“என்னை மறந்துட்ட போ. இதுதான் அம்மாவா வரவான்னு கேட்டதா குட்டி மாமியாரே?…” என்ற வெண்ணிலாவும் சிரித்தபடி குழந்தைக்கு முத்தமிட்டு வழியனுப்பியவள்,
“கௌசிம்மா…” என்றாள் கௌசல்யாவை பார்த்து.
“ஹாங், என்ன நிலா?…”
“சீக்கிரம் வீட்டுக்கு வான்னு என்னை சொல்லலை நீங்க? கூப்பிட்டு போங்க. வரவேணாவா நான்?…” என சலுகையாய் மாமியாரிடம் கேட்க,
“சீக்கிரமா கௌரவ்வோட வந்திடுடா நிலாம்மா…” என்றார் கௌசல்யா கண்கள் கலங்கி.
“அதை சிரிச்சிட்டே சொல்லனும். நம்மோட சந்தோஷம் யாருக்காகவும் குறைய கூடாது. சிரிங்க நல்லா…” என அவரின் கன்னம் பிடித்து கொஞ்ச,
“ஆமா, ஆமா ஸ்மைல்…” என்றாள் குழந்தையும்.
அனைவருமே கௌசல்யாவின் முகம் பார்க்க, அவருக்குமே சங்கடம். மெலிதாய் புன்னகைத்தவர்,
“போதுமா?…” என்றார்.
“மிச்சத்தை அங்க வந்து வாங்கிக்கறேன். சரியா?…” என்று சொல்லி அவர்களை வழியனுப்பிவிட்டு உள்ளே வந்தாள் வெண்ணிலா.
கௌரவ் யாரிடமும் எதுவும் பேசாமல் அமர்ந்துகொள்ள, அவமானமாய் உணர்ந்தார் குமரன்.
“இப்ப என்ன சொல்லிட்டேன்னு என்னையே குற்றப்பார்வை பார்க்கறீங்க?…” என குரலை உயர்த்த, சட்டென எழுந்துவிட்டான் கௌரவ்.
“லிசன், இங்க எங்கம்மாவை பேச யாருக்கும் ரைட்ஸ் இல்லை. இப்படி பேசறது இதுவே கடைசியா இருக்கட்டும்…” என சொல்லிவிட்டு விறுவிறுவென்று உள்ளே சென்றுவிட்டான் அவன்.
இருந்தால் இன்னும் வேகமாய் பேசிவிடுவோமோ என உள்ளிருந்த கூடத்திற்கு சென்றமர்ந்துவிட்டான்.
“என்ன, என்ன சொல்லிட்டு போறாரு?…” என கோபமாய் குமரன் சாவித்ரியிடம் குதிக்க, கௌரவ்விற்கு அதுவுமே கேட்டது.
“இந்த பேச்செல்லாம் கேட்டுட்டு நான் இங்க இருக்கனுமா? இப்பவே கிளம்பறேன் நான்….” என சாவித்ரியை பார்க்க,
“சரிப்பா, கிளம்பு…” என்றுவிட்டார் அவர்.
இதையும் அவர் எதிர்பார்க்கவில்லை. உறவென்று இங்கே வந்து தங்கி இருப்பது தாங்கள் மட்டுமே. தங்களை பகைத்துக்கொள்வார்களா என நினைத்து பேச, அதற்கு சாவித்ரி இடம் தரவில்லை.
“ஏன் பேசமாட்டீங்க சின்னம்மா? கொஞ்சமாவது எனக்கு இங்க மதிப்பு தந்தீங்களா? நீங்களா எல்லா முடிவையும் எடுத்துட்டு என்னை கலந்துக்காம பேசறீங்க. நீங்களே மதிக்கலை. நிலாவோட புருஷன் வீட்டுல எப்படி மதிப்பாங்க?…” என்றவர்,
“பார்த்தீங்களா அந்த டாக்டர் பொண்ணு என்ன பேசிட்டு போச்சுன்னு…” என்றார் பிரத்யூவை குறிப்பிட்டு.
“நந்தா என்ன பேசினாங்க கௌசிம்மாவை?…” என நிலா கேட்க, சுனந்தா நடந்ததை கூறினாள்.
“இவ்வளோ தானா நீங்க? என்ன பிரச்சனை உங்களுக்கு?…” என்றவள்,
“இங்க இதை பேசுங்க, இதை நாங்க பேசறோம்ன்னு யாரும் சொல்லிவச்சு பேசலை. எழுதிக்குடுத்தும் பேசலை. அவங்கவங்களுக்கா அக்கறை வேணும். அவங்களுக்கு இருக்கு. பேசினாங்க. நீங்க என்ன செஞ்சீங்க என் கல்யாணத்துல?…” என கேட்டுவிட்டாள்.
