Skip to content
Post Views: 13,624
“இப்போ என்னடி பிரச்சனை உனக்கு? என்ன செய்யணும்னு நினைக்கிற, அவங்க அப்படித்தான் மாத்த முடியாது அதுக்காக அவங்கள ஒதுக்கி வெக்கணுமா, உனக்குப் பிடிக்கலைன்னா நீ அமைதியா இருந்துக்கோ உன்னை எதுவும் அவங்க கேக்கல தான நீ உன் இஷடத்துக்குத்தானே இருக்க இதுக்கு அப்பறம் என்ன பண்ணனும்” என்றவனை அத்தனை வலியோடு பார்த்தாள் துளசி.
Advertisement
“அவங்க எல்லாரும் என்ன செஞ்சிருக்காங்கன்னு கூட உங்களுக்கு இதுவரைக்கும் புரியலல நான் என் இஷ்டத்துக்கு இருக்கேனா… அப்படி என் இஷ்டத்துக்கு என்ன பண்ணேன் உங்க குடும்பம் ஒண்ணா சேர்ந்து கூத்தடிக்குற இடத்துக்கு நான் வரலன்னு சொன்னது உங்களுக்கு நான் என் இஷ்டத்துக்கு இருக்கிறதா”.
Advertisement
Advertisement
“உங்களுக்கு என்னைக் கல்யாணம் செஞ்சுதான் குடுத்தாங்க அடிமையா விக்கல, எனக்குன்னு எந்த எதிர்ப்பார்ப்பும் இருக்க கூடாதா படிச்சவங்க படிக்காதவங்க எல்லாரும் பொம்பிளைகளை ஒரே மாதிரிதானே பாக்குறீங்க இன்னும் எவ்ளோதான் சகிச்சிக்கிட்டு போகணும்” என்றவளை கோபமாகத் திரும்பிப் பார்த்தான் வெற்றிவேல்.
Advertisement
அவளை நெருங்கியவன் “என்னடி சகிச்சேன் சகிச்சேன்ற அப்படி என்னத்த சகிச்சுகிட்ட எங்க வீட்டில யாரு உன்னைக் கொடுமை படுத்துறா அவங்க பாட்டுக்கும் தனியாதான இருக்காங்க எப்போவாது நாலுநாள் வந்து தாங்குறாங்க அப்பாவும் மூஞ்சியை காமிக்கணுமா உனக்கு” என்றவனை முழு வெறுப்போடு பார்த்தவள்.
“மனசாட்சி இருக்கா உங்களுக்கு இத்தனை வருஷத்துல உங்க அம்மா அப்பாகிட்ட முகம் காமிச்சுருக்கேனா இல்ல சத்தமாத்தான் ஒரு வார்த்தை பேசியிருப்பேனா” என்றவள் தளர்வாகச் சென்று மூலையில் அமர்ந்தாள், போதும் என்ன வாழ்க்கை இது வெறுத்துவிட்டது அனைத்தும்.
அமைதியாக உறங்கிக்கொண்டிருந்த குழந்தையைப் பார்த்தாள் நேற்றுமுதல் காய்ச்சல் சுருண்டு படுத்துக்கிடந்தது மூன்றுவயதான அந்தச் சிட்டு.
“இப்போ என்ன சமைக்கிரியா இல்ல வெளில வாங்கட்டுமா” என்றவனை நிமிர்ந்து பார்த்தவள் முகத்தில் இப்பொழுதும் எந்த உணர்ச்சிகளும் இல்லை, முகத்தை அழுந்தத் துடைத்தவள் குழந்தைக்கு நன்றாகப் போர்த்தி விட்டுவிட்டு “நானே சமைக்கிறேன்” என்று எழுந்து அடுப்படிக்கு சென்றாள்.
ஹாலில் மாமனாரும் மாமியாரும் வாட்ஸ்அப் வீடியோ பார்த்துச் சிரிக்கும் சத்தம் கேட்டது நெஞ்செல்லாம் அடைக்கும் வேதனையில் அவன் முன்னில் அழக் கூடாது என்ற வைராக்கியத்தோடு பல்லை அழுத்திக் கடித்துக்கொண்டு சமைக்க தொடங்கினாள், அவன் வேலைக்குக் கிளம்பி சென்றுவிட்டான்.
