கைகள் நடுங்க தலையை பிடித்தபடி அமர்ந்திருந்தான் அவினாஷ். தேவான்ஷ் பிறந்த சமயத்தில் மெடிக்கல் கேம்ப்பிற்காக வடநாட்டில் ஆறு மாதங்கள் கிராமம் கிராமமாய் சென்று அடிப்படை சுகாதாரத்தை பேணுவது எப்படி என சொல்லி கொடுத்து என பிஸியாகி போனவனுக்கு ஊருக்கு கிளம்பும் இரண்டு நாள் முன்னரே அண்ணிக்கு மகன் பிறந்துள்ளான் என தெரிவிக்கப்பட அரக்க பரக்க ஓடி வந்தான் தன் அண்ணனை மீண்டும் காண..இப்போது தேவ் அண்ணியின் மகன் இல்லை என்பதை விட அவனை எப்படி காப்பாற்றுவது என நெஞ்சம் தவிக்க தேவ்வின் அறைக்கு சென்றான்.
வெளிறிப்போன முகத்தோடு வந்த கொழுந்தனை கண்டு பதறிய கன்யா,
“என்ன அவி, என் டிஷ்யூஸ் மேட்ச் ஆகலயா?..” என தவிப்புடன் கேட்க நீர் திரண்ட கண்களுடன் ரிப்போர்ட்டை நீட்டினான். கைகள் நடுங்க வாங்கி படித்தவள் சில நொடிகள் சுவாசிக்க மறந்தவளாய் ஸ்தம்பித்து நின்றாள்.
தங்கையின் நிலை எதிர்ப்பார்த்தது தான் எனினும் அவள் வேதனையை காண பொறுக்காமல் அவளை தோளில் தாங்க, தள்ளி நகர்ந்தவள் அவியிடம்..
“என்ன இது? என்னென்னமோ சொல்லிருக்காங்களே..உண்மையா அவினாஷ்?..” என முதல்முறையாக ஓங்கிய குரலில் கேட்டவளை கண்டு அனைவருமே சற்று மிரண்டு தான் போனார்கள்.
கோபியோ கன்யாவை நெருங்க, அவனை கை நீட்டி மறித்தவாறு,
“தேவ் என் பையன் இல்ல னு சொல்றாங்க ணா..ஏன் இப்படி சொல்றாங்க? சொல்லுங்க? “என தன் நெற்றியில் அடித்தபடி கேட்க, அங்கிருந்த அனைவரும் கடந்த காலத்தை கன்யாவிடம் எங்ஙனம் தெரிவிப்பது என பரிதவிக்க, அதிர்ச்சியில் உறைந்தது உமா மற்றும் அவினாஷ் மட்டுமே. சட்டென நிம்மி ஓடி வந்து அவள் கைகளை பிடித்து..
“ஷ்ஷ்ஷ்…காம்டவுன்..பொறுமையா இரு..” என கன்யாவை அணைத்துக்கொண்டவள் தன் அலைபேசி எடுத்து,
“ஹலோ..நேத்து லிவர் டொனேஷன்க்காக கேட்டிருந்தேனே..சூட்டபிள் டோனர்ஸ் கிடைச்சாங்களா?..”.எனக்கேட்டவளை விலுக்கென நிமிர்ந்து பார்த்தாள் கன்யா. பின் தன் அண்ணனை பார்த்து..
“அப்ப…தே..வ்…என் மகன் இல்லையா?” என கேட்கும் பொழுதே உடைந்து அழுதுவிட்டாள் கன்யா. அவள் வேதனையை காண பொறுக்காது தங்கையின் கைகளை பிடித்து..
“இன்னும் ஒரு வாரத்துக்குள்ள தேவ்க்கு சர்ஜரி பண்ணனும் னு சொல்லிருகாங்க ல?, கண்டிப்பா நடக்கும், என்னை நம்பு..பர்ஸ்ட் தேவ் சரியாகி வரட்டும்..அவன் வந்து உன்னை தான் டா கேட்பான்..அவனுக்காக கொஞ்சம் பொறுமையாயிரு பாப்பா ப்ளீஸ்..” என்றான். மகன் எனும் மந்திரச்சொல் சற்று வேலை செய்ய அரை நிமிடம் தலை குனிந்து அமர்ந்திருந்த கன்யா பின்பு கண்களை துடைத்துக்கொண்டு மகனருகில் சென்று அவன் தோளருகில் சாய்ந்து கொண்டாள்.
