லட்சுமிக்கு இந்த மாற்றமெல்லாம் தெரியாமல் உணராமல் இருக்குமா?? ஆனாலும் அவளை பொருத்தமட்டில் அவள் காதல் என்பது வருடக்கணக்காய் அவள் காத்து வைத்திருக்கும் பொக்கிஷம்.. ஈசன் சிரிக்கிறான் என்பதற்காக எல்லாம் உடனே அதை அவன் கரங்களில் கொடுத்து விட கூடாது என்ற எண்ணம் மிக மிக திண்ணமாகவே இருக்க,
‘நீக்ன ரொம்ப நாள் காத்திருக்கணும் ஈஸ் மாமா.. இப்போதானே கொஞ்சம் கொஞ்சமா உங்களுக்கு லட்சுமி யாருன்னு தெரியுது…’ என்று எண்ணியவளுக்கு மனதினுள் ஒரு நிம்மதி.
எத்தனை நேரம் தான் இப்படி அமைதியாய் இருப்பது. ஈசனுக்கு முடியவில்லை.
“சரி நான் ரேவதிக்கு பணம் கொடுத்திடுறேன்…” என்று வெள்ளை கொடியை லேசாய் பறக்க விட,
“ஓ.. அப்போ அதுகூட செய்யாம தான் இங்க வந்தீங்களா…” என்று கொடியின் கயிற்றினை அறுத்து எறிந்தாள்.
“ரேவதி பில் குடுக்கவும் அப்படியே வேகத்துல வந்திட்டேன்…” என்றவனுக்கு தான் இன்னமும் நிதானிக்க வேண்டும் என்று தோன்றியது.
“ஹ்ம்ம் அதாவது.. ஓடி வந்து என்னை குறை சொல்லணும்.. அதுல தான் வேகம் அப்படித்தான.. செஞ்சுட்டீங்கள்ள.. வேறென்ன இருக்கு??”
“ம்ம் சரி சரி.. நான் தான் எதோ ஒரு வேகத்துல வந்துட்டேன்.. சரி லஷ்மி..” என்று வாழ்வின் முதன் முறையாய் தணிந்து போனான் ஈசன். அவனுக்கு பழக்கமே இல்லாத விஷயம் தான். ஆனாலும் மிக இயல்பாய் வந்தது.
“சரி உனக்கு என்ன கோவம்…” என்று காலையில் கேட்ட கேள்விக்கு மீண்டும் வந்து நிற்க,
“இங்க பாருங்க மாமா.. உங்க எந்த கேள்விக்கும் என்கிட்டே பதில் இல்லை புரிஞ்சதா…” என்று அவளும் சொல்ல,
“அப்போ நானே கண்டுபிடிக்கிறேன்…” என்று போட்டிக்கு தயாரானான்.
“ஓ… அப்படியா.. சரி முடிஞ்சா பண்ணுங்க…” என்று நொடித்தவள் வேறொன்றும் சொல்லவில்லை. அவனுக்குமே இப்போது இருக்கும் இந்த இலகுவை கெடுக்க எண்ணமில்லை.
“சரிதான் போடி.. ரொம்ப பண்ற…” என்று செல்ல, அவன் முதுகை பார்த்து மட்டும் புன்னகைத்தாள்.
ஈசனுக்கோ சத்தியமாய் தான் புதியவன் என்றே தோன்றியது. மீண்டும் சொல்லிகொண்டான் “இப்படி மாறிட்டியே ஈசா…” என்று.
மாற்றம் ஒன்றே மாறாதது.
வீட்டில் இருந்தாலும் இவள் கண்டுகொள்வது போல் தெரியவில்லை எனவும், மீண்டும் ஒருமுறை பண்ணைக்கு சென்று வந்தவன், அடுத்து சூப்பர் மார்கெட் செல்ல, அடுத்தடுத்து வேலை இரவு வரை இருக்க, வீடு கிளம்பும் நேரம், பிரபு வந்து
“அண்ணே… அந்த துரைசாமி நம்ம கடை கிட்டவே இன்னொரு சூப்பர் மார்கெட் ஆரம்பிக்க போறானாம்…” என்று சொல்ல,இவன் இன்னும் அடங்கவில்லையா என்றே தோன்றியது.
“யார் சொன்னா???”
“கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி இங்க வந்து பக்கத்துல இடம் பார்த்துட்டு போனாங்க…” என
“சரி ஆரம்பிக்கட்டும்….” என்று ஈசன் சாதாரணம் போல் சொல்ல,
“இல்லண்ணா.. அது…” என்று பிரபு இழுக்க,
“என்ன பிரபு நமக்கு தொழில் நட்டம் ஆகும்னு நினைக்கிறியா.. அவனை நம்பி நான் ஆரம்பிக்கலை.. சொல்ல போன யாருமே யாரை நம்பியும் ஆரம்பிக்கலை. மக்களை நம்பி தான். அவங்களுக்கு எங்க பிடிக்குதோ அங்க போவாங்க.. நம்ம சரியா இருந்தா போதும்…” என்று சொல்ல,
“வளரனும் பிரபு… அத்தனை சீக்கிரம் நம்ம கிட்ட யாரும் வராத அளவு வளரனும்.. அதான்.. இப்போ இந்த கடை போதும்… வேற யோசிப்போம்…” என
“இல்லண்ணா இது நீங்க முன்னாடியே யோசிச்சது…??” என்று பிரபு தயங்க..
“அதுனால என்னடா…?? ஒருகடைக்கு பக்கத்தில இன்னொரு கடை வரும்.. ஒரு ஹாஸ்பிட்டல் போட்ட அதுக்கு கிட்ட இன்னொரு ஹாஸ்பிட்டல் வரும்.. இப்படிதான் எல்லாமே… கொஞ்சம் பாரு நல்லா எதுவுமே தனியா இருக்காது.. ஒரு கடைன்னா அதுக்கு கிட்ட அதுபோலவே இன்னொருத்தன் ஆரம்பிப்பான்.. இதான் இங்க நடக்குது… சோ நம்ம வேற யோசிப்போம்…” என்று பிரபுவை அனுப்பியவன் மீண்டும் வீடு வர இரவு பதினொன்னு.
லஷ்மி இவனுக்கு எடுத்து வைத்துவிட்டு டிவி பார்க்க, வீடு வந்தவனோ,
“நீ பாரு… நான் சாப்பிட்டுக்கிறேன்..” என்று சொல்ல, அவளும் ஒன்றும் அதற்கு மேல் சொல்லவில்லை.
‘நான் வைக்கிறேன்…’ என்று வருவாளோ என்று பார்த்தான், இல்லையெனவும், தட்டில் வைத்துகொண்டு அவனே வந்து இவளருகில் அமர அதற்கும் அவளிடம் எவ்வித பிரதிபலிப்பும் இல்லை.
‘ரொம்ப பண்றா….’ என்று நினைக்க, வேகமாய் உண்டுவிட்டு, எதோ யோசனையில் அமர, அப்போது தான் ஈசன் முகம் பார்த்தாள் லட்சுமி..
“என்ன யோசனை…???” என
“ம்ம்… ஒண்ணுமில்ல…” என்று ஆரம்பித்தவன், என்ன நினைத்தனோ, “மாடியில கொஞ்ச நேரம் நடக்கலாமா???” என்றான் அவளையும் உடன் சேர்த்து.
சட்டென்று அவளுக்கு பார்வை கடிகாரத்திற்கு செல்ல, ‘இந்நேரத்திலா…’ என்று மனம் நினைத்தாலும், “சரி…” என்று வாய் சொன்னது.
அவன் எந்த ஒரு விசயத்திற்கு மேற்கொண்டு ஏதாவது முடிவு எடுக்க வேண்டுமெனில் இப்படிதான் மாடியில் நடப்பான். அது எந்த நேரம் என்றாலும் சரி. இப்போதும் அப்படியே. ஆனால் லட்சுமி மட்டும் இருக்க அவனாய் சென்று தனியாய் நடக்கவும் எதுவோ போல் இருக்க, அவளையும் அழைக்க, பேச்சை வளர்க்க எண்ணினானோ என்னவோ,
லட்சுமிக்கு ஈசனோடு நடக்க பிடிக்காமல் போகுமா என்ன??? மாடிக்கு சென்ற பின்னும் ஒரு ஐந்து நிமிடம் எந்த பேச்சும் இல்லை. அவனுக்கும் என்ன பேசுவது என்று பார்க்க, சட்டென்று லட்சுமி வீட்டு ஜன்னல் கண்ணில் பட,
இதழில் ஒரு கேலி புன்னகையோடு, “இந்த ஜன்னல்ல உக்காந்து தானே என்னை பார்ப்ப…” என்றான்.
எதோ அவனை பார்க்கவே அவள் இங்கு அமர்வது போல. அவளுக்குமே அவன் அப்படி கேட்கவும் லேசாய் சிரிப்பு தான் வந்தது.
“ஆமாமா உங்களை பார்க்க நான் இங்க வந்து உட்காருவேன்.. இப்படி வேற ஒரு நினைப்பிருக்கா உங்களுக்கு…??? எனக்கு இங்க உட்கார பிடிக்கும்… வேடிக்கை பார்ப்பேன்… அவ்வளோதான்..” என்று தோளை குலுக்க,
“எப்படி கேட்டாலும் பதில் வராதே.. சரியான அழுத்தக்காரி…” என்று தான் நினைத்தான்.
