காதில் கேட்ட அழைப்பும், அதை ஏந்தி வந்த குரலும் சரிதானா? என்று மீனாட்சி மூளை சிந்திக்க, பாத்திரத்தை விளக்கிக் கொண்டிருந்த அவர் கை வேலை நிறுத்தம் செய்தது..
“அம்மா…” என்ற ஆருத்ராவின் அடுத்த அழைப்புக்கு வேகமாய் மகளைத் திரும்பிப் பார்த்தார்.. அவர் கண்கள் கூட கலங்கியிருந்தது..
பார்த்திருந்த ஆருத்ராக்கு உள்ளே எதுவோ பிசைந்தது.. ” சாரிம்மா ” என்று தாயைக் கட்டிக் கொண்டவள் விசும்பினாள்..
மகளின் அழுகையில் தான் மீனாட்சி கொஞ்சம் தெளிந்தார்..
“ஏய் எதுக்கு இப்போ காலங்காத்தால அழுற? ஆபீஸ் கிளம்பல நீ? ” என்று அதட்டினார், அவள் அழுகையை நிறுத்தவென..
ஆருத்ராவும் அவர் அதட்டலில் கண்ணைத் துடைத்துக் கொண்டவள்..
“ஒன் ஹவர் பர்மிஷன் போட்டிருக்கேன் மா..
சாரி ம்மா… நீங்களும் என்னைப் புரிஞ்சுக்கலன்னு தான் உங்ககிட்ட பேசாம இருந்தேன்.. ஆனா அது உங்களை எவ்ளோ ஹர்ட் பண்ணும்ன்னு யோசிக்காம விட்டுட்டேன். சாரிமா… சாரி…”
“சாரிலாம் வேணாம் விடு ஆரு.. நீ என்கிட்ட மட்டும் தான் பேசாம இருந்தியா என்ன? எல்லார்கிட்டயும் ஒரு ஒதுக்கத்தோட தான இருந்த? அதை நினைச்சு தான்டி நான் நிறைய கவலைப் பட்டிருக்கேன்.. எப்பிடி இருந்த பொண்ணு இப்பிடி வாய மூடி வாழப் பழகிட்டாளேன்னு.. ஆனா இப்போ தான் எல்லாம் சரியாக ஒரு சந்தர்ப்பம் அமைஞ்சிருக்குமா.. கொஞ்சம் நிதானமா யோசிச்சு பாரும்மா.. மாப்பிள்ளை தப்பு பண்ணிருக்கார் தான்.. நான் இல்லன்னு சொல்லல.. ஆனா பண்ண தப்புக்கும் சேர்த்து இப்போ உன்னையும் இசையையும் தாங்கறேன்னு வந்து நிக்கிறார்.. நிச்சயமா அவருகிட்ட உண்மை இருக்கு.. அவருக்கு ஒரு வாய்ப்பு தரலாமே! தப்பு பண்றதுக்கும் பண்ண தப்ப உண்மையா உணர்ந்து திருந்தி வர்றவங்கள மன்னிக்காம இருக்கறதுக்கும் பெரிய வித்தியாசம் இல்ல ஆரு.. எனக்கு இதுக்கு மேல இதை என்னன்னு சொல்ல தெரியல.. வாழ்க்கைல அடிபட்டவ நீ.. நீயே யோசிச்சு நல்ல முடிவா எடு..” என்று முடித்துக் கொண்டவர்,
“இந்தா இதை சாப்பிடு..” என்று தட்டில் இட்லி வைத்து சாம்பார் ஊற்றிக் கொடுத்தார் மகளுக்கு..
ஆரு எதுவும் சொல்லாது அமைதியாக உண்டவள், ஆபீஸ் கிளம்பி செல்லும் போது தாயிடம் சொல்லிச் சென்ற செய்தியில் அவர் கால் தரையில் இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.
***
அதிரன் என்னவோ வாழ்க்கையையே மொத்தமாய் இழந்து விட்டவன் போல் சோர்வாக இரவு வீட்டிற்கு வரும் போது அவன் வீடு திறந்திருந்தது.. யாருடா அது பூட்டின வீட்டைத் தொறந்து உள்ள இருக்கறது? என்று புருவங்கள் முடிச்சிட உள்ளே போனவன், ஹாலில் இசை அமர்ந்து டிவி பார்த்துக் கொண்டிருப்பதைக் கண்டு இனிமையாக அதிர்ந்தான்..
