நாச்சி அழைத்த முதல் ஒலியிலேயே பிரேம் அழைப்பை ஏற்றிருந்தான்.
“அழகு…” என்று பிரேம் சொல்லியது தான், இவள் பட்டாசாக வெடித்துவிட்டாள்.
“என்னடே நெனைச்சிருக்க நீயி பதினேழு வயசுலே முத்தம் கொடுப்ப, லவ் பண்ணுறன்னு பின்னுக்கு சுத்துவ, இப்போ கல்யாணம் வேண்டாமின்னு நிறுத்த சொல்லுவியா? இந்த ஜென்மத்துல இந்த நாச்சியாதேன் உன் பொண்டாட்டி” என்று சீறினாள்.
முதலில் நாச்சி பேச ஆரம்பித்ததும் என்னவென்று புரியாத பிரேமுக்கு, அவள் இறுதியாக சொன்னதில், வீரன் நாச்சியை பேச வைக்க எதையோ சொல்லியிருக்கிறான் என்பது புரிந்து, அவளின் சாராம்சம் புரிந்ததும் சன்னமாக புன்னகைத்துக் கொண்டான்.
“சரி சொல்லு… நீயி என்னத்துக்கு நிச்சயத்தை நிறுத்த சொன்ன?”
“அது…” நாச்சி தடுமாறினாள்.
“சொல்லு அழகு… என்னவா இருக்கட்டும். நான் தெரிஞ்சிக்கணும். இந்த வார்த்தை நம்ம கல்யாணத்துக்கு பொறவு, ஏன் உன்னை கட்டிகிட்டன்னு மாறி வந்திடக்கூடாது. இரைஞ்சி கேக்குறேன்” என்றான்.
“நீயி இப்போ பாக்குற வேலை உனக்கு ரொம்ப புடிக்குமா?”
இதென்ன சம்மந்தமில்லா கேள்வி என நினைத்தாலும் பதில் கூறினான்.
“நான் படிச்ச படிப்புக்கு இந்த வேலை பாக்குறேன். மத்தபடி புடிச்சின்னு சொல்ல முடியாது” என்ற பிரேம், “அன்றைய சம்பவத்துக்கு பொறவு வூட்டுல எல்லார் மூஞ்சியையும் பார்த்து இருக்க முடியும் தோணல. அதேன் படிப்பு முடியவும் இம்புட்டு தூரம் வந்துபுட்டேன். எனக்கும் நம்ம வூட்டோட இருந்து, வீரா மாமா மாறி பண்ணை, தோப்பு, ஆலைன்னு இயற்கையோடு வேலை செய்யணுந்தேன் ஆசை. பொறந்ததுலேர்ந்து அனுபவிச்ச சுத்தமான காத்து, எல்லாம் மனசோடன்னு ஆகிப்போச்சு. ஆனால் ஐயாகிட்ட எப்படி சொல்ல. இங்கட்டு தனியா இருக்க வேதனை நீயி வந்த பொறவுதேன் சரியாகும் நினைக்குறேன்” என்றான்.
“அப்போ விருப்பமில்லாமதேன் அங்கன உட்கார்ந்திருக்கியா?” என ஆர்வமாக வினவினாள்.
“அப்படித்தேன் வச்சிக்கோயேன்” என்ற பிரேம், “இப்போ இதையெதுக்கு கேட்டுகிட்டிருக்க?” என்று வினவினான்.
“எனக்கு கல்யாணத்துக்கு பொறவு அங்கன உன்னோட தனியா வந்திருக்க விருப்பமில்லை. இங்கன நம்ம சொந்தத்தோட இருக்கணும். எல்லாரையும் விட்டுப்போட்டு தனியா அனாதை மாறி அங்கன நாலு சொவத்துக்குள்ள பேச்சு தொணைக்கு கூட உன் மூஞ்சியை எதிர்பார்த்து மொட்டு மொட்டுன்னு உட்கார்ந்திருக்க முடியாது. உன்னையே வேலையை வுடுன்னு சொல்லமாட்டேன். உனக்கு விருப்பம் என்னவோ செஞ்சிக்கோ. என்னைய அங்கன கூப்பிடக்கூடாது” என்றாள்.
இதற்காகத்தான் நிச்சயத்தை நிறுத்த சொல்லியிருக்கிறாள் என்பது அவள் சொல்லாமலே பிரேமுக்கு விளங்கியது.
