கடல் – 11
தர்மராஜுடன் வீட்டிற்கு வந்த அன்னம் அவனை பருப்புமத்தையை கொண்டு அடித்து துவைத்துவிட்டார். தாயின் அத்தனை அடியையும் வாங்கியபடி சிறு பிள்ளையென விசும்பிக்கொண்டே நின்றான் அவன்.
அடித்து அடித்து ஓய்ந்த அவர் மூலையில் அமர்ந்து வாய்விட்டு அழ தாயின் கண்ணீரில் மனம் வலிக்க நின்றவன் அருகே சென்று ஆறுதல் சொல்ல கூட அச்சமாக இருந்தது.
முதல்நாள் இரவு அன்னம் உறங்கியதும் அவன் உறக்கம் வராமல் இருப்பதால் நண்பர்களை காண செல்ல வழக்கமாக சந்திக்கும் இடத்தில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர்.
“வாலே நல்லவனே…” என்ற வழக்கமான கிண்டலால் இவனை வரவேற்க,
“இப்பிடி சொல்லாதன்னு சொல்லுதேம்ல. ஏம்லே கேக்கமாட்டுதீக?…” என்ற சிணுங்கலுடன் தர்மராஜ் அவர்களுடன் அமர போக,
“இங்க என்னடே கூட்டம் கூடுதீக? எத்தனவாட்டி சொல்லுதது? ஒங்களோட ஒரே வேசடையா(தொந்தரவு) போச்சுலே…” என ஒரு காவலர் வந்து சத்தமிட்டு விரட்ட,
“குடிக்க ஒத்த எடம்தேன் இருக்குது. அத்தயும் புடுங்க பாக்குதானுங்க. இனி ஒக்காந்து சரக்கடிக்க எங்கன நமக்கு வாகா ஒரு எடத்த தேட?…” என தர்மராஜின் கூட்டாளிகளில் ஒருவன் புலம்ப,
“காட்டுப்பக்கம்லா போவமுடியாதுலே. இந்த சரக்கோட வீட்டுக்கும் போவ முடியாது…” என கையில் இருந்த பாட்டிலை உயர்த்தி காட்ட தர்மராஜின் மூளை மழுங்கி அதனை குடிக்க நாக்கு ஊற ஆரம்பித்தது.
“என்னிய சேத்துக்கவே இல்ல. மொதவே சொல்லிருந்தா வெரசா வந்திருப்பேன். சொல்லிருக்கலாம்ல…” என அவன் கண்களில் ஆசை பளபளக்க அவனை கண்டு மற்றவர்கள் சிரித்தனர்.
“இந்த ஊரே ஒன்னிய மாதிரி ஒழுக்கசீலேன் இல்லைங்குது. நீயும் சரக்கடிக்கிதது ஒங்கம்மாளுக்கு தெரிஞ்சிச்சி எஞ்சங்க அறுத்து வீசிப்பிடும்…” என ஒருவன் நக்கலாய் சொல்ல,
“அதேன் ஆருக்கும் தெரியாதுல. ஆரு சொல்லுவா?…” என கேட்டு அதனை கையில் வாங்கிக்கொண்டான் தர்மராஜ்.
“இப்ப எங்கலே போவ?…” இன்னொருவன் கேட்க,
“நம்ம ராங்கி வீட்டுல ஒத்த சனமில்ல. சடங்குக்கு போயிருக்காவ, விடியக்கறுக்கதேன் வருவாகன்னு நெனைக்கிதேன். அவ வீட்டு கொட்டாயிக்கு போயி இத்த குடிச்சுட்டு கெளம்பிருவோம். என்ன சொல்லுத?…”
“இது என்னவே? வேணுங்காட்டி செய்யித மாதிரில்ல இருக்குது? வேணாம்லே…” ஒருவன் எச்சரிக்க,
“என்னாலே வேணா? அவளால என்ன பண்ண முடியும்ங்கறேன்? அப்பத்தேன் கொஞ்சமாச்சும் பயமிருக்கும்…” இன்னொருவன் வீர வசனம் பேச மற்றவர்களுக்கும் சற்று தைரியமாக தர்மராஜ் மட்டும் இன்னமும் தயக்கமாய் நின்றான்.
