எத்தனை வேகமாய் கிளம்பி வந்தானோ அதனினும் வேகமாய் வீட்டினுள் நுழைந்தான் ஈசன். மனம் அத்தனை கோவத்தில் எரிந்தது. என்னதான் நினைத்துகொண்டு இருக்கிறாள், எப்போது பார்த்தாலும் அலட்சியம்… அலட்சியம்… அலட்சியம் மட்டுமே..
கோபம் எதையுமே சிந்திக்க விடாது. தன் பக்கம் இருப்பதையும் யோசிக்காது. அடுத்தவர் பக்கம் என்ன இருக்கிறது என்பதும் கண்களுக்கு தெரியாது. அதுவும் ஈசனுக்கு சும்மாவே கோவம் அப்படி வரும். இப்போதோ… லட்சுமியை பற்றி அவன் மனதில் ஒரு எண்ணம் உதித்த பிறகோ கேட்கவே வேண்டாம்… கண் மூடித்தனம் என்பார்களே அதுபோல தான் இப்போது ஈசனுக்கு.
ஈசன் முதலில் லட்சுமியிடம் இதுவரை எப்படி நடந்தான் என்பதெல்லாம் நினைவிலேயே இல்லை. என்னவோ இன்று அவளிடம் உரிமையாய் பேசியதுமே அனைத்துமே சரியானது போல் ஓர் உணர்வு, இதற்கு முன் நடந்த எதுவுமே இப்போது நினைக்கவில்லை. நினைவிலும் இல்லை.
அவள் பார்வைக்கான பொருள் தேட விளைந்தவனுக்கு இப்பொழுது அந்த பார்வையே கோவத்தை தூண்ட, “லஷ்மி….” என்று நடு வீட்டில் நின்று கத்த, பதிலே இல்லை.
“லஷ்மி.. எங்க டி இருக்க…” என்று சொல்லியபடி அறைக்குள் பார்த்தால் அவளோ நிம்மதியாய் உறங்கிக்கொண்டு இருந்தாள்.
“என்ன திமிரு… இங்க ஒருத்தன் கத்திட்டு இருக்கேன்.. இவ எனக்கென்னனு தூங்குறா.. கதவு திறந்து கிடக்கு.. ச்சே கொஞ்சம் கூட பொறுப்பே இல்லை.. இதுல எதாவது ஒன்னு சொன்னா போதும் அப்படியே ரோசம் மட்டும் பொங்கி வந்திடும்…” என்று சத்தமாகவே சொல்லியபடி அவள் தோளை தொட்டு உசுப்ப,
உறங்குகிறாள், இப்படி எழுப்ப கூடாது என்றெல்லாம் அவனுக்கு அப்பொழுது தோன்றவே இல்லை. சொல்ல போனால் சுத்தமாக அவனுக்கு வேறெதுவுமே நினைவில் இல்லை. நான் ஒருவன் இருக்கிறேன் என்பது அவளுக்கு மறந்துவிட்டதே என்ற கோவம். சொல்லபோனால் அவனை அவள் ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை என்பது போல் ஒரு எண்ணம். உனக்கு அனைத்துமே நான் தான் என்று சொல்லும் வேகம் அவனுள் எழ,
“ஏ லஷ்மி…” என்று இன்னும் போட்டு உலுக்க, அவளோ அடித்து பிடித்து எழுந்தமர்ந்தாள்.
உஷ்ண மூச்சுக்களை விட்டு தன் முன்னே நிற்பவனை பார்த்து முதலில் ‘என்ன இந்நேரத்தில்…’ என்று நினைத்தாலுமே, அவன் போட்டு உலுக்கியது வலிக்க, வேறொன்றும் சொல்லாமல்,
“என்ன மாமா….” என்றாள் இன்னமும் கலக்கம் தீராமல்,
உறங்கி அதுவும் பாதியில் எழுப்பி அமர்த்தி உட்கார வைத்தால் அவள் அத்தனை குசியாகவா பேசுவாள்.. சும்மாவே அப்படி.. இப்போது கேட்கவும் வேண்டுமா?? ஆனால் ஈசனுக்கோ தான் இத்தனை கத்துகிறேன் எந்த ஒரு பிரதிபளிப்புமே இல்லாமல் கேட்கிறாள் என்ற எரிச்சலும் சேர, அவளது இரண்டு தோள்களையும் இறுக பற்றி எழுப்பி நிறுத்தினான்.