“சரி… நான் வந்து வந்து உன்னைய பார்த்துக்கிறேன்” என்று சிரித்துக்கொண்டே சொல்லிய பிரேமின் மனதில் வேறொரு எண்ணம் ஓடியது. நடைமுறை படுத்துவதில் சிக்கலிருந்தால், தான் இப்போ சொல்லி நடக்காமல் போய்விட்டால் ஏமாற்றமாகிப்போகுமென சொல்லாது விட்டான்.
அதன் பின்னர் அவர்களுக்கு மட்டுமே உரித்தான சில காதல் பாஷைகள் பரிமாற்றம் கொள்ள… அவர்களின் பேச்சு நீண்டது. (சங்கீத ஸ்வரங்கள்…)
அடுத்த நாளிலிருந்து அழகு நாச்சி, பிரேமின் திருமணத்திற்கான ஒவ்வொன்றும் அரங்கேறத் தொடங்கியது.
நிச்சயத்தை தங்களது வீட்டிலே வைத்துக்கொள்ள முடிவு செய்து, திருமணம் மீனாட்சி அம்மன் கோவிலும், விருந்து தங்களுடைய ஹோட்டலிலும் என்று முடிவு செய்யப்பட்டது.
சரியாக நிச்சயத்தின் முதல் நாள் இரவு பிரேம் வந்து சேர்ந்தான்.
“உன் பரிசத்துக்கே நீயிதேன் கடைசி ஆளா வந்திருக்க” என்று அலைப்பேசி வழியாக நள்ளிரவில் பொருமி தள்ளினாள் நாச்சி.
“வேலை அப்படி நானென்ன செய்யட்டும் அழகு. அடிக்கடி லீவு கொடுக்கமாட்டாய்ங்க.”
“கல்யாணத்தன்னைக்கு தாலி கட்டுற நேரந்தேன் வருவியா?” என்று கேட்டு அழைப்பை முறித்திருந்தாள்.
“டேய் பிரேம் இது லவ் மேரேஜ் மாறியே தெரியலடா” என்று பிரேம் புலம்பும் அளவுக்கு நாச்சி அவனின் வேலையை காரணமாக வைத்து பல சண்டைகள் போட்டிருந்தாள்.
‘இதற்கு அவள் அந்த வேலையை விட்டுப்போட்டு வந்துடுன்னே சொல்லியிருக்கலாம்’ என்று எண்ணியேவிட்டான்.
“மூஞ்சியை உர்ருன்னு வச்சுக்கிட்டு இருக்காம, உறங்கு. நாளைக்கு முகம் நல்லாயிருக்க வேண்டாமா?” என்று நாச்சிக்கு பிரேம் தகவல் அனுப்பிட, அவளோ உடனே பார்த்ததோடு முறைக்கும் எமோஜிகளை அனுப்பி வைத்திட, மல்லாக்க படுத்திருந்தவன் மார்பில் அலைபேசியை கிடத்தியவனாக, தலைக்கு பின்னால் கைகளை கோர்த்து, தன்னவளுடனான சுவாரஸ்ய வாழ்வை எண்ணி புன்னகையில் திளைத்தான்.
காலை வீரனின் இல்லம் பரபரப்பாகக் காட்சியளித்தது.
வீட்டின் முதல் விசேடம்… விமர்சையாக செய்திட ஆசைப்பட்டனர்.
வீரனும், லிங்கமும் பம்பரமாக சுழன்று கொண்டிருக்க, நிச்சயம் முடிந்து விருந்தாளிகளுக்கு உணவளிக்க தொழுவத்திற்கு முன்னிருந்த களத்தில் அறுசுவை உணவு பாண்டியன் மற்றும் மருதனின் மேற்பார்வையில் தடபுடலாக தயாராகிக் கொண்டிருந்தது.
சுபாவும் சுந்தரேசனுடன் வந்திருந்தாள்.
இளைய பெண்கள் நால்வரும், உடுத்தும் உடை முதல் அணிகலன்கள் வரை எடுத்து வைத்து பார்த்துக்கொண்டிருக்க…
“வெரசா கெளம்புங்கட்டி… ஆளுவ வர ஆரம்பிச்சிட்டாய்ங்க” என்று மீனாட்சி பாட்டி அதட்டிட, ஒவ்வொருவரகாத் தயராகத் தொடங்கினர்.
சுபாவும் மீனாளும் சேர்ந்து தான் நாச்சிக்கு அலங்காரம் செய்தனர். முதல் நாளே தங்கள் தோட்டத்தில் பறித்த, முல்லை, சம்பங்கி, மனோ ரஞ்சிதம் என பலவகை மலர்களை மீனாள் பறித்து கட்டி வைத்திருந்தாள்.
