மனோஜ் வந்து அக்கா அக்கா என்று அத்தனை பேசுவான், லட்சுமியும் பாசமாய் தான் இருப்பாள் ஆனாலும் எதோ அவள் தள்ளி நிற்பது அவனுக்கு நன்றாகவே தெரிந்தது. சொல்ல போனால் தனக்கு லட்சுமியை பற்றி இத்தனை தெரியும் என்பதே அவனுக்கு இப்பொழுது தான் புரிந்தது.
‘என்ன பொண்ணு டா இவ…’ என்று நினைத்தவனுக்கு,
‘லஷ்மி என் பொண்டாட்டி டா….’ என்று சொல்லிக்கொள்ள ஆசை வந்தது.
வார்த்தைக்கு வார்த்தை அவளிடம் வம்பு பேச தோன்றினாலும் சட்டென்று அவள் தனக்குள்ளே ஒடுங்குவதும், அவனை யாரோ அந்நியன் போல் படக்கென்று பார்த்து விடுவதும் தான் அவனுக்கு புரியாமல் இருக்க, அதையும் சீக்கிரமே வெளிக்கொண்டு வருவேன் என்று நினைத்துக்கொண்டவன், இப்பொழுது அறையை விட்டு வெளியே செல்ல, அங்கே கஜேந்திரன் இல்லை.
மெல்ல சமையலறையில் எட்டி பார்த்தான். லட்சுமியின் முதுகு தான் தெரிந்தது. சரி ஒரே நாளில் அவளும் தான் எத்தனை பார்ப்பாள் என்று தோன்ற, ஈசனை மரகதம் உண்ண அழைக்க, அவனுக்கு அப்போது தான் உண்ணவில்லை என்பதே நினைவில் வர, சரியென்று அமர்ந்தான்.
“நாங்க எல்லாம் சாப்பிட்டோம்.. நீயும் லட்சுமியிம் தான் சாப்பிடனும்…” என்று மரகதம் சொல்லியபடி தட்டு வைக்க,
“லஷ்மி சாப்பிட வா…” என்று ஈசன் உரக்க அழைக்க, லட்சுமியால் இனி மறுக்க முடியுமா என்ன.
போகமாட்டேன் என்று கால்கள் அடம் பிடிக்க, பேச்சி, “தம்பி தான் கூப்பிடுதுள்ள போ லட்சுமி…” என்று மகளை தள்ள,
வெளியே வந்தவளோ, “நீங்க சாப்பிடுங்க மாமா… நான்….” என்று இழுக்க,
“நீ மட்டும் தனியா சாப்பிடுவியா.. வா…” என்று அவனே ஒரு தட்டை வைக்க, வேறு வழியில்லை உண்டே தானே ஆகவேண்டும் என்று ஈசன் அருகே அமர்ந்தாள்.
லட்சுமி தட்டில் வைத்துகொண்டு கொறித்துக்கொண்டு இருப்பதை கண்டவன், “என்ன கனவு காண்ற.. சாப்பிடு லஷ்மி..” என்று அதட்ட,
‘இதுக்கு தான் ஈஸ் மாமா கூட உட்கார்ந்து சாப்பிடலைன்னு சொன்னேன்.. இப்போ எந்திரிக்கவும் முடியாது… ஷப்பா….’ என்று எண்ணியவள் வேகமாய் தண்ணீரை குடிக்க,
“சாப்பிடும் போது தண்ணி இவ்வளோ குடிச்சா எப்படி சாப்பிடுவ.. சாப்பிட்டு அப்புறம் தான் தண்ணி குடிக்கணும்….” என்று டம்பளரை பிடுங்கி வைக்க, அவளுக்கோ நிஜமாகவே கடுப்பாகி போனது.
“ம்ம்ச் மாமா உங்க தட்டை பார்த்து சாப்பிடுங்க.. எனக்கு தெரியும்..” என்று பட்டென்று சொல்லிவிட்டு அவள் உண்ண,
“ஐயோ…” என்று மரகதமும் பேச்சியும் ஈசன் முகம் பார்க்க, பாலாவும் அப்போது தான் வந்து அமர்ந்திருந்தவன், “இந்த லட்சுமிக்கு ஏன் தான் பேச்சு இப்படி பட்டுன்னு வருதோ…” என்று எண்ண,
ஈசனுக்கும் முதலில் ஒருமாதிரி தான் ஆகிவிட்டது. திரும்பி அவள் முகம் பார்க்க அவளோ சாதாரணமாய் சாப்பிட்டு கொண்டிருக்க, அவனும் அடுத்து அதை இலகுவாய் எடுத்துகொண்டான்.
