அதிரன், வீக் எண்ட் கூட நிம்மதியா குடும்பத்து கூட இருக்க முடியுதா? என்று கருவிக் கொண்டே வெகு நேரமாய் அடுத்த அறையில் ஆஃபீஸ் காலில் பிஸியாக இருக்க, இங்கே சர்மி தாங்கள் குடும்பமாக வெளியே செல்கிறோம் என்று கூறி வந்து இசையை அள்ளிச் சென்றது கூட அவனுக்குத் தெரியாது போனது..
கணவன் அறைக்குள்ளும் மகள் வெளியேயும் சென்று விட எஞ்சிய ஆருத்ராக்கு பொழுது நகர்வேனா என்று கடுப்பை கிளப்பியது.. டிவியை ஆன் செய்து அதில் சொற்ப நேரம் மூழ்கியவளுக்கு அதுவும் போரடித்ததில் கொஞ்ச நேரம் கிச்சனில் பாத்திரங்களை உருட்டி விட்டு வந்து பார்த்தும் அதிரன் வரவில்லை என்றதும் இது ஆகறது இல்லை என்று அம்மா வீட்டுக்கு செல்வது என்ற முடிவோடு அறைக்கு சென்று உடை மாற்றிக் கொண்டு அறைக் கதவைத் திறக்க, அதே நேரம் அதிரனும் அறைக் கதவைத் திறந்து வெளியில் வந்தான்..
ஆருத்ராவை பார்த்தவன்,
“ருத்ரா! எங்கே இசையைக் காணோம்? வீடு முழுதும் கண்களால் அலசியபடி கேட்டான்..
“வெளியே போறோம்ன்னு
அக்கா வந்து கூப்டா.. அதான் அவங்க கூட கிளம்பிட்டா..” அலட்சியமாய் சொன்னாள்..
“எது உங்க அக்கா கூட கிளம்பிட்டாளா? ப்ச்.. உன் அக்கா இருக்காளே,,, நான் நாம மூணு பேரும் வெளியே போலாம்னு பிளான்ல இருந்தேன்.. அதைக் கெடுத்து விட்டுட்டா..” என்று பல்லைக் கடித்தான்..
அவனை முறைத்தவள்,
“எது இவளோ நேரமா இருந்தீங்களே அந்த ரூம எங்க ரெண்டு பேருக்கும் சுத்திக் காட்ட இருந்தீங்களா? இசையே அந்த ரூம் கதவை உத்து உத்துப் பார்த்து போரடிச்சு தான் அக்கா கேட்டதும் முதல் ஆளா போறேன்னா.. நானும் பாவமேன்னு அனுப்பி வச்சேன்.. மாமா கார்ல இடம் இருந்திருந்தா நானுமே போயிருப்பேன்..” என்றாள் கடுப்பாய்..
அதிரன் தனக்கு ஃபோன் செய்த அதிகாரியை மனதில் வண்டி வண்டியாக கழுவி ஊற்றியவன், ஆருத்ரா கடைசியாக சொன்னதில் இடம் இல்லாத அந்தக் காருக்கு நன்றி சொன்னான் மனதிற்குள்..
ஆனால் ஆருத்ராவோ,
“அதான் நான் அம்மா வீட்டுக்கு கிளம்பிட்டேன்..” என்று சொல்லி வாசலுக்கு விரைய அவளை முந்தி போய் கதவை அடைத்து அதில் முதுகை சாய்த்து நின்றான் அதிரன்..
“என்ன? தள்ளுங்க..”
“அதெல்லாம் தள்ளவும் முடியாது.. நீ எங்கயும் போகவும் முடியாது..” என்று அடமாய் சொன்னான்..
அவளோ, ” இசையும் இல்லை.. நீங்களும் உங்க வேலையைப் பார்த்திட்டு இருப்பீங்க.. நான் தனியா இங்க இருந்து சுவத்துக் கூட பேசவா?.. அதெல்லாம் என்னால முடியாது நான் போவேன்.. முதல்ல வழிய மறைக்காம தள்ளி போங்க..” என்று அவளும் அடம் பிடிக்க… அவளை அப்படியே தள்ளிச் சென்று ஷோபாவில் அமர்த்தியவன், அவள் எழ முயற்சிக்கவும் அதை செய்ய விடாதபடி அவள் மடியில் தலையை வைத்து படுத்துக் கொண்டான்..