அம்மலர்களை கொண்டு மட்டுமே நாச்சியின் நீண்ட பின்னலை அழகாக்கி, முழுக்க தங்க நகைகள் அணிவித்து தேவதையென மின்ன வைத்திருந்தனர்.
“அள்ளுற நாச்சி” என்று சுபா அவளின் கன்னம் கிள்ள…
“பிரேம் அண்ணேக்கு மிச்சம் வைங்க சுபாக்கா” என்று கேலி செய்தாள் அங்கை.
“வயசுக்கு தக்கன பேசு அங்கை” என்று அதட்டிய மீனாள், நாச்சியின் தாடையில் உதட்டுக்கு கீழே ஒற்றை கரும்புள்ளி வைத்து, “கண்ணு படாமல் இருக்கும்” என்க,
“அம்சமா இருக்கத்தா” என்று அங்கு வந்த மகா கன்னம் வழித்து நெட்டி உடைத்தார்.
“நீயி தாவணி உடுத்தலையாடி… சட்டை பாவாடையை மாட்டிக்கிட்டு நிக்குறவ?” அங்கையை கவனித்து மகா கேட்டிட, “இதுவே போதும்மா” என்று முடித்துக்கொண்டாள் அங்கை.
“ஏன் இல்லாம… நல்லாவே இருக்குமாட்டி. இன்னும் ஒரு மாசத்துல பரீட்சை முடிஞ்சிடுச்சுன்னா காலேஜ் போயிடுவேன். அப்பவும் என்னைய சின்ன புள்ளைன்னு சொல்லுவீங்களா? எனக்கு கல்யாண வயசு ஆவ வருசம் பல இருக்குதே! அது வரைக்கும் அவரை டென்சன் பண்ண வேணாமாட்டிக்குன்னு வீரா மாமா பேச்சைக்கேட்டு அமைதியா இருக்கேன்” என்றாள்.
அங்கையின் பேச்சில் மீனாள் வாயடைத்து நிற்க,
“நாச்சியை கூட்டிட்டுப் போயாச்சு இன்னும் என்னட்டி பேசிட்டு இருக்கீங்க?” என்று சுபா வர, எப்போ அவர்கள் இந்த அறையை விட்டு சென்றார்கள் என்று தெரியாது விழித்தாள் மீனாள்.
‘லிங்கு மாமா எனக்கு உன்னைய நெனச்சா பாவமாயிருக்கு’ என்று நினைத்த மீனாள், சுபாவின் இழுப்பில் நிச்சயம் நடக்கும் கூடத்திற்கு வந்தாள்.
அங்கை சென்று வீரனின் அருகில் அமர்ந்துகொள்ள…
சுபாவும், மீனாளும் வீட்டு பெண்களின் பின் அமர்ந்தனர்.
அந்நேரம் தான் நல்லான் குடும்பத்தோடு வந்திருந்தார். அவருக்கு இங்கு வர விருப்பமே இல்லை. ஆனால் அவரின் பல கணக்குகள் சரியாக நடைபெற உறவாட வேண்டியுள்ளதே.
வேண்டா வெறுப்பாக மகாவின் அருகில் சென்று அமர்ந்தார் வசந்தி.
அங்கு வந்ததும் கௌதமின் கண்கள் சுபாவின் மீதுதான் நிலைத்தது. அவனது பார்வை மொழியில் சுபா, தலைகவிழ… “காதலுக்கு பச்சைக் கொடி பறந்திடுச்சு போலயே” என்று மீனாள் கிண்டல் செய்து சிரித்தாள்.
கௌசிக் அங்கையை தேடி அவளின் அருகில் அமர, லிங்கம் மனதோடு பொருமிப்போனான். அந்த பொருமலுக்கான காரணம் புரியாது தலையை உதறினான்.
“என்னடே?”
“ஒன்னுமில்லண்ணே… ஏதோ பூச்சி” என்று லிங்கம் சொல்ல,
“மாலையில ஏதும் இருந்திருக்கும்” என்று லிங்கத்தின் முன்னிருந்த மாலை அடங்கிய தட்டினை முன் நகர்த்தி வைத்தான் வீரன்.
அடுத்து நடக்க வேண்டியவை நடைபெற, நாச்சியையும், பிரேமையும் ஒன்றாக அமர வைத்து உறவினர்கள் மாலை அணிவித்தனர்.
நிச்சய ஓலை வாசிக்கப்பட்டு அவர்களின் திருமணம் உறுதி செய்யப்பட்டது.