கணவனுக்கு கண்களால் தன் மாமியாரை ஜாடை காட்டியபடி போனில் பேசிக்கொண்டிருந்தாள் நிம்மி. இது நாள் வரை தேவான்ஷ் தேவகன்யாவின் மகன் என நம்பி கொண்டிருந்தவருக்கு பேரிடியாக தேவ் மகள் வயிற்று பேரன் இல்லை என்பது ஜீரணிக்க முடியாததாய் இருந்தது.
கோபி தாயருகே சென்று,
“நம்ம நல்லதுக்காக தான் உங்ககிட்ட உண்மைய மறைச்சேன்..பொறுமையா நடந்ததை எல்லாம் சொல்றேன் மா..” என்றவன் அவியிடமும்..
“உங்களுக்கும் தான் அவி, கவலைப்படாதீங்க தேவ் நல்லபடியா நம்மகிட்ட வருவான்..வரவைப்போம்.” என்றவன் சாய்ந்து அமர்ந்தான். இதற்கே இத்தனை பாடு எனில் நாளை வரப்போகும் சூறாவளியை எப்படி சமாளிப்பது? இன்று வரை நிம்மிக்கும் தெரியாது தனக்குள் மட்டுமே பூட்டி வைத்திருக்கும் விஷயம் நாளை அம்பலமாகும் வேளை கடவுளே நீ தான் என்னை காப்பாத்தனும் என மனதிற்குள் அரற்றி கொண்டிருந்தான் கோபி.
நிம்மியோ டோனரை தேடி தனக்கு தெரிந்தவர்களுக்கெல்லாம் அழைப்பு விடுத்து, விசாரித்து என இங்குமங்கும் ஓடிக்கொண்டிருக்க, அவளை கவனித்த உமாவிற்கு கண்கள் கசிந்தது..எத்தனை முறை தன் மகளோடு இவளை ஒப்பிட்டு பேசியிருக்கிறோம்..ஒருபோதும் கோபம் கொள்ளாது தாயாக தனக்கு தெரிந்த வைத்தியமுறைகளை கடைபிடித்த மருமகள் அவர் மனதில் இன்று விஸ்வரூபம் எடுத்து உயர்ந்து நின்றாள். நிம்மிக்கும் தருண்கோபிக்கும் பெற்றோராக முழுத்தகுதி இருந்தும் இன்று வரை குழந்தைப்பேறு இல்லாததை கண்டு மனதை வாட விடாமல் பலன் கிட்டும் வரை இறைவன் ஆசீர்வதிக்கும் வரை முயற்சி செய்யுமாறு மகப்பேறு மருத்துவர்களான அவள் தோழிகள் பரிந்துரைக்க மனம் தளராது இருவரும் முயற்ச்சிக்கின்றனர்.
மறுநாள் வந்த ஷாந்தனு அவினாஷிடம்..
“பீவர் இன்னும் குறையல..எவ்வளவு சீக்கிரம் சர்ஜரி பண்ணமுடியுமோ வி கேன் சேவ் தேவான்ஷ்..” என சொல்ல கன்யாவால் நிலையாக நிற்க கூட முடியவில்லை. அதற்குள் கோபி..
“நீங்க நாளை மறுநாள் சர்ஜரிக்கு ஏற்பாடு பண்ணுங்க டாக்டர்..”
“டோனர் கிடைச்சுட்டாங்களா?..”
“ஆன் தி வே டாக்டர்..” என்றான் கோபி. ஷாந்தனு அதற்கான ஏற்பாடுகளை தயார் செய்யுமாறு அவி மற்றும் செவிலியரிடம் கூறிவிட்டு சென்றார். நிம்மி கணவனை ஆராய்ச்சியாய் பார்க்க, ஏனையோர் கோபியை கேள்வியுடன் பார்த்து நின்றனர். சுற்றி நின்றவர்களை பார்த்த கோபி..
“இப்போதைக்கு என்னை எதுவும் கேட்காதீங்க..இன்னிக்கு ஈவ்னிங் வந்துடுவாங்க..வந்ததும் பேசிக்கலாம்” என்று கூறி சரேலென வெளியேறினான்.
மாலை ஐந்து மணியளவில் கன்யா வீட்டிற்கு சென்று குளித்து தேவான்ஷ்க்கு தேவையான பொருட்களை எடுத்து வர சென்றிருந்த சமயம் இறுகிய முகத்துடன் ஒளியிழந்த கண்களுமாய் புயலென தேவான்ஷ் அறைக்குள் நுழைந்தான் விஷ்வமித்ரன்.
அண்ணன் மகன் தவறிவிட்டான் என நினைத்திருந்த மேகநாதனுக்கு அவனை உயிரோடு திரும்ப பார்த்ததில் அதிர்ச்சியில் எழுந்து நிற்க உமாவும் வாயில் கை வைத்தபடி எழுந்து நின்றார்.