அவளுக்கும் அந்த நொடிகள் ரசனைக்குரியதாய் மாற சண்டையை விடுத்து அவன் தலை கோத ஆரம்பித்தாள்..
அதிரன் எப்போதும் அவள் தலை கோத ஆரம்பித்தாலே கண் மூடுபவன் இன்று விழிமூட மனமில்லாமல் அவள் வதனத்தைப் பார்த்திருக்க, ஆருத்ரா “என்ன?” என்று மென்மையாக வினவினாள்..
அவளையே பார்த்துக் கொண்டு ஐந்து நிமிடம் அமைதியாயிருந்தவன்
“என்னை தேடினியா?” என்று கனிவான குரலில் கேட்டான்..
அவன் குரலும் ஆழ்ந்த பார்வையும் அவன் இன்றைய நாளைக் கேட்கவில்லை என்று ஆருத்ராவுக்கு தெரிவிக்க ஆருத்ராவின் கை அசையாது நின்றது அவன் சிகைக்குள்..
உன்னால உள்ளுக்குள்ள கண்ணீரோட போராட்டம்…
மாறாத உன் நினைப்பு என்னை கொல்லட்டும்…
‘அதிரனின் என்னைத் தேடுனியா?’ என்ற கேள்வியில் ஆருத்ராக்கு அவனைத் தேடிய நொடிகள் கண் முன் வந்து போயின.. அந்த நாட்களில் நினைவை நிறுத்தி தன் தேடலைப் பகிர்ந்து கொண்டாள் அவனுடன்..
“ரொம்பவே தேடினேன் அதிரன்.. நைட்டு தூங்கும் போது உங்க கையணைவ தேடினேன்.. சாப்பிட முடியாம கஷ்டப்படும் போது ஊட்டி விட உங்க கையைத் தேடினேன்.. பிரசவ வலி இது தான்னு தெரியாம பொய் வலி வரும் போதெல்லாம், எங்க நீங்க இல்லாமலே குழந்தைய பெத்துடுவேனோன்னு பயந்து போயிருக்கேன்.. அப்பறம் நிஜமாவே பிரசவ வலி வரும்போது நீங்க வரமாட்டீங்க என்ற நிதர்சனத்தை ஏத்துக்குற அளவுக்கு மனசை தயார் படுத்தி வச்சிருந்தாலும் வந்துட மாட்டீங்களா? என்ற ஆசை இல்லாம இல்ல.. குழந்தை பிறந்த அப்பறம் எனக்காக இல்லைன்னாலும் உங்க பொண்ணுக்காக வர மாட்டீங்களான்னு ஏங்கி போயிருக்கேன்.. அப்பறம் இசையோட ஒவ்வொரு சந்தோஷ தருணத்திலயும் தனியா நின்னப்போ அதைப் பகிர்ந்துக்க உங்களை தான் ரொம்ப தேடினேன்..” தன் தேடல்களை சொல்லிக் கொண்டே சென்றவள் இடை வலிக்கவும் குனிந்து பார்த்தாள்..
அதிரன் தான் அவள் பேசப் பேச உணர்ச்சிக் குவியலாய் மாறிப் போனவன் அவள் இடையைக் கட்டிக் கொண்டு அவள் வயிற்றில் தன் முகத்தைப் புதைத்துக் கொண்டான்.. அவள் வேதனை தாங்காது..
அவன் நிலை உணர்ந்தவள், அவனை இன்னும் தன்னோடு இறுக்கிக் கொண்டே அவன் கேசத்தை வலிமையாகக் கோதினாள்..
“அதிரன் ஜஸ்ட் இனஃப்.. இத்தோட எல்லாத்தையும் முடிச்சுக்கலாம்.. திரும்பத் திரும்ப கடந்து போன நாட்களை எண்ணிக் கலங்கிட்டே இருந்தா ப்ரசென்ட்ல சந்தோஷம்னு எதுவுமே இருக்காது.. உனக்கு வேண்டியத கேளு.. தரேன்னு சொன்னீங்கள்ள அதிரன்? நான் கூட நான் கேட்கிறத என்னைக்கும் உங்களால தர முடியாதுன்னு சொல்ல்லிருக்கேன்ல? என்றவள் கேட்க அவள் வயிற்றில் இருந்து தலையை எடுக்காமலே, ஆம்.. என்று தலையசைத்தான்..