“நீ எதுக்கு தயங்குதன்னு தெரியும்லே. இதுக்கெல்லா பயந்தா ஆச்சா? ஒனக்கொண்ணு கொண்டாந்துருக்கேன்…” என அவனின் தயக்கத்தை போக்கும் விதமாய் ஆசைகாட்ட தர்மராஜிற்கு அனைத்தும் மறந்தது.
“அவ வீட்டு பொறவாசலு ஒசரோம் கட்டதேன். எகிறி குதிச்சுறலாம்…” என்ற யோசனையுடன் அங்கே செல்ல சற்று நேரத்திற்கெல்லாம் மின்னொளி அங்கே வந்துவிட யாரும் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை அவளின் வரவை.
அவர்கள் இருந்த கோலத்தை பார்த்தவளின் கண்களில் தெரிந்த கோபத்தில் பயந்து பதுங்க அங்கிருந்த பிரண்டை செடியை கொத்தோடு பறித்தவள் அதனை கொண்டே அனைவரையும் அடித்து விரட்ட வெறும் கையில்லாத பனியனும், லுங்கியுமாய் இருந்தவர்களின் கைகளை அது நன்றாக பதம் பார்த்தது.
தர்மராஜால் அவ்விடத்தை விட்டு அசையமுடியவில்லை. மின்னொளி என்று தெரிந்ததும் அவளிடம் உளறியவன் அதன் பின் விடியும் நேரம் தான் போதை தெளிந்து பார்க்க பால்காரருடன் அவள் நின்றாள்.
இப்பொழுது வரை புகைப்பழக்கம் என்பதே இல்லாமல் இருப்பவன் ஒருநாள் ஜூசில் அவர்கள் போதை வஸ்து எதையோ கலந்து கொடுக்க வாங்கி குடித்தவனுக்கு இன்றுவரை அந்த ருசிக்கு அடிமையாகி அதன் பின்னர் சிறிது சிறிதாக குடிக்கும் அடிமையாகும் அளவிற்கு ஆளாகிக்கொண்டிருந்தான்.
தாயிடம் இருக்கும் வரை அதை தொடக்கூடாது என்ற உறுதியுடன் இருப்பவன் நண்பர்கள் என்று சேர்ந்ததும் உலகமே மறந்துவிடுகிறது. அவர்களுடன் எந்த எல்லைகளும், தயக்கங்களும், கட்டுபாடுகளுமற்ற பேச்சும், சிரிப்பும் அவனை அங்கே அவனாக இருக்க வைத்தது.
இப்படி பேசாதே, இப்படி பார்க்காதே, இப்படி சொல்லாதே என்னும் விதமான வரையறைகளும் கட்டுப்பாடுகளும் இல்லாத அந்த உலகை அவன் மிகவும் விரும்பினான்.
அது அனைத்தும் வெளிச்சத்திற்கு வராத அளவிற்கு தன் நண்பர்கள் காப்பாற்றி வைத்திருக்க அவர்களின் மீதான பற்று இன்று வரை அதிகமாகியதே தவிர குறையவில்லை.
அதனால் தான் அன்னமே அவர்களுடன் சகவாசம் வேண்டாம் என்று சொன்னாலும் அதனை விடமுடியாமல் தடுமாறி நிற்கிறான். இன்று அதுவும் வெட்டவெளிச்சமாக்கியது மின்னொளி. இப்பொழுதும் அவள் மேல் கோபம் என்று ஒன்று வரவே இல்லை.
