‘அப்போ இவ்வளோ நேரம் என்ன பண்ணான் இவன்…’ என்று துரைசாமிக்கு தோன்றிய அடுத்த நொடி,
“என்ன யோசிக்கிற.. இவ்வளோ நேரம் விஷயத்துக்கு வராம என்ன செஞ்சேன்னா?? ரொம்ப சிம்பிள்.. உன்னை பேச வச்சேன்.. ஏன்னா நீ தான் இதெல்லாம் செஞ்சன்னு சொல்ல ஆதாரம் வேணும். அதைய நீயே தரனும்… என்ன புரியலையா?? உன் வீர தீர பராக்கிரமங்களை எல்லாம் எடுத்து விட்டியே.. நான் தான் இதை பண்ணேன்.. இதோ இவன் தான் அதை செஞ்சான்னு.. எல்லாம் இப்போ பக்காவா ரெக்கார்ட்..” என்று சொல்லி முடிக்குமுன்னே,
“ஏய் ஏய்.. என்ன கூப்பிட்டு வச்சு மிரட்டுறியா?? என்னடா???” என்று துரைசாமியும் எகிற,
“அட பொறுமை பொறுமை பங்காளி.. என்ன இப்படி சட்டுன்னு கோவம் வருது.. இன்னும் நான் சொல்லி முடிக்கவேயில்லையே… இப்படி பண்ணா அப்புறம் நீ பேசின எல்லாத்தையும் நம்ம ஊர் மக்கள் அவங்க வீட்ல இருந்தே பார்க்க வேண்டி வரும்.. என்ன புரியலையா?? உன்னோட பேச்சு ஊருக்கெல்லாம் தெரியும்.. எத்தனை நேரம் ஆகும் அதையெல்லாம் ஒளிபரப்ப..??” என்று புருவம் உயர்த்தி சிரித்தான் ஈசன்.
அவ்வளவு தான் உள்ளதும் கெட்டது கதையானது துரைசாமிக்கு. இப்பொழுது தான் பாலாவிற்கும் புரிந்தது ஏன் இத்தனை நேரம் தன் அண்ணன் பேசாதிருந்தான் என்று. துரைசாமி சுற்றி இருந்தவர்களும் சற்று குழம்பியது போல ஒரு பாவத்துடன் காண, சட்டென்று அவனுக்கும் என்ன சொல்வது என்று தெரியவில்லை.
ஈசன் பொய் சொல்கிறானா இல்லை உண்மையை தான் சொல்கிறானா?? என்று தெரியவில்லை. அவன் முகத்தில் இருந்து எதையும் கண்டுகொள்ள முடியவில்லை. ஆனாலும் துரைசாமிக்கு இவனது பேச்சை கேட்டு தான் இப்படியே அடங்கி போவதா என்று தோன்ற,
“என்ன ஈசா பூச்சாண்டி எல்லாம் காட்டாத.. நீ எந்த போலீஸ்க்கு போனாலும் நான் பயப்பட மாட்டேன்..” என்று சொல்ல,
“அட நான் போலீஸ்க்கு போவேன்னு யாரு சொன்னா.. அதெல்லாம் இல்லவேயில்லை… ஜஸ்ட்… நீ பேசினதை நம்ம ஊர் முழுக்க ஒளிபரப்புவேன் அவ்வளோ தான்… அப்புறம் ஊர் மக்களா பார்த்து என்ன செய்யணுமோ செய்யட்டும்…” என்று மீண்டும் தன் கையில் இருந்த வெள்ளை கவரை ஆட்டியபடி ஈசன் பேச மீண்டும் துரைசாமியின் பார்வை அதன் மேல் படிந்தது.
“என்ன ஒன்னும் பேசாம அமைதியா இருக்க…??” என்று மேலும் ஈசன் அவனை தூண்ட, துரைசாமி நிதானித்தான்.. அவசரப்பட்டு இம்முறை வார்த்தையை விட்டுவிட கூடாது என்று நிறையவே நிதானித்தான்.
நிதானித்து ஒரு யோசனைக்கு வந்தவன், “என்னப்பா ஈசா.. இப்படியெல்லாம் நீ யோசிக்கலாமா?? என்னயிருந்தாலும் நம்ம எல்லாம் ஒன்னுக்குள்ள ஒன்னு.. அதனால.. இந்த ரிப்பேர்க்கு ஆனா செலவு எம்புட்டுன்னு சொல்லு நானே குடுத்துடுறேன்.. அவ்வளோதான பிரச்சனை முடிஞ்சதுல்ல.. இதுக்கு போய்…” என்று சிரித்தபடி எழுந்தவன், நடந்த எதுவுமே ஒன்றுமில்லாதது போல் பேசி கிளம்ப,
“உன் பணம் நீயே வச்சுக்கோ.. போறப்போ இதுல ஒரு கையெழுத்து மட்டும் போடு…” என்று தன் கையில் இருந்த வெள்ளை கவரை பிரித்து அதனுள்ளே இருந்த மற்றொரு காகிதத்தை பிரித்து அவன் முன்னே நீட்டினான்.
