கடல் – 5
ஆற்றுக்கு சென்றுவிட்டு ஒருமணிநேரத்தில் அக்காவும், தம்பியும் வீட்டிற்கு வர முருகய்யன் வீட்டு திண்ணையில் அமர்ந்திருந்தார்.
அவரை பார்த்ததும் “அய்யா” என குதித்துக்கொண்டு இளவரசன் அவரின் கழுத்தை கட்டிக்கொள்ள,
“சாமி…” என வாரி அணைத்துக்கொண்டார் அவர்.
இதனை பார்த்தும் பாராதபடி மின்னொளி தம்பியின் ஈர உடைகளை வீட்டின் முன் இருந்த வேப்பமரத்திற்கும் திண்ணை தூணிற்குமாய் கட்டப்பட்டிருந்த கொடி கயிற்றில் உலர்த்தினாள்.
இளவரசன் ஆற்றுக்கு போன கதையுடன் அங்கே மின்னொளி பேசியவற்றையும் சேர்த்து சொல்ல அவனின் மழலையில் புரிந்தும் புரியாமல் பார்த்தனர் அழகு பாட்டியும், முருகய்யனும்.
“சாமி சரியா சொல்லுய்யா…” என முருகய்யன் கேட்க ராஜாத்தி சிறு பாத்திரமும், மூன்று கிண்ணங்களுடன் வந்துவிட்டார்.
“இந்தாய்யா பூம்பருப்பு. அம்மா தாளிச்சேன்…” என ஒரு கிண்ணத்தில் அவனுக்கு போட்டுக்கொடுத்துவிட்டு மாமியாருக்கும், கணவருக்கும் தந்துவிட்டு மகனை பார்த்தார்.
இளவரசன் சொல்லியதில் யாரிடமோ மின்னொளி கோபமாய் பேசியிருக்கிறாள் என்றளவில் தான் புரிந்திருந்தது. ஆனால் யாரிடம் என்றும், என்னவென்றும் தான் புரியவில்லை. அவளிடம் கேட்டுவிடவும் முடியாது.
கோபம் எல்லாம் தன் கணவரின் மேல் தான் வந்தது. மின்னொளி ஒதுங்கி, ஒதுங்கி இருக்க முருகய்யனும் அதற்கேற்றார் போன்று அவளிடம் என்ன ஏதென கேட்காமல் இருப்பது ஒருவித எரிச்சலையும், சற்று பயத்தையும் தந்தது.
தன்னால் தான் நெருங்கமுயன்று முடியாமல் போனது. பெற்றவராக அவர் பேசவேண்டியது தானே? ஒரு பிடிப்பில்லாமலே போய்விட்டதே? என கவலையுடன் தான் இருந்தார் இன்றுவரை.
இப்பொழுது என்ன பிரச்சனையோ? என யோசனையுடன் இருந்தார். ஏற்கனவே காலையில் அன்னத்துடனான வாக்குவாதமும் அவரின் காதை எட்டியிருந்தது.
மாமியாரிடம் கண்ணை காண்பிக்க அவர் தான் கேட்பதாக மருமகளுக்கு தலையசைத்தார். அங்கே இருந்த தண்ணீர் தொட்டியில் கைகளை அலம்பிவிட்டு அவள் உள்ளே செல்ல திரும்ப,
“செத்த இங்கன ஒக்காரேன்…” என அழகு பாட்டி அவளின் கையை பற்றி அமர்த்த அவரை பார்த்தவள் தன் உடையை பார்த்தாள். வரும் வழியில் காற்றில் நன்றாக காய்ந்துதான் இருந்தது. இருந்தாலும் அதனை மாற்றவேண்டும்.