“அம்மோவ் அம்மோவ்…” என அவன் மெதுவாய் அழைக்க,
“என்னிய அப்பிடி கூப்புடாத. ஒன்னால மான, மருவாதி எல்லாமே போச்சு. அவ வீட்டு வாசலுல ஒன்னிய அந்த கோலத்துல பாத்தும் நா உசுரோட இருக்கேனே, அதுக்கே நீ சந்தோசப்பட்டுக்க…”
“அம்மோவ் தெரியாம…”
“என்னத்தவே தெரியாம? ஒன்னிய என்ன கைய, கால கட்டி வாய பிடிச்சு கட்டாயமாவா ஊத்திவிட்டானுவ? சொல்லுலே. உள்ளத சொல்லு சாமி?…” என கோபமாய் கேட்டு கண்ணீருடன் முடிக்க அவனால் தாயின் அருகில் வரமுடியவில்லை.
அடித்ததில் கால்கள் வலிக்க ஒரு அடி எடுத்து வைக்கவுமே சுருண்டு விழுந்துவிட்டான். கோபத்தில் என்ன செய்கிறோம் என தெரியாமல் அன்னமும் அத்தனை அடித்திருக்க இப்பொழுது மகன் கீழே விழுந்ததும் தான் புத்தியில் உரைத்தது.
அந்த நொடி கூட அவனின் தவறு பின்சென்று பாசம் முன்னின்று ஜெயித்தது. பதறிக்கொண்டு அவனருகே வந்தவர் அவனை மடிதாங்கினார்.
“எஞ்சாமி ஒனக்கு நா என்னைய்யா கொறவச்சென்?…” என்று கட்டிக்கொண்டு அழுதவர்,
“அவிங்க கூட சேராதன்னா கேட்டியா? கேட்டியாலே? இப்ப அசிங்கப்பட்டு நிக்கிதோம். என்னதேன் நமக்கு தோதா நாலு மனுச, மக்க பேசுனாலும் நமக்கு பின்னாடி சிரிக்கத்தேன் செய்யுவாக…” என அழுதுகொண்டே மகனின் சட்டையை கழட்டி அடித்த தடத்தை தடவியபடி கண்ணீர் சிந்தினார்.
“அப்பனில்லாத புள்ளன்னு உன்னிய பொத்தி பொத்தி வளத்தேன். இன்னிக்கு யே கையாலயே இத்தன அடி அடிச்சுப்புட்டேன். நெஞ்சே வெடிக்குது சாமி. வரிவரியா இத்தன கோடு. அய்யோ…” என்று முகத்திலறைந்துகொள்ள,
“அம்மோவ், அம்மோவ்…” என அவரின் அழுகை தாங்கமுடியாமல் அவனும் அழ,
“இந்த பழக்கம் வேணாம்ய்யா. அம்மா சொல்லுதத இனியாச்சு கேளுய்யா. ஒங்காலுல வேணா விழுவவா?…” என என அவனின் காலை பிடிக்கப்போக,
“ஐயோ. அம்மோவ்…” என துள்ளி விலகியவன் அவரை அணைத்துக்கொண்டு,
“மாட்டேன். மாட்டேன். இனி அத்த தொடவே மாட்டேன்…” என பிதற்ற அதுவே போதும் என்பதை போல அவனின் காயத்திற்கு மருந்துபோட ஆரம்பித்தார்.
“இதென்னய்யா?…” என லேசாய் சிவந்து இருக்கும் இடத்தை காண்பிக்க,
“அது பிரண்டைய வச்சு அடிச்சுப்போடுச்சு மின்னு. அதேன். சுருக்குங்குதும்மோவ்…” என்றதும் அன்னத்திற்கு ரத்தக்கண்ணீரே வரும் போலானது.
மின்னொளியை ஏதாவது செய்யவேண்டும் என்கிற கோபமும் ஆத்திரமும் பலமடங்கு பெருகியது. இப்போதைக்கு மகனை கவனித்தார்.
விஷயம் நடந்து நான்கு நாட்கள் தர்மராஜ் வெளியே எங்கேயும் செல்லாமல் வீட்டிற்குள்ளேயே அடைந்துகிடக்க அன்னம் அவனுடன் பழகும் நண்பர்கள் வீட்டிற்கு சென்று சாமியாடாத குறையாக ஆடித்தீர்த்துவிட்டு தான் வந்தார்.