முத்தழகு தான் “இதென்ன கல்யாணம் ஆனா சின்னஞ் சிறுசுங்க ஒண்ணா உக்காந்து சாப்பிட்டா, இப்படி தான் எல்லாம் வேடிக்கை பார்க்கிறதா.. ஏ மரகதம் கொஞ்சம் கூட உனக்கு விவஸ்தை இல்லை…” என்று தன் மருமகளை ஏச,
“அப்படி சொல்லு கிழவி… இதுக்கு தான் வீட்ல உன்னை மாதிரி ஒரு பெருசு இருக்கணும்னு சொல்றது…” என்றது பாலாவே தான்.
அவனுக்கு எப்பொழுதுமே இப்படிதான் முத்தழகோடு வம்பு பேசவில்லை என்றால் உறக்கமே வராது. வீட்டில் இருக்கும் நேரம் எப்பொழுது பார் எதையாவது சொல்லி முத்தழகிடம் வாங்கி கட்டவில்லை என்றால் அவனுக்கு உறக்கமே வராது.
பாலா சொன்னதில் ஈசனும் லேசாய் சிரிக்க, லட்சுமியால் தான் மேற்கொண்டு உண்ணவே முடியவில்லை. பாதியில் எழுந்தாலோ ஈசனுக்கு பிடிக்காது.. என்னடா செய்வது என்று முழித்துக்கொண்டு இருந்தாள். இவள் முழித்து அமர்ந்திருக்க, ஈசனோ உண்டே முடித்திருந்தான். ஆனாலும் லசுமியுன் உண்டு முடிக்கட்டும் என்று காத்திருப்பவன் போல், எழாமல் இருக்க,
‘ஐயோ…’ என்று முணுமுணுத்தவள், பாலாவை காண, அவனோ தன் அலைபேசியின் மூழ்கியிருந்தான்.
‘இந்நேரம் பார்த்து இவன் வேற… டேய் திரும்பி தொலைடா…’ என்று பாலாவிற்கு டெலிபதி செய்ய, அது வேலை செய்ததோ என்னவோ, பாலா திரும்பி பார்க்க,
“உன் அண்ணனை அழைத்துக்கொண்டு செல்…” என்பது போல் சைகை செய்ய,
“ஹா… என்ன.. ல… மதினி… எதுவும் சொன்னியா…???” என்று உறக்க கேட்க,
‘அட கொடுமையே…’ என்று தலையில் கை வைக்க தான் முடிந்தது லட்சுமியால்.
உண்ணவும் முடியவில்லை, உட்காரவும் முடியவில்லை, தினறிக்கொண்டு இருந்தாள். பாலா அப்படி கேட்டதும் ஈசனுக்கு என்ன தோன்றியதோ, லட்சுமியை பார்க்க, அவள் முகத்தில் என்ன கண்டானோ,
“சாப்பிட முடியாட்டி அளவா தட்ல வைக்கனும்னு எத்தனை தடவை சொல்லிருக்கேன்.. ” என்று லேசாய் கடிய,
“நானா வச்சேன்.. அத்தை தான வச்சாங்க…” என்று தயங்காமல் அவனுக்கு பதில் கொடுத்தாள்.
“ம்ம் சரி சாப்பிட முடியாட்டி எந்திரி லட்சுமி..” என்று மரகதம் சொல்ல,
“ம்மா… பொறுங்க… அவ சாப்பிடுவா… நேரம் ஆனாலும் பரவாயில்லை நீ சாப்பிடாம எந்திரிக்க கூடாது…” என்று ஈசன் சொல்ல,
லட்சுமியோ இப்பொழுது பாவமாய் பாலாவை பார்த்தாள் ஏதாவது செய்யேன் என்பது போல். ஒரு நண்பனாய் அவனுக்கு புரியாமல் இருக்குமா என்ன, முதலில் அவளிடம் வம்பிளுக்கவே நினைத்தாலும் பிறகு நிஜமாகவே வேலை இருக்க,
“அண்ணா பத்து மணிக்கு ஆடிட்டர வர சொல்லி இருந்த.. நம்ம போகவேணாமா…” என்று சொல்ல,
“வேஸ்ட் பண்ண கூடாது….” என்று சொல்லிவிட்டே எழுந்து சென்றான்.
அவன் அந்த பக்கம் எழுந்து சென்றது தான் தாமதம் இந்தபக்கம் லட்சுமி எழுந்துவிட்டாள். ‘ஷப்பாடி…. ஒரு நாள்ல எவ்வளோ தான் தாங்குறது…’ என்று பெரு மூச்சு விட்டவளை, பேச்சி முறைத்து பார்த்தார்.