எனக்கு நம்ம இழந்த அந்த ஆறு வருஷம் திரும்ப வேணும்.. அப்போ நம்மால அனுபவிக்க முடியாம போன நம்மோட சந்தோஷமான தருணங்கள்.. அதை எனக்கு தருவீங்களா அதிரன்?” அவள் கேள்வியில் சட்டென நிமிர்ந்து அமர்ந்தவன் அவளை இயலாமைப் பார்வை பார்த்தான்..
ஆருத்ரா அவனைப் பார்த்து மென்மையாய் புன்னகைத்துக் கொண்டவள், “முடியாதில்ல.. அப்பறம் ஏன் எதைக் கேட்டாலும் தருவேன்னு பில்டப் குடுத்துட்டு இறுந்தீங்க?..” என்று கேலி போல் சொன்னவள் தொடர்ந்து அதுக்குப் பதிலா நான் உங்களால குடுக்க முடிஞ்ச இன்னொன்னு கேட்கவா அதிரன்?” என்றவும் அதிரன் செல்கள் மொத்தமும் சுறுசுறுப்பாக,
“என்னன்னு சொல்லு ருத்ரா?” என்று பரபரத்தான்.. இப்போதே அவள் கேட்பதை அவள் காலடியில் கொண்டு வந்து சேர்க்கும் வேகம் அவனிடம்..
அவன் பரபரப்பில் மெல்ல புன்னகைத்தவள், “எனக்கு கடந்து போன வலியோட சுவடு எதுவுமே இல்லாத ரொம்ப பீஸ் புல்லான ப்ரசன்ட் அண்ட் பியூச்சர் வேணும்.. இழந்த அந்த ஆறு வருஷம் ஒரு பொருட்டே இல்லன்னு தோணுற அளவுக்கு திகட்ட திகட்ட ஒரு எதிர்காலம் வேணும் அதிரன்.. தருவீங்களா?” என்று அவன் தாடையில் கைவைத்துத் தலை சாய்த்துக் கேட்டாள்..
அவள் கேட்ட விஷயத்திலும் கேட்ட அழகிலும் அதிரன் தன்னைத் தொலைத்தவன் அவள் முகத்தைத் தன் இரு கைகளில் தாங்கி அவள் கன்னங்களை தன் பெரு விரலால் வருடி விட்டவன், வாய் மொழியால் அன்றி அவள் நெற்றியில் இதழ் பதித்து சத்தியம் செய்தான்.. இனி வரும் காலம் நமக்கு வசந்தமே என்று..
அதை உணர்ந்து அனுபவித்தவளும் அவன் நிலையை மாற்ற எண்ணி, “ஒரு நிமிஷம் இருங்க வரேன்..” என்று எழுந்து சென்றவள் மீண்டும் வரும் போது அவள் லேப்டாப்பை கையில் ஏந்தி வந்தாள்.. அதிரன் அவளைக் கேள்வியாக நோக்க எதுவும் பேசாதவள் இசை பிறந்தது முதலான புகைப்படங்கள் அடங்கிய பென்டிரைவை லாப்டாப்பில் இணைத்து ஒவ்வொரு தருணத்தையும் சுவாரஸ்யமாக சொல்ல ஆரம்பிக்க.. அதிரனுக்கு தான் கூட இல்லையே என்ற வருத்தம் பின்னுக்கு சென்று மனைவியின் சொற்கள் வழி அந்த காலத்திற்கே சென்று அவர்கள் இருவருடனும் இணைந்து தானும் அந்த இன்பங்களில் களித்து இருந்த மாயையே தோன்றி விட்டது..
எல்லாம் பார்த்து முடித்ததும் ஆருத்ரா, “உங்களுக்கு ஒன்னு தெரியுமா? இசைக்கு ஏன் நான் இசைன்னு பேர் வச்சேன்னு?” என்று ஆர்வமாய் கேட்க, அவன் உதடு பிதுக்கினான் தெரியாது என்று..