அதனால் அவனின் நண்பர்கள் கூட அவனை தேடி வரவுமில்லை. தர்மராஜ் வெளியே செல்லாததால் அவனாலும் அவர்களை சந்திக்கமுடியவில்லை.
அன்னத்தை பார்த்து பார்த்து அவர் சொல்லியபடி இருந்தவனால் அதற்கு மேலும் வீட்டில் இருக்கமுடியவில்லை.
“அம்மோவ் உள்ளாறவே இருக்க வேக்காடா தெரியுது. செத்த ஒங்கூட தோப்புக்கு வரட்டா?…” என கேட்க தன்னுடன் தானே தங்களின் தோப்பிற்கு வருகிறான் என்பதால் அன்னமும் அழைத்துக்கொண்டு சென்றார்.
அங்கே அவருடனே வேலைகளை பார்த்துக்கொண்டிருந்தவனை தேடி கதிரவன் வர,
“இங்கிட்டு தல தட்டுப்பட்டுச்சு வெளக்கமாறு பிஞ்சுரும். வந்த வழியே ஓடிரு…” என்று அவனை அன்னம் எச்சரிக்க,
“அம்மோவ் இவேன் அந்த கூட்டாளிங்க கூட சேரமாட்டான்…” தர்மராஜ் அவனுக்கு பரிந்துகொண்டு வர,
“அதெதுக்கு? ஒருத்தனும் வேணா. நீ கம்முன்னு இரு. இல்லனா வீட்டுக்கு போ…” என பிடிவாதமாய் உரைக்க கதிரவன் தொங்கிய முகத்துடன் அங்கிருந்து செல்ல சிறிது நேரம் பார்த்த தர்மராஜ்,
“அம்மோவ், நா வீட்டுக்கே போறேன். தொறவாவ கொண்டா…” என்று கை நீட்ட,
“ஏஞ்சாமி இதுக்குத்தேன் மொதவே வேணான்னு சொன்னேன். அம்மா தொணைக்கி வரட்டா?…”
“என்னிய பொட்டப்புள்ளயாட்டம் பாக்காதம்மா…” என்றுவிட்டான் ஒரு வேகத்தில்.
மனதில் அத்தனை புழுக்கம். தாய்க்காக என பொறுத்து பொறுத்து இருந்தவன் தன்னை சிறுபிள்ளை போலவும், பெண் பிள்ளை போலவும் அவர் நடத்துவதை பொறுக்கமாட்டாமல் வார்த்தையை விட்டுவிட இதை அவனிடம் எதிர்பார்க்காதவர் அதிர்ந்த பார்வையை வீச,
“அம்மோவ், எனக்கு போவத்தெரியாதா? சும்மா சும்மா நீ என்னிய நம்பாத மாதிரியே பேசுத….” என அசௌகரியமான பாவனையுடன் அவன் சொல்ல,
“அதெல்லாமில்லைய்யா…” என்று சமாதானமாய் பேச வந்தார் அன்னம். மனதே ஆடிப்போனது மகன் இப்படி பேசியதை கேட்டு.
“நா போவவா இல்ல ஒங்கூட சேந்து போவவா?…” குரலில் மிரட்டல் இல்லை. ஆனால் அப்பட்டமான மறைமுக மிரட்டல் தான்.
“இல்ல நீ கெளம்பு சாமி. அம்மா இத முடிச்சுட்டு வேவமா வாரேன்…” என அன்பாக சொல்லியும் முகம் தெளியாமல் சென்றான் தர்மராஜ்.
இந்தளவிற்கு மகனை ஒடுக்குகிறேனோ? என்ற அலைப்புறுதலுடன் அவர் மகனையே பார்த்தபடி நின்றார் அவனின் உருவம் மறையும் வரை.