“என்னம்மா…????”
“ஏன் டி.. இவ்வளோ வளர்ந்திருக்க.. பார்த்து நிதானமா பேச தெரியாதா… பட்டு பட்டுன்னு இப்படி பேசுற.. ஒருநேரம் போல ஒருநேரம் இருக்காது லட்சுமி…” என்று கடிய,
“நான் என்னம்மா பேசினேன்….” என்றாள் ஒன்றும் தெரியாமல்.
“தம்பி நல்லா சாப்பிடுன்னு தான சொல்லுச்சு.. அதுக்கு போய் பட்டுன்னு எனக்கு தெரியும்னு சொல்ற… ஒருநிமிசம் எல்லார் முகமும் மாறிடுச்சு… உனக்கு நீ சின்ன வயசுல இருந்து பழகின ஆளுங்கன்னு பேசுற.. ஆனா இப்போ நீ இந்த வீட்டுக்கு மருமக அதை முதல்ல மனசில வை…” என்று அறிவுரை சொல்லிவிட்டே சென்றார்.
“ஹ்ம்ம் எல்லாரும் என்னையவே சொல்லுங்க….” என்று நொடித்தவள் மேற்கொண்டு வேலையை பார்க்க செல்ல, சிறிது நேரத்திலேயே மரகதமும், முத்தழகும் கிளம்பிவிட, மீண்டும் அங்கே ஒரு தனிமையும் அமைதியும் சூழ்ந்துகொண்டது.
லட்சுமிக்கும் அப்பொழுது தான் ஆசுவாசமாய் மூச்சு விட முடிந்தது.
அவளுக்கு இங்கே இப்படியிருக்க, ஈசனுக்கோ அங்கே வேலை நெட்டி முறித்து. பால் பண்ணை, சூப்பர் மார்கெட், கேபிள்ஸ் என அனைத்து கணக்கு வழக்கையும் பார்க்கவென்று ஆடிட்டர் வந்திருக்க, ஈசனும் அவரோடு இருக்க வேண்டிய நிலை.
இரண்டு நாளில் அனைத்தையும் சரி செய்து தருகிறேன் என்று ஆடிட்டர் சொல்லி செல்ல, மணியை பார்த்தால் மதியம் கடந்துவிட்டது. அவரை அனுப்பிவிட்டு வர, அப்போது தான் பாலா பிரபுவிடம் வரும் திங்கள் காலேஜ் ஆரம்பிக்கிறது என்று சொல்ல, ஈசனுக்கு லட்சுமியின் நினைவு தான் வந்தது.
“என்ன பாலா காலேஜா…??” என,
“ஆமாண்ணா… திங்கட்கிழமை இருந்து… லட்சுமி சொல்லலியா… நான் ரெண்டு நாள் முன்னாடி தான் போய் பீஸ் கட்டினேன்..” என்று சொல்ல,
ஈசனுக்கோ இவள் என்ன செய்தாள் என்ற யோசனை தோன்ற, அதே நேரம் ரேவதி வந்து,
“அண்ணா… கொடுக்க மறந்திட்டேன்.. இந்தாங்க லட்சுமிக்கு பீஸ் கட்டின ரசீது..” என்று கொடுக்க, ஈசனுக்கு மனதில் சுல்லேன்றது..
ஆனாலும் ஒன்றும் காட்டாது, “லட்சுமி பீஸ் குடுத்தாளா..??” என்று சாதாரணம் போல் கேட்க,
“இல்லண்ணா நான் தான் கட்டினேன்.. லட்சுமி தான் கட்ட சொன்னா…” என்று ரேவதியும் சாதாரணமாய் சொல்ல, ஈசனுக்கு உள்ளே எரிய தொடங்கியது.
ஒன்றும் சொல்லாமல் ரசீதை வாங்கியவன், சட்டை பக்கெட்டில் வைத்துகொள்ள, நெஞ்சமோ “நான் என்ன செத்தா போயிட்டேன்… ஏன் என்கிட்டே ஒரு வார்த்தை சொல்ல அவ்வளோ கௌரவமா???!!!!” என்று கொந்தளிக்க,
ஆரம்பத்தில் இருந்தே அவள் உன்னிடம் அலட்சியாமாய் தான் நடந்துகொள்கிறாள் என்று போதாத குறைக்கு அவன் மனமும் எடுத்து கொடுக்க, யாரிடமும் ஒன்றும் பேசாது நேராய் வீட்டிற்கு புல்லட்டை பறக்க விட்டான்.