டீ வாங்கி கொண்டு உள்ளே வந்த நிம்மியின் கண்கள் விஷ்வாவை கண்டதும் பலத்த அதிர்ச்சியில் விரிந்தன. பின்னே வந்த அவினாஷும் தன் அண்ணனை கண்டு விக்கித்து நின்றான்.
இவர்களை பொருட்படுத்தாமல் தன் மகனிடம் சென்று அவன் தலையை தடவிய விஷ்வாவின் கண்களில் இரண்டாவது முறையாக கண்ணீர் அரும்பியது. இதுவரை வீடியோ, போட்டோவில் மட்டுமே பார்த்தவனின் முகம் வாடி வதங்கிய நிலையில் இருப்பதை காண பெற்றவனின் நெஞ்சில் இரத்தம் வழிந்தது. உடனே தன்னை சுதாரித்தவன் தன் மச்சானை தேட, தேவ்யான்ஷ் கூட பிறந்த இரட்டை பிறவியான யாழ் தன்விகா மற்றும் அவள் தாத்தா பாட்டியுடன் நுழைந்தவர்களை கண்டு நெஞ்சை பிடித்து கொண்டார் மேகநாதன்.
விஷ்வா தன் மச்சானிடம்..
“டாக்டரை பார்த்து டெஸ்ட்ஸ் எடுத்துட்டு வந்துடறேன்..” என அவினாஷை இழுத்துக்கொண்டு வெளியேற அறை முழுதும் பலத்த நிசப்தம் நிலவியது.
எட்டு வருடங்களுக்கு முன் அருவியில் விழுந்து இறந்து விட்டவன் உயிருடன் திரும்பி வந்ததில் அனைவரும் பேச்சற்று சிலையாய் இருந்தனர்.
‘இவங்களே இவ்வளவு ரியாக்ட் பண்றாங்களே, அப்போ பாப்பா..?’ என உள்ளுக்குள் நினைத்த போதே உதறல் எடுத்தது கோபிக்கு. அனைவரையும் ஓரக்கண்ணால் பார்த்தவனுக்கு மனைவியை பார்க்க கூட முடியவில்லை. ஆனால் அவள் பார்வை இவனிடமே நிலைத்திருந்தது.
இதே சமயம் மருத்துவமனைக்கு வந்த கன்யா அறைக்குள் நுழைய அனைவரும் கலவரமான முகத்துடன் இருப்பதை கண்டு பதட்டமடைந்தவள் தேவ்வை பார்க்க அவன் நன்றாக உறங்கி கொண்டிருந்தான்..அண்ணன் பக்கத்தில் மருண்ட பார்வையுடன் தேவ் முகச்சாயலில் நிற்கும் சிறுமியை கண்டு கண்கள் சுருங்கியது.
யார் இந்த பாப்பா? என கேட்கும் வேளையில் உள்ளே நுழைந்தவனை பார்த்து ஸ்தம்பித்து நின்றாள் தேவகன்யா. இந்த நொடி பூமி தன் இயக்கத்தை நிறுத்தியதால் உலகமே அசையாமல் நின்றதோ என விதிர்விதிர்த்து நின்றிருந்தாள் கன்யா. விஷ்வாவை தவிர வேறெதுவும் அவள் கண்களுக்கு தெரியவில்லை. எத்தனை இரவுகள், தலைவனை தொலைத்த தலைவியாய் தவித்திருப்பாள்..கண் முன்னே தன் கையை விட்டு அருவியில் விழுந்தவன் மீண்டு வரமுடியுமா? இதோ வந்திருக்கிறானே..எப்படி? இது சாத்தியம்..?அப்படியே பிழைத்திருந்தாலும் ஏன் தன்னை பார்க்க வரவில்லை? இத்தனை காலம் எங்ஙனம் என்னை விட்டு இருக்க முடிந்தது இவனால்..? என அவள் இதயம் சராமாரியாய் கேள்வி கேட்டது
பதில் சொல்ல வேண்டியவனோ ஒரே ஓர் நொடி இவளை பார்த்துவிட்டு தன் மகனருகே சென்றான்.
நிர்மலா மெல்ல அறையிலிருந்து வெளியே வந்தவள் சற்று தூரத்தில் உள்ள பிள்ளையார் சிலை எதிரே போடபட்டிருந்த இருக்கையில் அமர்ந்தாள். அவள் உள்ளம் அலை கனலாக கொதித்தது. சிறுவயதிலிருந்தே தன்னை ஒரு ஆண் தேவதையாய் காத்து வந்தவனின் கண்ணாமூச்சி ஆட்டத்தில் துடித்து போயிருந்தாள். அவளருகே வந்து அமர்ந்தார் உமா.