“செரி, போயி உடுப்ப மாத்திட்டு வா. வாரப்ப அடுப்புல கஞ்சி கொதிக்குது. சோறு வெந்துருச்சான்னு பாத்துட்டு வடிச்சுட்டு வா…” என சேர்த்து சொல்ல அவள் சென்றதும் பின்னால் செல்ல இருந்த ராஜாத்தியை,
“இந்தா இருத்தா. வாரப்ப பாத்துட்டு வருவா. நீயே கெடந்து அல்லாடற?…”
“எத்தே சோறு வச்சவளுக்கு வடிக்க வராதா? நா பாத்துட்டு வாரேன்…”
“அட இருங்கேன்ல…” என அழகு அதட்டவும் அமர்ந்துகொண்டார்.
“ஏம்லே மவனே, ஒம்மவளுக்கு இருவத்தோரு வயசு ஆகிப்போச்சு. என்னவே செய்யக்கெடக்க? பொழுது போனா எதாச்சும் ஒரு சண்டன்னு நிக்கிதா. நீ என்னடான்னா சடைக்கவே மாட்டிக்க. எதாச்சும் கேட்கறது?…” என்றவர்,
“ஒரு ஆசுப்பத்திரிக்காச்சும் கூட்டிச்செண்டு என்ன ஏதுன்னு பாக்கவேணாம்மாய்யா? இன்னிக்கு புள்ளப்பாலுக்கு வந்தவள்ல ஒருத்தி எங்காதுபடவே பேசிப்புட்டா. கெழவி நா. எந்திச்சு கேட்கமுன்ன போயிட்டா. சாகற காலத்துல நிம்மதின்னு இல்லாம போச்சே…” என்று கண்ணீர் கசிய பேச அவரருகே அவனது அமர்ந்துகொண்டார் ராஜாத்தி.
“என்னத்தே கண்ண கசக்கிட்டு. பேசாம இருங்க. எல்லாஞ்சரியாகிடும்…” என ஆறுதலாய் சொல்ல,
“என்னத்த செரியாக? மாப்பிள்ளைன்னு போய் பாக்க முடியுமாத்தா? ஏசிப்புடமாட்டாங்களா?…” என அந்த வயதான பெண்மணியின் கண்ணில் கண்ணீர் கோடாய் இறங்க,
“ஆத்தா இப்ப என்னத்துக்கு திடுதிப்புன்னு…” என கேட்ட முருகய்யனுக்கும் வார்த்தை வரவில்லை.
“பாத்துக்களாந்த்தே. நீங்க தகிரியமா இருங்க மொத…” என அவரின் முதுகை நீவிய ராஜாத்தி புரியாமல் பார்த்த மகனிடம்,
“எஞ்சாமி, அப்பத்தாளுக்கு போனில தண்ணி மொண்டுவா…” என்றதும் வேகமாய் எழுந்து ஓடியவன் தண்ணீர் கொண்டு வரும் முன் பாட்டி அழுவதை மின்னொளியின் காதில் போட்டுவிட்டு தான் சென்றான்.
“இந்தாங்கத்தே, இத்த மொத குடிச்சுட்டு செத்த இருங்க. அவ காதுல விழுந்தா வெசனப்பட போறா…”
“எங்காலத்துக்கப்புறம் யே வீட்டு கொலசாமியா அவள நீ பாத்துக்குவத்தா. ஆனா எம்புட்டு நாளைக்கு?…”
அழகு பாட்டி அவ்வளவு எளிதில் உடைந்துவிட கூடியவர் அல்ல. எப்பொழுதாவது தான் சில நேரம் புலம்புவார் தான். ஆனால் கண்ணீர் என்ற ஒன்று அவரின் கண்களில் காண்பது அரிது.
மின்னொளியின் எதிர்காலம் இப்பொழுது அவரின் உடல்நிலையை முன்னிட்டு நாளுக்கு நாள் பயத்தினை அதிகப்படுத்திக்கொண்டு இருந்தது. போதாததற்கு ஊராரின் நக்கல் பேச்சுக்கள் வேறு. அதனின் வெளிப்பாடு இந்த கண்ணீர்.
தாயின் கண்ணீரை பார்த்த முருகய்யனால் அதற்கு மேல் அங்கே இருக்க முடியவில்லை. எழுந்து வெளியே சென்றுவிட்டார்.