“செல்லம்மா!” என்று வியந்து அழைத்தவன் ,
“யார் கூட வந்தீங்க?” என்றான் விழிகளை வீடு முழுதும் சுழற்றி..
“அம்மா கூட.. அம்மா கிச்சன்ல..” என்று அவனைப் பார்க்காமலே சொன்ன குழந்தை ஆர்வமாக கார்டூன் பார்த்து விழுந்து விழுந்து சிரிக்கத் தொடங்கியது..
ஆனால் அவள் சொன்ன செய்தியில் அதிரனின் சில நொடிகள் உறைந்து போனது.. அது நகர ஆரம்பித்ததும் தன் லேப்டாப் பேகை அங்கேயே டீபாயில் போட்டு விட்டு கிச்சன் நோக்கி ஓடினான் அதிரன்.. அவன் காதுகளில் கேட்ட அமுதகானத்தில் அவன் சோர்வு எல்லாம் எங்கோ சென்று ஒழிந்து கொண்டது..
அவன் கண்கள் அவனை ஏமாற்றவில்லை.. ஆருத்ரா தான் அங்கே கிச்சனில் நின்று ஏதோ சமைத்துக் கொண்டிருந்தாள்.. அவளை அங்கே கண்ட ஆர்வத்தை அடக்க முடியாது உள்ளே செல்ல காலடி எடுத்து வைத்தான்..
அவன் வருவதைக் கண்ட ஆருத்ரா, “இசை வெளிய போயிட்டு குளிக்காம கிச்சன் உள்ள வரலாமா?” என்று மகளுக்கு கேட்கும் அளவு கத்தினாள்..
இருவரின் அலும்பில் செல்லமாய் சலித்துக் கொண்ட அதிரன் முன் வைத்த காலை பின்னெடுத்து வைத்து அங்கேயே சாய்ந்து நின்று கொண்டான்.. ஆருத்ராவைப் பார்க்க வசதியாக.. ஏதும் பேசவில்லை பேசும் மனநிலையிலும் இல்லை அவன்.. ஆனால் எப்போதும் போல் அவன் ஆழ்ந்த பார்வையே அவளுக்கு ஒரு தடுமாற்றத்தை கொடுக்க அதை வெளியே காட்டாது அடக்க பெரும் பாடு பட்டாள்..
அவன் அசைவதாக இல்லையென்றதும் மீண்டும் இசையைத் தான் துணைக்கழைத்தாள் ஆருத்ரா..
“இசை! சீக்கிரம் ஃப்ரெஷாயிட்டு வந்தா எல்லாரும் சாப்பிடலாம்..” மீண்டும் அவள் குரல் கட்டளையாய் அதிர்ந்தது..
அதிரனுக்கு அன்று அவளின் “என்னை ஒரு வேளை மூணு பேரும் ஒன்னா சாப்பிடுவோமான்னு ஏங்க வச்சிட்ட இல்ல?..” என்ற ஏக்கம் பொதிந்த வார்த்தைகள் இப்போதும் நினைவில் வந்து வேதனை கொடுக்க எதுவுமே பேசாமல் விரைந்து குளித்து வந்தான்..
அவன் வரவும் ஆருத்ரா அந்த நான்கு பேர் அமரக் கூடிய டைனிங் டேபிள் மேல் உணவு பாத்திரங்களை அடுக்கி வைத்து ரெடியாக இருந்தாள்..
குளித்து வந்தவன் இசையை தூக்கி தலைக்கு மேலே தூக்கி சுத்த இசை உற்சாகமாகி கிளுக்கி சிரித்தாள்.. அப்படியே அவள் கன்னத்தில் அன்பு முத்தம் ஒன்று வைத்து ஆழ்ந்த குரலில் “ரொம்ப ரொம்ப தேங்க்ஸ்டா..” என்றான்..
அவளைப் போலவே மகளைத் தூதாய் மாற்றிக் கொண்டவன், பார்வை மொத்தம் ஆருத்ராவிடம் தான்..
அது தெரிந்தாலும் ஏதும் கவனித்தது போல் அல்லாமல்..