அவரும் மருமகன் வந்த அதிர்ச்சியில் இருந்தாலும் மருமகளையும் கவனித்து கொண்டேயிருந்தார். அவள் தனியாக வெளியேறியதும் பின்தொடர்ந்தவர் அவள் கைகளை பிடிக்க, வெடித்து அழுதுவிட்டாள் நிர்மலா தேவி.
நிம்மியை தோளில் தாங்கி அவள் முதுகை வருடினார் உமா..சில நிமிடங்கள் அழுகையில் கரைந்தவள் மெல்ல தன்னை தேற்றிக்கொண்டு..
“அவன் மறைச்சது கூட எனக்கு பெரிசா தெரியல அத்த..ஆனா இதுவரைக்கும் எங்களுக்குள் எந்த சீக்ரெட்டும் இல்ல னு கர்வமா இருந்தேன் பாருங்க, ரொம்ப வலிக்குது..” என தன் நெஞ்சை தொட்டு அழவும் தூரத்தில் சுவற்றில் சாய்ந்தபடி கை முஷ்டி இறுக தன் மனைவியை பார்த்தவனின் கண்களும் குளமாகின.
நிம்மியை தேற்றிய உமா..
“உனக்கே தெரியும் கோபி உன்மேல உயிரையே வச்சிருக்கான் னு..உன்க்கிட்டயே மறைச்சிருக்கான் னா மாப்பிள்ளை சொல்லிருப்பார் மா..எல்லாமே நல்லதுக்கு தான் கடந்து போக பழகிக்கனும் நிர்மலா..”
“என்னைய எடுத்துக்க, எவ்வளவு பேச்சு பேசிருப்பேன் உன்னைய, ஆனா இன்னிக்கு உண்மை தெரிஞ்சி உடைஞ்சி போயிருந்தப்ப என் பெண்ணுக்கும் துணையா நின்னு உன் புருஷன்க்கிட்ட என்னை பார்த்துக்க சொன்னியே..அப்ப தா இன்னும் உடைஞ்சி போனேன் மா..நானா தேடியிருந்தாலும் உன்னை மாதிரி தங்கத்தை கொண்டு வந்திருக்க முடியாது..என் குலசாமி நீ..இனி நீ சொல்றது தான் நம்ம வீட்ல நடக்கும்..இப்ப அடுத்து என்ன னு பார்ப்போம்..கண்ணு தொடச்சிட்டு கொஞ்ச நேரங்கழிச்சு உள்ள வா..,” என மருமகளிடம் அன்பு கட்டளையிட்டு சென்றார்.
இயல்பில் தன் மாமியார் நல்லவரே என சரியாய் புரிந்து கொண்டு அவருக்கிணையாய் மனம் புண்படாதவாறு பதிலுக்கு பதில் தந்து புது உறவுக்கு வித்திட்டதை நினைத்து சிறு மகிழ்ச்சி தோன்ற, எழுந்தவள் திரும்ப, அங்கே இவளையே பார்த்த வண்ணம் நிற்கும் கணவனை அப்படியே தலையில் கொட்டி கொட்டி பூமியில் உயிரோடு புதைத்தால் என்ன என தோன்றியது.
அவனை சட்டை செய்யாது கடந்து போக, அவள் கையை பிடித்த கோபி சுற்றும் முற்றும் பார்க்க, கைகளை உருவிக்கொள்ள முயன்றவளை இழுத்து அணைத்து அவள் காதில்..
“சாரி டி….வீ நீட் திஸ் ஹக்..நான் பர்பசா பண்ணல..” என அவளை விட்டு விலகி வெளியேறினான் தருண்கோபி.
தளர்ந்த நடையுடன் செல்லும் கணவனை கண்டு உள்ளம் வலித்தாலும் இப்போது நண்பனை மொத்துவது தான் தலையாய பணியென அறைக்குள் நுழைந்தாள் நிர்மலாதேவி.
விஷ்வா மேகநாதனை நெருங்கும் முன் ஓடி வந்து இவனை அணைத்துக்கொண்டு கண்ணீர் சிந்தினார்.
“உன்னை திரும்ப பார்ப்பேன் னு கனவு ல கூட நினைக்கல விஷ்வா..” என கலங்க அவர் முதுகை வருடியபடி கன்யாவை பார்க்க அவள் கண்கள் கண்ணீரை அறவே மறந்து இவனை மட்டுமே கண்கொத்திபாம்பு போல பார்த்திருந்தது..மனைவியை தோளோடு அணைத்தபடி கனல்விழிகளுடன் தன்னை தாக்க தயாராயிருக்கும் தோழியை கண்டு தலை குனிந்தான் விஷ்வமித்ரன்.