இருந்தாலும் அவருக்கு ஈசனை எண்ணி ஒரு கலக்கம் இருக்கத்தான் செய்தது. பெற்றவர்களே என்றாலும் அவனிடம் இப்படி யாரும் நடந்ததில்லை தன் மகன் எப்படி எடுப்பானோ என்று நினைத்தவருக்கு, ஈசன் எப்பொழுது இது எனக்கும் என் மனைவிக்குமானது என்று சொல்லாமல் விட்டானோ அங்கேயே அவர்களுக்குள் ஒரு புரிதல் மலர்ந்துவிட்டது என்பது அவருக்கு நன்றாகவே புரிந்தது.
அந்த புரிதலே இருவருக்கும் ஒரு பந்தத்தை உருவாக்கிடாதா என்ன??
“ஹ்ம்ம் அதுவும் சரிதான்.. புருஷன் பொண்டாட்டி பிரச்சனை.. நீங்களே பேசிக்கிட்டா ரொம்ப நல்லது..” என்று கூறினாலும் அவர் கண்கள் பேசியே ஆகவேண்டும் என்று தான் சொன்னது.
அனால் லட்சுமிக்கு தான் பக்கென்று இருந்தது.
‘எல்லார் முன்னாடியும் கேள்வி கேட்டா இந்த ஈஸ் மாமா மனசில இருக்கிறது வெளிய வரும்னு பார்த்தா.. பொசுக்குனு இப்படி சொல்லிட்டாங்க.. இப்போ இந்த பதிலுக்கு வேற நான் பின்னாடி அலையனுமா… வேணாம் லட்சுமி.. வேண்டவே வேணாம்.. கண்டுக்காத மாதிரியே இரு…’ என்று தனக்குள்ளே கூறிக்கொண்டவள் உள்ளே சென்றுவிட்டாள்.
சமையலறைக்குள் லட்சுமி வந்தவளுக்கு பின்னோடே வந்த பேச்சி நன்றாகவே மண்டகப்படி நடத்தினார். அம்மா மகள் இருவரையும் சமாதனம் செய்யும் வேலை மரகதத்தின் கையில் வர அவரும் அதை செவ்வனே செய்தும் முடித்தார்.
ஆனால் வெளியே இருந்த ஈசனுக்கோ மனம் இப்பொழுது சமன் அடைந்திருந்தாலும், இறுதியாய் லட்சுமி உள்ளே செல்லும் பொது பார்த்து போன பார்வையின் பொருள் தான் விளங்கவில்லை.
ஈசனும் கஜேந்திரனும் மட்டுமே இருக்க, தன் தந்தையோடு அத்தனை ஒன்றும் கலகலப்பாய் பேசியும் பழக்கமில்லாததால், நகர போனவனை,
“ஏ அய்யா ஈசா… அந்த கூறுகெட்ட துரைச்சாமிய நீ சும்மாவா விட்ட..” என்று குரல் தடுத்து நிறுத்த,
‘யாரடா அது மறுபடியும்…’ என்று பார்த்தால் முத்தழகு தான்.
“ஏய் கிழவி உன்கிட்ட சொல்லி தானே கூட்டிட்டு வந்தேன்.. இங்க வந்ததுமே மறுபடியும் ஆரம்பிக்கிற.. இப்போதான் எல்லாரும் பேசி ஒருவழியா களைச்சு போயிருக்காங்க… நீ உள்ள போ…” என்று முத்தழகை பாலா விரட்ட, ஈசனுக்கு தன் தம்பியின் செயல் லேசாய் சிரிப்பை கொடுக்க,
“நான் பண்ணை வரைக்கும் போய்ட்டு வரேன்..” என்று பொதுவாய் சொல்லிவிட்டு சென்றுவிட்டான்.
ஈசனது பண்ணை ஒன்றும் அத்தனை தூரமில்லை. இதோ இதே வீட்டின் அப்படியே பின் புறம்.. இந்த இரு வீடுகளின் அளவை விட ஈசனது பால் பண்ணை பெரியது. அருகே விலைக்கு வந்த இடத்தையும் வாங்கி போட்டு பெரிது படுத்தியிருந்தான்.
சூப்பர் மார்கெட்டும் கேபிளும் மட்டும் வீட்டில் இருந்து சற்று தொலைவில் இருக்க, பண்ணை பக்கத்தில் இருந்தால் தான் நல்லது என்று இப்படி அமைத்துக்கொண்டான். ஈசன் வீட்டில் கொள்ளை புறத்திற்கும், பண்ணைக்கும் ஓர் ஊடுகதவு உண்டு. அவன் வீட்டில் இருக்கும் நேரம் அதன் வழியே தான் பண்ணைக்கு போவது வருவது எல்லாம்.