“ரெண்டு பேரும் சாப்பிட வாங்க..” என்று காரியத்தில் கண்ணாக மீண்டும் அழைத்தாள்..
மூன்று தட்டுகளை வைத்து அவள் சப்பாத்தி வைத்திருக்க, அதிரன் தன்னிரு புறமும் எதிரெதிராக இசையும் ஆருத்ராவும் அமர்வது போல் அமையுமாறு நடுவே அமர்ந்தான்..
குருமாவையும் ஊற்றி விட்டு அவளும் உண்ணவென்று அமர அதிரனின் கரம் முதல் வாய் உணவை எடுத்து ஆருத்ரா முன் நீட்டியது.. மகள் முன் அடிக்க மாட்டாள் என்ற தைரியம் இருந்தாலும் அடித்து மானத்தை வாங்கி விடாதே என்ற மன்றாடலையும் விழியில் தேக்கி அவள் முன்னே உணவை நீட்டியது நீட்டியபடி இருக்க ஆருத்ரா அவனைக் கீழ்க் கண்ணில் முறைத்தவள் இசையின் புறம் பார்வையை பதிக்க, அவள் கவனம் தங்கள் மேலே இருப்பதைக் கண்டு அவள் மனதில் இந்த நிகழ்வை அவதூறாகாப் பதியவிட மனமின்றி அதிரனை மறுக்காது அவனைப் பார்த்துக் கொண்டே அவன் ஊட்டியதை உண்டாள்.. இசைக்காக மட்டும் என்று இல்லாது அவன் விழிகளில் தெரிந்த நேசத் தூறலில் நனைந்து கொண்ட சிலிர்ப்பில் அவனுக்காகவும் தான் அதை ஏற்றுக் கொண்டாள்.. இதுவரை இப்படி எல்லாம் பார்த்தே இராத இசை குதூகலித்து இருவரையும் நாணம் கொள்ளச் செய்து விட்டு,
“அப்பா! எனக்கும் ஆ…” என்ற அதிரனுக்கு கசக்குமா என்ன? மகளுக்கும் ஊட்டியே விட்டான்.. இப்படி ஆருத்ரா அடுத்து அடுத்து தானாய் உண்ண எடுக்கும் போது எல்லாம் அவன் கரம் அவள் வாயருகே இருக்க, ரெண்டு தட்டு வேஸ்டா கழுவணும் என்று போலியாய் அலுத்துக் கொண்டு தன் தட்டில் இருந்தது, இசை தட்டில் இருந்த உணவு எல்லாத்தையும் அவன் தட்டுக்கே மாற்றி வைத்தாள்..
அவனும் புன்னகையுடன் இருவருக்கும் ஊட்டி அவர்கள் வயிற்றை நிறைத்தவன், அவர்கள் போதும் என்ற பின் தான் தன் வயிற்றைக் கவனிக்கவே செய்தான்.. ஆருத்ரா அவன் உண்ணும் வரை தானும் அவன் அருகிலேயே இருந்தாள்.. கூடவே இசையையும் இருத்தி வைத்துப் பேச்சுக் கொடுத்துக் கொண்டிருந்தாள்..
அடுத்து உறக்கம் தான் என்ற நிலையில் அதிரனுக்குள் திண்டாட்டம்.. அங்கே முத்தரசன் வீட்டில் ஆருத்ரா தன் விருப்பம் இன்றி தானே தனது கட்டாயத்தில் தன்னருகே உறங்குவாள்.. அதுவும் பெரியவர்கள் இருப்பதால் தன்னைத் தவிர்த்து வேறு அறைக்கோ ஹாலிலோ உறங்க முடியாது தான் தன்னுடன் அவள் ஒரே அறையில் தங்குவதே..
ஆனால் இங்கு அவள் அப்படி இருக்க வேண்டிய அவசியம் இல்லையே.. இங்கே இன்னொரு அறையும் தாராளமாக இருக்க கூடவே பெரியவர்கள் என்று யாரும் இல்லை.. இசை எல்லாம் ஒரு பொருட்டே இல்லை அவளுக்கு.. ஏனென்றால் ஆருத்ரா சூரியன் காலையில் வடக்கில் தோன்றும் என்றால் அடுத்த நாள் வடக்குத் திசை பார்த்து நின்று சூரிய நமஸ்காரம் செய்யும் அளவு அம்மா பிள்ளை இசை.. அவளை ஈசியாக கவிழ்த்து விட்டு அதிரன் தலையில் கூடை கவிழ்த்து விடுவாள் ஆருத்ரா..