அவன் பிடித்து நிறுத்தியது வலியை கொடுக்க, “ஷ்.. மாமா வலிக்குது… ” என்றவள் அவன் கைகளை தட்டிவிட,
அவனுக்கோ அவளது செயல்கள் எல்லாம் ஒவ்வொன்றும் அவனை அலட்சியம் செய்வதாகவே பட, “ஏய் என்ன டி.. ரொம்ப பண்ற….??” என்று சீறவும், அவளுக்கு சுத்தமாய் ஒன்றுமே புரியவில்லை.
நான் என்ன செய்தேன் என்பது போல் ஒரு குழப்ப பார்வை பார்க்க, ஈசனுக்கு என்ன தோன்றியதோ,
“என்ன இது….” என்று தன் பாக்கெட்டில் இருக்கும் ரசீதை எடுத்து காட்ட, அவனது குரலே கோபத்தை அடக்குகிறான் என்பது சொல்லாமல் சொல்ல,
அவனை புரியாத பார்வை பார்த்தவள் “என்ன இது…??” என்று கேட்க,
“உனக்கே தெரியலையோ…” என்றவன் அவளது கைகளில் திணிக்க, அவன் கொடுத்ததை விரித்து பார்த்தவள்,
“ஓ..!!! பீஸ் பில்லா.. ரேவதி கொடுத்தாளா..???” என்று சாதாரணம் போல் கேட்க, அவளது வார்த்தைகளோ, ஆசிட் விட்ட இடத்தில் இன்னும் கொஞ்சம் மெழுகை உறுக்கி விட்டது போல் ஈசனுக்கு இன்னும் எரிந்தது.
“லஷ்மி….” என்று அவள் பெயரை மென்று துப்பினான்.
“என்.. என்ன மாமா…???!!!” என்று விழி விரித்து கேட்க, அவளுக்கு நிஜமாகவே தெரியவில்லை இப்பொழுது ஏன் இவனுக்கு இத்தனை கோவம் என்று. போகும்போது நன்றாக தானே போனான். இப்போது என்ன என்பது போல் பார்க்க,
“ரேவதி எதுக்கு உனக்கு பீஸ் கட்டினா???” என்று ஈசன் கேட்க,
“அது.. காலேஜுக்கு போறேன்… கட்டிட்டு வரேன் சொன்னா மாமா…” என்றாள் இன்னமும் புரியாமல்.
“என்கிட்டே ஏன் கேட்கலை….?” மொட்டையாய் எதையுமே சொல்லாமல் வெறுமெனே கேட்க, லட்சுமிக்கு இப்போது எரிச்சல் வந்தது.
என்ன இவன் வந்ததில் இருந்து குதித்துக்கொண்டே இருக்கிறான் என்று.. தான் என்னவோ தவறு செய்தவள் போல விசாரணை வேறு என்று தோன்ற,
“எதை..???” என்றாள் அவளும் மொட்டையாய்..
“இதை…” என்று அவள் கையில் இருந்து பிடுங்கியவன், “இதை ஏன் சொல்லலை..??” என்று உறுமினான்..
“நான்… நானே மறந்திட்டேன் மாமா… என்கிட்ட பணம் இல்லையா அதான் ரேவதி கேட்கவும் சரின்னு சொல்லிட்டேன்…” என்று விளக்கி சொல்ல, உண்மையும் கூட அது தானே. ஆகையால் அவளுக்கு அது சாதாரணமாகவே வந்தது. மிக சாதாரணமாகவே வார்த்தைகள் வர, ஈசனுக்கோ லட்சுமியின் இந்த நிதானமான பதிலே இன்னும் வேகத்தை கொடுக்க,
“ஓ… பணம் இல்லைன்னா… என்கிட்டே கேட்கனும்னு தோணலையா?? கௌரவம்… ம்ம் அப்படித்தான… என்கிட்டே கேட்க கௌரவம்…??? ஏன் டி நான் இங்க தானே இருக்கேன்.. செத்தா போனேன்… ஒருவார்த்தை கேட்கனும்னு தோணலைல… நான் உன் புருஷன் தானே.. ரேவதி வந்து இதை கொடுக்கும் போது எனக்கு எப்படி இருந்துச்சு தெரியுமா???” என்று அவன் கேட்ட கேள்வியில் படக்கென்று நிமிர்ந்து பார்த்தாள்.