‘இதென்ன புதுசா…’ என்று துரைசாமி பார்க்க, நீ இதில் கையெழுத்து போட்டுவிட்டு தான் இங்கிருந்து நகர முடியும் என்பது போல ஈசன் பார்த்தான்.
வேறொன்றுமில்லை, துரைசாமி செய்த அட்டுழியங்கள் அத்தனையும் அவனே ஒப்புக்கொண்டது போல் எழுதி, இனிமேலும் அப்படி எந்த தவறும் நடக்காது என்றும், அப்படி ஏதேனும் நடந்தால் ஈசன் எவ்வித நடவடிக்கை வேண்டுமானாலும் எடுக்கலாம் என்றும் துரைசாமியே ஒப்புதல் வாக்குமூலம் அளிப்பது போல் எழுதபட்டிருந்தது அதில்.
அதை படித்ததும் துரைசாமிக்கு அத்தனை ஆத்திரம். தன்னை விட வயதில் சிறியவன், எத்தனை யோசித்து தான் வாயாலே அனைத்தும் சொல்ல வைத்து, இப்படி கையெழுத்தும் வாங்கும் நிலைக்கு வந்திருக்கிறான் என்றால் முன்னமே இதற்கெல்லாம் ஏற்பாடு செய்து தான் ஈசன் தன்னை அழைத்திருக்கிறான் என்று தோன்ற,
இப்பொழுது அவன் சொல்வதை செய்வது தவிர வேறு எதையும் செய்யவும் முடியாது என்றும் தோன்ற, வேறு வழியே இல்லாமல் கையெழுத்து போட்டான் துரைசாமி.
ஆனாலும் அவன் மனம் அடங்கவில்லை. தானோ ஈசன் தொழிலை மட்டுமே பாதிப்பு செய்ய எண்ணியிருக்க, ஈசனோ தன்னை வைத்தே அனைத்தும் சொல்ல வைத்ததும் இல்லாமல், அதனை ஊருக்கே வேறு வெளிச்சம் போட்டு காட்டுவேன் என்று சொன்னதும் மனதினுள் ஈசனை கொன்று போட்டு விடும் ஆத்திரம் வந்தது.
ஆனால் இது அவனிடம்.. இங்கே என்ன செய்திட முடியும். வேறு வழியே இல்லாமல் கையெழுத்திட்டவன், போகும் போது சும்மா போகாமல்,
“ஆனா ஈசா உன்னை பாராட்டியே ஆகணும்.. இப்படி எல்லாம் பக்காவா பிளான் போட்டு செஞ்ச.. நிஜமா உன்னை நினைச்சா பிரமிப்பா இருக்குப்பா..” என்று அவனை பாராட்டுவது ஆரம்பித்து,
“ஒரு விசயம் நீ சொன்ன பார்த்தியா…யோக்கியமா இருக்கணும்னு.. அதை தான் நீ சொல்லி என்னால கேட்க முடியலை… என்ன அப்படி பாக்குற.. உன்னை பத்தியும் தான் ஊருக்கே தெரியுமே… பழகினது ஒருத்தி கூட.. இப்போ வாழ்றது இன்னொருத்தி கூட..
எப்படி உனக்கு உறுத்தலை.. ஊர் அறிய ஒருத்தி கூட பழகினோமே.. ஆனா இப்போ வேறொருத்திய கல்யாணம் பண்ணிட்டு குடும்பம் நடத்துறோமேன்னு சங்கடமாயில்லை.. ஹா ஹா… நீ என்னை யோக்கியமா இருன்னு சொல்றியா.. சரி சரி பொழைச்சு போ… வாழ வேண்டிய வயசு.. வாழ்ந்துட்டு போ..” என்று போகிற போக்கில் ஈசனை நெருப்பிலிட்ட ஈட்டியை போன்ற வார்த்தைகளை கொண்டு குத்திவிட்டு செல்ல, ஈசன் அந்த நொடி அப்படியே திகைத்து தான் போனான்.