“ஆம்பள, பதில் சொல்லமுடியாங்கட்டி வீட்ட தாண்டி போய்டறான். பொட்டச்சிங்களுக்கு போக்கெடம் உண்டா? எங்கத்தா நா போவ?…” என மேலும் புலம்ப அதுவரை அமைதியாக உள்ளே இருந்தவள் வெளியே வந்துவிட்டாள்.
“கெழவி, இப்ப என்ன கட்டிக்குடுத்தா மட்டும் பத்து பிள்ள பெத்துடுவேன்னு யாரும் சொன்னாகளா என்ன? கம்முன்னு இருக்கமாட்டியா?…” என அதட்டவும் கப்பென கண்ணீர் நின்றது அழகு பாட்டிக்கு.
ராஜாத்தி அவர்கள் இருவரும் பேசட்டும் என்று இளவரசனை கூப்பிட்டுக்கொண்டு பக்கத்தில் உள்ள கடைக்கு சென்றுவிட பாட்டியை முறைத்துக்கொண்டே மரத்தடியில் இருந்த கயிற்றுக்கட்டிலில் சென்று அமர்ந்தாள் மின்னொளி.
அவளின் கோபம் புரிந்தாலும் வார்த்தையின் வீரியம் பாட்டியின் மனதை இன்னுமே துவள செய்ய நெஞ்சம் விம்மியது அந்த முதியவருக்கு. எந்த வழிக்கும் வரமாட்டேன் என பிடிவாதமாக இருக்கிறாளே என வருத்தமாய் இருந்தது.
“ஏத்தா மின்னு…” என்றவரின் ஏக்கமான குரலில் திரும்பியவர் அவரின் கையில் இருந்த வெற்றிலையை பார்த்ததும் இன்னமும் கோபமானது அவளுக்கு.
“வெருவவுத்துல இத்த போடாதன்னு ஒனக்கு எத்தனவாட்டி சொல்ல? கொஞ்ச நேரத்துல சோறாகிடும். சாப்பிட்டு போடத்தானே?…” என்றவளுக்கு அப்பொழுது தான் அடுப்பில் இன்னமும் சாதம் வெந்துகொண்டிருப்பதே ஞாபகம் வந்தது.
“ஆத்தே நீ பண்ணுன அழிச்சாட்டியதுல சோற வடிக்காம விட்டுட்டேன் கெழவி…” என உள்ளே செல்ல பார்க்க வாசலில் ஆட்டோ வந்த சத்தம் கேட்டது.
சுப்புவின் ஆட்டோ தான். அதிலிருந்து அருள் இறங்கினான். அவனுடன் இளவரசனும் முகமெல்லாம் புன்னகையுடன் இறங்க சுப்பு சில பைகளுடன் அவர்களின் பின்னே வந்தான்.
மருமகனை கையில் தூக்கிக்கொண்டு அவனுடன் சிரித்தமுகமாய் பேசியபடி உள்ளே வந்தவன் மின்னொளியை பார்த்ததும் முகம் கனன்றது.
ராஜாத்தியிடம் பேசிவிட்டு இவன் அமர்ந்திருந்த விதத்தை பார்த்ததும் காசியாத்தா என்னவென கேட்க ராஜாத்தியிடமிருந்து தான் அழைப்பு என்றதுமே அவருக்கு புரிந்து போனது.
ராஜாத்தி சந்தோஷமாக பேசினால் அருளின் முகத்தில் அப்படி ஒரு புன்னகை உறைந்தே இருக்கும். இப்பொழுது அவள் வருந்தி எதுவுவோ பேசியிருக்கிறாள், அதனால் மகனின் முகம் வாடி இருக்கிறது என புரிந்துகொண்டவர்,
“சோதி, அக்காளுக்கு ரெண்டு சீல எடுத்தேன். கொண்டு போயி குடுத்துட்டு வாயேன்…” என சொல்ல,
“ஏத்தா, இந்நேரத்துக்கு என்ன அங்க போக்குவரத்து? பொறக்கா பாத்துக்கலாம்…” என்றான் விட்டேற்றியாக.