இவன் வருவான் என்று எதிர்பார்த்ததினாலோ என்னவோ கதிரவனும் இவனுக்காக காத்திருக்க அவனை பார்த்ததும் முறைத்தான் தர்மராஜ்.
“நா எங்கயும் வரலலே. சும்மா எனக்காட்டி நிக்காத. போ…” என விரட்டினான் தர்மராஜ். தாயை எதிர்த்துபேசியிறாதவன் இன்று பேசிவிட்டோமே என்னும் வருத்தம்.
“எங்கடா போவ சொல்லுத? அன்னிக்கே நாஞ்சொன்னேன் எவேன் கேட்டான்? கோட்டிப்பயலுவ. நீயு அவிங்க கூடத்தேன் பொழுதுன்னிக்கும் கெடையா கெடக்குத…” என,
“இப்ப என்னங்குத? அதேன் அவிங்க கூடத்தேன் இருக்கேன். ஒன்னிய கண்டுக்கலன்னு சொல்லுதேல. பொறவு எதுக்காங்காட்டி இங்க வந்தியாம்?…” என்று கேட்க,
“ஒன்னிய பாக்காம இருக்கமுடியல. அதேன் இன்னிக்குத்தேன் நீயும் வெளிய வந்திருக்க. பாத்துட்டு ரெண்டு வார்த்த பேசிட்டு போவலாமின்னுதேன்…” என்றவாறு தர்மராஜை பார்க்க அவனின் கவனம் தன்னில் இல்லையென்று புரிந்து எங்கே என திரும்பி பார்த்தால் தூரத்தில் மின்னொளி அவளின் தோப்பில்.
பேசிக்கொண்டே வேறு பாதைக்கு வந்து இப்பொழுது மின்னொளியின் தோப்பின் வழியே வந்துகொண்டிருப்பதை அப்பொழுது தான் உணர்ந்தான்.
“வாலே போயிரலாம்…” என கதிரவன் சொல்ல,
“அவக்கிட்ட பேசனும்லே…” என்று தர்மராஜ் அசராது சொல்லி சுற்றிலும் யாராவது அருகில் தென்படுகின்றனரா என்று பார்த்தான்.
“ஆத்தே, அவ சாணியக்கரச்சு மூஞ்சில ஊத்துனாலும் ஊத்திருவா. வாலே. ஒங்கம்மா பாத்தா பெரிய பஞ்சாயத்தாகிப்போடும்…” என பதற,
“நீயாச்சும் சொல்லுதத புரிஞ்சுக்க கதிரு. நா…”
“எல்லாம் வெளங்குது. ஆனா தோதில்லாதத எதுக்குவே தோளுல சொமக்கனும்? இது ஆவாத சோலி…”
“அதெல்லாம் ஆவும். நாஞ்சொல்லுத மாதிரி செஞ்சிரு. ஆவும். வேற வழி இல்ல…” என தர்மராஜ் சொல்ல,
“புள்ளப்பூச்சியாட்டம் இருந்துட்டு என்ன புத்திலே ஒனக்கு? நாஞ்சிக்கினா என்னிய சூசு போட்டுடுவானுங்க…” என அவன் மறுக்க தர்மராஜின் பார்வை வேறு வழி இன்றி ஒப்புக்கொள்ள செய்தது.
“அந்த புள்ள மோட்டாரு ரூமுக்கு போவுது, வேவமா வாலே…” என அவனை என்றவன் கைலியை தூக்கி மடித்துக்கொண்டு கிட்டத்தட்ட ஓடினான் தர்மராஜ்.
கதிரவனுக்கு அத்தனை பயம். அதுவுமில்லாமல் ஒரு பெண்பிள்ளையின் மரியாதையை குலைக்கும் பாதகமான செயலை செய்ய அவனின் மனம் ஒப்புக்கொள்ளவில்லை.
