பல அழைப்புகள் எடுக்கப்படாமல் நிராகரிக்கப்பட, தகவல் அனுப்பினான் பிரேம்.
பிரேம் பணியிடம் சென்று மூன்று நாட்களாகியிருந்தது. அவன் இருக்கும் வரை தெரியாத ஒன்று, வேலை நிமித்தமாக பெங்களூர் சென்றதும் நாச்சிக்கு புரிந்தது.
‘திருமணத்திற்கு பின்பு அவனுடனான தன்னுடைய வாழ்க்கை, தனது சுற்றம் துறந்து பெங்களூரில் தானோ?’ குடும்பத்தை விடுத்து தனித்து வாழ முடியாது என்பதே நாச்சியின் பரிதவிப்பிற்கான காரணம்.
அவளால் பிரேமை விடுத்துக் கூட இருந்திட முடியும், அவளின் பெற்றோர், உடன் பிறந்தோர், அப்பத்தா, அத்தை, மாமா, அவளைச் சுற்றி அவளை பெரிய மனிதியாக உணர்த்திடும் மீனாள், அங்கையை விடுத்து இருந்திட முடியாது.
பெண் பிள்ளைகள் அனைவரும் என்றோ ஒரு நாள் வேறு அகம் சென்றுதானே ஆக வேண்டும். அதுதானே நிதர்சனம்.
புரிந்த போதும்… தவிக்கிறாள்.
‘மற்ற பெண்களைப்போல் வேறு வீட்டில் வாக்கப்பட்டால் என்ன செய்திருப்பாய்?’ மனதின் கேள்விக்கு, “அதுதான் இல்லையே!” என்று பதில் கொடுத்தவளுக்கு ‘நிச்சயம் அப்படியொரு நிலையில் திருமணமே வேண்டாமென்றே சொல்லியிருப்பேன்’ என்கிற எண்ணமே!
பிரேமிடமிருந்து தகவலும், அழைப்புகளும் வந்து கொண்டே இருக்க…
அங்கு பிரேம் அவளின் வார்த்தையில் வெறும் கூடாக நின்றிருந்தான்.
அதன் பின்னர் பல முறை அழைத்து நாச்சியின் அலைப்பேசி அணைத்து வைக்கப்பட்டிருப்பதாகவே வர, அவளின் முடிவில் குழம்பிப்போனான்.
திடீரென இப்படி சொல்வதற்கு காரணம் தெரியாது மருகினான்.
உண்மை என்னவென்று அறியாது மற்றவர்களிடம் என்னவென்று கேட்பதென தொய்ந்து போனான்.
அவனால் வேலையில் கவனம் செலுத்த முடியவில்லை. பொங்கலுக்காக நீண்ட விடுப்பு எடுத்தவனால் இப்போது விடுப்பு கேட்க முடியாது போனது. இரண்டு மணி நேரம் கூட அவனால் தாக்குப்பிடிக்க முடியவில்லை.
வீரனுக்கு அழைத்துவிட்டான்.
ஆனால் என்ன சொல்லி கேட்பதென்று தெரியாது இயல்பாக பேசுவதைப்போல் நலன் விசாரித்து வைத்துவிட்டான். வேலையில் கவனம் பதிய மறுத்தது.
படிக்கும் காலத்திலேயே காதலுக்காக, நாச்சிக்காக அடி வாங்கியவன். அந்த காதல் கை சேருமோ சேராதோ என்று தவித்த நாட்கள் அதிகம். இப்படி கைகூடும் என்று எதிர்பாராது கை சேர முன் வந்த தன் காதல் கரம் கோர்க்காமலே மாண்டுவிடுமோ என்ற அச்சம் நெஞ்சம் முழுக்க வியாபிக்க, தன்னுடைய மேலதிகாரிக்கு விடுப்பு கேட்டு அவன் அனுப்பிய மின்னஞ்சல் சில நிமிடங்களில் நிராகரிக்கப்பட்டதோடு, பொங்கல் விடுமுறையில் சென்ற நாட்களுக்கான வேலை பெண்டிங்கில் இருப்பதை இன்றே முடித்து கொடுக்கும்படியும் தகவல் வர நொந்தேப்போனான்.
மீண்டும் ஒருமுறை நாச்சிக்கு அழைத்தவன், இணைப்பு கிடைக்காமல் போகவே அலைப்பேசியை விட்டெரிந்தான். அவனது கேபினின் தடுப்பில் மோதி மேசையில் விழ, அலைப்பேசி தன்னுயிரை துறந்தது.