அவள் முழு மனதாய் தான் இங்கு வந்துள்ளாள் என்பது அவள் நடவடிக்கைகளில் தெரிந்தாலும் அதிரனின் அனுபவப்பட்ட மனம் அவனை அடக்கியே வாசிக்க சொன்னது.. இப்போது என்ன அவள் இங்கே எந்த அறையில் உறங்கினாலும் மனதளவில் என்னருகே தான் இருப்பாள்.. அது ஒன்றே போதும் என்று தான் ஹாலிலேயே அமர்ந்து விட்டான்..
“அப்பா ! தூங்க வரலையா?” என்ற மகளுக்கும் “நீங்க போங்கடா.. நான் கொஞ்சம் நேரம் கழிச்சு வரேன்..” என்று விட்டான்.. வெகு நேரமாகியும் தன்னறைக்குள் சென்ற ஆருத்ராவின் அரவம் வெளியே இல்லாததால் இவன் உள்ளே சென்றான்..
ஆருத்ராவின் அறையில் மூவரும் எப்படி உறங்குவார்களோ அதே போல் இசை சுவரோரம் உறங்கிக் கொள்ள அவளை அடுத்து ஆருத்ரா படுத்திருக்க அவள் அருகில் இவனுக்கு இடம் இருந்தது.. இதில் சின்ன மாற்றம் என்றால் ஆருத்ரா அங்கே வழக்கமாய் இசையைப் பார்த்து உறங்குபவள்.. இன்றானால் இவன் முகம் காணும்படி படுத்திருந்தாள்.. இவன் உள்ளே நுழைவது கண்டு அவனையே அசையாத பார்வை பார்த்தவள், வாசலிலே தேங்கி விட்டவனை கண்டு, தன் ஒரு கையை அவனை நோக்கி நீட்டினாள்..
உலகின் மொத்த செல்வத்தையும் இறைவன் தன் வீட்டுக் கூரை மேல் கொட்டியது போல் அதிரன் பிரமித்துப் போனவன், பாய்ந்து சென்று அவள் கரங்களுக்குள் அடைக்கலமானான்.. தன் கரங்களை அவள் இடையை சுற்றி இறுக்கியவன் முகம் என்றும் போல் அவள் கழுத்து வளைவில் இளைப்பாற இடம் சம்பாரித்துக் கொண்டது..
சிறிது நேரம் மௌனங்கள் ஒருவர் உணர்வுகளை மற்றவருக்கு கடத்த இருவருக்குள்ளும் இதமான ஒரு மோன நிலை..
அதிரன் மெல்ல நிமிர்ந்து அவள் விழி பார்த்தவன்,
“யாருக்காகவும் இல்லாம உனக்குப் பிடிச்சு, முழு மனசா தான் வந்தியா ருத்ரா?” எனக் கேட்டான்.
“அம்மா இன்னைக்கு காலைல பேசினாங்க..” என்ற அவன் முகம் வாடியது.. அதனால் தான் வந்தாயா? என்ற கேள்வியோடு அவன் விழிகள் அவளிடம் தவித்திருந்தது..
அதைக் கண்ணுற்றவள்,
“ஆனா நான் நேத்து நைட்டே வரணும்ன்னு முடிவு பண்ணிட்டேன்..” என்று குறும்பாய் சொல்லவும் நிம்மதி பெருமூச்செறிந்தவன், அவள் நக்கலாக சிரிக்கவும்,
“அடிங்க..” என்று வலிக்காமல் அவள் கன்னத்தில் அடித்தான்..
அவனைப் போல் மென்மையாக அன்றி வலிக்கும் படியாகவே அவன் கன்னத்தைக் கிள்ளியவள் அவன் இசையைக் கருத்தில் கொண்டு மென்மையாக அலறுவதை எல்லாம் பொருட்படுத்தாமல் நேற்று குடித்து விட்டு அவன் பேசியதை எல்லாம் கண்ணீர் விட்டபடியே சொல்லி முடித்தாள்..