அடுப்பின் அருகே காலை வாங்கிவந்த சிக்கன் கவரில் இருந்ததது அதைப் பார்த்ததும் உள்ளிலிருந்து ஒரு கேவல் வெடித்தெழுந்தது, திருமணம் முடிவு செய்தபிறகு விதவிதமாகச் சிக்கன் குழம்பு வைக்கச் சொல்லி அவளை விரட்டிய தாயும் அந்த நாட்களும் நினைவு வந்தது.
“சின்னவளே உன் அக்காவை வரச்சொல்லு இந்தக் கோழியைக் குழம்பு வைக்கணும் மாப்பிளைக்கு சிக்கன் மட்டும்தான் பிடிக்கும்னு அவரோட அக்கா சொன்னாங்கல்ல அதை நல்லா செய்யக் கத்துக்க வேணாமா இவ, நானும் பாக்குறேன் கல்யாணம் முடிவானதுலயிருந்தே இப்படி ஒதுங்கியே இருக்கா” என்றார் சாந்தா.
தாயை எட்டி பார்த்த பார்கவி “அதுக்கு காரணம் நீதான் மா அக்காதான் விருப்பம் இல்லனு சொல்லுதுல நீங்க ஏன் இவ்ளோ பிடிவாதமா இந்தக் கல்யாணத்தை நடுத்துறீங்க, அப்படி என்ன உங்களுக்கு அவசரம் பெரியம்மா சொன்ன எதுவுமே உண்மையில்லன்னு உங்க மனசாட்சிக்கு தெரியும் ஆனாலும் உங்க அக்காதான் சரின்னு நீங்களே ஒரு வட்டத்தைப் போட்டுக்கிட்டு பெத்த பெண்ணுக்கே அநியாயம் செய்றீங்க” என்றவள்.
“இங்கபாரும்மா என் கல்யாணத்துக்கு இப்படிலாம் முடிவு செய்யாத நான்லாம் சும்மா இருக்கமாட்டேன் அக்கா மாதிரி” என்றவள் தன்னை பார்த்து முறைத்த தாயை சட்டை செய்யாமல் அக்காவின் அறைக்குச் சென்றாள்.
“அக்கா… அம்மா கூப்பிடுறாங்க சிக்கன் செய்யணுமாம்” என்றவள் கட்டிலில் அமர “ஹ்ம்ம் வரேன்” என்றவள் மடித்துக்கொண்டு இருந்த துணியை வைத்துவிட்டு அடுக்கலைக்குள் நுழைந்தாள் துளசி.
“ஏன்க்கா இப்படி இருக்க உனக்கு இந்தக் கல்யாணம் சுத்தமா பிடிக்கல எனக்கே தெரியுது வேண்டாம்னு சொல்லேன்” என்றாள் துர்கா.
“சொல்லி” என்ற மூத்தவளை பார்த்தவள்.
“சொல்லி நிறுத்து வேற பாக்கலாம்” என்க.
“இங்க என்ன நடக்குதுன்னு தெரிஞ்சு நீயே இப்படி சொல்லலாமா அவங்க முடிவு பண்ணிட்டாங்க இது நடக்கும் நடக்கட்டும் இதுதான் விதின்னா என்ன செய்ய, நீ சத்தமா பேசாத அப்பா காதுல விழப் போகுது இருக்குற வரைக்கும் அவர் நிம்மதியா இருக்கணும் பாரு” என்ற அக்காவின் கையைப் பற்றிக்கொண்டாள் பார்கவி.
“சாரிக்கா… ஆனா அப்பாக்கு இது தெரிஞ்சா எல்லாரையும் உண்டு இல்லன்னு ஆக்கியிருப்பார் ஆள் இல்லாத வீட்டில நரி நாட்டாமை பண்ண கதைதான் இங்கேயும்” என்றவள் என்றவள் அக்கா மடித்து கொண்டிருந்த துணிகளை மடிக்க சென்றாள்.
அடுப்படி சென்றவள் சிக்கன் அப்படியே பாத்திரத்தில் இருப்பதை பார்த்தாள் எப்பொழுதும் தாய் கழுகி வைப்பார் இப்பொழுது திருமணம் முடிவானதிலிருந்து அவளே அனைத்தையும் செய்யட்டும் என்று விட்டுவிட்டார்.