அதனை எடுக்கத் தோன்றாது முயன்று வரவழைத்த கவனத்துடன் வேலையில் மூழ்கினான்.
மாலை கடந்து இரவு வந்தபோதும் தன் வேலையிலேயே கண்ணாக இருந்தான். நாட்சியின் வார்த்தையின் மீது உண்டான கோபத்தை தன் பணியில் காண்பித்தான். ஒட்டு மொத்த வேலையும் அன்றே முடித்து விடுபவன் போல் தீவிரமாக வேலையில் அமர்ந்து இருந்தவனை அவனது மேலாளர் வந்து வீட்டிற்கு செல்லுமாறு கூறியும், தான் முடிக்க வேண்டிய வேலைகளை முடித்துவிட்டே வீடு சென்றான்.
வீட்டிற்கு சென்றவனால் நிலை கொள்ள முடியவில்லை கையில் அலைபேசியும் இல்லாது நாச்சியை எப்படி தொடர்பு கொள்வது என தெரியாமல் தவித்துக் குழம்பி நின்றான்.
தன்னுடன் தங்கியிருக்கும் வெளிமாநிலத்து நண்பன் வந்து சேர்ந்ததும் அவனது அலைபேசியை பெற்று நாச்சிக்கு அழைக்க அப்பொழுதும் அவளது எண் அணைத்து வைக்கப்பட்டருப்பதாகவே பதில் வந்தது.
அந்நேரத்தில் எப்படி அவளை தொடர்பு கொள்வது என்று தெரியாமல் லிங்கத்திற்கு அழைக்க அவனோ தான் ஆழ்ந்த உறக்கத்தில் இருப்பதாக அரை உறக்கத்தில் பேசி வைத்து விட்டான்.
லிங்கம் என்ன ஏது என்றுக்கூட கேட்காது வைத்ததில் கடுப்பான பிரேம் நண்பனிடம் அலைபேசியை கொடுத்துவிட்டு தனதறை நுழைந்து கதவினை அறைந்து சாற்றி மெத்தையில் கவிழ்ந்தடித்து படுத்துக் கொண்டான்.
தன் காதல் தனக்கு கிடைக்கவே கிடைக்காது எனும் நிலையில் கூட பிரேம் உடைந்து அழுதது இல்லை. ஆனால் இன்று நாச்சியின் ‘திருமணத்தை நிறுத்திவிடு’ எனும் சொல் அவனது இதயத்தை நன்றாக கீறி விட்டிருந்தது கண்களில் கண்ணீர் வடிவது கூட தெரியாது மூடிய விழிகளுடன் மனதில் போராடிக் கொண்டிருந்தான்.
எப்போது உறங்கினான் என்றே தெரியவில்லை.
விடியலில் பிரேமின் நண்பன் வந்து கதவை தட்டவும், எழுந்து திறந்தவன்… அங்கு அவனை கடந்து தனக்கு முன் நின்று இருந்த வீரனை கண்டதும் தாவி அணைத்துக் கொண்டான்.
“மாமா!”
வீரன் பிரேமின் செயலில் அவனது நண்பன் வீரஜ்ஜை சங்கடத்துடன் பார்க்க இருவரின் சூழல் புரிந்து வீரஜ் அங்கிருந்து நகர்ந்தான்.
வீரஜ் இன்று தான் வீரனை நேரில் காண்கிறான். பிரேமை பார்த்திட உறவினர்கள் என்று இதுவரை யாரும் வந்தது இல்லை. இது முதல் முறை என்பதாலும் ப்ரேமின் நேற்று இரவு முதலான கசங்கிய முகமும் ஏதோ உணர்த்திட… சூரஜ் அவர்களுக்கு தனிமையளித்து நண்பனாக புரிதலுடன் விலகிச் சென்றிருந்தான்.
“சாரி மாமா. பதறி வரவச்சிட்டனா?” என்று கேட்ட பிரேம், வீரனிடமிருந்து பிரிந்திட…
“மொபைல் என்னாச்சு?” எனக் கேட்டான் வீரன்.
“அது” என்று தயங்கிய பிரேம், நாச்சி சொல்லியது முதல் எல்லாம் கூறினான்.