“என்னாலே கோட்டித்தனம் பண்ண? ஒ மூஞ்சியே செரியில்ல?…” என கேட்க,
“ஒண்ணுமில்லன்னா விடுதியா? போட்டு நொச்சற?…” என அவன் எகிற,
“ஏலே ஒழுங்கா பேசு. என்னமோ அவ வசிருக்கா. அதன் நீ மொகரைய தூக்கி முச்சந்தில நீட்டியிருக்க. போடா கொண்டு போயி குடுத்துட்டு அவக்கிட்ட ரெண்டுவார்த்த நல்லா பேசிட்டு வா. இல்லனா ராவுக்கு இங்க ஒனக்கு சோறு எறங்காது…”
அதட்டலாய் சொல்ல அருளுக்குமே அக்காவை நேராக பார்த்து சமாதானம் செய்தால் என்னவென்று தான் தோன்றியது.
உடனே சுப்புவை அழைத்துக்கொண்டு வரும் வழியில் மருமகனுக்கும் பிடித்த தின்பண்டங்கள், விளையாட பொருட்கள் என வாங்கிக்கொண்டு வந்தால் வழியில் கடையிலேயே பார்த்துக்கொண்டான் அவரை.
மீண்டும் முகம் திருப்புவாரோ என பார்த்தால் ராஜாத்தி சற்றுமுன் வீட்டில் நடந்திருந்த கனமான சூழ்நிலையில் இதனை மறந்திருந்தார். தம்பியை பார்த்ததும் மலர்ந்த முகத்துடன் வரவேற்கவும் தான் அருளுக்கு நிம்மதியானது.
அப்படியே கிளம்பிவிட நினைத்தால் இளவரசன் விடவில்லை. ராஜாத்தியும் வாவென்று அழைக்க மறுக்காமல் வந்துவிட்டான்.
வாசலில் மின்னொளியை பார்த்ததும் இவளால் தானே அக்காவிடம் திட்டுவாங்கியது போதாதென தாயிடமும் வாங்கிக்கட்டிக்கொண்டு இங்கு வந்து நிற்கிறேன் என்னும் கோபம் அவனிடத்தில்.
மின்னொளிக்கு அதை விட ஆத்திரம். இன்றைக்கு அவனின் தலையை உடைத்துவிட்டுத்தான் அடுத்த வேலை என்பதை போல பார்த்து நிற்க ராஜாத்தி அவர்களின் பின்னே வந்துவிட்டார்.
வேகவேகமாய் நடந்து வந்திருப்பார் போலும். அதிலும் புடவை முந்தானையில் மறுநாள் காலை சமையலுக்கு தேவையானதை வாங்கி முடிந்திருந்தவர் அதனை விழுந்துவிடாமல் பிடித்துக்கொண்டு வந்து,
“இன்னும் என்னலே, உள்ளார போ. நா யாருக்கிட்டையாச்சும் மாமாவ வரசொல்லி சொல்லிவுடுதேன்…” என வெளியில் பார்க்க,
“ப்ச், அதான் போனு இருக்குல. சொல்லிக்கலாம். வா நீயி…” என அக்காவை கடிந்தவன் மீண்டும் மின்னொளியை பார்க்க கோபத்துடன் உள்ளே சென்று மறைந்தாள் அவள்.
அவனுக்கு நன்றாய் தெரியும் இனி அவன் கிளம்பும் வரை அவள் வெளிவரமாட்டாள் என்று.
“இருந்து ராத்திரிக்கு சாப்புட்டு போ…” என்றவர்,
“ஒனக்கும்தேன்…” என சுப்புவிடமும் கண்டிப்புடன் சொல்லி உள்ளே திரும்ப வீட்டிற்குள்ளிருந்து மின்னொளியின் பலத்த அலறல் இவர்களை எட்டியது.
“ஆத்தே மின்னு…” என்றபடி ராஜாத்தி வேகமாய் ஓட அவரின் பின்னே அருளும், சுப்புவும் பதட்டத்துடன் சேர்ந்து ஓடினர். பாட்டியால் சட்டென எழும்ப முடியாமல் மெதுவாய் எழுந்து நிற்பதற்குள் இவர்கள் அடுப்படிக்குள் சென்றார்கள்.
