நெஞ்சில் கை வைத்து தள்ளினாலும் சரி, இல்லை என்னையே கீழே தள்ளிவிட்டாலும் சரி, இன்று உன்னை விடப்போவதில்லை என்பது போல், லட்சுமியின் கரங்களை பற்றி இழுத்தே தன்னருகே நிறுத்தியிருந்தான் ஈசன்.
ஈசனது இந்த செயல் நிச்சயம் லட்சுமிக்கு அதிர்ச்சி தான். அவன் இப்படியெல்லாம் அவளிடம் நடந்துகொண்டதில்லையே. ஆனால் எதற்கும் முதல் முறை என்று ஒன்று உண்டல்லவா. அந்த முதல் முறைக்கான ஆச்சாரமாய் தான் லட்சுமி பேசியதை ஈசன் எடுத்துகொண்டானோ என்னவோ..??
“என்.. என்ன இது… ம்ம்ச் விடுங்க…” என்று நகர முற்பட,
“என்ன.. இன்னிக்கு எல்லாமே புதுசா பண்ற.. எப்பவும் மாமான்னு சொல்வ இப்போ எங்க போச்சு அது… ஆனா அந்த பார்வை அப்படியே முன்ன பாத்த மாதிரி..” என்று அவளை நகரவிடாது இறுக்க,
‘ஐயோ.. இந்த ஈஸ் மாமா என்ன இன்னிக்கு இவ்வளோ பிடிவாதம்.. உளறிடாத லட்சுமி…’ என்று தன்னை திடப்படுத்தியவள், அவனை நேராய் நிமிர்ந்து பார்த்து,
“என்ன பார்வை…???” என்றாள் புரியாதது போல.
“அதான் நானும் கேட்கிறேன்… என்ன பார்வை அது…” என்றவன் பட்டென்று அவளை கண்ணாடி முன்னே திருப்பி வேகமாய் நிறுத்தி,
ஒருபக்க தோளை அழுந்த பற்றி மற்றொரு புற தோளின் மீது தன் முகத்தை வைத்தவனை அவளால் அந்த கண்ணாடி வழியாய் கூட பார்க்க முடியவில்லை. உடலும் மனமும் ஜில்லென்றிருக்க,
‘ஒவ்வொரு சாக்கா குடுங்க ஈஸ் மாமா.. மொத்தமா குடுக்காதீங்க..’ என்று அந்நிலையிலும் அவள் மனம் நக்கல் பேச, இதழ்கள் துடிக்க, கண்களோ இமைக்க மறந்து எதிர் தெரிவது தன்னுருவம் என்றாலும் அதனோடு சேர்ந்து ஈசனும் தெரிகிறானே, அதுவும் இத்தனை நெருக்கமாய், நெருக்கமாய் என்று சொல்வதை விட அவன் மீது தான் சாய்ந்து நின்றிருக்கிறாள் என்பதை உணரவே பெரும்பாடு பட்டாள்.
“ஏன் லஷ்மி அப்படி திகைச்சு பார்க்கிற… நான் கேட்டது இதில்லை.. இன்னொன்னு.. வேற பார்வை.. கண்டிப்பா அதுக்கு பின்னாடி எதுவோ இருக்கு.. இப்போ எனக்கது தெரியனும் லஷ்மி.. தெரிஞ்சே ஆகணும்…” என்று பிடிவாதமாய் கூறியவனோ,
கண்ணாடியில் தெரிந்த அவள் கண்களை வருட, அவளும் அறியாது நிஜத்தில் கண்களை மூடிக்கொண்டாள். மனமோ அடித்துகொண்டது.. கை கால் எல்லாம் வேர்த்து விட, ஐயோ என்று இருந்தது.
இத்தனை வருடமாய் பார்க்கும் பார்வை தானே. இன்றென்ன புதிதாய் கண்டுவிட்டான் என்று மனம் கடிந்தாலும், இப்போதாவது கண்டானே என்று ஒரு உற்சாக குமிழ் உருவாகத்தான் செய்தது. ஆனால் இதெல்லாம் அவள் தன் முகத்தில் காட்டாதவாறு இருக்க வேண்டுமே. பின்னே இத்தனை வருடமாய் அவள் மனதில் சேமித்து வைத்திருக்கும் காதல். பட்டென்று ஒரே நாளிலே சொல்லிட முடியுமா.
சட்டென்று கிடைக்கும் எவ்வொரு விசயத்திற்கும் அத்தனை மதிப்பிருக்குமா என்ன?? உன்னை நீயே காட்டிகொடுத்து விடாதே லட்சுமி என்று அவள் மூளை சொல்ல, கண்கள் மூடி நின்றவளுக்கோ இமைகள் பிரிக்கவே பயமாய் இருந்தது.
ஈசன் அப்படியே தான் நின்றிருந்தான். அவனுக்கும் இதெல்லாம் புதிது. முதலில் தன்னை கொண்டே ஆச்சரியம். தானா?? நிஜமாகவே தான் இப்படியெல்லாம் நடந்துகொள்கிறோமா?? தன்னை கொண்டே முதலில் ஆச்சரியம் என்றால், லட்சுமியின் மாறுதல்களோ இன்னனும் விழி விரிக்க வைத்தது. தானும் தவித்து அவளையும் தவிக்க வைத்துவிட்டான் அவன்.