“இதை எனக்கு போன் போட்டப்பவே சொல்ல வேண்டியதுதானேடே… குரலில் சுரத்தே இல்லை. என்னன்னு நெனக்கிறது. திரும்ப போன் போட்டாக்கா அது லைன் கெடக்கவே இல்லை. உன் கூட்டாளிங்க நெம்பரும் தெரியாது. என்ன பண்ணட்டும். உனக்கு என்னன்னு அங்கட்டு உட்கார்ந்து வெசனப்பட்டு இருக்காம கெளம்பி வந்தாக்கா, ஒண்ணுமில்லாத விடயத்தை போட்டு உருட்டிட்டு இருக்க. நைட் இங்கன ஒரு லோடு வர வேண்டியது. அதை சாக்கா வச்சு வந்தது நல்லதாகிப்போச்சு. வூட்டுல சொல்லியிருந்தாக்கா, அவீங்களும் தேவையில்லாம வெசனம் கொண்டிருப்பாய்ங்க” என்ற வீரன், “நாச்சியா ஏதும் உன்னைய சீண்டி விளையாட அப்படி சொல்லியிருக்கும். எதுக்கும் நான் என்னான்னு விசாரிக்குறேன். இலைன்னாக்கா நாச்சியை பேச சொல்லுறேன்” என்றான்.
“உனக்கு என்னவோன்னு அங்கட்டு உட்கார்ந்து பதறி கண்டதை ரோசிச்சு மனசை குழப்பிக்கிறதுக்கு நேரில் வந்தது திருப்திடே” என்ற வீரன், “சரி நான் புறப்படுறேன்” என்றான்.
“வந்ததும் கெளம்புறியே மாமா. இரு குளிச்சிட்டு சாப்பிட்டு போலாம்” என்ற பிரேம் வீரனின் வருகையால் தெளிந்திருந்தான்.
வீரன் குளித்து தயாராகி வரும் முன்னர் சூரஜ்ஜுடன் இணைந்து, உணவினை செய்து மேசையில் வைத்திருந்தான்.
நண்பனை முறையாக வீரனுக்கு அறிமுகம் செய்து வைத்தான்.
வீரன் வேட்டி சட்டை அணிந்திருக்க, சூரஜ்ஜுக்கு தமிழ் தெரியாததால் வீரனிடம் ஆங்கிலத்தில் பேசினால் அவனுக்கு புரியுமா என்று தயங்கிட, தன்னுடைய தயக்கம் அவசியமற்றது என்று வீரன் பேசிய ஸ்டைலான ஆங்கிலத்தில் வாய் பிளந்து பார்த்தான் சூரஜ்.
“வாவ்…”
“என் மாமாவை என்னன்னு நெனச்ச. அவரு அக்ரிகல்ச்சரில் மாஸ்டர் பண்ணியிருக்கிறார். எம்பிஏ கோல்ட் மெடலிஸ்ட்” என்று பெருமை பேசினான் பிரேம்.
“அடே போதும்டே” என்ற வீரன், “தோற்றத்துக்கும் அறிவுக்கும் சம்மந்தமில்லை சூரஜ். நம்முடைய அடையாளத்தை மாற்றி தோற்றத்தை உருவகப்படுத்துவதில் எனக்கு உடன்பாடில்லை” என்று தெளிவான ஆங்கிலத்தில் கூறிட, அதனை ஆமோதித்து தலையாட்டிய சூரஜ் “நீங்க பேசுற தமிழ் வித்தியாசமா இருக்கு” என்றான். பிரேமிடம் பேசியதை வைத்து.
இதற்கு விளக்கம் சொல்ல வேண்டுமானால் மொத்த தமிழ்நாட்டையும் பிச்சி போடணும் என நினைத்த வீரன்,
“நேட்டிவ் ஸ்லாங்” என்பதோடு முடித்துக்கொண்டான்.
உணவு நேரம் முடிய… பிரேம் வீரனை பஸ் ஏற்றி விட பேருந்து நிலையம் அழைத்துச் சென்றான்.
செல்லும் வழியில் பிரேமிற்கு புது அலைப்பேசி ஒன்றை வாங்கிக்கொடுத்தான். பிரேம் மறுக்கவெல்லாம் இல்லை. வீட்டில் யாருக்கு ஒன்றென்றாலும் செய்வது வீரனாகத்தான் இருக்கும். சிறுவயது முதலே அது பழக்கமானதால் வீரனிடம் எதையும் மறுக்கத் தோன்றாது.