அங்கே மின்னொளி காலில் வடிக்க இருந்த சாதம் மொத்தமும் இரு கால்களிலும் கொட்டியிருந்தது.
இரு கால்களையும் உதறியபடி வலியில் துடித்துக்கொண்டிருந்தவளின் கண்கள் கலங்கி சிவந்திருக்க உதட்டை கடித்துக்கொண்டு அழுகையை அடக்கினாள் அவள். அவளின் கண்களின் கண்ணீரை பார்த்த இளா என்னவோ என்று பயந்து அழ,
“அய்யோ எம்புள்ள?…” என ராஜாத்தி மின்னொளியின் காலில் ஒட்டியிருந்த சாதத்தை கைகளால் தட்டிவிட்டார். அதுவே அத்தனை கொதிப்புடன் சூடாக இருக்க கால்கள் இரண்டும் கொப்பளம் கொள்ள ஆரம்பித்தது.
பாவாடை தாவணியை இடுப்பில் தூக்கி சொருகிக்கொண்டு சோற்றுப்பானை தூக்கியிருந்ததால் பாவாடை மூடாது இரு கால்களும் வெந்துவிட்டிருந்தது.
“எக்கா நீ நகரு, இந்தா புள்ளைய புடி…” என்ற அருள் நொடியில் இளாவை ராஜாத்தியிடம் நீட்டியவன் நொடியும் யோசிக்காமல் மின்னொளியை தூக்கிவிட்டான்.
“விடுலே, விடுங்குதேம்ல….” என அவள் திமிற தூக்கி வந்தவன் வாசலில் இருந்த தண்ணீர் தொட்டியில் அப்படியே இறக்கிவிட்டான்.
“சுப்பு, ஆட்டோவ எடுலே. ஆஸ்பத்திரிக்கு போவ…” என முடுக்கியவன் மீண்டும் மின்னொளியை தூக்க குளிர்ந்த நீர் பட்டதில் எரிச்சல் சற்று மட்டுப்பட்டிருந்தவளுக்கு மீண்டும் வலி அதிகமாக,
“அம்மா…” என தீனமான குரலில் அரற்றினாள். மற்ற யாருக்கும் அந்த குரல் கேட்கவில்லை என்றாலும் அவளை ஏந்தியிருந்த அருளுக்கு நன்றாகவே கேட்டது.
அம்மாவென்ற வார்த்தை எத்தனை வருடங்களாய் அவளிடத்தில் வரவில்லை என நினைத்து பார்த்தவனின் பார்வை அவளின் முகத்தில் நிலைக்க அவளோ கண்களை இறுக்கமாய் மூடியிருந்தாள்.
ஒரு நொடி அவனின் மனதே ஆட்டம் கண்டது. அவளின் வேதனையான முணங்கலும், அம்மா என்ற அழைப்பும், துளி நீர் சுமந்த அவளின் முகமும் அவனை எதுவோ செய்ய வேகமாய் ஆட்டோவில் சென்று அவளை அமர்த்தி தானும் அமர்ந்தவன் ராஜாத்தி உடன் ஏறப்போவதை கண்டு,
“நா பாத்துகிடுதேன். நீ மாமாவ வரசொல்லு. புள்ளையோட நீ வரவேணா…” என ராஜாத்தியை தடுத்தவன்,
“வண்டிய நவுத்துலே…” என சுப்புவை அதட்ட வேகமெடுத்தது ஆட்டோ. அதற்குள் வாசலில் கூட்டம் கூட ராஜாத்தி அழுகையுடன் சொல்லி முருகய்யனுக்கு போனை போட்டார்.
மின்னொளிக்கு அருள் உடன் வருவது பிடிக்கவில்லை என்றாலும் தடுக்கும் நிலையில் அவள் இல்லை. காலை கீழே ஊன்ற முடியவில்லை.