“இதை எல்லாம் உங்க வாய்ல இருந்து கேட்டுட்டு என்னால எப்பிடி அங்க நிம்மதியா இருக்க முடியும்? அப்படி இருக்க நான் ஒன்னும் அதிரன் இல்லையே!” என்று முதலில் வருத்தத்துடன் பேசியவள் இறுதியில் அவனுக்குக் குட்டும் வைத்தாள்..
அதிரன் “ஸ்ஸ்ஸ்..” என்று வலித்த கன்னத்தை தடவி விட்டவன்,
“இதுக்கு தான் நேற்றும் அடிச்சிருந்தியா? அந்த தடயமே அங்க அங்க மிச்சம் மீதி இருக்க, எல்லாரும் என்னாச்சுன்னு கேட்டாங்க.. இப்போ அதுலயே கிள்ளி வேற வச்சிருக்க? இப்டியே நாளைக்கு ஆபீஸ் போனா விளங்கிடும்.. பத்தாதுக்கு நாளைக்கு கிளையண்ட்ஸ் மீட்டிங் வேற இருக்கு.. அவங்க கன்னத்துல என்னன்னு கேட்டா என் பொண்டாட்டி கிள்ளுனான்னு சொல்லவா முடியும்?” அவள் வேதனை சுமந்த முகத்தை காண தாங்காது அவளைத் திசை திருப்ப அவன் வேறு பேச அவள் அவன் ட்ரிக்ஸ் உணர்ந்து அவனை முறைத்தாள்..
அதில் பெருமூச்சு விட்டு சரண்டர் ஆனவன், என்னை அறியாம ஏதேதோ உளறிட்டேன் போலடி.. ஆனா மனசுல இருந்தது தான் வெளில வந்திருக்கு.. அதுனால என்ன? அதான் நீ என்கிட்ட வந்துட்டல? இனி அதுலாம் நடக்க வாய்ப்பே கிடையாதே.. சோ அதை நெனைச்சு வருத்தப்பட ஒண்ணுமே இல்லை..” என்று அவளுக்கு சமாதானம் உரைத்து அவள் கன்னத்தில் இதழை ஒற்றி எடுத்தவன், மெல்ல அவள் தலையை உயர்த்தி தன் வலது கரத்தின் மேல் அவள் தலையை வைத்தான்.. அவளுக்குப் பிடித்த தலையணை அது தானே.. அதே கரத்தாலே எட்டி அந்தப் பக்கம் படுத்திருந்த மகள் தலையைப் பாசமாய்க் கோதிக் கொண்டே மறு கரத்தால் தன்னவள் முடியை ஒதுக்கி நேசமாக அவள் கன்னத்தை வருடிக் கொடுத்தான்..
அவள் கண்மூடி அவன் ஸ்பரிசத்தில் லயித்திருக்க மென்மையான குரலில் , “தூங்குடா..” என்றான்..
“நீங்க?”
“ம்ஹூம்… எனக்கு இன்னைக்கு தூக்கம் வராது.. ஐ ஜஸ்ட் வான்ட் டூ என்ஜாய் திஸ் மொமென்ட்..” ஆத்மார்த்தமாக அந்தக் கணத்தை அனுபவித்து சொன்னவனைத் தான் விழியகலாமல் பார்த்தாள் ஆருத்ரா.. அவனைப் பார்த்தது பார்த்த படியே உறங்கியும் விட்டாள்..
அதிரன் தான் அவளிடம் சொன்னது போல் உறங்காது விழித்திருந்தான்.. இந்த இனிமைப் பொழுதை உறங்கிக் கெடுக்க அவன் தயாரில்லை..
இந்த நிமிடம்
இந்த நிமிடம்
இப்படியே உறையாதா….
இந்த நெருக்கம்
இந்த நெருக்கம்
இப்படியே தொடராதா?
ஞாபக பறவை
ஓடுகள் உடைந்து
வெளியே தாவி பறக்கிறதே
நீயும் நானும்
ஒன்றாய் திரிந்த
நாட்கள் நெஞ்சில் மிதக்கிறதே
ஆயிரம் சொந்தம்
உலகில் இருந்தும்
தனிமை என்னை துரத்தியதே..
உன்னை காணும்
நிமிடம் வரைக்கும்
உடலே பொம்மையா
கிடக்கிறதே..