அசையாமல் அவன் நிற்க மீண்டும் அவனிடம் வந்த தர்மராஜ் அவனின் முகத்தை பார்த்து,
“இங்காருலே, இன்னிக்கு இத நீ பண்ணல என்னிய நாளைக்கி உசுரோட பாக்கமுடியாது. நெசமா சுருக்கு போட்டுக்குவே…”
“ஏலே தருமா?…” என தோழன் பதற,
“செய்யுவேன்ல. ஒனக்கு சம்மதமின்னா வீட்டுக்கு போவோம்…” என சொல்லியவனின் கரத்தை பிடித்துக்கொண்டான் கதிரவன்.
“புரிஞ்சுக்கலே, இப்ப விட்டா அந்தப்புள்ளைய மட்டுமில்ல எங்கம்மாளையும் சமாளிக்க முடியாதுலே…” என கெஞ்சலாய் அவன் பேச கதிரவனுக்கு உருகிப்போனது.
கதிரவன் மனமில்லாமல் சரியென தலையசைக்க தர்மராஜ் வேகமாய் மின்னொளி இருந்த அந்த மோட்டார் அறைக்குள் செல்ல வீட்டிற்கு கிளம்புவதற்காக மோட்டாரை அணைத்துவிட்டு அங்கு வைத்திருந்த பொருட்களை எடுத்து பையில் போட்டுக்கொண்டிருந்தவள் தன் பின்னே நிழலாட திரும்பி பார்த்தாள்.
தர்மராஜை பார்க்கவுமே புருவம் சுருக்கியவள் அவன் எதற்கு இங்கே அதுவும் மோட்டார் ரூமினுள் தான் தனியாக இருக்கும் பொழுது வந்திருக்கிறான் என யோசித்தபடி எழுந்து,
“இங்க என்னாலே ஒனக்கு சோலி?…” என்றாள்.
அறையின் வாசலை அடைத்தபடி அவன் நிற்க சட்டென விலகி செல்லமுடியாமல் பின்னால் தள்ளி நின்றவள் அவனை முறைக்க அடித்துவிடுவாளோ என்கிற பயத்துடன் எச்சிலை கூட்டி விழுங்கியவன்,
“ஒங்கிட்ட பேசனும்னுதேன் வந்தேம்த்தா…”
“அதேன் அன்னிக்கே குளுர குளுர பேசித்தீத்துட்டியே. இன்னும் என்னாலே?…” என்றாள் விழிகள் இரண்டும் சிவக்க.
“அதுக்குத்தேன். மன்னிப்பு கேக்கனுமின்னு…” என்றதும் சடாரென திரும்பி,
“அன்னிக்கே பேசின நாக்க நறுக்காம விட்டேன்னு சந்தோசப்பட்டுக்க. ஒம்மூஞ்சில முழிக்கவே புடிக்கலலே. இதத்தேன் ஒங்காத்தா ஒனக்கு சொல்லிக்குடுத்து வளத்துச்சா?…”
“புள்ள…” என்றவனை பார்க்க பிடிக்காமல் முகம் திருப்பிக்கொண்டவள்,
“யே ச்சீ, வாப்பெட்டிய சாத்து. அது என்ன பாடுபட்டு, கருமாயப்பட்டு ஒன்னிய வளத்தா அசிங்கம்புடிச்சவனா திரும்ப வளந்துருக்கற. வெக்கமால்ல. மொத இங்கருந்து கெளம்புதியா இல்லியா?…”என அவள் மிரட்டும் நேரம் சரியாக கதவு இழுத்து மூடப்பட,
“ஐயோ…” என்று வேண்டுமென்றே அவன் பதற அதை அசையாமல் நின்று பார்த்தவள்,
“இது ஒவ்வேல தான? ஒம்புத்தி வேற என்னத்த யோசிக்கும்?…” என சரியாக அவனின் நாடிபிடித்து சொல்ல,
“ஐயோ மின்னு, இல்லாத்தா, நெசமா எவேன் பாத்த வேலன்னு தெரியலத்தா. எங்கம்மாவுக்கு தெரிஞ்சா எந்தோல உரிச்சுப்பிடும்…” என வேண்டுமென்றே அஞ்சுவதை போலவும் பதறுவதை போலவும் நடிக்க அவனை பார்க்க பிடிக்காமல் கதவருகே சென்றவள்,
“லேய் எவனா இருந்தாலும் கதவ தொரந்துவிட்டுட்டு கண்ணுல படாம ஓடிரு. இல்ல சாத்து சாத்துன்னு சாத்திருவேன்…” என மிரட்ட அங்கே கதிரவன் கேட்பதற்கு இருந்தால் தானே?