பேருந்தில் அமர்ந்த பின்னர்,
“அடுத்தவாரம் நிச்சயத்துக்கு தேதி குறிச்சிருக்காய்ங்க பிரேம். மாமா உன்கிட்ட எப்போ வரணும் சொல்லுவாரு. நேத்துதேன் அம்மாவும், அப்பத்தாவும் நம்ம வூர் கோவில் ஜோதிடர்கிட்ட தேதி வாங்கிட்டு வந்தாய்ங்க” என்றான்.
“எனக்கு பயமா இருக்கு மாமா. அப்போ நான் பண்ணதை வச்சு நிறுத்த சொல்லுறாளோ?” எனக் கேட்டான் கவலையாக.
“அதுதேன் காரணமின்னா, அவள் மொதலில் சம்மதம் சொல்லியிருக்கவே மாட்டாடே! கண்டதை உழட்டிக்கமா இரும். நாச்சியை நான் பேச சொல்லுறேன்” என்று மீண்டும் மீண்டும் சுணங்கி நிற்கும் பிரேமை அதட்டி மிரட்டி சரிகட்டியே கிளம்பினான் வீரன்.
வீரன் ஊர் வந்து சேர்ந்ததும்…
“என்னண்ணே நல்லத்தானே இருக்கியான்?” என்று பிரேம் பற்றி விசாரித்தான் லிங்கம்.
செல்லும் முன்பு லிங்கத்திடம் மட்டும் சொல்லிச் சென்றிருந்தான் வீரன்.
“நாச்சியாதேன் ஏதோ சொல்லி அவனை கலங்கடிச்சிருக்கு” என்ற வீரன் தங்கை எங்கென்று பார்க்க, அவளோ கரியனிடம் கதை பேசிக் கொண்டிருந்தாள்.
“ஃபோன் ஆன் பண்ணட்டுமா கரியா? என்னான்னு காரணம் சொல்லாமலே அவீங்கள கஷ்டப்படுதிப்புட்டேன். எம்புட்டு தவிக்கிறாய்ங்களோ!” என்று கரியனிடம் புலம்பிய நாச்சி தன்னுடைய அண்ணன்களை கண்டுவிட்டு வாயினை மூடிக்கொண்டாள்.
“பிரேம்கிட்ட ஏதோ சொன்னியாம்? உனக்கு விருப்பமில்லாம ஏதும் வேணாமின்னு நிச்சயத்தை நிறுத்த சொல்லி போன் போடுறான் அவென்” என்றான் வீரன்.
வீரன் சொல்லியதும் நாச்சிக்கு பிரேம் மீது கோபம் சுறுசுறுவென வந்தது.
அதே கோபத்தோடு,
“அவீங்ககிட்ட நான் பேசிக்கிறேன்” என்றாள்.
“சட்டுப்புட்டுன்னு பேசி ஒரு முடிவ சொல்லுத்தா. நிச்சயத்துக்கு வேலை பார்க்கட்டுமா இல்லையான்னு தெரியனுமில்லையா” என்று மேலும் ஏற்றிவிட்டான் லிங்கம்.
“சொல்லுறேன்” என்றவள் வெகு வேகமாக வீட்டிற்குள் சென்றாள்.
“என்னண்ணே இப்புடி மாட்டிவிட்டுடீங்க… பிரேம் நிலை?” என்று லிங்கம் கேட்க, “கொளுத்திபோட்டாதேன் நல்லா வெடிக்கும்டே” என்று வீரன் சொல்ல… இருவரும் இணைந்து சிரித்தனர்.
“வாடே” என்று வீரன் லிங்கத்தின் தோளில் கை போட, கரியன் “ம்மா…” என்று கத்தியது.
“ம்க்கும்… நீ எங்கள்ட்ட ஒட்டுதல் காட்டுனின்னா இவனுக்கு மூக்கு வேர்த்திடுமே” என்று லிங்கம் சொல்ல… அவனின் பேச்சு புரிந்தது போல கரியன் லிங்கத்தின் தோளில் நெற்றியை முட்டியது.
“போதும்டே… உன் ஐஸ்” என்ற லிங்கம், “இவனுக்கு எல்லாரும் இவனையே கொஞ்சணும்” என்று அவனின் நெற்றியில் தடவிக் கொடுத்தான்.
கரியனிடம் இருவரும் உரையாடிக் கொண்டிருக்க… சுந்தரேசனிடமிருந்து வீரனுக்கு அழைப்பு வந்தது.