“ஒண்ணொண்ணும் உங்ககிட்ட வந்து நின்னு இதை செய்யட்டுமான்னு கேட்டா சொந்தம். இதையே இப்படி செய்ங்கன்னு நீங்களா வந்து சொல்லமாட்டீங்க. அது உங்களுக்கு தன்மான பிரச்சனை இல்லையா?…” என்றவள்,
“ஏன் உங்களோட பொண்ணுக்கு கல்யாணம் செய்யும்போது எப்படி செஞ்சீங்கன்னு சொல்லி உங்க சின்னம்மாட்ட சொல்ல ஏன் தோணலை? இல்லை உங்களுக்கு அந்த உரிமை இல்லைன்னு நினைச்சீங்களா? நான் உச்சாணில இருப்பேன். என்னை தேடி வந்து கேளுன்றதுக்கு பேர் பாசம் கிடையாது…” என்று சொல்ல குமரனின் முகம் சிறுத்துவிட்டது.
“நந்தா கல்யாணத்துல எங்களுக்கு அந்த உரிமையை நீங்க தரலை. ஆனாலும் நாங்க விட்டுக்குடுக்காம வந்து நின்னோம். ஆனா நீங்க நீங்களாவே தான் தள்ளி நின்னுட்டீங்க. அப்பாவும் எந்தவித குறைவாவும் உங்களை நடத்திடலையே…” என்றவள்,
“ஏன் நந்தா நீ சொல்லு, இங்க யார் பன்றது சரியில்லைன்னு. யாரையும் தப்பு சொல்லலை நான். ஆனா சரியா இல்லைன்னா சரியில்லை தான். உனக்கு தெரியும் தானே?…”என்று நிலா அவளிடம் கேட்டாள்.
“நிலா நீ ஏன் டென்ஷன் ஆகற இப்போ?…” என்ற சுனந்தா,
“ம்மா உன் முடிவென்ன?…” என்றாள் தாயிடம்.
“நிலாவை அவ புருஷன் வீட்டுக்கு கொண்டுபோய் விடற வரை நான் இங்கருந்து நகரமாட்டேன். கல்யாண வீடு. ஆயிரத்தெட்டு வேலை இருக்கும். தேவையில்லாததுக்கு ஏன் மூச்சை குடுத்து பேசனும்?…” என்ற வளர்மதி,
“நிலா உனக்கும் மாப்பிள்ளைக்கும் சாப்பாடு ஹாட்பேக்ல எடுத்து வச்சிருக்கேன். இன்னும் சாப்பிட்டிருக்கமாட்டீங்க தானே? ரூம்க்கு எடுத்துட்டு போறியா, இங்கயே சாப்பிடரீங்களா?…” என குமரனை சட்டையே செய்யவில்லை.
“ரூம்க்கு கொண்டுட்டு போறேன். நீங்க போய் தூங்குங்க…” என்றவள் சுனந்தாவையும் பார்க்க,
“நான் எல்லாம் போகமாட்டேன்ப்பா. கனவுலையும் அதை நினைக்காத….” என சொல்லி புன்னகைக்க,
“கெட் லாஸ்ட்…” என்றாள் புன்னகையுடன் வெண்ணிலாவும்.
அவள் சிரிப்புடன் உணவுகளை எடுத்துக்கொண்டு உள்ளே சென்றதும் சாவித்ரியும் குமரனை கண்டுகொள்ளாத பார்வையுடன் உள்ளே சென்றுவிட்டார்.
“மானம் கெட்ட ஜென்மங்க…” என மனைவி, மகளை பார்த்து கூற,
“அவ்வளோ ரோஷத்தோட ஏன் பாட்டி குடுத்த பணத்தை வச்சிருக்கனும். தூக்கி எறிஞ்சிட்டு வாங்கப்பா. கிளம்புவோம். நாம தான் மானமுள்ள ஜென்மங்களாச்சே…” என்று நக்கலாய் சொல்ல,
“உன்னை…” என மகளை அடிக்க பாயும் முன்,
“வேலைவெட்டியே இல்லையா உனக்கு? வாடி…” என வளர்மதி அலட்சியமாய் மகளை இழுத்து சென்றார்.
அனைவரும் செல்லவும் முன்வரவேற்பறையில் அவர் மட்டுமே நின்றிருக்க கௌரவ் வந்தான்.
அவரை பார்த்துக்கொண்டே தண்ணீர் அருந்துவதை போல டைனிங் டேபிள் பக்கம் வந்தவன்,
“இன்னுமா இருக்கீங்க?…” என்றான் குமரனிடம்.