“லஷ்மி….”
அவன் உதடுகள் மென்மையாய் அவள் பெயரை உச்சரித்தாலும், உதடசையும் போது அவன் மீசையும் அசையும் தானே. தான் அசைகிறேன் என்பதை அவள் காது மடலில் உரசிக்காட்ட, அவன் அழைப்பும் உரசலும், இன்னும் இன்னும் லட்சுமியை பலமிழக்க செய்ய,
‘என்ன சொன்னாலும் கண்ணை மட்டும் திறந்துடாத டி…’ என்று தனக்கு தானே பலம் சேர்த்துக்கொண்டு இருந்தாள்.
ம்ம்ஹும் அவள் விடாக்கண்டி என்றால் இவனும் விடாக்கண்டன் தான்.
“நான் கேட்டதுக்கு பதில் சொல் லஷ்மி..” என்றவனின் மற்றொரு கரம் இன்னும் அவளை தன்னோடு சேர்த்திருக்க, அவ்வுணர்வில் பட்டென்று விழிகள் திறந்தவள் என்ன சொல்ல வந்தாளோ, அவன் பார்வையில் மௌனித்து தான் போனாள்.
“கொஞ்ச நேரம் முன்னாடி அவ்வளோ பேசின.. இப்போ அமைதியா இருக்க?? இங்க நீயும் நானும் தானே.. பேசு லஷ்மி… ஒருவேளை கூட்டமா இருந்தா தான் பேச வருமா…?? நான் வேணா எல்லாரையுமே இப்படியே கூப்பிடவா…” என்று லட்சுமியை மேலும் சீண்ட,
அவன் சொன்ன தினுசில் சிரிப்பு வந்தாலும், கண்கள் அவனை முறைக்கத்தான் செய்தது.
“கூப்பிடுங்க.. எனக்கென்ன…” என்று உதடு சுறுக்க,
“நிஜமா கூப்பிடத்தான் போறேன்.. ஆனா எனக்கு பதில் சொல்…” என்று அவன் பிடியிலேயே நிற்க. இவளுக்கோ நிற்க முடியாது கால்கள் துவளும் போல் இருந்தது.
என்ன இருந்தாலும் லட்சுமி ஒன்றும் அத்தனை சாதாரணமானவள் இல்லையே. பட்டென்று தன் மனதை தன் வழிக்கு கொண்டு வந்தவள்,
“என்ன…?? என்ன சொல்லணும்… முதல்ல நான் கேட்டதுக்கு பதில் சொல்லுங்க… அப்புறம் உங்க கேள்விக்கு யோசிக்கிறேன்..” என்று கெத்தாகவே சொல்லி, தன் கையை வைத்து அவன் தலையை தள்ளியவள், சடுதியில் அவனிடம் இருந்து விலகி கதவருகே வந்துவிட்டாள்.
ஈசனுக்கோ தெரிந்தே ஆகவேண்டும் போல் ஒரு வெறி, அவன் கேள்விகளை அவள் மறுக்க மறுக்க, கண்டுகொண்டே தீர வேண்டும் என்றொரு ஆசை. அவளது அலட்சியமும் மறுப்பும் அவனை நிஜமாகவே தூண்டும் காரணிகள் ஆகின. அவளை தற்சமயம் விட மனமில்லாமல் தான் போனது. கதவருகே அவள் சென்றாலும், கதவில் நன்றாய் சாய்ந்துகொண்டு நின்றான் ஈசன்.
“ஒன்னு நான் கேட்டதுக்கு பதில் சொல்லிட்டு போ.. இல்லை நீ கேட்டதுக்கு பதில் வாங்கிட்டு போ..” என்று தீர்க்கமாய் அவளை காண,
‘இதேதடா புதுசா…’ என்பது போல் லேசாய் வாய் பிளந்தாள்.
வெளியே மொத்த குடும்பமும் இருக்க, அதுவும் காலையில் தான் அப்படி பிரச்சனை நடந்திருக்க, அதன் சாயம் சற்றும் மறையாதிருக்க, அனைத்திற்கும் காரணமான ஈசனோ முற்றிலும் புதிய விதத்தில் வந்து இப்படி அதுவும் அவளை வெளியே செல்லவே விடமாட்டேன் என்பது போல் பிடிவாதம் பிடித்து நிற்க, சத்தியமா அவளுக்கு பைத்தியம் பிடிப்பது போல் தான் இருந்தது.
