ஈசனது பேச்சு எதிலோ ஆரம்பித்து, எங்கோ தொட்டு எதனுள்ளோ பயணித்து, இறுதியில் அது லட்சுமியின் பேச்சாய் மாறி, அங்கே அனைவரையும் அதிர்ச்சியில் நிற்க வைத்தாலும், அவள் நிற்க வைத்து கேள்வி கேட்ட அவள் கணவனோ மனதில் அத்தனை நிம்மதியை உணர்ந்தான்.
ஆம் ஈசன் தெளிந்து விட்டான்.
யானைக்கு தான் அடி சறுக்கினால் எழ நேரமாகும். ஈசன் யானையல்ல.. குதிரை.. அதுவும் போர் குதிரை. தன்னை தானே காத்துக்கொள்ளவும் தெரியும்.. தன்னை தானே செலுத்திக்கொள்ளவும் தெரியும். சறுக்கிய நொடியில் சமாளித்து எழுந்துவிட்டான்.
அவன் எழ தூண்டியது லட்சுமியின் பேச்சும், அவள் பேசும் பொழுது அவள் முகத்தில் தோன்றிய பலவிதமான பாவங்களும் தான்.
‘உனக்கென்ன அத்தனை ஆணவம்.. ஆண் என்பதாலா?? இல்லை யாருமே உன்னை கேள்வி கேட்டு பழக்கமில்லாததாலா..?? எதனால்.. எதனை கொண்டு உனக்கு இத்தனை செருக்கு.. உன்னை ஒருவன் கை நீட்டி சொன்னதும் தாங்க முடியவில்லையோ… நான் கேட்கிறேன் நீ சொல்லித்தான் ஆகவேண்டும்…’ என்ற தோரணையில் லட்சுமி பேசிய அனைத்துமே அவனுக்கு பிடித்திருந்தது.
ஆம் பிடித்தே இருந்தது.
அதை அவனே அவனிடம் ஒத்துக்கொண்டான். ஆனால் லட்சுமியின் இத்தனை கேள்விக்கும் அவன் பொறுத்து பொறுமையாய் பதில் சொன்னால் அவன் ஈசனா?? அவனது பிறவிக்குணம் என்று ஒன்று உண்டல்லவா??
அது அவனை அத்தனை சீக்கிரத்தில் மனம் திறக்க வைக்குமா என்ன?? ஆனால் அவன் லட்சுமி பத்தி அறியான். ஈசன் எத்தனை இடுத்தமானவனோ அதற்கு சிறிதும் சளைக்காதவள் அவள்.. அவனுக்கு எத்தனை வேகமும் காட்டமும் பேச்சினில் இருக்குமோ அதில் சற்றும் குறையாதவள் அவள். ஆனால் என்ன இன்னமும் அவனுக்கு அவளை முழுதாய் புரிந்துகொள்ளவும் தெரிந்துகொள்ளவும் சந்தர்பங்கள் வாய்க்கவில்லை.
இன்னும் விட்டால் லட்சுமி பேசியிருப்பாள், ஆனால் அதற்குள் அங்கே பேச்சியும் கஜேந்திரனும் வர, யாருமே அவர்களை எதிர்பார்க்கவில்லை.
மரகதம் வாசல் தெளித்து கோலம் போடுவதை பார்த்த பேச்சி ஒருவேளை லட்சுமிக்கு உடல்நலம் சரியில்லையோ என்று பார்க்க வந்தார். கஜேந்திரனோ காலை நேரத்திலேயே என்றுமில்லா திருநாளாக மரகதம் ஈசன் வீடு சென்றிருக்க என்னவென்று காண வந்தார்.
ஆனால் இருவர் வந்த சமயமோ சரியாய் லட்சுமி கடைசியாய் பேசியது தான் அவர்களுக்கு கேட்டது. அதனை யார் கேட்டாலும் ஈசன் லட்சுமி இருவருக்கும் தான் என்னவோ பிரச்னை என்று தானே தோன்றும். மகளது பேச்சினை கேட்ட பேச்சி வாயடைத்து போய் நிற்க, கஜேந்திரனோ என்ன இது என்பது போல் மரகதத்தை பார்த்தார்.
அத்தனை நேரம் பொங்கிய பாலாக கொதித்துக்கொண்டு இருந்த லட்சுமி இவர்கள் இருவரை காணவும் அப்படியே அடங்கிவிட, அவள் மனமோ இன்னும் அடங்க மறுத்தது.. சிறிதும் சளைக்காமல் ஈசனை தான் முறைத்து நின்றாள்.
