே நாட்களை நீட்டியிருந்த வெற்றி நந்தன் விமான நிலையம் கிளம்பியதும் யாழினியை ஆம்புலன்ஸில் அழைத்துக் கொண்டு நேராக இராஜம்மாவின் இறுதிகாரியம் நடைபெறும்
இடுகாட்டிற்கே அழைத்துச் சென்று யாழினியின் ஆசையை நிறைவேற்றினான்.
அப்போதும் ஊரிலிருந்து வரமாட்டேன் என அடம்பிடிக்க,
வெற்றியும் முடிந்தவரை பாண்டியைப் பிடிக்க முயற்சித்தான்.
ஆனால் பாண்டியோ, அனைவரின் கண்ணிலும் மண்ணைத் தூவி வெளியில் கடைக்குச் சென்றிருந்த மிருளாவிடமும் தகறாறு செய்து அவளை கீழே தள்ளி விட்டதில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கடவுள் புண்ணியத்தில் நல்லபடியாக மகவையும் ஈன்றெடுத்திருந்தாள்.
எல்லா வழியும் அடிபட்டுப் போக வேறு வழியின்றி கனகச் செல்வம் பேசி பேசியே கரையாய் கரைத்து யாழினியை மீண்டும் வெற்றியுடன் அனுப்பி வைத்திருந்தார்.
விமானத்தில் அமர்ந்திருந்த நந்தனோ, யாழினியின் தள்ளி நிறுத்திய அந்நியப் பார்வை மனதை கலங்கச் செய்ய, ‘உனக்கு என்ன ஆச்சி மதும்மா! இப்பக்கூட உன்னை விட்டு வந்திருக்க மாட்டேன்டி ஆனா உன்னோட விலகல் எனக்கு வலிக்குது’ என்றவன் கண்களை மூடிக்கொள்ள…
மூடிய விழிகளுக்குள் அவனின் மது ஊர்கோலம் நடத்தினாள்.