இன்றும் அப்படியே சென்றவனுக்கு மனதிலோ லட்சுமி பார்த்து போன பார்வையே பதிய, பண்ணைக்கு சென்றாலோ அங்கே மாடுகள் எல்லாம் மேய்ச்சலுக்கு சென்றிருக்க, அந்நேரம் பார்பதற்கு வேலை எதுவுமில்லை என்றாலும், அவ்விடத்து தனிமையை அவன் மனம் நாடியது என்னவோ உண்மை.
இது அவன் இடம். அவனுக்கான அடையாளத்தையும், சுயத்தையும் கொடுத்த இடம். இங்கிருந்து தான் அனைத்துமே ஆரம்பித்தது. ஈசன் கேபிள்ஸ் ஈசன் சூப்பர் மார்கெட் இதெல்லாமே இந்த பால் பண்ணையை கொண்டே.
பதினைந்து மாடுகளில் ஆரம்பித்தது. இன்று ஐம்பதிற்கும் மேலே. இன்னும் வாங்க வேண்டுமென்ற ஆசை அவனுள்ளே இருந்தது. வாங்கவும் செய்வான். என்னவாக இருந்தாலும் இங்கே வந்தால் அவனுக்கு ஒரு நிம்மதி கிடைக்கும். ஆகையாலே ஈசனுக்கு இங்கு வருவது அதிகம் பிடிக்கும்.
இப்போது தான் வேலை பழு நிறைய வந்துவிட, பண்ணையை பார்த்துக்கொள்ள ஆட்கள் போட்டாலும், தினம் ஒருமுறை இங்கு வந்துவிட்டு தான் மற்ற வேலைகளை பார்ப்பது.
கண்களை மூடி அங்கிருந்த திண்டில் கால் நீட்டி அமர்ந்தவனுக்கு ஏனோ மீண்டும் மீண்டும் லட்சுமியின் அந்த வெற்று பார்வையே நினைவில் வர, அந்த பார்வையே அவனை மிகவும் தொல்லை செய்தது.
‘நல்லா தானே இருந்தா… பின்ன ஏன் இப்படி பார்க்கிறா..’ என்று யோசனைகளை பிடித்துகொண்டு இம்முறை ஈசனது உள்ளம் லட்சுமியின் பின்னே ஓட, அவள் பல வருடங்களாய் உன்னை அப்படிதான் பார்க்கிறாள் என்று புத்தியில் உரைத்தது.
“கல்யாணத்துக்கு முன்னாடியும் இப்படி தான் பார்ப்பா.. இன்னிக்கு காலையில கூட பார்த்தா.. இப்பவும் பார்த்தா.. ஏன் அப்படி பார்க்கிறா??? நிச்சயமா அதில கோவமில்லை வெறுப்பு இல்லை.. ஆனா எந்த உணர்வுமே இல்லாத ஒரு பார்வை.. ஏன் பார்க்கிறா…?? என்னவோ இருக்கு..” என்று சிந்திக்க, அதனை தெரிந்துகொண்டே ஆகவேண்டும் போல் ஒரு வேகம் பிடித்தது அவனுள்.
அவனுக்கு பிடித்தமான வேகமாகவும் இருக்க, லட்சுமியின் பார்வைக்கான பொருளை கண்டுகொண்டே ஆகவேண்டும் என்ற எண்ணம் இன்னும் இன்னும் அவன் மனதில் ஆழமாய் பதிய, லட்சுமியுடனான வாழ்வை தொடங்க, அவனறியாமலேயே தன் மனதினுள் முதல் படி எடுத்து வைத்தான் ஈசன்.
இன்னது தான் என்றில்லை அவளை பற்றி என்னென்னவோ சிந்தனை. இதுதான் என்று அவனுக்கும் விளங்கவில்லை. ஆனாலும் அவளை பற்றி நினைப்பதை தவிர்க்க முடியவில்லை. தவிர்க்கவும் நினைக்கவில்லை. இப்படியே நேரம் செல்ல, அவன் அலைபேசி சிணுங்க, எடுத்துப்பார்த்தாள் லட்சுமி தான்.
“இவ பேச மாட்டளோ….” என்று முனுமுனுத்தவன், மீண்டும் வீட்டிற்கு செல்ல, லட்சுமியோ கண்ணிலே படவேயில்லை.
வரவேற்பறையில், கஜேந்திரனும் பாலாவும் இருக்க, சமையல்கட்டில் பேச்சி மரகதம் முத்தழகு குரல் கேட்க இவளை காணவில்லை. கண்கள் வீட்டினுள்ளே தேடினாலும் அவள் இருக்கும் அரவமே தெரியாதிருக்க, வேண்டுமென்றே அறையினுள் சென்று “லஷ்மி….” என்று உரக்க அழைத்தான்.