“அப்பவே கிளம்பியிருக்க வேண்டாமா?…” என கேட்டுக்கொண்டே அவரை நெருங்கியவன்,
“எங்கம்மாவை இனிமே எதாச்சும் பேசனும்ன்னு நினைச்சா கூட நாக்கு இருக்காது, ஜாக்கிரதை. நான் வேற மாதிரி. பார்த்து நடந்துக்கங்க…” என்று எச்சரித்துவிட்டு அவன் விலக, அதுவரை முறைத்திருன்தவர் அவன் காண்பித்த இந்த பரிமாணத்தில் வாயடைத்து நின்றிருந்தார்.
அமைதியானவன், அதிகம் பேசாதவன் என்று நினைத்திருக்க இப்படி ஓர் முரட்டலா? அதிலும் அந்த கண்கள் வெளிப்படுத்திய ஆக்ரோஷம் அவரை சில்லிட செய்தது.
அடக்கப்பட்ட கோபத்துடன் பல்லை கடித்தபடி வெண்ணிலாவின் அறைக்குள் நுழைய அவள் இருவருக்குமான உணவை எடுத்து வைத்துக்கொண்டிருந்தாள்.
“உன் சித்தப்பா ஊருக்கு கிளம்பறார். நீ எதுவுமே சொல்லலை?…” என்று பேச்சை ஆரம்பிக்க,
“பேருக்கு தான் சித்தப்பா. நான் அப்படி சொல்லி கூட கூப்பிட்டு எத்தனையோ வருஷமாச்சு. அவருக்கு புரிஞ்சதோ இல்லையோ. நான் கூப்பிடறதில்லை…”
வெண்ணிலாவின் பேச்சில் கிஞ்சித்தும் சொந்தம் என்னும் பற்றில்லை. ஒருவித வெறுமையை தாங்கி இருந்தது அவள் வார்த்தைகள்.
“நிலா…” என்னவோ நினைத்து அவன் ஆரம்பிக்க, விஷயம் எங்கோ சென்றது.
“அவர் நிறைய சீட் பண்ணுவார் கௌரவம். சொந்தத்துக்குள்ளையே நம்பகத்தன்மை இல்லாத மனுஷங்க உறவா இருந்தா போதுமா? அவரை எப்பவோ நான் ஒதுக்கிட்டேன். மத்தவங்க பார்வைக்கு அப்படி தெரியாது. உணர்வால அவர் எனக்கு யாருமே இல்லைன்ற முடிவுக்கு வந்துட்டேன் நான்…”
“அம்மாப்பா இல்லை. அனாமத்தான சொத்து. குடுத்ததை திரும்ப கேட்காதவங்க, இதனால மட்டுமே ஒட்டிட்டிருக்கிற உறவு. ஆனா வளர்மதி சித்தியும், நந்தாவும் அப்படி இல்லை. நாங்க அவங்களுக்காக தான் பார்த்துட்டு இருக்கோம். இவரெல்லாம் ஒரு பொருட்டே இல்லை…”
“கஷ்டம்ன்னு நிறைய வாங்குவார். ஆனா எதையும் திரும்ப குடுத்ததா சரித்திரமே இல்லை. ஆனா எல்லாமே நாங்களா போய் தாங்கி கூட்டிட்டு வந்து எல்லாம் செய்ய வைக்கனுமாம். எதிர்பார்ப்பில்லாத அன்பு, அதுல ஒரு நேர்மை, உண்மை இல்லாதவங்க எல்லாம் எதுக்கு…” என பொரிந்தாள்.
அவளின் பேச்சுக்கள் ஏதோ ஒரு வகையில் கௌரவ்வை அதிகத்திற்கும் தாக்கியது.
அழுத்தங்கள் மேலும் மேலும் கூடியது. கண்மூடி தன்னை நிதானித்தவன் மௌனமாய் நின்றான்.
“ப்ச், நான் டென்ஷனா இருந்து உங்களையும் மூட் அவுட் பண்ணிட்டேன்…” என தலையை தட்டிக்கொண்டவள்,
“ஓகே, சில். வாங்க சாப்பிடலாம்…” என்று அவனை அழைத்தாள்.
“பசியில்லை நிலா. நீ சாப்பிடு…” என சொல்லிவிட்டு கட்டிலில் சென்று படுத்துவிட்டான் கௌரவ்.
மனம் ஒரு நிலையில் இல்லை. காலையில் இருந்தே ஒவ்வொன்றும் அவனின் அழுத்தங்களை கூட்டுவதாகவே உள்ளுணர்வு உணர்த்தியது.
அவனுக்கவனே பயந்துகொண்டிருந்தான். இதையும் விட பெரிதாய் எதையோ தான் சந்திக்கவிருக்கிறோம் என்று.
“கௌரவம், அச்சோ வாங்க ப்ளீஸ்…” என்று அவனின் கை பிடித்து எழுப்ப,