அவனை விட்டு நகர்ந்து ஓரத்தில் அமர்ந்திருந்தவள் ஆட்டோவின் உலுக்கலில் கால் கீழே பட்டு வேதனையை தர அவனின் முன்பு கத்தில் அழ கூட முடியாது விரல்களை நன்றாக அழுத்தமாய் பிடித்துக்கொண்டு உதட்டை கடித்தாள்.
அதை கண்டுகொண்டவன் கோபத்துடன் அவளை தள்ளி சாய்த்து அமரவைத்து அவளின் கால்களை தூக்கி தனது மடியில் போட்டுக்கொண்டவன்,
“கோட்டிப்புடிச்சவனாட்டம் வண்டிய ஒட்டாதலே. பொலி போட்டுடுவேன் பார்த்துக்க…” என சுப்புவை போட்ட சத்தத்தில் மின்னொளி அசைவின்றி அமர்ந்துகொள்ள அவளை முறைத்தபடி காலை அழுத்தமாய் பிடித்துக்கொண்டான் அவள் உருவ முடியாதவண்ணம்.
ஆஸ்பத்திரி வந்ததும் கீழே இறங்க முடியாதவளை மீண்டும் அவன் தூக்க வேகமாய் அவனின் கையை தட்டிவிட்டாள் மின்னொளி.
“அரிசி ஆழாக்கானாலும் அடுப்பு கட்ட மூணு செங்க வேணும்டி. ரெண்டு காலும் அவிஞ்சு கெடக்கு. எறங்கி ஆடாமனுமோ? விட்ட நீயே எறங்கி நாலுகாலு பாச்சலுல உள்ள பறந்துருவியாக்கும்? கம்முன்னு இருக்கல நாலு இறுக்கு இறுக்கிருவேன் பாத்துக்க…” என அதட்டியவன் மீண்டும் அவளை தூக்க அவனை எதுவும் செய்யமுடியாத நிலையில் கோபத்துடன் அவனை பார்க்க மட்டுமே முடிந்தது அவளால்.
அதுவும் இடை மறைக்காத தாவணியின் விலகல் பகுதியில் அவனின் முரட்டுத்தனமான கரத்தின் அழுத்தம் மின்னொளியை விதிர்விதிர்க்க செய்தது. ஒரு கையால் அவனின் கையை பிடித்து தள்ள பார்க்க,
“மொத்தமா போட்டுட்டு போய்ட்டே இருப்பேன். பொறவு நீதேன் பொத்துச்சொரக்கா மாதிரி செதறிக்கெடப்ப குண்டம்மா உசுரெடுக்காம கம்முன்னு இருடி…” என அதற்கும் அவன் கடுமையை காட்டினாலும் அவளின் மென்மை அவனை பாதிக்கவில்லை.
அவனின் புத்தி மொத்தத்தையும் மின்னொளியின் வேதனையான குரலும், கலங்கிய விழிகளுமே ஆட்சிபுரிந்தது.
நான்கு அடி வைப்பதற்குள் இவர்களை புரிந்தவன் போல சுப்பு ஓடிச்சென்று சக்கரநாற்காலியை உருட்டிக்கொண்டு வர உடன் ஒரு நர்ஸும்.
“ஒன்ன எவம்லே இங்கன இருந்து போவ சொன்னது. மாமா வந்தாருன்னா வழி காமிக்க வேணாமா?…” என காரணமின்றி எரிந்துவிழ,
“ஒனக்கு நல்லதுதேன்ம்ல செஞ்சேன். தூக்க முடியாதுன்னுதேன் இத்த கொண்டாந்தேன். நீ கோமிக்குத…”
“கிழிச்ச, நாஞ்சொன்னேனா தூக்கமுடியாதுன்னு. போலே…” என்றவனின் கோபத்தை பார்த்து நர்ஸ் நகர்ந்து நிற்க மின்னொளியை அதில் அமர்த்தியவன் சுப்புவை முறைத்துவிட்டு சென்றான்.