“ஹ்ம்ம் இங்க இருந்து என்ன வேடிக்கை.. எங்க வீடை தவிர வேறெதுவம் தெரியாதே…” என, சட்டென்று அவனை ஒரு பார்வை பார்த்தவள், அமைதியாகி விட்டாள்..
‘இப்போ நான் என்ன சொல்லிட்டேன்….’ என்று யோசித்தவன்,
“என்ன லஷ்மி…..” என
“ஒண்ணுமில்ல மாமா….” என்க, அவனுக்கோ என்னவோ அவளை பேச வைக்கவேண்டும் என்றே தோன்றியது.
ஹ்ம்ம் முதல் நாள் இரவு இருவரும் இருந்த நிலை என்ன.. இப்போது இருவரும் இருப்பதும் நினைப்பதும் என்ன.. லட்சுமி அப்படியே தான் இருக்கிறாள், ஈசனாக தன்னிடம் வரவேண்டும் என்று. ஆனால் ஈசனே அவனது இந்த மாற்றம் எதிர்பார்க்கவில்லை. தான் இருக்கும் போது இவள் எதுவும் பகிராமல் இருப்பாதா என்ற எண்ணம் எழ,
“காலேஜ்க்கு கொண்டு போக எல்லாம் ரெடி பண்ணிட்டியா…???” என
“என்ன ரெடி பண்ணனும்…???” என்றாள் கேள்வியாய்.
“ஏன் திங்க்ஸ் எல்லாம் தான்.. எதுவும் வாங்கனுமா???” என்று கேட்க,
“திங்க்ஸ் எல்லாம் அம்மா வீட்ல இருக்கு… எதையும் இங்க… நம்ம வீட்டுக்கு எடுத்துட்டு வரலை….” என்றாள் ‘நம்ம…’ என்ற சொல்லில் அழுத்தம் கொடுத்து.
‘நம்ம வீடு…’ அவளுக்கும் அவனுக்குமானது..
சரளமாய் சட்டென்று அவளுக்கு இயல்பாய் வருகிறது. அதை அவனும் கவனித்தான். தனக்கு ஏன் அப்படி வரவில்லை என்ற யோசனை ஏழ, வரும் வந்துவிடும், வர வேண்டும் என்று உறுதியும் எழுந்தது.
“ஹ்ம்ம் சரி நாளைக்கு போய் எடுத்துட்டு வா… நம்ம வீட்டுக்கு…” என்று அவளை போலவே சொல்ல,
“ம்ம்ச்….” என்ற சொல்லோடு பதிலை நிறுத்தினாள்.
“என்ன லஷ்மி….” என்றான் மீண்டும்.
“என்ன என்ன.. லஷ்மி… கல்யாணமாகி இத்தனை நாள்ல இன்னும் நான் அங்க போகலை… முதல் தடவை போகும் போது தனியா போக கூடாது.. அதான் விடுங்க…” என்று கடுப்பாகவே கூறினாள்.
“ஓ…!!! அப்படி வேற இருக்கோ….” என்று யோசித்தவன், “சரி நாளைக்கு நம்ம போவோம்…” என..
‘ஆகா….!!!! ஈஸ் மாமா………………………..’ என்று மகிழ்ந்தது மனம்..
ஆனாலும் வெளிக்காட்டாமல், “நான் சொன்னதுக்காக எல்லாம் வேணாம்.. எனக்காகன்னா வேணவே வேணாம்….” என்று உதட்டை சுறுக்க,
‘அம்மாடி…. இவ என்ன டா.. எந்த பக்கம் போனாலும் லாக் பண்றா….’ என்று தோன்ற,
“உனக்காகன்னு யார் சொன்னா… மாமியார் வீட்டு விருந்து… நான் அனுபவிக்க வேண்டாமா…?? சோ நாளைக்கு போகலாம்.. போறோம்.. அவ்வளோ தான்…” என்றுவிட்டு ஈசன் நடக்க,
“அப்படி வாங்க மாமா வழிக்கு… நீங்களா வரணும்.. நீங்க நீங்களாவே மாறனும்.. எதுவுமே நான் சொல்லியில்லை.. என் மனசுல இருக்கிறது உங்களுக்கு தெரியுறதுக்கு முன்னாடியே உங்க மனசுல நான் இருக்கணும்…” என்று சொல்லிக்கொண்டவள், ஆனந்தமாய் ஒரு பெருமூச்சு விட்டாள்.