“அ..திரன், ஆ..ருத்ரா, இ..சைரதி.. ‘அ,ஆ,இ’ ன்னு நம்ம மூணு பேரு பேருமே உயிர் எழுத்துல அடுத்து அடுத்து வரும்ன்னு தான்..” என்று ரசனையாக சொன்னவளை காதலாக பார்த்தவன், திடீரென அவள் லாப்டாப்பை தன் பக்கம் திருப்பி தீவிரமாய் ஏதோ தேட ஆரம்பித்தான்..
இவள் என்ன என்று கேட்க,
“ஈ” ல நல்லதா ஆம்பளை புள்ளை பேரு தேடிட்டு இருக்கேன்.. ஓரக்கண்ணில் ஆருத்ராவை பார்த்தவாறே குறும்பாய் சொல்ல, ஒரு நொடி விழித்தவள் புரிந்ததும் அவனை விடுத்து பார்வையை வேறு புறம் திருப்பிக் கொண்டு அவ்விடம் இருந்து எழுந்து போக முயன்றவளின் கையைப் பிடித்து சுண்டி விட்டவன் அவள் தன் மேல் வந்து விழவும் இறுக்கிக் கொண்டான்..
“பிடிக்கலையா?” அவள் காதோரம் கிசுகிசுப்பான குரலில் கேட்டான்.. அவள் மனம் அவனுக்கும் புரிகிறது தான், இருந்தும் வேண்டுமென்றே கேட்டான்.. ஒருவேளை அவள் மறுத்தாலும் அவன் கட்டாயப்படுத்த மாட்டான்.. ஆனால் அவள் வேறு சொன்னாள்..
“நான் பேரு செலக்ட் பண்ணிட்டு தான் இந்த வீட்டுக்கே வந்தேன்..” அவனை மயக்கும் குரலில் அவள் சொன்ன வார்த்தைகளை கேட்டவன்
உடல் சிலிர்த்துப் போனான்.. அவள் முதலில் தன்னை நம்பியது பெரிதல்ல.. ஆனால் தான் இத்தனை செய்த பிறகும் தன் மேல் அவள் வைத்திருக்கும் நம்பிக்கை.. அதற்கு ஈடு இந்த உலகில் ஏதும் இல்லை..
அது தந்த பூரண உணர்வில்,
“அப்போ நான் தான் லேட்டா?” என்று கேட்டுக்கொண்டே அவளை அள்ளிக் கொண்டவன் மூச்சு முட்டும் முத்தங்களுடன் அவளை கொள்ளையிட ஆரம்பித்தான்.. தன்னவளின் வாசத்திலேயே அவள் வசம் மொத்தம் கிறங்கிப் போய் இத்தனை வருட ஏக்கங்களும் தீரத் தீர வன்மையும் மென்மையும் கலந்து அவளை மீண்டும் மீண்டும் நாடினான் அதிரன்.. ஒருவழியாய் உடல் களைத்து மதிய உணவையும் மறந்து இருவரும் மாலை நான்கு மணியளவில் தான் உறங்கிப் போயினர்..
முதலில் கண் விழித்த ஆருத்ரா இருட்டாக இருக்கவும் அதிரனிடம் இருந்து மெல்லப் பிரிந்து தொலைபேசியில் நேரம் பார்த்தாள்.. மணி ஏழு என்று காட்டவே மகள் நினைவில் சர்மிக்கு அழைத்தாள்..
அழைப்பை ஏற்றவள் ,
“சொல்லு ஆரு..” என்க..
“அக்கா கிளம்பியாச்சா? நைட் டின்னர் உங்களுக்கும் சேர்த்து சமைக்கவா?”
“அதெல்லாம் வேணாம் ஆரு.. நாங்க வெளிய டின்னர் முடிச்சிட்டு தான் வருவோம்.. நீயும் எதுவும் பண்ணாத.. உங்க ரெண்டு பேருக்கும் சேர்த்தே வாங்கிட்டு வந்திடுறோம்..” என்று வைத்து விட, அவளும் அலுப்பில் சரியென்று வைத்து விட்டாள்..