அவனோ பூட்டிவிட்டு ஒரே ஓட்டமாக ஓடியிருந்தான். தர்மராஜ் கதவை வெளிப்புறமாக பூட்டிவிட்டு கூட்டத்தை சேர்த்து அதன் பின்னர் கதவை திறக்க செய்தால் மின்னொளியை தன்னை தவிர வேறு யாரும் திருமணம் செய்ய முடியாதென்றும், தன் தாய் சம்மதிக்க வேறு வழியில்லை என்று அவன் நினைத்திருந்தான்.
ஆனால் கதிரவனோ செய்த பாவம் போதும் என்னும் அளவில் ஓடிவிட்டிருந்தான் பயத்தில்.
“ப்ச், ச்சை, ஒன்னிய யாருலே இப்ப இங்க வர சொன்னது? மன்னிப்பு கேக்குற மூஞ்சிய பாரு. மொசபுடிக்கித நாய மூஞ்சிய பாத்த தெரியாதாக்கும். ஓ யோக்கியத்த என்னன்னுதேன் நேத்தே தெரிஞ்சிக்கிட்டேனே…” என வெறுப்பாய் அவள் சொல்ல,
“நா சொல்லுதத…” என்று அவளருகே வர பார்த்தான் தர்மராஜ். வேகமாய் அங்கே கிடந்த ஒரு இரும்பு கம்பியை தூக்கியவள்,
“லே ஒத்த எட்டு எடுத்து வச்ச கால ஒடிச்சுப்புடுவேன் பாத்துக்க. அங்கனவே நில்லுலே….” என்ற அவளின் ஆக்ரோஷத்தில் மிரண்டு அப்படியே நின்றான்.
“அது நேத்து ஏதோ போதையில…” என அவளை தன்னை நம்ப வைக்கவென அவன் பேச,
“ஒன்னோட போததேம்லே ஒன்னோட நெனப்ப கட்டுச்சு. எம்புட்டு தெகிரியம் ஒனக்கு? என்கிட்டவே எங்கம்மா ஒன்னிய கட்டிக்கலாம் விடாது. சரின்னு சொல்லு சேத்துக்கறேன்னு பேசினவன் தான நீயி. ஒன்னிய சும்மா விட சொல்லுதியா? அந்தளவுக்கு இளப்பமா போயிட்டேனா நானு?…” என மின்னொளி எகிற அச்சத்துடன் அவளை பார்த்தான் தர்மராஜ்.
“சொல்லுடா, அவ்வளவு லேசா போச்சா நானுன்னா. என்ன ஒரு கேவலமான நெனப்பு ஒனக்கு. அப்ப என்னிய இத்தன நாளு அந்த மாதிரி நெனப்போடத்தேன் நீ பாத்தியா?…” என கத்த இனியும் மறைக்கமுடியாது என நினைத்தவன்,
“சத்தியமா ஒன்னிய எனக்கு அம்புட்டு புடிக்கும் புள்ள. ஆனா எங்கம்மாட்ட்ட இத சொல்ல முடியாது. ஒனக்கும் கல்யாணம்னு ஒன்னு கனவு தான. அதேன் அதேன்…”
“அடச்சீ, பாக்க அப்புராணியாட்டம் இருந்துட்டு இப்படி நாலாந்தர திட்டமெல்லாம் போடுதியோ? நீ சொல்லவும் நானும் ஒன்னிய அப்பிட்டு வந்துடுவேன்னு நெனைக்கிதியோ? பிஞ்சிரும் பார்த்துக்க…”
“மின்னு நா சொல்லுதத கேளுத்தா. ஒனக்கும் நல்லதுக்குத்தேன். புரிஞ்சுக்க…” என்றவனின் கன்னத்தை பதம் பார்த்தது மின்னொளியின் இடது கை. போட்டிருந்த மோதிரம் அவனின் கன்னத்தில் கீறலை பதிக்க அதன் மேல் கீற்றாய் செங்குருதி வெளிவர ஆரம்பித்தது.