அவ்வளவு தான்.
லட்சுமியின் பொறுமை கை காட்டி சென்றுவிட, முதலில் இத்தனை அவள் பொறுமையாய் பதில் சொல்லியதே பெரிய விசயம், அதில் ஈசன் வேறு இறுதியில் இப்படி கேட்க, இத்தனை நாள் லட்சுமி தன் மனதில் அடக்கி வைத்திருந்த கோபமும் வருத்தமும் இப்போது தன் முகத்தை காட்ட தொடங்கியது.
“எப்படி இருந்துச்சு…???” என்றாள் அவளும் அதே வேகத்தில்.
“ஏய் என்ன…” என்று ஆரம்பித்தவனை, கைகளை நீட்டி தடுத்தவள்,
“இப்போ இவ்வளோ குதி குதிக்கிறீங்க… அதுபோல தானே எனக்கும் இருந்திருக்கும். ரேவதி வந்து கேட்கும் போது என்கிட்டே பணம் இல்லை.. அப்போ எனக்கும் இப்படி தானே இருந்திருக்கும்…” என்று சொல்ல,
“என்ன சொல்ற….???” என்றான் முகம் சுருக்கி..
“ஓ..!!! உங்களுக்கு புரியலையா… அடேங்கப்பா…” என்று கன்னத்தில் கை வைத்தவள் தன முகத்தில் ஆச்சர்யத்தையும், நக்கலையும் சரியாய் கலந்து அவன் கண்களுக்கு காட்ட,
“லஷ்மி….” என்று பற்களை கடித்தான்..
“என்ன சொன்னீங்க..?? புருசனா…?? அது உங்களுக்கு இப்போ தான் நியாபகம் வருதா?? நமக்கு கல்யாணம் ஆகி எத்தனை நாள் ஆச்சு மாமா???” என்று கேட்டவளின் குரலில் வெளிப்படையாகவே வலி எட்டி பார்க்க, ஈசன் பார்வையில் அதுவும் தப்பாமல் பட,
நீ என்ன சொல்ல போகிறாய் என்று இறுமாந்து பார்த்திருந்தவன், இப்போ என்ன சொல்ல வருகிறாள் என்று கவனிப்பை பார்வையில் கொடுக்க, அவனது கோபத்தின் சூடு சற்றே குறையத் தொடங்கியது.
“பதில் சொல்லுங்க மாமா..??? இன்னிக்கு தான் நீங்க எனக்கு புருஷன், நான் உங்களுக்கு பொண்டாட்டின்னு நினைப்பு வந்துச்சோ.. அதுகூட அந்த துரைசாமி பண்ண பிரச்சனைனால.. கல்யாணம் ஆகி மறுநாளே தனிக்குடித்தனம்..
பண்ணைல இருந்து பாலும், கடைல இருந்து மத்த பொருளும் வந்து வச்சிட்டா மட்டும் போதாது.. இது வீடு தானா.. வீட்ல சமைச்சு சப்பிடுறதையும் தாண்டி இன்னும் நிறைய இருக்குனு தெரியாதோ…??
அது சரி.. நீங்க எங்க வீட்ல சாப்பிட்டீங்க..?? சொல்ல போனா நீங்க எங்க வீட்ல இருந்தீங்க.. இதுல என்னவோ இத்தனை நாள் நான் ஒன்னொன்னும் உங்களை கேட்டு பண்ண மாதிரியும், இன்னிக்கு என்னவோ பீஸ் கட்ட உங்களை கேட்காத மாதிரியும் இப்படி பேசுறீங்க.. நான் உங்க பொண்டாட்டி தான?? ஏன் நான் காலேஜ் படிக்கிறேன்னு உங்களுக்கு தெரியாதா?? இத்தனை நாள் வீட்ல ஒருத்தி இருக்கேன்னு கூட நியாபகம் இல்லை.. இப்போ என்ன திடீர்னு…” என்றவள் பதிலுக்கு முறைத்து நின்றாள்.
லட்சுமி பேச பேச ஆடித்தான் போனான்.. இப்பொழுதும் கூட அவள் பேசிய தோரணையில் ‘ என்ன பொண்ணு டா இவ…’ என்று தான் நினைக்க தோன்றியது..