இப்போது அதிரனைப் பார்த்தாள்.. இன்னமும் நிர்மலமான முகத்துடன் உறங்கிக் கொண்டு தான் இருந்தான்.. மெல்ல அவன் சிகை வருடி அவன் இமையோரம் இதழ் பதித்தவள் விலகப் போக உறக்கத்திலேயே எட்டி அவளை அணைத்துக் கொண்டான்.. அவளுக்கும் அவனுடனேயே இருக்க ஆசை தான்.. ஆனால் இன்னும் கொஞ்ச நேரத்தில் அவர்கள் வந்து விடுவார்களே.. மனமே இன்றி அவனைப் பிரிந்து குளியலறை சென்றாள்..
அவள் அகன்ற சில நிமிடங்களிலேயே அதிரனும் கண்ணைக் கசக்கி எழுந்தவன் மனைவி குளியலறையில் இருப்பதை உள்ளே கேட்ட தண்ணீர் சத்தம் உறுதிப்படுத்த எழுந்து சென்று குளியலறைக் கதவைத் தட்டினான்..
“ருத்ரா எதுக்குடி என்னை விட்டுட்டு எந்திரிச்சு வந்த? வெளிய வா எனக்கு நீ இன்னும் வேணும்..” என்று பொம்மையை கேட்டு அடம்பிடிக்கும் குழந்தை போல் அவன் வழமையாய் கதவில் மத்தளம் வாசிக்க ஆரம்பிக்க, அவளுக்குத் தான் ஐயோ என்று இருந்தது..
“பிளீஸ் அதிரன்.. டைம் பாருங்க.. போய் முதல்ல ஃப்ரெஷ் அப் ஆயிட்டு வாங்க.. பக்கத்து ரூம் பாத்ரூம் யூஸ் பண்ணிக்கோங்க..”
“அதெல்லாம் முடியாது.. நீ முதல்ல வெளிய வா..” என்று அவளை அதட்டிக் கொண்டிருந்தான்..
“முடியாதுனா அப்படியே நின்னு கத்திட்டு இருங்க.. இசை ஆன் த வே..” என்று விட்டு அவள் ஒன்றுமே பேசாது அமைதியாகி விட, இவனும் இசை என்றதும் அடங்கியவன்
“நீ மாட்டுவல்லடி என்கிட்ட.. அப்போ வச்சிக்கிறேன் உன்ன..” என்று கருவி விட்டு தன் உடைகளை எடுத்துக் கொண்டு அடுத்த அறைக்குள் நுழைந்தான்..
அவன் வெளியேறியதும் மெல்ல கதவைத் திறந்தவள், அறையை எட்டிப் பார்த்து விட்டு வேகவேகமாக கிச்சன் சென்று காபி தயாரிக்க ஆரம்பித்தாள்.. அவர்கள் வரும் வரை கதறும் வயிற்றுக்கு காபியாவது ஈயலாமே என்று..
தனக்கானதை சமையல் அறையிலேயே குடித்து முடித்து கப்பை கழுவி வைக்கவும் அதிரன் வரும் அரவம் உணர்ந்து… அவனுக்கு காபியை எடுத்து கொண்டு சென்றவள் “அதிரன் காபி..” என்று டீபாயில் வைத்து விட்டு டிவியை போட்டு அமர்ந்து விட்டாள்..
அவள் அமர்ந்ததும் அவளை ஒட்டிக் கொண்டு அமர்ந்தவன் கையில் இருந்த டவலால் இருவர் தலையையும் சேர்த்துப் போர்த்திக் கொண்டு…
வெளிச்சத்தில என்னைப் பார்த்துப் பேச வெட்கமாயிருந்தா இப்டியே பேசு ருத்ரா…” என்று ஹஸ்கி வாய்சில் சீண்டினான்..
“ஷ்ஷ்… அதிரன்..” என்று அதட்ட முற்பட்டவள் குரலே கொஞ்சலாய் வர, டவலை தூக்கி அவன் மீது வீசிவிட்டு அவனை விட்டுத் தள்ளி அமர்ந்தாள்.. அதிரன் சிரிப்புடன் காபியைக் கையில் எடுத்தவன் டவலை அவள் கையில் கொடுத்து விட்டு அவள் கால்மாட்டில் அமர்ந்து கொண்டான்.. அவள் அவன் தலையைத் துவட்டி விட கண்ணை மூடி அமர்ந்து இடையிடையே காபியை உறிஞ்சியவனுக்கு தன் பழைய நாட்கள் திரும்பிய திருப்தி.. ஆருத்ராவுக்குமே.. இவர்களின் இந்த மோன நிலையை வெளியே கேட்ட காரின் சப்தம் கலைத்தது..