பதிலே இல்லை. மீண்டும் அழைத்தான். பதிலே இல்லாது போனாலும் குளியறை கதவு திறக்கும் சத்தம் கேட்க, இவன் திரும்பி பார்க்க, மீண்டும் குளித்து வந்திருக்கிறாள் போல.
ஆனாலும் ஏன் என்ற கேள்வியோடு அவளை காண, அவளோ ஈசனை கண்டு முதலில் திடுக்கிட்டாலும் பின் சிறிதும் கண்டுகொள்ளாது கண்ணாடி முன்னே நிற்க, இவனுக்கு அவ்வளவு தான் பொறுமை. அன்று மருந்து போட்டுவிட்ட நாளில் எப்படி அவளருகே உரசியபடி நின்றானோ அது போலவே இப்பொழுதும் கண்ணாடி வழியே அவளை பார்த்தபடி நிற்க,
“என்… என்ன…??” என்றாள் கேள்வியாய்.
“என்.. என்ன??? உனக்கு பதில் வேணாமா..” என்றவனின் குரலோ மிக மிக நெருக்கமாய் கேட்க, சுத்தம் அவளுக்கு என்ன பதில் என்ன கேள்வி என்பதே மறக்க தொடங்க,
‘இல்லை லட்சுமி.. இந்த ஈஸ் மாமா கிட்ட நீ இப்படி டக்குனு மயங்காத…’ என்று தன் மனதை சிரமப்பட்டே வழிக்கு கொண்டுவர, கண்களை இறுக மூடி திறந்தவள் மீண்டும் தன் வழக்காமான பார்வையை அவனிடம் பதிலாய் கொடுக்க.
“குட்… இதான்.. இதை தான் பார்க்கனும்னு நினைச்சேன்.. சொல்லு லஷ்மி.. என்ன அர்த்தம்..இந்த பார்வைக்கு என்ன அர்த்தம்…” என்று அவள் தோள்களை பற்றி அவன்புறம் திருப்ப, அவளோ அசராது நின்றாள்.
அவன் கழுத்தளவே இருந்தவள் அவன் முகம் பார்க்க சற்றே கழுதை நிமிர்த்த, தன்னை விட சிறிதே உயரம் கம்மி என்பதால், அவள் முகம் காண சற்றே குனிந்து அவன் பார்க்க, இப்பொழுது இருவரின் முகமும் அருகருகே வந்தமைய, சட்டென்று விலக முடியவில்லை. விலகும் எண்ணமும் வரவில்லை.
“சொல்லு லஷ்மி… இதுக்கு என்ன அர்த்தம்.. ஒன்னுமில்லைன்னு மட்டும் சொல்லிடாத.. நிச்சயமா எதுவோ இருக்கு.. கல்யாணத்துக்கு முன்னாடி வரைக்கும் அப்படிதான் பார்த்த.. இதோ இன்னிக்கு காலைல.. அப்புறம் கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி.. ஏன் இப்போ கூட அப்படி தான் பார்க்கிற.. நீ எல்லாம் எனக்கு ஒண்ணுமே இல்லைடான்னு சொல்ற மாதிரி இதென்ன பார்வை.. என்னவோயிருக்கு… ” என்று கேட்டவனின் குரலிலும் எதுவோ இருக்க, வேகமாய் தன் தலையை வேறு புறம் திருப்ப முயற்சித்தவளுக்கு தோல்வியே கிட்டியது.
ஈசன் தன் இரு கைகளாலும், அவள் கன்னத்தை பற்றி தன் முகம் நோக்கி இன்னமும் அருகில் நிமிர்த்திவன், அவளது கண்களுக்குள்ளே தன் பார்வையை செலுத்த, அவனது நெருக்கமும், குரலும் பார்வையும் நிச்சயம் அவளுள்ளும் மாற்றத்தை ஏற்படுத்தியது.
ஆனாலும் லட்சுமிக்கு ஈசனது இந்தளவு மாற்றம் மட்டுமே போதாதே.
“என்ன வேணும் உங்களுக்கு…??” என்று கேட்டவளின் இதழசைவோ இன்னும் அவனது கவனத்தை ஈர்க்க, ஒன்றும் பேசாமல் ஈசன் அப்படியே நிற்க, இது தான் சமயம் என்று ஈசன் நெஞ்சில் கை வைத்து ஒரே தள்ளு தள்ளி லட்சுமி அவனிடம் இருந்து விலகி நின்றாள்.