அத்தனை பேரின் முன்னும் தைரியாமாய் பேசியவள், தனிமையில் ஒன்றும் பேச முடியாது போக லேசாய் அதுவே அவளுக்கு தன் மீது எரிச்சல் தர,
“ம்ம்ச்.. வழி விடுங்க… நான் போகணும்… வேலை இருக்கு…” என்று லேசாய் முகம் சுளிக்க,
“ஆமா.. பெரிய கலக்டர் வேலை… போய் அங்க சமைக்கிறேன்னு எல்லார் கிட்டயும் பேசணும்… ஆனா நான் கேட்டதுக்கு மட்டும் பதில் வராது…” என்று நக்கல் இழையோடினாலும், காரியத்தில் கண்ணாய் நின்றான்.
“கலக்டர் வேலையோ.. கரண்டி பிடிக்கிற வேலையோ எதையுமே ஒழுங்கா பண்ணனும்.. அவ்வளோ தான்.. நான் எல்லார் முன்னாடியும் தானே கேள்வி கேட்டேன் அப்போ எல்லார் முன்னாடியும் தானே நீங்க பதில் சொல்லணும்.. அதென்ன இது எனக்கும் லஷ்மிக்கும் நடுவிலன்னு சொல்றது.. ஏன் அப்படியே பதில் சொல்லாம ஜகா வாங்கிடலாம்னா..”
இது இது தான்.. இந்த பட பட பேச்சுத்தானே அவனுக்கும் வேண்டும் அவள் மனதில் என்ன இருக்கிறதோ அந்த எண்ணத்தின் வெளிபாடு தானே லட்சுமி அவ்வப்போது அவனை வெற்று பார்வை கொண்டு தாக்குவது. ஆக அந்த பார்வையின் பின்னே இருக்கும் செய்தி அவனுக்கு நிச்சயமாய் வேண்டும்.
‘நீங்க என்கிட்ட பேசியே தீரனும் ஈஸ் மாமா…’ என்று தனக்கு தானே உறுதியல்லவா பூண்டிருந்தாள். ஈசன் தனக்கு தானே போட்டிருக்கும் வட்டத்தை உடைத்து, அவளிடம் அனைத்தும் பகிர வேண்டும் என்றல்லவா பேராவல் கொண்டாள்.
அவன் எண்ணம் பலித்ததோ, இல்லை அவள் எண்ணம் ஜெயித்ததோ ஆக மொத்தம் கணவன் மனைவி இருவருக்கும் இப்பொழுது பேச்சு சற்றே சரளமாய் வந்தது.
“நானா..?? பதில் சொல்லாம தப்பிக்க பார்க்கிறேனா.. நீ தான் அப்படி பண்ற.. இப்போவும் ஒண்ணுமில்லை எல்லார் முன்னாடியும் கூட சொல்றேன்.. ஆனா கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி எப்படி நின்னு உன்கிட்ட கேள்வி கேட்டேனோ அப்படி நின்னு தான் பதில் சொல்வேன் பரவாயில்லையா…” என்று ஈசன் கேட்ட தினுசில்
‘அம்மாடி……..!!!!!’ என்று மூச்சு நின்றுதான் விட்டது லட்சுமிக்கு. சட்டென்று நெஞ்சில் கை வைத்தவள்,
“உங்க கேள்வி உங்க கிட்டயே இருக்கட்டும்.. என் கேள்வி என் கிட்டயே இருக்கட்டும் என்ன..” என்று மெல்ல நகர பார்க்க,
“அதெப்படி கேட்ட பிறகு அது நமக்கு சொந்தமில்லையே…” என்று நின்ற இடத்தில் நிற்க,
“ம்ம்ச் வழி விடுங்க…” என்று அவன் தோள்களில் இரு கைகளை வைத்து தள்ளியவள், கதவை திறந்துகொண்டு வேகமாய் வெளியே வர மொத்த குடும்பமும் பட்டென்று பார்வையை இவள் புறம் திருப்ப,
‘ஐயோ லட்சுமி… உனக்கு இன்னிக்கு நேரம் சரியில்லையோ…’ என்று தோன்றினாலும் எதுவும் நடக்காதது போல நகர்ந்துவிட்டாள்.
லட்சுமி வெளியே வந்த பிறகும் கூட ஈசன் வரவில்லை. அவள் குளித்து வந்த வாசம் இன்னமும் கூட அவ்வறையில் சுற்ற, ஆழ மூச்சை இழுத்து விட்டவன், தன் தலையை கோதிக்கொண்டான் இதழில் ஒட்டிய சிறு புன்னகையுடன். மனம் லேசானது போல் இருந்தது. முன் தினம் தான் இருந்த நிலை என்ன, இப்போதிருக்கும் நிலை என்று நினைத்து இன்னமும் சிரித்துக்கொண்டான்.
லட்சுமி தன்னுடன் வளர்ந்தவள், என்ற எண்ணம் எல்லாம் போய் இப்போது அவள் தன் மனைவி என்ற எண்ணம் வந்திருந்தது.. என்னதான் லட்சுமி அனைவரிடமும் சகஜமாய் பேசினாலும் அவள் அத்தனை சகஜமில்லை என்பதனை இரண்டொரு முறை உணர்ந்தே இருக்கிறான். சிரித்தே பேசினாலும் அவள் எல்லையில் இருப்பது நன்றாகவே தெரியும்.