ஆனால் அவனுக்கு பதில் பிரபுவும், பாலாவும் “ஏய் என்ன சொன்ன…” என்று முறுக்கிக்கொண்டு முன்னேற,
“டேய் டேய் போங்கடா.. உங்க அண்ணனே எப்படி நிக்கிறான்னு பார்த்துட்டு என்கிட்ட வாங்க…” என்று துரைசாமி வந்ததற்கு இது தான் லாபம் என்ற கணக்கில் பேசிவிட்டு சென்றுவிட்டான்.
அதன்பின் பாலாவும், பிரபுவும் என்ன சொல்லியும் ஈசன் முகம் மாறவில்லை. அதிர்ந்த பாவத்தில் இருந்து தீவிர யோசனைக்கு மாறியிருந்தது. இதுவரை யாருமே ஈசனிடம் பேசாத விஷயம்.. அவனை பார்த்து சொல்லாத பேச்சு.. இன்று இப்படி ஒருவன்.. அதுவும் இத்தனை பேரின் முன்னிலும் சொல்லி செல்ல அது ஈசன் என்னும் இரும்பு மனிதனை வெகுவாகவே தாக்கியது.
காதல்… யார் வாழ்விலும் வரும் போகும்… ஒவ்வொருவரும் அதனை கடந்தோ, இல்லை தொட்டு தீண்டியோ, இல்லை தன் வாழ்வு முழுவதற்குமேயோ என்று காதலை சந்தித்து தான் வந்திருப்பர்…
ஈசன் அனிதாவை உண்மையாகத் காதலித்தான். அவன் வரையில் அவன் முடிவில் எந்த மாற்றமும் இல்லை. காதல் இருவருக்கும் நடுவே இருக்கும் ஒன்று அதற்கு இருவருமே தான் பொறுப்பு, அதனில் இருந்து ஒருவர் விலகுகையில் அங்கே காதலுக்கான அர்த்தம் ஒன்றுமில்லாமல் போகிறது.
ஓர் உறவு என்பது கெஞ்சிப்பெறுவது இல்லை. ஈசன் அனிதாவிடம் கெஞ்சும் நிலையிலுமில்லை. அவனுக்கு எப்படி வலிக்குமோ அதே போல் தானே அவளுக்கும் இருக்கும் என்று தோன்றினாலும் அவளுக்கு அதெல்லாம் பெரியதாய் இல்லை என்று பட உன் முடிவு என்று விட்டுவிட்டான்.
அவள் போவேன் என்றாள், இவன் சரியென்றும் சொல்லவில்லை முடியாது என்றும் சொல்லவில்லை. சத்தமிடவில்லை, சண்டையிடவில்லை.. விலகி நின்றுவிட்டான். அனிதாவிடம் இருந்து முழுதும் விலகி நின்றுவிட்டான் அவ்வளவே..
ஈசன் நினைத்திருந்தால் எப்படியேனும் தன் திருமணத்தை அப்பொழுதே அனிதாவோடு நடத்தியிருக்க முடியும். நடத்தியும் காட்டியிருப்பான். ஆனால் அப்படி அவன் செய்யவில்லை. அவள் சொன்ன காரணங்கள் எல்லாம் அவன் தன்மானத்தை அல்லவா உசுப்பியது. சொன்னது போலவே அவளும் சென்றுவிட்டாள். இவனும் தன் வாழ்வு என்று தனக்கு பிடித்தது போல் வாழவும் பழகிக்கொண்டான்.
அவனது முடிவில் எந்நிலையிலும் மாறுவதற்கு தயாராய் இல்லை. அப்படி எவ்வித சலனமும் இல்லாமல் ஈசனது வாழ்வு செல்லும் போது தான் லட்சுமியுடனான திருமணம் என்பது நிகழ்ந்தேறியது. அவனே எதிர்பார்க்காத ஒன்று.
என் வாழ்வு என் இஷ்டம் என்று இறுமாந்திருந்தவனை, அவனது வாழ்வில் நடந்தவைகளை கொண்டே துரைசாமி சொல்லிகாட்டிவிட்டு சென்றிட ஈசனுக்கோ இது தானா நான் என்று தோன்றியது??
‘நீ என்ன சொல்வது நான் என்ன கேட்பது…’ என்ற ரீதியில் தன் எதிராளியை கையாள்பவன், துரைசாமி சொன்ன ஒரு வார்த்தையில் மனம் சுக்குநூறாய் உடைவதை கண்டான்.