இசை முன்னே ஓடி வர பின்னே சர்மி வந்தவள், “இந்தாங்க ரெண்டு பேரும் சாப்பிட்ருங்க..” என்று பார்சலை டைனிங்கில் வைத்தவள்,
“இப்போ நின்னு பேச டைம் இல்ல.. இன்னொரு நாள் வரேன்.. பை..” என்று அரக்கப் பறக்க விடை பெற்றுக் கிளம்பி விட்டாள்..
அவள் சென்றதும் அதிரன் இசையின் புறம் பார்வையைப் பதித்து,
“அப்பறம் மேடம் எங்க போயிட்டு வரீங்க? காலைல இருந்து கண்லையே படல?” தன் முன் நின்றிருந்த இசையை போலியாய் முறைத்துக் கொண்டே கேட்டான் அதிரன்..
அவன் கோபம் உண்மை என்றே எண்ணிய குழந்தை,
“அம்மாகிட்ட உங்ககிட்ட சொல்ல சொல்லிட்டு தான் நான் பெரியம்மா கூட போனேன்..” என்று உதடு பிதுக்கி சிணுங்கியது குழந்தை..
“அப்பிடியா? ஆனா உங்க அம்மாக்கே நீ போனது தெரியாதுன்னு சொன்னா? என் கூட சேர்ந்து அவளும் தான் உன்ன தேடினா.. வேணா ருத்ராகிட்ட கேட்டுப்பாரு..” என்ற
இசை பாவமாய் தாயைப் பார்த்தாள்..
“அப்பா சும்மா விளையாடுறார்..” என்று ஆருத்ரா செய்கை செய்ய, அதைப் புரிந்து கொண்டு தந்தையைப் பார்க்க அதிரனும் சிரித்தபடி அவளை நோக்கி கையை நீட்டினான்.. ஓடி வந்து தந்தையின் மடியில் குதித்தவள், தாயின் கையையும் பிடித்துக் கொண்டே இன்றைய நாளின் உற்சாக பொழுதுகளை எல்லாம் கிள்ளை மொழியில் உரைக்க.. கேட்டிருந்த தாய்க்கும் தகப்பனுக்கும் செவிக்கு இனிய விருந்து கிடைத்ததில் வயிற்றுப் பசி கூட பின்னுக்கு தள்ளிப் போனது.. பாதி சொல்லி முடிக்கும் முன்பே,
“ப்பா… தூக்கம் வருது..” என்றாள் கண்கள் சொக்க..
“சரிடா தூங்குங்க..” என்று அதிரன் தட்டிக் கொடுக்க ஆருத்ரா அவனைத் தடுத்தாள்..
“வெளிய இவ்வளவு நேரம் இருந்துட்டு வந்துட்டு குளிக்காமல் தூங்கறதா? இசை எந்திரிச்சு குளிச்சுட்டு படு..”
“ஹும்.. ஹும்… நெறையா தூக்கம் வருது..”
“ம்ஹூம்.. இந்தக் கதையே இங்க வேணாம்.. குளிக்க ஃபைவ் மினிட்ஸ் போதும்டா இசை.. எந்திரிமா..” ஆருத்ரா அவளை விடாது கட்டாயப் படுத்த..
அதிரன் மகளின் சோர்வில் இரக்கப்பட்டு “ரொம்ப சோர்வா இருக்கா பாரு.. இன்னைக்கு ஒரு நாள் விட்டுடேன் ருத்ரா..” என்று ஆருத்ராவிடம் சொல்லியவன் அவளைப் பார்க்க,
அவள் இவனைப் பார்த்த பார்வையில் முகம் சுருக்கியவன்,
“செல்லம்மா.. வாங்க அப்பா டக்குன்னு உடம்பு கழுவி விட்டு தூங்க வச்சிடுறேன்..” என்று அடுத்த சத்தமில்லாமல் அவளைத் தூக்கிக் கொண்டு உள்ளே சென்று மறைந்தான்..