இதயம் நொருங்குகிறேன்
இதையே விரும்புகிறேன்
இது போதும் பெண்ணே
இறப்பேனே கண்ணே..
ஓ….ஆயிரம் காலம்
வாழ்கிற வாழ்க்கை
நிமிடத்தில் வாழ்ந்தேனோ?
மறுநாள் விடியலில் ஆருத்ரா இசையுடன் மீண்டும் தங்கள் வீட்டுக்கு செல்கிறேன் என்று கிளம்பி நின்றவளை அதிரன் நெஞ்சில் கை வைத்துப் பார்த்திருந்தான்.. இதற்கு மேல் தாங்க மாட்டேன் நான்டி என..
ஆனால் அவள் கேட்ட நியாயமான கேள்வியில் தன்னையே தான் மனதில் சாட்டையால் அடித்துக் கொண்டவன் அவளையும் இசையையும் தானே முத்தரசன் வீட்டிற்கு அழைத்துச் சென்று விட்டவன் அவர்களுடனே தானும் வீட்டினுள் நுழைந்தான்..
காலை பானத்தை அருந்திக் கொண்டே பத்திரிகையைப் புரட்டிக் கொண்டிருந்த முத்தரசன் தான் முதலில் இவர்களைக் கண்டார்.. இந்நேரம் இசை பள்ளிக்கும் ஆருத்ரா, அதிரன் வேலைக்கும் அரக்கப் பறக்க கிளம்பிக் கொண்டிருக்க வேண்டியது ஆகையால் விடியலில் வீடு தேடி வந்த மூவரையும் புரியாத பார்வை பார்த்தவர், மீண்டும் ஏதேனும் பிரச்சனையோ என்று கலங்கி விட்டார் மனிதர்..
அந்தக் கலக்கம் அவர் முகத்தில் அப்பட்டமாய் தெரிய அதைப்.போக்குவது போல் அதிரன் பேச ஆரம்பித்தான்..
“மாமா எனக்கும் ஒரு காபி சொல்லுங்க அத்தைக்கிட்ட.. காலைல காபி கூட போட்டுத் தராம என்னை இங்க இழுத்துட்டு வந்துட்டா..” என்று அவரிடமே அவர் மகளைக் குறைபடிக்க, ஆருத்ரா அவனை முறைத்தாள் என்றால் இசை, “இல்ல தாத்தா.. அப்பாகிட்ட அம்மா காபி கேட்டாங்க.. அப்பா தான் வேணாம் சொன்னாரு..” என்று தாய்க்கு கூஜா தூக்கிக் கொண்டு வர , “உன்னை யாரும் இப்போ இதைக் கேட்டாங்களா? அம்மாவ ஒன்னு சொன்னதும் உடனே வந்து ஆஜராகிறது..” என்று சொல்லிக் கொண்டே மகளைத் தூக்கிப் போட்டுப் பிடித்தவன் அவள் கத்த ஆரம்பிக்கவும் மனைவி பார்வையின் அனல் கூடவும் பம்மியவன் அப்படியே முத்தரசன் அருகில் போடப்பட்டிருந்த இருக்கையில் அமர்ந்தான்..
அதற்குள் மீனாட்சி இவர்கள் வந்திருப்பது அரவம் வைத்து அறிந்து மூவருக்கும் குடிக்க எடுத்து வந்து கொடுத்தவர், மகளை என்ன என்பது போல் கேள்வியாக பார்க்க,
அவள் “எனக்குத் தெரியாது மா.. உங்க மாப்பிள்ளை தான் கூட்டிட்டு வந்தாங்க.. அவருகிட்டயே என்னன்னு கேளுங்க..” என்றவள் அப்படியே, “இசை வாடா நம்ம கொஞ்ச திங்ஸ எடுத்து வைப்போம்..” என்று மகளை அங்கிருந்து கூட்டிச் சென்றிருந்தாள்..
ஹாலில் மாமனார் மாமியாருடன் அதிரன் மட்டுமே அமர்ந்திருந்தான்.. அவன் எதிலிருந்து ஆரம்பிக்க என்று சிந்தித்தவன் பின் நேரடியாக,
“நான் உங்க பொண்ணையும் பேத்தியையும் என் கூடக் கூட்டிட்டு போகட்டுமா?” என இருவரையும் கேட்டு நின்றான்..