திருமணத்திற்கு இரண்டு மாதத்தில் தேதி குறிக்கப்பட்டிருந்தது.
மாலை மறைவில் பிரேம் நாச்சியின் கையினை சுரண்ட…
“இந்த சீண்டலெல்லாம் கல்யாணத்துக்கு பொறவுதேன். இல்லை கத்திப்புடிவேன்” என்று மிரட்டினாள் நாச்சி.
“ம்மா… தாயே கத்திகித்திப்புடாதத்தா… அன்னைக்கு நீயி கத்தி நானு வாங்குனதே இன்னும் நினைவிருக்குமாட்டிக்கு” என்ற பிரேம் பிறர் அறியாது தன் கன்னத்தை தேய்த்துவிட்டான்.
“வீரண்ணே அடி அப்புடியாக்கும். செவுளு பறந்திருச்சுல அன்னைக்கு” எனக் கேட்டு நாச்சி உதடு பிரியாது சிரிக்க…
“போதும்… இத்தோடு நினைவலைகளை நிப்பாட்டிப்போம்” என்று அப்பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைத்தான் பிரேம்.
அனைத்தும் சிறப்பாக முடிய, பந்தி பரிமாறப்பட்டது. எதர்ச்சையாக அமர்ந்தது போல சுபாவின் அருகில் கௌதம் அமர்ந்து உணவு உண்ண… இருவருக்குமிடையே மற்றவர் அறியா சிறு சிறு சில்மிஷங்கள் காதல் பேச்சுக்களென சென்றது.
கௌதமிற்கு அந்த பக்கம் அமர்ந்திருந்த அங்கை…
“சின்னபுள்ளைய நிம்மதியா உங்க விடுங்கய்யா” என்று கௌதம் காது பட கத்தினாள்.
“புரிஞ்சா சரித்தேன்” என்று அங்கையின் இலையில் அப்பளத்தை அடித்து நொறுக்கி வைத்த லிங்கம், அவளை முறைத்துக்கொண்டே நகர்ந்தான்.
“என்னத்துக்கு முறைக்குராவுக?” என்று முணுமுணுத்த அங்கை, லிங்கத்தையே பார்வையால் தொடர, இலை வெட்ட பெஞ்சின் மீதிருந்த கத்தியை எடுத்து கண்ணை நோண்டுவிடுவேன் எனும் விதமாக காட்டி மிரட்டினான் லிங்கம்.
“இந்த மிராட்டலக்குலாம் அஞ்சுற ஆளு நானில்லையாக்கும்” என்று அங்கை கத்தியே சொல்ல…
“உங்க முறைக்கார சலம்பல பார்த்தாக்கா அடுத்த சோடி நீயிங்கதேன் போலிருக்கே” என்றது உறவுக்கார பெரிய கிழவி. அதை ஆமோதித்து சிலர் பேச…
‘இனி இவ இருக்க பக்கட்டுக்கூட அடி வச்சிடக்கூடாது’ என்று மனதோடு புலம்பியவனாக அங்கிருந்து வேகமாக சென்றிருந்தான் லிங்கம்.
அவனின் வேகம், அவன் தன்னைவிட்டு விலகி ஓடுவதாக நினைத்து அங்கை தன்னுடைய மனதை சுருங்க வைத்தாள்.
சட்டென்று வாடிய தங்கையின் முகம் கண்டு மீனாளுக்கு என்னவோ போலாகினாலும், இதில் தங்கைக்கு எடுத்து சொல்ல வேண்டியவற்றை சொல்லியாயிற்று என்று அமைதியாகவே உண்டாள்.
வீரன் தன்னுடைய சின்னகுட்டியின் வாட்டம் கண்டு, அருகில் வந்து,
“உனக்கு பிடிக்குமின்னுதேன் பாசுந்தி செய்ய சொன்னேன். நீயி இன்னும் உண்களையோ” என்று சிறு கிண்ணத்தில் நிரப்பி அவள் முன் வைத்தான்.
“எதையும் சாப்பாட்டுல காட்டக்கூடாது. வேணாமின்னு முரண்டு பிடிக்கிறவங்களுக்கு, ஒருநா வேணுமாட்டிக்கு தோணும். அப்போ காலம் கடந்திருந்தா வருந்தபோவுறது அவீங்கதேன். நீயி வெசனப்படாத” என்று அங்கைக்கு தேறுதல் சொலவதைப்போல் மீனாளுக்கு வார்த்தையால் கொட்டு வைத்து சென்றிருந்தான் வீரன்.