ஈசன்… பார்பதற்கும் சாதரணமானவன் அல்லன்.. பழகுவதற்கும் சாதாரனமானவன் அல்லன்.. அதே நேரம் சில விசயங்களில் அவனும் மிக சாதராண மனிதனே.. தன் பெயருக்கு ஒரு களங்கம் எனும் போது யாராகினும் கலங்கித்தான் போவர். அதிலும் அத்தனை கௌரவம் பார்க்கும் ஈசனும் விதிவிலக்கல்ல..
அனிதாவிடம் காதல் உண்மையாயில்லை என்று எண்ணும் அதே நேரம் தன்னுடைய காதல் மட்டும் நிஜம்தானா என்று தோன்றியது?? அப்படி நிஜமென்றால் அவளை பிரிய அனுமதித்திருப்பேனா?? அனைத்தையும் விட அவளே முக்கியம் என்றல்லவா தோன்றியிருக்கும்..
அப்போ நானும் அப்படியில்லையோ?? அதனால் தான் விட்டு விலகவும், விலகி வாழவும்… பின்னொரு நாளில் வேறொரு பெண்ணை திருமணம் செய்யவும் என்னால் முடிந்ததோ?? அப்படி காதலிலேயே உண்மையாய் நிலையாய் இருந்திட முடியாதவன் எப்படி திருமணம் எனும் வாழ்நாள் பந்தத்தில் உறுதியாய் உண்மையாய் இருந்திடுவேன் என்று தன் மீதே சந்தேகம் எழவும் செய்தது.
தான் நினைத்திருந்தால் இந்த திருமணம் நடந்தேயிருக்காது. ஆனால் அதையும் செய்யவில்லை. அது ஏன்?? ஒருவேலை லஷ்மியை எனக்கு பிடித்திருந்ததா?? ஆனால் மனைவியாய் அவளை காணவும் நினைக்கவும் இன்றளவும் முடியவில்லையே.. அப்படியெனில் என் மனதில் இருப்பதென்ன??
நான் என்ன?? என்ற கேள்விகள் எல்லாம் அவனுள் தோன்ற தோன்ற தேவையில்லாமல் தன் பெயரும் கெட்டு, அவள் வாழ்வும் கெட்டு என்ற எண்ணம் எழ, லட்சுமி தன் மனைவி அவளோடு தான் தன் வாழ்வு பிணைக்கபட்டிருக்கிறது என்று அவன் சிந்தித்து வைத்ததெல்லாம் எங்கோ ஒரு மூலையில் சென்று முடங்கிட, எப்படி வீடு வந்து சேர்ந்தானோ.. இல்லை எது அவனை அழைத்து வந்ததோ தெரியவில்லை.. பாலாவும் பிரபுவும் என்ன சொல்லியும் கேட்காதவன் திடீரென்று கிளம்ப, அவர்களுக்குமே அதிர்ச்சி தான்.
ஈசன் பின்னோடு வந்து பார்த்தவர்கள் அவன் வீட்டிற்கு தான் செல்கின்றான் என்பதனை கண்டுவிட்டு தாங்களும் வீடு செல்ல, ஈசன் வீட்டிற்குள் நுழைகையில் அங்கே லட்சுமி அமர்ந்திருப்பது கூட அவனது கண்களுக்கு தெரியவில்லை.
அவளிருந்த நிலை அவள் மட்டுமே அறிவாள். அவனது நிலையும் அதே போலத்தான். இருவருக்குள்ளும் எட்டிப்பார்த்து, ஒட்டி உறவாடிட நினைத்த காதல் இப்பொழுதோ, இருவரின் சிந்தனை செய்த வேலையால் ஈசன் லட்சுமிக்கு நடுவே படர்ந்து விரிந்திருக்கும் ஒரு மாய திரைக்கு பின்னே சென்று ஒளிந்துகொண்டது.
நிலவும் எத்தனை நேரம் தான் இவர்கள் முகத்தை பார்க்கும்?? நானும் கொஞ்சம் இங்கே என்னதான் நடக்கிறது, நடக்கப்போகிறது என்று பார்க்கிறேன் என்று சூரியனும் வந்துவிட, லட்சுமியோ தான் அமர்ந்த இடத்திலேயே உறங்கியிருந்தாள்.. ஈசனும் அப்படியே கண்களை மூடி உறங்கியிருந்தான்.
ஆனால் நடந்த அனைத்தையும் பாலா மூலம் கேட்டறிந்த மரகதமோ எப்போதடா விடியும் என்று காத்திருந்து மகனை காண வர, அங்கே வீடிருந்த கோலமும் இவர்கள் உறங்கியிருந்த விதமும் அவரை வெகுவாய் கலக்கமடையத் தான் செய்தது.