‘உன் அம்மா வேண்டுமானால் உனக்கு பயந்து பேசாமல் நிற்கலாம் ஆனால் நான் அப்படியில்லை…’ என்று பார்க்க ஈசனது முகமோ அத்தனை சாந்தமாய் இருந்தது.
“என்ன மதினி…” என்று மரகதத்தின் கைகளை பேச்சி பயந்துபோய் பற்ற,
கஜேந்திரன், “எனக்கு தெரியாம நிறைய நடக்குது போல..” என்று வழக்கம் போல் தன் கர்ஜனை குரலில் கேட்டபடி அமர,
ஈசனோ இரண்டையுமே பொருட்படுத்தாமல், “வாங்க அத்தை…” என்று பேச்சியை மட்டும் வரவேற்றுவிட்டு,
“உங்களுக்கு தெரியாம என்ன நடக்குதுய்யா…??” என்று கேள்வியை எழுப்ப, எங்கே தந்தைக்கும் மகனுக்கு சண்டை வந்துவிடுமோ என்ற பயம் அனைவருள்ளும் வந்தது.
பேச்சிக்கோ கேட்கவே வேண்டாம்.. லட்சுமியின் இயல்பு ஒரு அன்னையாய் அவருக்கு நன்றாகவே தெரியும். அத்தனை எளிதில் கோவமோ பாசமோ வெளிக்காட்டிட மாட்டாள். அப்படி அவள் வெளிபடுத்தும் ஆட்களும் சிலரே. இயல்பானவள் போல் இருந்தாலும் அவளுள் இருக்கும் கடினம் பேச்சி அறிவார். அப்படியிருக்கையில் திருமணமான கொஞ்ச நாட்களிலேயே லட்சுமி ஈசனிடம் இப்படி பேசியது அவருக்கு நிஜமாகவே பயம் கலந்த அதிர்ச்சி தான்.
அதை விட அதிர்ச்சி அதற்கு ஈசன் ஒன்றுமே சொல்லாமல் இருப்பது. எதுவாக இருந்தாலும் இத்தனை பேரின் முன்னிலும் நாம் ஒன்றும் கேட்டுவிட கூடாது என்று எண்ணியபடி மரகதம் அருகில் அவர் நிற்க,
மரகதமோ ஆறுதலாய், “ஒன்னும் பிரச்சனை எல்லாம் இல்லை பேச்சி…” என்று மெல்ல கூற, கஜேந்திரன் கண்களுக்கு இதெல்லாம் தப்புமா என்ன.
தன் தங்கையின முகத்தையும், மனைவியின் முகத்தையும் பார்த்தவர், பின் என்ன நினைத்தாரோ, ஈசனிடம் திரும்பி,
“அந்த துரைசாமிகிட்ட என்ன பஞ்சாயத்து..??” என்று பாலாவையும் லேசாய் முறைத்தபடியே கேட்டார். அவர் தொனியே, அவனெல்லாம் நமக்கு ஒரு ஆளா என்று சொல்லாமல் சொல்லியது.
“நாங்களா எதுவும் பண்ணலைய்யா.. பஞ்சாயத்துன்னு தெரிஞ்ச உங்களுக்கு அது எதுக்குன்னும் தெரியாம இருக்குமா???” என்று ஈசன் பதில் கேள்வி கேட்க, அவன் முகத்தில் இருந்த பவ்யம் குரலில் இல்லை.
இதுநாள் வரை அவனை யாரும் ஒன்றும் சொல்லாது இருக்கும் பொழுது போயும் போயும் அந்த துரைசாமி பேசியது தான் அவனால் ஏற்றுகொள்ள முடியவில்லை. ஈசன் நினைத்திருந்தால் அப்பொழுதே அந்த துரைசாமிக்கு அவன் பதில் சொல்லியிருக்க முடியும், அதுவும் அவனது பாணியில் சிறப்பாகவே சொல்லியிருக்க முடியும். அதிர்ச்சி ஒருபக்கம் இருந்தாலும். ஆணவம் நிறையவே இருந்தது.
ஆத்திரமோ, ஆணவமோ, அழுகையோ.. எதுவாக இருந்தாலும் அதற்கென்று ஒரு வடிக்கால் கண்டிப்பாய் இருக்கத்தானே செய்யும்.. தன் அம்மா கேட்டதும் மடை திறந்த வெள்ளமாய் கொட்டிவிட, அடுச்சு லட்சுமி பேசுவாள் என்று அவன் என்ன, யாருமே எண்ணவில்லை.
லட்சுமியே எண்ணினாளோ என்னவோ??
