கௌரவ்விற்கு தன் கருவிழிகள் நிலைகுத்திவிட்டது அவளின் பார்வையை கண்டு.
“நிறைய என்னோட ரகசியங்கள் எல்லாம் ஷேர் பன்றது இந்த ஆல்பத்துல தான். பேசிட்டே இருப்பேன். அவங்களும் கூட பேசற மாதிரி இருக்கும். சாவிக்கு நிறைய இதுல மறந்துடுச்சு. ஆனா எனக்கு அம்மா சொன்னது ஞாபகம் இருக்குன்னா பாருங்களேன்…” என்று ஆல்பத்தினை விரித்தாள்.
“அடிக்கடி ஏன் பார்ப்பேன்னு கேட்கலையே நீங்க?…” என்று கேட்டு அப்படி ஒரு சிரிப்பு.
“சின்ன வயசுல அம்மாவோட இந்த அலங்காரம், புடவை, ஜ்வேல்ஸ் எல்லாம் பார்த்து பயங்கர க்ரஷ். அதுக்காகவே எடுத்து காமிக்க சொல்லி கேட்பேன். அம்மா ஒன்னொன்னும் சரியா சொல்லுவாங்க. அதை கேட்கவே அவ்வளோ இன்ட்ரெஸ்ட்டிங்கா இருக்கும். கதை மாதிரி…” என்று ஒவ்வொரு பக்கமாய் விரித்தாள்.
ஒவ்வொன்றையும் கௌரவ்விற்கு விளக்கிக்கொண்டே அவள் வர கௌரவ்வின் இதயம் தாளம் தப்பி துடித்தது.
“போதும் நிலா, இன்னும் நிறைய பேஜ் இருக்கு. சாப்பிட்டு பார்க்கலாம்…” என்று அவனறியாமல் அதனை தடுக்க விளைந்தாலும் அவன் கரம் அடுத்த பக்கத்தை திருப்பியது.
“இன்னும் ரெண்டே ரெண்டு பேஜ்….” என்று அவன் திருப்பிய பக்கத்தை பார்த்தாள்.
“இதை பாருங்க…” என்று தாய் தந்தையுடன் நின்றவரை காண்பிக்க கௌரவ் இதயம் துடிக்க மறந்தது.
காரணமில்லாமல் அவனின் நெஞ்சை ஒரு உணர்வு அடைக்க செய்ய, மூச்சு சீரற்று வந்தது கௌரவ்விற்கு.
மீண்டும் மீண்டும் இரட்டை ஜடையில் நின்றிருந்த அந்த பெண்ணின் மீதே விழிகள் பதிய, உள்ளுக்குள் சத்தமின்றிய ஒரு குரல் ஓலமாய் ஓவென்று கதறி துடிப்பதை போல் அவனை உந்தி தள்ளியது.
“மத்தவங்க எல்லாரும் கோலார் தான். ஆனா இவங்க ரிலேட்டிவ் கிடையாது. அங்க அவங்கப்பா வேலைக்காக வந்து தங்கியிருந்தாங்க. எனக்கு அவ்வளோ பிடிக்கும் இவங்களை…” என்று அவள் காண்பித்து கூற கூற மனமெல்லாம் ரயிலோட்டம்.
தொண்டைக்குள் பெரும் கேவல் ஒன்று வெளிப்பட எத்தனித்தது. இது என்ன துடிக்கிறது உள்ளுக்குள் என அவனால் தன்னை நிலைப்படுத்திக்கொள்ள முடியவில்லை.
எங்கோயோ பார்த்து உடன் வளர்ந்தத ஒருவரை கண்டுகொள்ள முடியாததை போல் அவன் மனம் தவியாய் தவித்தது.
அரூபமாய் அவனை மெய்யணைக்க ஒரு உயிர் ஊசலாடுவதை போல கண்கள் வேதனையில் கலங்கிவிட்டது.
“இவங்க எவ்வளோ குட்டி பொண்ணு. ஆனம்மாவோடகல்யாணம் முடிஞ்சு மறுமாசமே இவங்களுக்கு கல்யாணம் பண்ணிட்டாங்களாம். உடனே குழந்தை வேற. பாவமா இருந்துச்சு. நான்லாம் எங்கம்மாவுக்கு லேட்டா தான் பிறந்தேனாம்….” என்றவள்,
“இவங்க கண்ணுக்காகவே பேர் வச்சிருப்பாங்க போல. பேர் கயல்விழி. இவ்வளோ அழகுன்னு தான் தேடி வந்து கல்யாணம் செஞ்சாங்களாம். அப்பறம் பார்க்க முடியலைன்னு சொன்னாங்க. நான் பார்க்க ஆசைப்பட்டவங்க. அம்மாவுக்கே சரியா விவரம் தெரியலையாம்…”
“அம்மாவும் அதிகமா அங்க கோலார்ல இருந்ததில்லை. பாட்டியும் அப்பாவும் ஆர்மில. ஸோ ஊர்ப்பக்கம் வர்றதெல்லாம் ரொம்ப ரேர்…” என பேசிக்கொண்டே இருக்க, அதற்குமேல் அமரமுடியாமல் மூச்சிற்காக எழுவதை போல எழுந்து பால்கனி கதவை திறந்து வெளியே வந்துவிட்டான் கௌரவ்.
நெஞ்சமெல்லாம் பெரிதாய் ஒரு வலியை தந்துகொண்டிருக்க, கண்களை விட்டு அகலவில்லை அவன் பார்த்த அந்த முகம்.
மீண்டும் மீண்டும் விழிகள் கலங்க அண்ணார்ந்து இருள் படர்ந்த அந்த வானத்தை பார்த்தான்.
அதுவரை மழையில் குளித்திருந்த வானத்தில் அதன் சலனமின்றி சின்ன சின்னதாய் ஒன்றிரண்டு நட்சத்திரங்கள் எட்டிப்பார்ப்பதை போலிருந்தது.
குரல்வளையை கவ்விப்பிடிக்கும் வேதனையை விழுங்க முயன்று தோற்றவன் இதழ்கள் சத்தமின்றி ‘ம்மா’ என்றது.
“கௌரவ்…” என வெண்ணிலாவும் அவனோடு வந்துவிட அவள் புறம் திரும்பவில்லை.
“என்ன சட்டுன்னு எழுந்து வந்துட்டீங்க?…” என்றாள் அவனை தன்னை நோக்கி திருப்பி.