“இங்க இருந்து போற வரைக்கும் வாய தெறந்த, ஒன்னிய பொணமாக்கிருவேன் பார்த்துக்க…” என்று அவள் மிரட்டிய மிரட்டலில் வாயை மூடிக்கொண்டான்.
“இந்த நெனப்பு இருக்கக்கூடாதுன்னுதேன் ஊருக்கு ஒன்னிய வெளிச்சம் போட்டு காட்டுனேன். என் மேல ஒனக்கு கொஞ்சமாச்சும் பயம் வேணாமா? என்னிய இப்படி கீழா நெனச்சதுக்கான தண்டனையாத்தேன் ஊருக்குமத்தில ஒன்தோல உரிச்சேன்…”
அவள் பேச பேச தர்மராஜிற்கு தன் திட்டம் வேலைக்காகுமா இல்லையா என்னும் சந்தேகமே வந்துவிட்டது.
“நீ இருக்க இருப்புக்கு ஒனக்கு கெட்டிக்க ஒருத்தி, சேத்துக்க ஒருத்தி. சங்கருத்துருவேன்…” என விழிகள் தெறிக்க அவள் மிரட்ட அரண்டு போய் மூலையில் ஒடுங்கி நின்றான்.
“இதுக்குதேம்ல நீயி லாயிக்கு…” என அவனை இன்னமும் பரிகாசமாய் பேச கதவு திறந்திருந்தால் ஓடியிருப்பான் அவன். ஆனால் முடியாதே.
மனதினுள் மின்னொளியின் மீதான ஆசை அளவில்லாமல் இருந்தது. ஆசை மட்டுமே. அதை மரியாதையாய் நடத்திக்கொள்ள அவனுக்கு தெரியவில்லை. குறுக்குவழியிலாவது அவளை அடைந்துவிடுவது என்ற தைரியம் இருப்பவனுக்கு தாயிடம் பேசி முறையாக திருமணம் செய்துகொள்ள பயந்தான்.
அவனின் பேச்சு மின்னொளியை வெறியாக்கிவிட அப்படி கட்டிவைத்துவிட்டாள். அப்படியே விட மனதில்லை.
மற்றவர்கள் ஓடிவிட்டதும் இவனால் எழுந்துகொள்ள கூட முடியாத நிலையிலும் இருந்ததை பார்த்து உண்மைக்கும் சற்று பரிதாபமாய் தான் இருந்தது. அவனை எழுப்பத்தான் பார்த்தாள்.
ஆனால் அவனோ போதையில் பிதற்றுகிறேன் என்று தன் எண்ணங்கள் அனைத்தையும் வாய்மொழியாக உதிர்த்துவிட மீண்டும் ஆத்திரம் தலைக்கேற பிரண்டை செடியை வைத்து அடித்துவிட்டாள்.
வீட்டில் சொன்னால் நிச்சயம் எதற்கு பிரச்சனை என்று தான் அவனை அனுப்பிவிட பார்ப்பார்கள். அதிலும் தன் தந்தை சொல்லவே வேண்டாம்.
அவனின் பேச்சில் அருவருத்துப்போனவள் இப்படியே இவனை விடுவதா என்று தான் அத்தனை பேசி மிரட்டி அனுப்பியது.
தலையில் கைவைத்து அவள் அமர்ந்திருக்க நேரம் செல்ல கிட்டத்தட்ட ஒருமணிநேரம் கழித்துதான் கதவு திறந்துவிடப்பட்டது.