லட்சுமி பேசிய பிறகு அவன் மனநிலையில் மாற்றம் ஏற்பட்டதை அவனே அறிவான். ஆகினும் இப்பொழுது கஜேந்திரன் வந்து பேசவும் ஏனோ ஒரு கார நெடி அவன் பேச்சில் வீசத்தான் செய்தது.
அதனை எல்லாம் உணராதவரா கஜேந்திரன்.. ஈசனை பெற்றவர் அல்லவா.. அவனுக்கு ஒருபடி மேலே தானே இருப்பார். மகன் என்ன பேசினாலும் சரி என்று காரியத்தில் கண்ணாய்,
“எழுதி வாங்கினியோ…??” என்று அடுத்த கேள்வியை கேட்க,
“ஆமாங்கய்யா…” என்றான்.
“ம்ம்…..” என்று சொன்னவரின் பார்வை அடுத்து லட்சுமி மீது படிய, அவளோ ஒன்றுமே தெரியாதவள் போல் தலை குனிந்து நின்றாள்.
‘நிற்க்கிறா பாரு.. இவ்வளோ நேரம் மூச்சு விடாம பேசிட்டு.. இப்போ ஒன்னுமே தெரியாதவ போல.. டி.. லஷ்மி என்னையவே நிற்க வச்சு கேள்வி கேட்கிறியா.. ஹ்ம்ம் அதுவும் நல்லாத்தான் இருக்கு.. ஆனா இதுவரைக்கும் எனக்குமே கேள்வி கேட்டு தான் பழக்கம்.. பதில் சொல்லி இல்லை.. உன்னோட எல்லா கேள்வியும் உனக்கே திருப்புறேன்..’ என்று மனதினுள் கூறிக்கொண்டவனும் தன் மனைவியை தான் பார்த்தான்.
எல்லாம் இந்த ஈஸ் மாமானால.. அந்த துப்புகெட்ட துரைசாமி சொன்னானாம்.. இவரும் கேட்டாராம்.. இங்க வந்து நியாயம் பேசுனாராம்.. அவன் முகரைல நாலு போடுறதுக்கு இல்லாம.. நான் கேட்டதுக்கு எல்லாம் பதில் மட்டும் சொல்லாம போகட்டும்.. அப்புறம் இருக்கு சேதி… இனி எதுவா இருந்தாலும் என்கிட்டே நீங்க பேசித்தான் ஆகணும் ஈஸ் மாமா…’ என்று தன் போக்கில் ஈசனுக்கு அர்சனை செய்ய,
கஜேந்திரனோ, “மத்ததெல்லாம் சரி இங்க என்ன பிரச்சனை..???” என்று அடுத்த கேள்வியை தொடுத்தார்.
அவ்வளவு தான் மரகதமும், லட்சுமியும் விலுக்கென்று திரும்பி ஈசன் முகம் பார்க்க, அவனோ ஒன்றுமே நடவாதது போல,
“இங்க என்னய்யா…???” முகத்திலும் அதே பாவனையை காட்டி.
‘இது உலக மகா நடிப்புடா சாமி…’ என்று நினைத்தது வேறு யாருமே இல்லை பாலா தான்.
அவனும் அப்போதிருந்து பார்த்துகொண்டு தானே இருக்கிறான். லட்சுமி பேசியதும் இப்பொழுது ஈசன் பேசுவதும். ‘யப்பா புருசனும் பொண்டாட்டியும் போட்டி போட்டு நடிக்கிறாங்க டா..’ என்றே தோன்றியது.
ஆனால் அதே எண்ணம் லட்சுமிக்கும் தோன்ற, ஈசனை தான் பார்த்தாள். அவனும் தான் லட்சுமியை ஒரு பார்வை பார்த்துவிட்டு, “என்னங்கய்யா..” என்று மீண்டும் கஜேந்திரனை நோக்கி கேட்க, அவர் என்ன சொல்ல வந்தாரோ அதற்குள் மரகதம்,
“இங்கவே டிபன் பண்ணிடலாம்.. என்ன லட்சுமி.. சரிதான.. மாவு இருக்குத்தான. இனி எதுக்கு அங்க ஒன்னு இங்க ஒன்னுன்னு பண்ணிட்டு.. பாலா போயி பாட்டியை கூட்டிட்டு வா.. என்னங்க இங்கனவே சாப்பிட்டிட்டு அப்புறம் வேலையை பார்க்க போங்க.. பேச்சி வா நீயும் இன்னிக்கு இங்கன இரு… ” என்று அழகாய் பேச்சை திசை திருப்ப,
பாலா, ‘ம்மா இப்படி நீயும் இவங்க நாடக க்ரூப்ல சேர்ந்துட்டியே…’ என்ற பாவனையில் பார்த்துவிட்டு போனான்.