சுத்தம் செய்து முடிக்க உள்ளே வந்த சாந்தா “மாப்பிளைக்கு செய்யும்போது காரம் கொஞ்சம் கம்மியா செய் அவருக்குக் காரம் புடிக்காதாம்” என்க ஒன்றும் பேசாமல் அமைதியாகக் குழம்பை வைத்துமுடித்தாள் இங்கு இருப்பவர்களுக்கு நல்ல காரசாரமாக வேண்டும் அதற்க்கு தக்க செய்துமுடித்திருந்தாள்.
“நாங்க பெரியவ வீட்டுக்குப் போயிட்டு வரோம்” என்ற மாமனாரின் குரலில் அவளின் நினைவுகள் அறுபட்டது, மாமனார் மாமியார் இருவரையும் பார்த்துச் சம்மதமாகத் தலை அசைத்தாள், அனைத்தையும் சமைத்து முடித்து வீட்டை ஒதுங்க வைத்துக் குழந்தையை எழுப்பி ரசம்சாதம் ஊட்டிவிட்டு மடியில் கிடத்திக்கொண்டாள்.
காய்ச்சலுக்கான மருந்தைக் கொடுத்துத் தட்டிக்கொடுக்க மீண்டும் ஆழ்ந்த உறக்கத்திற்கு சென்றது பிள்ளை, துணிகளைக் காயவைத்துவிட்டு பிள்ளையுடன் வந்து படுத்துக்கொண்டாள் நேரம் பதினொன்று தொலைக்காட்சி பார்க்கக் கொஞ்சமும் விரும்மில்லை.
மொத்தத்தில் ஒரு எரிச்சல் வெளியில் காண்பிக்கமுடியாத கோபமும் வருத்தமும் இயலாமையும் நெஞ்சை அடைத்தது, உரக்க கத்தி அழக்கூட முடியாமல் அனைத்தையும் உள்ளேயே வைத்து வைத்துப் பைத்தியம் பிடிக்கும் போல இருந்ததது.
அலைபேசி அடிக்கும் சத்தத்தில் திரும்பிப் பார்த்தாள் அவளுடைய அருமை அம்மா… மீண்டும் மீண்டும் அடித்து ஓயும் அலைப்பேசியை பார்த்தே அமர்ந்திருந்தாள் அதன்பிறகு தங்கையின் முறை அதையும் எடுக்கவில்லை யாருடனும் பேசப் பிடிக்கவில்லை.
இப்பொழுது தேவை அமைதி எந்தச் சத்தமும் இல்லாத அமைதி அலைபேசியை அமைதிப்படுத்தியவள் குழந்தையின் அருகில் படுத்துக்கொண்டாள் விழிகள் மூடியவளின் மூளைக்குள் மீண்டும் பழைய நினைவுகள் சுழல தொடங்கியது.
விஜயகுமார் சாந்தா தம்பதிக்கு மூன்று பெண் பிள்ளைகள் அரசின் சித்த மருத்துவமனையில் மருந்துகளைத் தயார் செய்யும் பிரிவில் வேலையிலிருந்து ஓய்வு பெற்றவர் விஜயகுமார், சாந்தா குடும்பத்தலைவி.
முதலில் வீட்டை மட்டுமே பார்த்து வந்தவர் மூன்றும் பெண் பிள்ளைகளாகப் பிறந்ததும் தானும் ஏதாவது வேலை செய்தால் மட்டுமே சரியாக வரும் என்று முடிவுசெய்து கணவரின் மூலம் சித்த மருத்துவமனைக்கு மூலிகைகள் கொண்டுவரும் இடத்தில் கணவனை வைத்துப் பேசவைத்து குறைந்த விலைக்கு மூலிகைகளை வாங்கிக்கொண்டார்.
அதை வைத்து எண்ணெய் தலைக்குத் தேய்க்க சீயக்காய், முகத்துக்கு, உடம்புக்கு, கர்ப்பிணிகளுக்கு, பிரசவம் முடித்தவர்களுக்கு என்று வீட்டிலே தயாரித்து விற்பனை செய்யத் தொடங்கினார் முதலில் கொஞ்சம் மெதுவாகச் சென்ற வியாபாரம் சென்னையில் இருக்கும் சாந்தாவின் அக்கா ஜெயந்ததியின் முயற்சியில் நல்ல முன்னேற்றம் கண்டது.