இதுதான் நீ என்று அவள் அவனை சொல்ல, அவனுக்கோ தான் செய்ததும் சரியில்லை என்று பட, ஏற்கனவே மட்டுபட்டிருந்த கோபம் இப்போது முழுதாய் மறைய தொடங்க, மெல்ல தன் தலையை கோதியவன், ஒன்றும் பேசாமல் நின்றான்.
“என்ன நிக்கிறீங்க.. பதில் இல்லையோ…. நீங்க உங்க இஷ்டத்துக்கு இருக்கலாம்.. ஆனா நான் என் இஷ்டத்துக்கு இருக்க கூடாது அப்படிதான.. கேள்வி கேட்க மட்டும் எப்படி இப்படி குதிச்சு வர்றீங்க…” என்று கேட்டவள் உன் பதில் ஒன்றும் எனக்கு தேவையில்லை என்பது போல் நகர்ந்துவிட,
கண்களை மறைத்திருந்த கோவம் இப்போது கருத்திலிருந்தும் விலக, லட்சுமி விலகி செல்வது வலித்தது. தான் செய்தது தவறு என்பது புரிய, அதுவும் அவளை அது மிகவும் பாதித்திருக்கிறது என்பதும் புரிய, ஒருவேளை அதனால் தான் லட்சுமி தன் மீது கோபமாய் இருக்கிறாளோ என்றும் தோன்ற,
“இல்லை இல்லை… அது வேற என்னவோ இருக்குடா ஈசா.. கண்டுபிடி…” என்று தனக்கு தானே சொல்லிகொண்டவன், மீண்டும்
“லஷ்மி….” என்றழைத்து கொண்டே செல்ல, அவளோ எதையோ போட்டு உருட்டிக்கொண்டு இருந்தாள்.
ஈசனுக்கு ஒன்றும் மற்றும் நன்றாகவே தோன்றியது.. இவள் முன் தான் சுயமிழக்கிறோம் என்று. ஆனாலும் அதை எண்ணி லேசாய் ஒரு மகிழ்வலை தான் மனதில் பரவியதே ஒழியே தான் இப்படி மாறுவதா என்றெல்லாம் நினைக்கவேயில்லை.. சிரித்துக்கொண்டான்.
தன் சுயம் இழக்க கூடாது என்று எந்த காதலை தூக்கி எறிந்தானோ அதே ஈசன் இன்று லட்சுமியின் முன்னால் தனக்கு ஏற்படும் மாறுதல்கள் கண்டு மகிழ்ந்து தான் நின்றான். சொல்ல போனால் அவனே மாறிக்கொண்டானா? இல்லை அவள் மாற்றினாளா தெரியவில்லை.
எதுவும் பேசாமல் ஈசன் அவளருகே சென்று நிற்க, அவளோ கண்டுகொள்ளவே இல்லை. சும்மாவே அப்படி பார்ப்பாள், இப்போதோ இவனாகவே வினை வைத்துகொள்ள அதுவோ நன்றாகவே தன் வேலையை காட்டியது.
“ம்ம்ச் தள்ளுங்க….” என்று அவனை ஒரு தள்ளு தள்ளி மீண்டும் தன் கை வேலையை பார்க்க,
“பூம்..” என்று நொடியில் காதல் வரும் என்பார்களே அதுபோல லட்சுமி தள்ள தள்ள காதலும் அவனை அவளருகே தள்ளிக்கொண்டு போய் நிறுத்தியது. அவளை எங்காவது தள்ளிக்கொண்டு போகவேண்டும் போலும் தோன்றியது.
லட்சுமிக்கு இத்தனை நாள் எங்கிருந்தாலும் கண்ணும் கருத்தும் ஈசன் மீதிருக்கும். ஆனால் இன்றோ ஈசனே அருகே இருக்க, நிச்சயமாய் லட்சுமிக்கு இப்போது மனதில் கோவம் தான்.
“பெருசா வந்தாச்சு நியாயம் பேச… நான் கேள்வி கேட்ட அப்படியே.. வாய் மூடிக்கிறது…. நிக்கிறதை பார்…” என்று அவனுக்கு கேட்கும் படியே சொல்ல,
“ஏய் என்ன லஷ்மி.. என்ன சொன்ன..??” என்று காட்டமாகவே கேட்க முயன்றவனுக்கு தோல்வி தான் மிஞ்சியது. அவன் குரலோ அத்தனை கொஞ்சியது.