“இவன் என்னத்துக்கு இடிப்பான்னே தெரியமாட்டிக்கு. பச்சமண்ணாவே ஒன்னிய வளத்துட்டாங்கடா சுப்பா…” என வானத்தை பார்த்து புலம்ப,
“சுப்பு…” என்ற முருகய்யனின் குரலில் அவரை திரும்பி பார்த்தவன் நடந்ததை சொல்லி அருள் சென்ற திசைக்கு கூட்டி சென்றான்.
அங்கே மின்னொளியின் கால்களை சுத்தம் செய்துகொண்டிருந்தார் மருத்துவர். அவரின் ஒவ்வோர் ஒற்றுதலுக்கும் அவளின் உடலில் வலியின் அதிர்வுகள் அலையென ஆர்ப்பரித்தது.
“அம்மாடி ஒளி…” பலவருடங்களுக்கு பிறகான தந்தையின் அழைப்பு மின்னொளியை புரட்டிப்போட்டது. அவரின் தோளில் சாய்ந்துகொள்ள துடித்த மனதை அடக்கியவள் உணர்ச்சியற்ற முகமாக மாற்றினாள்.
தந்தையின் கலக்கமான குரலில் அவரின் திசைப்பக்கம் திரும்பி பார்த்தவள் மீண்டும் முகத்தை திருப்பிக்கொள்ள,
“இவ திருந்தமாட்டா. இந்த மனுஷன் என்னவோ ஆசைப்பட்டு கட்டிக்கிட்டதாட்டமும், எங்கக்கா விரும்பி வாக்கப்பட்டதாட்டம் முறைச்சுட்டு நிக்கிதா. எனக்கென்ன வேண்டுதலா எங்கக்காவ ரெண்டாதாரமா குடுக்க. இப்ப கூட ஆஞ்சு ஓஞ்சு வந்த மனுஷன மனுஷனா பாக்குதாளா? என்ன ஒரு அகங்காரம் பொட்டப்புள்ளைக்கு?…” என சுப்புவிடம் வந்து புலம்பினான்.
“அப்ப அங்கனையே விட்டுட்டு வந்துருக்க வேண்டியதானலே? என்னாத்துக்கு இம்புட்டு தொலவு சொமந்துட்டு வந்த? இதுல கையில இருக்க கலாக்காவ தட்டிவிட்டமாறி என்னிய வசுட்ட நீ…” சுப்புவின் குற்றம் சாட்டுதலில் முறைத்தவன்,
“என்ன தேவைக்குலே இவள தூக்கனும்? எங்கக்கா கண்ணா கசக்குமேன்னுதேன் தொட்டு தூக்குனேன். இல்லனா இவ பக்கம் போவேனா? எல்லா விதிலே…” என புலம்பியவனை முருகய்யன் அழைத்தார்.
“மாப்ள…” என்றதும் வேகமாய் ஓடியவன்,
“சொல்லுங்க…” என நின்றான்.
“காலுக்கு களிம்பு பூசிருக்கானுங்க. வீட்டுல பூசறதுக்கும் குடுத்துட்டானுங்க. மாத்தர மட்டுந்தேன் வாங்கனும்…” என மருந்துச்சீட்டை காட்ட,
“நீங்க வண்டிலையா வந்தேங்க?…” என்றான். முருகய்யனிடம் ஒரு டிவிஎஸ் மோட்டார் சைக்கிள் இருந்தது.
“ஆமா, அதுலதேன் வந்தேன்…”
“செரி, போற வழியில இத வாங்கிட்டு நீங்க வீட்டுக்கு போங்க. நாங்க ஆட்டோவுல வாரோம்…” என்றதும் முருகைய்யன் மகளை திரும்பி பார்க்க,
“சொல்லுதேன்ல…” இப்பொழுது அழுத்தமாய் அவன் சொல்ல மறுப்பின்றி கண்ணீரோடு சென்றவரின் முதுகை வெறித்தவனின் மனம் அவருக்காக பரிதாபம் கொண்டது.