தனக்கு தெரிந்தவர் அறிந்தவர் என்று நிறைய பேரிடம் சொல்லி ஆட்களைப் பிடித்துக் கொடுத்தார், அப்படி நல்ல வியாபாரம் கிடைக்க ஓட்டு வீடாக இருந்தததை இடித்து நான்கு படுக்கையறை கொண்ட வீடாக மாற்றிக் கட்டிக்கொண்டனர், மெல்ல மெல்ல பொருட்களும், ஒரு பக்கம் பெண் பிள்ளைகளுக்கு நகையும் சேர்க்க தொடங்கினார்.
சாந்தா சரியான கறார் பேர்விழி அப்படி இப்படி காசை நகர்த்தமாட்டார் இழுத்து பிடித்துக் குடும்பத்தைக் கட்டுக்கோப்பாக நடத்தி இரண்டு வருமானத்தையும் வைத்து ஒரு விதம் கொஞ்சம் நல்ல நிலைமையில் இருந்தனர், கர்நாடகாவை ஓட்டி இருக்கும் கஜனூர் அவர்களின் பூர்விகம் கொஞ்சம் பின்தங்கிய கிராமம் கூடப் பெரிதாக ஒன்றுமே இருக்காது.
இரண்டு சினிமா கொட்டகை உண்டு சுற்றிப்பார்க்க சில இடங்கள் சந்தை கோவில் அவ்வளவுதான் அந்த ஊர், ஆகையால் பெரிதாகச் செலவுகளும் இல்லை.
குடும்ப சொத்தாக விஜயகுமாருக்கு கிடைத்த வீடு என்பதால் நிறைய இடம் இருந்தது அதில் அனைத்து காய்கறிகளும் வளர்த்து வந்தார் சாந்தா, வீட்டிற்கு எடுத்துக்கொள்வதோடு அக்கம் பக்கம் அதையும் விற்று காசாக்குவார், கோழி, நாட்டுக்கோழி முட்டை வெண்ணை, நெய் அனைத்தும் தயார் செய்து விற்பார்.
விஜயகுமாரை விடச் சாந்தா அதிகம் சம்பாத்தித்தார் மூன்றும் பெண்பிள்ளை ஆனதால் சிறு பிராயத்தில் இருந்தே வேலைகளைப் பழக்கி விட்டுவிட்டார் அவர்களே வீட்டில் அனைத்து வேலையும் பார்க்க இவருக்கு அவருடைய வேலையைப் பார்க்க நேரம் கிடைத்தது.
மூத்தவள் துர்க்கா தேவி இரண்டாமவள் துளசி தந்தையின் செல்லப் பிள்ளை மூன்றாமவள் பார்கவி, மற்ற இருவரும் தாயை போலக் கொஞ்சம் பூசினார் போல உடல் நல்ல எலுமிச்சை நிறம்.
துளசி தந்தையை போலத் தேனின் நிறம் அளவான உயரம், அடர்த்தியான கூந்தல், நல்ல முகவடிவு முதலில் அவள் நிறத்தைக் கொண்டு பார்ப்பவர்கள் பெரிதாகக் கவனிக்க மாட்டார்கள் மீண்டும் அவளைப் பார்த்தால் அந்த வசீகரம் தெரியும் நம் பார்வையில் ரசனை கூடும்.
அதோடு எப்படி எல்லாம் உருண்டு பிரண்டு சாப்பிட்டாலும் அவளுக்கு உடலில் சதையே இருக்காது கச்சிதமான உடல் அதில் அவளுடைய அக்காவுக்குக் கொஞ்சம் பொறாமை கூட உண்டு, சிறுவயதிலிருந்தே சாந்தா அவளைக் கொஞ்சம் மட்டம் தட்டியே பேசுவார்.
“இந்தக் காலத்துல பொம்பள பிள்ளைங்க நிறமா இருந்தாத்தானே நல்ல வரன் வரும் இவளை எப்படி கரை சேர்க்க இவ நிறத்துக்கே அவங்க அதிகமா கேட்டா இவளுக்கு மட்டும்னு குடுக்க முடியுமா மத்த ரெண்டு பேரும் தப்பா எடுத்துக்க மாட்டாங்களா” என்று புலம்புவார்.