அவன் கேள்வியில் இது என்ன புதிதாக உங்க பொண்ணு, உங்க பேத்தி என்று கேட்கின்றானே? என்பது போல் அவர்கள் இருவரும் முழித்துக் கொண்டு நின்றிருக்க,
அவர்களுக்கு தெளிவு படுத்தினான் அவன்..
“நான் கேட்டது சரி தான் மாமா.. இவ்வளோ வருஷமா அதிரனோட மனைவியையோ இல்ல அவனோட பிள்ளையையோ பத்திரமா பார்த்துக்க வேண்டிய அவசியம் உங்களுக்கு இல்லையே.. என் பொறுப்பை தட்டிக் கழிச்சிட்டு நான் போனதுல இருந்து அதை சுமந்து இன்னைக்கு வரைக்கும் உங்க பாதுகாப்புல ரெண்டு பேரையும் எந்தக் குறையும் இல்லாம வச்சிருந்திருக்கீங்க.. நீங்க மட்டும் இல்லேன்னா இவங்க ரெண்டு பேரு நிலைமையும் என்னன்னு என்னால யோசிக்கக் கூட முடியல.. அப்படி இருக்க உங்ககிட்ட சொல்லாம கேட்காம அவங்களை நானே என்கிட்ட எடுத்துக்க எனக்கு எந்த தகுதியும் இல்லையே.. ஆனா அன்னைக்கு இசைய கூட்டிப் போகும் போது இதே தப்பை தான் நான் பண்ணேன்.. ஆனா அப்போ அதை தப்புன்னு சொல்லித் தர எனக்கு யாரும் இல்ல.. இப்போ ருத்ரா இருக்கா.. இசை கூட சேர்த்து என்னையும் நல்லபடியா வளர்த்து விட்டுடுவா..” மனைவியின் மீதான கர்வம் முகத்தில் தெரிய சொன்னவன் தொடர்ந்து,
“உங்க மக, உங்க பேத்திய பார்த்துக்கிட்டதுக்கு உங்களுக்கு என்னால நன்றி சொல்ல முடியாது தான்.. ஆனா என் பொண்டாட்டி பொண்ண பார்த்துக்கிட்டத்துக்கு காலத்துக்கும் உங்களுக்கு நன்றிக் கடன் பட்டவனா இருப்பேன்..” என்றவன் அவர்கள் முன் கைகூப்ப, முத்தரசன் மீனாட்சி பதறிப் போனவர்களாக அவனைத் தடுத்தனர்..
“மாப்பிள்ளை இதெல்லாம் எதுவும் எங்களுக்கு வேணாம் மாப்பிள்ளை.. இனி வர்ற காலம் நீங்க மூணு பேரும் சந்தோஷமா இருந்தா அதுவே போதும் எங்களுக்கு..” என்று முத்தரசன் கூற மீனாட்சி கணவனை ஆமோதித்தார்..
“நிச்சயமா..” என்று புன்னகையோடு அவர்களுக்கு வாக்குக் கொடுத்தான் அவன்..
“இதெல்லாம் அவ பார்த்த வேலையா மாப்பிள்ளை? அவ சொன்னான்னு நீங்களும் இப்பிடி வேலை நேரத்துல இது பெரிய விஷயம்ற மாதிரி வந்து நிக்கிறீங்க?” மீனாட்சி மகளை திட்ட,
அதிரன் அதற்கு சம்மதிப்பானா?
“அவ சரியானதை தான் சொல்லிருக்கா அத்தை.. இது எனக்கா தான் தோணிருக்கணும்.. ஆனா தோணல.. இன்னும் நான் முழுசா சரியாகல போல.. (இன்னும் பயிற்சி வேண்டும் அமைச்சரே!) அவ ஈவ்னிங் தான் போலாம்னு சொன்னா.. ஆனா எனக்கு அதுவரைக்கும் கூட இதை தள்ளிப் போடவோ அவங்கள என்னை விட்டுத் தள்ளி இருக்க விடவோ எனக்கு தான் மனசில்ல.. அதான் உடனேயே வந்துட்டேன்..” என்ற அவனின் இந்த மாற்றம் அவர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியையும் மன நிறைவையும் தந்தது..
அதன் பின் அதிரன் கையோடே மனைவியையும் மகளையும் கடத்தி சென்று விட்டான்..