அவன் இசையை உறங்க வைத்து விட்டு வர ஆருத்ரா அவனுக்கும் தனக்கும் பரிமாறிக் கொண்டு உண்ண ஆரம்பித்தாள்.. இருவரும் எதுவும் பேசிக் கொள்ளாமல் உண்டு முடித்த பின் ஆருத்ரா பாத்திரங்களை கழுவி வைக்க கிச்சனுக்கு செல்ல பின்னோடே சென்று அவளுக்கு உதவியவன், “ஏன் ருத்ரா அப்பிடி ஒரு பார்வை பார்த்த?” என்று கேட்டான்..
“எப்டி?”
“எப்டியா? ப்பா… முறைக்குறியா? எரிக்கிறியா?ன்னு நானே பயந்து போயிட்டேன்.. அப்டி ஒரு பார்வை பார்த்த.. அதுல கொஞ்சம் அதிருப்தியும் இருந்துச்சு.. அப்பறமும் என்கிட்ட நீ எதும் பேசலையே.. எதுவும் தப்பா பண்ணிட்டேனாடி? எதுனாலும் சொல்லிடுமா.. இப்டி அமைதியா இருந்து வதைக்காத..” என்று இறைஞ்சிய குரலில் சொன்னான்..
“அச்சோ.. நான் கோபமா எல்லாம் இல்ல.. ரெண்டு பேருமே மதியம் சாப்பிடாததால சாப்டு பேசிக்கலாம்னு அமைதியா சாப்டேன்.. அவ்ளோ தான்..”
அவள் சொல்லவே முகம் மலர்ந்தவன், “அப்பறம் ஏன் அப்டி முறைச்ச?”
“ம்ம்..” என்று இப்போதுமே முறைத்தவள் “நான் ஒரு நல்ல பழக்கத்தை செய்ன்னு இசைக்கிட்ட சொல்லும் போது.. பாவம் விடுன்னு அவ முன்னாடியே நீங்க என்கிட்ட சொல்றீங்க.. அவ அதையே இனி பாலோ பண்ணி நான் சொல்றத செய்யப் பிடிக்கலன்னா உங்ககிட்ட வந்து நின்னு நீங்க அவளுக்கு ஃபேவரா பண்ணனும்ன்னு எதிர்பார்க்க மாட்டாளா? எல்லா விஷயத்துக்கும் அது சரி வராதே அதிரன்.. இனிமே இசை விஷயத்துல நான் சொல்ற விஷயத்துல உங்களுக்கு ஏதாச்சும் கருத்து முரண்பாடு இருந்தா என்கிட்ட தனியா வந்து சொல்லுங்க.. இசை முன்னாடி எதுவும் பேச வேணாம்..”
அதிரனுக்கும் அப்போது தான் அவன் செய்த தவறு புரிந்தது.. இசை முன்னேயே ஆருத்ரா சொன்னதை தான் மறுத்தால்.. இதுவே தொடர்ந்தால், இசைக்கும் அப்போ அம்மா பேச்சு எல்லாம் செல்லாக் காசு.. அப்பா தான் மெயின் என்ற தாட் வந்திடும்.. அது நல்லதல்லவே.. பல குடும்பங்களில் நடக்கும் கொடுமையான விஷயம் இது தான்.. குழந்தையின் முன்னே தாயை தந்தை அலட்சியப்படுத்துவதைப் பார்த்தே வளர்ந்த குழந்தையும் பின்னாளில் அதையே செய்யும்.. அந்த நிலைமை தன் குடும்பத்தில் வேண்டவே வேண்டாம்.. தன் குடும்பத்தில் தனக்குமே மேலே ஆருத்ராவை வைத்து அழகு பார்க்கவே அதிரன் விரும்பினான்..
“சாரி ருத்ரா.. இனிமே இது மாதிரி பண்ண மாட்டேன்.. இப்டி வேற எதும் பண்ணேன்னா கூட தலைல ரெண்டு தட்டு தட்டி சொல்லிக்குடு.. நான் கேட்டுப்பேன்..” என்று அவள் தோளில் முகம் புதைத்தான்..
அவளும் புன்னகையோடு இசையோடு சேர்த்து அவனையும் தாயாய் தாங்கிக் கொண்டாள்..