பேர் அண்ட் லவ்லி வாங்கி கொடுத்துப் போடச் சொல்லி அவள் உயிரை எடுப்பார் அவளுக்கு அதில் விருப்பமில்லை முகம் கழுகி ஒரு பொட்டை வைத்துக்கொண்டு போட்டதே தெரியாமல் கொஞ்சம் பவுடர் அதுமட்டுமே அவளுக்கு விருப்பம் தாயின் திட்டைச் சகிக்க முடியாமல் ஒரு மாதம் அதைப் பயன்படுத்த அவளுக்கு அது ஒத்துக்கொள்ளவில்லை.
முகம் முழுதும் கொப்பளங்கள் வந்து மிகவும் கஷ்டப்பட்டாள் விஜயகுமார் மனைவியைத் திட்டித் தீர்த்துவிட்டார், பக்கத்து டவுனில் தோல் மருத்துவர் ஒருவரை பார்த்து மருந்து ஓயின்மெண்ட் என்று ஆறு மாதங்கள் ஆனது முகம் சீராக அதோடு விடாமல் இந்தப் பழத்தைத் தேய்த்துக்கொள் தயிரை பூசிக்கொள் என்று அவளைப் படுத்துவார்.
“அம்மா நீ என்னதான் தலையால தண்ணி குடிச்சாலும் அவ கலர் ஆகமாட்டா வீனா ஏன் கஷ்டப்படுற” என்று துர்க்கா கேலி பேசுவாள், துள்சி அமைதி பெரிதாகப் பேசமாட்டாள் அதற்கும் காரணம் அவள் தாயே.
“ஏற்கனவே கலர் இல்ல இதுல வாயும் பேசி அடங்காபிடாரின்னு பேர் எடுத்தா எவன் காட்டுவான்” என்று அதற்கும் ஏசுவார் அதனாலே அவள் சுருண்டுகொண்டாள்.
தந்தையே அவளுக்கு எப்பொழுதும் துணை நிற்பது “என் பொண்ணு அழகி அது உங்கள மாதிரி பூத்து போன கண்ணு உள்ளவங்களுக்கு தெரியாது” என்பார் துர்காவிடம்.
துர்கா பார்மசி முடித்திருந்தாள் வேலை என்று எங்கும் செல்லவில்லை அதற்குள் அவளுக்கு வரன் வர அவளைத் திருச்சியில் உள்ள கல்லூரி பேராசியர் சேகருக்கு கட்டிக்கொடுத்தனர் இரண்டு வயதில் மகளும் உண்டு.
துளசி கல்லூரி படிப்பை முடித்திருந்தாள் பி.காம் படித்திருக்க சென்னைக்கு போய் வேலை செய்ய வேண்டும் என்று அவளுக்கு ஆசை இருந்தது, பிறந்ததிலிருந்து இந்த ஊரைத் தாண்டி எங்கும் சென்றதில்லை வருடத்தில் ஒருமுறை கோடை விடுமுறைக்கு சென்னையில் உள்ள பெரியம்மா வீட்டிற்கு செல்வார்கள் மற்றபடி தந்தை வழி சொந்தம் எல்லாம் இங்கேயேதான்.
தாய்க்கு உடன் பிறந்தவள் ஒரு அக்காள் மட்டுமே விடுமுறைக்கு அங்குச் சென்று வரும்போது பெரியம்மாவின் பிள்ளைகள் நடை உடை எல்லாம் ஏக்கம் கொள்ள வைக்கும் படித்து முடித்து இங்குக் கொஞ்சம் நாட்கள் வேலை செய்ய வேண்டும் என்று அப்பொழுதே ஆசைக்கொண்டாள்.
சாந்தாவுக்கு பெரிதாக விருப்பமில்லை இங்கேயே எதாவது வேலை பார்க்கச் சொன்னார் விஜயகுமார் மகளின் ஆசையை அறிந்துகொண்டு அவளைச் சென்னைக்கு அனுப்பினார், வாழ்வே திசைமாறி போகும் என்று கனவிலும் நினைக்கவில்லை அப்பொழுது.
error: Content is protected !!