ஆனால் லட்சுமிக்கு தான் இப்பொழுது குழப்பமாய் போனது.. மாமியார் சொல் கேட்டு உள்ளே சமையல் செய்ய போவாதா, இல்லை இங்கே கணவனும் மாமனாரும் பேசிக்கொண்டிருக்கஅப்படியே நிற்பதா என்று. ஈசனுக்கு சிரிப்புதான் வந்தது அவளை பார்த்து.
அனால் கஜேந்திரனோ நான் இன்னும் பேசி முடிக்கவில்லை என்பது போல் செறும, மரகதமும் பேச்சியும் அப்படியே நடந்தவாக்கில் நிற்க, ஈசன் தன் தந்தை முகம் பார்க்க, லட்சுமியும் இப்போது தன் மாமனார் முகம் பார்த்தாள்.
“இங்க என்ன பிரச்சனைன்னு கேட்டேன் ஈசா…” என்றவரின் குரலில் இந்த கேள்விக்கு கட்டாயம் எனக்கு பதில் வேண்டும் என்று அர்த்தம் தொனிக்க,
ஈசனும், “இங்க ஒரு பிரச்சனையும் இல்லையே அய்யா…” என்றான் அழுத்தம் திருத்தமாய்.
நீங்கள் என்ன கேட்டாலும் இது மட்டுமே என் பதிலாய் இருக்கும் என்று கூறாமல் கூறும் மகனை அவருக்கு புரியாதா என்ன?? நீ சொல்வதை நான் நம்பவில்லை என்பது போல ஒரு பார்வை பார்த்தார்.
“ஒருவேளை உங்களுக்கு தெரிஞ்சே ஆகனும்னா சொல்றேன், பிரச்சனை தான். ஆனா எப்போ லஷ்மி இதை பேசினாளோ அப்போவே இது எனக்கும் லஷ்மிக்கும் நடுவில இருக்கிறதா மாறிடுச்சு. இதை பத்தி லஷ்மி பேசாத வரைக்கும் இது பொது.. பேசிட்டா.. இனி அது அவளுக்கும் எனக்கும் மட்டுமான விஷயம். அதுனால அதை நாங்க தான சரி பண்ணிக்கணும்.. நாங்களே சரியும் பண்ணிக்கிறோம்ய்யா..” என்று அழகாய் இது கணவன் மனைவிக்குள் இருப்பது நீங்கள் யாரும் தலையிட வேண்டாம் என்று சொல்லிவிட, கஜேந்திரனுக்கு லேசாய் புன்னகை மலர்ந்தது முகத்தில்.
லட்சுமிக்கும் தான்.. பாசமோ பிணக்கோ முதன் முதலில் இது எனக்கும் அவளுக்கும் நடுவில் என்று கூறியிருக்கிறான். அதுவே அவளுக்கு சிறு மகிழ்வை தந்தாலும் தன் உணர்வை சட்டென்று மறைத்துக் கொண்டாள்.
கஜேந்திரனுக்கும் தன மகனை பற்றியும் தெரியுமே. என்னதான் சற்றே வேகமானவன் என்றாலும் பொறுப்பில் இருந்து விலகாதவன் ஈசன் என்று நன்கு அறிவார். அந்த ஒரு காரணமே ஈசனுக்கு லட்சுமியை திருமணம் பேச அவருக்கு போதுமானதாய் இருந்தது.
அதே நேரம் நேற்று நடந்தது என்னவென்றும் அவர் காதுகளுக்கு வந்திருந்தது, இதில் எக்காரணம் கொண்டும் மகனது சொந்த வாழ்வு பாதிப்படைய கூடாதே என்று எண்ணியே மீண்டும் மீண்டும் என்ன பிரச்சனை என்று கேட்டார்.
என்னதான் அனைத்தும் தெரிந்தும் ஈசனை லட்சுமி மணந்துகொண்டாலும், ஈசனே அதனை மறந்திருந்தாலும், தன் கணவனின் கடந்த கால காதலை பற்றி பேசுவதென்பது ஆழ் மனதில் எந்தவொரு பெண்ணுக்கும் நிச்சயம் வலி கொடுக்கத்தான் செய்யும்.
ஆனாலும் லட்சுமி பேசினாள். ஈசன் நலனுக்காக. அவன் மனம் சமணடைய வேண்டும் என்பதற்காக. இறுதியாக அவள் பேசியதை கஜேந்திரன் கேட்டார் தானே. அப்படி லட்சுமி பேசும் பொழுது இவளை விட சிறந்தவள் வேறு யாரும் தன் மகனுக்கு மனைவியாய் வந்திட முடியாது என்றே தோன்றியது.