இப்பொழுது அவளை தூக்க பிரியப்படாமல் நர்ஸின் உதவியுடன் அவளை சக்கரநாற்காலியில் அமர்த்தி பின் அவர்களை வைத்தே ஆட்டோவிலும் ஏற்றியவன்,
“லே சுப்பு குலுங்காம போனும். புரியுதா?…” என்றதும் மிக மெதுவாய் ஆட்டோவை ஓட்டினான் அவன்.
வரும் பொழுது அருளிடம் இருந்த பதட்டமும், அனுசரணையும் இப்பொழுது இல்லாதிருப்பதை உணர்ந்துகொண்ட மின்னொளி, “என்னவும் செய்துகொள், எப்படியும் இருந்துகொள்” என்னும் மனப்பான்மையுடன் கண்களை மூடிக்கொள்ள அதற்கும் அருளுக்கு பற்றிக்கொண்டு வந்தது.
“உடம்பு முழுக்க திமிரு. அடக்கறேன்டி” என ஆத்திரமாய் எண்ணியவன் வீட்டை அடைந்ததும் அக்கம்பக்கத்தினர் வந்துவிட்டனர் மின்னொளியை பார்க்க.
ஆட்டோவை விட்டு இறங்கும் முன்னரே என்ன ஆகிற்று, ஏதென்று கேட்க ஆரம்பிக்க ராஜாத்தி மின்னொளியின் காலை பார்த்து அழ ஆரம்பிக்க அருள் யாருக்கு வந்த விருந்தோ என்று நின்றான்.
“என்னானாலும் நடக்கட்டும். அப்பத்தேன் கொழுப்பு கொறையும்” என அவள் எப்படி இறங்குகிறாள் என பார்க்க நின்றான்.
மின்னொளி ஆட்டோவின் ஓரத்தில் நகர்ந்து அமர்ந்தவள் அவன் தூக்கிவிடுவானோ என்ற வேகத்திலேயே பாதத்தை தரையில் பதிக்க வலியில் “ஸ்ஸ்ஸ்” என்ற அவளின் குரலில்,
“ஏலே சோதி, தூக்குடா. புள்ளைய கால ஊண்ட கூடாதுன்னு சொல்லிருக்காவலாமே? பாத்துக்கிட்டு நிக்கித…” என்ற ஒற்றை அதட்டலில் தவிர்க்கமுடியாது மின்னொளியை அவன் தூக்கிக்கொண்டு உள்ளே செல்ல வேடிக்கை பார்த்தவர்கள் ஆவென்று வாயை பிளந்து பின் அவர்களுக்குள் கிசுகிசுத்துக்கொண்டனர்.
மின்னொளியை அழைத்து செல்லும் பொழுது அந்தளவு யாருமில்லாது போக இதனை கவனிக்கவில்லை. இப்பொழுது பாதி ஊர் திரண்டு இவர்களின் வருகைக்காக காத்திருக்க வெறுமனே இருந்த வாய்க்கு புதிய அவலாக இது சிக்கியது.
அனைத்தும் ராஜாத்தியின் காதில் விழுந்தாலும் பெரிதாய் மனதில் வாங்கிக்கொள்ளவில்லை.
“பின்ன என்ன ராசாத்தி, கைல வெண்ணைய வச்சிக்கிட்டு நெய்யிக்கி அலஞ்ச கதையா ஒந்தம்பிய வச்சிக்கிட்டு வெளியில மாப்பிள தேடனுமாக்கும்? கெட்டி வச்சா சொத்தும் கைக்குள்ள நிக்கும். மின்னுக்கும் வாழ்க்க அமஞ்சதாட்டம் இருக்கும்ல…” என ஒருத்தி கிண்டலாய் பேச ராஜாத்தி ஸ்தம்பித்து நின்றார்.
முருகய்யனும் சரியா அந்நேரம் வந்துவிட சம்பந்தப்பட்ட இருவரை தவிர மற்ற அனைவருக்குமே அதிர்ச்சியாக இருந்தது.
அழகு பாட்டி மருமகளையே பார்த்தார் ராஜாத்தி என்ன பதில் சொல்ல போகிறார் என.